தஞ்சை பெரிய கோயில் அகழி

சமீபத்திய நாளேட்டில் தொல்லியல் துறை ஒரு கோடி ருபாய் செலவில் தஞ்சை பெரிய கோயில் அகழியை செப்பனிடப் போகிறது என்ற செய்தி வாசித்து மகிழ்ந்தேன் செய்தி.உடனே நினைவு சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கருவூலத்தில் உள்ள சில மிக அரிய புகைப்படங்களைப் பார்வையிட்டதும். அதிலும் குறிப்பிடும் படியாக ஒரு படமும்!!!

இந்த படங்கள் ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். இப்போது அகழியை செப்பனிடுவது பற்றி பேச்சு இருப்பதால் அந்த நாளில் அது எப்படி இருந்தது என்ற பாருங்கள். ( அகழியில் நீர் இருந்தாலும் ஆலயத்தின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்!! )

1800 மற்றும் 1900 இல எடுத்த படங்கள் . ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

என்னடா வெறுமனே பழைய புகைபடங்களை கொண்டு ஒரு பதிவை இட்டு ஒப்பேத்துகிறானே என்று எண்ணுகிறீர்களோ?. பொறுமை!. இதோ வருகிறது சுவாரசியமான படம் ஒன்று…

ஆண்டு 1921, சரியாக சொல்ல வேண்டும் என்றால். ஏப்ரல் மாதாம் இரண்டாம் தேதி. திரு எ வில்பூர் சாயர் எடுத்த படம்.

உற்று பாருங்கள். அகழியின் சுவரில் ஒரு சிற்பம் உள்ளதே – தெரிகிறதா ?

இது என்ன சிற்பம்? அது இப்போது எங்கே போனது? யாரிடம் கேட்பது.. யார் பதில் சொல்வார்கள்?

ரோடா மிக திறமையாக இன்னும் ஒரு சிற்பத்தை படத்தில் கண்டுபிடித்துள்ளார்

முழங்கை தேய்த்தார் கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய.

இன்றைக்கு மீண்டும் தாராசுரம் – பெரியபுராணக் கதை பார்க்கப்போகிறோம். – மூர்த்தி நாயனார் புராணம். நன்றி திரு அர்விந்த் ( படங்கள்) அவர்கள் மற்றும் விக்கி ( உரை )

பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே பிறந்தவர் மூர்த்தியார். அவர் திருஆலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கர்நாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் வேறு மதத்தை சார்ந்தவன் என்பதால் சைவ வழிபாடுகளுக்கு பல தடங்கல்களை கொடுத்தான். அவ்வாறு திருப்பணி செய்யும் அடியவர்களுக்கு பல கொடுமைகள் செய்தான்.

தன் திருப்பணியை தொடர்ந்து செய்யும் மூர்த்தியாரின் பணி தடங்கல் உண்டாக்க, அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான்.

அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார்.

அப்போது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.

`அருட் கூத்தியற்றும் பெருமான் அணிதற்குரிய திருமேனிப் பூச்சாகிய சந்தனக் காப்பு அணியும் தொண்டிற்கு, இன்று எனக்குத் தடை நேர்ந்திடினும், கல்லில் தேய்ப்பதற்கு உரிய என் கை தடையின்றி உள்ளது` என்று நினைந்து, வட்டமாகத் திகழ்ந்திருக்கும் சந்தனக் கல்லில் தம் முழங்கையைப் போர்த்த தோல், நரம்பு, எலும்பு எல்லாம் உராய்ந்து கரைந்து தேயுமாறு தேய்த்தார்.

இப்போது சிற்ப்பத்தை பார்ப்போம்.

என்ன நேர்த்தியாக இரு முட்டியையும் கல்லில் வைத்து தேய்க்கும் போதும், முகத்தில் எந்த வித வலியும் தெரியாமல், அமைதியான ஆனந்த உருவை செதுக்கியுள்ள சிற்பியன் வேலை அருமை.

பின்னர் என்ன நடந்தது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=21&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.

சந்தனக் கல்லின்மேல் வைத்துத் தேய்த்த அவர்தம் முழங்கை குருதி பெருகத், தேய்த்துச் செல்லும் இடம் எங்கும் எலும்பு நொறுங்கி அதனுள் இருந்த (மூளையில் இருந்து வரும்) நரம்பும் வெளிப்படக் கண்ட பெருமான், பொறுத்திலர். அப்பெருமானின் திருவருளால், அவ்விரவின்கண் எழுந்தது வான் வழியாக வருவ தொரு வாக்கு,

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.

`ஐயனே! அன்பின் துணிவால் இதனைச் செய்யற்க! உனக்குக் கொடிய துன்பத்தைச் செய்வித்த அக்கொடி யோன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீயே கொண்டு, முன்பு அவனால் இந்நாட்டில் புகுந்த இன்னல் யாவற்றையும் நீக்கி, உயிர்களைச் செப்பமுறக் காத்து, இதுவரை மேற்கொண்டிருந்த பணியையும் செய்து, பின் நமது பேருலகை அடைந்திடுவாய்,` என்று அருள.

இதன் பிறகு…இந்த தெய்வ வாக்கு நிறைவேறியதா ? எப்படி நிகழ்ந்தது ??

கலை என்றால் என்ன?

இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால் என்ன?

கலைகளில் நாம் இதுவரை சிற்பம், சிலை, ஓவியம், சுதை , கல், உலோகம், கற்கோவில், கட்டுமான கோயில், குடவரைக் கோயில் , புடைப்பு சிற்பம் என்று பலவற்றை பார்த்தோம். அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது என்ன – அதன் தாக்கம். நானூறு, ஐந்நூறு ஏன் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இந்த அற்புத படைப்புகள் காண்போரை மகிழ்விக்கின்றன?. இதன் ரகசியம் என்ன?. ஆண், பெண், பெரியவர், சிறுவர் , உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்று ஆயிரத்தி மூன்னூறு ஆண்டுகள் ஆயினும் இந்த சிற்பங்கள், இன்னமும் நம்மை மயக்குவதன் சூட்சமம் என்ன?, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, நமது பண்பாட்டிற்கு அன்னியமான மண்ணில் இருந்து வரும் நபர், நமது புராணக் கதைகள் அறியாதவர், அன்னியன் என்றாலும் அவனையும் தன பால் வசியம் செய்ய வைக்கும் இந்த கலையின் ஆகர்ஷண அல்லது அமானுஷ்ய சக்தி என்ன?. மனிதன் அவன் மனத்தினுள் எங்கோ தூங்கிக்கிடக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பும் இந்த கலையை என்ன சொல்லி வர்ணிப்பது?
ஒருவேளை இப்படி வர்ணிக்கலாமோ.. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.

கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மற்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகித்து, பூட்டை உடைத்து தங்கள் எண்ணங்களை பறக்க விடுகின்றனர். அப்படிக் கிடைத்த சுதந்திரத்தில் சிறகடித்து பறந்து, தான் இதுவரை கண்ட மனக்காட்சிகள், மற்றும் புறக்காட்சிகள் அதனோடு ஒட்டிய உணர்வுகளை அனைத்தையும் வெளிக்கொணர்வதே கலை.

நமது மனம் ஒரு புதிர், அது நாம் புறக்கண்களால் காணும் அனைத்தையும் படம் பிடித்து தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். பிறகு, அதில் உணர்வுகளோடு பிணையும் காட்சிகளை இன்னும் நன்றாக பதியச் செய்யும். ( சற்று கண்ணை மூடி, ஏதாவது ஒரு காட்சியை நினைவுப் படுத்தி பாருங்கள் – முதலில் நினைவிற்கு வரும் காட்சி அதனுடன் ஒட்டிய மிக அழுத்தமான உணர்வுடன் பிணைந்ததாகவே இருக்கும் ). கலைஞன் இந்த மனக்கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறனே – கலை. இது கலைஞனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று இல்லை, கலைஞனின் படைப்பை பார்க்கும் பொது , அதனுள் ஈர்க்கப்படும் ரசிகனும் கலந்துகொள்கிறான். படைப்பில் இருக்கும் ஏக்கம், இன்பம், துன்பம், சுகம் அனைத்தையும் தாயின் தொப்புள்கொடி ஏற்படுத்துவது போல ஒரு தொடர்பு – வெட்டுப்பட்ட பின்னரும் தொடரும் அந்த உணர்வு, கலைஞனின் உணர்வை நாம் நம் மனதில் உணர வைக்கும் திறனே கலை. இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. கலை என்று இணையத்தில் தேடினால் ஆயிரம் பெயர்கள் வரும். சில அர்த்தங்கள் உங்களை ஈர்க்கலாம். ….

ஆனால் இந்த சுதந்திரமே கலைக்கு மகுடம். ஜாதி, மத, மற்றும் எல்லா பேதங்களையும் தாண்டி கலையை கலையாய் ரசிக்கும் உணர்ச்சி. அதுவே கலை. அதனால் கலை என்பது இது தான் என்று ஒரு வட்டம் போட்டு அதனுள் எல்லா வகைகளையும் அடக்கி விட முடியாது. பரிமாண வளர்ச்சியில் புது புது சிந்தனைகள் வருவது போல கலையும் மாறிக்கொண்டே இருக்கும்.

சரி.. இப்போது நாம் நம் படைப்புக்கு வருவ்வொம். எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் ஒரே அறுசுவை உணவை எத்தனை நாள் தான் உண்ணுவது. இன்று நமக்கு அது போல ஒரு புதுவிதமான கலை விருந்து. திரு ஜீவா அவர்கள் அறிமுகம் , திரு பாலா அவர்களுது அறிமுகம் – ஓவியர் சாளுக்யன் அவர்களுது ஓவியம்.

தஞ்சை பெரிய கோயிலில் மிகவும் சிதைந்த சுதை சிற்பம். வர்ணங்கள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கும் இந்த சிற்பம் அவரது கண்ணை கவர்ந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தி சிலை – ஈசன் தன் பக்தனான மார்கண்டேயனை காக்க எமனை எட்டி உதைக்கும் சிற்பம். இந்த கதை நாம் இதே கோயிலில் வேறு சோழர் கால புடைப்பு சிற்பத்தை பார்த்த போதே பார்த்தோம். எனவே நேராக சிற்பத்திற்கு செல்வோம்.

கலை காலத்தை வென்றது என்பதை குறிக்க, சாளுக்யன் எடுத்துள்ள கரு – ஈசன் தன்னிடம் சரண் அடையும் மார்க்கண்டேயனுக்காக ` நீ என்றும் பதினாறு என்று வரம் அளித்து ( இன்று எத்தனை பேர் இந்த வரம் பெற முயற்சி செய்வரோ ) , இறையிடத்தில் முழுவதுமாக சரணாகதி அடையும் சிற்பத்தை, அவர் எடுத்துக் கொண்ட வெளிப்பாட்டு முறையும் வினோதம் -கரி கொண்டு தீட்டிய ஓவியம். மனிதன் வாழ்கையின் சுழற்சியை கண்டு சிரிக்கும் வண்ணம், நாம் அனைவரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது போலவும் ஒரு தேற்றம்…. அதுவும் ஈசனது தானே என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த ஒப்பற்ற ஓவியம்..

மனித வாழ்கை நிலை அற்றது, ஆனால் அவனால் படைக்கப்பட்ட, அவன் வெளிக் கொணர்ந்த கலை அழிவற்றது.

சாளுக்யன் அவர்களுது மற்ற படைப்புகளை காண.

http://www.chalukyan.com/

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – முதல் பாகம்

நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் – பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்


சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்


முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

நண்பர் திரு சக்திஸ் அவர்களுடன் தற்செயலாக சிங்கை அருங்காட்சியகம் சென்ற போது பார்த்த ஒரு அற்புத சோழ சிலையை இன்று உங்களுடன் பகிர்கின்றேன். கருங்கல்லில் சிலை செதுக்குவது என்பது கலைஞனின் கலைக்கு ஒரு சவால், அதுவும் கடினாமான கல்லில் அரங்கனின் கருணை முகத்தை வடிக்கவேண்டும் என்றால், இரும்பு உளி கொண்டு செதில் செதிலாக கல்லை செதுக்கி அவனது அழகு கன்னங்களை வெளிக்கொணர வேண்டும், அலங்காரப்ரியனின் அங்கங்களை அணிகலன்களால் மெருகூட்ட வேண்டும். சிறு பிழைக்கும் இடம் இல்லாத இந்த திறனே அவனது படைப்புகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் அழியாப் புகழுடன் இருக்கச் செய்கிறது.

இந்த சிலை, சற்று சிதைந்துள்ளது – எவரோ வேண்டும் என்றே சிதைத்துள்ளனர். மூக்கறுப்பு . சாதாரணமாக இதற்குப் பிறகு இவை ஆலயங்களில் வழிபாட்டிற்கு வைக்கப்பட மாட்டா. மனிதனின் தேடலில் இறைவனைக் காண பல பாதைகள், பலமுறை இந்த வெவ்வேறு பாதைகள் சந்திக்கும் பொது சிதறும் மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. பாவம் இந்த மோதலில் மனிதனே மடியும் பொது சிலை என்ன செய்யும்.

எனினும் சிதைந்த இந்த வடிவிலும் நாம் பார்க்க நிறைய்ய இருக்கிறது. லியோநார்டோ டாவின்சி சொன்னாராம் – மூன்று விதமான மனிதர் உள்ளனர். சிலர் காண்போர். மற்றவர் இதை பார் என்று சொன்னால் காண்போர். சிலர் காணாதோர்!

இந்த சிற்பத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? முழுவதுமாக உள்ளே செல்லாமல் ( அதற்கு சிதையாது இருக்கும் ஒரு சிலையை எடுத்து பிறகு பார்ப்போம் )

முதலில் இடையில் அவரது இடுப்பில் உள்ள சிங்க முக பட்டை

சரி சரி, முக்கியமான இடத்திற்கு வருவோம். முன்னரே வெண்கல சிலைகளில் பார்த்த ஸ்ரீவத்சம். இதோ இங்கே முக்கோண வடிவில்

மிகவும் கடினமான பனி. அதுவும் இப்படி மார்பில் இருந்து வெளியே புடைத்து நிற்கும்படி செதுக்குவது மிக கடினம்.

இதை இன்னும் ஆராய வேண்டும். உலோக சிலையில் உள்ள சித்தரிப்பு மற்றும் கற்சிலை – வெவ்வேறு காலங்களில் எப்படி ஸ்ரீவத்சம் வடிக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் ஆழமாக பார்க்கவேண்டும்

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை – மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

அர்தனாரி – உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் – அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?

“கிருஷ்ணர் மாதிரியே புல்லாங்குழல் வைத்திருக்கும் நாயனார் ஒருவரும் உண்டு.”

“கிருஷ்ணர் மாதிரியே புல்லாங்குழல் வைத்திருக்கும் நாயனார் ஒருவரும் உண்டு.” திரு கண்ணன் அவர்கள் சென்ற பதிவுக்கு இப்படி ஒரு மறுமொழி தந்தவுடன், யார் அவர் என்று உடனே தேடலை ஆரம்பித்தேன். அதிஷ்ட வசமாக நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் சென்ற வாரம் தஞ்சை சென்ற பொது தராசுரமும் சென்றார். அவரிடம் கேட்டவுடன் கிடைத்தது சிற்பம். அதன் விளைவே இந்த பதிவு. நாம் பார்க்கவிருக்கும் நாயனார் ஆனாயர்.

சிற்பத்தை பாருங்கள்

திரு கண்ணன் அவர்கள் சொன்னதில் தப்பே இல்லை. கண்ணன் சிற்பம் என்றே நினைக்க தோன்றும். ஆனால் அருகில் இருப்பது அம்மை அப்பன் – பெரியபுராணம் சிற்பங்கள் இவை.

நாயனார் கதையை படிக்க இங்கே செல்லுங்கள்

http://www.shaivam.org/naaanaay.html

எல்லாவற்றிற்கும் தாயானவரும், சடையில் பிறை சூடிய தூயவரும், ஆகிய சிவபிரானுடைய திருவடிகளைத் தம் மனத்தில் விடாது வைத்து, அவருடைய பழமை வாய்ந்த பெருமைகளை வேய்ங்குழல் இசையால் பரவும், மேல் மழநாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தில் தோன்றிய ஆனாயர், என்னை உவகையுடன் ஆட்கொண்டு அருளியவராவர்.

சரி, தேவாரம் வரிகளை பார்ப்போம்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஏழுவிரல் இடையிட்ட
இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு
தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று
தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார்
மணியதரம் வைத்தூத.

ஏழு விரல்கள் இடையீடுபடத் துளையிட்ட இனிய ஓசையையுடைய வேய்ங்குழலினை ஆனாய நாயனார் எடுத்துப் பூக்களில் தேனை உண்டிடப் படியும் வண்டு எழுவதும் இருப்பதும் போல, அங்குள்ள துளைகளில் தமது விரல்களை வைத்து, எடுத்துச் சுருதி பெற நிற்றலும் எழுதலும் ஆகிய இத்தன்மைகளைச் செய்து, தூய பெரிய துளையில் பெருவாழ்வுடையராய நம் தலைவர் ஆனாயர், தமது வாயிதழ் மேல் வைத்து ஊத,

ஆஹா, குழலை வாசிக்கும் பொது விரல்களின் அசைவை பூவின் மீது ஆடும் வண்டினை உவமை படுத்துவது அருமை.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=30&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.

ஆடுகின்றமயில் இனங்களும் தம் ஆடலை மறந்து அணையவும், காதூடு சென்ற இசையமுதம் நிறைந்த உள்ளத்துடன் பறவைகளின் இனமும் பக்கத்தில் வந்து தமது உணர்வு ஒழிந்திடவும், அவர் அருகில் கோல்தொழில் புரிந்து பசுநிரைகாக்கும் வலிமையுடன் கூடிய இடையர்களும் தாம் எடுத்த செயலை மறந்து குறைவினையாக விடுத்து நின்ற நிலையில், இசை கேட்டு மெய்ம் மறந்து உருகி நின்றனர்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=37&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆனாயர் குழலோசை
கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம்
உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார்
மதிநாறும் சடைதாழ.

ஆனாய நாயனாரின் குழலிசையைக் கேட்டருளி, அருள் வயத்ததாய கருணையையே திருவுள்ளமாகக் கொண்டிருக் கும் தவக் கொடியாய உமையம்மையாருடன், இசைக்கலைக் கெல் லாம் மூலகாரணராய கண்ணுதற் கடவுள், தமது ஆனேற்றைச் செலுத்தி, தமது அழகுடைய இனிமை மணக்கும் இளம்பிறை அணிந்த திருச்சடை தாழ்ந்திட, வான்வழியாக அவ்விடத்து வந்தணைந்தார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.

முன்னாக ஆனேற்றின்மீது அமர்ந்தருளிவந்த முதல்வனாராய சிவபெருமான், செவ்விதாய மனமுடைய ஆனாய நாயனாரின் வேய்ங்குழலின் வாசித்தலை எக்காலத்தும் கேட்டருள விரும்பி, அவரை நோக்கி, `இங்கு நீ நின்ற இந்நிலையேயாக எம் முடன் அணைந்து வந்திடுவாய்`, எனத் திருவருள் புரிந்திடலும், அதனைக் கேட்டருளிய ஆனாய நாயனாரும் தாம் அங்கிருந்தும் பெயர்ந்து, தலைவராய பெருமானாரின் அருகணைந்தார்.

அப்பாடா, என்ன அருமையான வரிகள்.

முதல் ஆண்டு நிறைவு பதிவு பால கண்ணனா அல்லது ஞானக் குழந்தையா..

நண்பர்களே, இன்று நமது ‘கல்லிலே கலைவண்ணத்துக்கு’ முதல் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால் நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று நூற்றைம்பது பதிவுகளாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் மலர்ந்துள்ளது.

தமிழகக் கோயில் கலையோடு மட்டும் நின்றுவிடாமல், அதுவும் கல்லோவியங்களோடு மட்டும் நிற்காமல், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா என்றும் சிற்பம், ஓவியம், குடவரை என்று எங்கும் உலாவி, பல சுவையான கலைபெட்டகங்களை நம் கண்முன்னே நிறுத்தி, அதன் மூலம் இன்னும் பல புதுப்புது உறவுகளை உருவாக்கி தளத்தின் தரத்தையும், இடுகைகளின் அழகையும் மெருகு சேர்த்துள்ளோம். எங்கள் உயரிய நோக்கம் ஒன்றே, எங்கள் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நண்பரும் நம் கலையை ரசிக்க, அதன் பால் காதல் கொள்ளச் செய்ய வேண்டும், இதற்கு இந்த துறையின் வல்லுனர்கள் பலரிடம் கலந்துரையாடி, பல நூல்களை சேகரித்து, அதில் இருக்கும் கருத்துக்களை பாமரனும் புரிந்துகொள்ளும் பாணியில் படைக்க வேண்டும் என்பதே.

உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் இன்று மீண்டும் ஒரு சிறப்பு பதிவு.

இந்தப் பதிவு உருவான கதையும் மிகவும் சுவாரசியமானது, முந்தைய பதிவில் உள்ள சிலை பற்றி நண்பர் வைரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, செப்பு படிமங்களில் வெகு நாட்களாக இருந்த சந்தேகம் வெளிவந்தது. இரண்டு சிலைகள் – பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், பலருக்கும் ஐயம் தரும் வடிவங்கள். பால கண்ணன் மற்றும் திருஞானசம்பந்தர் சம்பந்தப்பட்ட சோழர்கால சிலைகளே இவைகள். கைதேர்ந்த வல்லுனர்களும் பல அருங்காட்சியகங்களுமே குழம்பி, திகைத்து, எதற்கு வம்பு என்று இரு பெயர்களையும் பெயர்ப்பலகையில் இட்டு தப்பிக்க பார்க்கும் புதிர் இந்த வடிவங்கள். இதோ தஞ்சை அருங்காட்சியகத்தில் அடுத்து அடுத்து இருக்கும் சிலைகள் ( நன்றி சதீஷ் )

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீங்களே பாருங்கள். முதல் பார்வையில் இரு வடிவங்களுக்கும் குமுதம் புதிர் போல ஆறு வித்தியாசங்கள் போட்டி வைக்கலாம் போல உள்ளது.

ஆனால் இங்கே தான் கலை வல்லுனர்களின் திறன் வெளி வருகிறது. அதுவும் வெண்கல/செப்புச் சிலைகளை பற்றிய வல்லுநர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் – முனைவர் திரு நாகசாமி அவர்கள். எங்கள் பாக்கியம், அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நண்பர் சுந்தர் பரத்வாஜ் மூலம் கிடைத்ததால், அவரிடமே ஐயத்தைக் கேட்டோம். அவரும், உடனே பதில் அளித்தார் – சான்றோர் எப்போதும் சான்றோரே!! அவர் அளித்த தெளிவுரையே இந்த பதிவு.

சரி, மீண்டும் இரு உருவங்களை பார்ப்போம். வலது கையின் சித்தரிப்பில் உள்ள வித்தியாசத்தை கூர்ந்து பாருங்கள்!.

பால கண்ணன் சிலைக்கு வருவோம். விடை கண்ணன் வலது மார்பில் உள்ளது. ஆம்! முக்கோண வடிவில் ஸ்ரீவத்சம் தெரிகிறதா? கேள்விக்கு இடமே இல்லை, இது கண்ணனே!. வலது கரம் அபய ஹஸ்தம், தன்னிடம் அடைக்கலம் நாடும் பக்தரை ரக்ஷிக்கும் பாணி.

இப்போது அடுத்த சிலை. ( நன்றி நண்பர்கள் சதீஷ் சிங்கை மற்றும் ஸ்டூவர்ட் லீ சென்னை அருங்காட்சியக – அற்புத புகைப்படங்களுக்கு )




இந்த வடிவம், சோழர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை. சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் – சைவ நெறியில் மூழ்கி இருந்த சோழர்களின் குலக்கொடி பேரரசன் ராஜ ராஜன் கண்டெடுத்த ( திருமுறை கண்ட சோழன் ) திருமுறைகளில், பின்னாளில் அவை தொகுக்கப்பட்டபோது, முதல்வராக போற்றப்பட்டு, முதல் மறை, முதல் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சிலை!. அவர் பாடிய முதல் பதிகத்தின் காட்சியையே இந்த சிலை குறிக்கிறது.

இவரது தந்தையார் சிவபாதஹிருதயர், தாயார் இசைஞானியார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.
தோடுடைய செவியன்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

இந்த காட்சியை படமாக காண

தோடுடைய செவியன்

காட்சி புரிந்ததா, இப்போது இதனை சிற்பி வடிக்கிறான். அதுவே இந்த சிலை யாரை குறிக்கிறது என்பதற்கு விடையும் கூட.

” குழந்தையின் தந்தை, யார் பாலூட்டியது என்று கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டியவர்”

இப்போது சிலையின் வலது கையை மீண்டும் நன்றாக பாருங்கள். ஆள் காட்டி விரல்

ஒரு நிமிடம் , சரியான படத்தை இடுகிறேன், சோழ சிற்பி தனது படைப்பில் கொண்டு வரும் உயிரோட்டத்தை விளக்கும் சிலை இது – இல்லை இல்லை, விரல் இது!. ஆள் காட்டி விரல், சற்றே மேல் நோக்கி நகருங்கின்றது, எனினும் இன்னும் முழுமையாக வானத்தை காட்ட வில்லை.

குழந்தை தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கும்போது ஆனந்தத்தில் ஆடிப் பாடி, விரலை மேல் நோக்கி நகர்த்தும் தருவாயில் சிற்பி தன் அகக்கண்ணில் அக்காட்சியை படம் பிடித்து உலோகத்தில் வார்த்து விட்டான். முகத்தில் ஒரு பரவசம், இடது கையில் தான் என்ன அப்படி ஒரு நளினம்!. நேரில் பார்க்குபோது சிலை உயிர் பெற்று அப்படியே பதிகத்தை பாடி அதற்கேற்ப அபிநயம் பிடிப்பது போல உள்ளது.

பல அருங்காட்சியகங்களில் இந்த வடிவம் உள்ளது – தில்லி, சென்னை, ப்ரீஏர்..


இனி நாம் இந்த சிலைகளை அடையாளம் கொள்ளவது சிரமம் இல்லை.

ஆக்க்லாந்து அருங்காட்சியகம்

ஸ்ரீவத்சம் நன்கு தெரிகிறது – எனவே கண்டிப்பாக கண்ணன்

இங்கே இருப்பது சம்பந்தர், தளத்தில் குறிப்பிட்டது போல கண்ணன் அல்ல.

ஹிந்து விஸ்டொம் தளம்

இந்த ஓவியத்தில் இருப்பது மேலே பார்த்த குறிகளை வைத்து சம்பந்தராக இருக்கலாம். (ஸ்ரீவத்சம் இல்லை!!)

சிற்பக் கலை பற்றி நல்ல பதிவு எனினும்

இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வாழ்த்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுபவர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொரு பெயரையும் எழுத ஆரம்பித்தால் இந்த வலைத்தளம் போதாது என்னவோ.. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. வழக்கம் போலவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எந்நாளும் நாடுகிறோம்.

மீண்டும், உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி, இன்னும் பல நண்பர்களை எங்களுடன் இணைத்து வையுங்கள், கோயில், அருங்காட்சியகம் எங்கு சென்றாலும் எங்களை நினைவு கொண்டு படங்களை எங்களுடன் பகிருங்கள் என்ற வேண்டுகோளை மீண்டும் இட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.