சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-இரண்டாம் பாகம்

பல நேரங்களில் நம் கண் முன்னே, நாம் பலமுறை பார்த்த, பொருள்களில் உள்ள நுணுக்கங்களை ஏனோ கேள்வில்களை எழுப்புவதில்லை. ஆனால் அதை யாரவது கை காட்டியதும் ” அடடே – ஆமாம் இதுவா ” என்று நம்மை சிந்திக்க வைக்கும். அது போலவே இன்று நண்பர் சாஸ்வத் வீணையின் நுனியில் இருக்கும் யாளியை நமக்கு காட்டுகிறார்.

இந்து நாளிதழில் இவ்வாறு சிங்க தலை என்று உள்ளது ! இது சிங்க தலையா ??

கண்டிப்பாக இல்லை. யாளி தான். …மேலும் விவரிக்கிறார் சாஸ்வத் – எசாலம், இரண்டாம் பாகம்

முதல் பகுதியில் இந்த அற்புத டக்ஷினமுர்த்தி வடிவம் என்ற குறிப்பை மட்டுமே சொல்லி அது இருக்கும் இடத்தை மட்டும் சொலிவிட்டு அடுத்த சிற்பங்களுக்கு சென்றுவிட்டேன் . இன்று இந்த அற்புத வீணாதார வடிவத்தை அருகில் சென்று காண்போம்.

தக்ஷினமுர்த்தி வடிவம் எனபது சிவன் குருவாக இருப்பது. சாதாரண குரு அல்ல குருவுக்கு எல்லன் குரு. திரு கோபிநாத் ராவ் ( பல சிற்பக்கலை மாணவர்களுக்கு முதல் குரு இவர்) இவ்வாறு தனது நூலில் இந்த வடிவத்தை பற்றி சொல்கிறார்.

“சிவன் – யோக கலை, சங்கீதம், நாட்டியம் என்று பலவற்றில் வல்லுநர். இவ்வாறு அவற்றை நமக்கு கற்றுக்கொடுக்கும் வடிவமே தக்ஷினமுர்த்தி வடிவம் . இந்த வடிவத்தையே இக்கலைகளை பயில துவங்கும் மாணவர்கள் முதலில் வழிபட வேண்டும்.”

மேலும் – இந்த வடிவம் நான்கு அம்சங்களை கொண்டது – யோக குரு, வினை மீட்டும் கலை, ஞானத்தை – சாஸ்திரங்களை விளக்கும் – வியாக்யானமூர்த்தி. இந்த வடிவத்தை தான் பெரும்பாலும் ஆலயங்களில் தெற்கு திசையில் காண முடியும்.”

இங்கேயும் அதே திசையில் தான் அவர் இருக்கிறார்.

துரதிருஷ்ட வசமாக சிலை சேதம் அடைந்துவிட்டதால் யாரோ அதற்கு முன்னர் புதிதாக ஒரு சிலையை நிறுவி உள்ளனர். நமது பார்வைக்கு சோழர் கால சிலையை அது மறைத்து விடுகிறது.

வீணாதார தக்ஷிணாமூர்த்தி – சங்கீத குரு – இது இன்னும் சற்று அரிய வடிவம். எனினும் பல ஆலயங்களில் இவரையும் நாம் காணலாம். கங்கைகொண்ட​சோழபுரத்தில் இதோ ..

இன்னும் சற்று பழமையான சிலை – கீழையூர்

நிற்கும் பாணியில் உள்ள வடிவங்கள் – கொடும்பாளூர் மற்றும் லால்குடி

இதோ எசாலத்தில்

சிற்ப ஆகமங்களின்படி பார்த்தால் வியாக்யான வடிவத்திற்கும் வீணாதார வடிவத்திற்கும் வீணை தான் வித்தியாசம்! அதுவும் அந்த குடம் வலது ​தொடைமேலே இருப்பது. ஜடா முடி, தலையில் ஊமத்தம்பூ, கபாலம், பிறை, கையில் அக்ஷரமாலை, பாம்பு, தீ, மான் என்று எல்லாம் இருக்கும் – ஆனால் குரு என்பதால் ஆயுதம் தரிப்பது இல்லை போல!

முதல் பாகத்தில் பார்த்த மாதிரி – வியாக்யான வடிவத்திற்கு மேலே விமானத்தில் வீணாதார வடிவம் உள்ளது. அந்த உயரத்தில் பலவற்றை காண முடியவில்லை. இருந்தாலும் அந்த முகமும் வீணையும் என்னை ஈர்த்தது.

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அதன் அழகை பற்றி என்ன எழுதுவது !!

தலைப்பட்டி அழகாக சிரத்தில் – காற்றில் சடா முடி பறந்து முகத்தில் விழாமல் இருக்கவோ ? காதில் அணிகலன், தலையில் வலது புறம் பிறை சூடி …

கழுத்தில் பல்வேறு அணிகலன்கள் – யக்​​ஞோபவீதம் என்று அந்த உயரத்திலும் சிற்பி ஒன்றை கூட விடாமல் செதுக்கிய அழகு அபாரம். ஒருநாள் சாரம் கட்டி மேலே ஏறி இடுப்பில் சிங்கமுகப் பட்டி இருக்கிறதா என்று பார்த்துவிட வேண்டும். அவ்வளவு உயரத்தில் சென்று யாரடா பார்க்கப் போகிறார்கள் என்று விட்டு விடாமல் ​செதுக்கிய அந்தக் காலத்து கலைஞனின் கடமை உணர்ச்சியை எப்படி பாராட்டுவது ?

சரி, வீணைக்கு வருவோம். வலது புறம் குடம் ​தொ​டையில் நிற்கிறது. சற்றே வெளியில் வந்த வண்ணம் – ஆகமங்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றன – வலது கரம் மீட்டும் வண்ணம் அருமை.

இடது புறம் வீணையின் முகத்தில் – இன்று உள்ள வடிவம் போல வளைத்து இல்லாவிட்டாலும் – அங்கே யாளி முகம் தெளிவாக தெரிகிறது.

இந்த வடிவத்தின் காலம் – ராஜேந்திர சோழர் காலம் – அதற்கு அவர் பல சான்றுகளை விட்டுச்சென்றுள்ளார். இதுவும் கங்கைகொண்ட சோழபுரமும் சம காலமாக இருக்க வேண்டும்.

இரண்டையும் சிற்ப வடிவங்களை கொண்டு தெளிவாக குறிக்க இயலும்.

ஒரே போல இருக்கின்றன அல்லவா? இப்போது முதலில் பார்த்த வடிவங்களை கொண்டு ஒப்பிடுங்கள்.

இவை காலத்தால் சற்றே முந்தைய வடிவங்கள் – ஆதித்ய சோழர் காலம் – சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வடித்த வடிவங்கள். இன்னும் காலத்தில் பின்னால் சென்றாலும் இந்த வடிவத்தை நாம் காணாலாம் – ராஜசிம்ஹா பல்லவர் காலம் – காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து வடிவம் இதோ.

கர்நாடகத்தில் உள்ள நரசமன்கலம் சிற்பம்.

இந்த வடிவங்களில் குடம் இடம் மாறி உள்ளது – நாம் முன்னர் கண்ட பதிவில் இது போன்ற பல வடிவங்களில் குடம் மேல் பக்கம் இருக்கும் வண்ணம் உள்ளன.
அப்படியானால் வீணைகள் முதலில் குடம் மேலே இருக்கும் படி வடிக்கப்பட்டு – பின்னர் அந்த பழக்கம் மாறியதா? இல்லை இரண்டு வடிவங்களுமே அந்நாளில் இருந்தனவா? அப்படி என்றால் எதற்காக ராஜேந்திர சோழர் காலத்தில் எல்லா சிற்பங்களிலும் ஒரு சேர குடத்தை கீழ்ப்பக்கம் வைக்கத் துவங்கினார்?

இப்படி ஒரு ஆராய்ச்சி செய்தால் இசையும் சிற்பமும் மேலும் சங்கமிக்கும் என்பது உறுதி ! குரு இன்னும் நமக்கு ஏதோ சொல்லித்தருகிறார் போல!

இன்னும் இருக்கிறது. முன்னர் இந்த வடிவத்தை கீழிருந்து காண்பது கடினம் என்று சொன்னேன் அல்லவா – பின்னர் எப்படி படம் எடுத்தேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆலயம் மணற்மேட்டில் புதையுண்டு இருந்தது. அதாவது காலப்போக்கில் அருகில் உள்ள கிராமம் வளர வளர தரையின் சமன் மேலே ஏறி விட்டது. அதனால் அருகில் உள்ள மேட்டில் ஏறி இந்த சிற்பத்தைப் பார்த்து விடலாம்.

அப்படி நாங்கள் சென்ற ​போது இன்னும் ஓரிரண்டு ஆச்சரியங்கள் எங்களுக்கு தென்பட்டன. மிகவும் பழமை வாய்ந்த கிராம தெய்வ வடிவங்கள் அவை. அவற்றைப் பற்றி ……தொடரும்

ரிஷபாந்திகா , வீணாதாரா, அர்தனாரி சிவன் – திரு லாக்வூட் அவர்களது பல்லவ கலை நூலில் இருந்து

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) – நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் – அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் – கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.