சில வினோத ஆயுதங்கள் !

இந்து மதம் என்பது இந்து மகா சமுத்திரத்தை விட மிகவும் ஆழமானது. அதனாலேயே பலரும் அதனை புரிந்துக்கொள்ள எத்தனிப்பதில்லை. அப்படியே முயற்சிக்கும் பலரும் அதன் தோற்றம் எழுத்து வரலாறு ஏன் கேள்வி வழி வரலாற்றையும் கடந்து நீடிப்பதால் தோல்வியுற்றே திரும்புகின்றனர். அப்படி இருக்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மேலை நாடுகளின் கலை வல்லுனர்கள் இந்திய இந்து மதக் கலைசின்னங்களைப் பற்றி சற்று தாழ்வாகவே பார்த்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் மெதுவாக நமது கலையை பற்றி புரிதல் வளர்ந்து இன்று ஒரு நல்ல மதிப்பை பெற்று இருந்தாலும், பொதுவாக அவர்கள் மனதில் அவற்றைப் பற்றிய கேள்விகளே அதிகம். அதை நாம் குற்றம் சொல்லக் கூடாது. இந்தியக் கலையானது அதை ஒட்டிய கதைகளை பிரதிபலித்தது. அதை புரிந்துக்கொள்ள அந்த கதைகளை மட்டும் அல்லாமல் அவற்றை சார்ந்து ஓடிய தத்துவங்களின் புரிதலும் தேவை படுகிறது. அப்படி இல்லாமால் வெறுமனே வந்து கோரை பற்களுடன், கொய்த தலைகளை ஏந்திய கைகளையும், மண்டையோட்டு மாலைகளையும், பூத கணங்கள் சூழ , பத்து கரங்களில் கொடிய ஆயுதங்கள் கொண்ட உருவங்களையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் தவறாக இருந்ததில் தப்பில்லைதானே !

அதே மண்ணில் பிறந்து வளர்ந்த நமக்கே, முத்தொழில்களில் அழிக்கும் கடவுள் என்று சிவனை பார்க்கும்போது, இடுகாட்டில் , உடல் முழுவதும் சாம்பலை பூசி, பேய்களுடன் ஆடும் அவனது கோலத்தை ரசிப்பது சற்று கடினமே. அவனது லிங்க ரூபம் அதனை ஒட்டிய கருத்துக்கள் பக்கம் போகவே தேவையில்லை. அதுவும் இந்த காளாமுகர், காபாலிகர் , பாசுபதர், பைரவர் வழிபாடு என்று இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும் எப்படி இருந்திருக்கலாம் என்ற கேள்வி கிளம்புவதை ஆதரிக்கும் இந்த மதத்தின் தத்துவார்த்த பின்புலம் அழகு.

சிற்பக்கலையில் ஒரு சில இடங்களில் பழைய கோட்பாடுகள் அங்காங்கே தென்படுகின்றன. திரு கணபதி ஸ்தபதி அவர்களின் அருமையான நூலை கொண்டு சிலவற்றை ஆராயாலாம் Indian Sculpture and Iconography .

ஹளபேடு கோயிலில் எங்கும் சிற்பம் தான். அதில் ஒரு சிவ பைரவர் ரூபம் நமது ஆராய்ச்சிக்கு இன்று உதவுகிறது.

ஹோய்சலர்களின் கலை – ஒரு சிறு இடம் கூட விடாமல் எங்கு பார்த்தாலும் ஏதாவது இருக்கும். அரக்க பரக்க வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று பார்க்க கூட நேரம் இல்லாமல் வெளியே ஆம்னி பஸ் ஹார்ன் சத்தம் கேட்டு ஓடி ஓடிப் பார்ப்பதே அதிகம். அப்படி இருக்கையில் இந்த சிலையை நின்று பார்ப்பவர் சற்று அதிர்ச்சி அடைவது சிவனின் இடது கையில் இருக்கும் ஆயுதத்தை கண்டு.

என்ன இது என்று யோசித்துக்கொண்டே , இதெல்லாம் இந்த நூலில் இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே புரட்டினேன்.

அங்கே


” கட்வங்கம் : இந்த தடி கால் துடை எலும்பினால் செய்யப்பட்டது. அதன் மேலே ஒரு மண்டையோடு பொருத்தப்பட்டு இருக்கும். தடியை சுற்றி ஒரு பாம்பு மண்டையோட்டின் கண் துவாரத்தின் வழி வெளியே வந்து படம் எடுத்து ஆடும். சில இடங்களில் தடி மரத்தால் ஆனதாகவும் இருக்கலாம். பொதுவாக காபாலிக வடிவங்களில் இதனை காணாலாம். இது சிவனின் ஆயுதம். இது சில யோகிகள் மற்றும் ரிஷிகள் கையிலும் இருக்கும். தடி இரண்டு முக தூரமும், இரண்டு விரல் தடிமனும், மண்டையோடு ஐந்து விரல் அகலமும் ஏழு விரல் நீளமும் இருக்க வேண்டும் “

அது மட்டும் இல்லை கூடவே படமும் அப்படியே அச்சில் எடுத்தவாறு இருந்தது. நண்பர் ஓவியர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவியுடன் இதோ நமக்கு இன்னும் தெளிவான படம்.

இந்தி பற்றி விவாதிக்கும் பொது நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் சோமநாதபுரம் நான்முகன் சிற்பம் ஒன்றைக் கொடுத்து உதவினார். அங்கே இன்னும் ஒரு அபூர்வ வகை ஆயுதம்.

பிரம்மாவின் வலது கையில் உள்ள கருவியை உற்று பாருங்கள்.

மீண்டும் பிரசாத் உதவியுடன்

படைக்கும் கடவுளின் கையில் இருக்கும் இது என்ன என்பதே அவரது கேள்வி.

மீண்டும் நூலைப் புரட்டினேன்.

“சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். ”

மிகவும் அருமையான வடிவம். அது எழுப்பும் கேள்விகளும் அதிகம். எனினும் தற்போது எனது தேடல் யானை தலையுடன் இருக்கும் ஒரு சுருவம்!!

சேரன்மாதேவியில் உள்ள சோழ பாண்டிய ஆலயமும் அதன் ரகசியமும் – பாகம் 2

நிலவறை, சுரங்கம், புதையல் – மன்னர்கள் , பொக்கிஷம் – இப்படி அடுக்கியவுடனே நமக்குள் மளமள என படித்த சரித்திர கதைகள் , கேட்ட வதந்திகள் அனைத்தும் கண்முன்னே ஓடும். சிறுவயது முதலே இவை நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்குவதை மறுக்க முடியாது. (அதுவும் இப்போது திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி நிலவறைகள் ரொம்ப புகழ் பெற்றதாயிற்றே) இன்றும் நாம் இவை பற்றி ஆவலுடன் படிக்கிறோம் , பெரிய பெரிய ஹாலிவுட் இதை வைத்து படங்கள் எடுக்கிறார்கள் என்பதைக் கொண்டே இதன் பால் நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பை அறியலாம். அப்படி என்ன இருக்கு இந்த சுரங்கங்களில் என்று நீங்கள் கேட்கலாம். கோயில்கள் நமது பாரம்பரியத்தை மட்டும் காக்கவில்லை , அந்நாட்களில் மன்னனும் ஆண்டியும் அவனிடத்தில் சரண் அடைந்து அவனுக்கு தந்த செல்வத்தையும் பேணிக் காத்தன. ஊர் மக்களுக்கு ஒரு வங்கி போல பணி புரிந்த பல தகவல்களை நாம் கல்வெட்டுகளில் படிக்கலாம். பொதுவாக மன்னர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும் நாடு பிடித்தாலும் அவர்கள் கோயில் சொத்தை ஒன்றும் செய்வதில்லை. எனவே அவை வளர்ந்தன. காய் நிறைந்த மரம் அடி வாங்குவது போல – வடக்கே கஜினியும் தெற்கே மாலிக் கபூரும் இந்த செல்வக் கொழிப்பை சூறையாட வந்தபோது – இதே நிலவறைகள் செல்வத்தை மட்டும் அல்ல பல செப்புத் திருமேனிகளை அவர்கள் கையில் சிக்கி அழியாமல் பாதுகாத்தன. அப்படி பெசிகொண்டிருந்த எங்கள் ஆர்வத்தை பார்த்துவிட்டு , எங்கள் கோயில் நிலவறைக்குள் செல்கிறீர்களா என்று சேரன் மாதேவி கோயில் காவலர் கேட்டவுடன் வெகு நாளைய கனவை நினைவாக்க உடனே தலை ஆட்டினோம்.

இன்னும் இதை பற்றி படிக்க வேண்டும் என்றால் டாக்டர் திரு நாகசாமி அவர்களது தளத்தில்
படிக்கலாம் – Underground Secret Treasuries in Ancient Temples

கடைசியில் வரும் குறிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது .. ...” கடைசியாக காலம் சென்ற திரு T. G. ஆரவாமுதன் , புகழ்பெற்ற நாணயவியல் வல்லுநர், ‘Portrait Sculpture in South India’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், எனக்கு ஒருவர் சொன்னது – தஞ்சை பெரிய கோயில், அவர் சிறு வயதில் நடந்த சம்பவம், கண்ணை கட்டி தன்னை ஒரு நிலவறைக்கு கூட்டிச் சென்றதாகவும், அங்கே மிகவும் அற்புத செப்புத் திருமேனிகள் பல இருந்ததாகவும் கூறினார். பின்னர் பல முறை முயன்றும் அந்த பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். நினவில் அந்த அறைக்கு செல்லும் பாதை இரு கருங்கல் சுவர்களுக்கு நடுவில் இந்தது என்றும் கூறினார். இதை போல பல நிலவறை – சுரங்கங்கள் இருப்பது சாத்தியமே என்றாலும் அவற்றை கண்டுபிடிப்பது தற்செயலாக நடந்தால் தான் சாத்தியம் “

சரி நமது நிலவறைக்கு வருவோம். அது அர்த்த மண்டபத்திலேயே இருந்தது.

அதுவரை இருந்த மின்சாரம் சட்டென போனது. எங்கும் ஒரே இருள், அந்நாட்களில் இப்படி தானே இருந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டே அருகில் சென்றோம்.

ஆலயத்தின் கதவின் பக்கத்தில் – அந்த நாட்களில் தரையில் மற்ற இடத்தில இருக்கும் அதே கல்லைபோன்ற அரைக்கால் கொண்டு மூடி இருப்பார்கள் – இன்று அதை அகற்றிவிட்டு இருப்பு கதவு போடப்பட்டிருந்தது.

அந்த நிலவறையின் அமைப்பு அபாரம். தரையில் இருந்த கதைவை அகற்றியதும் சுமார் ஏழு அடிக்கு பள்ளம். அதற்குள் ஒரு பக்கத்தில், சற்றே உயர்ந்த இடத்தில, அந்நாளில் அங்கும் ஒரு தடுப்பு கல் இருந்திருக்க வேண்டும் ஒரு சிறு சுரங்கம் பக்கவாட்டில் சென்றது. அதனுள் நாங்கள் தவழ்ந்து சென்றோம். எங்கும் கும்மிருட்டு.

பாதை ஒரு இடத்தில முடிந்தது. வலது புறத்தில் காவலர் எவர்ரெடி டார்ச் கொண்டு வழி காட்ட – ஒரு அறை – அந்த அறை – நான்கு அடி உயரம் தான்.

படம் எடுக்க டார்ச் ஆஃப் பண்ண சொல்ல – ஒரு நிமிடம் இதயம் தட தட என்று அடித்துக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு பழமையான நிலவறைக்குள் இருக்கிறோம் என்ற பூரிப்பு – அதனுள் ஏதாவது கிடைத்ததா என்று கேட்ட பொது – இல்லை சார். நாங்கள் வரும் முன்னரே…

இந்த நிலவறைக்கு மட்டும் ஒரு குரல் இருந்தால் அது என்னென்ன கதைகள் சொல்லுமோ !

கத்தி இன்றி சுத்தி இன்றி ஒரு ஆலயத்தை எப்படி வீழ்த்துவது !

புரிகிறது – தலைப்பு சற்று திகைப்பூட்டுவது தான். எனினும் நாம் இன்று பார்க்கப் போகிற காட்சிகள் அப்படி ஒரு தலைப்பை நியாயப்படுத்துகின்றன. இந்தியாவில் சரித்திர சின்னங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொல்வார்கள். அது இப்படி கிடக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. நண்பர் சங்கருடன் அரக்கோணம் பக்கம் சில கோயில்களைத் தேடி செல்லும் வழியில் தொலைவில் ஏதோ ஒரு அமைப்பு தென்பட்டது. மிகவும் பயிற்சியான உருவம்போல இருந்தது. ஒருவேளை ..


காரை நிறுத்தச் சொலி இறங்கி அதை நோக்கி ஓடினோம். அருகே செல்ல செல்ல அது விஸ்வரூபம் எடுத்தது. எங்கள் மனம் துக்கத்தால் கனக்க துவங்கியது.

காலுக்கு அடியில் சர சர என்று எதோ ஊறுவது போல இருந்தது. வரப்பை ஒரு பாம்பு தாண்டிச்சென்றது. ஆனால் நாங்கள் அதை பொருட்படுத்தாது மேலே சென்றது அந்த பாம்புக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் எதிரே நாங்கள் காணும் காட்சியால் ஏற்பட்ட அதிர்ச்சி அதற்க்கு தெரிய வாய்ப்பில்லை.

கருங்கல் தளம், செங்கல் திருப்பணி என்று நீண்டு உயர்ந்த பெரும் கோயில் எங்கள் கண்முன்னே சிதைந்து கிடந்தது. வெறும் செங்கல் கொண்டு இப்படியும் ஒரு கோயில் எழுப்ப முடியுமா என்று நாம் கொண்டாட வேண்டிய கோயில். நம்மவர்கள் செங்கல் திருடியும் தொங்கு பாலம் போல நிற்கும் செங்கல்களை பார்த்து அதை அப்படி கட்டிய திறனையும் வணங்கினோம்.

காலில்லாத நண்பர் நினைவு திடீரென மீண்டும் வர, சற்று தயங்கியே சென்றோம். கருவறை முக மண்டபம் என்று எங்கும் நாசம்.

நாங்கள் எந்த கோயிலுக்கு சென்றாலும் அங்கே கோயில் கோபுரங்களிலும் விமானங்களிலும் வளரும் சிறு சிறு செடிகளை பிடுங்கி போட்டு சிறு சிறு மராமத்து வேலைகளை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வோம். இந்தச் செடி என்ன செய்யும் என்று பலரும் அப்படி செய்வதில்லை. அவ்வாறு இருந்ததன் விளைவை இப்போது பாருங்கள். ஒரு பத்து வாலிபர்கள் சேர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை உழவாரப்பணி ஒரு சண்டே அவுட்டிங் மாதிரி செய்தால் போதுமே.

அப்படி செய்யாததால் மரத்தின் வேர் கோயிலை அப்படியே இரண்டாக பிளப்பதை பாருங்கள்.

என்ன சொல்வது – வார்த்தைகள் வரவில்லை. அருகில் இருக்கும் கம்பத்தை கொண்டு இதன் உயரத்தை கணக்கு போடுங்கள். இது ஏதோ தெரு முக்கு சிறு ஆலயம் அல்ல – அதன் காலத்தில் பெரும் முயற்சியுடன் எழும்பிய கம்பீர கோயில் . மனிதரிடத்தில் இன்று தோற்று அழியும் அவலம்.

ஊர் காரர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல. அருகிலேயே புதிய கோயில் அமைத்து அதற்கு நன்கொடை வசூலித்து ( நாங்கள் போகும் போதே அது ஒரு பக்கம் சாயத் துவங்கிவிட்டது !) அவர்கள் தங்கள் கடமையை செய்து விட்டனர். ஆனால் இப்படி ஒரு அற்புத புராதன சின்னத்தை சிதைத்து மண்ணிலும் மரத்திலும் புதைக்க விட்டதன் கரை நம் நெஞ்சை விட்டு என்றும் போகாது.