ஹனுமான் எப்படி பாண்டவர்களின் கொடியில் சென்று அமர்ந்தார்!!

பொதுவாக கோவில் கோபுரங்களில் சுதை வடிவங்களையே பார்க்க முடியும் – கல் சிற்பங்களை பார்ப்பது கடினம் – அதிலும் அரிய புராண கதைகளை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட சிறு புடைப்புச் சிற்பங்களை காண்பது மிக அரியது . அதனால் தான் திருக்குறுங்குடி கோயில் கோபுரத்தில் இப்படி ஒரு அரிய மகாபாரதக் கதையை கண்டபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

இந்த முறை சென்றபோது புனரமைப்புப் பணிகளின் காரணமாக சவுக்கு சாரம் கட்டி இருந்ததால் நானும் அரவிந்தும் மேலே ஏறிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

நாம் முன்னரே அங்கு உள்ள ஒரு அரிய கருடனின் கதையை பார்த்துள்ளோம். அதே போல இதுவும் ஒரு மிக அரிய வடிவம்.

அமர்சித்ரா கதைப் புத்தங்களில் படித்த நினைவு இருந்ததால் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது வரை இதனைக் கல்லில் இப்படிச் செதுக்கி நாங்கள் பார்த்ததில்லை.

இந்தக் கதை ஒரு பிற்சேர்க்கை என்றே நினைத்து வந்தேன்.

ஒரு சிறு குரங்கு போல அமர்ந்து இருக்கும் அனுமன், வலிமை வாய்ந்த பீமன் தனது கதாயுதத்தால் ஏதோ ஒரு சிறு குச்சியை வழியில் இருந்து ஒதுக்குவது போல அனுமனின் வாலை தள்ளி விட முயற்சி செய்கிறான்.

என்ன கதை இது ?

பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரைக் கொண்டுவரச் செல்கிறான் . அப்போது வழியில் ஒரு குரங்கு படுத்துக் கிடப்தை காண்கிறான். குரங்கின் வால் தனது பாதையில் குறுக்கே இருப்பதை கண்டு வாலை நகர்த்துமாறு குரங்கை அதட்டுகிறான். பீமனுக்கு தனது உடல் பலத்தில் இருந்த பெரும் நம்பிக்கை அங்கே ஆணவமாக மாறுகிறது. அதனை சரி செய்ய அனுமன் தன தம்பியுடன் விளையாடுகிறார்.

வயதானதால் தன வாலை தன்னால் நகர்த்திக்கொள்ள தனக்கு சக்தி போதவில்லை என்றும், முடிந்தால் பீமனை தாண்டி குதித்து செல்லச் சொல்கிறார் . மேலும் ஆத்திரம் அடைகிற பீமன் தாண்டி செல்ல மறுக்கிறான்.

நீ யார் என்று அனுமன் கேட்க, பீமன் , தான் குந்தியின் புதல்வன், சத்ரியன் என்றெல்லாம் சொல்கிறான்.

அப்போது என்னை எளிதாக நீ தாண்டி குதித்துவிட்டு போகலாமே என்று அவனை அனுமன் கிண்டல் செய்கிறார்.

அதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பீமன், கடலையே தாண்டி குதித்த அனுமன் தனது அண்ணன் என்றும், இந்த சாதாரண வாலைத் தாண்டி குதிக்க ஒரு நொடி ஆகாது என்றும் கூறுகிறான்.

அப்படியானால் தன வாலை எடுத்து ஓரமாக ஒதுக்கி விட்டு செல்லுமாறு அனுமன் கூற, பீமன் வாலை நகர்த்த முயற்சிக்கிறான். தன முழு பலத்தை கொண்டு முயற்சித்தும் அவனால் அந்த வாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

எதிரில் இருப்பது வெறும் குரங்கு அல்ல என்று உணர்த்த பீமன், தன கர்வம் அடங்கி வணங்குகிறான்.

’நான் தான் உன் அண்ணன் அனுமன்’ என்று தனது விஸ்வரூபத்தை காட்டுகிறார் அனுமன். மேலும் பீமன் தேடி வந்த மலரை அடைய எளிய வழி ஒன்றையும் கூறுகிறார். தன அண்ணன் தன்னை அணைக்கும்போது பீமன் தன உடல் புத்துணர்வு பெறுவதை உணர்கிறான். அனுமன் அவனுக்கு வரம் அளிக்கிறார். தாம் மேற்கொள்ளும் மகாபாரதப் போரில் தமதுகொவெற்றிக்கு உதவ வேண்டுகிறான் பீமன். அப்படியே அவரும் வரம் அளிக்கிறார். ”அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன்” என்று அனுமன் அபயம் அளிக்கிறார்.

கிராதன் அர்ஜுநர்கள் – இன்றைய காமிக்ஸ் அன்றைய சிற்பம் ஒரு கலக்கல்

கலைச் செல்வங்களை ரசிக்கும் தன்மையை எப்படி நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது. அவர்களை எப்படி இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வைப்பது. அவர்களது ரசனையை எப்படி தூண்டுவது. இவை போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தினமும் எழும். இன்றைய தலைமுறை சதா சர்வகாலமும் இணையம், அதில் உள்ள இணைய விளையாட்டு, காமிக்ஸ் என்றே செல்கிறது என்று பார்க்காமல், அவற்றையும் ஒரு வளரும் துறையாக பார்த்து , அவற்றை கொண்டும் இள நெஞ்சங்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் செல்லலாம் என்பதே எங்கள் கருத்து. அதன் அடிப்படையில் இன்று காஞ்சி கைலாசநாதர் சிற்பம் ஒன்றையும் ( எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் ) அதை ஒட்டிய கதையை இன்றைய இணைய ஓவிய காமிக்ஸ் போலவும் சேர்த்து பார்ப்போம்.

கதை ஒன்றும் பெரியது அல்ல. மகாபாரதத்தில் வன பர்வத்தில் , அர்ஜுனன் தனியே சிவ பெருமானிடத்தில் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற தவம் செய்ய இமயம் செல்கிறான். கடுந்தவம் புரியும் அவனை சோதிக்க
ஈசனே கிராதன் ( வேடன் ) உருவிலும், உமை ஒரு வேடர் குல பெண்ணாகவும் வனத்தினுள் வருகின்றனர். அப்போது முகசுரன் என்றஅசுரன் காட்டுப்பன்றி உருவம் தரித்து அர்ஜுனனை நோக்கி விரைந்து வருகிறான். வில்லுக்கு ஒரு விஜயன் ஆயிற்றே, உடனே காண்டீபத்தை எடுத்து பன்றியின் தலைக்கு நாணைத் தொடுக்கிறான் பார்த்தன். அதே வேளையில் இன்னொரு புறத்தில் இருந்து பன்றியின் பின்புறம் ஒரு அம்பு பாய்கிறது. அங்கே வில்லேந்தி நிற்கிறான் கிராதன். அர்ஜுனன் சினம் கொண்டு, பின்னால் இருந்து நாணை எய்வது வீரனுக்கு அழகா என்று கேட்க, அவனோ இது வேட்டை.. யுத்தம் அல்ல !!, காட்டு மிருகங்களுக்கு போர் நீதி செல்லாது என்கிறான் ( வாலி வதம் ? ) அப்படியே பன்றி யாருடையது என்று வாக்குவாதம் நடக்கிறது.

வாக்குவாதம் முற்ற கைக்கலப்பும் ஆரம்பம். காண்டிபதை கொண்டு அக்னி கொடுத்த தீராத பாணங்களை தரும் கூடையில் இருந்து அம்புகளை மழையென பொழிய வைத்தான் குந்தி புத்திரன். எனினும் அந்த வேடனோ சிறிதும் சிரமம் இல்லாமல் அனைத்தையும் தடுத்து விட்டான். உடனே காண்டீபத்தை ஈட்டி போல வேடன் மேல் பாய்ச்சுகிறான் அர்ஜுனன். அதை அப்படியே பிடித்து இழுத்துப் பறித்து விடிகிறான் அந்த வேடன். அர்ஜுனனுக்கு இன்னும் கோபம், உடனே மல்யுத்தம் செய்ய அவன் மேல் பாய்கிறான். ஆனாலும் வேடனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அர்ஜுனுக்கு மூச்சு வாங்கி தலை சுற்றுகிறது, வேடனோ ஒரு வியர்வை துளி கூட சிந்தாமல் நகைத்துக் கொண்டே போர்புரிகிறான். இதனை கண்ட அர்ஜுனன், சண்டையை நிறுத்தி விட்டு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வேடனை வீழ்த்த மகேசனின் ஆசி கூறி, மலர்களை சமர்ப்பிக்கிறான். என்ன ஆச்சரியம், லிங்கத்திற்கு அவன் இடும் மலர்கள் வேடனை அலங்கரிக்கின்றன. உண்மை புரிந்த அர்ஜுனன் மகேசனிடம் சரண் புகுந்தான். இன்னொரு வழக்கில் சண்டை இடும்போது அர்ஜுனன் ஈசனின் காலை பிடித்தானாம், தன மலர் பதம் பிடிக்கும் பக்தரை தடுத்துத்ஆட்கொள்ளும் ஈசன், அப்போது போரை நிறுத்தி அவனை அணைத்தார் என்றும் வருகிறது. எனினும் நாம் இன்று பார்ப்பது இருவரும் சண்டை போட்டனர்.

நன்றி திரு அபிலாஷ் நாராயணன் , அவர்களுக்கு, நம்முடன் அவரது கணினி ஓவியத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு.

அவரது மற்ற படைப்புகளை காண

திரு அபிலாஷ் நாராயணன்

சரி, இப்போது நாம் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் செல்கிறோம். வெகு நாட்களுக்கு முன்னரே இந்த சிற்பத்தை ஒட்டிய பதிவை இங்கு போட்டிருக்க வேண்டும் – எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த சிற்பம். அதில் உள்ள உயி்ரோட்டம், காட்சி அமைப்பு எல்லாமே அபாரம். இது இரு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தின் விளம்பரம் போல இருக்கும் இந்த சிற்பத்தை திரு அபிலாஷ் அவர்களின் ஓவியத்துடன் மோத விடுவோம்.

படங்களுக்கு நன்றி: திரு அர்விந்த் மற்றும் திரு சுவாமிநாதன்

சிற்பத்தை நன்றாக பாருங்கள். இரு வீரர்கள், ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி சண்டை இட தயாராக நிற்கும் காட்சி. இருவர் கையிலும் வில், மற்றொரு கையில் அம்பு, அல்லது அம்பை எடுக்கு செல்லும் கை. முதுகில் அம்புகள் வைக்கும் கூடை ( இருபுறமும் இவை இருப்பது நேர்த்தி ) , ஒருவர் இடுப்பில் மற்றும் உடைவாள். இது கிராடார்ஜுன கதை தான் என்பதை சந்தேகம் இன்றி நிறுவ இருவரின் பின்னால் நேர்த்தியாக ஒரு காட்டுப் பன்றியை செதுக்கி உள்ளான் சிற்பி.

இப்போது ஒரு கடினமான கேள்வி, இதில் ஈசன் யார், அர்ஜுனன் யார். சற்று அருகில் சென்று பார்ப்போம்.

குறிப்பாக அவர்கள் அணிந்திருக்கும் உடை , ஆபரணம் மற்றும் தலை அலங்காரங்களை பாருங்கள்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன – பட்டியல் இடுவோம்.

சிற்பத்தின் இடது புறம் ( நீங்கள் பார்க்கும்போது வலது புறம்) – இருக்கும் வீரன் ஒரு நீண்ட கிரீடத்தையும், மார்பில் பூணூலையும் அணிகிறான். மற்ற வீரனோ தலையை கொண்டாய் போல கட்டிக்கொண்டு, மார்பில் சன்னவீர என்னும் குறுக்கு பட்டைகளை அணிகிரான். அவன் மட்டுமே உடைவாளை வைத்துள்ளான்.

நமக்கு தெரிந்த மட்டிலும் அர்ஜுனன் ஒரு துறவி போல தவம் செய்து ( கடைசியில் காற்றை மட்டுமே சுவாசித்து பல மாதங்கள் கடுந்தவம் புரிந்தான் என்று நினைக்கிறோம். மகாபாரத்திலும் அவன் காண்டீபம் என்னும் வில்லுடன் ஒரு அற்புத தங்க கைப்பிடி கொண்ட உடைவாளை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் உள்ளன.

சரி, அது அப்படி நிற்க , நாம் கிராட உருவத்தை பற்றி படிப்போம்.கிராதன் ஒரு வேடன், அதுவும் ஈசனை பொதுவாக ஜடா மகுடத்துடனே நாம் காண்கிறோம். மேலும் திரு நாகசுவாமி அவர்களின் குறிப்புகளில் , சோழ வடிவத்தில் கிராட உருவம் ஒரு வேடன், அதுவும் உருண்டை தொப்பையுடனும், மார்பில் சன்னவீர கொண்டும், தலையை கொண்டாய் போட்டுக் கொண்டு இருக்க காண்கிறோம் என்கிறார்.

Kirata or Tripurantaka


However in many Chola sculptures and also Bronzes (Melapperumpallam image) Kirata will be shown like a hunter with round bellied body , beard and cannavira. His hair would be tied as a bun-like knot and not the jata-makuta one sees in the Tripurari form.

இவை அனைத்தும் கொண்டு பார்க்கையில் கிரீடம் அணிந்திருப்பது அர்ஜுனன் என்றும் மற்றவர் ஈசன் என்றும் நான் நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன.

என்ன, கலக்கல் பிடித்தா ?

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

இன்று நாம் மூன்று சிற்பங்கள் பார்க்கப் போகிறோம். இரண்டு தாராசுரத்தில் இருந்து நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் அவர்கள் உபயம் ( தேடித்தந்த குவைத் சதீஷுக்கு நன்றி ) , மற்றும் ஒன்று கிருஷ்ணபுரம் நெல்லை – நண்பர் ஓவியர் திரு A. P ஸ்ரீதர் அவர்கள் கொடுத்து உதவிய அமரர் ஓவியர் சிற்பி அவர்களின் படைப்பும் – எல்லாம் ஒரே கதையை ஒட்டி

அப்படி என்ன கதை – மகாபாரத கதை, ஆனால் ஒரு கிளை கதை ( பல பேர் பல மாதிரி இந்த கதையை கூறுகின்றனர் – அதனால் சிற்பத்தை விளக்க எவ்வளவு தேவையோ அதை மட்டும் இங்கே இடுகிறேன் )

ஒரு சமயம் யுதிஷ்டிரருக்குப் புருஷமிருகத்தின் உதவி தேவைப்பட்டது. ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க ( அதனிடத்தில் பால் வேண்டுமாம் – அது எப்படி , சரி அதை விடுங்க)

பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் இவரிடமிருந்து உதவி (பாலைப்) பெற்று வரவேண்டும். சிறந்த சிவபக்தர் இந்த புருஷாமிருகம்.

மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்கிறார்.
பீமனும் செல்கின்றான். கண்ணன் அவனிடத்தில் 12 கற்கள் ( சில குறிப்புகளில் ருத்ராக்ஷம் அல்லது சிவலிங்கங்களைக் )கொடுக்கின்றார். பீமன் திகைக்கின்றான். இவை எதுக்கு எனக் கேட்க, உனக்குக் காட்டில் என்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு நீ உன் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு கல்லை கீழே போடு எனச் சொல்லி அனுப்புகின்றார். பீமனும் காட்டிற்குச் செல்லுகின்றான். காட்டின் உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று விடுகின்றான்.

அங்கே ஒரு வாக்கு வாதம் அல்லது ஒரு போட்டி நடைபெறுகிறது . சரி, தன் எல்லையை விட்டு ( காட்டின் எல்லை ) பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இறை.

பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அவனால் வெகு தூரம் செல்ல முடியவில்லை – அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டது. உடனே கண்ணன் கொடுத்த கல்லை கீழே போடுகிறான். அது ஒரு சிவலிங்கமாக மாறுகிறது ( சிவன் கோயிலாக மாறியது என்று சிலர் )

புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட்டார். பீமன் விடாமல் ஓடுகிறான் – பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகின்றார்.

இதோ சிற்பம் – தாராசுரம் புடைப்பு சிற்பம். பீமனை துரத்தும் புருஷாமிருகம்

சில மைல் தூரம் போனதும் மீண்டும் பீமன் வெகு அருகில் புருஷாமிருகம் வந்துவிட்டது , மீண்டும் இன்னொரு சிவலிங்கம். இப்படியே 12 கற்கள் (சிவலிங்கங்களையும்) பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியேவந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது – புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் வாதாடுகின்றான். தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை என்றும் தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் சொல்லுகின்றான்.

வாக்குவாதம் பலக்க, யுதிஷ்டிரர் வந்துவிடுகின்றார். அவரோட தீர்ப்பு, பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விடுகின்றார்.

இதோ இதுவம் தாராசுரம் சிற்பத்தில் – ஒரு புறம் வாதி ப்ரிதிவாதி இருவரும்,மறுபுறம் வழக்கை கேட்கும் தர்மர் ( அவரை அடுத்து பணிப்பெண் ?)

இந்த கதையை தூண் சிற்பத்தில் க்ரிஷ்ணபுரத்தில் பாருங்கள். இருவரும் சிறு கதை கொண்டு ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள தயார் ஆகும் காட்சி

இதே தூணை வரைந்த அற்புத ஓவியர் அமரர் சிற்பி அவர்களின் ஓவியம் இதோ.

+++++++++++
கண்டிப்பாக திரு ராஜா தீட்சிதர் அவர்களது தளத்தை சென்று பாருங்கள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை நம்பமுடியவில்லை http://www.sphinxofindia.rajadeekshithar.com/

நூறாவது பதிவு – ஒரு அறிய சிற்பம் – ஒரு அற்புத மனிதர் – திரு ஜெயபாரதி ஐயா

இது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. – நூறு சகோதரர்களான கெளரவர்களின் முடிவுக்காலத்தின் நிகழ்வு ஒன்று நமது நூறாவது பதிவாக மலர்கிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடக்கும் துவந்த யுத்தம்.

நூறு பதிவுகள் அதுவும் ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் இட முடிந்ததற்கு காரணம் நண்பர்களும், நல் அறிஞர்களும் வழிகாட்டி ஊக்கப்படுத்தியதால்தான். சில நல்ல உள்ளங்கள் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க ஊக்குவித்து கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டியும் வருகிறார்கள். அந்த கலங்கரை விளக்கங்களில் ஒருவர், என்னை மட்டுமல்ல சாமானியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், சங்க கால ஆர்வலர்களையும், சம கால ஆர்வலர்களையும் தன்னுடைய வசீகர எழுத்தால் கவர்ந்திழுப்பவரைத்தான் இன்று அறிமுகம் செய்யப் போகிறேன். இவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். ஒரு நிமிடம்! இவருக்கு அறிமுகம் தேவையா! அப்பேர்பட்டவர் யார்: அவர்தான் Dr. S. ஜெயபாரதி, இவருடைய வரலாற்று படைப்புகளும், கலாச்சார, பண்பாடு பற்றிய படைப்புகளும் இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்களையும், ஆர்வளர்களையும் உருவாக்கியுள்ளது. இவரது மேலாண்மை திறம் வியக்கத்தக்கது, ஒருவரின் மனதை எளிதாக அறிந்துகொள்பவர். இவர் பங்குபெறும் மின் குழுமங்களில் யாரேனும் ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்தாலோ அல்லது சந்தேகங்களை தெரிவித்தாலே, அதை நிவர்த்தி செய்ய முன் நிற்பவர், தவறிருந்தால் சுட்டிக் காட்டுவதோடு சரியான பாதையில் செல்ல வழிகாட்டுபவர். இவரது துணையிருந்தாலே போதும் இலக்கை நோக்கி பாதி தூரம் சென்ற நிம்மதி கிடைக்கும் நமக்கு. நம் மண்ணின் பெருமையை அறிந்து கொள்ளும் தேடலில் ஒவ்வொருவரையும் ஈடுபடுத்துவதில் இவருக்கு அலாதிப் பிரியம்.

( இன்றைய அரிய மனிதர்களில் ஒருவரான் இவரை அறியாதவர் யாரேனும் இருந்தால் உடனே பார்க்கவும் டாக்டர் சி. ஜெயபாரதி)

நாம் பார்க்கப் போகும் இன்றைய பதிவு அவருடைய வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுதான். துவந்த யுத்தம்

நாம் ஏற்கனவே இந்த சிற்பத்தை ஒத்த அதே வகை சிற்ப பதிவுகள் பலவற்றை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த சிற்பத்தை நான் விளக்குவதை விட Dr. ஜெ. பி. யின் விளக்கம் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவரை அணுகினேன். நூறாவது பதிவு வேறு. உடனே அனுமதித்த அவரது கருணையை என்னவென்று சொல்வது. என்னைப் போன்ற பல பேரை அவர் உருவாக்க அவர் பல காலம் வாழவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம். கரும்பு தின்ன கூலியா

அற்புதமான இந்த சிறப்புப் பதிவை வழங்கும் டாக்டர். ஜே.பி ஐயாவுக்கு நன்றி.

உலகத்தின் தலை சிறந்த சிற்பங்களின் புகலிடங்களில் ஒன்றான பண்டே ச்ரெய் ஆலயங்கள் ஒன்றில் உள்ள சிற்பத்தை இன்று காண்போம். “அன்கோர் வாட்”டில் இருந்து வடகிழக்காக 15 மைல்கள் தொலைவில் உள்ளது இந்த பண்டே ச்ரெய்.

[“The lacy setting is superbly executed and the balanced rhythm and harmony
of the scene itself cannot be surpassed in any work of man” – Reginald le May.

துல்லியமான அபிநயத்தோடு துவந்த யுத்தத்தை, பழங்கதையை எடுத்துக்காட்டும் இந்த சிற்பங்களை விஞ்சிய எதுவும் இருப்பது அரிதே!]

இன்றைய சிற்பத்தில் உள்ள காட்சி பாரதப் போரின் கடைசி கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

பாரதப்போர் முடியும் தருவாயில் அனைவரையும் இழந்து, படுகாயப்பட்டு களைப்படைந்த துரியோதனன் மறைந்திருக்கிறான். அந்த சமயம் பார்த்து பாரதப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அவனை தேடிவரும் பாண்டவர்களின் கண்ணில் படுகிறான். பாண்டவர்கள் ஐவர் ஆனால் அவனோ ஒருவன் ஆகவே பாண்டவர்களில் யாரேனும் ஒருவரோடு யுத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாண்டவர்களில் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனனுக்கு இணை பீமன் மட்டும் தான். காயம்பட்டு களைப்படந்திருந்தாலும் கதாயுதத்தை கையாளும் திறமையால் பீமனுடன் போர் புரிய சம்மதிக்கிறான் துரியோதனன். பீமனும் கதாயுத்தை கையாள்வதில் வல்லவனே.

கதை என்பது நீண்ட பிடியும் உருண்ட தலைப் பகுதியும் உடைய ஆயுதம். இதை பயன்படுத்தியே இரதங்களை உடைத்தும், யானைகளை கொன்றும், கவசங்களை உடைத்தும் எதிராளியை நிலை குலையச் செய்வர்.

கிருஷ்ணரும், பாண்டவர்களும் வேடிக்கைப் பார்க்க, துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுத பயிற்சி அளித்த பலராமரை நடுவராக கொண்ட துவந்த யுத்தம் துவங்குகிறது. துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடைபெறும் சண்டை. அது இறுதிவரைக்கும் நடைபெறுவதாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உத்தியின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம்.

யுத்தம் நடைபெறுகிறது ஒரு காலகட்டத்தில் பீமன் களைப்படைகிறான், ஆனால் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனோ மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் போர் புரிகிறான். பீமன் சற்று அயர்ந்த நேரம் தரையிலிருந்து எழும்பிய துரியோதனன் தன் கதையை பீமனின் தலையை நோக்கி தாக்க முற்படும் நேரத்தில் துரியோதனின் பலவீனமான இடது தொடையை தாக்குமாறு கிருஷ்ணன் பீமனுக்கு ஆலோசனை கூறுகிறான். துரியோதனன் எழும்பியதால் அவன் தொடை பீமனுக்கு எளிய இலக்காக அமைய, பீமனின் அடி மரண அடியாக துரியோதனின் தொடையில் விழ, தொடை பிளந்து குற்றுயிரும் கொலையுயிருமாய் வீழ்கிறான் துரியோதனன். யுத்த விதிகளை மீறியதால் தன் கலப்பாயுதத்தால் பீமனை தாக்க முயலும் பலராமனை தடுக்கிறார் மாயக் கண்ணன்.

இந்த யுத்தக் காட்சியை அற்புதமாக எடுத்துக்காட்டும் சிற்பத்தை பார்க்கலாம் இப்பொழுது.

வலதுபக்கம் அமர்ந்து கொண்டு யுத்தத்தை பார்த்து ஆரவாரம் செய்யும் பாண்டவர்களில் நால்வர்.

நடுவில் போரிடும் பீமன், அந்தரத்தில் பறந்து பீமனின் தலையை சரியாக குறிவைக்கும் துரியோதனன்.

இடது பக்கம் நான்கு கைகளோடு பலராமரின் ஆயுதத்தை தடுத்து நிறுத்தும் கிருஷ்ணர்.

துவந்த யுத்தத்தை அற்புதமாக விளக்கும் சிற்பம். எங்கேயோ கம்போடியாவில் பாரதப்போரை விளக்கும் சிற்பம் பாரதம் என்றழைக்கப்படும் இந்தியாவில் இல்லை!

(அருமையான தமிழில் மொழி பெயர்த்து உதவிய சதீஷுக்கு நன்றி )

வாரணம் ஆயிரம் – படமல்ல சிற்பம், ஹலபேடு

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தோம். என்னடா சிற்பத்தை பற்றி பேசும் இவன் திடீரென திரைப்படம் பற்றி பேசுகிறானே என்று அஞ்சாதீர். நான் கட்சி மாறவில்லை.

இயக்குநர் கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” என்று பெயர் வைத்ததுமே பலருக்கு அதன் விளக்கம் தேவை பட்டது. குறிப்பாக,வாரணம் என்றால் என்னவென்று தெரியாமல் பலரும் திகைத்தனர். பிறகு பல இணைய தேடல்களில் , விடைகிடைத்தது– – ‘வாரணம்’ என்றால் யானை. அதுவும் வாரணம் ஆயிரம் என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் வருகிறது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருவதை அறிந்த ஊர் மக்கள் பொற்குடங்களில் நீர் நிரப்பி ஊரெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்பதாக தான் கனவு கண்டதாக தன் தோழியிடத்தே கூறுகிறாள் ஆண்டாள்.

படத்தின் நிறைவில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் கோதையின் வர்ணனைக்கு இணங்க இருப்பான் என்று முடியும்.

ஆனால் எனக்கு ஆயிரம் யானை என்றவுடன் நினைவிற்கு வந்தது பீமனே. ஆயிரம்யானை பலம் கொண்ட பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு, வெல்ல முடியாத பெரும் பல வீரர்களை பாரதத்தில் வென்று குவிப்பான். வாயுபுத்திரன் என்றாலும் அவனுக்கு இந்த பலம் எப்படி வந்தது …அதற்கும் ஒரு கதை உண்டு.

ஒரு நாள் பீமனும் திரெளபதியும் தனிமையில் இருக்கையில், காற்றிலே மிக இனிமையான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரெளபதி அந்த மலரை விரும்பினாள்.அதைத் தேடிப் பீமன் சென்றான் – அடர்ந்த காட்டின் ஆழத்தில் மணம் அவனை எடுத்து சென்றது. அங்கே ஒரு குரங்கு வழியை அடைத்து அலட்சியமாக படுத்திருப்பதை கண்டு அதை விரட்ட குரல் கொடுத்தான் பீமன்

ஆனால் குரங்கோ இன்னும் அலட்சியமாக உன்னால் முடிந்தால் என் வாலை நகற்றி விட்டுச் செல்லேன் என்றது. அதன் அகம்பாவம் கண்டு எரிச்சல் அடைந்த பீமன் கீழே குனிந்து அதன் வாலை பிடித்து சுழற்றி எறிய முயன்றான் . ஆனால் என்ன விந்தை – அவனால் அசைக்கவே முடியவில்லை. பலம் அனைத்தையும் கொண்டு முயன்றும் அந்த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகரவில்லை. அது சாதாரண குரங்கில்லை என்று அறிந்த பீமன் தன் ஆணவத்தை நினைத்து மனம் வருந்தி -அதனிடம் பணிவுடன் தாங்கள் யார் என்று வினவினான். அப்போது அந்த குரங்கு அனுமனாக உரு மாறி, வாயு புத்திரனாக – காட்சி அளித்து அணைத்துக்கொண்டான் பீமனை . அவருடைய தமயனை ( அப்போது பீமனுக்கு தன் உடலில் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்தது ) – எதிரிகளை சிதற அடிக்கும் வலிமையை தந்தது அந்த அணைப்பு, அதை விட பீமனது ஆணவத்தையும் அடக்கி அருள் புரிந்தான் அனுமன்.

சரி இப்போது சிற்பம். ஹலபேடு கோவில் சிற்பம். ( படத்தை நன்றாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள் )

நடுவில் இருப்பது பீமன் – எதிரில் வரும் யானையை எதிர்கொண்டு அதன் துதிக்கையை பிடித்து தன் கதையால் அடிக்கிறான். பின்னால் இரு எதிர் வீரர்கள் – கத்தி கேடயம் வைத்துக்கொண்டு நிற்கின்றனர். யானையையே அடித்து நொறுக்கும் பீமனை கண்டு நிற்கலாமா ஓடிவிடலாமா என்று யோசனை போல ?
26962693
சிற்பத்தின் மிக அருமையான பகுதி – அடுத்து பீமன் கொன்று குவித்தயானை மற்றும் யானை பாகர்களின் சடலங்களை – மலை போல குவிந்ததுஇருப்பதை காட்டி இருக்கும் வண்ணம் அருமை.
26982700

காண்டவ ஆரண்ய தகனம் – ஒரு அபூர்வ சிற்பம் ,கம்போடியா

கம்போடியாவின் ‘படேய் ஸ்ரி’ யில் ஒரு அற்புதமான சித்திரம். இந்தக் கலைச் சித்திரத்தின் பின்னணி முதலில் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கலைப் படைப்பின் ஆழம் என்னை மூழ்கடித்துவிட்டதால் எங்கெங்கோ தேடியதில் ‘மகாபாரதத்தில்’ அதன் கதை கிடைத்தது. அற்புதமான கதை.. அதை நம் கண்முன்னே கொண்டுவந்த அற்புத சிற்பிகள்:

காண்டவ ஆரண்ய தகனம்தான் அந்தக்கதை. இன்றைய மத்தியப் பிரதேசத்திலிருந்து டில்லி வரை பரந்த காடுகளைக் கொண்ட பகுதிக்கு காண்டவப்பிரஸ்தம் என்று பெயர் அப்போது நிலவிவந்தது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் தலைநகரகமாக இந்திரப்பி்ரஸ்தத்தை உரு்வாக்கும் முயலும் தருணம். எங்கே உருவாக்குவது என்று கண்ணனை ஆலோசனை கேட்கிறான் அருச்சுனன். அந்தச் சமயத்தில் ஒரு அந்தணன் தானம் கேட்டு அவர்களிடம் வருகிறான். என்ன வேண்டும்.. கேளுங்கள்.. என்று அருச்சுனன் அந்த அந்தணனை வினவும்போது அந்த அந்தணன் கேட்கும் தானம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘இதோ இந்த ஆரண்யத்தையே எரித்து அந்த பெருந்தீயினைத் தானமாக தந்தருள்க’ என்று கேட்கும் அந்தணன் அருச்சுனனுக்கு விசித்திரமாகப் பட்டாலும் காக்கும் தெய்வமாம் கண்ணனுக்கு அந்தணன் வடிவில் வந்தது யார் என்று தெரிந்து விட்டது. ‘சாட்சாத் அக்னி பகவானே’ அந்தணனாக வந்ததும் புரிந்தது.

அக்கினியே வந்து ஆகாரமாக அக்கினியை ஏன் கேட்கவேண்டும் என்று அருச்சுனன் வினவுகிறான். அப்படி நெருப்பு வேண்டுமென்றால் அந்த தேவதையே உருவாக்கிக் கொள்ளலாமே என்றும் கேட்கிறான். அதற்கு அக்கினிதேவன் தன் இயலாமையும் தான் வந்த காரணத்தையும் விளக்குகிறார்.

ஒரு சமயம் சுவேதகி என்னும் பேரரசன் தன் பேராற்றலை நிரூபிக்க தான் நீண்டகாலம் யாகபூசை செய்யவேண்டுமென அந்தணர்களை அழைக்கிறான். யாகம்தானே என்று அங்குள்ள அந்தணர்களும் ஒப்புக்கொண்டாலும் அது நீண்ட நெடிய வருடங்களாய் நீண்டுகொண்டே போவதில் அச்சப்படுகின்றனர். ‘இத்தனை காலம் யாம் இங்கு இந்த யாகத் தீயின் அமர்ந்து யக்ஞம் செய்ததே போதும் – எம்மை ஆளை விடு’ என்று கூறி எழுந்துவிடுகின்றனர். ஆனால் சுவேதகி கோபப்படுகின்றான். எப்படியும் செய்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க, அந்தணர்கள் அவனை சிவனை அழைத்துத் துணை கொள்ளுமாறு உபதேசம் செய்கின்றனர் (அவனால் முடியாதென்று தெரிந்தே). ஆனால் அதை நம்பிய சுவேதகி முதலில் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்கின்றான். சிவனும் அவன் முன் தோன்றுகிறார். அவனை சுயமாகவே முதலில் 12 வருடத்திற்கு நெய்யூற்றி இடைவிடாது யக்ஞம் செய்து வந்த பிறகு தன்னைப் பார்க்க ஆணையிடுகிறார்.

சுவேதகியும் சுயமாகவே 12 ஆண்டுகள் இடைவிடாது நெய்யூற்றி யாகம் செய்து வெற்றிகரமாக முடித்து சிவனிடம் சென்று தன் பழைய யாகத்தையும் முடித்துத் தர வேண்டுகிறான். அவன் விருப்பப்படியே சிவபெருமானும் சிறந்த துர்வாசமுனியையே துணையாக அனுப்பி வைக்க, அவன் தடைப்பட்டுப்போன பழைய யாகம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சரி போகட்டும். ஆனால் இனிமேல்தான் வினையே..

அந்த 12 வருடங்களில் இடைவிடாமல் ஊற்றப்பட்ட நெய்யானது அக்கினிதேவனின் உடலில் ஊதிப் போய் அவனை மிகக் கோரமான நிலையில் வைத்துவிட்டது. உடம்பில் மிக அதிகமான நெய் போகவேண்டுமானால் எங்காவது மிகப்பெரிய இடத்தில் தீயை வரவழைத்து அந்தப் பெருந்தீயில் கூடுதல் நெய் சுட்டெரிக்கப்படவேண்டிய கட்டாயம் அக்கினிதேவனுக்கு உருவாகிவிட்டது. மறுபடியும் சிவன் உதவிக்கு வந்தார். ‘காண்டவ ஆரண்யம் தற்சமயம் கொடுமையான உயிரினங்களின் தொந்தரவில் உள்ளதால் அந்த ஆரண்யத்தை சாம்பலாக்கி உன் துயரைப் போக்கிக் கொள்ளேன்’ என்றார் சாம்பசிவன்.

ஆதிக் கடவுளே சொல்லும்போது இனி என்ன கவலை என்று அந்த காண்டவ ஆரண்யத்தை சாம்பலூட்டும்போதுதான் இன்னொரு பிரச்னை வந்தது. நாகர்களின் தலைவனான தட்சகன் அந்தக் காட்டிலே தனி ராஜ்ஜியம் செய்துவந்தான். தேவேந்திரனுக்கு உற்ற தோழன். ஒவ்வொருமுறை அக்னி காட்டை அழிக்கும்போதெல்லாம் இவன் இந்திரனிடம் முறையிட அவன் அவ்வளவு முறையும் வருணனை வரவழைத்து மாபெரும் மழையினைத் தருவித்து அந்தக் காடுகளை ரட்சித்துவந்தான். அதனால் அக்கினியால் ஓரளவுக்கு மேல் போராடமுடியவில்லை.

அக்கினி நடந்த விஷயங்களைச் சொல்லினான். அதனால்தான் அவன் கண்ணனின் கருணாகடாட்சத்துக்காக ஏங்கி இந்தக் காடுகளை தீமயமாக்கி தனக்கு இரையாக தானம் கேட்டான்.

அருச்சுனனுக்கும் பாண்டவருக்கும் அந்த சமயத்தில் ஒரு நல்ல நாடு தேவைப்பட்டுள்ளதால் கண்ணனும் இசைந்து அருச்சுனனிடம் இந்த காண்டவப்ரஸ்தக் காடுகளை அழைத்து இந்திரப்பிரஸ்தநகரம் உருவாக்குமாறும் ஆணை கொடுத்தான்.

அக்கினியால் முடியாத அந்த அழிவினை அருச்சுனன் செய்ய ஆரம்பித்தான். ஆனால் இந்திரன் அவனை தடுக்க வருணனை ஏவினான். அருச்சுனன் பாணங்கள் வருணனைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தக் காடுகளுக்கே வானத்துக் கூரையாக அம்புகளால் ஆகாயத்தில் காப்பு வைத்து அழித்தான். அப்போது அந்த தட்சகன் காட்டில் இல்லாமல் வெளியே சென்ற சமயம். தட்சகன் மகனான அசுவசேனா மிகப் பலம் கொண்டு போராடி முடியாமல் அந்தக் காட்டிலிருந்து வெளியேறப்பார்த்தான். அந்த மகனுக்கு உதவியாக தட்சகனின் மனைவி அசுவசேனாவை தனக்குள் முழுங்கிக் கொண்டாள். ஆனாலும் அருச்சுனம் விடாமல் அந்த நாகதேவியில் தலையை சீவி அசுவசேனாவை வெளிக் கொணர முயலும்போது மறுபடியும் இந்திரன் தன் நண்பனின் மகனை காப்பாற்ற முன் வந்தான். வாயுபகவானை அனுப்பி ஒரு கணம் மயக்கக் காற்றை வீசி அருச்சுனன் மயங்கும் வேளையில் அசுவசேனா ஓடிவிட உதவிசெய்தான். மறுபடியும் எழுந்த அருச்சுனன் மிகவும் கோபம் கொண்டு மாபெரும் போர் செய்து தன் வில் வித்தையைக் காண்பித்து வாயு தேவனை விரட்டி அடித்தான். கண்ணில் கண்ட துன்பப்படுத்தும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தலைப்பட்டான். கருடன் போன்ற பறவைகள் தவிர்த்து அனைத்து உயிரினங்களும் அழிவைக் காண ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் காட்டில் ஆங்காங்கே இருந்த அசுரர்களும், கந்தர்வர்களும் யட்சர்களும் அருச்சுனனோடு போருக்கு வந்தனர். அருச்சுனன் கண்ணன் உதவியை நாட கண்ணனின் சக்கரம் பல அசுரகணங்களை அழித்தது. முடிவில் மொத்தக் காடும் அக்கினி தேவனுக்கிரையாகி அவன் துன்பத்தைப் போக்கின.

பெரிய கதைதான். ஆனால் இந்தப் பெரிய கதையைப் பற்றிய சிற்பங்கள் இந்தியாவில் இல்லாமல் எங்கோ கம்போடியாவில் மிக அற்புதமான கலைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட விதத்தையும் அந்த சிற்பிகளின் கைவண்ணத்தையும் என்னவென்று சொல்வது? அற்புதம் என்று ஒரே வார்த்தையில் சொல்வது எந்த விதத்தில் பொருந்தும் என்றும் தெரியவில்லை.

இப்போது சிற்பங்களைப் பாருங்கள். ஐராவதத்தில் இந்திரன், இடி மழை பொங்கும் நீருடன் வருணன், (கீழே நீர் பொங்கும் காட்சி), ஒருபக்கம் அசுவசேனா நாகம் தப்பியோடும் சிற்பம், இன்னொரு சிற்பத்தில் சக்கரத்தோடு கண்ணனும் மறுபக்கத்தில் வில்லோடு கூடிய விஜயன், காட்டில் மற்ற விலங்குகள், மற்றும் பறவைகள் தப்பியோடுவது..

அப்பப்பா.. சிற்பிகளா இவர்கள். இல்லை.. கலைப் பிரும்மாக்கள்..



திலோத்தமை – மகேசனையே மயக்கிய அழகு

இன்றைக்கு நாம் ஒரு மிக சுவாரசியமான கதை , அதனை ஒட்டிய ஒரு அற்புத சிற்பத்தை பார்க்க போகிறோம்.( கம்போடியா சிற்பம் இப்போது பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது )

முதலில் கதை – இல்லை இல்லை கதைக்குள் ஒரு கதை .அதிரூபசுந்தரிகள் என்றாலே நமக்கு ரம்பை, ஊர்வசி, மேனகை நினைவுக்கு வருவார்கள். அவர்களுடன் தில்லோதமை – ஆனால் இந்த சுந்தரியின் கதை வேறு .

இதனைபஞ்ச பாண்டவருக்கு மூத்தவரான தர்மராஜனுக்கு நாரதர் மகாபாரதத்தில் விளக்குகிறார்: காட்டில் அக்ஞானவாசத்தில் இருக்கும் பஞ்ச பாண்டவர், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் தனது மகள் திரௌபதிக்கு தக்க மணாளனை தேட வைக்கும் சுயம்வரத்தை பற்றி அறிந்து – அதில் பங்கேற்கின்றான் விஜயன். திரெளபதியையும் கைப்பிடிக்கின்றான்

தன் தாயிடம் தருமன், வெளியில் இருந்து, தாங்கள் பிட்சை கொண்டு வந்ததாக கூற, அவளும் சகோதரர்கள் அனைவரும் முறையே அதனை பகிர்ந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.

தருமருக்கு தர்மசங்கடம் – அப்போது அவ்வழியே வரும் நாரதர் நிலைமையை புரிந்து அறிவுரை கூறுகிறார். அழகிய பெண்ணால் கெட்டு அழிந்த அசுரர்கள் – சுண்டா மற்றும் உபசுண்டா எனும் இரு அசுரர்களின் கதையை சொல்கிறார்.

இருவரும் நிசும்பனின் புதல்வர்கள் ( நிசும்பன் ஹிரண்யகசிபுவின் வம்சத்தில் தோன்றிய அரக்கன் ) – இணை பிரியாதவர்கள் , சகோதர பாசம் மிகுந்தவர்கள் – தங்கள் அனைத்து உடமைகளையும் தங்களுக்குள் பங்கிட்டு வாழ்ந்தவர்கள். பெரும் வேள்வி நடத்தி, தாங்கள் இருக்கும் விந்திய மலையையே புகைக்க வைத்தனர். தேவர்கள் அவர்கள் தவத்தை கலைக்க பல முறை முயன்றும் முடியவில்லை . முடிவில் பிரம்மன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவ, இருவரும் சாகா வரம் கேட்க – முடியாது என்றார் பிரம்மன்.

பிறகு இருவரும் தங்கள் சகோதர பாசத்தில் நம்பிக்கை வைத்து – தங்கள் இருவர் கையால் மட்டுமே தங்கள் முடிவு நிகழும் என்ற வரம் பெற்றனர்.

இருவரும் வரத்தின் பலத்தால் பூலோகத்தையும் , இந்திர லோகத்தையும் வென்றனர். இவர்களை தடுக்க பிரம்மன் விஸ்வகர்மாவை அழைத்து – மூவுலகிலும் இல்லாத ஒரு அழகிய பெண்ணை உருவாக்க கட்டளை இட்டார் . விஸ்வகர்மன் உலகில் உள்ள அனைத்து அற்புத நுண்ணிய அணுக்களை கொண்டு திலோத்தமையை உருவாக்கினான். (தில் – எள் போன்ற நுண்ணிய அணுக்கள் – உத்தம – மிகவும் மேலான )

பிரம்மன் அவளை சுண்டா மற்றும் உபசுண்டாவை மயக்கி இருவருக்குள் சண்டை வரச் செய்ய கட்டளை இட்டார். தில்லோதமையும் அவ்வாறே அங்கு செல்லும் முன் ஈசனையும் இந்திரனையும் வணங்கி பிரதக்ஷணம் செய்தாள். அப்போது அவள் அழகில் வைத்த கண் வாங்காமல் பார்த்த ஈசன், அவள் சுற்றிவரும்போது கூட அவளை பார்க்க நான்கு தலைகளை கொண்டதாகவும், இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றதாகவும் கேள்வி.
(இந்திரனின் ஆயிரம் கண்களுக்கு வேறு பல கதைகளும் உண்டு !!)

நினைத்தது போலவே, திலோத்தமையின் அழகில் மயங்கி இரு இணை பிரியா சகோதரர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டு மாண்டனர்.

இதனால் நாரதர் தர்மனுக்கு பெண் விவகாரங்களில் மிக ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும் என்றும் அண்ணன் தம்பி உறவு அவளால் முறிய வாய்ப்பு உண்டு என்று கூறி, அவர்களுக்கு …….அது வேற கதை . நாம் இன்றைக்கு இதனுடன் நிறுத்துவோம்.

இப்போது சிற்பம். கம்போடியா நாட்டில் இருந்து தற்போது பிரெஞ்சு நாட்டு குய்மேட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத சிற்பம். சுண்டா மற்றும் உபசுண்டா திலோத்தமையை நடுவில் வைத்து சண்டையிடும் காட்சி.