பள்ளிகொண்டிருக்கும் அரங்கனை எதிர்த்து சதி பேசும் அசுரர்கள் – மல்லை

இன்றும் ஒரு சுவாரசியமான கதையோடு தொடர்புடைய சிற்பத்தை காண்போம் – மகாபலிபுரம் சென்று வந்த யாரும் இந்த சிற்பத்தை பார்க்காமல் திரும்பும் வாய்ப்பு குறைவு அதேபோல் இதன் பின்னனி கதையை அறிந்து ரசிக்கும் வாய்ப்பும் குறைவு. மகிஷாசுரமர்தினி மண்டபத்திலுள்ள அனந்தசயனின் சிற்பத்தை கண்டுகளிப்போம். ஊழிக்கால விஷ்ணுவின் மறத்தை பறை சாற்றும் கதையிது.

சற்றே வழக்கத்திற்கு மாறாக, முதலில் அனேகமானோர் அறியாத சிற்பத்தை பார்ப்போம் பிறகு கதைக்குச் செல்வோம்.

கல்லைக் குடைந்து கலைநுணுக்கத்தோடு கதையின் நாயகர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தும் கண்முன்னே வாழவைக்கும் தனித்துவம் வாய்ந்த சிற்பங்களைப் படைத்த சிற்பியின் திறமையை என்னவென்று வியப்பது.

இந்த அனந்தசயனனின் சிற்ப வகையின் சிறப்பை பேராசிரியர் சுவாமிநாதன் மூலம் தெரிந்துகொண்ட போது நான் மேலும் அதிசயப்பட்டேன்.

இப்பொழுது கதை, ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் முழு உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் ஆயிரம் தலை நாகத்தின் அணையில் பள்ளி கொண்டு (அனந்தசயனன்) யோகநித்திரையில் ஆழ்ந்திடுவான் பரந்தாமன். சகலமும் ஒடுங்கிய நேரம், பிரம்மன் மட்டும் அடுத்த யுகத்திற்கான தன் படைப்புத்தொழிலில் ஈடுபட்டிருப்பார்.

“உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான்” என்று மகாவிஷ்ணுவை வர்ணிப்பார் நம்மாழ்வார். திருமால் படுத்திருப்பது போல பாவனை செய்தாலும் அவன் என்றுமே யோக தவத்தில் ஈடுபடுபவன். அப்படிப்பட்ட திருமால் ‘உறங்குவான்’ போல இருந்திருக்கும் நிலையில் அவன் செவியின் குறட்டை தூசி வெளிப்பட அதிலிருந்து வந்தவர்கள்தான் மது-கைடவர்கள் எனும் அரக்கர்கள்.

இவர்கள் இருவரும் தங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லையென நினைத்து பிரம்மனை ஆட்டிப்படைத்தனர். பிரம்மன் தன் படைப்புத் தொழிலை செய்ய விடாமல் தடுத்தனர், பிரம்மனின் வேதங்களை பிடுங்கிக் கொண்டு படைப்பின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்தனர். இவர்களை பிரம்மனால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

(மது என்றால் சமஸ்கிருத்தில் தேன். மனதை மயக்கும் அதீதச் சுவை, மது என்றால் கள், சாரயமும் கூட. கை – என்றால் ஓசை என்று சமஸ்கிருத்தில் பொருள், கைடப என்பது இயலாமையால் உருவாகும் ஓசையை குறிக்கும். இந்த இரு தீய சக்திகளுள் மது நம்மை ஏதாவது ஒன்றாக உருவகப்படுத்தி காட்ட, கைடபவோ நம்மை எல்லாமாகவும் உருவகப்படுத்தி நம் உண்மைநிலையை மறைத்து ஒரு மாய தோற்றத்தை உருவாக்கிவிடும்.)

தனது ஞான சக்தியின் துணை கொண்டு விஷ்ணுவால் மட்டுமே இவர்களை அழிக்க முடியும் என்று அறிந்த பிரம்மா, யோகநித்திரையில் இருக்கும் விஷ்ணுவை எழுப்ப யோகமாயையை நாடுகிறார். மாயாதேவியால் துயில் நீங்கிய விஷ்ணு அரக்கர்களை அழித்து பிரம்மனை காப்பாற்றுகிறார் என்பது கதை. (நம் தேவையின் அளவறிந்து கதையை சுருக்கிக் கொள்கிறோம்)

மீண்டும் சிற்பத்தை காண வருகிறோம்,

ஒய்யாரமாய் பாம்பணையில் சாய்ந்திருக்கும் விஷ்ணுவின் எழில் மிகு சாந்தசொரூப முகம் காட்டுகிறது சிற்பியின் திறமையை.

அழாகாய் வடிக்கப்பட்ட இரண்டு கைகள், நீண்ட வலது கை எதையே பற்றிக்கொண்டிருக்கிறது. முழங்கையோடு வளைந்த இடக்கை (சிதைந்துவிட்டது), சற்றே உயர்ந்த மார்பு, சிரம் மற்றும் சிறிதளவு மடிந்த இடது கால்.( ஒருவேளை அவன் எழுப்பப்பட்டதால் எழுந்திருக்க முய்ல்கிறான் போலும்) கண் கவரும் கிரீடம், அழகான மார்பணி மற்றும் காதணிகளை கவனிக்கவும்.

அந்த அனந்தசயனம் படுத்திருக்கும் அன்ந்தனின் சிற்பத்தைப் பார்த்தீர்க்ளேயானால் ஐந்து தலைகளும் நிழல்குடை போல் விரித்த நாகத்தின் தலை அழகுற செதுக்கப்பட்டிருக்கும் சிற்பியின் திறனை இங்கு போற்றவேண்டும்.

படுத்திருக்கும் மகாவிஷ்ணுவின் காலடிப் பகுதியில் ஈடிணையில்லாத ஓர் அழகுத் தேவதையின் சிற்பம். ஒருவேளை பூதேவியா – இல்லை – ம்காவிஷ்ணுவின் மாய உறக்கத்திலிருந்து துயிலெழுப்பும் மகாசக்தியா

அழகாய் சாய்ந்து படுத்திருக்கும் இறைவனுக்கு மேலே இரு பறக்கும் உருவங்களும், கீழே இரு உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இவை மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள், ஆயுத புருஷர்கள் என்று அழைக்கப்படுபவை. மேல் உள்ள இரண்டு பறக்கும் உருவங்களில் இடப்பக்கம் உள்ளது பாஞ்ச சன்யம் எனும் சங்கு, வலப்பக்கம் உள்ளதோ கௌமோதகி எனும் கதாயுதம். கீழே உள்ள அழகிய உருவங்களில் ஒன்று சுதர்சன சக்கரம் மற்றது நந்தகம் எனும் வாள். (இவை இரண்டும் மார்கண்டேயர் எனவும் பிருகு எனவும் சிலர் கூறுவர்)

(கௌமோதகி – பூதத்தாழ்வார், சுதர்சனம் – பொய்கையாழ்வார், நந்தகம் – பேயாழ்வார் என்றும் விஷ்ணுவின் ஆயுதங்கள் அவதாரமெடுத்ததென குறிப்பிடுவதுமுண்டு)

ஒரு அரக்கன் மற்றவன் தோள் மேல் சாய்வது போல ஏதோ கள்ளமொழியாக செவியில் கிசுகிசுப்பது சிற்பியின் கைவண்ணம். இது நேர்த்தியான திறன். சில நேரங்களில் கலைஞன் தன்னை, தன் திறமையை, உலகுக்கு அடையாளம் காட்ட ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் சிற்பம். ஒரு அரக்கன் இறைவனை தாக்க முற்படுதலும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளதை பார்த்து ரசியுங்கள்

ஈசனை குறிபார்க்கும் காமன் – கம்போடியாவில்

நமது புராணங்களில் வரும் கதைகளின் தாக்கம் இந்திய எல்லைகளை தாண்டி எங்கெல்லாம் சென்றுள்ளது என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது. கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் இருக்கும் சிற்பங்களின் வடிவங்கள் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைகளின் ஆழம் பிரமிக்கவைக்கின்றது.

இன்றும் அது போல ஒரு அற்புத வடிவம் – கம்போடியா பன்திய ஸ்ரெய் கோவிலில் – காமன் ஈசனை குறி பார்க்கும் வடிவம் இதோ.

முன்னர் நம் சோழ சிற்பி தஞ்சை பெரிய கோவிலில் இதே கதையை மூன்று பாகங்களாக தன் சிற்பத்தின் மூலமாக இந்த கதையை விளக்கி இருந்தான். இப்போது கம்போடியா சிற்பி இதை சிற்பி இதை எப்படி சித்தரிக்கின்றான் – பார்போம்.

2449


ஒரே சிற்பம் – அதனிலேயே முழுக் கதையையும் அப்படியே காட்ட வேண்டும். காமன் தனது
நாணை ஏற்றி ஈசனை குறி பார்க்கிறான் – அது முதல் காட்சி. ஈசனின் அமர்ந்த
கோலம் – அருமை – ( அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கீழே மூன்று அடுக்கு – பல முனிவர்கள் , மிருகங்கள், பூத கணங்கள் ) – ஆனால் அவர் காமனை பார்க்கும் பார்வை – ஆம் – சுட்டெரிக்கும் பார்வை மிக மிக அருமை.

ஈசனின் மறு பக்கத்தில் – ஒரு பெண்மணி மிக பணிவுடன் ஈசனின் கரத்தில் இருந்து ருத்ராக்ஷ் மாலையை கையில் வாங்கியவாறு உள்ளது – ஈசன் தனது தி்யான நிலையை விட்டு பார்வதியிடம் காமனின் பாணத்தின் தாக்கத்தால் நாடுவதை காட்டவோ ?

காமனை எரிக்கும் ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

இன்று மீண்டும் சில அற்புதமான தஞ்சை பெரியகோவில் சிற்பங்களை காண்போம் – காமதேவனை எரித்த கயிலை சிவன் ( திரு சதீஷ் அவர்கள் படம் எடுக்க மட்டும் அல்ல நல்ல தமிழ் ஆற்றல் உடையவர் என்று இன்றுதான் அறிந்தேன் – இதோ அவரது படங்கள் மற்றும் வர்ணனை )

முதலில் காமதேவனை பற்றிய சில குறிப்புகள் – மன்மதன், உருவிலாளன், கருப்புவில்லி, கரும்பன், நாரன், புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், மாரன், மான்மகன், வசந்தன், வேனிலான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காமதேவன் தேவர்கள் யாவரிலும் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமான, மகரக்கொடியுடைய மன்மதனின் ஆயுதங்கள் என்னவோ ரீங்காரமிடும் வண்டுகளை நாண்களாக உடைய கரும்பாலாகிய வில்லும், ஐந்து மலரினாலாகிய அம்புகளும்தான், இவன் தன் ஆயுதங்கள் மெலிதாயினும் அதன் வலிமையோ வெல்வதற்கரிது. தன் மனைவி ரதியோடு வாகனமாகிய கிளியில் அமர்ந்து, தென்றலாகிய தேரில் வலம் வரும்பொழுது, தென்படுவோர் யாவரும் தென்றலால் மனம் இளக, ரதி தேவி இச்சையை உண்டாக்க, காம பாணத்தை செலுத்துவார் காமதேவன், இதில் வீழ்ந்தோர் தப்பித்ததில்லை.

(சில மாதங்களுக்கு முன் அகத்தியர் குழுமத்தில் திரு. K. Shrikanth அவர்கள் எழுதிய காமபாணத்தை பற்றிய கட்டுரையில் இருந்து சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.) பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.

(காண்க: http://manoranjitam.wordpress.com/2008/01/21/legend-of-kaama/)

காமனின் அறிமுகம் போதும், இனி நம் கதைக்கு வருவோம்.

இந்த கதையும் சிற்பங்களும் நாம் முன்னே கண்ட தக்ஷன் தலையக் கொய்த ஈசன் கதையின் தொடர்ச்சியாகவே வருகிறது. தன் மணாளனான மகேசனுக்கு யாகத்தின் பொழுது சேரவேண்டிய அவிர்பாகத்தை தராமலும் தன்னை மகள் என்றும் பாராமல் தட்சனால் தானும் தன் மணாளனும் அவமானப்பட்டதை தாங்க முடியாமல் தாட்சாயணி யாகாக்கினியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனால் மனமுடைந்த ஈசன் சக்தியில்லையேல் சிவமில்லை என நினைத்து யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

அழிக்கும் கடவுளாகிய பரமசிவன் தவத்தில் ஆழ்ந்துவிட்டதால் தீயசக்திகளின் கொட்டத்தை கேட்கவா வேண்டும். இந்த சமயத்தில் தாரகாசூரன் எனும் அசுரன் பற்பல ஆண்டுகளாக பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தின் உறுதியை கண்ட பிரம்மன் வேறுவழியின்றி அவன் முன் தோன்ற, வழக்கம்போல் சாகாவரம் கோரினான் அசுரன். பிரம்மன் மறுக்கவே சிவனின் ஆழ்ந்த தவத்தையும் சக்தியின் மறைவையும் அறிந்திருந்த அசுரன் புத்திசாலித்தனமாக (அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டு) சிவனின் குமாரனைத் தவிர வேறு யாராலும் தனக்கு எந்தவித துன்பமும் நேரக்கூடாது எனக்கோரி வரத்தைப் பெறுகிறான்.

வரம்பெற்ற அசுரனின் நடவடிக்கைகள் வரம்பு மீறுகிறது, அனைத்து உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் கொடுமைப் படுத்தி துன்பத்தில் ஆழ்த்திவிட்டான். தேவர்கள் யாவரையும் ஒருவர் பின் ஒருவராக வெற்றி கொண்டு அவர்களிடம் உள்ள பெறுதற்கரிய பொக்கிஷங்களை பிடுங்கிக் கொண்டு அவர்களை சிறைப்படுத்தினான். அமிர்தமதனத்தின் பொழுது கிடைத்த ஐராவதம், உச்சைசிரவம் முதலியவற்றை இந்திரனிடம் இருந்தும், கேட்டதெயெல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமதாக்கினி முனிவரிடம் இருந்தும், குபேரனின் அரிய ஆயிரம் குதிரைகளையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல், வாயுவையும் தன் விருப்பத்திற்கு ஆட்டி வைத்தான். சூரிய வெப்பத்தை அடக்கி குளிர்ந்த சந்திரனையே எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்தான். இவன் கொடுமைகளை தாங்க இயலாமல் தேவர்கள் அனைவரும் தங்கள் உல்லாச அரண்மனைகளை துறந்து கானகங்களில் ஒளிந்து திரிந்து வாழ்ந்துவந்தார்கள்.

அசுரனுக்கு பயந்து மறைந்து வாழ்ந்த தேவர்கள் ஒன்றுகூடி அசுரனை அழிக்க ஆலோசித்தனர், அந்த நேரத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக அசுரனுக்கு வரமளித்த பிரம்மனை நிந்தித்தனர். தேவர்களின் துன்பத்தை கண்ட பிரம்மன், தான் அளித்த வரத்தில் உள்ள சூட்சுமத்தை தேவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆழ்ந்த தவத்தில் இருக்கும் ஈசனின் தவத்தை கலைப்பது எவ்வாறு என்று தேவர்கள் ஆலோசனையில் இறங்கினர்.

இதற்கிடையே பிள்ளைபேறு வேண்டிய இமவானின் தவத்திற்கிணங்கி, உமையாள் “பார்வதி” என்ற பெயருடன் இமவான், மனோரமா தம்பதிகளின் மகளாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈடிணையில்லாத அழகியாக வளர்ந்த பார்வதி பருவமடைந்தவுடன் தன் உண்மை நிலை அறிந்து மகேசனிடம் மனதை செலுத்தி தவம் மேற்கொள்கிறாள்.

இதனை உணர்ந்த இந்திரன் முதலானோர் மன்மதனை அழைத்து தங்கள் கோரிக்கையை வைத்து இறைஞ்ச காமதேவன் பயத்துடனும், தயக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறான். இதனை தொடர்ந்து சகல ஆயத்தங்களுடன் கயிலையை நோக்கி பயனிக்கிறான். கவலையினாலும் சினத்தாலும் மோனத்தில் இருந்த பவளமேனியானின் வண்ணம் நெருப்புக் கனலாகத் தெரியவும், கயிலையில் சகலமும் ஒடுங்கி நிசப்தமாயிருப்பதைக் கண்டும் செய்வதறியாது பல காலம் திகைத்து நின்றான்.

இப்படி செய்வதறியாது நின்ற காமனின் கண்களில் தன் உள்ளம் கவர்ந்த நாயகனின் ஆராதனைக்காக மலர்கள் பறிக்க வந்த பார்வதி தேவி கண்ணில் பட, இதுதான் தக்க சமயமென நினைத்து தன் மலர்கணையை நாணேற்றிவிட அதுவும் குறி தவறாமல் மகேசனின் மார்பை ஸ்பரிசித்தது. கோபாக்கினி ஒளிர திடுக்கிட்டு தவம் கலைந்த கையிலைநாதனின் கண்களில் மலர்கள் பறித்துக் கொண்டிருந்த கனிவான, அழகு மிளிரும் பார்வதி தேவியின் முகம் தெரிய அவரது மனம் கனிந்தது. அடுத்த கணமே தவம் களைய காரணமான மன்மதன் அவர் கண்களில் தெரிய கோபத்தில் நெற்றிக்கண் திறந்து காமதேவன் சாம்பலானான்.

இதனைக் கண்ட ரதி தேவி அழுது புரண்டு இறைவனை வேண்ட பரமனும் மனம் இளகி காமதேவனுக்கு அருவுருவ (சூட்சும) உடலளித்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவான், உண்மை காதலின், அன்பின் உருவமாய் இருப்பான் என்று அருள் செய்தார்.

இதன்பிறகு முருகன் (கந்தன்) பிறந்து கொடிய அசுரர்களை அழித்து தேவர்களை காத்த கதையை நாமறிவோம். (காளிதாசனின் குமார சம்பவத்தில் இந்தக் கதை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது)

சற்றே நீளமான பதிவாயினும் சுவாரசியமானதல்லவா, இனி சிற்பங்களை காண்போம்.

முதலாவதாக முழு சிற்பத் தொகுதிகளையும் பார்க்கலாம், மேற்பாக முதல் வரிசையில் சிவயோகிகள் இருக்க, கீழே கடைசி வரிசையில் பயபக்தியுடன் சிவகணங்கள் இருக்க, மொத்த கதையும் மூன்று காட்சிகளில் விளக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சி, ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவன், மிகச் சிறிய சிற்பமாயினும் சிவனின் கண்கள் மூடியுள்ளதை மிக நுணுக்கமாக வடித்துள்ள சிற்பியின் கலைத்திறனை கட்டாயம் பாராட்ட வேண்டும். வசீகர காமவேந்தன் மலர்க்கணையை சிவனை நோக்கி குறிவைக்கிறான். (காமதேவனின் இதழ்களில் புன்சிரிப்பு தெரிகிறதா? சற்றே கூர்ந்து கவனியுங்கள்!)

இரண்டாவது காட்சியில் முதலில் வருவது, வீழும் காமன், அழுது புலம்பும் ரதி. அடுத்த சிற்பம் சற்றே சிதைந்திருந்தாலும் வீழும் காமனை அழகாய் காட்டுகிறது. தலையில் அடித்துக் கொண்டு அழும் ரதியையும் பாருங்கள். (தென்னிந்தியாவின் துக்க வீடுகளில் இது போன்ற காட்சிகளை காணலாம்)

முடிவாக, இரண்டாவது காட்சியின் வலப்புறம் காண்பது பயபக்தியுடன் மீண்டெழுந்த மன்மதனும் மகிழ்ச்சியில் திளைக்கும் ரதியும் சிவனிடம் ஆசிபெறுகிறார்கள், பூதகணங்களும் சூழ்ந்திருக்கின்றன.

இதை காணும்பொழுது கம்போடியாவிலுள்ள பண்டியா ஸ்ரெய் காம்ப்ளக்ஸில் உள்ள இதே போன்ற சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. இந்த சிற்பங்களை பிறகு தனிப் பதிவில் பார்க்கலாம்.

பன்னிரு திருமுறை குறிப்பு – இதோ ( நன்றி திரு வி. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் )

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41030&padhi=103&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்கு வாயாக.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=476&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.

`அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!’ என்று கூறியவள் பின்னும்,

சாகும் தருவாயில் சரணம் – பாகம் 2 எல்லோரா

சில தினங்களுக்கு முன் – அந்தகன் வதம் எல்லோரா சிற்பம் பார்த்தோம். இப்போது அங்கேய இன்னொரு வடிவம் – உள் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகவும் சிதைந்த நிலையில் சிற்பம் இருந்தாலும், மிக அருமையான உணர்வுகளை வெளி கொணரும் சிற்பம்.

ஈசனின் கோபம் சற்று தணிந்த நிலையில் உள்ளது. உமையோ அதிகார தோரணையில் அமர்து இருக்கிறாள். ஈசனின் காலில் மிதிபடும் ஒரு அசுரனின் உருவம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது – அவன் கையில் ஒரு ஆயுதம் / கதை – ஒருவேளை இது கதையின் முதல் பாகமோ – உமையை தாக்க செல்லும் அசுரனோ ? சரியாக தெரியவில்லை.

எனினும் சூலத்தின் உச்சியில் – அந்தகன் குத்து பட்டு இருக்கும் காட்சி மிக அருமை. சாகும் தருவாயில் இரு கரம் கூப்பி சரண் அடையும் அந்தகன் – அருமை.

வள்ளி திருமணம் – சோழர் சிற்பம்

திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்ற மடலில் மிக அழகான கேள்வியை எழுப்பினார் . திரு சதீஷ் உதவியுடன் அதே தஞ்சை பெரிய கோவில் சோழர் கால வள்ளி திருமணம் சிற்பம் இப்போது பார்போம் .

சிற்பத்தின் அளவை குறிக்க தண்ணீர் குடுவை ( பாட்டில்) ஒன்றை அருகில் வைத்தோம்.

சிற்பம் சற்று சிதைந்து உள்ளது – அதுவும் முழு கதையை விளக்குமாறு இல்லை. சரி, மேல் இருந்து வருவோம். முதலில் பரண் மீது அமர்ந்திருக்கும் வள்ளியை வம்புக்கு இழுக்கும் கிழவனார். ( கையில் குடை ஏந்தி நிற்க்கும் வேஷதாரி முருகன் )

அடுத்து முருகன் தன் சுய உருவில், தமையன் யானையாக ( யானை குட்டி போல உள்ளது சிற்பம் ) வந்து வள்ளியயை பயமுறுத்தும் கணேசன். ( வள்ளி சிரத்தில் கை வைத்து வணக்கம் கூறும் வண்ணம் உள்ளது ??)

முடிவில் – யானையின் ( இப்போது பெரிய யானை ) மேலே திரும்பி செல்லும் முருகன், வள்ளியோ இரு கைதூக்கி வணங்கும் வண்ணம் உள்ளது சிற்பம்.

அடியில் வள்ளியின் வேடர் குலத்தவர் அணிவகுப்பு. .


அடுத்து இருக்கும் சிற்பம் – மேலே ஒரு பக்தன் மரத்தின் அடியில் , அடுத்து முருகன் நிற்கும் கோலம் அருகில் குடையின் அடியில் அமர்ந்திருக்கும் தேவசேனை ? , முடிவில் முருகன் வள்ளி தேவசெனையுடன் – கீழே மயில் வாகனம். மிக அருமையான சிற்பம்.

காதல் வள்ளியும் கள்ளக் கந்தனும்:

இன்று மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம் – நன்றிகள் திரு சதீஷ் ( படங்களுக்கு ), திரு திவாகர் ( அருமையான தமிழில் வள்ளியின் கதையை எழுதி கொடுத்ததற்கு )

முருகன் கோயில் – தஞ்சை பெரிய கோவில் வளாகம் – மயில் மீது முருகன் , அவனை சுற்றி வள்ளி திருமணம் கதை விளக்கும் சிற்பங்கள் .



தொண்டைவள நாட்டிலே உள்ள வள்ளிமலை போலவே அங்கு வாழும் வேடர்களும் அவர்கள் தலைவனுமான நம்பியும் தங்கள் தருமத்திற்கு ஏற்ப சிறந்து விளங்கினர். ஆனாலும் அந்த நம்பிக்கும் ஒரு குறையுண்டு. குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான். அதுவும் பெண் குழந்தை என்றால் நம்பிக்கு மிக மிக விருப்பம்.

சித்தர்கள் வாழும் அந்த அழகான வள்ளிமலையின் ஒரு ஓரத்திலே சிவமுனி எனும் தவயோகி தன் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தவக் கோலத்தில் இருக்கும் சிவமுனிக்கும் ஒரு சோதனை ஒரு அழகிய புள்ளிமான் வடிவில் வந்தது. தன் தவம் முடிந்து குடிலில் இருந்து வெளி வரும் வேளையில் அந்தப் புள்ளி மான் துள்ளலாக அவர் முன் ஓடிவந்தது. புள்ளிமானின் ஒய்யார அழகு ஒருகணம் அந்த தவமுனிவரை மயக்கியதன் காரணம், அவர் தவவலிமையால் புனிதமான பலிதமாகி, அந்தப் பெண்மான் கருவுற்றது.

அந்தப் புள்ளிமான ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அங்கிருக்கும் வேடர்களின் வள்ளிக் கிழங்குக் குழியில் விட்டு விட்டு ஓடிவிட்டது. ஆதரவற்ற அந்த ஒளி வீசும் அழகான பெண் குழந்தையை தெய்வம் தந்த குழந்தையாக வேடர்களின் தலைவன் பாவித்து, வள்ளி என்றே பெயரிட்டு வளர்த்துவந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அந்த அழகு வள்ளி தங்கள் வேட்டுவக் கடவுளான வேலவனையே மனம் முழுவது வரித்து, அந்த ஆறுமுகத்தான் கந்தனுக்காகவே தான் பிறப்பிக்கப்பட்டதாகவே அவனையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

கன்னிப் பருவத்துப் பெண்களை சோளக் கொல்லைக் காவலுக்கு வைப்பது வேடர்களின் வழக்கம். சோளப்பயிர்கள் மேலோட்டமாக வளர்ந்து சோளம் (தினைப் பருப்பு) அதிகம் வளரும் பருவத்தில், அந்தத் தினைப் பயிர்களின் மத்தியில் ஒரு பரண் அமைத்து அந்தப் பரண் மேலிருந்து குருவிகள், கிளிகள் வாராமல் இருக்க பருவப் பெண் வள்ளி காவல் காத்திருக்கும் ஒரு சுப வேளையில் வள்ளியின் மனதில் என்றும் கோயில் கொண்டுள்ள கந்தன் தன் மலைக் கோயிலை விடுத்து அவள் மனக்கோயிலின் நாயகனாய் வர எண்ணம் கொண்டான்.

சிற்பத்தை பாருங்கள் – பரண் மீது வள்ளி , கையில் உண்டிகோல். அருகில் என்ன மரம் ?


அகிலத்தையும் ஆளும் ஆண்டவனான கந்தனுக்கு, ஏனோ தன் காதலியிடம் கூட சற்று விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது போலும். அவள் மனத்துள் உருவான கடவுளாய் உருவம் பெறாமல் சாதாரண வேட்டுவ இளைஞனாய் அவளை சீண்டிப் பார்த்தான். (காதலியை சீண்டாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கு?)

அவள் யாரோ.. என்ன பேராம்.. அவள் தந்தை யாராம்.. கல்யாணத்திற்குப் பெண் கேட்டால் அவளைத் தனக்குத் தர சம்மதிப்பாரோ.. என்றெல்லாம் அந்தச் சின்னப் பெண்னிடம் பெரிய கேள்விகளைக் கேட்டான். அந்த அழகு பதுமை பேசாமல் தலை குனிந்துகொண்டாள். தூரத்தே சத்தம் கேட்க, ‘வீட்டுப் பெரியவர்கள் அதுவும் வேடவர்கள் வந்தால் அவனை கொன்று விடுவார்கள்’ என்று எச்சரித்து துரத்தியும் விட்டாள். துரத்தப்பட்டவன் ஓடி ஒளிந்தவன் போல பாவனை செய்து அங்கேயே வேங்கை மரமாகி மாறி நின்று கொண்டான். சிற்பி செதுக்கிய மரத்தின் அர்த்தம் புரிந்ததா ? வேடவர்கள் கூட்ட்மாக வந்தனர். தேவைப்பட்ட தினைப் பண்டங்களை வள்ளிக்குக் கொடுத்தனர். சென்றுவிட்டனர்.

மறுபடியும் வேடனாய் உருமாறி வள்ளியிடம் காதல் மொழி பேசினான். வள்ளி கோபமாய் பார்த்தாள். ‘இது முறையா’ என்று கேள்வி கேட்டாள். போய்விடு என்று மன்றாடினாள். என் மனதில் இன்னொருவன் வந்து குடி புகுந்து தொல்லை செய்வது போதாது என்று நீயும் ஏன் தொல்லை செய்கிறாய்.. இது நியாயமா.. என்று கெஞ்சினாள். அப்படியானால் உன் மனத்தை வரித்தவன் பெயர் சொல்லு என்று வேடன் கேட்டான். வெட்கப்பட்டாள் அந்தப் பேதை.

மறுபடியும் சப்தம். மறுபடியும் துரத்தினாள் அவனை. இந்தச் சமயத்தில் ஓடி ஒளிந்தவன் மரமாக மாறாமல் வயதான சிவத் தொண்டர் போல உருக் கொண்டவன் தைரி்யமாக இப்போது வள்ளி முன்பும் அவள் கூட்டத்தார் முன்பும் வெளிப்பட்டான். தாத்தா சிற்பத்தில் பார்த்தீரா ? வயதான சிவத்தொண்டரைப் பார்த்ததும் வள்ளியும் அவள் தந்தையும், கிழவருக்கு வேண்டிய தினைப் பண்டங்களைப் படைத்து, அவர் காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கள்ளக் கிழவரும் ஆர அமர உண்டு விட்டு, தாராளமாக ஆசிகளையும் வழங்கினார். சந்தோஷமாக அவள் தந்தையும் மற்றவர்களும் அங்கிருந்து விலக, தனித்துவிடப்பட்ட வள்ளியிடம் வேண்டுமென்றே காதல் வார்த்தைகளை கிழவர் அள்ளிவீச, அந்தச் சின்னப் பெண் ‘சீச்சீ’ என்று விலகினாள். அப்போது ஒரு யானை அந்த சோளக் கொல்லையில் ஒடிவரக்கண்ட வள்ளி பயத்துடன் அந்த சிவனடியாரைக் கட்டிக் கொண்டு அந்த யானையை விரட்டுமாறு வேண்ட, சிற்பத்தை பாருங்கள் – என்ன அருமை – எம் சி ஆர் போல பயந்து நடுங்கும் வள்ளியை அனைத்து பிடித்திருக்கும் கள்ள தாத்தா

அந்த கிழவனாரான கந்தன் தன் அண்ணன் விநாயகனை மனதுள் வேண்ட, அந்த வெற்றி விநாயகனே அந்த யானையாக வந்தவன், சுயரூபம் எடுத்து அண்ணனாக மாறி அவர்களை வாழ்த்தினான். கிழவனாக வந்த கந்தனும் அவள் மனக்கோயில் நாயகனாய் மாறினான்.
சிற்பத்தில் பாருங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா குமாரனாக மாறும் காட்சி

ஆறு முகமும் ஈராறு கைகளும் கொண்டு மயில் மேல் அமர்ந்து குமரனாய் தரிசனம் தந்தான்.

அழகு வள்ளிக் குறத்தி தன் மணாளனே இத்தனை நாடகம் ஆடி கள்ளத்தனம் செய்தவன் என்று அறிந்து உள்ளம் பூரித்தாள். தன் மன நாயகனோடு ஒன்று சேர்ந்தாள்

திலோத்தமை – மகேசனையே மயக்கிய அழகு

இன்றைக்கு நாம் ஒரு மிக சுவாரசியமான கதை , அதனை ஒட்டிய ஒரு அற்புத சிற்பத்தை பார்க்க போகிறோம்.( கம்போடியா சிற்பம் இப்போது பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது )

முதலில் கதை – இல்லை இல்லை கதைக்குள் ஒரு கதை .அதிரூபசுந்தரிகள் என்றாலே நமக்கு ரம்பை, ஊர்வசி, மேனகை நினைவுக்கு வருவார்கள். அவர்களுடன் தில்லோதமை – ஆனால் இந்த சுந்தரியின் கதை வேறு .

இதனைபஞ்ச பாண்டவருக்கு மூத்தவரான தர்மராஜனுக்கு நாரதர் மகாபாரதத்தில் விளக்குகிறார்: காட்டில் அக்ஞானவாசத்தில் இருக்கும் பஞ்ச பாண்டவர், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் தனது மகள் திரௌபதிக்கு தக்க மணாளனை தேட வைக்கும் சுயம்வரத்தை பற்றி அறிந்து – அதில் பங்கேற்கின்றான் விஜயன். திரெளபதியையும் கைப்பிடிக்கின்றான்

தன் தாயிடம் தருமன், வெளியில் இருந்து, தாங்கள் பிட்சை கொண்டு வந்ததாக கூற, அவளும் சகோதரர்கள் அனைவரும் முறையே அதனை பகிர்ந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.

தருமருக்கு தர்மசங்கடம் – அப்போது அவ்வழியே வரும் நாரதர் நிலைமையை புரிந்து அறிவுரை கூறுகிறார். அழகிய பெண்ணால் கெட்டு அழிந்த அசுரர்கள் – சுண்டா மற்றும் உபசுண்டா எனும் இரு அசுரர்களின் கதையை சொல்கிறார்.

இருவரும் நிசும்பனின் புதல்வர்கள் ( நிசும்பன் ஹிரண்யகசிபுவின் வம்சத்தில் தோன்றிய அரக்கன் ) – இணை பிரியாதவர்கள் , சகோதர பாசம் மிகுந்தவர்கள் – தங்கள் அனைத்து உடமைகளையும் தங்களுக்குள் பங்கிட்டு வாழ்ந்தவர்கள். பெரும் வேள்வி நடத்தி, தாங்கள் இருக்கும் விந்திய மலையையே புகைக்க வைத்தனர். தேவர்கள் அவர்கள் தவத்தை கலைக்க பல முறை முயன்றும் முடியவில்லை . முடிவில் பிரம்மன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவ, இருவரும் சாகா வரம் கேட்க – முடியாது என்றார் பிரம்மன்.

பிறகு இருவரும் தங்கள் சகோதர பாசத்தில் நம்பிக்கை வைத்து – தங்கள் இருவர் கையால் மட்டுமே தங்கள் முடிவு நிகழும் என்ற வரம் பெற்றனர்.

இருவரும் வரத்தின் பலத்தால் பூலோகத்தையும் , இந்திர லோகத்தையும் வென்றனர். இவர்களை தடுக்க பிரம்மன் விஸ்வகர்மாவை அழைத்து – மூவுலகிலும் இல்லாத ஒரு அழகிய பெண்ணை உருவாக்க கட்டளை இட்டார் . விஸ்வகர்மன் உலகில் உள்ள அனைத்து அற்புத நுண்ணிய அணுக்களை கொண்டு திலோத்தமையை உருவாக்கினான். (தில் – எள் போன்ற நுண்ணிய அணுக்கள் – உத்தம – மிகவும் மேலான )

பிரம்மன் அவளை சுண்டா மற்றும் உபசுண்டாவை மயக்கி இருவருக்குள் சண்டை வரச் செய்ய கட்டளை இட்டார். தில்லோதமையும் அவ்வாறே அங்கு செல்லும் முன் ஈசனையும் இந்திரனையும் வணங்கி பிரதக்ஷணம் செய்தாள். அப்போது அவள் அழகில் வைத்த கண் வாங்காமல் பார்த்த ஈசன், அவள் சுற்றிவரும்போது கூட அவளை பார்க்க நான்கு தலைகளை கொண்டதாகவும், இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றதாகவும் கேள்வி.
(இந்திரனின் ஆயிரம் கண்களுக்கு வேறு பல கதைகளும் உண்டு !!)

நினைத்தது போலவே, திலோத்தமையின் அழகில் மயங்கி இரு இணை பிரியா சகோதரர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டு மாண்டனர்.

இதனால் நாரதர் தர்மனுக்கு பெண் விவகாரங்களில் மிக ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும் என்றும் அண்ணன் தம்பி உறவு அவளால் முறிய வாய்ப்பு உண்டு என்று கூறி, அவர்களுக்கு …….அது வேற கதை . நாம் இன்றைக்கு இதனுடன் நிறுத்துவோம்.

இப்போது சிற்பம். கம்போடியா நாட்டில் இருந்து தற்போது பிரெஞ்சு நாட்டு குய்மேட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத சிற்பம். சுண்டா மற்றும் உபசுண்டா திலோத்தமையை நடுவில் வைத்து சண்டையிடும் காட்சி.

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்

இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

இதுவே கதை – இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் – மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் – ஈசன் கையில் இருக்கும் சூலம் – இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

கடைசி காட்சி – சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.

தக்ஷன் தலையை கொய்த ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

நண்பர் சதீஷ் குமார் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை செல்லும் பொது – வழக்கம் போல படங்கள் எடுத்து வருமாறு கேட்டேன் . அவரும் அருமையான பல படங்களை எடுத்து வந்துள்ளார் . அதில் ஒன்றை இன்று பார்ப்போம். முதலில் கதை !!

தக்ஷன் வரலாறு

தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.

அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.

ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷர்யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.

அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷ்ன் தலையைக் கொய்து – அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும் அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் இது இருக்கும் இடம் ( நண்பர் சதீஷ் அருமையாக படம் எடுத்துள்ளார் ) – நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்களை பிடித்துள்ளார். கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன – ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .


முதல் தலை கொய்தல் – முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி ( நீங்கள் பார்க்கும் பொது மிகவும் பின்னால் இருக்கும் இடம் ) – அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.

கீழே – முக்கிய காட்சி – தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் ( அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் – அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி . அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்போர் அலறி பயந்து ஓட – என்ன ஒரு அருமையான படைப்பு – முன்று பெண்மணிகள் , அவர்களை அடுத்து முன்று முனிவர்கள் – அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் – அந்த கோர காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே , ஓடும் படி செதுக்கி உள்ளான் சிற்பி.. கடைசியில் இருவர் – ஓட ஆரம்பித்தே விட்டனர். ( சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள் )

சரி – அடுத்த பாகம் – மூன்று ரிஷிகள் – மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி , தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் – அதுவும் அந்த ஈசனின் வடிவம் – மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.


ஈசனும் மனம் இறங்க – கடைசி காட்சி – மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க , ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் – மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இதோ தேவாரம் குறிப்புகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!

கயல் விழி, இங்கே கயலுக்கு விழி

மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். படைக்கும் பிரம்மன் தனது ஒரு நாள் காலக் கணக்கு( 4320 million years) முடிந்தவுடன் ,தான் படைத்த அனைத்தையும் விட்டு விட்டு உறங்குவார். அப்போது அவர் படைத்த அனைத்தும் அழியும் – வேதங்கள் தவிர. அவை பிரம்மனின் உடலினுள் வசிக்கும். பின் அடுத்த நாள் அனைத்தையும் திரும்பப் படைக்க துவங்குவார் பிரம்மன். அவ்வாறு ஒரு முறை பிரம்மன் தூங்கும்முன் கொட்டாவி விடும்போது் வேதங்கள் வெளியேறி விட்டன. அப்போது அவ்வழி சென்ற அசுரன் ஹயக்ரிவன் – அவற்றை களவாடிவிட்டான். இதை கண்டுகொண்ட விஷ்ணு அசுரனிடமிருந்து அவற்றை மீட்க எடுத்த அவதாரம் இது.

மனு என்ற அரசன் ஒரு சிறு குளத்தில் பூசை செய்யும் போது ஒரு சிறு மீனாக அவன் கையினுள் வந்து அபயம் கேட்டார். அவனும் அன்புடன் எடுத்து தனது கமண்டலத்தில் உள்ள நீரில் அந்த மீனை இட்டான். சிறு நேரம் கழித்து மீன் மள மள என்று வளர்ந்து கமண்டலத்தை விட பெரிதாக ஆவதைக் கண்டு பயந்து, அதை எடுத்து ஒரு ஆற்றில் விட்டான் மனு. அங்கும் அது வளர, பின் கடல் – அதன் பின் மகா சமுத்திரம் என்று படிப் படியே எடுத்து சென்றான். கடைசியில் வந்தது யார் என்று புரிந்து வணங்கினான். மச்ச வடிவத்தில் இருந்த திருமாலும், அவனுக்கு ஆசி புரிந்தார் – ஒரு வாரத்தில் புவி அழிந்து பிரளயம் வர இருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க ஒரு பெரிய கப்பலை கட்டி – அதில் உயர்ந்த உயிர் இனங்களை உடன் எடுத்து காத்திருக்குமாறு கூறியது மீன்.

ஒரு வாரத்திற்குள் மனுவும் அவ்வாறே செய்ய, அதற்குள் பெருமாள் ஹயக்ரிவ அசுரனை சமுத்திரத்தின் அடியில் கண்டு பிடித்து, முட்டி அழித்து ,வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைத்தார். பிறகு கூறியவாறே பிரளயம் வர, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு, தனது நெற்றியில் வளர்ந்த பெரிய கொம்பில் கட்டி, பிரளயத்தில் இருந்து அந்த மரக்கலத்தை காப்பாற்றி – மீண்டும் புவியில் உயிரினங்கள் வாழ வழிவகை செய்தார்.

இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகக் கொண்டவராகவும் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது – பொதுவாக நாம் இந்த அவதாரத்தை குறிக்கும் சிற்பங்கள் இவ்வாறே மேல் பாகம் மனித உடலுடன் கீழ் பாகம் மீனின் உருவுடனும் (மீன் பாடி***) காண்கிறோம். ( இதோ ஸ்ரீரங்கம் கோவில் தூணில் )

ஆனால் இங்கே (ஹோய்சாலர் (போசளர்) காலம் பேலூர் ஹலேபிட் ஹோய்சாலேஷ்வர கோயில் சிற்பம் ) அழகிய மீனின் தலையும் மனித உடலுடன் சிலை உள்ளது – கயல் விழி என்று கேள்விபட்டுள்ளோம் – அது விழியே கயல் போல இருக்கும் என்ற கற்பனை – இங்கே கயலுக்கு விழி….

திரு சந்திரா அவர்கள் மற்றும் நண்பர்கள் இந்த சிற்பத்தை வராகம் என்று கருத, இதோ அங்கே இருக்கும் வராக அவதார சிற்பங்களையும் இணைக்கிறேன்.

( ***மீன் பாடி என்பது சென்னையில் அனைவருக்கும் தெரிந்த வாகனம் – மரீனா கடற்கரை சாலையில் சாலையை விட ஒரு ஜாண் மேலே பறக்கும் விமானம் அது – ஓட்டுனர் உரிமம் தேவை இல்லை, வண்டிக்கு எந்த வித எண்ணும் தேவை இல்லை )