சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம் -பாகம் 2

சித்தன்னவாசல் ஓவியத்தை பற்றி முதல் பதிவை எழுதி பல மாதங்கள் ஆகி விட்டன. நண்பர்கள் பலரும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாமதம் செய்யாமல் இதோ. (முதல் முறை தளத்திருக்கு வரும் வாசகர்கள் இந்த பதிவின் முதல் பாதியை படித்துவிட்டு இங்கு வரும்படி வேண்டுகிறேன். )

முதல் பாகம்

நண்பர் அசோக் உதவியுடன், பல நாட்கள் தவமிருந்து கிடைத்த புகைப்படங்கள். அசோக்கிடம் ஒரு கேமரா
ஒரு கணினி கொடுத்துவிட்டால் போதும். எந்த கடினமான இடத்திற்கும் சென்று திறம்பட படம் பிடித்து வந்துவிடுவார். அவர் மட்டும் இப்படி நமக்கு படங்களை தந்து உதவவில்லை என்றால், நாமும் சித்தன்னவாசல் போனேன் – எதையோ பார்த்தேன் என்று நடையை கட்டிக்கொண்டு போயிருப்போம்.

அந்த ஓவியங்களில் உள்ள காட்சிகளை, எப்படித்தான் அந்த ஓவியன், மேலே இருக்கும் சுவரில் , குடவரையில் உள்ள குறைவான வெளிச்சத்தில் , சாரம் கட்டி படுத்துக்கொண்டு தூரிகை கொண்டு தீட்டினானோ என்று மீண்டும் மீண்டும் வியக்கத் தோன்றுகிறது.

சென்ற பதிவில் பார்த்த குளம் காட்சியின் தொடர்ச்சி தான் இன்று. மூன்று பறவைகள், ஒரு மனிதன், ஏன் ஒரு யானை கூட இங்கே இருக்கிறது என்றால் – முதல் பதிவை கூர்ந்து கவனிக்க தவறியவர்கள் – நம்பமுடியுமா. கூடவே எங்கும் நீந்தும் மீன்கள் வேறு

கட்டம் கட்டி காட்டுகிறேன் – இப்போது தெரிகிறதா ?

சரி, சென்ற பதிவை போலவே, மற்ற இடங்களில் வண்ணம் இல்லாமல் இதோ

இப்போது தெரிகின்றனவா ? மேலே, இடது பக்கம், ஒரு பறவை கண் தெரிகிறதா ?

வலது பக்கம் ஒரு மீன் ?

அடுத்து இரு பறவைகள் மற்றும் மீன்கள்?

கோமணத்துடன் குளத்தில் இறங்கி பூக்களை பறிக்கும் வாலிபர் ?

கோட்டோவியம் இதோ !

வாலிபர் பறிக்கும் பூக்களில் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அதை முடிவில் பார்ப்போம், அடுத்து கம்பீர தந்தங்களை கொண்ட யானை.

அதனைச் சுற்றியும் மீன்களின் கூட்டம்

அடியிலும் இன்னும் நிறைய நீந்தும் மீன்கள்

நாம் கவனிக்க வேண்டிய விஷயம், குளத்தில் தாமரைப் பூக்களும் அல்லிப் பூக்களும் இருக்கின்றன. இவற்றை முறையே பறிக்கும் காட்சி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


இரு மலர்களின் வேற்றுமையை மலர்களின் தண்டுகளில் காட்டியிருக்கிறான் ஓவியன். இதற்கு மீண்டும் ஒருமுறை மேலே இருக்கும் இரு மலர்களை அருகில் சென்று பார்ப்போம்.

இணையத்தில் கிடைத்த படங்கள் – தாமரை மற்றும் அல்லி மலர்களின் தண்டுகள்

அல்லித் தண்டு வழவழவென ஒரு மங்கையின் கரம் போல இருக்க, தாமரைத் தண்டோ முரடனின் கைகளை போல உள்ளன – பார்த்தீர்களா? இப்போது மீண்டும் ஓவியத்தை பாருங்கள்

என்ன அருமையான கலை – நமது ஓவியக்கலை !

சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம்

சித்தன்னவாசல் என்றதுமே பலருக்கு பலவிதமான சிந்தனைகள் தோன்றும். நமது திரைப்பட கவிஞர்கள் தங்கள் கதாநாயகிகளை வர்ணிக்க பொதுவாக சித்தன்னவாசல் ஓவியம் என்று எழுதுவார்கள். அதில் எத்தனை பேர் அங்கே சென்று அந்த ஓவியங்களை பார்த்துவிட்டு ஏற்பட்ட தாக்கத்தினால் அப்படி எழு்தினார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்படி அவர்கள் அங்கு சென்று இருந்தால் , இன்றைக்கு அந்த அற்புத ஓவியங்கள் படும் பாட்டை பாட்டாக பாடி இருப்பார்கள். பாவம் அவை, தெரியாமல் நம் நாட்டில் உள்ளன. அங்கே இருப்பதில் நூற்றுக்கு ஒரு சதவிதம் வேறு ஒரு நாட்டில் இருந்தாலும் அவை அந்த நாட்டின் தலை சிறந்த கலை பொக்கிஷம் என கொண்டாடப்படும்.

நாம் முன்னரே இரு பதிவுகளில் அங்கு இருக்கும் அற்புத நடன மாந்தர்களை பார்த்துவிட்டோம். அவை இருக்கும் இன்றைய அவல நிலையை கண்டு நம் மனம் கதறுகிறது. இன்றைக்கு, நண்பர் அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களின் உதவியுடன் நாம் முக்கியமான ஓவியங்களை பார்க்கப் போகிறோம் (அவர் இந்த அற்புதங்களை சரியான விதத்தில் வெளிக் கொணரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ) இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் அனைத்தும் அவரது கைவண்ணம் இல்லை கேமராவண்ணம். கேட்டவுடன் பெருந்தன்மையுடன் நமக்காக பகிர்ந்துக்கொண்டார். அவருக்கு அனைவரின் சார்பாக ஒரு பெரிய நன்றி. மின்னாக்கம் என்பது இவற்றை பாதுகாக்கவும், தற்போதைய நிலையை எடுத்துரைக்கவும், மேலும் சிதைவில் இருந்து இவற்றை காக்கவும் உதவும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். ( இந்த சமண குடைவரையும் அதில் உள்ள ஓவியங்களையும் திரு S. ராதாகிருஷ்ண ஐயர் அவர்கள் 1916
கண்டுபிடித்தார் )

முதன் முதலில் முனைவர் திரு சுவாமிநாதன் அவர்கள் தான் சித்தன்னவாசல் ஓவியங்களை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு மணிநேரம் பிரமித்து அவரது உரையை உள்வாங்கினோம். அதை இன்னும் படங்களுடன் மெருகு சேர்த்து ஒரு பெரிய பதிவை இடவேண்டும் என்று பல நாள் ஆசை. நண்பர் அர்விந்த் அவர்களுடன் சென்ற டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோது படம் எடுக்க முயற்சி செய்தோம். முடியவில்லை. எனினும் அதற்கேற்ற காலத்தை அதுவே நிர்ணயம் செய்தது போல – படம் பிடிப்பதில் கைதேர்ந்த வல்லுநர் திரு அசோக் அவர்களது படங்களுடன் தான் பதிவு அமைய வேண்டும் என்று காத்து இருந்தது போல.

சித்தன்னவாசல் நோக்கி – வெறும் பாறை இல்லை. அதற்கு மேலும் கீழும் சரித்திரம் உள்ளது. மேலே என்ன வென்று பிறகு பார்ப்போம்.

குடைவரை அடைந்தவுடன் எதிரில் தோன்றிய தூண்கள் சற்று நெருடலாக இருந்தன. இவை மிகவும் சமீபத்தில் கட்டியவை.

குடைவரையின் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று அங்கே இருக்கும் தடிமன் பெருமான் தூண்கள் ( மகேந்திரர் காலத்து தூண்கள் போல ) இருப்பதால் நாம் கருதலாம் , பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் செப்பனிடப் பட்டது. இதனை குடைவரை தூணில் இருக்கும் ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு சொல்கிறது. சிறிமாறன் ஸ்ரீவல்லபன் ( பாண்டிய அரசன் (815 – 862 AD) காலத்தில், இலன் கௌதமன் என்னும் சமணனால் அர்த்த மண்டபம் செப்பனிடப்பட்டது

நாம் முன்பு பார்த்த பதிவில் வெளிக் குடைவரை தூண்களில் உள்ள நடன மாதர் ஓவியங்களை பார்த்தோம். இப்போது உள்ளே செல்கிறோம் – மண்டபத்தின் மேலே பார்த்துக்கொண்டே..

ஆம்! மேல் சுவரில் தான் உள்ளது அந்த தாமரை பூத்த தடாகம்.

முதலில் சுவரில் பூச்சு அடித்து அது காய்ந்த பின்னர் ஓவியத்தை வரையும் முறை இங்கு காணப்படுகிறது. இதனை ஃபிரெஸ்கோ செக்கோ என்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Fresco-secco

யோசிக்கும் போதே , தலை சுற்றுகிறது. இப்படி சாரம் கட்டி, மல்லாக்க பார்க்க படுத்துக்கொண்டு, எப்படித்தான் ஓவியக் கலவை , தூரிகையை கொண்டு கையாண்டார்களோ.

சரி, இன்னமும் உங்கள் பொறுமையை சோதிக்க மாட்டேன். இதோ ஓவியம்.

அப்படி என்ன இந்த ஓவியத்தில் என்று கேட்கிறீர்களா. பொறுமை, இந்த ஓவியப் பயணத்தை படங்களுடனே தொடருவோம். நீங்கள் கவனிக்க வேண்டிய பகுதிகள். ஆமாம்
ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒளிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஓவியத்தின் பெருமிதம்.

இப்படி போட்டுக் காட்டினால் எளிதாக உள்ளதா?. தாமரை பூத்துக் குலுங்கும் தடாகத்தில் மீன்கள் பல துள்ளி விளையாடுகின்றன .

மீன்களை சிரிக்கும் வண்ணம் வரைந்தானோ ஓவியன்.



இன்னும் பல தடாகத்தில் ஒளிந்துக்கொண்டு இருக்கின்றன. நன்றாக தேடிப் பாருங்கள்.

இது ஒரு பெரிய தடாகம். மீன்கள் மட்டும் அல்ல – உள்ளே ஒரு காட்டெருமை குடும்பம், ஒரு எருமை மாடு, ஏன் ஒரு யானை குடும்பம் , எட்டு நாரை பறவைகள் உள்ளன, என்றால் நம்புவீர்களா ?


உண்மை தான். முதலில் கஜங்கள். உற்று பாருங்கள். அதில் ஒன்று தனது துதிக்கையை கொண்டு ஒரு தாமரை மலர்க் கொத்தை சுற்றி இழுப்பதும், அதன் அடியில் ஒரு குட்டி யானை ( சற்று கடினம் தான் – என்ன செய்வது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன )

இப்போது மாடுகள். காட்டெருமை நம்மை வெறுப்புடன் திரும்பிப் பார்ப்பது தெரிகிறதா. அதன் பின் அதன் துணை போல

மாடுகளின் கொம்புகளில் உள்ள வித்தியாசத்தை காட்டும் ஓவியனின் கலை அபாரம்.


இன்னொரு விதமான எருமை. இது நம்ப ஊரு எருமை போல உள்ளது. ( என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பெயர் எருமை – என் பெயரை விட அவர் என்னை கூப்பிட உபயோகித்த பெயர் அதுதான் )


இங்கே மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பிராணி உள்ளது. குதிரையாக இருக்கலாம்.

இவை அனைத்துக்கும் நடுவில் கூட்டம் கூட்டமாக நாரைகள். எதையோ கண்டு மிரண்டு பறக்க இருக்கின்றன.

கண்களில் ஒரு மிரட்சி தெரிகிறதா ?


அவை மிரள காரணம் என்ன. ஓவியத்தை மீண்டும் பாருங்கள். அவை எதை பார்த்து மிரளுகின்றன.

அடியில் இருக்கும் நாரைகளை தவிர ( அவை அருகில் இருக்கும் யானையை கண்டு மிரளுகின்றன ) மற்ற பறவைகள் அனைத்தும் பார்ப்பது…..

ஆம், குளத்தின் நடுவில் இரு மனிதர்கள் தண்ணீரில் இடுப்பு வரை இறங்கி பூக்களை பறிக்கிறார்கள். இது சாமவ சரண என்னும் சமண சடங்கில் வரும் காட்சி.


சற்று மாநிறமாக இருப்பவர், எட்டி ஒரு தாமரையை பறிக்க தண்டை பிடித்து இழுக்கிறார். மற்றொரு கையில் ஒரு பின்னிய கூடையில் பிரித்த மலர்கள். ஓவியன் அவர் இழுப்பிற்கு வளையும் வண்ணம் தண்டை வரைந்துள்ளான் பாருங்கள்.

அவருக்கு பின்னால் இன்னும் ஒரு இளம் துறவி. இவர் சற்று நல்ல சிகப்பு நிறம் போல. முகத்தில் என்ன ஒரு தேஜஸ். அந்த கையில் தான் என்ன ஒரு நளினம், தன நண்பனுக்கு அடுத்த பூவை சுட்டிக்காட்டும் பாவம் அருமை.

அவருக்கு பின்னல் இருக்கும் பூ தண்டுகளை கவனமாக பாருங்கள். நடுவில் இருப்பது அல்லி , இருபுறமும் தாமரை. அல்லித் தண்டு வழவழ வென இருக்கும், தாமரை சற்று சொர சொரவென இருக்கும்.(அல்லித் தண்டு காலெடுத்து அடிமேல் அடிவைத்து என்று கவியரசர் எழுதினாரே..)

என்னமாய் நுண்ணி்ய அளவில் ஒரு தடாகத்தை கூர்ந்து கவனித்து நமக்கென வரைந்துள்ளான் அந்த அற்புத ஓவியன். இவனல்லவா உலகிலேயே மிகச் சிறந்த ஓவியன்.. இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தடாகத்தில் உள்ள மலர்கள் மொட்டில் இருந்து முழுவதுமாக மலரும் வரை எத்தனை விதமாக மலருமோ , அவ்வளவும் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னரே திரு சிவராமமூர்த்தி அவர்கள் எடுத்த பிரதி உதவுகிறது.

இருங்கள், இதுவரை பாதி தடாகம் தான் முடிந்தது. அடுத்த பக்கம் இதன் மறுபாதியைக் காண்போம்.

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் இரண்டு

சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.

நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.

நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.

சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.

வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.

“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.

பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.

கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..

பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..

எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் ஒன்று

அது என்ன சித்தன்னவாசல் ஓவியம் ?

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பற்றி பதிவை வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை. அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். சரியான கேள்வி தான். திரு சுவாமிநாதன் அவர்கள் ஒருமுறை ஒரு மணிநேரம் விளக்கினர். பிறகு நண்பர் திரு இளங்கோவன் அவர்களது அருமையான பதிவும் படித்தேன்.

சித்தன்னவாசல்

எனினும் இதை பற்றி இணையத்தில் அதுவும் குறிப்பாக அங்கே உள்ள ஓவியங்கள் பற்றி இணையத்தில் எங்கும் எதுவும் இல்லையே என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.

இதன் தற்போதைய நிலைமை, கலை ஆர்வலர் சென்றாலே விரக்தி அடைந்து திரும்பும் நிலை – ஏன் தெரியுமா ? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விதான் ? இதற்கு விடை அளிப்பது கடினம். அங்கே அப்படி என்ன இருந்தது என்ற கேள்விக்கு வேண்டும் என்றால் பதில் கூறலாம். கூறும் முயற்சியே இந்த பதிவு .

அங்கே ஒரு குகைக்கோயில், சில பல சமணர் படுக்கைகள், பழமையான கல்வெட்டுக்கள் என்று பல இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தவை அங்கே உள்ள ( இருந்த ) ஓவியங்கள். சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி செவி வழி கூட செய்தி அறியாமல் பல தமிழரே இருக்கும் பொது இதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை விட சுவையான தகவல் – இவை அனைத்தும் சமணர்களின் பங்களிப்பாகும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது?

அஜந்தா ஓவியங்கள் பாணியில் மிக அற்புத ஓவியங்கள் இருந்தன . அவை எங்கே போயின ? இலங்கையில் பல இடையூறுகள் நடுவிலும் நிற்கும் சிகிரியா மாந்தர்போல இவை ஏன் நிற்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் நின்ற இவை – வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரே சிதைந்தன. நம் கைகளாலேயே நம் கண்களைக் குருடாக்கி கொள்வது போல நம் ஆட்களே ஓவியங்களை சிதைந்துள்ளனர்.

அப்படி என்ன ஓவியங்கள் அங்கே உள்ளன – முதலில் , தூண்களை பார்ப்போம். தூண்களின் முகப்பில் நாட்டிய மங்கையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

ஒவ்வொருவரை பார்ப்போம்.

முதல் மங்கை. என்ன தெரியவில்லையா ?



இப்போது

அதுதான் இன்றைய நிலை.

சுமார் ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சில கோட்டோவியங்கள்

இவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து நான் தீட்டிய ஓவியம்.

ஓவியம் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், ஆடல் அரசன் நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் மங்கை பலவித அணிகலன்களை அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவள் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது. முழுவதுமாய் ரசிக்க கொஞ்சம் கற்ப்பனை இல்லை நிறைய கற்பனைத் திறன் வேண்டும்.

தென்னிந்தியாவின் ஓவிய திறமைக்கு முடி சூடும் இந்த ஓவியங்கள் இப்போது நம் அறியாமைக்குத் தீனியாகி மாண்டுவிட்டன. மாண்டவர் மீண்டும் வருவாரோ ?