கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

ஆம், நமது கேமராவின் மூடி…

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்


லட்சுமி நிற்கும் பாணி.

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்


இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.

அங்கதம் தேடி – வானர இளவரசன் அல்ல

ஆபரணங்களின் மீது மனிதனுக்கு உண்டான தீவிர பிடிப்பு எப்போது துவங்கியது என கடவுள் நன்கு அறிவார். கிளிஞ்சல் ஓடுகளில் துவங்கி, மணிகளிலிருந்து, பனையோட்டு காதணிகள் என நிலையான வளர்ச்சி அடைந்து தங்கம் எனும் பசுமஞ்சள் உலோகத்தில் உயர்ந்த கற்கள் பதிக்கப்பெற்ற ஆபரணங்கள் வரை படிப்படியாக முன்னேறியது. அதன் பின்னர் என்ன சொல்வது…ஒரே ஓட்டம் தான்..தங்க ஓட்டம். எனினும் இன்று நாம் சற்றே காலத்தை பின்னோக்கி கடந்து செல்ல இருக்கிறோம். அரசர்கள் தங்கத்தை வாரி வாரி கொடையாக அளித்த காலங்களில், அவற்றை வைத்து எவ்வாறு இறைவனை அலங்கரித்தார்கள் என காணப் போகிறோம். ஏன் இந்த திடீர் தேடல் என நீங்கள் கேட்பது புரிகிறது. நமது நோக்கமே ஒரு அபூர்வமான ஆபரணத்தை அடையாளம் காண்பதே. அதன் பெயரோ விந்தையாக நாம் மிகவும் அறிந்த கிஷ்கிந்தையின் இளவரசனாகிய அங்கதனின் பெயராகவே உள்ளது.

நம்முடைய தேடலில் நமக்கு உதவியது இரண்டு அற்புதமான சோழர் கால வெண்கல சிற்பங்கள். இரண்டுமே நியூயோர்க்கில் உள்ளன. ஒன்று மெட்ரோபோலிடன் அருங்காட்சியகத்திலும் மற்றது ப்ரூக்ளின் அருங்காட்சியகத்திலும் உள்ளன.

இவை இரண்டுமே கி.பி. 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. சந்திரசேகர வடிவம் கொண்ட சிவனும் மற்றும் விஷ்ணுவும் – இருவருமே சமபங்க நிலையில் (நேரான தோற்றம்) தங்களது மேல்கரங்களில் வழக்கமான ஆயுதங்களுடன் காட்சி அளிக்கின்றனர் – சிவனது கைகளில் மானும், மழுவும் ஏந்தி உள்ளார். விஷ்ணு சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார்.

ப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் இந்த அற்புத வெண்கல சிலை வந்து சேர்ந்த விதம் மிகவும் சுவையானது. (இந்த இணைப்பிலிருந்து கிடைத்த படங்களுக்கு நன்றி)

மெட்ரோபோலிடன் மியூசியத்தை சேர்ந்த விஷ்ணுவின் சிலையில் இருந்து நாம் துவங்குவோம்.

கிரீடம் மிகவும் அழகாக உள்ளது. மேலும் ஒரு சிறிய பட்டை அதன் அடி வரை செல்கிறது. இதற்கு பட்டிகை என்று பெயர். அது சேர்ந்திருக்கும் பொருளின் தன்மையை பொருத்து அதன் பெயரும் மாறுபடும். உதாரணத்திற்கு இரத்தின பட்டிகை.

கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர் கால வெண்கல சிலையில் (970 CE – எப்படி இத்தனை உறுதியாக இதற்க்கான காலத்தை கணக்கிட்டார்கள் என தெரியவில்லை),புரிநூல் நேராக மார்பில் இருந்து இடுப்பிற்கு வருகிறது. (தொன்மையான விஷ்ணு திருமேனிகள் பதிவில் நாம் கண்டது புரிநூல் மூன்றாக பிரிந்து ஒன்று வலது முன்கையில் மேலே செல்வது போல இருக்கும் – இவ்வாறு அணிவதை நிவீத முறை என கூறுவர்)

அடுத்து வயிற்றில் உள்ள பட்டை – இது இடுப்பாடையை இறுக்கியிருக்கும் பட்டையாக இல்லாமல், அலங்காரத்திற்கு அணியும் உதர பந்தனத்தை போன்றதொரு அணியாகவே உள்ளது. இந்த பட்டைக்கு பெயர் கடி பந்தனமாகும்.

அடுத்து கைகளில் அந்த அணிகலன் உள்ளத என்று பாப்போம். இந்த கைப்பட்டைக்கு கேயூரம் என்று பெயர்.

ராஜேஷ் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களது வலைதளமாகிய ஆக்ருதியில் சிற்பத்தின் பாகங்களை அருமையாக விளக்கி உள்ளனர். அதன் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டையின் கொக்கி சிம்ம முகம் மேலும் மிகவும் அழகுற தொங்கிகொண்டிருக்கும் யூ வடிவ ஆடை கடி வஸ்திரம் ஆகும்.

வலது கரம் பாதுகாக்கும் அபாய ஹஸ்தமாக உள்ளதை கவனிக்கவும்.

இடது கையோ மிகவும் அனாயசமாக இடது புற இடுப்பில் வைத்திருப்பதாக உள்ளது. இதற்கு கட்யவலம்பிதா நிலை என்று பெயர். இவ்வாறு இடுப்பில் இருக்கும் கரத்திற்கு கடி ஹஸ்தம் என்று பெயர்.

இன்னும் அங்கதம் காணவில்லையே.

சந்திர சேகர வெண்கல சிலையில் இதனை காண முடிகிறதா என்று பாப்போம்.

விஷ்ணுவின் சிலை போன்றே வலது கரம் அபாய ஹஸ்தம் கொண்டுள்ளது. ஆனால் இடது கை வேறுபட்டுள்ளது.

ஒரே போன்று தொன்று இரண்டு நிலைகள் உள்ளன. கடக ஹஸ்தம் மற்றும் சிம்ம கர்ண ஹஸ்தம்.

இவை இரண்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சிம்ம கரணத்தில் நடுவிரல் சிறிது விரிந்திருக்கும். பொதுவாக கடக ஹஸ்தம் பல்வேறு பெண் தெய்வ திருமேனிகளில் கரத்திலே ஒரு பூவை தாங்கி இருக்கும் விதமாகக் காணப்படும். (மலர்ந்த மலர்களை இறைவியின் கரத்தில் வைப்பது வழக்கம்). ஆக, நாம் இதை ஆராய்ந்து பார்க்கும்போது, நடுவிரல் சிறிது விரிந்திருக்கவே, இது சிம்ம காரணமாக இருக்க கூடும். (திரு. கோபிநாத் அவர்களின் Elements of Hindu Iconography -இல் இரண்டு முத்திரைகளும் ஒன்று போலவே கருதப்படுகின்றன. இவற்றை மேலும் தெளிவாக ஆராய மேலும் பலரின் புத்தகங்களை தேட வேண்டும்)

இப்போது நமது கண்களுக்கு வித்தை காட்டும் அந்த அங்கதம் – இது ஒரு கை அணி ஆகும். ஆனால் இது வரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது நன்றாக மறைந்துள்ளது. அதை காண்பதற்கும் நாம் சிலையின் பின்புறம் சென்று பார்க்க வேண்டும்.

இப்போது தெரிகிறதா? ஆம். இது தான் அங்கதம் – தோள்வளை என்ற மேல் கை ஆபரணம் இது.

படங்களுக்கு நன்றி : ஆக்ருதி , ப்ரூக்ளின் மற்றும் மெட்ரோபோலிடன் அருங்காட்சியகம் .