சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 2 – இராவணன்


ஹோ சி மின்ஹ் அருங்காட்சியகத்தில் சம்பா சிற்பங்களிடம் மனதைப் பறிகொடுத்த
நாள் முதலே மிசோன் கோயில்களுக்கும் தனாங் சம்பா சிற்பங்கள் அருகாட்சியகத்துக்கும் போக வேண்டும் என்ற ஆவல் மனதை ஆட்கொண்டு விட்டது. அதிர்ஷ்டவசமாக சென்ற வாரம் அந்த நெடுநாள் ஆசையும் நிறைவேறியது. மறக்க முடியாத இரண்டு நாட்கள்…

உதயகாலையில் ஆதவனின் கிரணங்களில் மிசோன் காண முடிவு செய்து விடியற் காலை நாலரை மணிக்கே அலாரம் வைத்து புறப்பட்டேன். தங்கியது தானங் அருகே ஹோய் ஆன் என்ற அழகிய இடத்தில – அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணம் – கோடை காலம் என்பதால் அதற்குள் நல்ல வெய்யிலே வந்து விட்டது. எனினும் ஆள் நடமாட்டமே இல்லை – அழகிய புல் தரை கொண்ட சைட் – மலை அடிவாரத்திலேயே காரை நிறுத்த வேண்டும். கொஞ்சம் மலை ஏறி இறங்கினால் ……

இந்த செங்கல் கோயில்களை பற்றிய பதிவிற்கு இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் காக்க வேண்டும். இன்னும் நிறைய வேலை பாக்கி உள்ளது – படிக்க பல விஷயங்கள் உள்ளன. எனினும் என் கண்ணிற்கு மிகவும் பிடாத சிற்பம் ஒன்றை இன்றைக்கு உங்களுக்கு படைக்கிறேன்.

அங்குள்ள கோயில்களில் உள்ளேயே ஒரு தற்காலிக அருங்காட்சி போல வைத்துள்ளனர் – வெளியில் பெரிதவலில் ஒரு அருங்காட்சிகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. எனினும் இன்றைக்கு நாம் காணும் சிற்பம் தரையில் ஒரு பெயர் பலகை கூட இல்லாமல் இருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த அருமை தெரியுமோ?

ஆம் இது ஒரு அற்புத புடைப்புச் சிற்பம். ராவண அனுக்ரஹ மூர்த்தி. பத்தாம் நூற்றாண்டு என நான் கணிக்கிறேன். இதனைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு குறிப்பு கிடைத்தது. ஆனால் அருமையான குறிப்பு.

Champa and the Archaeology of Mỹ Sơn (Vietnam) என்ற நூலில் இந்த வடிவம் கண்டெடுக்கப்பட்ட பொது எடுத்த படம்.

நூலில் உள்ள ஆங்கில குறிப்பு : Tympanum depicting Ravana shaking Mt. Kailash. Recovered at My Son. Present location unknown ( photograph Musee Guimet Archive, undated)

நண்பர் ஓவியர் திரு முரளிதரன் உதவியுடன் இதனை மேலும் ரசிக்க ஒரு முயற்சி. இன்றைய நிலையில் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இறைவனின் உடல் பாதிக்கு மேல் சிதைந்து விட்டது.

இந்த வடிவத்தில் பிள்ளையார் வருவது கவனிக்க வேண்டிய ஒன்று. அருமையான நந்தி. கம்போடியா சிற்பம் முன்னர் நாம் பார்த்த போதும் அங்கேயும் பிள்ளையார் இருந்தார்.

இந்த சம்பா சிற்பத்தில் ஒரு விமானம் முழுமையாக இருப்பது வினோதமான ஒரு அம்சம். அதற்கு அடியில் ஒரு பெரிய யானை உள்ளது. மேலே காட்டு மிருகங்கள் உள்ளன ( ஒன்று குகையில் இருப்பது போலவும் உள்ளது )

இராவணனின் வலிமையை மிகவும் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஏதோ பறவை ஒன்று இறக்கையை விரிப்பது போல விரியும் கைகள் உள்ளன. காலை மாற்றி மாற்றி கயிலையை தூக்க முயற்சிக்கும் காட்சியை காட்ட அவனுக்கு மூன்று கால்கள் போல வடித்தாலும் – அவை இரு விதமாக அவன் திரும்பத் திரும்ப முயற்சிப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சியே !

முகம் உள்புறம் திரும்பி இருக்கும் வண்ணம் வடிப்பது மிகவும் கடினம். இதை நாம் எல்லோரா காட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஆனால் சம்பா சிற்பியின் முழு திறமையை காண இராவணின் பத்து தலைகளை காட்ட அவன் உபயோகித்த பாணி தான் இந்த சிற்பத்தின் உன்னதம்.

இவ்வாறு அதுவும் புடைப்புச் சிற்பத்தில் வடிப்பது மிகவும் கடினம் – பத்து தலை சிற்பத்தில் கட்டுவது மிகும் கடினம். அதனை புகழ் பெற்ற மல்லை ராஜசிம்ஹா பல்லவனின் சிற்பிகளே ஓலக்கநெஸ்வர ஆலயத்தில் சரியாக செய்யவில்லை என்று தான் நான் சொல்வேன்.

சம்பா சிற்பிக்கு தலை வணங்குகிறேன். இந்த பதிவை முடிக்கும் தருணத்தில் நண்பர் முரளி ஓவியத்தையும் முடித்து விட்டார் ….கலை என்றும் அழிவதில்லை….

தமிழகக் கோயில் வாகனங்கள் – பிரதீப் சக்ரவர்த்தி

நான் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்களை நேரில் பார்த்தது இல்லை (இதுவரை). சென்ற மே மாதம் முக நூல் அறிமுகம் கிடைத்தது. முதல் உரையாடல் முடிந்தவுடனே புரிந்தது. இவர் சாதாரண நபர் இல்லை என்று. கூகிளார் உதவியுடன் அவர் நாளேடுகளுக்கு எழுதிய பதிவுகள் கிடைத்தன. இப்படி ஒரு விவேகமும் தீர்க்க சிந்தனையும் அத்துடன் நல்ல ஆராய்ச்சி செய்து மக்களுக்கு சென்றடையும் எளிய முறையில் எடுத்துச் செல்லும் நோக்கம் உடைய இவர், எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், வெற்றிகரமாக சென்னையில் ஒரே வருடத்தில் முப்பது ஆலய நடை (டெம்பிள் வாக் ) நடத்தினார் என்பதையும் படித்தேன். சமீபத்தில் அவர் ஆற்றிய சில உரைகளின் படமும் இணையத்தில் கிடைத்தது. அப்போது தான் புரிந்தது நவீன ஆடைகளுக்குள் பழைய காலத்து கதாகாலக்ஷேபம் செய்யும் வித்தகர்கள் போன்று ஹாஸ்யம் கலந்து மக்களை தன வசம் இழுத்து நல்ல கருத்துக்களை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வசீகரம் கொண்ட ஒரு வித்துவான் இருக்கிறார் என்று.

இப்படி இருக்கையில், அவர் விரைவில் இரு நூல்களை வெளியிடுகிறார் என்றதும் மகிழ்ந்தேன். தஞ்சை பற்றிய ஒரு நூல் ” Thanjavur – A Cultural History” மற்றும் ” தமிழகக் கோயில் வாகனங்கள் “. முதல் நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இரண்டாவது நூல் சமீபத்தில் சன்மார் நிறுவன பதிப்பகமான கலம்க்ரியா அவர்கள் உதவியுடன் வெளிவந்துள்ளது.

வாகனம் என்றவுடன் நினைவுகள் சலசலவென பின்னோக்கி ஓடின. ஏன் முதல் மிதிவண்டி – பி எஸ் ஏ நிறுவனம் எஸ் எல் ஆர்!, கொஞ்சம் போன பின்னர் அட்லாஸ் நிறுவன எம் டி பி! அப்பாவின் லாம்பி ஸ்கூட்டர், பல ஆண்டுகள் கழிந்த பின்னர் பஜாஜ் சேடக்! அப்போது சாலைகளில் நான்கு பேர் ஒரே சேடக் மேல் பயணம் செய்யும் பொது அருகில் செல்லும் அம்பாசடர் அல்லது ஃபியட் கார்கள் (பெங்களூர் ஆசாமிகள் மட்டும் அந்த பிரீமியர் பத்மினியை விட மாட்டார்கள்!!). நடுவில் ஸ்டாண்டர்ட் 20000, மின்மினி போல வந்து மறைந்தது. பிறகு மாருதி 800 களின் ஆதிக்கம் என்று, நமக்கோ அந்நாட்களில் அர்னால்டு படம் பார்த்துவிட்டு ஹர்லி டேவிட்சன் மோகம், ராயல் என்பீல்ட் புல்லட் என்று ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை!! ஒரு சிறு வரலாறு. எனினும் நாம் இன்று இன்னும் பின்னோக்கிச் செல்கிறோம், கால் நடை, மற்றும் கால்நடை வாகனங்களே இருந்த காலம். அந்தப் பாரம்பரியத்தை இன்றும் போராடி காத்து நிற்கும் கோயில் வாகனங்கள்.

ஆம் போராட்டம் தான். வருடத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களோ வெளியில் வரும் இவை, அதுவும் தமிழ் நாட்டில் தினசரி பூஜை நடத்தவே திண்டாடும் நிலையில் உள்ள கோயில்களில் விழா எடுக்க எங்கே முடிகிறது, அப்படியும் விழா நடந்த பின்னர், பூட்டிய இருட்டு அறைகளுக்குள் வசிக்கும் இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. ஆலயத்தை சுற்றி வரும்போது கண்ணில் பட்டால் பார்ப்பது கூட இல்லை. இந்த நிலை அங்கு தூண்களில் உள்ள அருமையான சிற்பங்கள், விமான/கோபுர சுதை வேலைப்பாடுகள் என்று பல கலை பொக்கிஷங்களின் இன்றைய அவல நிலை தான். அப்படி இருக்கும் இவற்றில் வாகனங்களைப் பற்றி எழுத எண்ணிய பிரதீப் அவர்களுக்கு முதலில் ஒரு பாராட்டு.

நூல் முகம் பார்த்தவுடனே நெஞ்சம் கொள்ளை போனது. அருமையான கோட்டோவியம். முகப்படம் மட்டும் அல்ல, ஒவ்வொரு வாகனத்தையும் அருமையாக வரைந்துள்ளார் திரு V. விஜயகுமார் அவர்கள். மென்மேலும் இப்படி பல ஓவியங்களைப் படைத்து அமரர் சில்பி மற்றும் ஓவியர் பத்மவாசன் போன்று வரவேண்டும் என்று வாழ்த்துக்கள். மேலும் இந்த முழு நூலையும் இரு மொழிகளில் படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. முதல் பார்வையிலேயே இந்த நூல் ஆர்வலர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியரின் முன்னுரை படிக்கும் போது ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது. இப்படி எதற்காக ஒரு முன்னுரை ஆரம்பம் என்று தோன்றியது? தனது நிலையை தைரியமாகவும் தெளிவாகவும் விளக்க ஆசிரியரின் இந்த வெளிப்படையான எழுத்துக்கள் நமது சமயத்தில் இன்றும் இருக்கும் பிரிவுகள் பற்றி நினைவூட்டின. தொடர்ந்து படிக்கையில் அவர் நூல் அறிமுகத்தில் சுட்டிக்காட்டும் ஒரு கல்வெட்டுக் குறிப்பு நூலின் தன்மையையும் ஆசிரியரின் நோக்கங்களையும் அருமையாக எடுத்துக்காட்டியது.

நூலின் பொருளடக்கம் இதோ. பல அறிய வாகனங்களைத் தேடி பிடித்து விவரித்துள்ளார் பிரதீப்.

நமக்கென்று நூலில் இருந்து ஒரு சிறப்பு பார்வை – அதிகார நந்தி.

எனக்கு மிகவும் பிடித்த வாகனம் கைலாச வாகனம், அடியில் சிக்கி இருக்கும் இராவணன் , தனது ஒரு தலையை கொய்து தன கையையே தண்டாக கொடுத்து நரம்புகளை மீட்டும் காட்சி அருமை.

அடுத்து ஆடு வாகனம், ஆமாம் சரியாகத் தான் படிக்கிறீர்கள். பிரதீப் எந்த அளவிற்கு இந்த நூலிற்காக உழைத்துள்ளார் என்பது இந்த வாகனத்திற்கு அவர் கொடுக்கும் இலக்கிய சான்றுகள் மூலம் தெரிகிறது.

எல்லா வாகனங்களும் பிராணிகள், பறவைகள் , தேவர்கள் என்பது இல்லை. சில மரங்களும் வாகனங்களாக உள்ளன. நமது முன்னோர் இயற்கையை எப்படி கொண்டாடி வழிபட்டனர் என்பதன் குறிப்புகளே இவை. (நாம் இந்தப் பாடத்தை என்று தான் கற்போமோ!)

நமது மதம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதில் வரும் புராணக் கதைகள், அத்துடன் வரும் முரண்பாடுகள், எல்லாம் அழகு தான். ஒரு புலி வாகனத்தை பற்றிய சிறு குறிப்பில் கூட வாதம் ஏற்படலாம் என்பதும் அழகு தான்.

நூல் ஆசிரியர், ஓவியர், மற்றும் இதை உருவாக்கி வெளி கொண்டுவந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நூலை படிக்கும் போதே, முன்னிரவு நேரத்தில் ஜன நெரிசல் நிறைந்த வீதியில், தாரை தப்பட்டை ஓசையுடன், ஆடி ஆடி பவனி வரும் கம்பீர வாகனத்தின் மேல் அமர்ந்து வரும் சுவாமி தரிசனம் மட்டும் அல்லாமல், ஒளியுடன் மண்ணெண்ணெய் உமிழும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசமும் வருகிறது.

பின் குறிப்பு: தற்போது நூல் முதல் பிரதிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. விரைவில் அடுத்த பிரதி வெளிவரும் !

இராவணனை வென்ற ஜடாயு

என்னடா? தப்பு தப்பா தலைப்பு போட்டுள்ளேன் என்று பலர் கூறுவது கேட்கிறது. முழுவதையும் படியுங்கள் அப்போது தான் புரியும். அதுவும் இதை நான் சொல்ல வில்லை – தேவாரப் பாடல் துணை உண்டு.
www.shaivam.org

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொருளுரை:
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட

சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.

ஜடாயு இராவணனுடன் போரிட்டு மடிந்தான் என்று தானே படித்தோம். இது என்ன புதுக் கதை ? சரி சிற்பத்தை பார்ப்போம். ஜடாயு இராவணனு்டன் போரிடும் சிற்பம் மிகவும் சிலவே உள்ளன. பெரும்பாலும் ரவி வர்மா ஓவியமே கிடைக்கும்

எனினும் தேடி பிடித்தோம். ஒன்று நண்பர் முரளி அவர்கள் உபயம் – எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பம். மற்றொன்று இந்தோனேசியா பரம்பணன் ( அதை பின்னர் பார்ப்போம்) – இராவணன் வெறி கொண்டு ஜடாயுவை ஒரு பெரிய வாளால் தாக்கும் சிற்பம்.

அந்த வாள் தான் மிகவும் முக்கியம்.

சரி , யார் இந்த ஜடாயு?. முன்னர் கருடனின் கதையில் பார்த்தோமே – கருடனின் அண்ணன் அருணன் – சூரியனின் தேரோட்டி, அவனுடைய மைந்தன். அருணனுக்கு இரண்டு மகன்கள் – முதல் மகன் சம்பாதி , அடுத்து ஜடாயு. இருவரும் பறவைகள்.

கருடனின் அண்ணன்

ஒருமுறை இருவருக்கும் போட்டி – யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான். அப்போது அவனது சிறகுகள் கருகின . கிரேக்க ஐகாருஸ் கதை போல உள்ளதா? இது நான் கூறுவது அல்ல – கம்பன் கூறுவது ( முடிவில் ராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன )

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

‘தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

‘”ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்” என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

‘முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
“எந்தை! நீ காத்தி” என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

‘மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், “சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி”‘ என்றான்.

சரி சரி, மீண்டும் சிற்பத்தின் கதைக்கு வருவோம்.

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=631

124. மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்றான்.

பெரிய மீன் கொத்திப் பறவை குறி தப்பாமல் மீனைப் பற்ற பாய்ந்தாற் போலச் சடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும் தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். அதைக் கண்ட சடாயு, ” உனது வலிமை, போய் விட்டது! உனது வலிமை இவ்வளவு தானா?” என்று இழிவாக கூறினான்.

125. அவ் வேலையினை முனிந்தான் முனிந்து ஆற்றலன் அவ்
வெல் வேல் அரக்கன் விடல் ஆம் படைவேறு காணான்
இவ் வேலையினை இவன் இன் உயில் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்.

வல்லவனான இராவணன் அப்போது மிகுந்த கோபம் கொண்டான். அவ்வாறு கோபித்த – கொடிய வேலை இயல்பாக ஏந்தி இருக்கும் அந்த இராவணன், அந்த நேரத்தில் சடாயுவின் மேல் செலுத்தத்தக்க ஆயுதம் வேறு இல்லாததைக் கண்டான். அதனால் ” இப்பொழுதே இவனது இனிய உயிரை அழிப்பேன் ” என்று முடிவு செய்து குறி தவறாமல் தாக்கும் ‘சந்திரகாசம்’ என்னும் பெயருடைய தனது நீண்ட வாளை, உறையில் இருந்து எடுத்து, சடாயுவின் மீது மிகச் சரியாக எறிந்தான்.

அது என்ன சந்திரகாசம். இராவணன் பலமுறை பலரிடம் தோற்று பொன்னன். நாம் வாலியிடம் அவன் தோற்றதைக் கூட முன்னர் பார்த்தோம்.

வாலியிடம் இராவணன் தோற்றான்

அதே போல அவன் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்றான் ( சிற்பம் இன்னும் எதுவும் கிடைக்க வில்லை ). மேலும் ஈசனிடம் அவன் தோற்ற காட்சியை நாம் பல இடங்களில் பார்த்தோம். அவ்வாறு அவன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது ,பிறகு தனது கை நரம்புகள் மற்றும் தலை கொண்டு செய்த வீணையை மீட்டி சிவபெருமானின் ஆசி பெற்ற பின்னர் அவர் அளித்த பரிசே இந்த வாள். மேலும் படியுங்கள்
இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 2

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 3

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 4

126. இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

வலியின் தலை தோற்றிலன் மாற்ற அருந்தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்னின் வேந்தன்
குலிசம் எரியச் சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்.

இராவணனது வலிமைக்கு முன்னே அதுவர சடாயு தோற்றான் அல்லன். ஆனாலும் எவறாலும் தடுக்க முடியாத சிவபெருமான் அளித்த- தெய்வத்தன்மை பொருந்திய அந்த வாளால் சடாயு வீழ்த்தப்படும் நேரம் வந்து விட்டது என்று ஆகிவிட்டது. அதுவன்றியும் அவனுடைய வாழ்நாளும் குறைவு பட்டு முடியும் கட்டத்தை அடைந்துவிட்டது. ( இந்திரனின் வஜ்ராயுதம் போல் பலம் பொருந்திய, அதை விடவும் பலம் பொருந்திய வாளால் ஜடாயுவின் சிறகுகள் வெட்டி வீழ்த்தப் பட்டன, ராவணனால். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாய் மலை விழுந்ததைப் போல எனச் சொல்லி இருக்கின்றது. சந்திரஹாசம் என்னும் இந்த வாள் அத்தகையதொரு வலிமையுடனேயே ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியது.)

இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா – இராவணனை வென்றவன் ஜடாயு என்பதை..

படம் – திரு முரளி , குறிப்புகள் / விளக்கங்கள் உதவி திரு சுப்ரமணியம் அவர்கள், திரு திவாகர் அவர்கள் மற்றும் கீதா அம்மா

நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் எவ்வாறு தோன்றியது?

இன்றைக்கு ஒரு அற்புத சிற்பம் பார்க்கிறோம் , அதனை ஒட்டிய அற்புத வரலாறு மற்றும் இந்த தளம் நாங்கள் நிறுவியதன் முழு மகிழ்ச்சி என்று பல விஷயங்கள் இந்த இடுகையை சிறப்பிக்கின்றன. ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டப அற்புத தூண்கள் நாம் முன்னர் பல பார்த்தோம், அப்போது திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள், அங்கே உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை பற்றி கூறினார். அப்போது அது என்னிடத்தில் இல்லை, நண்பர் அசோக் அவர்களிடம் அதை பற்றி கூறியவுடன், அதற்கு என்ன, நானே சென்று படம் எடுத்து வருகிறேன் என்று அங்கு சென்ற அற்புத படங்கள் பல எடுத்து வந்தார். இந்த அற்புத சிற்பத்தை பற்றி நான் எழுதுவதை விட பல கோயில் புராணங்களை அழகே தொகுத்து அளிக்கும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் எழுதினால் மிக சிறப்பாக இருக்கும் என்று அவர்களை அணுகினேன் ( நண்பர் திரு செந்தில் அவர்கள் தக்க சமயத்தில் அவர்களின் அலைபேசி என்னை தந்து உதவினார் ). திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் கேட்டதும் இந்த அருமையான இடுகையை தந்தார். படித்து பார்த்து மகிழுங்கள்.

புண்ணியம் நல்கும் புருஷோத்தமன் – *ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்.*

”நாராயணா!” என்று நாவிக்க நாளும் நவில்வோர்க்கு நற்கதிக்குயை நல்குவான் திருமகள் நாதன்!

அந்தத் திருமாலவன் எழுந்தளியிருக்கும் திவ்விய தேசங்கள் அனைத்திலும் அன்று முதல் இன்று வரை ஈடும் இணையும் இன்றி முதன்மைத் திருக்கோயிலாய்த் திகழ்வது திருவரங்கமாகும்.கங்கையின் தூயதாய காவிரிக்கும்,கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒர் தீவு போல் அமைந்துள்ளது.

அரங்கமாநகர் ஊர்,அளவில் சிறியதே ஆனாலும் புகழ் ஆகாயம் அளாவியதாகும்.

நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் இங்கு எவ்வாறு தோன்றியது?

திருவரங்கம் கோயிலின் திவ்விய விமானம் தோன்றிய இடம் திருப்பாற்கடலாகும்.பிரம்ம தேவனின் தவ ஆற்றலால் அது வெளிப்பட்டது. நெடுங்காலம் அதனைப் பூசித்து வந்த பிரமன்,நித்திய பூஜை செய்யும் பொறுப்பைச் சூரிய தேவனிடம் ஒப்படைத்தான். புகழும், புனிதமும் மிக்க அந்த விமானத்தைத் தன் பொற்கிரணங்களால் நீராட்டிப் பூசை புரிந்து வந்தான் சூரியன்.சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற முடிசூட்டு விழாவுக்கு இலங்கையில் இருந்து விபீஷணன் வந்திருந்தான்.

தன் அன்புப் பரிசாக விமானத்தை விபீஷணனுக்கு தந்தான் தசரத குமாரன். பக்தி சிரத்தையுடன் விமானத்தைத் தன் தலை மேல் தாங்கியவாறு இலங்கைக்குப் புறப்பட்டான் விபீஷணன்.இலங்கை செல்லும் வழையில் ஸ்ரீரங்கம் எதிர்ப்பட்டது.அதை அழகாகச் சுற்றி வளைத்துக்கொண்டு ஓடிய காவிரி நதியும் கண்ணைக் கவர்ந்தது.அந்தக் காவிரிக்கரையில் சற்று நேரம் இருந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு இளைப்பாற விழைந்தான் விபீஷணன்.

அந்தப் புனித விமானம் தரையில் எங்கும் வைக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையடன் தான் விபீஷணனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இளைப்பாற வேண்டுமெனில் தலைச் சுமையை இறக்கியாக வேண்டும்! என்ன செய்வது,எங்கே இறக்குவது என்று விபீஷணன் திகைத்து நின்ற சமயத்தில் அவன் முன்பாக ஓர் அந்தணச் சிறுவன் வந்து நின்றான். விபீஷணனின் தலைச் சுமையைத் தான் வாங்கி வைத்துக் கொள்வதாக வாக்களித்தான்.

விபீஷணனும் தன் தலை மீதிருந்த விமானத்தை அந்தணச் சிறுவனிடம் அதி எச்சரிக்கையுடன் ஒப்படைத்தான்.ஆனால் அந்த அந்தணச் சிறுவனோ அதற்குள் தன் கைச்சுமையை நிலத்தில் வைத்து விட்டிருந்தான். பதறிபோன விபிஷணன் அதை அங்கிருந்து தூக்க முயன்றான்.

ம்ஹும். முடியவில்லை. விபீஷணன் அந்தணச் சிறுவனைத் துரத்திச் சென்று அவன் தலையில் குட்டினான்.அச்சிறுவன் பிள்ளையாராக மாறினான்! மலைக்கோட்டை உச்சிக்குச் சென்று அமர்ந்தான்.

(அரங்கநாதன் கோவில் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் அமைய வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு விளையாட்டை ஆனைமுகன் அரங்கேற்றியதாக வரலாறு. விபீஷ்ணன் குட்டியதால் தலையில் ஏற்பட்ட வீக்கத்தை இன்னும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் தலையில் காணலாம்)

கவலையில் கலங்கிய விபீஷணன் கண்ணீர் விட்டு அழுதான்.அப்பகுதியை ஆண்ட சோழ குலத்தைச் சேர்ந்த அரசன் தர்மவர்மன் என்பவன் அவனுக்கு ஆறுதல் கூறி அவ்விமானத்தைச் சுற்றித் தான் கோயில் எழுப்புவதாகக் கூறினான். விபீஷணன் மேல் இரக்கம் கொண்ட அரங்கநாதன், அவன் வாழ்கின்ற தென்திசை இலங்கை நோக்கிப் பள்ளி கொள்வதாக பரிவுடன் பகர்ந்தான்.

திருவரங்கனின் திருமுகம் தன்னைப் பார்க்கின்ற பெரும் பேற்றினால் மனம் மகிழ்ந்த வீபீஷணன் விடைபெற்றுச் சென்றான்

ஒப்போது சிற்பத்தை பாருங்கள் – ராஜ அலங்காரத்தில் வீபீஷணன், தலையில் கரீடம், கையில் தண்டு – செங்கோல் , ஆசையுடன் விமானத்தை மிக ஜாக்ரதையாக அனைத்து எடுத்து வரும் காட்சி – அருமை.

நண்பர் திரு சிவா கேட்டுகொண்டதன் படி இதோ விமானம் படங்கள். ( இணையத்தில் இருந்து எடுத்தவை )

அற்புத சிற்பங்களை கொண்ட இந்த மண்டபத்தின் தற்போதைய நிலை ….விரைவில் பார்ப்போம்.

தூங்காதே தம்பி தூங்காதே

நாம் அனைவரும் எப்போதாவது ஒரு முறை நம் பெற்றோர் இடம் இவ்வாறு திட்டு வாங்கி இருப்போம். அதுவும் அதிகாலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் வரும் தூக்கம் ….அதன் சுகமே சுகம். ஆனால் இந்தோனேசியா பரம்பணன் கோயிலில் இந்த காட்சியை கண்டவுடன் நடு மண்டையில் நச்சென்று குட்டினாற்போல விழிப்பு வந்தது.

சரி, முதலில் கதையைப் பார்ப்போம். இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும் ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ? அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம் ( அதிலும் நம் இந்திரன் கை உண்டு ). தங்கள் அன்னையின் அறிவுரையின் பெயரில் இராவணன், கும்ப கர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீடணன் முறையே நான்முகனிடம் வரம் வேண்டி தவம் இருக்கின்றனர்

முதலில் இராவணனிடம் தோன்றும் நான்முகன் என்ன வேண்டும் என்று வினவ , சாகா வரம் கேட்கிறான் ராவணன். அது இயலாது என்று பிரம்மன் உரைக்க, தேவர், அசுரர், கடவுள் , மிருகம் , பாம்பு என்று மனிதனை தவிர ( தனது சக்தியின் மேல் அவனது ஆணவத்தால் ) வேறு எவராலும் அழியா வரம் பெற்றான்.

இதை கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்கு பெரியவனான ( உருவத்தில் ) கும்ப கர்ணனும் இது போல எதாவது வரம் பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம் கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.

அப்போது என்ன நடந்தது :

சரி சினிமா பாணியில்

“பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார்.

அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப் பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.

நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள். நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.

பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.

அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில் அசைக்கமுடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்.

அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால் எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம், ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால் மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.

சரி, இப்போது சிற்பத்திற்கு வருவோம். ராமயணத்தின் தாக்கம் – அதிலும் கும்பகர்ணனை படை கொண்டு எழுப்பும் காட்சி, இந்தோனேசியா பரம்பணன் கோயிலில்.

ராமனிடம் தோற்று நிராயுதபாணியாய் நின்ற ராவணனை ” இன்று போய் நாளை வா “என்று
ராமன் அனுப்ப,அவமானம் தாங்க முடியாத ராவணன், தன் வலிமையும், சக்தியும்
இன்று ஒருநாள் யுத்தத்திலேயே குறைந்து விட்டதையும் உணர்ந்தவனாய்,
தன்னுடைய கிரீடமும், தேரும் சுக்குநூறாகப் போய்விட்டதையும் கண்டவனாய்,
வேறு வழியில்லாமல், ராமன் சொன்ன வார்த்தைகளினால் தலை கவிழ்ந்து
திரும்பிகிறான்.

அவமானத்தில் தம்பியை நித்திரையில் இருந்து எழுப்பினால் மரணம் என்று தெரிந்தும் முயல்கிறான் ராவணன் .

அரக்கர்களில் சிலர் சென்று கும்பகர்ணனை எழுப்ப ஆரம்பிக்கின்றனர். ஒரு பெரிய மலை போல் படுத்திருந்த கும்பகர்ணனின் திறந்த வாயானது, அந்த மலையின் குகை போல் தோன்றியதாம். கும்பகர்ணனின் மூச்சுக் காற்று அனைவரையும் வெளியிலும், உள்ளேயும் மாறி, மாறி இழுக்க, சமாளித்த அரக்கர்கள் அவனை எழுப்பும் ஆயத்தங்களைச் செய்தனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்ததும் கும்பகர்ணன் சாப்பிடப்பல்வகை மிருகங்கள், அவற்றின் மாமிசங்கள், குடம் குடமாய்க் கள், ரத்தம், பல்வேறு விதமான உணவு வகைகள் போன்றவை தயார் நிலையில் இருந்தன. பின்னர் அவன் உடலில் வாசனைத் திரவியங்கள்
பூசி, கொம்புகளையும், எக்காளங்களையும், சங்குகளினாலும் பெரும் சப்தங்கள் எழுப்பிப் முயற்சி செய்தனர். இதை சிற்பத்தில் பாருங்கள்.

குதிரை வீர்கள் பலர் அவன் மீது ஏறி முயல்கின்றனர். சிற்பத்தில் ஒரு குதிரையும் அதன் மேல் உள்ள வீரனும் சோர்ந்து செல்வதும், மற்றோர் குதிரை வீரன் அந்த பணியை தொடர்வதும் பாருங்கள். அது போதாதென்று பலர் ஈட்டி, வாள் கொண்டு அவனை குத்தி எழுப்புகின்றனர். ஒரு யானை வேறு காதருகில் கத்தி முயல்கிறது.

இதை பார்க்கும்போது என் அன்னை இவ்வளவு தொல்லை பட வில்லை என்னை எழுப்ப
என்றும் தோன்றுகிறது.

Image courtesy: http://oldsite.library.upenn.edu/etext/sasia/aiis/architecture/prambanan/

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்
170116991757
நாம் இன்றைக்கு மல்லையில் ஒரு அபூர்வமான இடம் செல்கிறோம். பலரும் தொலைவில் இருந்து பார்த்து விட்டு சென்றுவிடும் இடம். அங்கு செல்லும் சிலரும் அங்கு இருந்து தெரியும் அற்புத இயற்கை எழிலை மட்டுமே காண்கின்றனர். சிலர் புதிய கலங்கரை விளக்கத்தை ( அதுவே 1887 வில் நிறுவியது ) படம் எடுக்க இங்கே வருவர்.

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில் – இதை ஏன் அபூர்வம் என்று சொல்கிறோம். இது குடவரை கோயில் அல்ல, கல் கொண்டு கட்டப்பட்ட கோயில் , அதுவும் ஒரு சிறு மலையின் மேல். பல காலம் இதை ஆங்கிலேயர் கலங்கரை விளக்கமாக உபயோகித்தனர் !!( padangalukku nanri British Library)
16891686
168016831692
படங்களில் இருந்து இது இருக்கும் இடம் விளங்கும், மகிஷாசுரமர்தினி குகையை அடுத்து உள்ள குறுகிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும்.
17241722
எனினும் இந்த கோயில் மிகவும் அருமையாக உள்ளது – காற்று மழை, கரி , மனிதன் என்று அனைத்தையும் தாண்டி தன் அருமையான சிற்பங்களுடன் உள்ளது – ராஜ சிம்ஹன் அவனது அழகிய சிங்க தூண்கள், நமக்கு மிகவும் பிடித்த குள்ள பூத கணங்கள், அருமை.
16971703170717511754
நான், திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் மல்லை ( விரைவில் புத்தகமாக வெளி வருகிறது ) படித்தபோது- மேலும் அறிந்தேன்.

17051709
பெயர் காரணம் – வீட்டுக்கு ஒரு உழக்கு எண்ணெய் சேகரித்து, இந்த கோவிலில் அணையா விளக்கு எரியுமாம். அதனால் அதற்கு உழக்கு எண்ணெய் ஈஸ்வரர் கோயில் என்ற பெயர் மழுவி ஓலக்கநெஸ்வர என்று வந்துள்ளது.
1709176517671762
இங்கே மூன்று அபாரமான சிற்பங்கள் உண்டு – ஒன்று தட்சிணாமூர்த்தி, ஆனந்த கூத்தாடும் கோலம் (இதே போல சிற்பம் காஞ்சி கைலாச நாதர் கோவிலும் உண்டு ) மற்றும் கைலாசத்தை அசைக்க முயலும் ராவணனை அடிபணிய வைக்கும் காட்சி. ( நாம் முன்னர் கம்போடியா , எல்லோரா இதே சிற்பம் பார்த்தோம் ) மிக அருமையான சிற்பம் – ஈசனின் தலையில் பிறை , ராவணன் வலியால் வாய் விட்டு இறைவது.
169517161718
பார்க்கும் போதே நெஞ்சம் வெடிக்கிறது

நவீன அரசர்கள் தங்கள் ஆசை நாயகிகளுடன் செய்யும் லீலைகளை ஆயிரம் ஆண்டு சிற்பம் என்றும் பாராமல் கல்வெட்டாக கிறுக்கிய கிறுக்கர்கள், இவர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா.
171117131716

ராவணனின் தலைஎழுத்தை மாற்ற இவர்கள் கைங்கர்யம்.
1845

கலையின் உச்சிக்கு எடுத்து சென்ற பல்லவனின் கலை பெட்டகம் – தமிழன் தலை நிமிர செய்யும் சிற்பம், கலை திறனை கண்டு தலை வணங்கும் வேலைப்பாடு – இதை பார்க்கும் பொது வெட்கி தலை …..

( நன்றி திரு சுவாமிநாதன் – எங்கள் பொன்னியின் செல்வன் குழும நண்பர்களை மல்லை பயணத்தில் கூட்டி சென்றதற்கு, படங்கள் – திரு ஸ்ரீராம், திரு பிளாஸ்டிக் சந்திரா , திரு விஞ்சாமூர் வெங்கடேஷ் )

வாலி வலிமை சாலி

திருவியலூர் கோவிலிலும் நுண்ணியமான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு – ( நரசிம்ம வடிவம் முன் இருக்கும் பேனாவை வைத்து ஒப்பிடுங்கள் )
914
படத்தை பாருங்கள்- ஒரு அறிய சிற்பம் – இதில் இருப்பது ஒரு சிவ
லிங்கம், கரம் கூப்பி நிற்கும் குரங்கு, அடுத்து வரும் உருவம் யார் ? பல
தலைகள் – இரு பக்கத்திலும் பத்து கைகள் ….ஆஹா இலங்கை அரசன். ஆனால் அவன்
கட்டுண்டு கிடப்பது போல அல்லவா உள்ளது.
917
அதே கதை தான் – பாத்திரங்கள் இப்போது புரிகின்றன – சிவ லிங்கம், வணங்கும்
வாலி – வாலியின் வாலில் கட்டுண்டு கிடக்கும் இராவணன். … விளங்க
வில்லையா ?

வாலி உலகிலேயே மிகவும் உடல் வலிமை பெற்றவன். அதனுடன் அவனுக்கு ஒரு வரம் உண்டு – அவனை எதிர்த்து போர்செயவோரின் பாதி பலம் அவனுக்கு கூடும்.. வாலி மகா சிவ பக்தன். தினமும் நான்கு திக்குகளுக்கும் சென்று ஈசனை வழிபடுவான். அவ்வாறு அவனை ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் இருந்து பார்க்கிறான் , என்னடா ஒரு குரங்கு ஈசனை வணங்குகிறதே என்று அதை சீண்ட – ஓசை இடாமல் கீழ் இறங்கி அதன் வாலை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது வால் அவனை கட்டுகிறது – இது வாலிக்கு தெரியகூட இல்லை – அவனுக்கு அவ்வளவு வலிமை – அவன் வாலில் சிக்கி இருக்கும் இலங்கை அரசனை உணராமல்
நான்கு திக்குகள் தாவி பூஜையை முடிக்கிறான். அப்புறம் தான் பின்னால் ஏதோ
முனகல் கேட்க …… இராவணன் வாலியிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக விடை
பெறுகிறான்.

சிற்பியின் திறன் பாருங்கள் – வாலி இராவணனை இதிற் கொல்லவில்லை – அதனால் அவன் தனது வரத்தின் வலிமை பெறாமலேயே லன்கேஷ்வரனை விட வலிமை பெற்றவன் என்பதை உணர்த்துகிறான்.

எனினும் இருவரும் ஒரே வில்லுக்கு இறை ஆனார்கள்…

thanks ( check out many more such images)
http://www.kumbakonam.info/kumbakonam/tiviyalur/info/phogal.htm

இராவணனை சீண்டும் குட்டி பூதகணம், யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா

இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி – முதலில் நாம் கம்போடியா சிற்பம் பார்த்தோம் …இப்போது எல்லோரா .
888891897
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் – தனது ஆணவத்தாலும் தலைகனத்தாலும் அரக்கன் அவன் செய்த காரியத்தை தண்டிக்கும் சிவன் – ( சிதைந்தாலும் … அம்மை அப்பன் முகத்தில் என்ன ஒரு கலை) அவ்வாறு கைலாயத்தின் அடியில் சிக்கி இருக்கும் அவனை கண்டு சிவ கணங்கள் அனைத்தும் பரிகாசம் செய்கின்றன. யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா… வலிமை மிக்க ஒருவன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவனை கண்டு சிறுவரும் நகைபதுண்டு. அதனை எல்லோரா சிற்பி கல்லில் வடித்திருபதை பாருங்கள்.
895903899901906
ஒரு பக்கம் ஒரு குள்ள கணம் கை நீட்டி ஏளனமாக சிரிக்கிறது – மற்றொரு
பக்கம் ஒரு கணம் பின்னால் திரும்பி குனிந்து சொல்லமுடியாத இடத்தை
காட்டி… அதை அடுத்து ஒரு கணம் சிக்கி இருக்கும் அவன் விரல்களை
கணக்கு வாத்தியார் போல் தடி கொண்டு அடிக்கிறது
893901

இந்த சிலை மிக பெரியது என்று சொல்லி விடலாம்…எப்படி உணர்த்த முடியும்..சரி, இதோ படம்.
910

quoting appar’s verses as below:

அப்பர் பாடியது 3-11.

கடுகிய தெர்செலாது கயிலாயமீது
கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம்மென நின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்று சென்று விரைவுற்று அரக்கன்
வரையுற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு வீற்றுவிழ விரலுற்ற பாத (ம் )
நினைவுற்றது என் தன் மனனே

உரை :

தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளே யாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன். அப்போது அந்த தேர்பாகன் அத்தை கண்டு போருக்காதும் இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசிபுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து மகிழ்ந்து என் மனனே

முதலில் பூத கணங்களின் வேடிக்கை விளையாட்டு சிற்பியின் சிந்தனை என்று நினைத்தேன்… அதையும் அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார் (நன்றி திரு திவாகர் மற்றும் திரு சுப்ரமணியம் )…ஆஹா …இதோ வரிகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4034&padhi=&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் – திருமுறை 4.34.8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியன் ஆகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா(று) அறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூதம் எல்லா[ம்] நான்மறைக் காட னாரே.

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.

மலைமகள் நடுங்க !

ராமாயணத்தின் தாக்கம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதற்கு ஒரு அறிய எடுத்துக்காட்டு. …. இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் அலறி ஓடின.

 

இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை. சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.

 

இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.

 

 

 

 

ஒருவளை திருமுறையின் தாக்கம் அங்கும் பரவி இருக்குமோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2091&padhi=091&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவ பிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.

 

உமையும் பயத்தில் ( ஆஹா மலைமகள் நடுங்க….இங்கே வருகிறான் சிற்பி )ஈசனின் மடியில் தாவி அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை.