நூதனமுறையில் பாற்கடல் கடையும் காட்சி – காஞ்சி கைலாசநாதர் ஆலயம்.

ஆயிரம் ஆலயங்களை கொண்ட ஊர் என்ற பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா. காஞ்சி தான். அது வெறும் பகட்டு அல்ல – காஞ்சியில் எந்த தெருவில், எந்த இடத்தில நின்று பார்த்தாலும் குறைந்தது மூன்று ஆலயங்களாவது தெரியும். இப்படி குவியும் எண்ணிக்கையில் தனியாக நிற்கும் ஆலயம் ராஜ சிம்ம பல்லவனது காஞ்சி கைலாசநாதர் – காலத்தால் மிகவும் பழமையான கட்டுமானக் கோயில் என்ற முறையில் மட்டும் அல்ல, சிற்பக்கலை பல்லவ சிற்பிகளின் கைத்திறத்தின் மகிமையில் அடைந்த உன்னத நிலையின் பிரதிபலிப்பு இந்த கலைக் கூடம். அந்த தனித் தன்மையை ஆலயத்தினுள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திலும் நாம் காணலாம். நாம் இன்று பார்க்கும் பாற்கடல் காட்சியும் அதை போலவே வேறு எங்கும் காண இயலாத ஒரு காட்சி.

பொதுவாகவே பாற்கடல் கடையும் காட்சியை விளக்கும் சிற்பங்களை இந்தியாவில் பார்ப்பது அரிது. கம்போடியா அங்கோர் வாட்டில் மிக அருமையான ஒரு சிற்பம் இருக்கிறது. அதே போல அதனை ஒட்டிய காலத்தில் அருகில் சில இடங்களில் இந்த காட்சி உள்ளது. பொதுவாககம்போடியா வடிவங்களில் பெருமாளை முழு உருவமாகவும் அவதார ரூபமான கூர்ம வடிவமாகவும் இரு வடிவங்களாக இருக்கின்றன. ( பாங்காக் விமான நிலைய நவீன சிற்பம் கூட இது போல தான் உள்ளது ) மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும் அசுரகளும் இரு புறம் நின்று கடையும் காட்சி அற்புதம்.

எனினும் இந்த காஞ்சி கைலாசநாதர் வடிவம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இங்கே கூர்ம வடிவம் சித்தரிக்கப்படவில்லை.

நடுவில் இருக்கும் எட்டு கைகளை கொண்ட பெருமாள் உருவம் – ஒரு கையில் சங்கு மற்றொரு கையில் சக்கரம் என்று கம்பீரமாக உள்ளது.

எனினும் பெருமாள் சிற்பத்தின் நடு இடத்தை வகிக்காமல் ஒரு பக்கமாகவே இருப்பதால் , அவர் சாய்ந்து அல்லது சாயாமல் பிடித்து நிற்கும் இடத்தை நாம் ஆராய வேண்டும்.

அவர் நிற்கும் பாணியும் முக்கியம். சாதித்து விட்டு நிற்கும் ஒரு வெற்றி பரவசம் தெரிகிறது.

அடியில் நாக அரசன் – மந்தார மலையை மத்தாக கொண்டு கடைய உதவிய கயிறாக வாசுகி.

அப்படி என்றால் பெருமாள் தூக்கிப் பிடிக்கும் தூண் போன்ற வஸ்து தான் மந்தார மலையாக இருக்க வேண்டும். மத்து போன்றே இருக்கிறதே !

மந்தார மலையில் ஒரு பறக்கும் உருவம் கையில் எதையோ ஏந்தி வருகிறது.

அருகில் சென்று பார்ப்போம்.

ஆஹா, அமிர்த கலசத்தை ஏந்தி வரும் தன்வந்தரி. காரியம் முடிந்து விட்டது. இதனுடன் பல அற்புத வஸ்துகள் வெளியில் வந்தன என்று நாம் அறிகிறோம். கௌஸ்துபம் என்ற கல் பெருமாளின் நெஞ்சை அலங்கரிக்கும் நகையாக மாறியது, காமதேனு, கல்பவிருக்ஷம்,ஐராவதம் என்ற வெள்ளை யானை, சில குறிப்புகள் படி பெருமாளின் சங்கு, சக்கரம் மற்றும் உச்சைஷ்ராவாஸ் என்ற ஏழு தலை வெள்​ளைப் புரவியும் வந்ததாம்.
கைலாசநாதர் சிற்பங்கள் இப்போதே அழகு, அவை வடித்தபோது மேலே அழகாக பூசப்பட்டு வண்ணம் தீட்டி இருக்கக் கூடும். இன்றோ அவை மிகவும் சிதைந்து இருக்கின்றன – நம்மால் பல குறிப்புகளை பார்க்க இயலவில்லை. எனினும் ஒரு பக்கத்தில் ஒரு புரவி உள்ளது. இந்த புரவியின் வெள்ளை நிறத்துக்கும் அதன் வாலுக்கும் இன்னொரு கதை உண்டு. அதை வேறொரு தினம் பார்ப்போம்.

இப்போது புரிகிறது – வேலை முடிந்து விட்டது. அதனால் தான் பெருமாள் தன் சுய ரூபத்தில் அழகாக நின்று அனைவரின் புகழாரத்தை வாங்கிக் கொண்டு சிரிக்கிறார் போல.

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி

இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள் !

யானை என்றாலே நமது சிற்பிக்கு அதித ப்ரியம்…அதிலும் வெள்ளை யானை என்றால் கேட்க வேண்டுமா… அதிலும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் வெள்ளை யானை என்றால்..அப்பப்பா ….ஐராவதம் ….வஜ்ராயுதம் கொண்ட இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள்…ஒவ்வொரு தலைக்கும் ஏழு தந்தங்கல்…இதை எப்படி சிற்பம் / ஓவியத்தில் சித்தரிப்பது ….இங்கே ஒரு ஓவிய முயற்சி பாருங்கள்…

 

இதில் என்ன வியப்பு என்றால் ஐராவதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா , விஎத்னம் போன்ற இடங்களில் மக்கள் இன்றும் மிக நேர்த்தியாக வழிபடுகின்றனர் …அங்கே இராவடி என்று ஒரு ஆறு உள்ளது…இங்கே பாருங்கள் தாய்லாந்தில் இராவடி என்னும் ஒரு அருங்காட்சியகத்தில் மிக பிரம்மாண்டமான சிலை..சிலையில் ஐராவதத்திர்க்கு மூன்று தலைகள் வைத்து கம்போடியா சிற்பி செதுக்கிய வண்ணம் மிகவும் அருமை…இம்மாதிரி வடிவங்கள் அங்கு நிறைய உண்டு…

 

இதோ சிலவற்றை பாருங்கள்…



 

இந்தியாவிலும் பல இடங்களில் இந்திரனின் ஐராவதத்திர்க்கு சிலை இருந்தும் ஒரு தலை கொண்ட சிற்பங்களே அதிகம்…இதோ சோமநாதபுரம் மற்றும் மும்பை அருகே உள்ள பாஜா குடவரை சிற்ப்பங்கள்..

585 592

 

தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்ற ஓவியங்களிலும் ஐராவதம் வரும்….அதை வேறொரு இழையில் பார்ப்போம்