இருமுலையும் முறைமுறையா ஏஙகிஏங்கி இருந்துணாயே

அருங்காட்சியகம், அதிலும் இந்திய பிரிவு என்றவுடன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், உடனே கண்ணில் படுவது சோழர் கால வெண்கல / செப்பு சிலைகள். எப்படி தான் இவை நம்நாட்டை விட்டு சென்றனவோ ! எனினும் ஒவ்வொரு பெரிய காட்சியகத்திலும் ஒரு நடராஜர், ஒரு விஷ்ணு, சோமஸ்கந்தர், சம்பந்தர் என்று பல சிலைகளை நாம் பார்க்கலாம். அது சொக்க வைக்கும் சோழர் சிலைக்கு இந்த பணம் படைத்த உலகம் கொடுக்கும் சன்மானம்.

சரி, இன்று கண்ணன் அவதரித்த நாள், ஒரு சிறப்பு சிலையோடு வருகிறேன். ஒரு அரிய சிலை – கிளீவ்லாந்து அருங்காட்சியகம் .

அறிவிப்பு பலகையின் படி, இந்த சிற்பம் பிற்கால சோழர் காலத்து சிலை ( (12 C) – எதனால் அப்படி. சிலையில் அணிகலன்கள் குறைவாக இருப்பதால் இவ்வாறு சொல்லுகிறார்கள். எனினும் முற்கால சோழ சிலைகளில் அணிகலன்கள் சற்று குறைவாக இருந்தாலும் நுண்ணிய வேலைபடுடன் கூடிய அணிகலன் இருக்கும். பொதுவாக அதே காலத்து சைவ நாயன்மார்கள் சிலைகளே அப்படி நிறைய நகைகள் இல்லாமல் இருக்கும். அவர்களின் சித்தரிப்பு அப்படி. அப்படி இந்த சிலையில் அரியது என்ன. யசோதை கண்ணனுக்கு தனது பாலை ஊட்டும் காட்சி – வளர்ப்பு அன்னை, தனது தத்துப் பிள்ளைக்கு தன மார்பை அளிக்கும் தாய்மை போற்றும் சிற்பம், அதுவும் ராணியின் மகன் ஒரு மாடு மேய்ப்பவளிடம் – ஓ, அதனால் தானோ நிறைய ஆபரணங்கள் இல்லை ?

அற்புத அரிய சிற்பம் தான், ஆனால் இந்த காட்சியை பெரியாழ்வார் பாட்டாய் படிக்கிறார் பாருங்கள்.

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே

இதற்கு மேலும் இந்த சிலைக்கு ஒரு வர்ணனை தேவையோ ?

இருந்தும் சிலையை பார்க்கும் பொது சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக சோழர் கால வெண்கல, செப்பு சிலைகள் ஒரு மேடையுடன், அதில் கொம்புகளை பொருத்தி தோலின் மீது இட்டு ஊர்வலமாக கொண்டுவர நேர்த்தியாக வசதிகளுடன் வரும். இந்த சிலையை பார்த்தல் அப்படி தெரியவில்லை. யாராவது மன்னன் தனது சொந்த அரண்மனைக்கோ மண்டபத்திற்கோ பிரத்தியேகமாக செய்த சிலையோ ? ஆனால் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்து சோழர்கள் வீர சைவர்கள் என்றே இந்நாளில் சொல்கிறார்களே?

படங்களுக்கு நன்றி

http://www.metmuseum.org/toah/ho/07/sss/ho_1982.220.8.htm
http://www.harekrsna.com/gallery/parents1-gallery.htm

சென்னையில் எங்கள் பொன்னியின் செல்வன் விழவிற்கு வாருங்கள் ( ஆகஸ்ட் 15th)
http://festival2009.ponniyinselvan.in/

“அவர் நம்மவர் “- கொலையாளியை கூட மன்னிக்கும் பண்பு

வாசகர்களே இன்று மீண்டும் ஒரு பெரியபுராண சிற்பம் – தாராசுரத்தில் இருந்து. நாம் இந்த சிற்பத்தின் அருகில் உள்ள சிற்பத்தை முன்னரே பார்த்தோம் – இளையான்குடி மாறர் புராணம். இன்று அதை போல இன்னும் ஒரு அற்புத நாயன்மார் கதை.

மடிந்தாலும் நேருக்கு நேர் நின்று மார்பில் வேலை வாங்கி வீர மரணம் அடைவதை பெருமையாக கொண்ட தமிழ் குடியில், வந்திருப்பது துரோகி , தனது எதிரி, தன்னை ஏமாற்றி கொல்ல வந்த கொலையாளி என்று தெரிந்தும் , அவனை மன்னித்து அவனுக்கு எந்த துயரும் இழைக்காமல் விட்டு விட்ட ஒரு அரசனின் கதை. அப்படி அவன் ஏன் செய்தான். மேலே படியுங்கள்.

முதலில் சிற்பம். தொலைவில் இருந்து. இடது புறம் கீழே பாருங்கள்.

நாம் பார்ப்பது மெய்பொருள் நாயனார் கதை சொல்லும் சிற்பம். பெரிய புராண வரிகளை கொண்டே இந்த கதை விளக்குகிறேன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12050&padhi=72&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

இப்போது சுட்டிக்காட்டி உள்ள வரிகளை சற்று கவனமாக படியுங்கள். ஏனெனில் சிற்பி சிற்பம் செதுக்கும் பொது எப்படி இவற்றை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் என்பதை நாம் ரசிக்க வேண்டுமே!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனை யாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள் ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாய னார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

சரி, இப்போது சிற்பத்தை மீண்டும் பார்ப்போம். அருகில் சென்று

கதை மிக சுவாரசீயமாக போகிறது. முதல் பாகம் சிற்பத்தில்

போலி சிவனடியார் இடது கையில் புத்தகப் பை,வலது கையில் கத்தி, அவர் ஆசனத்தின் மேலே அமர்திருப்பது, அரசன் தரையில் அமர்திருப்பது – எப்படி சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனித்து சிற்பி இந்த சிறய சிற்பத்தில் கதையை அழகாக சொல்கிறான் பாருங்கள்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

என்ன அற்புதாமான தருணம். தனது அரசனை காக்க பாய்ந்து வரும் மெயகப்பாலன் தத்தன் – சிற்பத்தில் பாருங்கள், அவனது ஆடை பறக்க, வாழை உயர்த்தி அடுத்த கணம் போலி சாமியாரின் தலை துண்டாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் – ஆனால் அரசனின் கரம் தடுக்கிறது

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=17&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

ஆஹா, என்ன ஒரு வர்ணனை. அந்த மன்னனுக்குத் தான் என்ன பக்தி.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=23&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

சிற்பியும் இதையே கடை காட்சியாக நமக்கு படைக்கிறான்

என் நெஞ்சை நெகிழ வைத்த கதை, அதை விளக்கும் அற்புத சிற்பம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

எங்கே என் கோமணம், கோவணக் கள்வர்

என்னடா ? இப்படி ஒரு தலைப்பா என்று சிரிக்க வேண்டாம். இதுவும் ஒரு பெரியபுராண கதை தான். தாராசுரம் சிற்பம். அமர்நீதி நாயனார் புராணம்.

முதலில் சிற்பம் இருக்கும் இடத்தை பாருங்கள்.

அடுத்து கதை : ( நன்றி விக்கி)

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.

அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.

அது எப்படி பட்ட கோமணம் , பாட்டை படியுங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.

மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.

அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். எப்படி பட்ட இடம்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.

மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.


தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.

சிற்பி இதை கவனித்து செதுக்கி உள்ளதை பாருங்கள்.

கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=31&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.

நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்று தனது கோவணத்தை தராசில் இட்டார். ( இதையும் சிற்பி செதுக்கி உள்ளான் )

அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும் இட்டார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.

தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1207&padhi=72&startLimit=40&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.

இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். படத்தை பாருங்கள், அம்மை அப்பன் நந்தியின் மேலே .

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

ஒரு கோவணத்தை வைத்துக்கொண்டு கூத்தபிரான் விளையாடிய திருவிளையாடல் பார்த்தீர்களா . அற்புத கதை மற்றும் சிற்பம்.

திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்த கணம்புல்லர்

நண்பர்களே , சென்ற பதிவில் வெறும் தண்ணீர் கொண்டு விளக்கு எரிந்ததை பார்த்தோம். அப்போது இவ்வாறு எழுதினேன் ” விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு.” அவர் கதையை இன்று பார்க்க போகிறோம். இன்னொரு தாராசுரம் பெரியபுராணம் சிற்பம் : கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.
சிற்பத்தின் முதல் பகுதியை பார்ப்போம்


ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். அப்போது , சிற்பத்தை மீண்டும் பாருங்கள்.

விளங்க வில்லையா – இன்னும் அருகில் சென்று சிற்பத்தின் அடுத்த பக்துதியை பார்ப்போம்


இப்போது பாடலை பாருங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1248&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

பக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது பாருங்கள்.

மகாவிஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கும் மறு – ஸ்ரீவத்சம்

நண்பர்களே , நாம் இன்றைக்கு ஒரு வெண்கலச் சிலையை பார்க்கப் போகிறோம். இது ஒரு சாதாரண சிலை அல்ல, கண்ட உடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சோழர் கால சிலை. அது என்ன சோழர் கால சிலைக்கு உலகெங்கும் அப்படி ஒரு தனிப் பெருமை! வாருங்கள் காண்போம்.

நுண்ணிய வேலைப்பாடா? சிற்பியின் கலைத் திறனா? முக பாவங்களா? அங்க அமைப்புகளா? இவை அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்தாலும் அதற்கு மேலும் ஏதோ ஒரு கவர்ச்சி. அந்த ஏதோ ஒன்று என்ன? இந்த பதிவை படித்த பின்னர் நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்.

தில்லி அருங்காட்சியகத்தில் அழகாய் வீற்றிருக்கும் சிலையை முதலில் பார்ப்போம்…

மஹா விஷ்ணு, ஆபத்பாந்தவன் . நாம் இதுவரை ஏராளமான கற்சிலைகளை பார்த்துள்ளோம், ஆனால் உலோகக் சிலைகள் மிகவும் நேர்த்தியானவை, காரணம் உலோகத்தில் வேலை செய்வது கல்லை விட சற்று எளிது, அதனால் கலைஞன் இன்னும் நேர்த்தியாக வேலை செய்யலாம். நம்முடைய முந்தைய ‘சிங்கை’ உமை சிற்பம் பற்றிய பதிவில் சோழர்கள் வெண்கலச் சிலைகளை எப்படி வடித்தார்கள் ( லாஸ்ட் வாக்ஸ் முறை ) என்பது பற்றி விரிவாக பார்த்தோம். இன்று அதே முறை குறித்து கோதை நாச்சியார் தம் அழகு தமிழில் மனம் உருகி பாடிய பாட்டை கேட்டு நாமும் ரசிப்போம்… ( வழக்கம் போல் சரியான பாசுரத்தை தேடித் தந்த திரு திவாகர் அவர்களுக்கு நன்றி )

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேன்கடத்துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததற்றிக் கொண்டூற்றவும் வல்லையே

என்ன அருமையான வரிகள்! மெழுகுச் சிலை ( மோல்ட்) அதனை அணைக்கும் களிமண், சுளையில் வைத்து சுடும்போது உள்ளே இருக்கும் மெழுகை உருக வைக்கும் . அதே போல திருவேங்கடவன் தன்னை வெளியில் அணைத்து உள்ளே உருக வைக்கின்றான் என்கிறாள்.

அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் அவனது சுந்தர வடிவத்தை வடிக்கும் போது, அவன் கருணை முகம் எப்படி இருக்க வேண்டும். ஒருமுறை பார்த்தாலே உள்ளத்தை உருக்கி அவன் அன்பில் சரண் புக செய்யும் சுந்தர மதி வதன முகம் அல்லவே அது.

அது மட்டுமா, அவன் அலங்காரப் பிரியன்.

அழகைப் பார்த்தோம், இப்போது நுண்ணிய வேலைப்பாடை பார்ப்போம். ( தலைப்புக்கு வர வேண்டுமே )

கவனமாக பாருங்கள் – மீண்டும் உங்களுக்கு ஒரு பரீட்சை.

என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, உங்களுக்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன் முயன்று பாருங்கள். வலது மார்புக்கு சற்று மேலே பாருங்கள்.

என்ன அது. சிலை வடிக்கும் பொழுது ஏதாவது ஒட்டிக்கொண்டதா ? இல்லை – அது ஒரு “மறு” (மச்சம்) – இதைத்தான் கலித்தொகையில் “திரு மறு மார்பன் போல்” என்று பாடினரோ!

– நன்றி கீதா அம்மா – சமஸ்கிருத வரிகளை படியுங்கள்

durdAntha daithya visikha ksahtha-பத்ரபாங்கம்

துர்தாந்த தைத்ய விஷிக்ஹ க்ஸாஹ்த – பத்ரபாங்கம்

veerasya tE VibudhanAyaka baahumadhyam |

வீரஸ்ய தே விபுதாநாயக பாஹுமட்ஹ்யம் |

SrIvathsa Kousthubha RamA வணமளிகங்கம்

ஸ்ரீவத்ச கௌஸ்துபா ராம வணமளிகங்கம்

chinthAnubhUya labhathE charithArTathAm na: ||

சிந்தானுபூய லபதே ச்சரித்தார் ததாம் ந:||

( தமிழாக்கம் நன்றி முனைவர் கண்ணன் அவர்கள் )

ஓ! தெய்வ நாயகா!

பொல்லா அசுரர் உன்னுடன் போர் புரிந்த போது பட்ட விழுப்புண்கள் உன்
மார்பில் கணிதக் கோடுகளாக இங்குமங்கும் பரவி உன்னை அளக்கின்றன.
அப்போர்களில் நீர் கண்ட வெற்றியின் சின்னமே போல் இவ்விழுப்புண்கள் உன்
மார்பை அலங்கரிக்கின்றன.

உன்னோடு பிறந்த ஸ்ரீவத்சமெனும் மருவும், கௌஸ்துபம் எனும் செம்மணியும்
இதனுடன் பொலிவுடன் திகழ்கிறது.

பூமித்தாய் மகிழ்வுடன் கோர்த்தளித்த காட்டுப்பூக்கள் சேர்ந்த அழகிய
வனமாலை உன் அழகிற்கு அழகு சேர்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், அன்னை ஸ்ரீதேவி
‘அகலகில்லேன்’ என உன் திருமார்பை அலங்கரிக்கிறாள். அவளது திருவழகு
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ எனும்படியாக உன் வடிவழகிற்கும்,
சுபாவத்திற்கும் போட்டியாய் அமைந்துள்ளது.

இத்தனையும் அசுரர் தந்த விழுப்புண்ணில் பிரதிபலித்து வண்ணக்கோலமாக உன்
நெஞ்சை மாற்றுகின்றன.

இத்தனையும் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. இதுவல்லவோ சேவை! ஒரு
சேதனனுக்கு கிடைக்கும் அரிய சொத்து.

என்ன அன்பர்களே சோழர்களின் வெண்கலச் சிலையின் மகத்துவத்தை அனுபவித்தீர்களா!

யார் படைப்பாளி , யார் படைப்பு

இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது – யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை – பாடல் எண் – 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது – யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.


அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

அடுத்து, சிவன் பார்வதி – பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது
அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது – அடுத்த பதிவில் பார்ப்போம் ) –

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

அருகில் இன்னொரு சிற்பம் – அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

தஞ்சை இரண்டாம் யாளி வரிசை

முந்தைய பதிவில் தஞ்சை பெரிய கோயில் முதல் யாளி வரிசையை பார்த்தோம். அவை யாளிகளா அல்லது சிம்மங்களா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். அவர்களை விட இன்னும் பன்மடங்கு நண்பர்கள் தஞ்சை கோயிலுக்கு பல முறை சென்றும் இந்த வரிசைகளை பார்க்கவில்லை / பார்கவில்லையே !! என்றும் வருந்தினர். அவர்களுக்காக இன்று இன்னும் ஒரு யாளி வரிசை ( முன்னர் பார்த்து மேல் வரிசை, இப்போது பார்ப்பது கீழ் வரிசை ) -நன்றி சதீஷ் – அருமையான படங்கள், மற்றும் கூர்ந்து கவனித்து படங்களின் அளவை குறிக்க அவர் கையாண்ட முறை மிக அருமை.

முதலில் படங்களை படங்களாகவே இடுகிறேன், வரிசையை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்

சரி, இப்போது தெரிகிறதா பாருங்கள்.

அடுத்தது

அடுத்தது

அடுத்தது

சற்று இன்னும் அருகில் சென்று இந்த அற்புத யாளிகளை தரிசனம் செய்வோம். பலர் இவைகளை சீன டிராகண் போல உள்ளது என்று கூறுவார், எனினும் அவற்றை பார்த்தல் சற்று பயமாக இருக்கும், எனக்கு தஞ்சை யாளிகள் கொடூரமாக காட்சி அளிப்பதை விட சற்று விளையாட்டாய் சிரிப்பது போலவே உள்ளது.

யாளி வரிசையின் கொடிகள் இன்னும் அருமை. இவை ஏற்கனவே மிகவும் அளவில் சிறியவை. அந்த சிறிய அளவிலும் மேல் வரிசையை போல யாளி வாயில் இருந்து வெளி வரும் வீரர்களை போல இங்கும் செதுக்கி உள்ளனர். அதற்க்குமேல் ஒரு பொடியன் வேறு.அப்பப்பா அபாரம் .

பேனா மூடி அளவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

இவை போதாதென்று அதே அளவில் ஒரு அருமையான யானை உரி போர்த்திய மூர்த்தி வேறு

அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் பொது, அதன் பிரம்மாண்டத்தை மட்டும் கண்டு வியக்காமல் இந்த சிறிய சிற்பங்களையும் கண்டு களியுங்கள்.

தஞ்சையின் யாழி வீரர்கள்

கடந்த சில மடல்கள் சற்ற ஆழ்ந்த கருத்துக்களை அலசின. இன்று சற்று ஆற அமர சிற்பங்களை மட்டும் பார்ப்போம். மற்றும் நண்பர்கள் திரு பிரசாத் சென்ற மடலில் மிகவும் குறைந்த அளவே படங்கள் இருந்தன என்றும் திரு சதீஷ் அவர்கள் என்னிடத்தே விட்டு சென்ற படங்கள் பல இருந்தும் இன்னும் வெளி வரவில்லை ( திரு சந்திரா அவர்கள் கூட ) புகார் அளித்தார். அலுவல் சம்பந்தமான பயன்களின் காரணமாக பல இழைகள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் கொண்டு வருகிறேன். இவை அனைத்தையும் மனதில் கொண்டு இந்த இழை –

“தஞ்சை யாழி வீரர்கள். ”

யாழி பலர் கண்களில் படாமலேயே போகும் சிற்பம். பல பிரதான இடங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் யாழிகள் இருந்தும் ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அவற்றை திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. அது போல இன்று தஞ்சை பெரிய கோயில் யாழி, விமானத்தை சுற்றி இரண்டு வரிசைகளாக வரும் இந்த யாழிகளின் அழகிய பவனி.

இன்று மேலே இருக்கும் யாழி வரிசையை பார்ப்போம்

இந்த வரிசைகளின் நடுவில் எனது உளம் கவர்ந்த அருள்மொழிவர்மர் அவர்களது கல்வெட்டுகள். பிரம்மாண்டமான தஞ்சை கோயிலின் முன் நிற்கும் போது பலருக்கு பல உணர்ச்சிகள் தோன்றும். பலரும் அதன் பெரிய அளவை கண்டு பிரமிப்பு , வியப்பு – ஆனால் எனக்கோ சொந்த மண்ணிற்கு திரும்பும் உணர்வே வரும்.

சரி சரி, யாழிக்கு வருவோம். மேலே இருக்கும் வரிசைகளை இன்று பார்ப்போம். ( நன்றி சதீஷ். பொருமையாக அருமையான படங்களை எடுத்து அனுப்பியதற்கு )

முதல் பார்வையில் ஒரே சீராகவும், ஒரே சிற்பம் போலவும் இருக்கும் இவை, மிக அழகு. உற்று பாருங்கள் , யாழிகள் , யாழி மேல் இருக்கும் வீரன், எல்லோருமே ஒரு வித உயிர் ஓவியமாகவே இருக்கின்றனர்.

அனைத்து சிற்பங்களும் ஒரே மாதிரி உள்ளனவா, ஒரே சிற்பத்தை மீண்டும் மீண்டும் செதுக்கி உள்ளனரா? இல்லையே !!


வாசகர்களுக்கு சிற்பங்களின் அளவை உணர்த்த சதீஷ் ஒரு தண்ணீர்க் குடுவை அருகே வைத்து படம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு யாழி வீரனும் வெவ்வேறு தோரணையில் இருப்பதை பாருங்கள்


இந்த யாழி வரிசையில் கோடியில் இருக்கும் சிற்பம் இன்னும் அருமை. ஒரு பெரும் யாழி, அதன் வாயில் இருந்து வெளியே வரும் வீரர்கள் …அப்பா , பிரமாதம். இதே போல சிற்பங்கள் பல ,சோழர் கோயில்களில் உள்ளன ( சதீஷ் மற்றும் சந்திரா – புரிகிறது , உங்கள் படங்கள் இருக்கின்றன , விரைவில் இடுகிறேன்




அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்

கம்போடியாவையும் பல்லவர்களையும் இணைக்கும் மகர தோரணம்

ஃபூனன் (கம்போடியா) பற்றிய ஒரு புத்தகத்தில் சுவையான ஒரு படத்தை பார்த்தேன். ஒரு சிற்பக் கரு உருவானது. இந்தச் சிற்பத்தைக் கண்டவுடன் ஏனோ சட்டென தாளவனூர் சிற்பம் நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி! இரண்டும் ஒன்றுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சிற்பங்கள் இதோ:


Mr. Andy Brouwer ( www.andybrouwer.co.uk/blog/) என்ற நண்பர் எடுத்தப் புகைப்படங்கள்,சம்போர் ப்ரெய் குக் – கம்போடியா – அவர் அனுமதி பெற்று அவருக்கு ஒரு சிறப்பு நன்றியுடன் இங்கே படைக்கப்படுகின்றன.மகர தோரணங்கள் என்றழைப்பர். சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ வாயில்தோரணங்களாகவும் அலங்காரத்துக்காகவும் செதுக்கியதாகத்தான் தோன்றும். ஆனால் அதை உற்று நோக்க ஏராளமான வித்தைகள் உள்ளே தெரியும்.

இரண்டு சிற்பங்களும் இருவேறு இடங்கள். ஒன்று நம் பல்லவதேசத்தில் உள்ள தாளவனூர். இன்னொன்று கம்போடியா நாடு.

கடல் கடந்த நீண்ட இடைவெளி உள்ள இந்த இருவேறு சிற்பங்களின் ஒற்றுமை நம்மை வியக்கவைக்கிறது. இது அலங்காரத்துக்காக மட்டுமே செதுக்கப்படவில்லை. தன் சிற்பத் திறமையை முழுதும் கொட்டி இவைகளை அந்தச் சிற்பி வடித்திருக்கிறான் என்ற வகையில் அந்த மகரதோரணத்தில் அப்படி என்ன விசேஷம் என்று ஆராய்ந்தோமானால் நிறைய விஷயங்கள் தெரியவரும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் கதையில் வரும் பாடலில் இந்த மகர தோரண முக்கியத்துவம் குறித்து விவரங்கள் கிடைக்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=1071&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.

(மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.)

குற்றம் இல்லாத தேவலோகத்தில் மகரதோரணம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அந்த சிற்பியின் கைவண்ணத்தைக் காண்கிறோம். ஒரு நகரத்தையோ அல்லது அரண்மனையோ அல்லது தொழப்படுகின்ற கோயில்களோ கல்லில் செதுக்கப்படவேண்டும் என்று வரும் பட்சத்தில் அது சிறப்பான தேவலோகத்துக்கு இணையாக சிற்பி கருதுகிறான். அங்கு மகரதோரண வாயில் என்பது இன்றியமையாத ஒன்று என்று சிற்பிக்குப் புலனாகிறது. மகரதோரணத்தில் இந்தப் புனிதம் கெடாதபடி சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது.

இப்படிப்பட்ட கடின வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் பிற்காலச் சோழர்கள் தங்கள் கோயில்களில் அருமையாய் பிணைத்தனர். தாராசுரம் கோயில் படி சுவரில் உள்ள இந்த மகரத்தை பாருங்கள்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஞான சரஸ்வதி சிற்பத்தில் மிக அருமையான இரு மகரங்களை பார்த்து மகிழுங்கள். நன்றி நண்பர் திரு மோகன்தாஸ் அவர்கள்.


மேலும் மகரங்களை பற்றி திரு உமாபதி ஸ்தபதியார் அவர்கள் இடத்தில கேட்ட பொது – சிலாகித்துப் போய் விளக்குகிறார். “ஆறு வெவ்வேறு விதமான சிற்பங்களை உள்ளடக்கி, அவைகளுக்குச் சுற்றி அலங்காரம் செய்வதைப் போல செடிகொடிகளையும் பக்கவாட்டுகளில்அழகோடு செதுக்கிக் காட்டவேண்டும். மிகக் கஷ்டமான சிற்பவேலை மட்டுமல்லாமல் கூரிய புத்தியோடு செயல்பட்டால் ஒழிய மகரதோரண சிற்பங்களை அவ்வளவு எளிதில் செதுக்கிவிடமுடியாது.!” அவர் மேலும் நமக்கு விளக்க அனுப்பிய படம் இதோ.

வேறெங்கெஙகு இத்தகைய மகரதோரணங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்று மற்ற இடங்களிலும் ஒருமுறை பார்க்கவேண்டும். ஆராயவேண்டும்.

சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன்

என்னடா இது ? தலைப்பே ஒரு தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? இது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி போன்று, இன்று நாம் பார்க்கும் சிற்பம் ஒரு நையாண்டி அல்ல.

முதலில் இந்த வரிகள் எங்கே வருகின்றன என்பதை பார்ப்போம். சினிமா படம் போல அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு ஒரு பிளாஷ் பாக் …

புது வெள்ளம் – அத்தியாயம் 30
சித்திர மண்டபம்

கண்டராதித்த தேவர் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். ‘திருவிசைப்பா’ என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

“சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”

விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் “கோழி வேந்தர்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இப்போது புரிந்ததா தலைப்பு – சரி அது என்ன கோழி கதை. அதை விளக்க திரு N.S. நாராயணசாமி (www.shivatemples.com) அவர்களின் படங்கள் – பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)

அதை பார்க்கும் முன் கதை :

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. ஒரு தெரு கோழியின் வீரத்தையும் அந்த தளத்தின் அற்புத ஆண்மீக சக்தியையும் கண்டு சோழ அரசன் அந்த ஊரையே தன் தலைநகராக நிறுவினான்.

இப்போது சிற்பம்

அருமையான சிற்பம் – யானையை வீரத்துடன் தாக்கும் கோழி ( யானை மதம் பிடித்து என்று உணர்த்த அதன் வால் சற்றே முறுக்கி இருப்பதை பாருங்கள். பட்டத்து யானை – அதன் மேல் இருக்கும் அலங்காரம் மற்றும் மணி – யானை கோழியின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவதை தத்ரூபமாய் காட்டும் சிற்பம்.

சரி, இந்த கதையின் தொன்மையை பற்றி தெரிய – கொஞ்சம் படியுங்கள்

தவச் செல்வியாகிய கவுந்திய்டடிகளும் கோவலனும் கண்ணகியும் ‘முறம் போன்ற செவியினையுடைய யானையுடன் அஞ்சாது போரிட்ட கோழி என்னும் பெயருடைய ‘உறையூர்’ நகரின் கண்ணே சென்று தங்கினார்கள்.

சிலப்பதிகாரம் வரிகள் – கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் கவுந்தியுடன் உறையூரில் தங்கிய செய்தி. அப்போதே ( சுமார் இரண்டாம் நூற்றாண்டு ) இந்த கோழியின் வீரக் கதை பெருமை பெற்றுள்ளது என்றால் ….