குட்டி செய்யும் லூட்டி – புள்ளமங்கை புலி தொப்பை

நாம் இதற்க்கு முன்னர் இரு இடங்களில் நம் நண்பர் புலி தொப்பையை சந்தித்தோம். மல்லை மற்றும் ஸ்ரீநிவாசநல்லூர் சிற்பங்களில் நம்மை மகிழ்வித்த இவர் இன்று புள்ளமங்கை பிரம்மபுரீர்ஸ்வரர் கோயிலில் தன் கூட்டாளிகளுடன் நம்மை அசர வைக்கிறார்.

சரி, உங்கள் கவனிப்பு திறனை சோதிக்கலாம். இந்த படத்தில் நம் நண்பரை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

முடியவில்லையா ? சரி இந்த படத்தில் முயற்சி செய்யுங்கள்

என்ன ! இன்னும் முடியலையா ? இப்போது

சரி விடுங்க – இப்போ பாருங்க நம் குட்டி செய்யும் லூட்டி – அதுவும் என்ன அருமையான புலி தொப்பை – இருந்தும் சற்று சோகமாகவே உள்ளார் நம் நண்பர்

இந்த காலத்தில் கட்டும் கோயில்களிலும் வெளி சுவரில் பூத கணங்களை வைகிறார்கள் – ஆனால் அவை அனைத்தும் ஒரே முக பாவத்துடன், பெரும்பாலும் வருவோரை முறைத்து கொண்டு இருக்கும். சோழர் கால பூத கணங்களை கொஞ்சம் பாருங்கள் – ஒவ்வொன்றின் உடல் அமைப்பு என்னமோ குள்ளனாக ( அதில் கூட சிற்பியின் திறமையை பாருங்கள் – கை , கால் என குள்ளர்களையும் தத்ரூபமாக செதுக்கி உள்ளான் ) இருந்தாலும் , அவற்றின் முக பாவம் – அவை நிற்கும் அலட்சிய தோரணை, உண்மையிலேயே நம்மை நக்கல் அடிப்பது போல உள்ளது.

ஒன்று பாருங்கள் – நம் புலி தொப்பை அனைவருக்கும் இல்லை – அது ஒரு பூத கணத்தின் அமைப்பு – அவர் பெயர் என்ன – ஆராய வேண்டும். அடுத்து முறை நீங்கள் புராதன இடங்களுக்கு செல்லும் பொது இது போல புலி தொப்பை சிற்பங்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். அதே போல மற்ற பூத கணம் சிற்பங்களையும் பார்த்து மகிழுங்கள்.

படங்களுக்கு உதவி – காத்தி மற்றும் வரலாறு . காம்

இந்த சிற்பத்தை செதுக்க உத்வேகம் என்ன – பல்லவ மல்லை – எனது விளக்கம்

இந்த சிற்பத்தை நாம் முன்னர் பார்த்த போது ஒரு கேள்வி கேட்டேன். இந்த சிற்பத்தை செதுக்க சிற்பிக்கு என்ன உத்வேகம்? இது ஒரு தனித்தன்மை வாய்ந்த சிற்பம். ஏனெனில் மல்லையில் பல இடங்களில் மிருகங்கள் மற்றும் பறவைகள் மிக அருமையாக செதுக்கிய சிற்பி – தவம் சிற்பத்தில் ஒரு முழு காட்டையே செதுக்கிய சிற்பி, கோவர்தன சிற்பத்தில் மாடுகள் – என்று பலவை இருந்தும் அவை அனைத்தும் புராண கதைகள் மற்றும் தெய்வங்களை ஒட்டியே வந்தன. இந்த சிற்பத்தில் உள்ள விசேஷம் – இது ஒரு சாதரண காட்சி.

இதை வடிக்க எந்த மன்னனும் ஊதியம் அளித்திருக்க மாட்டான். அதே போல இது ஒன்றும் ஒரு இரவில் கிறுக்கிய சித்திரம் அல்ல. பல மாதங்கள் கை வலிக்க , நெற்றி வியர்வை சிந்த, கருங்கல்லை செதுக்கும் வேலை. அப்படியானால் , இதில் அவன் வேறு எதாவது நமக்கு சொல்ல வருகிறானோ ?

சரி மீண்டும் சிற்பத்தை பார்ப்போம்

ஒரு மகிழ்ச்சி ததும்பும் யானைகளின் குடும்பம் – அதிலும் சின்ன யானையின் கவலை இல்லா வேடிக்கை விளையாட்டு
297729862979
ஒரு அழகு மயில்

ஒரு குரங்கு – குரங்கின் பார்வையில் எதோ ஒரு தேடல் ,ஒரு ஏக்கம். மற்ற மிருகங்களை போல அல்லாமல் அது வெளி பக்கமாக திரும்பி வருபவரை நோக்கி உள்ளது.
297029772989
சரி, இதற்கு ஒரு விளக்கம் தந்து பார்ப்போம்

சிற்ப கலை ஒரு அற்புத கலை – அதை எளிதில் கற்க முடியாது. சிறு வயதில் இருந்தே மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டு படித்தாலும், ரத்தத்தில் கலை உணர்வு, நினைவில் இறை உணர்வு என்று பல சரியாக அமைய வேண்டும். அப்படி இருக்கையில் சிறு வயதிலேயே சிற்பி தனது அனைத்து ஆசைகளையும் கட்டுப்படுத்தி தன் சிந்தனை முழுவதையும் ஒருமுக படுத்தி கலையில் ஈடு பட வேண்டும். அவனுக்கென்று ஒரு குடும்பம் , தாய் , தந்தை, தமையன், தாரம் இருந்தாரோ , இல்லையோ – அவன் பணி – கலை பணி

அப்படி இருந்த அவன் ஒருநாள் சற்று தன் நிலைமையை நினைத்து பார்க்கிறான். இப்போது சிற்பத்தில் உள்ள குரங்கு தான் அவன். யானை குடும்பம் – அவன் அனுபவிக்காத சுகம். மயில் அவனது காதலி / துணைவி – அனைத்தையும் துறந்து கலைக்கு தன்னை அர்ப்பணித்தான் சிற்பி. எனினும் அடி மனதில் ஒரு நெருடல் – என்ன அது ?

இப்போது மீண்டும் குரங்கை பாருங்கள் ! அது உங்களை பார்த்து சிற்பி கேட்கும் கேள்வியின் பிரதிபலிப்பு என் தியாகத்தின் விளைவு இந்த சிற்பம்! இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன – அவன் துறந்த மகிழ்ச்சிக்கு அவன் உருவாக்கிய அழியா சிற்பங்கள் ஈடா ?
29722989

நூறாவது பதிவு – ஒரு அறிய சிற்பம் – ஒரு அற்புத மனிதர் – திரு ஜெயபாரதி ஐயா

இது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. – நூறு சகோதரர்களான கெளரவர்களின் முடிவுக்காலத்தின் நிகழ்வு ஒன்று நமது நூறாவது பதிவாக மலர்கிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடக்கும் துவந்த யுத்தம்.

நூறு பதிவுகள் அதுவும் ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் இட முடிந்ததற்கு காரணம் நண்பர்களும், நல் அறிஞர்களும் வழிகாட்டி ஊக்கப்படுத்தியதால்தான். சில நல்ல உள்ளங்கள் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க ஊக்குவித்து கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டியும் வருகிறார்கள். அந்த கலங்கரை விளக்கங்களில் ஒருவர், என்னை மட்டுமல்ல சாமானியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், சங்க கால ஆர்வலர்களையும், சம கால ஆர்வலர்களையும் தன்னுடைய வசீகர எழுத்தால் கவர்ந்திழுப்பவரைத்தான் இன்று அறிமுகம் செய்யப் போகிறேன். இவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். ஒரு நிமிடம்! இவருக்கு அறிமுகம் தேவையா! அப்பேர்பட்டவர் யார்: அவர்தான் Dr. S. ஜெயபாரதி, இவருடைய வரலாற்று படைப்புகளும், கலாச்சார, பண்பாடு பற்றிய படைப்புகளும் இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்களையும், ஆர்வளர்களையும் உருவாக்கியுள்ளது. இவரது மேலாண்மை திறம் வியக்கத்தக்கது, ஒருவரின் மனதை எளிதாக அறிந்துகொள்பவர். இவர் பங்குபெறும் மின் குழுமங்களில் யாரேனும் ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்தாலோ அல்லது சந்தேகங்களை தெரிவித்தாலே, அதை நிவர்த்தி செய்ய முன் நிற்பவர், தவறிருந்தால் சுட்டிக் காட்டுவதோடு சரியான பாதையில் செல்ல வழிகாட்டுபவர். இவரது துணையிருந்தாலே போதும் இலக்கை நோக்கி பாதி தூரம் சென்ற நிம்மதி கிடைக்கும் நமக்கு. நம் மண்ணின் பெருமையை அறிந்து கொள்ளும் தேடலில் ஒவ்வொருவரையும் ஈடுபடுத்துவதில் இவருக்கு அலாதிப் பிரியம்.

( இன்றைய அரிய மனிதர்களில் ஒருவரான் இவரை அறியாதவர் யாரேனும் இருந்தால் உடனே பார்க்கவும் டாக்டர் சி. ஜெயபாரதி)

நாம் பார்க்கப் போகும் இன்றைய பதிவு அவருடைய வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுதான். துவந்த யுத்தம்

நாம் ஏற்கனவே இந்த சிற்பத்தை ஒத்த அதே வகை சிற்ப பதிவுகள் பலவற்றை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த சிற்பத்தை நான் விளக்குவதை விட Dr. ஜெ. பி. யின் விளக்கம் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவரை அணுகினேன். நூறாவது பதிவு வேறு. உடனே அனுமதித்த அவரது கருணையை என்னவென்று சொல்வது. என்னைப் போன்ற பல பேரை அவர் உருவாக்க அவர் பல காலம் வாழவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம். கரும்பு தின்ன கூலியா

அற்புதமான இந்த சிறப்புப் பதிவை வழங்கும் டாக்டர். ஜே.பி ஐயாவுக்கு நன்றி.

உலகத்தின் தலை சிறந்த சிற்பங்களின் புகலிடங்களில் ஒன்றான பண்டே ச்ரெய் ஆலயங்கள் ஒன்றில் உள்ள சிற்பத்தை இன்று காண்போம். “அன்கோர் வாட்”டில் இருந்து வடகிழக்காக 15 மைல்கள் தொலைவில் உள்ளது இந்த பண்டே ச்ரெய்.

[“The lacy setting is superbly executed and the balanced rhythm and harmony
of the scene itself cannot be surpassed in any work of man” – Reginald le May.

துல்லியமான அபிநயத்தோடு துவந்த யுத்தத்தை, பழங்கதையை எடுத்துக்காட்டும் இந்த சிற்பங்களை விஞ்சிய எதுவும் இருப்பது அரிதே!]

இன்றைய சிற்பத்தில் உள்ள காட்சி பாரதப் போரின் கடைசி கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

பாரதப்போர் முடியும் தருவாயில் அனைவரையும் இழந்து, படுகாயப்பட்டு களைப்படைந்த துரியோதனன் மறைந்திருக்கிறான். அந்த சமயம் பார்த்து பாரதப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அவனை தேடிவரும் பாண்டவர்களின் கண்ணில் படுகிறான். பாண்டவர்கள் ஐவர் ஆனால் அவனோ ஒருவன் ஆகவே பாண்டவர்களில் யாரேனும் ஒருவரோடு யுத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாண்டவர்களில் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனனுக்கு இணை பீமன் மட்டும் தான். காயம்பட்டு களைப்படந்திருந்தாலும் கதாயுதத்தை கையாளும் திறமையால் பீமனுடன் போர் புரிய சம்மதிக்கிறான் துரியோதனன். பீமனும் கதாயுத்தை கையாள்வதில் வல்லவனே.

கதை என்பது நீண்ட பிடியும் உருண்ட தலைப் பகுதியும் உடைய ஆயுதம். இதை பயன்படுத்தியே இரதங்களை உடைத்தும், யானைகளை கொன்றும், கவசங்களை உடைத்தும் எதிராளியை நிலை குலையச் செய்வர்.

கிருஷ்ணரும், பாண்டவர்களும் வேடிக்கைப் பார்க்க, துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுத பயிற்சி அளித்த பலராமரை நடுவராக கொண்ட துவந்த யுத்தம் துவங்குகிறது. துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடைபெறும் சண்டை. அது இறுதிவரைக்கும் நடைபெறுவதாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உத்தியின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம்.

யுத்தம் நடைபெறுகிறது ஒரு காலகட்டத்தில் பீமன் களைப்படைகிறான், ஆனால் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனோ மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் போர் புரிகிறான். பீமன் சற்று அயர்ந்த நேரம் தரையிலிருந்து எழும்பிய துரியோதனன் தன் கதையை பீமனின் தலையை நோக்கி தாக்க முற்படும் நேரத்தில் துரியோதனின் பலவீனமான இடது தொடையை தாக்குமாறு கிருஷ்ணன் பீமனுக்கு ஆலோசனை கூறுகிறான். துரியோதனன் எழும்பியதால் அவன் தொடை பீமனுக்கு எளிய இலக்காக அமைய, பீமனின் அடி மரண அடியாக துரியோதனின் தொடையில் விழ, தொடை பிளந்து குற்றுயிரும் கொலையுயிருமாய் வீழ்கிறான் துரியோதனன். யுத்த விதிகளை மீறியதால் தன் கலப்பாயுதத்தால் பீமனை தாக்க முயலும் பலராமனை தடுக்கிறார் மாயக் கண்ணன்.

இந்த யுத்தக் காட்சியை அற்புதமாக எடுத்துக்காட்டும் சிற்பத்தை பார்க்கலாம் இப்பொழுது.

வலதுபக்கம் அமர்ந்து கொண்டு யுத்தத்தை பார்த்து ஆரவாரம் செய்யும் பாண்டவர்களில் நால்வர்.

நடுவில் போரிடும் பீமன், அந்தரத்தில் பறந்து பீமனின் தலையை சரியாக குறிவைக்கும் துரியோதனன்.

இடது பக்கம் நான்கு கைகளோடு பலராமரின் ஆயுதத்தை தடுத்து நிறுத்தும் கிருஷ்ணர்.

துவந்த யுத்தத்தை அற்புதமாக விளக்கும் சிற்பம். எங்கேயோ கம்போடியாவில் பாரதப்போரை விளக்கும் சிற்பம் பாரதம் என்றழைக்கப்படும் இந்தியாவில் இல்லை!

(அருமையான தமிழில் மொழி பெயர்த்து உதவிய சதீஷுக்கு நன்றி )

இந்த சிற்பத்தை செதுக்க உத்வேகம் என்ன – பல்லவ மல்லை

மல்லையில் சிற்பங்களை செதுக்கி நம்மை மனம் கிறங்க வைத்த அந்த சிற்பிகளின் கூரிய ஞானம் இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை இன்னமும் ஆச்சரியமான ஒன்றுதான். ஒவ்வொரு சிற்பியும் ஒருவகையில் தன் கூரிய ஞானத்தை அற்புதமான வகையில் எங்காவது ஒரு சிற்பத்திலாவது காண்பித்துவிடுவான். ஒவ்வொரு சமயம் அந்தக் கூரிய ஞானமானது வழக்கமான இறை உருவத்தினின்றும் திசை மாற்றி அவனையே இழுத்துச் சென்று வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் போலும். ஆனால் அங்கும் அவன் ஒரு அற்புதத்தை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.

அப்படிப்பட்ட ஒரு அருமையான பரிசுதான் – மல்லையில் திருமூர்த்தி குகைக்கு பின்னால் இந்த அதிசய சிற்பத்தை வடித்துள்ளான்.





ஆண் யானையின் பிரம்மாண்ட வடிவம், அதன் பின்னே எட்டிப் பார்ப்பது போல பெண் யானையின் தலை, அந்த ஆண் யானையின் கீழே தன் தும்பிக்கையால் மண்ணைக் கிளறிக் கொண்ட்இருக்கும் ஒரு மகவு யானைக்குட்டி, இன்னொரு பக்கத்தில் (தலைஇழந்த நிலையில்) இன்னொரு குட்டி யானை. சரி.. அந்த பெரிய ஆண் யானையை சற்று உற்றுக் கவனியுங்களேன். எங்கள் குடும்பத்துக்கு நான் தான் தலைவனாக்கும் என்பது போல ஒரு பெருமையில் நிற்பதும். ‘நானும் இங்கேதான்.. தாய்தான் தலைவியாக்கும்’ என்பது போல அந்த பெண் யானை எட்டிப் பார்ப்பதும்.. எத்தனை பெரியவர்களாய் இருந்தால் என்ன, எங்களைப் போல விளையாடத் தெரியுமா’ எனக் குறும்பாகக்கேட்பது போல குட்டிகள்.

ஆனால் அந்த யானைக் குடும்பத்திற்கு மேலே – ஒரு அழகு மயிலையும் அருகேயே ஒரு குரங்கையும் செதுக்கி இருக்கும் அந்தக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே உயிர் குரங்கு சிலையாய் மாறியது போல உள்ளது. பல்லவ சிற்பி ரசவாதம் தெரிந்தவனோ? அல்லது மந்திரவாதியோ ? உயிருடன் இருப்பவரை கல்லுக்குள் சிக்க வைத்து விடுவானோ ?

சரி.. யானைக் குடும்பத்திற்கும் மயிலுக்கும் குரங்குக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அங்கே குரங்கை செதுக்கினான்.. அழகு மயில் மூலம் அவன் என்ன சொல்ல வந்தான்..

அதெல்லாம் சரி!. இப்படியும் ஒரு சிலை செதுக்கவேண்டும் என ஏன் அந்த சிற்பி சிந்திக்கவேண்டும்..ஒரு ஓவியன் உதிக்கும் சூரியனை பாத்தவுடன் சித்திரம் தீட்டுகிறான், புலவன் காதலியின் கயல் விழியை கண்டதும் கவிதை இயற்றுகிறான்….ஆனால் இந்த கலைஞனோ சிந்தனையுள் உதித்த இந்த சிற்பங்களுக்காக எத்தனை இரவு பகல் செலவழித்தானோ..ஏன் பலநாள் இந்த சிற்பத்துக்காக முனைய வேண்டும்.. புதிர்தான்.. புதிரை நம்மிடமே நிரந்தரமாக விட்டுவிட்டான் போலும்

படங்கள் : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் – திரு ஸ்ரீராம் மற்றும் வெங்கடேஷ்

தடாதகை – மும்முலையில் மூன்றாவது மறையும் முக்கண்ணன் பார்க்கையிலே

அண்மையில் மதுரை நண்பர்களிடம் சில படங்கள் வேண்டும் என அழைப்பு விடுத்தேன். நான் தேடிய படங்கள் திருபரங்குன்றம் பாண்டிய குடவரை – எனினும் நண்பர் திருமதி ஷோபா ராமகிருஷ்ணன் அவர்களை மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் படங்களை அனுப்பி வைத்தார். அந்த குவியலில் இந்த முத்தான படத்தை பார்த்தவுடன் இங்கே அதை பகிர்ந்து கொள்ள ஆசை – எனினும் இதை வாசகர்கள் எவ்வாறு கருதுவார்கள் என்று ஒரு சிறிய தயக்கம். சரி, முதலில் இதற்கு தகுந்த பாடல்களை எடுத்து பார்ப்போம், பின்னர் எவ்வாறு இடலாம் என்று யோசிக்கலாம் என்று எண்ணி நண்பர்களிடம் கேட்டேன். நண்பர் வைரம் பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தில் இது உள்ளது என்று கூறியவுடன் இணையத்தில் தேடினேன். தேனென இனிக்கும் தமிழில் பாடல்களை படிக்கப் படிக்க இன்பம் பொங்கியது, பயம் நீங்கியது. அழகு சிற்பம், அதை விட அமுத மொழி – வேறு என்ன வேண்டும் – ஐந்தே பாடல்களை கொண்டு கதையை விளக்குகிறேன்.

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_02_u.htm

நிறைய பாடல் வரிகள் இருப்பதால் – இம்முறை முதலில் சிற்பத்தை பார்ப்போம். மூன்று முலை என்றவுடன் சிற்பத்தில் எவ்வாறு காட்ட முடியும்! அதுவும் அழகு கன்னியாய், கயல் விழியாய் காட்டவேண்டும். சளைத்தவனா நமது சிற்பி – இதோ

இப்போது வரிகளை பார்போம்

தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமோடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள் – Verse 542

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். இதன் பயனாக வேள்வி குண்டத்திலிருந்து மூன்று முலைகளுடன் பார்வதிதேவி தோன்றினாள்.

மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
தகவிந்த மகஞ் செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை – 547

நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த குழந்தை, அதுவும் அரசாள பிள்ளை வரம் வேண்டி வேள்வி நடத்திப் பெற்ற குழந்தை – மூன்று முலைகளுடன் இருப்பதை அறிந்த அரசனும் அரசியும் மிகவும் வருந்தினர்..

மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே 548

அப்போது இறைவன் அசரீரியாக “இந்த குழந்தைக்கு தடாதகை (தடுத்தற்கரிய தடையுடை யாள்) என்று பெயர் சுட்டுமாரும், அவள் அரசனுக்கு நிகராக முடி சூட்டி ஆட்சி புரிவாள் என்றும், அவள் கணவனை முதல் முறை காணும் போது தானாகவே மூன்றாவது முலை மறையும்”என்றார்.

மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால் அங்கயற்கண்ணி எனவும் மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டாள் – ஒரு ஆண் பிள்ளையை போலவே போர்ப் பயிற்சிகளை பெற்றாள். உரிய காலத்தில் மலையத்துவசனுக்கு பின் அரசுக்கட்டிலில் அமர்ந்தாள் பாலகி அங்கயற்கண்ணி. அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என அழைக்கப்பட்டாள்.

அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் தோற்றனர். கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்த அங்கயற்கண்ணியின் படை ஆரவாரத்துடன் கைலாயத்தை அடைந்தது.

ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த வெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள் – 646

ஈசனை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் புலவர். ஒப்பில்லாதவன் – ஒருவன், பாம்பு அணிகலன், புலித் தோல் அணிந்து, உடம்பெல்லாம் சாம்பல் பூசி, சடைமுடி தரித்து, முப்புரி நூல் அணிந்து சிரித்து வந்தவனைக் கண்டதும், தான் யார் என்பதும் எதிரில் நிற்பது தனக்கு ஒரு பாதியை தந்தவன் என்றும் உணர்கிறாள். உணர்தவுடன் …


கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்

அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. தடாதகைப் பிராட்டிக்கு அதுவரை இருந்த குணங்கள் சற்று மாறி, தன் கைத்தலம் பற்றப் போகிறவன் கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலை சரித்தாள்.

மீண்டும் நமது நண்பர் – புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில்

நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்

அங்கே பல அற்புத சிற்பங்கள் இருந்தும் இன்று சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு மகர தோரணம், அதில் நம் நண்பர் புலி தொப்பையை மீண்டும் சந்திப்போம்.

அருமையான இரு கன்னியர் சிற்பம் – ( அவர்களை அடுத்து வரும் மடல்களில் பார்ப்போம் ) – நடுவில் சற்று மேலே மகர தோரணம். படத்தை பாருங்கள்.

எங்கெங்கும் சிற்பங்கள் – அப்பப்பா, இந்த சிறிய இடத்தில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடு! மகர யாளிகள் – அவற்றின் வாயில் இருந்து வெளி வரும் சிங்க யாளிகள், அவற்றின் மேல் வாளேந்திய போர் வீரர்கள் , ஒருவருடன் ஒருவர் போர் புரிந்து கொண்டு உள்ளவாறு செதுக்கப்பட்ட விதம் அருமை .

சிற்பத்தின் நடுவில் பூமாதேவியை காப்பாற்றிய வெற்றி பரவசத்தில் வராஹ மூர்த்தி, நான்கு கரங்கள் – மேல் இரண்டில் சங்கு , சக்கரம் , பூமாதேவியின் பக்தி நிலை – இரு கரம் கூப்பி , அவர்களை ஆசை அன்புடன் மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி, அத்துடன் நிறுத்தவில்லை சிற்பி ( மல்லை மற்றும் உதயகிரி வடிவங்கள் பார்த்தோம் அல்லவா ) – அவற்றை போலே இந்த சிறு சிற்பத்திலும் அவன் வராஹ மூர்த்தியின் கீழே நாகராஜன் மற்றும் நாகராணியை செதுக்கி உள்ளான்.

அவரைச் சுற்றி பூத கணங்கள் – எருமைத்தலையுடன் ஒரு பூதம் – அடுத்து நம் நண்பர் புலி தொப்பை – ஆள்காட்டி விரலால் வாயை இழுத்து முகம் காட்டும் வண்ணம் மிக அருமை. இங்கு புலி தொப்பை கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. இவர் புள்ளமங்கை கோயிலிலும் வருவார். இது போல வேறு இடங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் இவர், யார் அந்த எருமை தலை – இவர்களுக்கு பெயர் உண்டா?

ஒரு அற்புத சிற்பத்தை நமக்கு தந்த காத்தி மற்றும் படங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் – இருவருக்கும் நன்றி

வாயிற் காப்போன் – பாகம் ஒன்று , எலிபண்டா

சிறு வயதில் இருந்தே எனக்கு கோயில்களில் உள்ள வாயிற் காப்போன்கள் மீது ஒரு கண். அதனால் அவர்களை பற்றி ஒரு தொடரை இங்கே எழுதவேண்டும் என்று நினைத்தேன். நாம் முன்னரே தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாங்காடப்பத்து வாயிற் காப்போங்களை பற்றி பார்த்தோம். பொதுவாக எல்லா கோயில்களிலும் இருக்கும் இவர்களின் சிற்பங்களை இப்போதெல்லாம் எவரும் பார்ப்பது கூட இல்லை. அருமையான அதிகார தோரணையில், கம்பீரமாக தங்கள் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி இருக்கும் இவர்களை அடுத்தமுறை செல்லும் போது கண்டிப்பாக பாருங்கள்.

இந்த தொடரை துவக்க ஒரு அற்புத சிற்பம். எனக்கு மிகவும் பிடித்து சிற்பம். அதனாலேயே நம் தளத்தின் முத்திரையில் இவரை காணலாம். மும்பையில் அண்மைய தீவிரவாத செயல்கள் நடை பெற்ற பகுதிக்கு மிக அருகில் இருக்கும்….

எலிபண்டா குடவரை வாயிற் காப்போன்.


ஏன் இந்த சிற்பத்தை இத்தளத்தின் முத்திரையாக தேர்ந்தெடுத்தேன் ? இந்த கல் சிற்பம் சொல்லாமல் சொல்லும் கருத்து – அது தான் காரணம் . ஆயிரம் ஆண்டு நின்று தன் எஜமானான ஈசனின் கர்பக்ருஹம் பாதுகாத்து வந்த சிலை – பதினேழாம் நூற்றாண்டில் வந்த போர்த்துகீசியரிடத்தில் தோற்ற சிலை. என்னதான் கொடூரமான மனிதன் என்றாலும், அந்த நாட்டின் கலை, மொழி, நெறி , மதம், புரியவில்லை என்றாலும் குறி பார்த்து சுடும் பயிற்சிக்காக யாராவது இந்த அருமையான சிற்பத்தை தேர்ந்தெடுப்பார்களா? ஆனால் போர்த்துகீசியர் தேர்ந்தெடுத்தார்களே!! சிதைத்துவிட்ட மாபாவிகள். கலை அம்சம் சொட்டும் இந்த சிலையை சிதைக்க எப்படி மனம் வந்ததோ அவர்களுக்கு.

வாயிற் காப்போன் -. பல ஆண்டுகள் கற்ற அறிவை உளி கொண்டு கல்லில் உயிர்ச் சிற்பமாய் வெளிக் கொண்டு வந்த சிற்பி, வரும் பக்தர்களின் மனதை கட்டுப்படுத்தி, அவர்களை இறைவனை ஒரு மனதாக த்யானிக்க உதவவே இந்த உருவங்களை உருவாக்கினான் – இவை அலை பாயும் மனதை ஒழுங்கு படுத்த, துப்பாக்கி,தோட்டாக்களை எதிர்க்க அல்ல. தன் பணியில் தோற்றதால் தன் கை கால்களை இழந்து அவல நிலையில் நிற்கும் சிலையா இது? நன்றாக பாருங்கள்

இல்லை , அவன் பொறுமை ததும்பும் அன்பு முகத்தின் புன்னகை போதுமே ! அவனுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் அவனை இன்னும் அழகாக பிரதிபலிக்கின்றன – கலை ரசிப்பு – ஒரு உணர்வு , ஒரு உன்னத கலை – அதற்கு அழிவு என்பது கிடையாது என்று நின்று சிரிக்கும் சிற்பம். இவனே நம் தளத்தின் நோக்கத்தை முழுவதுமாக வெளி காட்டும் திறன் கொண்டவன்.

மேலும் சில படங்கள் – சிற்பம் இருக்கும் இடம், மற்றும் அதன் அளவு (பக்கத்து சுவரில் உள்ள சிற்பம் – ஒரே அளவு )

{வாயிற்காப்போன்களை த்வாரபாலகர்கள் என்று சொல்லுவார்கள், இவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே இறைவனை வணங்கவேண்டும் என்பது ஐதீகம் }
290929132915

தஞ்சை பெரிய கோயில் விமானம் நிழல் தரையில் விழுகிறதா ?

மீண்டும் பெரிய கோயில் விமானம். சென்ற மடலில் பெரிய கோயில் விமான நந்தி அளவை பற்றி எழுதினேன். அதில் பெரிய கோயில் நிழல் பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் அதை பற்றி கேட்டனர்.

பெரிய கோயில் விமானத்தின் நிழல் பற்றி பல புத்தகங்கள் கூட அதன் நிழல் தரையில் விழாது என்ற கருத்தை பல காலமாக சொல்லி வருகின்றனர். சோழர்கள் தங்கள் புகழை மெய்கீர்த்திகளில் எழுதி விட்டு சென்றனர். அவர்களது உன்னத படைப்பான பெரிய கோயிலுக்கு ஏன் இந்த பொய் கீர்த்தி.

இந்த நிழல் விழுமா கேள்வியை பலர் திரித்தும் கூறுவர் – முழு விமானத்தின் நிழல் விழாது , , மேல் இருக்கும் கலசத்தின் நிழல் விழாது , காலையில் விழாது, மாலையில் விழாது, மதியம் விழாது என்று பல உண்டு.

மீண்டும் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் உதிவியுடன் படங்களை இடுகிறேன்.

படங்களை பாருங்கள். நிழல் விழும் – விழுகிறது

மேலும் படிக்க

http://www.hindu.com/lf/2004/03/30/stories/2004033001340200.htm
http://www.hindu.com/2004/04/07/stories/2004040703010300.htm

ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது – பார்வதி ஈசனை நினைத்து தவம் – தாராசுரம்

நண்பர் திரு சதீஷ் அவர்கள் இந்த வாரம் தாராசுரம் செல்கிறேன் என்றார். அங்கே மண்டப தூண்களில் ஸ்கந்த புராணம் சிற்பங்கள் உள்ளன என்றும் அதை படம் பிடித்து வருமாறு கேட்டேன்.அவரும் அவ்வாறே எடுத்து வந்துள்ளார். அருமையான சிற்பங்கள். அவற்றை விளக்க நல்ல தமிழ் உரை தேடும் பொது நண்பர் வைரம் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் இதன் வர்ணனை உண்டு என்று ஒரு ஆங்கில நூலை தந்தார். படித்த பின், மதுரை திட்டத்தில் தேடி அண்மையில் அந்த நூலும் இந்த அற்புத திட்டத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து அவற்றை எடுத்து திரு திவாகர் அவர்களின் உதவியுடன் இங்கே படைக்கிறேன். இணையத்தின் அற்புதம் – நண்பர்களின் உதவி – உருவாகிறது பார்வதி கல்யாணம். இதனை நாம் முன்னர் பார்த்த தஞ்சை தக்ஷ வதம் கதைக்கு தொடர்ச்சி என கருதி வாசிக்கவும்.

புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா


முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள்.

“ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது? இப்படி தவம் செய்வது இவளுக்குத் தகுமோ.. பார்வதியே.. உமையே.. அறியாமல் செய்கிறாயே.. இப்படியா தவம் செய்வது.. சிவன் அவன் அருள் வாய்க்குமோ.. அவனையே மணம் செய்வேன் என்று தவம் செய்தால் பெறக் கூடிய அத்தனை எளியனா சிவன்? ஆனாலும் இத்தனைக் கடினமான தவம் உனக்கு வேண்டுமோ.. யோசித்துப் பார்..”

“தவம் செய்யத் தொடங்கிவிட்டேன்.. ஆதியும் அந்தமும் இல்லாத அந்த இறைவனையே மணம் முடிப்பேன்.. என்னுடைய தலைவனே வந்து தவத்தை விடு என்றாலும் விடேன்.. இத்தகைய கடிய நோன்பினால்தான் இனி உயிர் வாழவேண்டுமென்றால் அப்படியே என் வாழ்க்கை முழுதும் கழிப்பேன்”

மேற்கண்டவை மாய மறையோன் வடிவம் தாங்கி சோதனை செய்த இறைவனுக்கும், அந்த இறைவனுக்காகவே வேண்டி கடுந்தவம் செய்யும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் வரும்.

http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/pdf/pm0239.pdf

கந்தபுராணம் சிவபுராணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அட்டகாசம் செய்து தேவர்களை சித்திரவதை செய்ததோடு மட்டுமல்லாமல் மூவுலகையே அச்சுறுத்திவந்த அசுரர்களின் தலைவனான சூரபன்மனை வதைக்க தானே ஒரு மகனைப் பெற்றுத் தருவதாக இறைவன் தேவர் முதலா அனைவருக்கும் அபயம் தருவதில் ஆரம்பித்து, அதற்கான வகைகளில் ஒன்றாக பர்வதராஜனின் மகளாக பார்வதிதேவி பிறந்து ஈசனை மணக்க தவம் செய்யும் காட்சிதான் இந்த சிற்பம்.

இதற்கு முன்புதான் மன்மதபாணங்களை வீசி காதலரை அல்லல் படுத்தும் காமன் சிவனின் மூன்றாவது கண்ணின் வெப்பத்தால் சாம்பலாகிப் போனதால் ( இதையும் நாம் தஞ்சை பெரிய கோயில் சிற்பத்தில் பார்த்தோம் ), அம்மை பார்வதியின் தவம் மிக மிகக் கடுமையாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேவியை அனைவருமே பரிதாபமாகப் பார்த்து இந்தத் தவத்தைக் கைவிடுக.. என்று சொன்னாலும், ஈசனே மாறுவேடத்தில் வந்து கேட்டும் – இறைவனை மணக்க எப்படிப்பட்ட துயர் வந்தாலும் அதைத் தாங்குவேன் என்கிறாள் சக்தி.

இனி சிற்பத்துக்கு வருவோம்..

தராசுரம் கோவில் தூணில் இருக்கும் அருமையான கந்த புராணத்தை விளக்கும் சிற்பங்கள் – முதல் சிற்பம் இன்று பார்போம். அடுத்தடுத்து வரும் மடல்களில் கதை கேற்ப சிற்பங்களை பார்ப்போம்.

தூண் – கீழே இருந்து மேலே நகர்கிறது கதை. பார்வதியின் தவத்தை கண்டு அனைவரும் வியக்கின்றனர். ஊர் முழுவதும் இதே பேச்சு தான் போல. தோழியர் மூவர் ஈசனை நினைத்து லிங்கத்தின் முன் பூஜை செய்யும் தேவியை வணங்குகின்றனர். போதும் தவம் – என்கிறார்களோ ?

மேலே – பார்வதி ஒரு காலில் நின்று கடுந்தவம் புரிகின்றாள் – இரு புறம் தீ பிழம்புகள் – அப்படியும் ஈசன் மனம் இறங்கவில்லை – அடுத்து என்ன – மழைக்காலம் வந்து விட்டது ….. தொடரும் .

தஞ்சை பெரிய கோயில் விமான நந்தி, அதன் அளவு – ஒரு அலசல்

தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல செய்திகள் பின்னர் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெளிவு பெற்று உள்ளன – அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது ( விழுகிறது – தினமும் ), அதன் மேல் இருப்பது XX எடை கொண்ட ஒரே கல் ( அது ஒரே கல் அல்ல ) , ராஜ ராஜனுக்கு வந்த நோய் தீரவே அவன் பெரிய கோயிலை நிறுவினான் – என்று பல தவறான கருத்துகளை அண்மைய ஆய்வுகள் தெளிவு பெற உதவி உள்ளன.

பெரிய கோயிலை பற்றிய முதல் காணல் மடலில் நான் இந்த அருமையான இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தை விவாதம் செய்தேன்

http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/arcpho/arph31.jpg

இதோ அந்த படம் – பெரிய கோயில் விமானத்தின் மேல் உள்ள நந்தியின் அளவை கீழே உள்ள பிரகாரத்தில் உள்ள நந்தியின் அளவை கொண்டு விளக்க ஒரு முயற்சி. இது சரியா ?

இந்த கேள்விக்கு பதில் தேட – திரு குடவாயில் பாலசுப்பிரமணியம ஐயா அவரை அணுகிய பொது – இந்த படங்களை தந்து உதவினார் ( அவரை இதுவரை நேரில் பார்க்காதவர்களுக்கு அவரை படத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு ) . மேலும் பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களும் பல படங்களை தந்து உதவினார்.

முதலில் கீழே இருக்கும் நந்தியை பார்போம். அருகில் நிற்பது திரு பாலு ஐயா. இந்த நந்தி ராஜ ராஜன் முதலில் நிறுவிய சிற்பம். நாயக்கர் காலத்தில் அதனை மாற்றி , இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்போது உள்ள நந்தியும் அவர்கள் நிருவியதே. எதனால் இவ்வாறு செய்தார்கள் ? ஒருவேளை மாலிக் கபூர் சூறையாடல் பொது நேர்ந்த சேதம் காரணமோ ?

இப்போது விமானத்தின் மேல் உள்ள நந்தி வரிசை – அதன் அளவை நாம் எப்படி அளப்பது – அதற்கும் திரு பாலு ஐயாவின் படம் இதோ – பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொது எடுத்த படம்.

சாரத்தில் நமக்கு என்றே மனிதர்கள் – அவர்களை கொண்டு நாம் நந்தியின் அளவை அலசுவோம்.

இதன் படி பார்த்தல் கீழே இருக்கும் நந்தி – மேல் உள்ள நந்தியை விட அளவில் பெரியது – அதன் வடிவமும் வேறு பாணியில் உள்ளது.

எனினும் இதனை கொண்டு பெரிய கோயில் விமானத்தின் பிரம்மாண்டமான அளவை நாம் தெரிந்துக்கொண்டோம் – மீண்டும் ஒரு முறை தொலைவில் இருந்து அருகில் சென்று இந்த அற்புத சோழ படைப்பை கண்டு ரசிப்போம்.
14091332144513461423
143228832868