நமது பாரம்பரியத்தின் இன்னொரு முகம். பழைய நாணயவியல் ஒரு முதல் பார்வை – மின் அரட்டை

நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் – அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் 🙁

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.


முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ


Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை – என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர – அதாவது சேர, சோழ, பாண்டியர் – வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் – ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் – Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்


RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை – 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!

பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனி

நண்பர்களிடையே பலமுறை இந்த கேள்வி எழும். கலை ஆர்வலன் ( நானே சொல்லிக்க வேண்டியது தான் – ரசிகன் பட்டம் தானே !!) என்ற முறையில் தமிழ்க் கலை என்றால் பல்லவர் கலை பெரிதா இல்லை சோழர் கலை பெரியதா என்பதே ( நமக்கு சேரர் கலை வெகு சிலவே கிடைக்கின்றன – அதாவது அந்தக் காலத்து , பாண்டியர் குடைவரைகள் இன்னும் நிறைய நான் பார்க்க வேண்டி உள்ளது எனினும் பார்த்த சிலவற்றை வைத்து ( வேட்டுவன் கோயில் தவிர ) அதற்குப் பின்னர் வந்த கட்டுமானக் கோயில்களில் உள்ள கலை வேலைப்பாடு என்னை பெரிதாக ஈர்த்ததில்லை. எனவே இன்றைய விவாதம் பல்லவர் vs சோழர். அதுவும் பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனிகள். இதற்காக அவர்களது கலையின் மிகவும் மேலான உதாரணங்களை கொண்டே பார்ப்போம். பல்லவர் சிற்பக்கலை அதன் சிகரத்தை தொடும் இடம் கடல் மல்லை தர்மராஜ ரதம் மேல் தல புடைப்புச் சிற்பங்கள். சோழர் செப்புத் திருமேனி என்றால் அது உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அதுவும் அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் வார்க்கப்பட்ட சிலைகளே.

தர்மராஜ ரதம் மேல் தளம் ஒரு அதிசயம். ஒரே பாறையில் மேலிருந்து கீழே குடைந்து, அதில் இப்படி ஒரு அற்புத கலை நயத்தோடு , சிறிதளவும் பிழை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் , ஆகமங்கள் முறையே தங்கள் சட்டங்களை விதிக்கும் முன்னரே, தங்கள் செழிப்பான சிந்தனையை மட்டுமே மூல தனமாக வைத்து இப்படி அற்புத சிற்பங்களை செதுக்கிய இவர்களை என்னவென்று புகழ்வது. கடினமான கருங்கல்லில் உயிர் ஓட்டம் ததும்பும் இந்த சிற்பங்களை அழகு பட வடித்த இவர்கள் மனிதர்களா என்றே சந்தேகம் வரும்.

அந்த மேல் தடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்க்ளில் ஒரு அற்புத வடிவத்தை இன்று நாம் நண்பர் அசோக் உதவியோடு பார்க்கிறோம். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை – மேல் தடம் செல்வதே கடினம் – பலரிடம் அனுமதி பெற வேண்டும். நெரிசலான பாதை, சுவருக்கும் சிற்பத்திற்கும் இடைவெளி மிகவும் குறைவு , இதனால் புகை படம் எடுப்பது மிகவும் கடினம், அதுவும் ஒரே படத்தில் முழு உருவை பிடிப்பது அதைவிட கடினம். நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றை ஒன்று சேர்த்து அவரால் இதை செய்ய முடிந்தது. படம் பிடிக்க நாம் படும் பாட்டை பார்க்கும்போது, இதே இடத்தில தனது கற்பனை உருவை கல்லில் கொண்டு வந்த சிற்பியின் வேலைக்கு மீண்டும் தலை வணங்க வேண்டும்.பல்லவ ரிஷபாந்தகர்

இந்த சிற்பத்தின் தனித்தன்மை அதன் தலை / சிகை அலங்காரம். தலை பாட்டை மற்றும் சடை முடியை சுற்றிக் கட்டிய கொண்டை, இதுவரை நாம் வேறு எங்கும் பார்க்காதது. இதன் பிறகும் பல்லவர் படைப்புகளில் , ஏன் மல்லையிலே கூட நாம் இந்த மாதிரி மற்றொன்றை பார்க்க முடியாது – அர்ஜுன ரத சிற்பத்தை பாருங்கள்
(
அர்ஜுன ரதம் ).

இந்த சிற்பத்தில் ஒரு தனி நளினம், சிற்பம் முழுவதிலும் ஒரு உயிரோட்டம் , வளைந்து செல்லும் அருவியின் நெளிவு சுளிவு , ரத்தம் சதை கொண்டு தோல் போர்த்திய கை கால் என சொல்லிக்கொண்டே போகலாம்.

த்ரிபங்கத்தில் ஒய்யாரமாக நிற்கும் சிவன், லாவகமாக வலது கையை நந்தியின் மேல் வைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து , இடுப்பை மறுபக்கம் மடக்கி, ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டு நிற்கும் காட்சி …அப்பப்பா பிரமாதம்.

இந்த சிலைக்கு எதிர்த்து நின்று ஈடு கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கடினம் தான். அதனால் சோழர் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்த ஒன்றை போட்டிக்குள் கொண்டு வருவோம். அதிஷ்ட வசமாக கோவையில் செம்மொழி மாநாடு அரங்கில் வழி தவறி, அங்கே அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு வேலைகள் கடந்துக் கொண்டிரந்த அருங்காட்சியக மையத்தினுள் தற்செயலாக சென்றதால் இந்த அற்புத சிலையை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,. கூடவே இன்னும் ஒரு பெரும் பாக்கியம் ( படங்களை கூர்ந்து பார்த்தல் அது என்ன என்று விளங்கும் ) . இந்த சிலை, தஞ்சை கலை அரங்கத்தில் இருக்கும் ,மாநாட்டிருக்கு என்று பிரத்தேயகமாக கொண்டு வரப்பட்டது. செப்புத்திருமேனிகள் வடிப்பது சுலபம் இல்லை, நாம் முன்னரே பார்த்தவாறு, அச்சை உடைத்து சிலையை வெளிகொணர்வதால் ஒவ்வொரு முறையும் அச்சு புதிதாக செய்யப்பட வேண்டும். அதுவும் அச் சிலையை வார்த்த பின்னர், அதாவது அனைத்து சிறு குறிப்புகளும் முதலில் செய்யும் மெழுகு சிலையிலே செய்து விட்டு, மெழுகில் வடித்த பிரதிமத்தின் மேல் மண் பூசி சுட்டு ஆற்றிய பின், அதனுள் உலோகத்தை ஊற்றி சிலை வார்த்த பிறகு, அதன் மேல் உளி படாமல் ( செப்பனிடாமல் அதாவது மேலும் செதுக்காமல் ) எடுக்கும் கைத்திறன் படைத்த மகா கலைஞர்கள் இருந்த காலம் அது, இப்படி அவர்கள் புகழ் படும் கைத்திறன், கலை நயம் பல்லவர் காலம் முதலே தென்னகத்தில் இருந்தாலும், உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அவர்களது காலத்தில் , குறிப்பாக 1000 முதல் 1014 வரை வார்க்கப்பட்ட சிலைகள் மிகவும் பிரசித்தி. அந்த காலத்தை சார்ந்த கல்யாணசுந்தரர் ( நாம் முன்னரே பார்த்த உன் கரம் பிடிக்கிறேன்), இன்று நாம் போட்டியில் வைக்கும் ரிஷபாந்தக முர்த்தி, பிக்ஷாடனர் மற்றும் வீனாதாரர் ( விரைவில் அவற்றையும் பார்ப்போம் ) மிகவும் அழகு.

செப்புத் திருமேனிகளின் காலத்தை நிர்ணயம் செய்வது சற்று கடினம் தான், எனினும் இன்று நாம் காணும் சிலை ஒரு அபூர்வ சிலை. தன பிறப்புச் சான்றிதழை கல்வெட்டாக கொண்ட சிலை. மண்ணில் புதையுண்டு 1950ஆம் ஆண்டு திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை பற்றிய கல்வெட்டுக் குறிப்பு – அதன் இருப்பிடமான ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வர (திருவெண்காடு என்பதின் வடமொழிப்பெயர்) ஆலயத்தின் சுவரில் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவரின் 26th இருபத்தி ஆறாம் ஆட்சி ஆண்டில் ( 1011 CE) , கோலக்கவன் என்ற ஒருவர் ( ( AR 456 of 1918 – குறிப்பு இண்டம் பெரும் நூல் South Indian Shrines – Illustrated By P. V. Jagadisa Ayyar ) பொன்னும், நகைகளும் அங்கே எடுப்பித்த சிவ ரிஷபாந்தகர் சிலைக்கு அளித்ததாக உள்ளது ( இதற்கு அடுத்த ஆண்டு கல்வெட்டுக் குறிப்பு இந்த சிவனுக்கு அம்மை சிலை செய்து வாய்த்த குறிப்பை தருகிறது )

முதல் பார்வையிலேயே பல்லவர் சிலைக்கும் சோழர் சிற்பத்திற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. இந்த இயங்கும் படத்தை சொடுக்கி பாருங்கள்.

இரு வடிவங்களையும் சற்று ஒப்பு நோக்குங்கள். நந்தி சிற்பம் என்ன ஆனதென்று தெரியவில்லை. சோழ கலைஞன் கூடுதலான இரு கைகளை நீக்கி விட்டு, இது சிலை என்பதனால் சற்றே கைகளை சற்று இறக்கி, அதற்க்கேற்ப த்ரிபங்க வளைவை ஏற்படுத்தி, தலையையும் சற்றே நேர் படுத்தி எழில் மிக்க ஒரு படைப்பை உருவாக்கி உள்ளான்.

இது சரியான போட்டி அல்ல, ஏனெனில் சோழ சிற்பி அச்சுக்கு மண்ணை பிசைவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பல்லவ சிற்பி கருங்கல்லில், அதுவும் ஒரே கல் ரதத்தின் மேல் தலத்தில், தனது சிந்தனையை மட்டுமே கொண்டு பிழை என்றே சொல்லுக்கே இடம் இல்லாத இடத்தில மகத்தான சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஆனால் சோழ சிற்பியும் லேசுப் பட்டவன் அல்ல, புடைப்புச் சிற்பம் ஒன்றை மனதில் கொண்டு, அதை அப்படியே முப்பரிமாண சிலையாக வடிப்பது எளிதான காரியம் அல்ல.


சரி, இந்த பல்லவர் சிற்பத்தை பார்த்து விட்டுதான் சோழர் சிற்பி வேலை செய்தான என்பதற்கு என்னஆதாரம் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். இதற்கு விடை இரு சிற்பங்களிலும் உள்ள உருவ ஒற்றுமை, இதற்கு முன்னர் வந்த சோழ கல் மற்றும் உலோக சிற்பங்களில் இந்த பாணியில் சிலை / சிற்பம் இல்லை. இன்னும் ஒரு முக்கிய குறிப்பும் உள்ளது. மீண்டும் ஒரு கல்வெட்டை நாடுவோம். மல்லை சுற்று வட்டாரத்தில் சோழ கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் கல்வெட்டும் உள்ளது. கடற்கரை கோயிலில் ..மாமல்லபுரம் கடற்கரை கோயில் கல்வெட்டு AR40

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/mamallapuram.html

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் ஆட்சி யாண்டு 25th இருபத்தி ஐந்தாம் ஆண்டு ( 1010 CE) கல்வெட்டு அது., அதாவது திருவெண்காடு சிலை வைப்பதற்கு சரியாக ஒரு ஆண்டிற்கு முன்னர் .

சோழ மன்னர்களின் வெங்கலச் சிற்பங்கள் – ஆய்வுத் தகவல்களின் தொகுப்பு

கை உடைய மொழி பெயர்த்த சதீஷுக்கு முதல் நன்றி

தஞ்சை பெரிய கோவிலின் 1000-மாவது ஆண்டை முன்னிட்டு அன்றாட செய்திகளில் தஞ்சை சமீபகாலமாக தொடர்ந்து இடம் பெறுவது நாம் யாவரும் அறிந்ததே. அதே நேரத்தில் சரபாய் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வெங்கலச் சிலையையும் தஞ்சைக்கே மீட்டு வரவேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன என்பதையும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே செய்யப் பட்டுள்ள ஆய்வுகளை படிக்க முயல்கையில் பல்வேறு செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டி, வெங்கலச் சிலைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

கிடைத்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன: சற்றே நீளமான பதிவுதான் ஆனால் நிச்சயம் சுவையாக இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

( புகைப்படத்திற்கு நன்றி: திரு. குடவோயில் பாலசுப்ரமணியம் அவர்களின் நூலான இராஜராஜேச்சுவரத்தின் பின் அட்டைப்படம்)
இது ராஜராஜசோழரா என்று அறிந்து கொள்ள வேண்டுமா? 1014-ஆம் ஆண்டு தஞ்சை ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_36_to_40_on_1st_niche_west_enclosure_1st_2nd_inscription.html

எண். 38. மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடத்தின் மூன்றாவது கல்வெட்டு:
ஏழு உருவங்களைப் பற்றி விளக்கும் இந்தக் கல்வெட்டு இராஜராஜத் தேவரின் 29ஆம் ஆண்டுக்கு முன்னர் இராஜராஜேச்சுவர் ஆலயத்தின் நிர்வாகியால் வெட்டப்பட்டது, இவரைப் பற்றிய தகவல்களும், அவரால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை (பத்தி 23 – 50) மற்றும் இரண்டு நகரத்தை சார்ந்த மக்களின் நன்கொடைகளைப் பற்றிய தகவல்களும் (பத்தி 51 & 59) கல்வெட்டு எண் 26-ல் காணக்கிடைக்கின்றன. இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உருவங்கள்: நம்பி ஆரூரனார் (பத்தி 2, 23, 55, 59), நங்கைப் பரவையார் (5, 25, 57, 66), திருநாவுக்கரையர் (8, 29, 53), திருஞானசம்பந்தடிகள் (11, 36, 51), பெரிய பெருமாள்(14, 44), அவரது துணைவியார் ஓலோகமாதேவி (17, 47), சந்திரசேகரர்[7] (20). இதில் பெரிய பெருமாள் மற்றும் அவரது துணைவியார் ஓலோகமாதேவி உருவங்கள் இராஜராஜ சோழ மன்னரும் அவரது துணைவியாரும் ஆலயத்தைக் கட்ட அருள் செய்த சிவபெருமானான சந்திரசேகரரை வணங்குவதைப் போல் இருக்கின்றது என்பது கருத்து.
மொழிபெயர்ப்பு:
1. ஸ்வஸ்திஸ்ரீ! இராஜராஜத்தேவரின் ஆண்டு 29 – ல் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆலய நிர்வாகியுமான ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்தவேளனால் ஸ்ரீஇராஜராஜேச்சுவரர் ஆலயத்தில் பின்வரும் தாமிர சிற்பங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகளின் அளவுகள் ஆலயத்தின் முழத்திலும், ஆபரணங்கள் தக்ஷின மேரு விடங்கன் அளவையிலும், தங்கம் ஆடவல்லான் அளவையிலும் அளந்து ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன என்பது கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது: –
…………………
14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.
15. ஐந்து விரல் இரண்டு தோரை அளவு கொண்ட ஒரு தாமரைப் பீடம்.
16. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
17. இரண்டு திருக்கரங்கள் கொண்ட ஓலோகமாதேவியாரின் செப்புத் திருமேனி ஒன்று, இருபத்திரண்டு விரல் இரண்டு தோரை உயரம் கொண்டது.
18. ஐந்து விரல் உயரம் கொண்ட தாமரைப் பீடம் ஒன்று (மேற்சொன்ன சிற்பத்திற்கு)
19. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
20. நான்கு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் தேவாரத் தேவரான சந்திரசேகரதேவரின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஐந்து விரல் மற்றும் இரண்டு தோரை உயரம் கொண்டது.
21. செப்பு பீடம் ஒன்று இரண்டு விரல் நான்கு தோரை சதுரம் மற்றும் ஒரு விரல் உயரம் கொண்டது. இதோடு இணைந்த தாமரைப் பீடம் ஒன்று ஒன்றரை விரல் உயரம் கொண்டது.
22. இருபத்தியொரு விரல் சுற்றளவு கொண்ட சிலையின் செப்புத் தோரணக்கால் ஒன்று.>>>>>>>>

நம்முடைய கவனம் இப்பொழுது பதிந்திருப்பது மேற்குறிப்பிட்ட அளவுகளில்: அதுவும் ஒரு முழம், நான்கரை விரல் அளவில். ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ. ஆனால், இந்த அளவைகள் இடத்திற்கு இடம், ஆலயத்திற்கு ஆலயம் வேறுபடும், ஒரே அளவு அல்ல! சில காலத்திற்கு முன் ஒரு ஸ்தபதியிடம் இருந்து தெரிந்து கொண்டது: அளவைகள் ஒரு இடத்தில் விளையும் நெல் மணிகளின் அளவை வைத்துக் கூட தேர்வு செய்யப்படுமாம்! அதோடு மட்டுமல்ல ஆட்சியாளர், அவரது பிறப்பு மற்றும் பல காரணிகள் முன்னிட்டும் கூட இந்த அளைவைகள் வேறுபடுமாம். அப்படி தேர்வு செய்யப்பட்ட அளவுகளைக் கொண்டே ஒரு இடத்தின் ஆலயங்கள், ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மற்ற சிற்பங்கள் முடிவுசெய்யப்படும். இது மனிதனின் மரபணுவைப் போன்றது. ஆய்வாளர்கள் நிச்சயம் தஞ்சைப் பெரியக்கோவிலின் மூல அளவையை கண்டுபிடித்தால் இந்த முழச் சிக்கல் சுலபமாக தீர்ந்து விடும்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து ரூ-386 க்கு வாங்கப்பட்ட ,Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலை வைத்துத்தான் நாம் வெங்கலச்சிலைகளைப் பற்றிய தேடலை மேலும் தொடரப்போகிறோம்.

படத்தில் தோன்றுவதை விடப் பெரியது இந்த நூல், கொடுக்கும் பணத்திற்கு மேல் கிடைக்கும் விருந்து.

சற்றே கருமையாகத் தோன்றும் பக்கங்கள் முழுதும் வெங்கலச் சிலைகளின் விளக்கங்கள், வெள்ளை நிறப் பக்கங்கள் முழுவதும் படத்தொகுப்பு. ஒவ்வொரு பக்கமும் சுவாரசியம் நிறைந்தது. சரி சரி நாம் தேடும் திருமேனி இருக்கிறதா இல்லையா என்று கேட்பது புரிகிறது! நாம் தேடும் சிற்பமும் இங்கிருக்கிறது. இதோ…

இந்தச் சிலை பற்றி கூறப்பட்டுள்ள விபரங்கள் (மொழிபெயர்ப்பு):

சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது – மகுடமும், சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சையும் நல்ல வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை மட்டுமின்றி தோளணிகள், கழுத்தணிகள் உட்பட ஏனைய ஆபரணங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. நேர்த்தியாகவும் துல்லியமான வடிவமைப்பையும் உடைய முகம் சதுரமாகத் தெரிகிறது. உருவத்திற்கு பொருத்தமான அடக்கத்தைக் காட்டும் அபிநயம். வழக்கமான வளையம் போன்ற கழுத்தணி காணப்படவில்லை ஆனால் பொருத்தமான இரண்டு கழுத்தணிகள். மென்மையான சன்னவீரம் (வெற்றி மாலை) அந்தக் காலக்கட்ட ஸ்தபதிகளின் பாணியில் உள்ளது.


உடலமைப்பு என்னவோ சற்று பொருத்தமாக இல்லை. மார்பகத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் கைகள் வீரத்தைக் காட்டுவனவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீட்டிக் கொண்டிருக்கும் மார்புக் காம்புகளும், கையணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கையணிகளில் மணிகள் பொருத்தப்பட்டு தனித்துவமாகத் தெரிகின்றன. இது போன்ற வெங்கலச் சிலைகள் இந்தக் காலக்கட்டத்தில் காண்பது அரிது. அதுமட்டுமல்ல இந்த சிலையில் உள்ள வடிவமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகவும் இதற்கு பிற்காலச் சிற்பங்களில் கூட காணக் கிடைக்காததாகவும் தோன்றுகிறது. தோள்பட்டையின் மேல் இருக்கும் அணிகள் பக்கவாட்டில் மட்டும் இருப்பது மிகவும் சுவாரசியம். அதோடு மட்டுமல்லாமல் கைகளுக்கு இடையே மலர் போன்ற ஒன்றை வடிவமைத்திருப்பது மிகுந்த கலைத்திறனைக் காட்டுகிறது.

சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சைகளின் வடிவமைப்பு மிகவும் அபாரம்! அதில் இருந்து தொங்கும் தோரணங்களும், குஞ்சங்களும் கலை நேர்த்தியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கீழாடையின் (கோவணம் போன்ற) (கரை)ஓரங்களின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இடுப்புக் கச்சையின் வடிவமைப்பு மிகவும் நவீனமாகத் தெரிகிறது. கால்களின் வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இல்லை, முட்டிகள் மட்டுமல்ல கால் தசைகளின் வரியமைப்புகளும் இயற்கையாக இல்லை. பாதசாரங்கள் (கொலுசு) இல்லாமல் இடக்காலில் மட்டும் காணப்படும் கழல் (சிலம்பு போன்ற ஒன்று) முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற கழல்கள் கொண்ட சிற்பங்கள் சிதம்பர ஆலயத்தில் மேற்குப்புற மற்றும் கிழக்கு கோபுரத்திலும் காணப்படுகிறது. வேறு வகையான கழல்கள் சுந்தரபெருமாள் கோவில் சிற்பங்களிலும், கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்களிலும் காணப்படுகிறது. ஆனால் பிந்தைய காலச் சிற்பங்களில் இது போன்ற கழல்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி பிற்காலச் சிற்பங்களில் இரண்டு கால்களிலும் கழல்கள் காணப்படுகின்றன, ஒரு காலக் கட்டத்தில் இவையில்லாத சிற்பங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

தாமரைப்பீடம் எளிமையானதாகவும், நுண்ணிய வேலைப்பாடமைந்த தாகவும் இருக்கிறது. இதழ்கள் மிகப் பெரியதாகவும், அதனுடைய வரிகள் மங்கலானதாகவும், இதழ் நுனிகள் தெளிவின்றியும் தெரிகிறது. மொத்தமாகப் பார்த்தால் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்த சிற்பமிது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தச் சிற்பம் பனிரெண்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது, நிச்சயமாக பதிமூன்றாம் நூற்றாண்டும் அல்ல (JISOA Vol VI P22) 12 -13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தும் அல்ல (The Art of India and Pakisthan,p 74).

ஒவ்வொரு ஆய்வாளரும் வடிவமைப்பைக் கொண்டு கணக்கிடும் காலம் வேறு வேறாக இருந்தாலும், சிலை தனியே, பீடம் தனியே, தாமரைப் பீடம் தனியே சொல்லும் அளவுகள் மாறாது. தற்சமயம் கேள்விக்குறியாக இருப்பது கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் முழ, விரல் அளவைகளை எவ்வாறு இன்றைய கால அளவுகளில் மாற்றூவது என்பதுதான்! இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் 74 செ.மீ. அளவு சிலையின் அளவு மட்டுமா அல்லது பீடத்தையும் சேர்த்தா? யாராவது சரபாய் அருங்காட்சியத்திற்கு சென்று அளந்து சொன்னால்தான் உண்டு!.

பார்க்கப் போனால் மேற்சொன்னத் தகவல்களோடு இந்தப் பதிவினை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவன் திருவருள் என்னவோ, திருமதி. லிஸ்பெத் பங்கஜ பென்னிக் அவர்களோடு உரையாடிய போது கிடைத்த திருவிசலூரின் அதி அற்புதமான சிற்பம் மேலும் தொடரவைக்கிறது நம்மை. இவர்தான் காலஞ்சென்ற திரு. இராஜா தீக்ஷிதரின் பதிவுகளை நிர்வகிக்கிறார், அதிலிருந்து கிடைத்த செல்வம் இது.
1930 –ல் திரு. T.G. ஆராவமுதன் எழுதிய தென்னிந்திய சிற்பங்கள்
South Indian Portraits – தென்னிந்திய சிற்பங்கள் ) எனும் கட்டுரையில் இருந்து:

South Indian Portraits

மிகவும் சுவாரசியமான சிற்பம் ஒன்று அந்தக் கட்டுரையில் கிடைத்தது, அதுவும் அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலிலேயே இருந்த ஒன்று. பார்த்தவுடனேயே அறிந்துகொள்வீர்கள் இது முற்றிலும் புதிதான சிற்பம் என்று, அதோடு மட்டுமின்றி இதைப் பற்றி எந்த ஒருக் கட்டுரையிலோ அல்லது எந்த ஒரு அருங்காட்சியகத்திலோ பார்க்காத ஒன்று என்றும் அறிந்து கொள்வீர்கள். காலில் அணிந்திருக்கும் கழல்களை பார்க்கும் அளவுக்கு படம் தெளிவாக இல்லை ஆனால் இரண்டு கால்களிலும் கழல்கள் இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் இரசிகர்கள் யாரேனும் பார்த்திருந்தால் அல்லது பார்த்தால் நமக்கும் தெளிவு படுத்தலாம். (மேலும் ஒரு வெங்கலச் சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது, அதனை இதற்குப் பின் காண்போம்)

(மொழி பெயர்ப்பு)
தஞ்சைப் ப்ரகதீஷ்வரர் ஆலயத்தைக் கட்டிய மாமன்னன் முதலாம் இராஜராஜனின் கடைசிக் காலக் கட்டத்தில் (985-1013 கி.பி.) ஆலயத்தின் 37ஆவது நிர்வாகி இராஜராஜருக்கும் அவரது அரசியார் ஓலோகமாதேவியாருக்கும் பல்வேறு படையெடுப்புகளின் செல்வங்களை நிவந்தனமாக விடப்பட்ட ஆலயத்தினுள் சிலைகள் எடுப்பித்ததாக தெரிகிறது. இதைக் குறிக்கும் கல்வெட்டில் உள்ள செய்தியை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. கல்வெட்டில், இரண்டு திருமேனிகள் அதில் மன்னனின் சிலை ஒரு முழம் நான்கரை விரல்கள் முடி முதல் அடிவரை, அரசியின் சிலை இருபத்திரண்டு விரல்கள் இரண்டு தோரை உயரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையணிகள் மற்றும் காதணிகள் ஆகியவை சிற்பங்களின் ஆபரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி தூங்காவிளக்கு கடவுளைப் போன்றே மன்னனின் சிலைக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆலயத்தில் இருக்கும் எந்த ஒரு சிலையும் அரசியின் சிலை போன்று இல்லை, அந்தச் சிலை எங்கோ மாயமாக மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. . மன்னவனின் சிற்பம் போன்றதொன்று ஆலயத்தில் இருக்கிறது ஆனால் அது கல்வெட்டோடு ஒப்பிடும் பொழுது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சிலையைப் பற்றி அறிந்த தகவல்கள் இதோ. ப்ரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்பத்தில் உள்ள பெயர் “இராஜராஜேந்திர சோழா, பெரிய கோவிலின் ராஜா” என்று பீடத்தில் பிற்கால எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னவன் கூப்பியக் கரங்களுடன் வணங்கும் கோலத்தில் இருக்கிறார். கலை வேலைப்பாடை பார்த்தால் திருமலையில் உள்ள கிருஷ்ண தேவராயரின் சிலையை விட தாழ்ந்ததாகத்தான் தெரிகிறது. உற்சவத்தின் பொழுது சிலைகளை எடுத்துச் செல்லும் பொழுது இந்த சிலைக்கு மரியாதைக் கொடுத்து எடுத்துச் செல்வதாகவும், இந்தச் சிலை உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலம் செல்வதாகவும் தெரிகிறது. சிலையில் உள்ள பெயரைப் பார்த்தால் ஆலயத்தை நிர்மாணித்தவரும் அதன் நலத்தில் அக்கறைக் கொண்டவருமான முதலாம இராஜராஜரைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது. உற்சவத்தின் போது நடைபெறும் முறைகளைப் பார்த்தால் இந்தச் சிலை பிற்காலத்தில் மன்னவனின் நினைவாக உருவாக்கப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். முதல் பார்வையிலேயே தெரிந்து விடும் இந்தச் சிலை இராஜராஜரால் ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட மற்ற சிலைகளைக் காட்டிலும் தரத்தில் குறைவு என்று, அதிலும் இதன் வார்ப்பு முறை தெள்ளத் தெளிவாக இதன் மங்கிய தரத்தைக் காட்டுகிறது. வார்த்தைகளின்றிப் பேசும் மற்ற சிற்பங்களைக் காணும்பொழுது இது ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் தோற்றமளிக்கிறது. மேலும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகள் நிச்சயமாய் இந்த இராஜராஜச் சிற்பத்துடன் பொருந்தவில்லை. பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகத் தெரிகின்றன, எதுவாகினும் இது இராஜராஜன் காலத்தியது அல்ல. எல்லாவற்றிலும் இருந்து, இராஜராஜரின் விருப்பத்திற்கிணங்க ஆலயத்தின் நிர்வாகி இரண்டு சிலைகளை விழாக் காலங்களில் உற்சவ மூர்த்திகளோடு ஊர்வலம் எடுத்துச் செல்ல நிர்மாணித்திருப்பார் என்பது ஊகம். ஒருவேலை, அந்தச் சிலைகள் காணாமல் போய்விட்ட பின் இந்தச் சிலைகளை உருவாக்கியிருக்கலாம், அந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பகுதியினரிடையே இந்தக் கலையின் வளர்ச்சி தேய்ந்திருக்கலாம். ஒருவேளை அந்த உண்மைச் சிற்பங்கள் இருந்திருந்தால் அதனுடைய தனித்தன்மையான கலை நமக்குத் தெரிந்திருக்கக் கூடும், அதன் காலத்தினால் மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த வெங்கலச் சிற்பங்கள் தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த கலை நுட்பத்தில் உருவாக்கப் பட்டன என்பதாலும்!


இந்த வெங்கலச் சிற்பங்கள் இப்பொழுது எங்கே?

இந்தச் சிற்பத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, சதீஷ்-ன் தஞ்சை அருங்காட்சியகத்தின் புகப்படத் தொகுப்பில் கிடைத்த வெங்கலச் சிற்பம் இது!

காலில் அணிந்திருக்கும் வீரக்கழலை வைத்து இது நிச்சயம் ஒரு மன்னராகத்தான் இருக்கக் கூடும் என்று அறிகின்றோம்.

உடலமைப்பில் நேர்த்தி இருந்தாலும் முக வடிவமைப்பு தேர்ச்சி பெறவில்லை. மணிமுடியின் வடிவமைப்பு இதனை பிற்காலச் சிற்பங்களோடு ஒப்பிடுகிறது. இந்தச் சிலைக்கான பெயர் பலகை அப்பொழுது வைக்கப்படவில்லை, இப்பொழுது இருக்கின்றதா என இதைப் படிக்கும் யாரேனும் பார்த்துக் கூறினால் நன்றுசரி, யார் இந்த ராஜரீக உருவம்?

இதுவரை இந்தப் பதிவை ஆழ்ந்து படித்தவரால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் பார்த்தமாத்திரத்தில், இதுவரை பார்த்த சிலைகளின் பொதுவானதொரு அமைப்பு கூப்பிய கைகள் என்று! ஆனால் ஒரு வேறுபாடு, முதல் சிற்பத்தில் இரண்டு கைகளுக்கிடையே ஒரு மலர் இருந்தது. இது எதைக் குறிக்கின்றது? திரு. P.R ஸ்ரீனிவாசன் அவர்கள் நூலிலிருந்து வெங்கலச் சிற்பங்களுக்கான சில விளக்கங்களைப் பார்ப்போம்.

இதே பாணியில் 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த சண்டிகேஸ்வர சிற்பங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஈடன் கல்லூரியில் (புத்தகத்தில் உள்ளது) உள்ள கீழுள்ள சிற்பத்தைப் பார்ப்போம்

மேலும் ஒரு தலைசிறந்த படைப்பான பொல்லுனுவாரா (இலங்கை) சண்டிகேஸ்வர சிற்பமும் இதே 12-ஆம் நூற்றாண்டை சார்ந்ததுதான்.

உருவமைப்பு, கூப்பிய கைகள் மற்றும் அதற்கிடையே மலர்கள் ஆகியவை பொதுவாக இருந்தாலும், காலில் கழல்கள் காணப்படவில்லை.

மேலும் ஒரு சுவாரசியமான சிற்பம், தென் ஆற்காடு மாவட்டம் கடலூர் கந்தரக்கோட்டையைச் சார்ந்த மன்னரின் உருவம், அதே நூலில் இருந்து.

இதன் காலம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. வளர்புரத்தின் ராமரை ஒத்த மணிமகுடம், கழுத்தணிகள் மற்றும் கையணிகள் இந்தக் காலக்கட்ட சிற்பங்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இடுப்புக் கச்சை நெருக்கமான மடிப்புகளுடன், தெளிவான ஓரங்களுடனும் வடிக்கப்பட்டுள்ளன. உத்தரீயம் முன்புறம் அழகான முடிச்சுடனும், தொங்கணிகளுடனும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு முன் பார்த்த சிற்பங்களில் இல்லாதவாறு அஞ்சலி செலுத்தும் கைகளுக்கிடையே உள்ள மணி மாலை மிகவும் கவனிக்கத்தக்கது. முழங்கைக்குப் பின் வளைந்த கைகளும், நல்ல மொத்தமான கழலும் இந்த சிற்பத்தின் பாணி தனித்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. முதலாம் இராஜேந்திரர் காலத்தின் பெரும்பாலான சிற்பங்களில் இந்த கழல் பொதுவான ஒன்றாக இருந்தது. இந்த சிற்பத்தின் உருவமைப்பு, விஷ்ணுவின் உருவத்தை ஒத்ததாக இருக்கின்றது அதோடு அழாகான இயற்கையான கால்கள் போன்ற வடிவமைப்பு கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.

ஏற்கனவே பார்த்தது போல் இந்த பத்மாசனத்திலும் இதழ்கள் தெளிவாகத் தெரிகிறது ஆனால் அதன் நுனிகளில் முக்கியத்துவம் தெரியவில்லை. இரண்டு வளையங்கள் கொண்ட சதுரமான பத்ராசனத்தின் மீது இந்த தாமரைப் பீடம் அமைந்துள்ளது.

மேற்சொன்ன தகவல்களிலிருந்து இது ஒரு சிறந்த வெங்கலச் சிற்பம் என்று அறிந்து கொள்ளலாம். திரு. T.G. ஆராவமுதன் இது ஏதேனும் ஓர் சிற்றரசராக இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஆய்வாளர்கள், இது கண்டெடுக்க்ப்பட்ட இடத்தில் உள்ள ஆலயத்தைக் கட்டிய சோழ மன்னன் மதுராந்தகனின் உருவமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இருந்தாலும் அவர்களால் இது எந்த மன்னனின் உருவம் ஒன்று நிச்சயமாக கூறமுடியவில்லை. மதுராந்தகன் என்ற பெயர் சோழர்களில் முதலாம் பராந்தகர், சுந்தர சோழன், முதலாம் இராஜேந்திரர், வீரராஜேந்திரனின் மகன் மதுராந்தகன் என பலருக்கு இருந்திருக்கிறது. இதன் கலைத்தன்மையை வைத்துப் பார்த்தால், முதல் இரண்டு மன்னர்களுடையதாய் நிச்சயம் இருக்காது. முதலாம் இராஜராஜரைப் போலவே அவரது வழிவந்தோரும் உற்சவ மூர்த்திகளுடன் செல்லவும், ஆலயத்தில் அதைக் கட்டிய மன்னன் உருவம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிலையை நிர்மாணித்திருக்கலாம். அதோடு இராஜராஜர் காலச் சிற்பத்தை விட இதில் கலை நுட்பத்தின் முன்னேற்றம் தெரிகிறது. ஆகவே இது முதலாம் இராஜேந்திரருக்காக அவரது வம்சத்தில் வந்தவர் யாரேனும் இதனை நிர்மாணித்திருக்கலாம். காலக் கணக்கின் படி, முதலாம் இராஜேந்திரரின் பாணியில் கலை வளர்ந்த காலம் 1075 (கி.பி.) வரை, தொண்டைமண்டலத்தை ஆண்டுவந்த வீரராஜேந்திரன் 1065 (கி.பி.) ஆண்டில் இதை ஆலயத்தைக் கட்டிய இராஜேந்திரரின் நினைவாக நிர்மாணித்திருக்கலாம். இதனது முடிவை தெரிந்து கொள்ளவேண்டும் எனில், இந்த சிற்பத்தையும், கிராமங்களிடம் திருப்புக் கொடுக்கப்பட்ட மற்ற சிற்பங்களையும் பற்றிய கள ஆய்வு மேற்கொண்டால்தான் முடியும்.

இந்த வெங்கலச் சிற்பத்தின் இருப்பிடமும் தெரியவில்லை!

நீளமான இந்தப் பதிவை உடைப்பதற்காண குரல் ஓங்கி ஒலிக்கிறது மனதினுள், நிறுத்துவதற்கு முன் மேலும் ஒரு அதிசுவாரசியமான சிற்பத்தை பார்த்துவிடுவோம். மேல் பார்த்த அதே நூலில் இருந்து மேலும் ஒரு சோழ மன்னன், மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம்

ஒரு அடி உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம். முன்னர் இது காளகஸ்தி சிவாலயத்தில் இருந்தது, ஆனால் தற்சமயம் ஏதோ ஒரு தனியார் வசம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை! அதிர்ஷ்டவசமாக இதன் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டாய்வாளர் திரு. G. வெண்கோப ராவ் இது 13ஆம் நூற்றாண்டை சார்ந்த எழுத்துக்கள் என்று கண்டறிந்திருக்கிறார், இதனை திரு. T.G. ஆராவமுதனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டு பாகங்களாக பொறிக்கப்பட்டுள்ள தகவலில், முதல் பாகத்தில் “குலோத்துங்க சோழ தேவர்” எனவும் இரண்டாவது பாகத்தில் “உடைய நம்பி” நிவந்தனமாக கொடுத்ததாகவும் உள்ளது. இதில் உள்ள எழுத்துக்களால் காலத்தைக் கண்டறியும் வேலை சுலபமாகிறது, அதோடு இதன் பாணியும் கலை நுட்பமும் காலத்தை கண்டறிய மிகவும் ஏதுவாக இருக்கும்.
முனைவர். சாஸ்திரி இந்த சிலையப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ” ……இந்த உருவத்தில் பல ஆபரணங்கள் உள்ளன, அதோடு இதன் முகம் இளமையும், உற்சாகமும், புத்துணர்ச்சியையும் காட்டுவதாக உள்ளது. இது மிக முக்கியமானதொரு சிலை, சோழ வம்சத்தின் கலைக்கு ஆதாரமாய் விளங்கும் வெங்கலச் சிற்பம் ஒருவேளை இது மட்டுமாகத்தான் இருக்கும்”

ஆனால் காலத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார் “…..இந்த உருவம் மன்னன் அரியணையில் ஏறும் பொழுது உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.”…..இதன் காலம் அனேகமாக 1180 ஆக இருக்கக் கூடும்,” ஒரு வேளை இது முந்தைய காலத்தைச் சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று எண்ணியவாறு அவர் இதை கூறியிருக்கலாம்!

அழகான இந்தச் சிலையின் அம்சங்கள்: முன்னால் சுருள் சுருளாகக் காணப்படும் முடி, திருஞானசம்பந்தரின் ஒத்த வடிவம், மொத்தமான கழுத்தணிகள், மணிகள் பதித்த தோளணிகள், அழகான ஆனால் அதிக நுண்ணிய வேலைப்பாடில்லாத கையணிகள், அழகான இடுப்புக் கச்சை மற்றும் சிறிய கீழாடை, மூன்று வளையங்களைக் கொண்ட கழல்கள்.

இதனுடைய பீடங்கள் அழகானதாகவும், தாமரைப் பீடம் வழக்கமான பாணியிலும் உள்ளது. மொத்தத்தில் இந்தச் சிலையின் வடிவம் அழகாய் மனதில் வடிக்கப்பட்டு, துல்லியமாய் வார்க்கப்பட்டதாய் உள்ளது. இதன் முகத்தில் உள்ள வசீகரம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், மந்திரப் புன்னகை யாவும் இதன் சிறப்பு. இதன் காலக்கட்டம் 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாக இருக்கக் கூடும்.

ஆய்வாளர்கள் நாம் படித்து தெரிந்து கொள்ள ஏராளமானவற்றை கொடுத்திருக்கின்றனர், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன ஆனால் இவையெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. என்னைப் போலவே, இந்த நீண்ட பதிவு உங்களுக்கும் சுவாரசியமாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது எங்கு உள்ளன என்ற குறிப்புகள் இல்லாத இந்த சிற்பங்களில் சிலவற்றையாவது நம்மால் மீண்டும் என்றாவது காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை தற்காலிகமாக முடித்துக் கொள்வோம்!

ராஜனுக்கு ராஜன் ராஜ ராஜன் தான் – இது அவரா ?

உலகில் பலவற்றை நாம் வென்றாலும் காலத்தை வெல்வதென்பது கடினம். அப்படி காலத்தை வென்று அழியாப் புகழ் பெறுவது என்பது அதனை விட கடினம். அப்படி காலத்தை தனது கை வண்ணத்தாலும் , செயல் வண்ணத்தாலும் , வென்று ஒவ்வொரு தமிழனையும் ஆயிரம் ஆண்டுகள் சென்றும் அவனது பெயரை கேட்டவுடன் ஒரு தனி மதிப்பை தானே பெரும் வல்லமை – நமது் ராஜ ராஜ சோழருக்கு உள்ள தனிச் சிறப்பு. ஒவ்வொரு முறை அவர் எடுப்பித்த பெரிய கற்றளியான தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை பார்க்கும் போதும், அமரர் கல்கியின் அற்புத வர்ணனையுடன் பொன்னியின் செல்வனை ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களுடன் அருண்மொழியை மனக்கண்ணில் சித்தரித்த ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் தணியா தாகம் அவரது நிஜ உருவத்தை காட்டும் ஓவியம் அல்லது சிற்பம் பார்க்கவேண்டும் என்பதே. பல முறை இந்த ஆவலை தணிக்க வந்த விடைகள் – பெரிய கோயில் ஓவியம் , சாராபாய் அருங்காட்சியகத்தில் இப்போதும் உள்ள அழகான செப்புத் திருமேனி, ஆனாலும் என்ன, தெள்ளத் தெளிவாக இதுதான் உடையார் ராஜ ராஜ சோழர் என்று சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்க முடியவில்லையே.. அப்படி இருக்கையில், ஒரு தேடலில் இந்த ஆய்வுக் கட்டுரை என் கண்ணில் பட்டது The Problem of Portraiture in South India, Circa 970-1000 A.D.,Author(s): Padma Kaimal

அதில் ஒரு சிறு குறிப்பு இருந்தது. திருவிசாலூர் ஆலயத்தில் உள்ள சிற்பம் மற்றும் அங்கே உள்ள கல்வெட்டு பற்றி . அதை பார்க்கும் முன்னர் ஒரு முறை ராஜ ராஜரின் மெய் கீர்த்தி தனை மீண்டும் ஒரு முறை கண்ணால் காண்போம்


ராஜ ராஜா சோழர் மற்றும் அவரது பட்ட மகிஷி லோகமாதேவி அவர்களின் சிற்பம் கல்வெட்டு குறிப்புடன் என்று இருந்தது

உடனே ஒருபுறம், அந்த சிற்பபத்தின் நல்ல படத்தை கண்டு பிடிக்க நண்பர்களை நாடினேன், மற்றொரு புறம் அந்த முழு கல்வெட்டின் பிரதியை தேடினேன் .

சிவயோகநாத ஆலயம் திருவிசாலூர் – கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் – உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”

கும்பகோணம் அருகில் இருக்கும் கோயில் இது, நண்பர் திரு லக்ஷ்மி நாராயணன் உடனே சென்று படம் பிடித்து தருகிறேன் என்று ஒரே வாரத்தில் படத்தை எடுத்துத் தந்தார். (நலிந்து கிடக்கும் பல கோயில்களின் படங்கள் அவரது தளத்தில் காணலாம், http://picasaweb.google.com/slnvasu)

படம், பொறுமையாக வருகிறது, அதற்கு முன்னர் சில வரிகள். திருவிசாலூர் ஆலயத்தின் காலம் முதலாம் ஆதித்யர் வரை செல்கிறது. கல்வெட்டில் கண்ட கொடை விஷயம் – ஹிரண்ய கர்ப்பம் ( பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது – இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் – பிறவா வரம் பெற செய்யும் யாகம் ) பற்றிய குறிப்புகள், ராஜ ராஜ சோழர், லோகமாதேவி அனைத்தும் இருந்தாலும் ( இந்த கல்வெட்டின் பிரதி திருவலஞ்சுழி ஆலயத்திலும் இருக்கிறது – குறிப்புக்கு நன்றி நண்பர் அர்விந்த் ). இது உடையாரின் கடைசி ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. அதாவது 29 ஆம் ஆட்சி யாண்டு ( 1014).

முழு விவரம் இங்கே

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_23/aditya_2_karikala.html
No.42 (Page No 20)
(A. R. No. 42 of. 1907)

The inscription registers an agreement given by the mahasabha of vemgarrur alias Solamattanda-chaturvedimangalam a Brahmadeya in Manni-nadu, to the temple of Tiruvisalur-Mahadeva. A sum of 458 kasu was endowment to the temple and deposited with the assembly by queen Dantisaktivitankiyar alias lokamahadeviyar on the occasion of the performance of tulabhara by the king and of hiranyagarbha by herself in the temple. As interest on this amount they undertook to measure out annually 229 kalam of paddy at the rate of 1 tuni and 1 padakku on every kasu per year, and with this paddy the ur-variyam and kudumbu committees of the year were to meet the daily requirements of akkaradalai offering to the god, of which the details are given as follows:

Items required Equivalent in paddy

Rice – 2 nali … … One kurini and 2 nali

Tupparuppu(dol)—1 nali … …. 5 nali

Cow’s milk – 4 nali …. ….. ….. 1 padakku

Ghee –1 ulakku … …. ….. 1 kuruni

Sugar – 12 ½ palam … …. …. 1 kuruni and 2 nali

Plantain fruits –20 (?) …. …. ….. 6 nali

Arecanut … 10}

Betel leaves … 40} …. ….. …. 2 nali and 1 nali

Earthen pot …. …., …. 1 nali, 1 uri and 2 ¾ sevidu

Firewood …. …. ….. 1 nali
Remuneration to person preparing the offering … 1 nali

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த சிற்பம் இதோ.

அருகில் சென்று பார்ப்போம்.

இந்த ஆலயத்தில் நிறைய சிற்பங்கள் இல்லை. இதை தவிர இன்னும் இரண்டு புடைப்புச் சிற்பம் தான். மற்றவை எல்லாம் சிலைகள். அப்படி இருக்க, இவர்கள் சாமானியர் அல்ல, பொதுவாக பெரிய கொடை அளிக்கும் முக்கியமான சிலருக்கே இந்த வகை சிற்பங்கள் நிறுவப்படும்.

நிற்கும் ஆண், வயதில் சற்று முதிர்ந்து காணப்படுகிறார். (பொதுவாக மற்ற சோழ அரச சிற்பங்கள் அரசர்களை அமர்ந்த நிலையில் தான் காட்டுகின்றன ). அருகில் இருக்கும் அம்மையார், சற்று வயதில் சிறி்யவராக இருந்தாலும் யௌவன வயது யுவதி என்று சொல்ல முடியாது. ஆண் எந்த வித ஆபரணம் அணியவில்லை – தலையில் கிரீடம் இல்லை – அணிகலன் இல்லாத வெறும் சடை குடுமி, இரு காதுகள் நீண்டு இருந்தாலும் (முன்னர் கனத்த குண்டலங்கள் அணிந்தமையால் இருக்குமோ?) இப்போது வெறுமனே உள்ளன, இடுப்பில் வெட்டி போல ஒன்று, காலில் வீரக்கழல் இல்லை. அம்மையார் இதற்கு சற்று மாறாக கழுத்தில் ஹாரம், தலையில் சுட்டி என்று சில ஆபரணங்கள் அணிந்து , நல்ல சீலை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே பக்திப் பரவசத்தில் கை கூப்பி நிற்கும் காட்சி அருமை.

இங்கே தான் நாம் சற்று யோசிக்க வேண்டும். அப்படி பெரிய கொடை கொடுக்கும் நபர், ஏன் இப்படி நகை ஒன்றுமே அணியாமல் இருக்க வேண்டும். கல்வெட்டின் படி 29 ஆம் ஆட்சி யாண்டு . உடையார் ராஜ ராஜா சோழர் சிவபாத சேகரன் என்று தன்னை அழைக்க தொடங்கி விட்டார். தீட்சை பெற்று சிவனடியார் ஆகவே மாறிவிட்டார் என்றும் ஒரு வாதம் உண்டு.

அவர்கள் பூஜிக்கும் சிவன்

சிவலிங்கம், அழகே பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. லிங்கத்தின் முன்னர் அபிஷேகம் செய்யும் சங்கு. அப்படி என்றால் இருவரும் தாங்களே அபிஷேகம் செய்து பூ அலங்காரம் செய்து வணங்கி நிற்கின்றனர் என்று கொள்ளலாம்.

இவற்றைக் கொண்டு பார்த்தால் இது மாமன்னர் ராஜ ராஜர் மற்றும் பட்டமகிஷி தந்தி சக்தி விடங்கி லோகமாதேவி என்று கருத முடிகிறது.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. பொன்னியின் செல்வனின் வந்தது போல – ராஜ ராஜரின் மைந்தன் ராஜேந்திரனின் அன்னை வனவன் மாதேவி ( வானதி ) வேறு – இந்த லோகமாதேவி வேறு. இதை கல்வெட்டுகளில் வானவன்மாதேவி திருவயிறு் உதித்த ராஜேந்திரன் என்று வருவதை கொண்டு அறியலாம்.

மேலும் ஆராய இந்த சிற்பத்தினை தீவிர ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலம்

ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடிப்பது கடினம். எனது மனைவியின் பிறந்த நாளன்று், தற்செயலாக நாங்கள் தஞ்சையில் இருந்தோம் – முதல் வேலையாக பெரிய கோயில் ( நானும் அரவிந்தும் விடியல் காலையிலேயே எழுந்து புள்ளமங்கை தனியே சென்று வந்து விட்டோம்). ஒரு போன் போட்டு குடவாயில் பாலு ஐயா இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவரோ, இதோ வருகிறேன் என்று அடுத்த நிமிடம் பெரிய கோயிலுக்கு வந்தது மட்டும் அல்லாமால், வாங்க.. நானே சுற்றிக் காட்டுகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். கரும்பு கடிக்க கூலி தேவையா. வாருங்கள் ஒரு கரும்பை, சாறு பிழிந்து உங்களுடன் பகிர்கின்றேன். சிறிய புடைப்புச் சிற்பம் தான், எனினும் சோழ சிற்பியின் கைவண்ணம் குடவாயில் பாலு அவர்கள் சொல்வண்ணம் இரண்டும் சேர்ந்தால். ..

நாம் முன்னரே பெரிய கோயிலில் உள்ள தக்ஷன் தலையை கொய்தது மற்றும் காமனை எரிக்கும் படலங்களின் சிற்பங்களை பார்த்து விட்டோம்

தக்ஷன் தலையை கொய்த ஈசன் –

காமனை எரிக்கும் ஈசன்

இன்று நாம் பார்க்கும் காட்சி, அவற்றை அடுத்து வருபவை. மகேசன் மீண்டும் குடும்பஸ்தானாக ஆக சம்மதிக்க வைத்துவிட்டனர். தாக்ஷாயினி மீண்டும் உமையாக, பர்வத ராஜன் ஹிமவானின் குமாரியாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈசனே தன் கணவனாக வருவதற்கு தவமும் செய்யத் தொடங்கிவிட்டாள்.கந்தபுராணத்தில் இந்த காட்சியின் ஒரு வர்ணனை உண்டு ( சிற்பம் காலத்தால் அந்த காவியத்திற்கு முற்ப்பட்டது ).

கதை மிகவும் சுவாரசியம். பர்வத ராஜன் ஈசன் தூது அனுப்பிய ஏழு முனிவர்களின் பேச்சை ஏற்று தனது மகளை மகேசனுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான். ஈசன் தனது திருமணத்திற்கு கிளம்பி வருகிறார். அப்போது ஹிமவானின் மனைவி, ராணி மேனை , ஒரு அம்மாவுக்கே உண்டான ஆர்வத்துடன் தன மருமகனைக் காண விரைந்து செல்கிறாள். தன அருமை மகள் கரம் பிடிப்பவன் என்ன வதன சௌந்தர்யம் பொருந்தியவனாக இருப்பன் என்று பார்க்க அவளுக்கு ஆவல்.

ஈசன் எப்படி வருகிறார் – அவர் தான் திருவிளையாடல் நாயகன் ஆயிற்றே. இன்றும் ஜானவாசம் எப்படி எல்லாம் நாம் கொண்டாடுகிறோம் . என்ன தோரணை, பள பளக்கும் பட்டாடை, உடலெங்கும் தொங்கும் தங்க ஆபரணங்கள் , சிகை அலங்காரம் என்ன நகை அலங்காரம் என்ன, குதிரை மேலே மாப்பிள்ளை வர, ஆட்டம் பாட்டம் என்று கூட வரும் கோஷ்டி அடிக்கும் லூட்டி வேறு.

இதை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேனைக்கு அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி.

பூத கணங்கள் சூழ்ந்து , ரிஷப வாஹனத்தில், அண்ணல் யானை தோல் உடுத்தி, நாக ஆபரணம் பூண்டு, பரதேசி போல வரும் கோலம். அதுவும் நமக்காக திரும்பி படம் பிடிக்க போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

வரவேற்க வந்த மேனைக்கும் அவள் தோழிகளுக்கும் தூக்கி வாரி போட்டது. உடனே சென்று தன கணவரிடம் முறையிட்டாள்.

ஏற்கனவே சிவன் மகா கோபக்காரன். பிரமன் தலையை. தட்சன் தலையைக் கொய்தவர். இப்படிப்பட்டவர் எப்படி வருகிறார் பாருங்கள்.. இவருக்கா நம் மகளைத் தருவது?என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0239.html

மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.

அருகில் இருக்கும் பிரம்மன், விஷ்ணு, நாரதர் எடுத்துரைக்க – நடந்தது தக்ஷன் செய்த குற்றத்தின் வினைப்பயன். அதையும் மன்னித்து மகேசன் அவனை உயிர்ப்பித்து ( ஆட்டு தலையு்டன் ) விட்ட கதையை கூறி, உன் மகளுக்கு இவரே ஏற்ற கணவர் என்றும், ஏற்கனவே உள்ளதை கவர்ந்துவிட்டார் என்றும் கூறி சமாளித்து விட்டனர்.

முடிவில் திருமணம் சிறப்பாக நடை பெற்று அனைவரும் நலாமாக கிளை திரும்பினர். அடுத்து குமார சம்பவம் தான். …

குடவாயில் ஐயாவுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி எனினும் அவர் இந்த சிற்ப்பத்தை தனது நூலில் வேறு விதமாக விவரித்துள்ளார் . அதையும் விரைவில் பார்ப்போம்.

கம்பனுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராமாயணம்

கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு முன்னரே தமிழகத்தில் ராமாயணம் பரவலாக இருந்ததா ? கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். வால்மீகியின் ராமாயணம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் தமிழில் முழுவதும் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அதற்கு சிற்பத்தில் வர்ணனை உண்டோ ? இந்தக் கேள்விகளை தான் நாம் இந்த பதிவில் அலசப் போகிறோம்.

கவிச்சக்ரவர்தியின் காலத்தை பற்றி மொழி ஆர்வலர்களும், சரித்திரி ஆர்வலர்களும் பல காலமாக விவாதித்து வருகின்றனர். கம்பர், இந்தப் புனிதப் பணியை பாரம்பரியத்துக்கு எதிராக, தனது வரிகளில் எந்த ஒரு அரசனை பற்றியும் பாடாமல், தனது நண்பர் புரவலர் சடையப்ப வள்ளலை மட்டும் ஆயிரம் செய்யுளுக்கு ஒருமுறை பாடியது இன்னொரு காரணம். இவற்றைக் கொண்டு அவரது காலத்தை நிர்ணயம் செய்வது கடினமாகி விட்டது. தற்போது அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாட்சியம் எதுவும் இல்லாமல் விரிந்து கிடக்கிறது. பொதுவாக பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்ற கருதப்படுகிறது.

கம்பரின் ராமாவதாரம், வால்மீகி்யின் வடமொழி காவியத்தின் கருவை கொண்டாலும், அவர் அதனை அதன் மொழி பெயர்ப்பாக அதை இயற்ற வில்லை. தனது தமிழ் புலமையை முழுவதுமாக பயன் படுத்தி, காவியத்தின் பல்வேறு இடங்களில் சிறு மாற்றங்களை செய்து, அப்போதைய காலத்திற்கு ஏற்ப நயத்தை மாற்றி அவர் தனது படைப்பை தனி தமிழ்க் காவியமாகவே மாற்றி விட்டார். ஆனால் நாம் இன்று பார்க்கும் அப்படிப் பட்ட ஒரு மாற்றம் அவருடையதா , அல்லது வாட்டர வழக்காக வந்த ஒன்றை அவர் மேலும் அழகு பட பாடினாரா ?

இதனை பற்றி நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு – . நன்றி திரு திவாகர், திரு ஹரி்கி்ரிஷ்ணன், ஷங்கர் ( பொன்னியின் செல்வன் குழுமம் ), திரு அண்ணா கண்ணன் மற்றும் கீதா அம்மா – பல்வேறு விதங்களில் இந்த பதிவுக்கு உதவியதற்கு. நன்றி திரு அர்விந்த் ( படங்கள். )

இந்த சிற்பம், புள்ளமங்கை பிரம்ம புரீ்ஸ்வரர் ஆலயத்தில் இருப்பது, இதன் கட்டுமான முறையை கொண்டும், அதில் இருக்கும் முதலாம் பாரந்தக சோழரின் கல்வெட்டுகளை கொண்டும் இதன் காலம் 907 to 953 CE என்று நிர்ணயிக்கப் படுகிறது .

சிற்பத்தை அருகில் சென்று பார்ப்பதற்கு முன்னர், இரு காவியங்களில் இந்த நிகழ்வை கையாண்ட முறையை படிப்போம். அஹல்யையின் சாபமும் சாப-விமோ்சனும்

அஹல்யை -விக்கி

அஹல்யை பிரம்மனால் உலகிலேயே மிகவும் அழகு பொருந்திய மங்கையாக படைக்கப்பட்டாள். அப்போதே அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். எனினும் கௌதம முனிவரை அஹல்யையை மணந்ததால். மாற்றான் மனைவி என்றாலும் இந்திரனின் சபலம் குறையவில்லை. அவளை அடைய திட்டம் தீட்டி , கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அவளிடம் சென்றான். வந்திருப்பவன் தன மணாளன் அல்ல என்று தெரிந்தும் அஹல்யை தனது அழகின் மீது இருந்த ஆனவத்தாலோ , தேவர்களின் அரசனே வந்திருக்கிறான் என்பதாலோ தவறு செய்கிறாள்…

சரி, இதனை வால்மீகி எவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

tathaa shaptvaa ca vai shakram bhaaryaam api ca shaptavaan |
iha varSa sahasraaNi bahuuni nivaSisyasi || 1-48-29
vaayu bhakSaa niraahaaraa tapyantii bhasma shaayinii |
adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi ||

இப்படி பட்ட தவறை செய்ததனால் நீ ஆயிரம் ஆண்டுகள் உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, யாராலும் பார்க்க முடியா வண்ணம், இந்த ஆசிரமத்தை சுற்றியே காற்றில் கரைந்து புழுதி போல இருப்பாயாக !!

yadaa tu etat vanam ghoram raamo dasharatha aatmajaH |
aagamiSyati durdharSaH tadaa puutaa bhaviSyas

தசரதனின் புதல்வனான ராமன், இந்த வனத்திற்குவரும்போது, உனது பாவம் போய் சாப விமோசனமும் பெறுவாயாக


tasya aatithyena dur.hvR^itte lobha moha vivarjitaa |
mat sakaashe mudaa yuktaa svam vapuH dhaarayiSyasi

ராமனை போற்றி வழி படும்போது உனது பாவம், பித்து, பேராசை அனைத்தும் விலகி, உனது சுய உருவை நீ மீண்டும் பெற்று, என்னுடன் வந்து மீண்டும் மகிழ்ச்சியான வாழ்கையை பெறுவாய், என்று சபித்தார் கௌதம முனிவர். .

இதில் நாம் கவனிக்க வேண்டியது எங்குமே கல்லாய் கிடவது என்று அவர் கூறவில்லை.

இப்போது கம்பர் இதை கையாண்ட முறையாய் பார்ப்போம்.

பரிபாடல்


‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்

தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால், இந்திரன் அளவில்லாத,நாணத்தை அடைந்து, தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள், எல்லோர்க்கும்,
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும் வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன் தன் மனைவியைப் பார்த்து, விலைமகள் ( வேசியைப்) போன்ற நீயும் கல் வடிவம் போல ஆகுக என்று சபித்தான்.


‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.

அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி, தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும் நெருப்பைச் சிதறறும் கடவுள் அன்னாய், உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே! சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது, எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும் என்று கூறுவர். இச் சாபத்திற்கு ஒரு முடிவை அருள்வீராக என்று வேண்டி நிற்க, அதற்கு
இரங்கிய அம் முனிவன், ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த தசரதராமன் என்பான் திருவடித் தூள் உன்மேல் படியும் போது, இந்தக் கருங்கல் வடிவம் நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

இந்த இடத்தில தான் நாம் இரு காவியங்களில் உள்ள வேற்றுமையை ஆராய வேண்டும். வால்மீகி அஹல்யை காற்றோடு கலந்து எவராலும் அவள் அழகை பார்த்து ரசிக்க முடியா வண்ணம் , அவளது அழகின் மேல் அவளுக்கு இருந்த ஆணவத்தை இழக்குமாறு காட்சியை எடுத்துச் செல்கிறார். . கம்பனோ உணர்ச்சிவசப்பட்டு தவறிட்ட அஹல்யையை கல்லாக மாற்றி, உணர்ச்சியற்ற நிலையில் வாடும் வண்ணம் சபிக்கப்பட்டதாக காட்சியை அமைக்கிறார்.

இது கம்பனின் கற்பனையா? இல்லை இந்த வழக்கு தமிழ் மண்ணில் அவருக்கு முன்னரே இருந்ததா? ( நன்றி திரு ஹரிக்கிர்ஷ்ணன் அவர்களது பதிவு )

சங்கம் பாடலில் அஹல்யை

பரிபாடல் காலம்

சங்க காலத்து நூலானா பரிபாடலில் வரும் வரிகளில் அஹல்யையின் சாபம் இடம் பெறுகிறது.

பரிபாடல் 19 , முருகனை பற்றி வரும் பாடல்.அதில் ஒரு பகுதி

இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது. என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது–துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.

(Lines 50-57)

பக்தர்கள் ஓவியக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ரதி மன்மதனின் ஓவியத்தை பார்த்த பின், இன்னொரு ஓவியத்தில் – இந்த பூனை இந்திரன் (இந்திரன் பூசை) , இவள் அஹல்யை (இவள் அகலிகை), சினத்தில் சென்ற கௌதமன் (இவன் சென்ற கவுதமன்) , கல்லை மாறிய அஹல்யை (சினன்உறக் கல்லுரு ஒன்றியபடி இது‘) என்று பரங்குன்றம் செல்லும் யாத்ரிகள் பேசுவது போல வருகிறது பாடல்.

7029

இப்போது நாம், மீண்டும் சிற்பத்திற்கு வருவோம். சிறு சிற்பம் தான். புள்ளமங்கை, எனினும் அதில் நாம் மூன்று நபர்களை தெளிவாக பார்க்க முடிகிறது. லக்ஷ்மணன் , ராமன் , மற்றும் அஹல்யை.

7023
7019
7032

இப்போது பதிவின் முக்கியமான தருணம். ராமனின் காலை பாருங்கள். அப்படியே கம்பனின் அற்புத வரிகளை படியுங்கள்.எத்தனை வண்ணங்கள்.. வண்ணங்களா.. இல்லை கம்பனின் எண்ண ஜாலங்களா..

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இதை மேலும் விவரிக்க எனக்கு தேர்ச்சி இல்லை – தேவையும் இல்லை. ராமன் கால் பட்டு உயிர்ப்பிக்கும் அஹல்யையை சிற்பத்தில் பாருங்கள்.

7035

புள்ளமங்கை விமான சிற்பம் கண்டிப்பாக 953 CE க்கு முன்னர் செதுக்கப்பட்டது. நிச்சயமாக அது அஹல்யை கல்லாய் மாறுவதும், ராமனின் கால் ( அல்லது கால் தூசி) – சிற்பத்தில் குதிக்கால் ஊன்றி பாதம் கல்லின் மேல் படும்படி வடித்துள்ள திறமையை பாருங்கள் , அப்படி கால் பட்டு சாப விமோசனம் பெரும் அஹல்யை இரு கை கூப்பி பக்தி பரவசத்துடன் தன எழில் உருவம் பெற்று , ராமனை வணங்கும் வண்ணம் வடித்ததும் அருமை.
அது சரி கம்பன் சொல்லும் கால் வண்ணத்தை பார்த்துவிட்டோம் – அது என்ன கை வண்ணம். அதற்கும் சிற்பம் உண்டோ. விரைவில் பார்ப்போம்.

கிரேக்க சோழ கலை கலவை.

சோழ செப்புத்திருமேனிகளில் ஒரு வசீகரத் தன்மை இருக்கிறது. அதை புகைப்படங்களில் கொண்டு வருவது மிகவும் கடினம். உதாரணத்திற்க்கு சென்னை அருங்காட்சியகம் இருப்பில் இருக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டு சோழ முருகர் வடிவத்தை பாருங்கள்.

ஓவியர் பிரசாத் அரிய மனிதர்.செப்புத்திருமேனியின் அழகை ஓவியத்தில் கொண்டு வரும் தெய்வீக திறம் படைத்தவர்.

பொதுவாக த்ரிபங்க அமைப்பை பற்றி பல கட்டுரை படித்துள்ளேன். ஆனால் இந்த மூன்று வளைவுகள் என்பது மட்டும் தான இந்த அழகின் காரணமா ? இல்லை அவற்றை தாண்டியும் ஏதாவது உள்ளதா ? எப்படிஅந்த கலைஞன் இந்த தந்திரத்தைத் தெரிந்துக்கொண்டான்?

இன்று புகழ் பெற்ற கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி நாம் பார்க்கப் போகிறோம். அவர்கள் எப்படியெல்லாம் சிற்பங்களின் அழகைக் கூட்ட பல யுக்திகளைக் கையாண்டனர், தவிர அவர்கள் உபயோகித்த முறைகளுக்கும் சோழ சிற்பியின் கலைக்கும் ஏதாவது பொதுத் தன்மை உள்ளதா என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம். இந்த பதிவு உருவாக இந்த காணொளி கோப்பு மிகவும் உதவியாக இருந்தது.

கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி

பலமுறை இந்த கேள்வி எங்கள் மனதில் உதிக்கும். நண்பர் அர்விந்த் அவர்களுடன் அர்தனாரி வடிவத்தை பற்றி விவாதிக்கும் போதும் வந்தது. என்ன கேள்வி – சிற்பி ஏன் ஒரு காலை சற்றே மடித்தவாறு அமைத்தான் என்பதே அந்த கேள்வி. அப்போது எங்கள் கருத்து ஆண் பெண் என்ற இருவரின் உருவங்களின் அமைப்பை சரி கட்டவே அந்த அம்சம் என்பதில் முடிவாகும் .

அர்த்தனாரி வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது

ஆனால் இன்று இந்த கிரேக்க சிற்பம் பற்றிய காணொளியை கண்ட பின்னர் வேறு ஒரு விதமாக யோசிக்க வைத்தது. இந்த சோழ முருகர் வடிவம் அர்த்தநாரி போல அல்லவே, அப்போதும் எதற்கு அந்த காலின் மடித்து வடிக்கும் கலையையும், சிறபக்கலைஞனும் ஏன் வளர்த்துக்கொண்டே போகிறான் என யோசித்ததில் ஒஉர் உண்மை புலப்பட்டது. அதாவது கலைஞன் எனப்படுபவன் தனது படைப்புகளில் இருந்தும், தான் பார்ப்பதிலும் மட்டும் அல்லாமால், தனக்கு முன்னும் இருந்த வல்லுனர்களின் படைப்புகளில் இருந்து அவன் கற்றுக்கொள்கிறான். அவனல்லவோ கலைஞன்.. கிரேக்க சிற்பம் பாரெங்கும் புகழ் பெற்றது. கூகிள் மற்றும் விக்கி உதவியுடன் கிரேக்க சிற்பம் எப்படி பாரிணாம வளர்ச்சி கண்டது என்பதையும், அதை படிப்பது நாம் நமது சோழ செப்புத் திருமேனிகளை இன்னும் புரிந்துக்கொண்டு ரசிக்க எப்படி உதவுகின்றது என்பதை பார்ப்போம்.

கௌரோஸ்


கௌரோஸ் – சுமார் -800 BCE – 480 BCE, கிரேக்க அழகான ஆண் இளையர் சிற்பங்களை குறிக்கும்
இந்தக் காலத்திய சிற்பங்களில் நாம் பார்க்க வேண்டியவை

* உடல் முழுவதும் ஒரே நேரான கோணத்தில் இருக்கும், தலை நேராக, பார்வையும் நேரே பார்க்கும் வண்ணம் இருக்கும், இடுப்பு சின்னதாக, கைத்தசைகள் சதுரமாகவும் அதிகம் மேலே தூக்கி இராது. உடம்பும் அதே போல எந்த விதமான வளைவும் இல்லாமல் – விறைப்பாக இருக்கும்.

* சில சிலைகளில், ஒரு கால் முன்னால் வைக்கும் படி இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு இடுப்பின் வளைவை காண முடியாது.
* கைகளும் அதே போல நேரே தொங்கியபடியோ, அல்லது ஒரு கை மடக்கப்பட்டோ இருந்தாலும்,சிற்பம் பொதுவாக உயி்ரற்று இருக்கும்.

க்ரிடிஒஸ் பையன்


இதை அடுத்து பளிங்கு சிலை – க்ரிடிஒஸ் பையன் சிற்பத்தை பார்ப்போம்.

இங்கே சிற்பி மனித உடலின் செயல் பாட்டை முழுவதுமாக படித்து, அதை கல்லில் வடித்துள்ளான். உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கி ( இடது கால் ), வலது கால் சற்றே முட்டியில் மடிந்து உள்ளது. இதற்கு கிரேக்க மொழியில் ‘கண்டற்றபோஸ்டோ’ என்று பெயர். இந்த முறையில் ஒரு மனிதன் நிற்கும் பொது , உடலின் மற்ற பாகங்களில் சிறு மாற்றங்கள் தோன்றும். இடை சற்றே இடது புறம் செல்லும், முதுகு தண்டு ஆங்கில எழுத்து “s” போல வளையும்.

கண்டற்றபோஸ்டோ’

இந்த மாற்றங்களின் விளைவால் இதுவரை வெறுமனே உயிரற்று நிற்கும் மனிதன் சிலை போல இருந்த வடிவம் உயிரோட்டம் பெற்றுவிடுகிறது.

டோரிபோரோஸ்

டோரிபோரோஸ் – ஈட்டி ஏந்தியவன் சிற்பம் கிரேக்க சிற்பங்களில் மிகவும் புகழ் பெற்றது. செப்பு சிலையாக இருந்திருக்க வேண்டிய இந்த வடிவத்தின் காலம் சுமார் 450-40 BC.

கிரேக்க சிற்பியான திரு போல்ய்க்ளிடோஸ் என்பவர், மனித உடலின் அங்க குறிப்புகளையும் அதன் ஆற்றலையும் முழுவதுமாக படித்து, இந்த சிற்பத்தை வடித்துள்ளார். இந்த வடிவத்தில் பலம் மிக்க ஆண்மகன் ஒரு கையில் வேல் ஒன்றினை எறியும் வண்ணம் – அந்த தருணத்தின் உயி்ரோட்டதை அப்படியே கல்லில் சிறை பிடித்துள்ளார்.

“S” தோற்றம்

அதே போல அந்த “S” தோற்றமும் கிரேக்க சிற்பத்தின் நளினத்தை மிகவும் கூட்டியது . இதில் நாம் முன்னர் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உடல் இன்னும் தனது நடுதிசையில் இருந்து விலகி, வளைந்து நிற்கும் வண்ணம் இருக்கும். இதனால் இது ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உயர்ந்த காலத்தால் முற்பட்ட பாணி என்று கருதப்படுகிறது.

வீனஸ் டி மிலோ அல்லது அப்ரோடைடி மிலோஸ் சிற்பம் இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

சரி, இவை அனைத்தையும் பார்த்துப் படித்து புரிந்த பிறகு நம் சிலையை மீண்டும் பார்ப்போம். கிரேக்க சிற்பிகள் உபயோகித்த யுக்திகளை நமது சிற்பிகளும் உபயோகித்தார்களா? தேடலின் போது பல நல்ல தளங்களும் கிரேக்க சிற்பத்தின் படங்களும் அதனை ஒட்டிய விளக்க படங்களும் கிடைத்தன. அதே போல சோழ சிற்பத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

http://figdrawing.blogspot.com/2008/10/standing-pose-rhythm-and-contrapposto.html
http://employees.oneonta.edu/farberas/arth/ARTH209/Doyphoros.html


என்ன அதிசயம். அப்படியே ஒன்றை ஒன்று ஒட்டி இருக்கின்றனவே.



சோழர் சிலையின் பின் அழகு இன்னும் அற்புதம். நாம் கிரேக்க சிற்பங்க்ளில் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ எப்படி `s’ வடிவத்தோடு சேர்ந்து சிலையில் வந்துள்ளது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.



இந்த பதிவுக்கு உங்கள் கருத்தை இடுங்கள். கேட்க மிகவும் ஆவலாக உள்ளது. கிரேக்க சோழ கலைகள் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாக உணரப்படும்போது உருவாகும் ஆச்சரியத்தை என்னவென்பது…

படங்கள் உதவி : விக்கி மற்றும் இணையம். சோழர் சிலை மற்றும் ஓவியம் – ஓவியர் பிரசாத்.

இருநூறாவது பதிவு – பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழியவே – சோழ ஓவியம்

இந்த தளம் எங்களுக்கு வாழ்க்கைப் பாதையில் மிகவும் மனநிறைவைத் தரும் பயணம். திடீரென ஏற்பட்ட ஒரு தாக்கத்தால் பலரும் தங்கள் பயணத்தை துவங்குவது உண்டு , எனினும் முதலில் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்ந்து நினைவில் வைத்து கவனத்தை எங்கும் எதிலும் சிதற விடாமல் செல்வது பெரும் சவால். அந்த விதத்தில் நாங்கள் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களை இந்த பணியில் ஈர்த்த , இன்றும் தூண்டுதலாக இருக்கும் அந்த முதல் தீ பொறி – அதற்கு அப்படி ஒரு பலம். இருநூறாவது பதிவிற்கு அந்த தீப் பொறியை விட வேறு நல்ல கரு உண்டோ ?

ஆம் அவர்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர்.

ஆனால் எங்களை போன்றோருக்கு அவர் என்றும் அருண்மொழி வர்மர் தான் – இன்றும் எங்கள் நினைவில் நீங்காமல், ஒரு வாழும் வரலாறாக , எங்களை வழிநடத்தும் தமிழனின் வாழ்வியலில் பொன்னேட்டில் பொறிக்கப் பெற்ற மாமனிதர். தமிழனும் தமிழ் மண்ணும் தனது பெயரை கேட்டவுடன் தலை தானாக நிமிரும் சாதனைகளை நிகழ்த்திய சகாப்தம். இது வெறும் முகஸ்துதி அன்று – இன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல இடங்களில் இருந்து அவர் எழுப்பிய பெரிய கற்றளியான ராஜராஜேஸ்வரம் தஞ்சை பெரிய கோயில்தனை காண வரும் பலகோடிக்கணக்கான பேர்களில் பலர் அதன் பிரம்மாண்டத்தை ரசிப்பர், சிலர் அதன் அழகை ரசிப்பர், மற்றும் சிலர் அதன் கட்டட அமைப்பு,அறிவியல் , விஞ்ஞானம் என்று வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கும் கூட்டத்தில் இருப்பர். வேறு ஒரு கூட்டமும் உண்டு. எங்களை போல – இது எங்கள் மண் , இவர் எங்கள் அரசன் என்று எங்கோ ஒரு விட்ட குறை தொட்ட குறை – அடி மனதில் ஒரு இனம் புரியா ஆனந்தம், அருகில் அந்த மாமனிதர் இன்னும் எங்களை அன்புடன் பார்த்து மந்தகாச புன்னகை புரியும் ஒரு உணர்வு…

எங்களை வழிகாட்டும் அந்த சுடருக்கு என்றும் எங்கள் உழைப்பு அர்ப்பணம். முடிவு ஆரம்பம் என்று பிரிவு படுத்தி பார்க்காமல், இதுவரை நாங்கள் செய்துள்ள அனைத்தும் தங்களுடையது, இனி நாங்கள் செய்யப்போவதும் தங்களுக்கே அர்ப்பணம். எங்களை இந்த பணியில் ஆழ்த்தியதும் தாங்களே , உங்கள் புகழ் பாரெங்கும் பரவ நாங்கள் எங்களை இன்று மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

காலவெள்ளத்தில் நாம் பரபர வென்று பின்னோக்கி பயணிக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் இரண்டு நொடிகளில் புரட்டிவிட்டோம். கி பி 1010.

(ஆம், தற்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன – பெரியகோயில் எடுப்பித்து – கல்வெட்டுகளில் உள்ள படி உடையார் அவர்கள் தனது ஆடிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டின் இருநூற்றி எழுபத்தி ஐந்தாம் நாள் – விமானத்தின் மேல் உள்ள கலசத்திற்கு தங்கம் கொடுத்த செய்தி உள்ளது. ஆட்சிக்கு வரும் வரிசையில் இல்லாமல், காலத்தின் கோலத்தால் விதியின் ஆட்டத்தினால் தன்கையில் ஆட்சி வந்தாலும் பெருந்தன்மையுடன் அதை விட்டுக்கொடுத்த தியாக சிகரம் – பின்னர் அவர் தமிழுக்கும் தமிழன்னுக்கும் ஆற்ற வேண்டிய அற்புதங்களை எண்ணி மீண்டு்ம் அரியணை தேடி வந்தது கி பி 985 )

ஆலய மணிகள் கிண் கிண் என்று ஒலித்துக்கொண்டிருந்தன – அந்த மணியோசையின் பின்னணியில் பிரம்மாண்டமான வாயிற் காவலர்கள் வழி காட்ட பெருவுடையாரைக் காண உள்ளே வந்தனர் பெருமக்கள். அங்கே ஒருபக்கம் போட்டியாய் தவில், மேளம், பறை, தாரை , தப்பட்டை, நாதஸ்வரம் என்று ஒரு புயலென கிளம்பிய ஓசையில் திக்கு முக்காடி,அவை கருவறையின் கருங்கல் சு்வரில் வெளியே திரும்ப ஓட ஒரு வழியை தேட… ஒரு நிமிடம் அப்படியே அண்ணாந்து காற்றில் கலக்கும் கற்பூர வாசனையையும் பின்னந்தள்ளி வந்த சந்தன வாசனை முகரும்போது , அகில், ஜவ்வாது, சாம்பி்ராணி என்று ஒன்றோடு ஒன்று போட்டியிட….திடீரென இன்னும் ஒரு புது வாடை , மேலிருந்து வருகிறது, முல்லை – ஆமாம் அடர்த்திக்கட்டிய முல்லை மொட்டுகள் மெதுவாக மலரும்போது வெளிவரும் வாசனை. எங்கிருந்து வருகிறது, மேல் தளத்தில் அடுக்கடுக்காக பின்னிய ஜடைகளில் முல்லை மொட்டுக்கள். யார் இந்த யு்வதிகள். புலியின் பார்வையில் உறைந்து நிற்கும் மானைபோன்ற கண்களை கொண்டு தங்கள் பிடித்த ஜதிகளில் அப்படியே உறைந்து எதிரே இருக்கும் தங்கள் குருநாதரின் செய்கைக்காக காத்து நிற்கும் நாட்டிய மாதுகள். குருநாதரும் அங்கு இருக்கும் அனைவரையும் போல, காத்து நிற்கிறார் – யாருக்கு?

அனைவருமே அவரை பலமுறை பார்த்துள்ளனர், ஒளிவீசும் கவசத்தை தனது வெற்றி மார்புகளில் தரித்து, கம்பீரமாக தனது ரதத்தில் ஏறி செல்லும்போது, ராஜ உடையில் பட்டாடை உடுத்தி செங்கோலும் மணிமுடியும் ஜொலிக்க பட்டத்து யானை மீது பவனி வரும் போதும் பார்த்ததுண்டு. எனினும், இன்று அப்படி அல்ல. இன்று சாதனை ஒன்றை நிகழ்த்தி , ஒரு அதிசயத்தை நடத்தி அந்த மாவீரன் தன் கனவை நினைவாக்கும் பொன்னாள்.

ஆம், இன்று தான் பெரிய கோயிலின் குட நீராட்டு் நாள் – இது போல பாரில் எங்கும் இல்லை என்று ,சோழம் சோழம் என்று எட்டு திக்கும் இந்த குலத்தின் பெருமையை பறைசாற்றும் பொன்னாள்.

திடீரென எங்கும் அமைதி, அரசரின் அணிவகுப்பு வாசலை அடைந்து விட்டது. வாயிலின் மூலம் உள்ளே வரும் சூரிய கதிர்கள் ஒரு சில கணங்கள் மறைக்கப்படுகின்றன, பின்னர் சூரியன் உதிக்கும் ஒளி கிரணங்கள் போல அவரது மதிவதனம் , அரச சின்னங்கள் எதையும் அவர் தரிக்க வில்லை, வெள்ளை ஆடை இடுப்பில், ஒரு மேல் துண்டு , அங்கம் எங்கும் வெள்ளை விபூதி கோடுகள் – தங்க கவசத்தை விடவும் இந்த வடிவில் சிவப்பழமென ஜொலித்தார் மாமன்னர் – அப்போது..

சோழம் பூஜிக்கும் மந்திரமென பகைவர் மனதில் காலனின் நாமத்தை நினைவு படுத்தும் ஒலி.. மன்னனின் மெய்கீர்த்தி ஒலிக்க துவங்கியது….


ஸ்வஸ்திஸ்ரீ்
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்

உடனே, மாமன்னன் புருவங்கள் நெரிந்தன, வலது கை மேலே எழும்ப துவங்கியது.. குறிப்பால் அறிந்து புகழ் பாடும் வாய் அப்படியே நின்றது, என்ன வென்று அறியும் முன்னர் மெய்காவல் படை தலைவன் கை இடைவாளுக்கும் சென்றது. எனினும் நெறித்த புருவும் முழுவதுமாக நெறியாமல், முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு குடை பிடித்தது. அந்த ராஜ களை சொட்டும் முகத்தில் இன்னும் ஒரு படி அழகு எப்படியோ ஏறியது.

“அவனுக்கு முன் என் புகழ் எம்மாத்திரம். நான் இப்போது இங்கு ராச ராசன் அல்ல.. அடியேன் சிவ பாத சேகரன் “

மன்னரின் இந்த மொழியை கேட்டதம், மீண்டும் மேள தாளம், மணிகள் கிண்கிணி முழங்க – எங்கும் இசை வெள்ளம். அப்போது, மேலே இருந்து நானூறு சலங்கைகள் ஒரு சேர ஜதி பிடித்தன…குருநாதரின் ‘தா’ என்ற ஓசைக்கேற்ப.

தன் கனவு பலிக்கும் பேரானந்தத்தில் பெருவுடையாரின் அடியில் நின்ற மன்னர், தொலைவில் நின்ற குஞ்சர மல்லனை, தஞ்சைப் பெரும் சிற்பியைத் தேடி அழைத்தார்.

“இன்றுமுதல் உனக்கு ராஜ ராஜ பெருந்தச்சன் என்ற பட்டம் அளிக்கிறோம், பெயரில்லா சிற்பிகளாக நீங்கள் இருப்பது போதும். – யார் அங்கே, இந்த பெயரை எனது பெயருடன் இணைத்து கல்வெட்டில் வெட்டுங்கள். – உனது உன்னத படைப்பின் புகழ் சூரியனும் சந்திரனும் உதிக்கும் வரை நிலைத்து இந்த வையகத்தில் என் பெயரும் உன் படைப்பும் ஒன்றாய் ப் பிணைந்து உன் புகழை உலகிற்கு உணர்த்தட்டும்.

கணங்களில் நீர் பெருக தஞ்சைப் பெரும் சிற்பி கை கூப்பி வணங்கினார்.

“என் கோனே , இந்த குணமல்லோ எங்களை எந்நாளும் உங்கள் அடி பணிய வைக்கிறது. இந்த பெருமிதத்தில் இந்த அற்புத ஆலயத்தில் தங்களுக்கு விசேஷமாக வைத்துள்ள ஒரு அற்புத வெளிப்பாட்டைக் காட்ட மறக்கக்கூடாது. பிரத்தேயகமாக தலை சிறந்த ஓவியர்களை கொண்டு திருச்சுற்றில் உங்களுக்கு பிடித்த ஈசனின் வீரட்டானம் ஒன்றை தீட்டச் செய்துள்ளேன்.”

ஓ , அப்படியா. இதற்காகத்தான் கடந்த சில வாரங்களாக என்னை அந்தப பக்கம் செல்லாமல் தேர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தர அனைவரும் சேர்ந்து சதி செய்தீரோ..

ஐயனே , பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள். முதலில் வேலைபாட்டை கொஞ்சம் பாருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், அங்கே வெளிச்சம் போதவில்லை, யார் அங்கே – பந்தங்களை கொண்டு வாருங்கள். கவனம், சுவரின் அருகில் செல்ல வேண்டாம். எல்லா இடங்களையும் ஓவியங்களால் நிரப்பி உள்ளோம்.

வேந்தே – தாங்கள் விமானத்தின் கோஷ்டத்தில் திருப்புற விஜய சிற்பங்களை நிறுவச்சொன்ன போதே தங்களுக்கு திரிபுராந்தக கதையின் பால் உள்ள ஆவலை புரிந்துக் கொண்டோம். அதனால் அந்த கதையை ஓவியாமாக தீட்ட முடிவெடுத்தோம்.

“அருமை, கலைஞரே.! குறிப்பால் உணரும் உங்கள் திறன் அருமை. உங்களைப் போன்றோர் என்னிடத்தில் இருப்பது நான் செய்த புண்ணியம். ஆமாம், பெரிய அன்னை செம்பியன் மாதேவி பலமுறை சுந்தரர் , சண்டேஸ்வரர் புராணங்களை சொல்லிக்கொடுத்தாலும், என் அக்கன் குந்தவை பிராட்டியார் தினமும் படித்துக்காட்டிய மகேசனின் திரி்புர தகனம் மனதில் ஏனோ நின்றுவிட்டது. கதையை எப்படி தீட்டி உள்ளீர், சிற்பம் போல தொடரும் காட்சிகள் போலவா..

மன்னா, தங்களை போல உயிர சிந்தனையும் நல்ல குணமும் பெற்ற தலைவனின் காலத்தில் பிறந்து பிறவிப் பயனை அடையும் நாங்கள் தான் புண்ணியம் செய்தவர்கள். பெரிய பிராட்டியும் குந்தவை பிராட்டியார் போன்றோர் சிறுவயதில் தங்களுக்கு இது போன்ற நல்ல கதைகளை சொல்லி வளர்த்தது வரும் சந்ததியினர் கற்று தெரிய வேண்டிய பாடம். ஓவியத்தை புது பாணியில் ஒரே காட்சியில் முழு கதையையும் விளக்கும் வண்ணம் காட்டியுள்ளோம் மன்னா.

ஒரே காட்சில் முழு கதையுமா. எப்படி முடிந்தது – குறைந்தது ஆறு முக்கிய காட்சிகள் தேவையாக இருக்குமே ?

கோனே, நாம் செய்த பாக்கியம், இது போன்ற ஓவியர்களும் நம்மிடையே உள்ளனர்.

பொறுங்கள், மதுராந்தகனும் பார்க்கட்டும். ராஜேந்திரா இங்கே வா

மன்னா. இருபது வருடங்களுக்கு முன்னர் தங்களை பார்ப்பது போலவே உள்ளது

ஆமாம், பெருந்தச்சரே. ஆனால் கோபம் மட்டும் என்னை விட இருபது மடங்கு. ராஜேந்திரா , இந்த அற்புத ஓவியத்தை பார். திரிபுராந்தகன் கதை, நினைவில் உள்ளதா உனக்கு. ஈசனின் வீரட்டாணங்களில் ஒன்று. திரிபுர அசுரர்கள் மூவர் தாரகாக்ஷ , கமலாக்ஷ மற்றும் வித்யுன்மாலி – தாரகனின் மகன்கள் , பிரம்மனிடத்தில் பெற்ற வரத்தின் பலத்தால், உலகை ஆட்டிப் படைத்தனர். பறக்கும் நகரங்கள் கொண்டு, மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தினர். எனினும் நல்ல சிவ பக்தர்கள். தன் அடியார்களை வதை செய்ய மனமில்லாமல், அப்பன் பெருமாளை புத்த வடிவத்தில் அனுப்பி வேறு மார்க்கத்தில் எழுத்து செல்ல வைத்தார். அதன் பிறகு, தேவர்கள் அனைவரும் கொண்டு படை திரட்டி, புவியைத் தேராக கொண்டு, சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாக வைத்து, நான்முகன் தேரோட்டியாக நின்று, பெருமாளே நாணாக மாறி , மேரு மலையை வளைத்து வில்லாக போர்க்களம் புகுந்தார். அப்படித்தானே பெருந்தச்சரே ?

ஆமாம் அண்ணலே. அந்த தேர் எங்கள் ஆசான் விஸ்வகர்மனால் செய்யப்பட்டது. அதோ தேரோட்டியாக நான்முகன்.

தந்தையே – தேரோட்டி முன்னால் பார்க்காமல் ஏன் திரும்பி ஈசனை பார்க்கும் வண்ணம் உள்ளது?

மகனே, இது கதை சொல்லும் ஓவியம் – முழு கதையையும் ஒரே ஓவியத்தில் ஓவியன் விளக்க எத்தனிக்கிறான்.

ஐயனே, மேலே பெருமாள் புத்த வடிவில் இருப்பதும் திரிபுர அசுரர்கள் அவனை வாங்கும் வண்ணம் வரைந்துள்ளோம். அங்கே எலியின் மீது யானைமுகனும், மயிலின் மீது முருகனும், சிம்மத்தின் மீது தேவியும், ஈசனுடன் பல பூத கணங்களும் போருக்கு செல்லும் காட்சி இங்கே

ஆமாம். அசுரர் படையும் மிகவும் கோரமாக தெரிகிறது. அந்த பந்தத்தை இன்னும் அருகில் எடுத்து வாருங்கள், ஓவியத்தில் உள்ள தனித்தன்மையை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். ராஜேந்திரா , உன்னால் முடிகிறதா பார்ப்போம்.

தந்தையே , தேவார வரிகளில் இரு விதமாக இந்த காட்சியை பாடும் பாடலை படித்த நினைவு வருகிறது – கறுத்தவன் (சினந்தவனும்) என்று ஒருமுறையும் நகைசெய்த என்றும் வருமே.

முதல் திருமுறை

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

முதல் திருமுறை

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பலே மகனே – அருமை. படிப்பிலும் கவனம் செலுத்தினாய் போல உள்ளதே. ஆச்சாரியர் இதற்கு இரு விளக்கங்கள் தருவார். இவ்வாறு போருக்கு செல்லும் ஈசனை விளக்கும் பாவம் – உடல் சிவக்க, கண்கள் பிதுங்க , புருவங்கள் வில்லாக வளைய – பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் இதை ரௌத்ர திருஷ்டி என்பார்கள். உனது சினேகிதி அந்த நாட்டியக்காரியிடம் கேளேன்.

அப்பா , இங்கே எதற்கு இந்த சம்பாஷனை. தெரிகிறது தெரிகிறது. சிவனின் முழு உடலுமே செவ்வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. நீங்கள் கோபப்படுவது போலவே .

மகனே, நீ கூட இப்போது கொஞ்சம் சிவந்து காணப்படுகிறாயே ? கோபமா ? நாணமா ? சரி, ஈசனின் முகத்தில் ஏதாவது வித்யாசமாக தெரிகிறதா உனக்கு.

தந்தையே – அதற்கு முன்னர் அவர் வில்லை பிடித்திருக்கும் முறையே சற்று வித்யாசமாக உள்ளதே. எதிரி எதிரில் இருக்க, வில்லை ஏன் தன்னை நோக்கி பிடித்து இருப்பது போல உள்ளது காட்சி.

மதுராந்தகா, அது தான் ஓவியனின் திறமை. கதையை பாதியிலேயே விட்டு விட்டோமே – இரு விதாமாக விளக்கம் தருவார் குருநாதர் என்று சொன்னேன் அல்லவா, ஒன்று – இவ்வாறே படை திரட்டி செல்லும் போது கூட சென்ற தேவர்களில் சிலருக்கு சற்றே தலைக் கனம் பிடித்தது. ஈசனுக்கே நம் உதவி தேவை என்று !! இன்னொரு விதமான விளக்கம் பிரம்மன் ஈசனை பார்த்து – எதற்கு இந்த அதீத விளையாட்டு. தங்களுக்கு இந்த படை, ஆயு்தங்கள் எல்லாம் தேவையா என்று கேட்க….மகேசன் அடுத்த கணம், வில்லை தன் பால் திருப்பி, ஒரு சிரிப்பு சிறக்க – எதிரில் இருந்த அசுரர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர்.

இப்போது பார். பித்தனின் முகத்தில் புன்னகையை. ஓவியன் திறமையாக இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வந்துள்ளான்.

அருமை, தங்கள் விளக்கத்துடன் ஓவியத்தை பார்க்கும் பொது மெய் சிலிர்க்கிறது. சீக்கிரம் வாருங்கள்! அடுத்த ஓவியங்களை பார்ப்போம்.

படங்கள்: திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். பெரிய கோயிலை பற்றி மேலும் முழுவதுமாக தெரியவேண்டுமாயின் கண்டிப்பாக அவர்களது நூலை படியுங்கள்.அவர்களது நூலை
நன்றி ரீச் சந்திரா

உன் கரம் பிடிக்கிறேன்

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் – சாதாரண திருமணம் அல்ல – அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் – தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

மணமகனாக சுந்தரேஸ்வரர் – மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ – நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .


சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல – தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து

தஞ்சை பெரிய கோயில் அகழி அழகிகள் – கண்டுபிடித்துவிட்டோம்

இது ஒரு மகிழ்ச்சியான பதிவு. தொலைந்து விட்டது என்றும் மீண்டும் கிடைக்கவே வழில்லை என்ற நிலையில் தஞ்சை பெரிய கோயில் அகழியில் இருந்த இரு சிற்பங்களை பற்றிய முந்தைய பதிவை பதிவு செய்தேன்.

ஆனால் நண்பர் திரு செல்வராஜ் அவர்கள், நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அங்கே விளையாடும் பொது பார்த்துள்ளேன், இன்றும் இருக்கும், விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன் என்றதும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனினும் அவை கிடைக்குமோ – எந்த நிலையில் இருக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் இருந்தன. உடனே செல்லமுடியாமல் விடாது மழை வேறு. ஆனால் இன்று இன்ப அதிர்ச்சி – நீங்களே பாருங்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படங்களில் இருந்தபடியே இன்றும் நிற்கின்றன இரு சிற்பங்களும். பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.