வாலி வதம் – ஒரு அற்புத வடிவம் – தாராசுரம்

இன்று திரு சதிஷ் அவர்களின் படங்கள் கொண்டு தாராசுரம் அற்புத வாலி வதம் சிற்பம் ஒன்றை பார்க்கிறோம்.

வாலி மாயாவி என்ற ஒரு அசுரனுடன் போர் செய்ய ஒரு குகையினுள் செல்கிறான். தனது தம்பியை வெளியில் காவலுக்கு இருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறான். வெகு காலம் அவன் வெளியில் வரவில்லை, உள்ளே இருந்து குருதி கசிவதையும், வாலி போல ஒரு குரல் ( உயிர் நீங்கும்போது வரும் குரல் போல ) கேட்டு பதறிய சுக்ரீவன், ஒரு பெரிய பாறையை உருட்டி குகையின் வாயிலை மூடிவிட்டு திரும்பினான்.

வாலி உண்மையில் அசுரனை வீழ்த்தி வெளிவரும் பொழுது, அடைக்கப்பட்டுள்ள வாயிலை கண்டு தன் தம்பி மீது மீது சந்தேகித்து – சினத்தில் அறிவை இழக்கிறான். மேலும் கிஷ்கிந்தையில் அரியணையில் சுக்ரீவனை கண்டதும் வெறி தலைக்கு ஏற – அவனை உதைத்து நாடு கடத்துகிறான்.

காட்டில் ஒளிந்து வாழ்ந்த சுக்ரீவன் – சீதையை தேடி வருகின்ற ராமனிடம் முறையிட்டு – தன்னை மீண்டும் வானர அரசனாக்கினால், தனது வானர சேனை கொண்டு சீதையை தேடவும் , ராவணனை அழிக்கவும் உதவ முன்வருகிறான்.

வாலி – தான் பெற்ற வரத்தினால் – முன்னின்று போர் செய்யும் எதிரியின் பாதி பலம் தன்னுள் சேர்வதால், ராமன் அவனை பின்னால் இருந்து அம்பை எய்து வீழ்த்தும் காட்சியே இது.

இதை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் .

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/kitkantha_kandam/07.htm

வாலி வதம் – கிட்கிந்தா காண்டம் – கம்ப ராமாயணம் – உரை டாக்டர் பூவண்ணன்.

சுக்கிரீவனைப் வாலி மேலே தூக்கலும், வாலி மேல் இராமன் அம்பு எய்தலும்

‘எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி’ என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 65

வாலி ‘இவனை எடுத்துத் தரை மீது மோதுவேன் என்று நினைத்துத் தன் தம்பியான சுக்கிரீவனின் இடையிலும் கழுத்திலும் இரண்டு கைகளையும் செலுத்தி மேல் எடுத்தான். அப்போது அவன் மீது இராமன் ஓர் அம்பைத் தன் வில்லில் தொடுத்து அந்த வில்லின் நாணுடன் தன் தோள் பொருத்திச் செலுத்தினன்.


கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது – நின்றது என், செப்ப?-
நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி. 66

இராமனின் அந்த அம்பானது, நீரைத் தோற்றுவித்த நெருப்பும், அந்த நெருப்பைத் தோற்றுவித்த வலிய காற்றும் இவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பூமியும் இந்த நான்கும் கொண்ட வன்மையைப் பெற்றுள்ள வாலியின் மார்பைப் பழுத்த மிக்க சுவையுடைய வாழைப் பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல எளிமையாகத் தைத்துச் சென்றது என்றால், அந்த அம்பின் ஆற்றலைக் குறித்துக் கூறவேண்டியது என்ன இருக்கின்றது?

சரி இப்போது சிற்பம். மிகவும் சிறிய சிற்பம் . மக்கள் பார்வையில் படுவதில்லை. சரி நாம், அதை எடுத்து காட்டுவோம்.

இப்போது தெரிகிறதா ?


இல்லையா ? இப்போது

அதன் அளவை காட்ட இந்த படம்

படங்களுக்கு நன்றி : சதீஷ் மற்றும் ( கடைசி படம் )http://www.kumbakonam.info

புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் – திரு சதிஷ் அருண்

இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்

இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.

புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.

தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –

“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”

திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,

“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)

(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)

என்றும்,

அப்பர், திருகோடிகாவில் ஈசனை,

“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)

(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )

என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.

என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.

ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்

இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.


இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.

வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?

டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.

அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.

குட்டி செய்யும் லூட்டி – புள்ளமங்கை புலி தொப்பை

நாம் இதற்க்கு முன்னர் இரு இடங்களில் நம் நண்பர் புலி தொப்பையை சந்தித்தோம். மல்லை மற்றும் ஸ்ரீநிவாசநல்லூர் சிற்பங்களில் நம்மை மகிழ்வித்த இவர் இன்று புள்ளமங்கை பிரம்மபுரீர்ஸ்வரர் கோயிலில் தன் கூட்டாளிகளுடன் நம்மை அசர வைக்கிறார்.

சரி, உங்கள் கவனிப்பு திறனை சோதிக்கலாம். இந்த படத்தில் நம் நண்பரை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

முடியவில்லையா ? சரி இந்த படத்தில் முயற்சி செய்யுங்கள்

என்ன ! இன்னும் முடியலையா ? இப்போது

சரி விடுங்க – இப்போ பாருங்க நம் குட்டி செய்யும் லூட்டி – அதுவும் என்ன அருமையான புலி தொப்பை – இருந்தும் சற்று சோகமாகவே உள்ளார் நம் நண்பர்

இந்த காலத்தில் கட்டும் கோயில்களிலும் வெளி சுவரில் பூத கணங்களை வைகிறார்கள் – ஆனால் அவை அனைத்தும் ஒரே முக பாவத்துடன், பெரும்பாலும் வருவோரை முறைத்து கொண்டு இருக்கும். சோழர் கால பூத கணங்களை கொஞ்சம் பாருங்கள் – ஒவ்வொன்றின் உடல் அமைப்பு என்னமோ குள்ளனாக ( அதில் கூட சிற்பியின் திறமையை பாருங்கள் – கை , கால் என குள்ளர்களையும் தத்ரூபமாக செதுக்கி உள்ளான் ) இருந்தாலும் , அவற்றின் முக பாவம் – அவை நிற்கும் அலட்சிய தோரணை, உண்மையிலேயே நம்மை நக்கல் அடிப்பது போல உள்ளது.

ஒன்று பாருங்கள் – நம் புலி தொப்பை அனைவருக்கும் இல்லை – அது ஒரு பூத கணத்தின் அமைப்பு – அவர் பெயர் என்ன – ஆராய வேண்டும். அடுத்து முறை நீங்கள் புராதன இடங்களுக்கு செல்லும் பொது இது போல புலி தொப்பை சிற்பங்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். அதே போல மற்ற பூத கணம் சிற்பங்களையும் பார்த்து மகிழுங்கள்.

படங்களுக்கு உதவி – காத்தி மற்றும் வரலாறு . காம்

மீண்டும் நமது நண்பர் – புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில்

நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்

அங்கே பல அற்புத சிற்பங்கள் இருந்தும் இன்று சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு மகர தோரணம், அதில் நம் நண்பர் புலி தொப்பையை மீண்டும் சந்திப்போம்.

அருமையான இரு கன்னியர் சிற்பம் – ( அவர்களை அடுத்து வரும் மடல்களில் பார்ப்போம் ) – நடுவில் சற்று மேலே மகர தோரணம். படத்தை பாருங்கள்.

எங்கெங்கும் சிற்பங்கள் – அப்பப்பா, இந்த சிறிய இடத்தில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடு! மகர யாளிகள் – அவற்றின் வாயில் இருந்து வெளி வரும் சிங்க யாளிகள், அவற்றின் மேல் வாளேந்திய போர் வீரர்கள் , ஒருவருடன் ஒருவர் போர் புரிந்து கொண்டு உள்ளவாறு செதுக்கப்பட்ட விதம் அருமை .

சிற்பத்தின் நடுவில் பூமாதேவியை காப்பாற்றிய வெற்றி பரவசத்தில் வராஹ மூர்த்தி, நான்கு கரங்கள் – மேல் இரண்டில் சங்கு , சக்கரம் , பூமாதேவியின் பக்தி நிலை – இரு கரம் கூப்பி , அவர்களை ஆசை அன்புடன் மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி, அத்துடன் நிறுத்தவில்லை சிற்பி ( மல்லை மற்றும் உதயகிரி வடிவங்கள் பார்த்தோம் அல்லவா ) – அவற்றை போலே இந்த சிறு சிற்பத்திலும் அவன் வராஹ மூர்த்தியின் கீழே நாகராஜன் மற்றும் நாகராணியை செதுக்கி உள்ளான்.

அவரைச் சுற்றி பூத கணங்கள் – எருமைத்தலையுடன் ஒரு பூதம் – அடுத்து நம் நண்பர் புலி தொப்பை – ஆள்காட்டி விரலால் வாயை இழுத்து முகம் காட்டும் வண்ணம் மிக அருமை. இங்கு புலி தொப்பை கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. இவர் புள்ளமங்கை கோயிலிலும் வருவார். இது போல வேறு இடங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் இவர், யார் அந்த எருமை தலை – இவர்களுக்கு பெயர் உண்டா?

ஒரு அற்புத சிற்பத்தை நமக்கு தந்த காத்தி மற்றும் படங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் – இருவருக்கும் நன்றி

தஞ்சை பெரிய கோயில் விமானம் நிழல் தரையில் விழுகிறதா ?

மீண்டும் பெரிய கோயில் விமானம். சென்ற மடலில் பெரிய கோயில் விமான நந்தி அளவை பற்றி எழுதினேன். அதில் பெரிய கோயில் நிழல் பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் அதை பற்றி கேட்டனர்.

பெரிய கோயில் விமானத்தின் நிழல் பற்றி பல புத்தகங்கள் கூட அதன் நிழல் தரையில் விழாது என்ற கருத்தை பல காலமாக சொல்லி வருகின்றனர். சோழர்கள் தங்கள் புகழை மெய்கீர்த்திகளில் எழுதி விட்டு சென்றனர். அவர்களது உன்னத படைப்பான பெரிய கோயிலுக்கு ஏன் இந்த பொய் கீர்த்தி.

இந்த நிழல் விழுமா கேள்வியை பலர் திரித்தும் கூறுவர் – முழு விமானத்தின் நிழல் விழாது , , மேல் இருக்கும் கலசத்தின் நிழல் விழாது , காலையில் விழாது, மாலையில் விழாது, மதியம் விழாது என்று பல உண்டு.

மீண்டும் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் உதிவியுடன் படங்களை இடுகிறேன்.

படங்களை பாருங்கள். நிழல் விழும் – விழுகிறது

மேலும் படிக்க

http://www.hindu.com/lf/2004/03/30/stories/2004033001340200.htm
http://www.hindu.com/2004/04/07/stories/2004040703010300.htm

ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது – பார்வதி ஈசனை நினைத்து தவம் – தாராசுரம்

நண்பர் திரு சதீஷ் அவர்கள் இந்த வாரம் தாராசுரம் செல்கிறேன் என்றார். அங்கே மண்டப தூண்களில் ஸ்கந்த புராணம் சிற்பங்கள் உள்ளன என்றும் அதை படம் பிடித்து வருமாறு கேட்டேன்.அவரும் அவ்வாறே எடுத்து வந்துள்ளார். அருமையான சிற்பங்கள். அவற்றை விளக்க நல்ல தமிழ் உரை தேடும் பொது நண்பர் வைரம் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் இதன் வர்ணனை உண்டு என்று ஒரு ஆங்கில நூலை தந்தார். படித்த பின், மதுரை திட்டத்தில் தேடி அண்மையில் அந்த நூலும் இந்த அற்புத திட்டத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து அவற்றை எடுத்து திரு திவாகர் அவர்களின் உதவியுடன் இங்கே படைக்கிறேன். இணையத்தின் அற்புதம் – நண்பர்களின் உதவி – உருவாகிறது பார்வதி கல்யாணம். இதனை நாம் முன்னர் பார்த்த தஞ்சை தக்ஷ வதம் கதைக்கு தொடர்ச்சி என கருதி வாசிக்கவும்.

புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா


முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள்.

“ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது? இப்படி தவம் செய்வது இவளுக்குத் தகுமோ.. பார்வதியே.. உமையே.. அறியாமல் செய்கிறாயே.. இப்படியா தவம் செய்வது.. சிவன் அவன் அருள் வாய்க்குமோ.. அவனையே மணம் செய்வேன் என்று தவம் செய்தால் பெறக் கூடிய அத்தனை எளியனா சிவன்? ஆனாலும் இத்தனைக் கடினமான தவம் உனக்கு வேண்டுமோ.. யோசித்துப் பார்..”

“தவம் செய்யத் தொடங்கிவிட்டேன்.. ஆதியும் அந்தமும் இல்லாத அந்த இறைவனையே மணம் முடிப்பேன்.. என்னுடைய தலைவனே வந்து தவத்தை விடு என்றாலும் விடேன்.. இத்தகைய கடிய நோன்பினால்தான் இனி உயிர் வாழவேண்டுமென்றால் அப்படியே என் வாழ்க்கை முழுதும் கழிப்பேன்”

மேற்கண்டவை மாய மறையோன் வடிவம் தாங்கி சோதனை செய்த இறைவனுக்கும், அந்த இறைவனுக்காகவே வேண்டி கடுந்தவம் செய்யும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் வரும்.

http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/pdf/pm0239.pdf

கந்தபுராணம் சிவபுராணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அட்டகாசம் செய்து தேவர்களை சித்திரவதை செய்ததோடு மட்டுமல்லாமல் மூவுலகையே அச்சுறுத்திவந்த அசுரர்களின் தலைவனான சூரபன்மனை வதைக்க தானே ஒரு மகனைப் பெற்றுத் தருவதாக இறைவன் தேவர் முதலா அனைவருக்கும் அபயம் தருவதில் ஆரம்பித்து, அதற்கான வகைகளில் ஒன்றாக பர்வதராஜனின் மகளாக பார்வதிதேவி பிறந்து ஈசனை மணக்க தவம் செய்யும் காட்சிதான் இந்த சிற்பம்.

இதற்கு முன்புதான் மன்மதபாணங்களை வீசி காதலரை அல்லல் படுத்தும் காமன் சிவனின் மூன்றாவது கண்ணின் வெப்பத்தால் சாம்பலாகிப் போனதால் ( இதையும் நாம் தஞ்சை பெரிய கோயில் சிற்பத்தில் பார்த்தோம் ), அம்மை பார்வதியின் தவம் மிக மிகக் கடுமையாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேவியை அனைவருமே பரிதாபமாகப் பார்த்து இந்தத் தவத்தைக் கைவிடுக.. என்று சொன்னாலும், ஈசனே மாறுவேடத்தில் வந்து கேட்டும் – இறைவனை மணக்க எப்படிப்பட்ட துயர் வந்தாலும் அதைத் தாங்குவேன் என்கிறாள் சக்தி.

இனி சிற்பத்துக்கு வருவோம்..

தராசுரம் கோவில் தூணில் இருக்கும் அருமையான கந்த புராணத்தை விளக்கும் சிற்பங்கள் – முதல் சிற்பம் இன்று பார்போம். அடுத்தடுத்து வரும் மடல்களில் கதை கேற்ப சிற்பங்களை பார்ப்போம்.

தூண் – கீழே இருந்து மேலே நகர்கிறது கதை. பார்வதியின் தவத்தை கண்டு அனைவரும் வியக்கின்றனர். ஊர் முழுவதும் இதே பேச்சு தான் போல. தோழியர் மூவர் ஈசனை நினைத்து லிங்கத்தின் முன் பூஜை செய்யும் தேவியை வணங்குகின்றனர். போதும் தவம் – என்கிறார்களோ ?

மேலே – பார்வதி ஒரு காலில் நின்று கடுந்தவம் புரிகின்றாள் – இரு புறம் தீ பிழம்புகள் – அப்படியும் ஈசன் மனம் இறங்கவில்லை – அடுத்து என்ன – மழைக்காலம் வந்து விட்டது ….. தொடரும் .

தஞ்சை பெரிய கோயில் விமான நந்தி, அதன் அளவு – ஒரு அலசல்

தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல செய்திகள் பின்னர் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெளிவு பெற்று உள்ளன – அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது ( விழுகிறது – தினமும் ), அதன் மேல் இருப்பது XX எடை கொண்ட ஒரே கல் ( அது ஒரே கல் அல்ல ) , ராஜ ராஜனுக்கு வந்த நோய் தீரவே அவன் பெரிய கோயிலை நிறுவினான் – என்று பல தவறான கருத்துகளை அண்மைய ஆய்வுகள் தெளிவு பெற உதவி உள்ளன.

பெரிய கோயிலை பற்றிய முதல் காணல் மடலில் நான் இந்த அருமையான இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தை விவாதம் செய்தேன்

http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/arcpho/arph31.jpg

இதோ அந்த படம் – பெரிய கோயில் விமானத்தின் மேல் உள்ள நந்தியின் அளவை கீழே உள்ள பிரகாரத்தில் உள்ள நந்தியின் அளவை கொண்டு விளக்க ஒரு முயற்சி. இது சரியா ?

இந்த கேள்விக்கு பதில் தேட – திரு குடவாயில் பாலசுப்பிரமணியம ஐயா அவரை அணுகிய பொது – இந்த படங்களை தந்து உதவினார் ( அவரை இதுவரை நேரில் பார்க்காதவர்களுக்கு அவரை படத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு ) . மேலும் பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களும் பல படங்களை தந்து உதவினார்.

முதலில் கீழே இருக்கும் நந்தியை பார்போம். அருகில் நிற்பது திரு பாலு ஐயா. இந்த நந்தி ராஜ ராஜன் முதலில் நிறுவிய சிற்பம். நாயக்கர் காலத்தில் அதனை மாற்றி , இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்போது உள்ள நந்தியும் அவர்கள் நிருவியதே. எதனால் இவ்வாறு செய்தார்கள் ? ஒருவேளை மாலிக் கபூர் சூறையாடல் பொது நேர்ந்த சேதம் காரணமோ ?

இப்போது விமானத்தின் மேல் உள்ள நந்தி வரிசை – அதன் அளவை நாம் எப்படி அளப்பது – அதற்கும் திரு பாலு ஐயாவின் படம் இதோ – பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொது எடுத்த படம்.

சாரத்தில் நமக்கு என்றே மனிதர்கள் – அவர்களை கொண்டு நாம் நந்தியின் அளவை அலசுவோம்.

இதன் படி பார்த்தல் கீழே இருக்கும் நந்தி – மேல் உள்ள நந்தியை விட அளவில் பெரியது – அதன் வடிவமும் வேறு பாணியில் உள்ளது.

எனினும் இதனை கொண்டு பெரிய கோயில் விமானத்தின் பிரம்மாண்டமான அளவை நாம் தெரிந்துக்கொண்டோம் – மீண்டும் ஒரு முறை தொலைவில் இருந்து அருகில் சென்று இந்த அற்புத சோழ படைப்பை கண்டு ரசிப்போம்.
14091332144513461423
143228832868

வள்ளி திருமணம் – சோழர் சிற்பம்

திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்ற மடலில் மிக அழகான கேள்வியை எழுப்பினார் . திரு சதீஷ் உதவியுடன் அதே தஞ்சை பெரிய கோவில் சோழர் கால வள்ளி திருமணம் சிற்பம் இப்போது பார்போம் .

சிற்பத்தின் அளவை குறிக்க தண்ணீர் குடுவை ( பாட்டில்) ஒன்றை அருகில் வைத்தோம்.

சிற்பம் சற்று சிதைந்து உள்ளது – அதுவும் முழு கதையை விளக்குமாறு இல்லை. சரி, மேல் இருந்து வருவோம். முதலில் பரண் மீது அமர்ந்திருக்கும் வள்ளியை வம்புக்கு இழுக்கும் கிழவனார். ( கையில் குடை ஏந்தி நிற்க்கும் வேஷதாரி முருகன் )

அடுத்து முருகன் தன் சுய உருவில், தமையன் யானையாக ( யானை குட்டி போல உள்ளது சிற்பம் ) வந்து வள்ளியயை பயமுறுத்தும் கணேசன். ( வள்ளி சிரத்தில் கை வைத்து வணக்கம் கூறும் வண்ணம் உள்ளது ??)

முடிவில் – யானையின் ( இப்போது பெரிய யானை ) மேலே திரும்பி செல்லும் முருகன், வள்ளியோ இரு கைதூக்கி வணங்கும் வண்ணம் உள்ளது சிற்பம்.

அடியில் வள்ளியின் வேடர் குலத்தவர் அணிவகுப்பு. .


அடுத்து இருக்கும் சிற்பம் – மேலே ஒரு பக்தன் மரத்தின் அடியில் , அடுத்து முருகன் நிற்கும் கோலம் அருகில் குடையின் அடியில் அமர்ந்திருக்கும் தேவசேனை ? , முடிவில் முருகன் வள்ளி தேவசெனையுடன் – கீழே மயில் வாகனம். மிக அருமையான சிற்பம்.

காதல் வள்ளியும் கள்ளக் கந்தனும்:

இன்று மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம் – நன்றிகள் திரு சதீஷ் ( படங்களுக்கு ), திரு திவாகர் ( அருமையான தமிழில் வள்ளியின் கதையை எழுதி கொடுத்ததற்கு )

முருகன் கோயில் – தஞ்சை பெரிய கோவில் வளாகம் – மயில் மீது முருகன் , அவனை சுற்றி வள்ளி திருமணம் கதை விளக்கும் சிற்பங்கள் .



தொண்டைவள நாட்டிலே உள்ள வள்ளிமலை போலவே அங்கு வாழும் வேடர்களும் அவர்கள் தலைவனுமான நம்பியும் தங்கள் தருமத்திற்கு ஏற்ப சிறந்து விளங்கினர். ஆனாலும் அந்த நம்பிக்கும் ஒரு குறையுண்டு. குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான். அதுவும் பெண் குழந்தை என்றால் நம்பிக்கு மிக மிக விருப்பம்.

சித்தர்கள் வாழும் அந்த அழகான வள்ளிமலையின் ஒரு ஓரத்திலே சிவமுனி எனும் தவயோகி தன் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தவக் கோலத்தில் இருக்கும் சிவமுனிக்கும் ஒரு சோதனை ஒரு அழகிய புள்ளிமான் வடிவில் வந்தது. தன் தவம் முடிந்து குடிலில் இருந்து வெளி வரும் வேளையில் அந்தப் புள்ளி மான் துள்ளலாக அவர் முன் ஓடிவந்தது. புள்ளிமானின் ஒய்யார அழகு ஒருகணம் அந்த தவமுனிவரை மயக்கியதன் காரணம், அவர் தவவலிமையால் புனிதமான பலிதமாகி, அந்தப் பெண்மான் கருவுற்றது.

அந்தப் புள்ளிமான ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அங்கிருக்கும் வேடர்களின் வள்ளிக் கிழங்குக் குழியில் விட்டு விட்டு ஓடிவிட்டது. ஆதரவற்ற அந்த ஒளி வீசும் அழகான பெண் குழந்தையை தெய்வம் தந்த குழந்தையாக வேடர்களின் தலைவன் பாவித்து, வள்ளி என்றே பெயரிட்டு வளர்த்துவந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அந்த அழகு வள்ளி தங்கள் வேட்டுவக் கடவுளான வேலவனையே மனம் முழுவது வரித்து, அந்த ஆறுமுகத்தான் கந்தனுக்காகவே தான் பிறப்பிக்கப்பட்டதாகவே அவனையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

கன்னிப் பருவத்துப் பெண்களை சோளக் கொல்லைக் காவலுக்கு வைப்பது வேடர்களின் வழக்கம். சோளப்பயிர்கள் மேலோட்டமாக வளர்ந்து சோளம் (தினைப் பருப்பு) அதிகம் வளரும் பருவத்தில், அந்தத் தினைப் பயிர்களின் மத்தியில் ஒரு பரண் அமைத்து அந்தப் பரண் மேலிருந்து குருவிகள், கிளிகள் வாராமல் இருக்க பருவப் பெண் வள்ளி காவல் காத்திருக்கும் ஒரு சுப வேளையில் வள்ளியின் மனதில் என்றும் கோயில் கொண்டுள்ள கந்தன் தன் மலைக் கோயிலை விடுத்து அவள் மனக்கோயிலின் நாயகனாய் வர எண்ணம் கொண்டான்.

சிற்பத்தை பாருங்கள் – பரண் மீது வள்ளி , கையில் உண்டிகோல். அருகில் என்ன மரம் ?


அகிலத்தையும் ஆளும் ஆண்டவனான கந்தனுக்கு, ஏனோ தன் காதலியிடம் கூட சற்று விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது போலும். அவள் மனத்துள் உருவான கடவுளாய் உருவம் பெறாமல் சாதாரண வேட்டுவ இளைஞனாய் அவளை சீண்டிப் பார்த்தான். (காதலியை சீண்டாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கு?)

அவள் யாரோ.. என்ன பேராம்.. அவள் தந்தை யாராம்.. கல்யாணத்திற்குப் பெண் கேட்டால் அவளைத் தனக்குத் தர சம்மதிப்பாரோ.. என்றெல்லாம் அந்தச் சின்னப் பெண்னிடம் பெரிய கேள்விகளைக் கேட்டான். அந்த அழகு பதுமை பேசாமல் தலை குனிந்துகொண்டாள். தூரத்தே சத்தம் கேட்க, ‘வீட்டுப் பெரியவர்கள் அதுவும் வேடவர்கள் வந்தால் அவனை கொன்று விடுவார்கள்’ என்று எச்சரித்து துரத்தியும் விட்டாள். துரத்தப்பட்டவன் ஓடி ஒளிந்தவன் போல பாவனை செய்து அங்கேயே வேங்கை மரமாகி மாறி நின்று கொண்டான். சிற்பி செதுக்கிய மரத்தின் அர்த்தம் புரிந்ததா ? வேடவர்கள் கூட்ட்மாக வந்தனர். தேவைப்பட்ட தினைப் பண்டங்களை வள்ளிக்குக் கொடுத்தனர். சென்றுவிட்டனர்.

மறுபடியும் வேடனாய் உருமாறி வள்ளியிடம் காதல் மொழி பேசினான். வள்ளி கோபமாய் பார்த்தாள். ‘இது முறையா’ என்று கேள்வி கேட்டாள். போய்விடு என்று மன்றாடினாள். என் மனதில் இன்னொருவன் வந்து குடி புகுந்து தொல்லை செய்வது போதாது என்று நீயும் ஏன் தொல்லை செய்கிறாய்.. இது நியாயமா.. என்று கெஞ்சினாள். அப்படியானால் உன் மனத்தை வரித்தவன் பெயர் சொல்லு என்று வேடன் கேட்டான். வெட்கப்பட்டாள் அந்தப் பேதை.

மறுபடியும் சப்தம். மறுபடியும் துரத்தினாள் அவனை. இந்தச் சமயத்தில் ஓடி ஒளிந்தவன் மரமாக மாறாமல் வயதான சிவத் தொண்டர் போல உருக் கொண்டவன் தைரி்யமாக இப்போது வள்ளி முன்பும் அவள் கூட்டத்தார் முன்பும் வெளிப்பட்டான். தாத்தா சிற்பத்தில் பார்த்தீரா ? வயதான சிவத்தொண்டரைப் பார்த்ததும் வள்ளியும் அவள் தந்தையும், கிழவருக்கு வேண்டிய தினைப் பண்டங்களைப் படைத்து, அவர் காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கள்ளக் கிழவரும் ஆர அமர உண்டு விட்டு, தாராளமாக ஆசிகளையும் வழங்கினார். சந்தோஷமாக அவள் தந்தையும் மற்றவர்களும் அங்கிருந்து விலக, தனித்துவிடப்பட்ட வள்ளியிடம் வேண்டுமென்றே காதல் வார்த்தைகளை கிழவர் அள்ளிவீச, அந்தச் சின்னப் பெண் ‘சீச்சீ’ என்று விலகினாள். அப்போது ஒரு யானை அந்த சோளக் கொல்லையில் ஒடிவரக்கண்ட வள்ளி பயத்துடன் அந்த சிவனடியாரைக் கட்டிக் கொண்டு அந்த யானையை விரட்டுமாறு வேண்ட, சிற்பத்தை பாருங்கள் – என்ன அருமை – எம் சி ஆர் போல பயந்து நடுங்கும் வள்ளியை அனைத்து பிடித்திருக்கும் கள்ள தாத்தா

அந்த கிழவனாரான கந்தன் தன் அண்ணன் விநாயகனை மனதுள் வேண்ட, அந்த வெற்றி விநாயகனே அந்த யானையாக வந்தவன், சுயரூபம் எடுத்து அண்ணனாக மாறி அவர்களை வாழ்த்தினான். கிழவனாக வந்த கந்தனும் அவள் மனக்கோயில் நாயகனாய் மாறினான்.
சிற்பத்தில் பாருங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா குமாரனாக மாறும் காட்சி

ஆறு முகமும் ஈராறு கைகளும் கொண்டு மயில் மேல் அமர்ந்து குமரனாய் தரிசனம் தந்தான்.

அழகு வள்ளிக் குறத்தி தன் மணாளனே இத்தனை நாடகம் ஆடி கள்ளத்தனம் செய்தவன் என்று அறிந்து உள்ளம் பூரித்தாள். தன் மன நாயகனோடு ஒன்று சேர்ந்தாள்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்

இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

இதுவே கதை – இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் – மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் – ஈசன் கையில் இருக்கும் சூலம் – இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

கடைசி காட்சி – சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.