காமுகனின் முரட்டு இழுப்பும் , மனம்கொண்டவனின் அன்பு அணைப்பும் !

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை ஒட்டிய கதை ஒன்றை எடுத்து இன்றைய சிறப்புப் பதிவாக இடலாம் என்று – மல்லைக்கு மீண்டும் செல்கிறோம். வராஹ அவதாரம். பெருமாள் பூமாதேவியை பாதாள உலகுக்கு கடத்திச் சென்ற ஹிரண்யாக்ஷனை வதம் செய்து மீட்டு வரும் காட்சி. நாம் முன்னரே பார்த்த ஒன்று தான். ஏன் மீண்டும் ?

இந்த காட்சியை வடித்த சிற்பி, அதில் கடினமான கருங்கல்லில், அதுவும் ஒரு குடைவரைக் கோயிலின் சுவரில் இப்படி ஒரு காட்சியை, அதுவும் அதில் இடம் பெரும் நாயகன் நாயகி – அவர்களின் பாவங்கள் , உணர்ச்சிகளை , கற்பனை ரசத்துடன் செதுக்கி உள்ளான். இதை முழுவதுமாக ரசிக்க சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பளிங்கு சிற்பம் கொண்டு இந்த பதிவை அமைக்கிறேன். ( இந்தப் பிறவியில் நேரில் இந்த பொக்கிஷங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது. எனினும் நான் இன்னும் ரோமாபுரி சென்றதில்லை. படங்கள் அனநிதும் இணையத்தில் தேடி எடுத்தவை. முடிவில் சுட்டிகளை தந்துள்ளேன்) –

கருங்கல்லில் செதுக்குவதை விட பளிங்கு கல்லில் செதுக்குவது சுலபம் தான். ஆனால் தனது இருபத்தி மூன்றாம் வயதில் இந்த படைப்பை தந்த திரு பெர்னினி அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அப்படியே ஓரத்தில் ஒரு ஆசை – நமது பல்லவ சிற்பி மட்டும் பளிங்கில் செதுக்கி இருந்தால் ?

இன்று நாம் பார்க்கும் சிற்பம் “தி ரேப் ஆப் ப்ரோசெர்பின “. ரேப் என்பது கடத்தல் என்று படிக்கவும்.

சுவாரசியமான கதை கரு. ப்ளூடோ ப்ரோசெர்பினாவை கடத்திச் செல்லும் காட்சி. ப்ளூடோ பாதாள உலகுக்கு அதிபதி. அதன் வாசலை காக்கும் கொடிய மூன்று தலை நாய் – செரீப்ரஸ்

கதை இது தான். ப்ளூடோ காதல் வசப்பட வேண்டும் என்று எண்ணிய வீனஸ், தன மகன் அமோர் (அல்லது
குபிட் ) ஐ அங்கு அனுப்புகிறார். அவன் விடும் அம்பு ப்ளூடோவை தாக்குகிறது. அந்த சமயம் , ச்சிலி நகரில் தன தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் ப்ரோசெர்பினாவை , அருகில் இருக்கும் எட்னா எரிமலையில் ( வெடித்து) இருந்து வெளி வரும் ப்ளூடோ கடத்திச் செல்கிறார்.

மகளை காணவில்லை என்று அம்மா செரெஸ் ( பயிர்களின் கடவுள்) மனம் வருந்தி மகள் கிடைக்கும் வரை பயிர்களை விளைய விடாமல் செய்கிறாள். பூமி வரண்டு பாலைவனம் ஆகத்தொடங்கியது.

கவலை கொண்ட கடவுள் தலைவர் ஜுபி்டர், ப்ளூட்டோவை அதட்டி ப்ரோசெர்பினாவை விடுவிக்க கட்டளையிட்டார். ஆனால் அதற்குள் அங்கே இருந்த ஆறு பழங்களை தின்றதானால் ப்ரோசெர்பின ஆண்டுக்கு ஆறு மாதம் உலகிலும், ஆறுமாதம் ப்ளூடோவுடன் இருக்க வேண்டும் என்று ஆயிற்று !)

கதை நமது கதை போலவே வருகிறதே. பல்லவ சிற்பி, அந்த ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை கடத்திச் செல்லும் காட்சியை கல்லில் வடித்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்ப்போம்.

அந்தக் கற்பனையை மனதில் கொண்டு, பெர்னினி சிற்பம் கண்ணில் பார்ப்போம் . ப்ளூடோ பக்கம் இருந்து. ஒரு வலிமையான ஆணின் தாக்கம்.

ப்ரோசெர்பின பக்கம், வளைவுகள் நிறைந்த ஒரு பெண்ணின் போராட்டம்.

அப்படியே பல்லவ சிற்பத்தை பார்ப்போம். கம்பீரமாக தந்து தொடையில் அமர்த்தி அழகு பார்க்கும் பெருமாளின் வராஹ உருவம், மேன்மையும் மென்மையும் ஒருங்கே கொண்ட பூமாதேவி.

தன்னைக் கடத்தும் கொடியவனின் பிடியில் இருந்து விலக போராடும் அவலப் பெண்.

இங்கோ, தன்னை காப்பாற்றிய வீரனின் எதிரில் தேவி.

பெர்னினி, என்ன திறமை, பளிங்கு என்றாலும் கல் தானே. அதில் எப்படி தான் இப்படி செதுக்க முடிந்ததோ. மந்திரம் போட்டு குருதியும் சதையுமாக இருந்த இருவரை இப்படி கல்லாக மாற்றிவிட்டனோ. ப்ளூடோ கை ஒன்று அவள் மீது படும்போது, ஒரு அசுரத் தன்மை தெரிகிறது.

அவனை வெறுத்து தள்ளும் அவள் கை, அவன் முகத்தில் படும்போது

மல்லையில் ?? ஆஹா , பட்டும் படாமலும் ஒரு ஸ்பரிசம். வலது கை அன்பு ததும்பும் அணைப்பு, இடது கை தனது பொறுப்பான வேலையை ( அவளை காப்பாற்றுவது ) உணர்த்தும் வண்ணம் வலிமையான பிடி.

மங்கையின் முகத்தில் தான் என்ன ஒரு சோகம், வெறுப்பு. கண்ணீர். அந்த திறந்த வாய் அலறும் சத்தம் கேட்கிறதே. ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி எழுகிறது

தேவியின் முகத்திலோ வெட்கம் , வலது கை அவர் மேல் பட்டும் படாமலும் அணைக்கும் அவரது நெஞ்சை சற்றே தொட்டுப் பார்க்க செல்கிறது, முகம் வெட்கி தலை சாய்கிறது, அதை இடது கை மறைக்க செல்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் சென்று விட்டன – இரண்டு மகா சிற்பிகளுக்கு இடையில், ஆனால் கலை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒருவர் பெயர் உலக பிரசித்தம், மற்றொருவர் தனது பெயரை விட்டுச் செல்லவே இல்லை.

முடிவாக மீண்டும் ஒரு முறை இவற்றை பார்த்துக்கொண்டே – விடைபெறுகிறேன்.

படங்கள்:

மாமல்லபுரம் – அசோக் மற்றும் ஸ்ரீராம் ,
மற்றவை இணையத்தில்

Bernini's "Rape of Proserpine"
http://www.students.sbc.edu/vermilya08/Bernini/Pluto%20and%20Proserpina.htm
http://www.youtube.com/watch?v=nXR2YZxgDV4&feature=player_embedded#!
http://en.wikipedia.org/wiki/The_Rape_of_Proserpina

மீண்டும் நமது நண்பர் – புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில்

நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்

அங்கே பல அற்புத சிற்பங்கள் இருந்தும் இன்று சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு மகர தோரணம், அதில் நம் நண்பர் புலி தொப்பையை மீண்டும் சந்திப்போம்.

அருமையான இரு கன்னியர் சிற்பம் – ( அவர்களை அடுத்து வரும் மடல்களில் பார்ப்போம் ) – நடுவில் சற்று மேலே மகர தோரணம். படத்தை பாருங்கள்.

எங்கெங்கும் சிற்பங்கள் – அப்பப்பா, இந்த சிறிய இடத்தில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடு! மகர யாளிகள் – அவற்றின் வாயில் இருந்து வெளி வரும் சிங்க யாளிகள், அவற்றின் மேல் வாளேந்திய போர் வீரர்கள் , ஒருவருடன் ஒருவர் போர் புரிந்து கொண்டு உள்ளவாறு செதுக்கப்பட்ட விதம் அருமை .

சிற்பத்தின் நடுவில் பூமாதேவியை காப்பாற்றிய வெற்றி பரவசத்தில் வராஹ மூர்த்தி, நான்கு கரங்கள் – மேல் இரண்டில் சங்கு , சக்கரம் , பூமாதேவியின் பக்தி நிலை – இரு கரம் கூப்பி , அவர்களை ஆசை அன்புடன் மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி, அத்துடன் நிறுத்தவில்லை சிற்பி ( மல்லை மற்றும் உதயகிரி வடிவங்கள் பார்த்தோம் அல்லவா ) – அவற்றை போலே இந்த சிறு சிற்பத்திலும் அவன் வராஹ மூர்த்தியின் கீழே நாகராஜன் மற்றும் நாகராணியை செதுக்கி உள்ளான்.

அவரைச் சுற்றி பூத கணங்கள் – எருமைத்தலையுடன் ஒரு பூதம் – அடுத்து நம் நண்பர் புலி தொப்பை – ஆள்காட்டி விரலால் வாயை இழுத்து முகம் காட்டும் வண்ணம் மிக அருமை. இங்கு புலி தொப்பை கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. இவர் புள்ளமங்கை கோயிலிலும் வருவார். இது போல வேறு இடங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் இவர், யார் அந்த எருமை தலை – இவர்களுக்கு பெயர் உண்டா?

ஒரு அற்புத சிற்பத்தை நமக்கு தந்த காத்தி மற்றும் படங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் – இருவருக்கும் நன்றி

வராஹ அவதாரம், மல்லை மற்றும் உதயகிரி, மால் செய்யும் மாள்

மல்லை வராக அவதாரம் சிற்பம் பலரும் பார்த்த ஒன்று. ஆனால் அதிலும் ஒரு பல்லவ டச் உண்டு.. படங்களை உற்று பாருங்கள்…
 

 

பூமா தேவியின் மேலாடை சண்டை நடந்த அமளியில் சற்றே நழுவி அவளது மடியில் விழுகிறது…தேவி வெட்கத்தில் தலை சற்றே குனிந்து ( இதற்கு நீங்கள் இரண்டாம் படத்தை பார்க்கவேண்டும் – ஒரு பக்கமாக இருந்து எடுத்த படம் …நேர் பார்வையில் தெரியாது )மாலும் அன்புடன் தேவியை அணைக்கும் வண்ணம் சிற்பி செதுக்கி உள்ளான். 

 

இதே வடிவத்தின் இன்னொரு கோலம் உதயகிரி குடவரையில் கண்டேன். அங்கோ வராகம் மிக பெரிதாக, ஆக்ரோஷமாக உள்ளார்,தேவி அவரது கோரை பற்களில் இருந்து தொங்குவது போல உள்ளதே… இது அந்த சிற்பியின் பார்வை என்று நினைத்தேன்… அனால் திருவாய்மொழி பாடலை படித்த பின் தான் இருவருமே சரியான வடிவத்தை தான் சித்தரித்து உள்ளனர் என்று புரிந்தது…

 

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்கிழ்புக்கு
இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் பாரேன்னும்
மடந்தையை. மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே.

 உதயகிரி சிற்பி எடுத்த வரி இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும் மல்லை சிற்பி எடுத்த வரி இது தடம் பெருந்தோள் ஆரத்தழுவும், ஒரே கதையின் இரு அங்கங்கள் இவை… முதல் பாகம் உதயகிரி இரண்டாம் பாகம் மல்லை..