கல்லை மட்டும் கண்டால் – தசாவதாரம் மிதி வண்டி நிலையம்

நாம் முன்பு ஸ்ரீரங்கம் நாயக்கர் கால சேஷறைய மண்டபம் அற்புத தூண்களை பார்த்தோம். சில்பி அவர்களை கவர்ந்து உயிர் ஓவியம் தீட்டச் செய்த பெருமை ..அங்கே மேலும் சில அற்புத வடிவங்கள் இருப்பதால் நண்பர் திரு அசோக் அவர்களை அங்கு செல்ல தூண்டினேன். அவரும் அவ்வாறே அங்கு சென்று பல அற்புத தூண்களை படம் பிடித்து வந்தார். அவற்றை பார்க்கும் முன்னர், அங்கே சிதைந்த சில தூண்களின் படங்கள் நெஞ்சை உருக்கின.



கம்பீரமாக தனது வீரத்தை பிரதிபலிக்கும் குதிரை – இப்போது முடமாக உள்ளது.குதிரை வீரனின் ஈட்டியோ பாதியில் உடைந்து விட்டது – கல்லில் ஈட்டியை இதனை அழகாகச் செதுக்கிய சிற்பி அதன் இந்த நிலையை கண்டான் என்றால் !! அதன் அடியில் ஒய்யாராமாக நிற்கும் அழகு சுந்தரியின் இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது. வலது புறம் சிற்பங்கள் அனைத்தும் காணவில்லை.

இவை எப்போது இப்படி சிதைந்தன என்று ஒரு உள்மனதில் உறுத்தல் இருந்தது. சரி இணையத்தில் சற்று தேடியதில் 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கால புகை படம் கிடைத்தது. அப்போதும் இந்த தூண்கள் சிதைந்தமையால் கொஞ்சம் மன நிம்மதி கிடைத்தது. மற்ற கோயில்களை போல இவை சமீபத்தில் நமது மேற்ப்பார்வை இல்லாமையால் நடந்த சிதைவுகள் அல்ல என்று சற்று மனதை தேற்றியவுடன் அடுத்த காட்சிகள் என்னை பதற வைத்தன.

அக்கால மன்னர்கள் கலைகள் வளர கொடை கொடுத்து கலை பெட்டகங்களாக எழுப்பித்த இந்த அருமையான சேஷறைய மண்டபத்தின் இப்போதைய பணி – இரு சக்கர மிதிவண்டிகள் நிறுத்தும் இடம் !! விறகு சேமிக்கும் கிடங்கு!!. தசாவதாரம் மிதி வண்டி நிலையம் ..



நுணுக்கமான வேலைபாடுகளை உடைய அருமையான தூண்கள் இவற்றால் இடி பட்டு தினம்தோறும் சிதைகின்றன. இங்கே ஒரு சிற்பத்திற்கு முகம் இல்லை, அங்கே ஒரு கை இல்லை. மிதி வண்டிக்கு முட்டு கொடுக்க இந்த கலை பெட்டகங்கள் தானா கிடைத்தது ? தமிழனின் அற்புத கலை இப்படி மெல்ல சித்திரவதை பட்டா சாக வேண்டும்.

இங்கே உள்ள மற்ற பல தூண்களும் சற்று சிதைந்த நிலையிலே உள்ளன. இந்த அற்புத கலை தூண்கள் மற்றும் அவற்றில் செதுக்க பட்டிருக்கும் சிற்பங்களின் அருமை ஒரு முறை பார்த்தாலே புரியுமே, அந்த கலை சொட்டும் சிற்பங்களின் அழகு அருகில் செல்வோரை சுண்டி இழுக்குமே , அந்த கல்லில் காவியம் நம்மை தொலைவில் இருந்தே நெகிழ்விக்குமே – அப்படி இருந்தும் இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை – இவர்கள் இருகண்ணிருந்தும் குருடர்கள்.

வைணவ பாரம்பரியத்தில் கோயில் என்றாலே அது ஸ்ரீரங்க விண்ணகரம் தான், அப்படி இருந்தும் அங்கே இப்படி ஒரு அவல நிலையில் இருக்கும் அற்புத கலை தூண்களை பாதுகாக்க முடியவில்லையே . சரி இவற்றை செப்பனிட முடியுமா ? உடைந்த பாகங்கள் கிடைத்தால் முடியும். பல்லவர் காலத்திலேயே கை உடைந்த ஜல சயன பெருமாள் ( மல்லை கடற் கறை கோயில் ) சிற்பத்தை அற்புதமாக கை கொடுத்த ( செதுக்கிய ) சிற்பியின் திறனை ஆசார்ய தண்டின் அவர்களின் அவனிசுந்தரிகதா என்னும் நூலில் குறிப்பு உள்ளது!

இந்த இடுகையை பார்க்கும் நல்ல நெஞ்சங்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்,

சில்பியே சிகரம்

நாம் முன்பு ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டப தூண்களை பார்த்தோம். இதை நம் இளம் ஓவியர்கள் எவ்வாறு அருமையாக வரைந்தனர் என்றும் பார்தோம். அவ்வாறு வரைந்த நண்பர் திரு பிரசாத் அவர்களுடன் பேசும் பொது, அமர ஓவியர் திரு சில்பி அவர்களின் புகை படம் இல்லை என்று வருந்தினார். அப்போது வரலாறு.காம் திரு கோகுல் அவர்கள் இட்ட இழை நினைவுக்கு வந்தது. எனினும் பிரசாத்துக்கு தமிழ் படிக்க கடினம் என்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன் என்றேன். அப்போது அதே பக்கத்தில் ஓவியர் சில்பியும் இதே தூண் சிற்பத்தை வரைந்த படம் கிடைத்தது அனைத்தையும் இணைத்து இங்கே இடுகிறேன்.


Temple : Srirangam Sri Ranganathaswami Temple – Trichy, Tamilnadu, India
Location : Sesharayar Mandapa
Features : The mandapa is finely sculpted with various figures. Silpi captures the essence of this complicated and delicate sculpture
Collection sent by : Prof.S.Swaminathan
Original series : Thennatuch Chelvangal
Magazine courtesy : Ananda Vikatan


சில்பியே சிகரம்

சே. கோகுல்

(நன்றி – தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997)

கருவிலேயே திருவுடையவர்களாகப் பிறப்பவர்களின் புகழ் காலத்தால் மறையாதது. ஆழமான உழைப்பின் பலன்களை எந்தக் கறையானும் அரித்துவிட முடியாது. நோக்கத்தில் உயர்வையே நாடிச் செல்லும் எண்ணத்தின் நுட்பம் மாபெரும் நோன்பாகவே மலர்ந்திருக்கும். வளையாத முதுகு, கண்ணாடி கேட்காத கண்கள், தீர்க்கமான பார்வை. அதிலும் தெளிவில் முதிர்ந்ததோர் மோன நிலை. தூரிகையைத் தாங்கிய விரல்கள் தொட்ட கோடுகளெல்லாம் உயிர் பேசும். அதிகம் சிரிக்கத் தெரியாவிட்டாலும் அரைப் புன்னகையில் உதடுகள் பிரியாத ஒரு அழகு மலர்ச்சி. அகன்ற நெற்றியில் அடுக்காக மூன்று திருநீற்றுக் கோடுகள். நெற்றியின் நடுவில் அகன்ற குங்குமப் பொட்டு.

ஒரு ஓவிய மாமேதையின் பெருமைக்குரிய திருவடிவம்தான் இது. எல்லோருக்கும் உரியவராகிவிட்ட “சில்பி”தான் அவர்கள்.

அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.

இந்த நன்முத்தைப் பெற்றெடுத்த பெரும்பேறு நாமக்கல்லுக்கு 1919ம் ஆண்டில் உரியதானது. சிறுவனின் பெயர் சீனிவாசன். இளவயது முதலே இதர பாடங்களைவிட ஓவியத்துறையிலேயே உள்ளத்தை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவன் சீனிவாசன். தேசியப் பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் மிகச்சிறந்த ஓவியரும் கூட. சீனிவாசனுடைய திறமைகளை நன்கு கவனித்த கவிஞரவர்கள் சென்ன எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்த்து, அவனது செயலாக்கத் திறனை முழுமையாக்கிக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்.

ஆறாண்டுகள் நீண்ட பயிற்சியில் அவரது ஆர்வத்தையும் தகுதியையும் கல்லூரி முதல்வர் திரு.டி.பி.ராய் செளத்திரி அவர்கள் மதிப்பிட்டு சீனிவாசனுடைய தேர்ச்சியை இருமடங்காக்கி இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார். பேனாவும் மையும் கொண்டு எழுதும் சித்திரக் கோடுகள் அவருக்கு எளிதில் கைவந்தன. எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சித்திரங்கள் திரு.செளத்ரி அவர்களால் பெரிதும் புகழப்பட்டது. மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சக்கூடிய வகையில் சீனிவாசனின் ஓவியங்கள் அமைந்திருந்ததாக அவர் புகழ்ந்தார்.

சீனிவாசன் மாணவனாக இருந்தபோது ஓவியர் “மாலி” அவர்களின் கேலிச்சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார். அதே போன்று பின்னாளில் சீனிவாசனின் ஓவியங்கள் மாலியையும் மிகவும் கவர்ந்தன. இந்தப் பிணைப்பே சீனிவாசன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடனில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இயல்பாகவே சீனிவாசனுக்கு மனித முகங்களைத் தீட்டுவதினும் கட்டிடங்களை ஓவியங்களாக்குவதிலேயே அதிக ஆர்வமிருந்தது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மாலி சீனிவாசனுக்கு “சில்பி” என்னும் பெயர் சூட்டி, தெய்வ வடிவங்களையும் திருக்கோயில்களையும் மட்டுமே தீட்டும் பணிக்கு ஆயத்தம் செய்தார்.

கல்லிலே சிற்பி செதுக்கியுள்ள சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள் மட்டுமின்றி இழைந்த ஒருவகை உயிர்ப்பும் உண்டு. புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் பரிமாணங்கள் நிழலாக நிலைத்திருக்கும். ஆனால் உயிர்ப்பு உள்ளூர உணரமுடியாமல்தான் இருக்கும். அந்தக் குறையைக் களைந்து முழுமையான நிறைவுள்ள சிற்பங்களை – குறிப்பாக தெய்வ சித்திரங்களை – சில்பி அவர்களால் மட்டுமே வரைய முடிந்தது.

பக்தி, தூய்மை, பரவசம் ஆகிய மூவிழைப் பின்னலே உணர்வாக அவர் வரைந்த படங்களில் தெய்வம் தானே நிலைத்து நின்றது. அமைதியான சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஏகாந்தமான வேளையில் கர்ப்பகிருகத்தில் இருக்கும் தூண்டா விளக்கின் மயங்கிய ஒளியில் சில்பி அவர்களால் அவ்வளவு தெளிவாக அந்த அருள் முகத்தை எப்படி வரைய முடிகிறது என்கிற அதிசயத்திற்கு சில்பி கொடுக்கும் விளக்கம் “வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக்கொள்வதுதான் என் செயல். காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது. படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம்பொருள்தான். நான் வெறும் கருவி !”

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையுமுன்பு அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து, அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு, மூர்த்தியைப் பூர்த்தி செய்யும்போது அந்தந்த ஆபரணங்களை வரைந்து தானே அதனைப் பூட்டியதைப்போல் பரவசமடைவார். இந்தப் பரவசத்தை தெய்வம் சில்பிக்கு அளித்ததால்தான் அந்த சான்னித்தியத்தை சித்திரங்களில் நம்மால் நன்கு உணர முடிகிறது. தனது படங்களை வரைந்து முடித்தவுடன் மறைந்துவிட்ட காஞ்சி முனிவர் பரமாச்சாரியாரிடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டுவந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார். மேலும் கலைமகள், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் அவர் நிறையக் கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சில்பி அவர்களின் குடும்பம் சிறியது. அவர் பணிகளில், அவர் அனுஷ்டித்த ஆசாரக் கிரமங்களுக்குக் குறையாமல் அவருக்கு உதவி புரிந்தவர் மனைவி திருமதி பத்மா அவர்கள். ஒல்லியான வடிவம், குறையாத புன்னகையை சீதனமாகக் கொண்ட குளிர் முகம், விருந்தோம்பலில் தனக்குத்தானே நிகராக விளங்கிய அன்னபூரணி. சிறிய வயதிலேயே உடல் நலிவுற்று 1968ல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவர்களது ஒரே மகன் மாலி என்கிற மகாலிங்கம். ஒரே பெண் சாரதா.

இவ்வளவு பெரிய மேதை தன் கலையை பின்தொடரத் தக்கதொரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக்கொள்ளவில்லை. 1981ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14ம் நாள் – பொங்கலன்று ஒரு அதிசயம் நடந்தது. பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். பால்மணம் கமழும் பளிங்கு முகம். தன் தந்தையுடன் சில்பியைக் காண வருகிறான். கிரிதரன் என்னும் அந்தச் சிறுவனின் படங்களைப் பார்த்த சில்பி கிறங்கிப் போகிறார். அவன் வயதில் தான்கூட அத்தனை நுட்பமாகப் படம் வரைந்ததில்லையென்று கூறி அவனை வாயார வாழ்த்துகிறார்.

தனது கலைப்ப(¡)ணிக்குத் தகுதியுள்ளதொரு இளஞ்செல்வன் வாரிசாகக் கிடைத்ததையெண்ணி மிகவும் பூரித்துப் போனார் சில்பி. தனது மனைவியின் பெயரான பத்மாவையும் தன்னுடைய இயற்பெயரின் ஈற்றுப்பகுதியான வாசனையும் இணைத்து கிரிதரனுக்குப் பத்மவாசன் என்னும் பெயரைச் சூட்டினார். “எங்களின் இருவரது ஆசியும் உன் பெயராகவே என்றும் நிலைத்து, பத்மத்தில் வாசம் செய்யும் பிரம்மனாகவே – முதற் படைப்பாளியாகவே உன் புகழ் நின்று நிலைக்கட்டும்” என வாழ்த்தினார். அந்தச் சிறுவன்தான் இன்று பிரபல ஓவியரான திரு.பத்மவாசன். கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் புதிய சித்திரம் தீட்டித் தமிழக சித்திரக்காரர்களின் வரிசையில் அழியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள திரு பத்மவாசனின் படங்களில் கமழும் இறைத்தன்மைக்கு சில்பியே மூலகாரணம்.

தனது வாழ்க்கைப்பணிகள் முடிந்த பின்பு – அதாவது கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்தங்களைப் படம் எழுதி முடித்த பின்பு – அர்த்தமில்லாத வாழ்க்கை அவலங்களில் உழன்றுகொண்டிருக்கக்கூடாது – இறைவனின் திருவடிகளை விரைவில் அடைந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார் சில்பி. குடும்ப வாழ்க்கையிலும் தனது குழந்தைகளிடமும் பற்று வைத்திருந்தாலும் மனதளவில் ஒரு துறவியைப்போலத்தான் வாழ்க்கை நடத்திவந்தார் அவர்.

வாழும் நாட்களில் அவரை நன்கு பெருமைப்படுத்தத் தவறிய தமிழ்ச் சமுதாயம் அவர் வரலாறாகிவிட்ட இன்றைய நிலையிலும் அவரது பெருமைகளையும் அருமைகளையும் வரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி அவர்கள் திறமைகளை சீரமைக்க ஏன் முன்வரமாட்டேன் என்கிறது என்பதுதான் இன்னமும் பெரும்புதிராக உள்ளது. காலம் மாறட்டும். கண்கள் திறக்கட்டும். கடமை விளங்கட்டும். கருதியதை முடிக்கட்டும்.

சிகரங்கள் அசையாமல் அமைதியைக் காத்துக்கொண்டு உயரத்தின் எல்லையை ஒட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் உணர்வால் உயர்ந்த சிகரம், உண்மையால் உயர்ந்த சிகரம், உறுதியால் உயர்ந்த சிகரம், உத்தமப் பண்புகளால் உயர்ந்த சிகரம், ஒழுக்கத்தால் உயர்ந்த சிகரம், உழைப்பால் உயர்ந்த சிகரம் – ஒப்பற்ற கலைச் செல்வரான சில்பி சீனிவாசன்தான்.

Sources:
http://www.varalaaru.com/default.asp?articleid=443
http://www.varalaaru.com/default.asp?articleid=561

அது சரி, இந்த அருமையான சிற்பங்களை உடைய சேஷ ராயர் மண்டபத்தின் தற்போதையா
நிலவரம் …அடுத்து பார்ப்போம்.

நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் எவ்வாறு தோன்றியது?

இன்றைக்கு ஒரு அற்புத சிற்பம் பார்க்கிறோம் , அதனை ஒட்டிய அற்புத வரலாறு மற்றும் இந்த தளம் நாங்கள் நிறுவியதன் முழு மகிழ்ச்சி என்று பல விஷயங்கள் இந்த இடுகையை சிறப்பிக்கின்றன. ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டப அற்புத தூண்கள் நாம் முன்னர் பல பார்த்தோம், அப்போது திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள், அங்கே உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை பற்றி கூறினார். அப்போது அது என்னிடத்தில் இல்லை, நண்பர் அசோக் அவர்களிடம் அதை பற்றி கூறியவுடன், அதற்கு என்ன, நானே சென்று படம் எடுத்து வருகிறேன் என்று அங்கு சென்ற அற்புத படங்கள் பல எடுத்து வந்தார். இந்த அற்புத சிற்பத்தை பற்றி நான் எழுதுவதை விட பல கோயில் புராணங்களை அழகே தொகுத்து அளிக்கும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் எழுதினால் மிக சிறப்பாக இருக்கும் என்று அவர்களை அணுகினேன் ( நண்பர் திரு செந்தில் அவர்கள் தக்க சமயத்தில் அவர்களின் அலைபேசி என்னை தந்து உதவினார் ). திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் கேட்டதும் இந்த அருமையான இடுகையை தந்தார். படித்து பார்த்து மகிழுங்கள்.

புண்ணியம் நல்கும் புருஷோத்தமன் – *ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்.*

”நாராயணா!” என்று நாவிக்க நாளும் நவில்வோர்க்கு நற்கதிக்குயை நல்குவான் திருமகள் நாதன்!

அந்தத் திருமாலவன் எழுந்தளியிருக்கும் திவ்விய தேசங்கள் அனைத்திலும் அன்று முதல் இன்று வரை ஈடும் இணையும் இன்றி முதன்மைத் திருக்கோயிலாய்த் திகழ்வது திருவரங்கமாகும்.கங்கையின் தூயதாய காவிரிக்கும்,கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒர் தீவு போல் அமைந்துள்ளது.

அரங்கமாநகர் ஊர்,அளவில் சிறியதே ஆனாலும் புகழ் ஆகாயம் அளாவியதாகும்.

நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் இங்கு எவ்வாறு தோன்றியது?

திருவரங்கம் கோயிலின் திவ்விய விமானம் தோன்றிய இடம் திருப்பாற்கடலாகும்.பிரம்ம தேவனின் தவ ஆற்றலால் அது வெளிப்பட்டது. நெடுங்காலம் அதனைப் பூசித்து வந்த பிரமன்,நித்திய பூஜை செய்யும் பொறுப்பைச் சூரிய தேவனிடம் ஒப்படைத்தான். புகழும், புனிதமும் மிக்க அந்த விமானத்தைத் தன் பொற்கிரணங்களால் நீராட்டிப் பூசை புரிந்து வந்தான் சூரியன்.சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற முடிசூட்டு விழாவுக்கு இலங்கையில் இருந்து விபீஷணன் வந்திருந்தான்.

தன் அன்புப் பரிசாக விமானத்தை விபீஷணனுக்கு தந்தான் தசரத குமாரன். பக்தி சிரத்தையுடன் விமானத்தைத் தன் தலை மேல் தாங்கியவாறு இலங்கைக்குப் புறப்பட்டான் விபீஷணன்.இலங்கை செல்லும் வழையில் ஸ்ரீரங்கம் எதிர்ப்பட்டது.அதை அழகாகச் சுற்றி வளைத்துக்கொண்டு ஓடிய காவிரி நதியும் கண்ணைக் கவர்ந்தது.அந்தக் காவிரிக்கரையில் சற்று நேரம் இருந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு இளைப்பாற விழைந்தான் விபீஷணன்.

அந்தப் புனித விமானம் தரையில் எங்கும் வைக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையடன் தான் விபீஷணனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இளைப்பாற வேண்டுமெனில் தலைச் சுமையை இறக்கியாக வேண்டும்! என்ன செய்வது,எங்கே இறக்குவது என்று விபீஷணன் திகைத்து நின்ற சமயத்தில் அவன் முன்பாக ஓர் அந்தணச் சிறுவன் வந்து நின்றான். விபீஷணனின் தலைச் சுமையைத் தான் வாங்கி வைத்துக் கொள்வதாக வாக்களித்தான்.

விபீஷணனும் தன் தலை மீதிருந்த விமானத்தை அந்தணச் சிறுவனிடம் அதி எச்சரிக்கையுடன் ஒப்படைத்தான்.ஆனால் அந்த அந்தணச் சிறுவனோ அதற்குள் தன் கைச்சுமையை நிலத்தில் வைத்து விட்டிருந்தான். பதறிபோன விபிஷணன் அதை அங்கிருந்து தூக்க முயன்றான்.

ம்ஹும். முடியவில்லை. விபீஷணன் அந்தணச் சிறுவனைத் துரத்திச் சென்று அவன் தலையில் குட்டினான்.அச்சிறுவன் பிள்ளையாராக மாறினான்! மலைக்கோட்டை உச்சிக்குச் சென்று அமர்ந்தான்.

(அரங்கநாதன் கோவில் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் அமைய வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு விளையாட்டை ஆனைமுகன் அரங்கேற்றியதாக வரலாறு. விபீஷ்ணன் குட்டியதால் தலையில் ஏற்பட்ட வீக்கத்தை இன்னும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் தலையில் காணலாம்)

கவலையில் கலங்கிய விபீஷணன் கண்ணீர் விட்டு அழுதான்.அப்பகுதியை ஆண்ட சோழ குலத்தைச் சேர்ந்த அரசன் தர்மவர்மன் என்பவன் அவனுக்கு ஆறுதல் கூறி அவ்விமானத்தைச் சுற்றித் தான் கோயில் எழுப்புவதாகக் கூறினான். விபீஷணன் மேல் இரக்கம் கொண்ட அரங்கநாதன், அவன் வாழ்கின்ற தென்திசை இலங்கை நோக்கிப் பள்ளி கொள்வதாக பரிவுடன் பகர்ந்தான்.

திருவரங்கனின் திருமுகம் தன்னைப் பார்க்கின்ற பெரும் பேற்றினால் மனம் மகிழ்ந்த வீபீஷணன் விடைபெற்றுச் சென்றான்

ஒப்போது சிற்பத்தை பாருங்கள் – ராஜ அலங்காரத்தில் வீபீஷணன், தலையில் கரீடம், கையில் தண்டு – செங்கோல் , ஆசையுடன் விமானத்தை மிக ஜாக்ரதையாக அனைத்து எடுத்து வரும் காட்சி – அருமை.

நண்பர் திரு சிவா கேட்டுகொண்டதன் படி இதோ விமானம் படங்கள். ( இணையத்தில் இருந்து எடுத்தவை )

அற்புத சிற்பங்களை கொண்ட இந்த மண்டபத்தின் தற்போதைய நிலை ….விரைவில் பார்ப்போம்.

முதலை வாயில் போனது மீண்டும் வெளி வருமா ?

இந்த தூணில் இருக்கும் அரிய சிற்பம் ( ஸ்ரீரங்கம் கோயில் தூண் ) நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை – இதை விளக்க நாம் ராமயாணதினுள் செல்ல வேண்டும்.

இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற – ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்க ராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்கிறான் – குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது – ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது – தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் – தன் இயற் பெயர் தண்யமாலி என்றும் – விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி ஆசிபெற்றால் – உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையை அறிந்த ஹனுமான், தன் தலையாய பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்து , அசுரனின் காலை பிடித்து தலைக்கு மேல் சுற்றி விசினான் – அசுரன் அங்கிருந்த இலங்கை ராவணனின் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

இந்த கதையை தான் இந்த தூண் சிற்பம் விளக்குகிறது – உற்று கவனியுங்கள் – படத்தின் வலது புறம் மேல் பாதி – முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குளத்தை காட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே – பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..



என்ன அருமையான வேலைப்பாடு, முதலையின் உடம்பின் அமைப்பு, அதில் இருந்து வெளிவரும் அனுமனின் கம்பீர தோரணை – இவை நாம் முன்னர் ஸ்ரீரங்கம் அலசிய குதிரை சவாரி தூண்களில் பின்புறம் என்பதை மனதில் கொண்டு பாருங்கள் (குதிரையின் பின்னங்கால் தெரிகிறது )

இதே போல முதலை வாயில் இருந்த மீண்ட இன்னும் ஒரு கதை உண்டு – அதற்கும் சிற்பம் இருக்கிறது, அவற்றை வரும் மடல்களில் பார்போம்.

விட்ட குறை – தொட்ட குறை

ஸ்ரீரங்கம் அழகிய தூண்கள் பற்றிய மடல்களை அனைவரும் கண்டு ரசித்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து ஒரு விந்தை நடந்தது. புதிய நண்பர்கள் இருவர் – ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாதவர், உலகில் இரு கோடியில் இருப்பவர். இருவரும் இதே தூண் சிற்பத்தை வரைந்துள்ளனர். இது தான் கலையின் வெற்றி, எங்கோ உறங்கிக்கொண்டு இருக்கும் நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பி, விட்ட கொறை தொட்ட கொறை என்று சொல்வது போல, நம்மையும் ஒரு கலை ரசிகனாக மட்டும் அல்லாமல் கலைஞனாகவே மாற்றும்.

ஒரு கலைஞனுக்கு தன் படைப்பில் உள்ள அழகை தான் மட்டும் இல்லாமல் பலரும் ரசிக்க காண்பதே ஊதியம் ….இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த சிற்பிக்கு இவ்விருவர் மட்டும் அல்லாமல் நாம் அனைவரும் தரும் கூலி – அவனின் உன்னத கலையை ரசித்து நெகிழ்வது.

திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஓவியம்
http://raga-artblog.blogspot.com/2008/09/srirangam.html
1097
1111
1106
திரு ஸ்ரீராம் ராஜாராம் அவர்களின் ஓவியம்
http://album-photo.geo.fr/ap/album/6945/?pos=1&order=InsertDate
1101
1109

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு
….மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணும் ஒரு வினோதம்…

இதில் இரண்டு தூண்களை மட்டும் இப்போது பார்போம்…

125 134 136

அடுத்தடுத்து இருக்கும் இரு தூண்களில்தான் எவ்வளவு வேறுபாடு…உன்னிப்பாக
பாருங்கள்…

முதல் தூணில் குதிரை ( என்ன கம்பீரமாக மேல் எழும்பி தன் குளம்புகளை வீசி
பிளிரும் குதிரை ) – எதிரில் பாயும் புலி…. குதிரையின் மேல் ஒரு வீரன் தனது ஈட்டியால் புலியின் வாயில் குத்துகிறான்…ஈட்டி பாய்ந்து புலியின் தாடையில் வெளி வருகிறது…

128 130

அது போதாதென்று சிற்பி ….குதிரையின் அடியில் ஒரு வீரன் ( அவனுக்கு பின்னால் அவனது உதவி ஆளோ…) அந்த வீரன் வாள் மற்றும் கேடயம் கொண்டு புலியை தாக்குகிறான் ( கேடயத்தை பார்க்க தூணின் மறு பக்கம் போக வேண்டும் … அங்கோ இன்னொரு வீரன் இரு குறு வாள்கள் கொண்டு புலியை தாக்குகிறான் )….. என்ன நுண்ணிய வேலைப்பாடு… பாவம் புலி குதிரை குழம்படி, வாயில் வேல் பாய்ச்சல், ஒரு புறம் கத்தி குத்து, மறு புறம் இரு குறு வாள் குத்து….ஒவ்வொரு ஆயுதமும் குத்திட்டு வெளி வரும் விதம் செதுக்கப்பட்டுள்ளது

சரி அடுத்த தூணுக்கு செல்வோம்….இது மிகவும் வினோதமான சிலை… ஒரு குடுமி வைத்த வீரன்…கையில் தாழ்த்திய கத்தியுடன், கழுத்தில் அழகாக அமர்ந்திருக்கும் ஒரு இளம் பெண்.. அவள் தலையில் காவடி போல் எதையோ சுமக்கிறாள் …. அதன் மேல் குதிரையின் கால்….சரி சற்று பின்னால் இருப்பவரை பார்த்தால்..

ஐய்யய்யோ !! முன்னால் இருப்பவரின் துடையில் இவன் ஒரு குறுவாளை பாய்ச்சுகிறான்…
அவனுக்கு பின்னாலும் ஒரு உதவி ஆள் …..இது என்ன கதை… திரு

என்ன தத்ரூபமான சித்தரிப்பு…!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு – இரண்டாம் பாகம்

நாம் முன்பு பார்த்த இரண்டாம் ஸ்ரீரங்கம் தூண் சிற்பம்…அதில் உள்ள காட்சி என்ன வென்று ஆராயலாம். முதுகில் (சரி) பின்னால் இருந்து தாக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை … படங்களை பாருங்கள்….

 

 

முன்னால் இருப்பவன் தமிழ் வீரன் – குடுமி, இடுப்பில் வேட்டி, நெற்றியில் திலகம், கழுத்தில் சங்கிலி, ஆரம் – காதில் குண்டலம், இரு கால்களிலும் சிலம்பு – எல்லாவற்றையும் விட தமிழனுக்கே உரிய முறுக்கிய மீசை ….அந்த முகத்தில் தான் என்ன ஒரு கம்பீரம் மேலிருக்கும் பெண்மணியோ அதைவிட அழகு.. கட்டை விரலில் கூட மோதிரம் அணிந்து, கழுத்தில் ரெட்டை வட சங்கிலி, மாலை, ஆரம் -கையில் வளையல், காலில் முறுக்கிய சிலம்பு, தலையில் ராக்கடி ….. அப்பப்ப்பா ஒரு நடமாடும் நகை கடை – அதைவிட முகத்தில் மயக்கும் மந்தகாச புன்னகை.. பின்னால் இருப்பவர்கள் அன்னியர்கள் – அவர்கள் உடையை சற்று பாருங்கள் – மேல் சட்டை, முழு கால் குழாய் …..தலையில் குல்லா மற்றும் மீசையை பார்த்தல் – இது ஒருவேளை மாலிக் கபூர் அரங்கத்தை சூறை ஆடிய கதை போல உள்ளது.

எனினும் அந்த அம்மணி குடையாய் பிடித்திருப்பது என்னவென்று விளங்கவில்லை – அதே கோவிலின் இன்னொரு தூணில் இதே போல் ( அதே அம்மணி ) தலைக்கு மேல் தூக்கி பிடித்து இருக்கும் சிற்பம் பாருங்கள்….முதல் சிற்பத்தில் இரு புறத்திலும் அழகிய கிளிகள் உள்ளன… அவற்றை வைத்து அவள் ஒரு குறத்தி என்று பல இடங்களில் அடையாளம் கொள்கின்றனர்…


குறத்தி … ஊசி பாசி மணி என்று இருப்பால் – அப்போது இந்த சிலையில் இருக்கும் ஆபரங்கள அனைத்தும் …. !!!! இல்லையேல் அந்த நாளில் குறத்தி ஆட்டத்திற்கு வசூல் அதிகமோ ??

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு- பாகம் 3

மீண்டும் அதே ஸ்ரீரங்கம் தூண்கள்…. கல்லில் இவை அனைத்தையும் செதுக்கிய அந்த அழகை – அந்த திறமையை நாம் சரியாக உணர, ரசிக்க இன்னும் இரண்டு இழைகள் இடுகிறேன்….

முதலில் அந்த குதிரை வீரன் மற்றும் குதிரையின் அழகு …அடுத்து வரும் மடலில் தூணின் அடியில் மற்றும் பக்கத்தில் இருக்கும் சிற்பங்கள்…

குதிரை மற்றும் அதன் மேல் இருக்கும் வீரனைப்பற்றி விரிவான உரை எழுதலாம் என்று இருந்தேன்….ஆனால் படங்களையே பேச விடுகிறேன்

குதிரையின் வால் ரோமங்கள், அதன் குழம்பு, கடிவாளம், அதன் பற்கள்,
வெளி தொங்கும் நாக்கு ……

அந்த வீரனின் வாள், அதன் கைப்பிடி – அது வளைந்து இருக்கும் பாணி – அது கல் என்பதால் அதற்க்கு பலம் ஊட்ட அதை பின்னாலிருக்கும் தூணுடன் முட்டுக் கொடுத்து …. அடுத்த தூணில் இருக்கும் வீரனின் கையில் ஒரு சிறு குத்தீட்டி …. ( அடுத்த தூணில் அது சிதைந்து உள்ளது )



ஐரோப்பிய நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார் – அங்கே உள்ள குதிரை வீரர்களின் சிற்பத்தை வடிக்கும் பொது – குதிரை முன் இரு கால்களையும் தூக்கிய வாறு வடித்தால் அவர் போரில் வீர மரணம் எய்தார் என்றும், ஒரு கால் மட்டும் தூக்கி இருந்தால் அவர் போரில் பெற்ற காயத்தில் பிறகு உயிர் துறந்தார் என்றும் ….நான்கு கால்களும் தரையில் இருந்தால் அவர் இயற்கையாக இறந்தார் என்றும் ஒரு விதிமுறை உண்டு என்று …. இது உண்மையா ??

……தொடரும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு – பாகம் 4

இப்போது நாம் இந்த அருமையான சிறப்ப தூண்களின் அடியில் இருக்கும் சிற்பங்களை பார்போம்…. மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு சான்று போல ….. சிறிய இடத்தில் என்ன என்ன வடிவங்களை சித்தரிக்கிறான் பாருங்கள்…

 

முதல் இரண்டு படங்கள் – இந்த சிறு சிற்பங்கள் இருக்கும் இடத்தை விளக்கும் உற்று பாருங்கள்.. இவை அனைத்தும் ஒரே கல் என்பது நினைவில் வைத்து மீண்டும் பாருங்கள்…

நாம் பெரும்பாலும் கோவில் தூண்களில் பார்க்கும் யாழி ( கீழே இருக்கும் யானையின் துதிக்கையை மேல் நின்று பிடிக்கும் யாழி ….) இங்கே தூணிற்குள் இருக்கும் சிறு சிற்பத்தில் வரும் காட்சியுனுள் புகுத்தி உள்ளனர்… நடுவில் ஓய்யாரமாய் இடையில் கைவைத்து நிற்கும் பாவை…

 

ஆஹா…..நாய் குட்டி போல துள்ளி வரும் கஜேந்திரனை அன்போடு அணைக்கும் பெருமாள். வாய் பொத்தி ராமனின் உபதேசத்தை பெரும் ஹனுமன். மிக நேர்த்தியாக யானை மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. அவருக்கு மேலே இருக்கும் தோரணத்தில் தான் என்ன ஒரு வேலை பாடு.

 

பறக்கும் கருடனின் மேல் சங்கு சக்ரதாரி. அந்த காட்சியை கருடனை போலவே பெருமாளை தூக்கும் ஹனுமன்…( அப்போதும் பாதங்களை பிடித்திருக்கும் கோலம் அருமை ). அரியணையில் அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் அவனின் கால் படியும் ஹனுமான். லக்ஷ்மியுடன் பெருமாள்…

 

சரி இது என்ன -எதோ பட்டாபிஷேகம் போல உள்ளது -ஒரு புறம் ஹனுமனும் மற்றொரு புறம் கருடனும் கலசத்தை எடுத்து வர… பவ்யமாய் கை கூப்பி நிற்கும் லக்ஷ்மணன்

 

 

இது என்ன – பாற்கடல் கடையும் காட்சி….கீழே இடம் இல்லை என்பதால் – பெருமாளை கூர்மமாக காட்டாமல் தனது இரு கரங்களால் மத்து ( மலையை )தூக்கி பிடித்துள்ளார்….ஆனால் அது என்ன இரு குரங்குகள்.?? சரி இது யார்…தோளில் ஒரு மான் குட்டி,,,காலுக்கு ஒருபுறம் ஒரு நாய் குட்டி…அந்த புறம் ஒரு பெண் ..காலில் முள் தைத்ததோ….பெரும்பாலும் நம் படங்களில் வருவதை காட்டிலும் இங்கே மாறுகிறதே…

391 436

மேலும் பல சண்டை பயிற்சி காட்சிகள் ..மொத்தத்தில் ஒவ்வொரு தூணும் ஒரு கலை பெட்டகம்..