மகாவிஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கும் மறு – ஸ்ரீவத்சம்

நண்பர்களே , நாம் இன்றைக்கு ஒரு வெண்கலச் சிலையை பார்க்கப் போகிறோம். இது ஒரு சாதாரண சிலை அல்ல, கண்ட உடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சோழர் கால சிலை. அது என்ன சோழர் கால சிலைக்கு உலகெங்கும் அப்படி ஒரு தனிப் பெருமை! வாருங்கள் காண்போம்.

நுண்ணிய வேலைப்பாடா? சிற்பியின் கலைத் திறனா? முக பாவங்களா? அங்க அமைப்புகளா? இவை அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்தாலும் அதற்கு மேலும் ஏதோ ஒரு கவர்ச்சி. அந்த ஏதோ ஒன்று என்ன? இந்த பதிவை படித்த பின்னர் நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்.

தில்லி அருங்காட்சியகத்தில் அழகாய் வீற்றிருக்கும் சிலையை முதலில் பார்ப்போம்…

மஹா விஷ்ணு, ஆபத்பாந்தவன் . நாம் இதுவரை ஏராளமான கற்சிலைகளை பார்த்துள்ளோம், ஆனால் உலோகக் சிலைகள் மிகவும் நேர்த்தியானவை, காரணம் உலோகத்தில் வேலை செய்வது கல்லை விட சற்று எளிது, அதனால் கலைஞன் இன்னும் நேர்த்தியாக வேலை செய்யலாம். நம்முடைய முந்தைய ‘சிங்கை’ உமை சிற்பம் பற்றிய பதிவில் சோழர்கள் வெண்கலச் சிலைகளை எப்படி வடித்தார்கள் ( லாஸ்ட் வாக்ஸ் முறை ) என்பது பற்றி விரிவாக பார்த்தோம். இன்று அதே முறை குறித்து கோதை நாச்சியார் தம் அழகு தமிழில் மனம் உருகி பாடிய பாட்டை கேட்டு நாமும் ரசிப்போம்… ( வழக்கம் போல் சரியான பாசுரத்தை தேடித் தந்த திரு திவாகர் அவர்களுக்கு நன்றி )

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேன்கடத்துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததற்றிக் கொண்டூற்றவும் வல்லையே

என்ன அருமையான வரிகள்! மெழுகுச் சிலை ( மோல்ட்) அதனை அணைக்கும் களிமண், சுளையில் வைத்து சுடும்போது உள்ளே இருக்கும் மெழுகை உருக வைக்கும் . அதே போல திருவேங்கடவன் தன்னை வெளியில் அணைத்து உள்ளே உருக வைக்கின்றான் என்கிறாள்.

அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் அவனது சுந்தர வடிவத்தை வடிக்கும் போது, அவன் கருணை முகம் எப்படி இருக்க வேண்டும். ஒருமுறை பார்த்தாலே உள்ளத்தை உருக்கி அவன் அன்பில் சரண் புக செய்யும் சுந்தர மதி வதன முகம் அல்லவே அது.

அது மட்டுமா, அவன் அலங்காரப் பிரியன்.

அழகைப் பார்த்தோம், இப்போது நுண்ணிய வேலைப்பாடை பார்ப்போம். ( தலைப்புக்கு வர வேண்டுமே )

கவனமாக பாருங்கள் – மீண்டும் உங்களுக்கு ஒரு பரீட்சை.

என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, உங்களுக்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன் முயன்று பாருங்கள். வலது மார்புக்கு சற்று மேலே பாருங்கள்.

என்ன அது. சிலை வடிக்கும் பொழுது ஏதாவது ஒட்டிக்கொண்டதா ? இல்லை – அது ஒரு “மறு” (மச்சம்) – இதைத்தான் கலித்தொகையில் “திரு மறு மார்பன் போல்” என்று பாடினரோ!

– நன்றி கீதா அம்மா – சமஸ்கிருத வரிகளை படியுங்கள்

durdAntha daithya visikha ksahtha-பத்ரபாங்கம்

துர்தாந்த தைத்ய விஷிக்ஹ க்ஸாஹ்த – பத்ரபாங்கம்

veerasya tE VibudhanAyaka baahumadhyam |

வீரஸ்ய தே விபுதாநாயக பாஹுமட்ஹ்யம் |

SrIvathsa Kousthubha RamA வணமளிகங்கம்

ஸ்ரீவத்ச கௌஸ்துபா ராம வணமளிகங்கம்

chinthAnubhUya labhathE charithArTathAm na: ||

சிந்தானுபூய லபதே ச்சரித்தார் ததாம் ந:||

( தமிழாக்கம் நன்றி முனைவர் கண்ணன் அவர்கள் )

ஓ! தெய்வ நாயகா!

பொல்லா அசுரர் உன்னுடன் போர் புரிந்த போது பட்ட விழுப்புண்கள் உன்
மார்பில் கணிதக் கோடுகளாக இங்குமங்கும் பரவி உன்னை அளக்கின்றன.
அப்போர்களில் நீர் கண்ட வெற்றியின் சின்னமே போல் இவ்விழுப்புண்கள் உன்
மார்பை அலங்கரிக்கின்றன.

உன்னோடு பிறந்த ஸ்ரீவத்சமெனும் மருவும், கௌஸ்துபம் எனும் செம்மணியும்
இதனுடன் பொலிவுடன் திகழ்கிறது.

பூமித்தாய் மகிழ்வுடன் கோர்த்தளித்த காட்டுப்பூக்கள் சேர்ந்த அழகிய
வனமாலை உன் அழகிற்கு அழகு சேர்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், அன்னை ஸ்ரீதேவி
‘அகலகில்லேன்’ என உன் திருமார்பை அலங்கரிக்கிறாள். அவளது திருவழகு
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ எனும்படியாக உன் வடிவழகிற்கும்,
சுபாவத்திற்கும் போட்டியாய் அமைந்துள்ளது.

இத்தனையும் அசுரர் தந்த விழுப்புண்ணில் பிரதிபலித்து வண்ணக்கோலமாக உன்
நெஞ்சை மாற்றுகின்றன.

இத்தனையும் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. இதுவல்லவோ சேவை! ஒரு
சேதனனுக்கு கிடைக்கும் அரிய சொத்து.

என்ன அன்பர்களே சோழர்களின் வெண்கலச் சிலையின் மகத்துவத்தை அனுபவித்தீர்களா!

பூவை முகர்ந்ததற்கு கையை வெட்டு

நாயன்மார்களின் சரித்திரத்தைச் சித்தரிக்கும் பல தாராசுர சிற்பங்களை ஏற்கனவே நாம் ரசித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிற்பத்தை மிகவும் விரிவான விவரங்களுடன் இன்று காண்போம். மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதை ஏதோ குரூர தோற்றமுடையதாகத் தெரியும், ஆனால் சற்றே கவனமாக அதன் பின்னனியைப் படித்தோமானால் தெளிவாகும். இதனை முழுமையாக புரிந்து கொள்ள எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட இரு வேறுபட்ட சம்பவங்களை காண்போம்.

முதல் சம்பவத்துடன் துவங்குவோம். முதலில் சிற்பம்

இதில் ஆடம்பரமான கிரீடம் அணிந்த அரசன் போன்ற ஒருவர், ஒரு பெண்ணின் முழங்கையோடு அவள் கையை வெட்ட முற்படுவதுபோல் கத்தியை உயர்த்தி பிடித்துள்ளார். குரூரமாகத் தோன்றும் இந்தக் காட்சியில், ஆணின் முகத்தில் புன்னகை தெரிகிறது, பெண்ணின் மூக்கோ சிதிலமடைந்துள்ளது. இதற்கு பின்னனி ஏதும் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்.

ஆம், இந்தக் கதை கழற்சிங்க நாயானாருடையதுதான்: பல்லவ வம்சத்தைச் சேர்ந்த இந்த நாயனார் மிகவும் சிவ பக்தியுடையவர். ஒருமுறை இவர் சிவாலயங்களை தரிசிக்க யாத்திரை சென்ற பொழுது திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தார் அவரது மனைவியும் அரசியுமான சங்கா (இவர் ராஷ்டிரகூட மன்னர் அமோக வர்ஷ நிருபதுங்கனின் மகள், சைன மதத்தில் பற்றுடையவர்கள் – ஆதாரம் பல்லவ வரலாறு). அவ்வாறு வலம்வரும் சமயம் பிரகாரத்தின் மூலையில் ஒரு மலர் விழுந்து கிடந்ததைப் பார்த்த இவர், அதனுடைய நறுமணத்தால் ஈர்க்கப் பட்டு அதனை எடுத்து முகர்ந்தார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.

பொழிப்புரை :
சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள வளங்களை எல்லாம் தனித் தனியே பார்த்து மகிழ்ந்தவள், தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் புதிய பூ ஒன்று விழுந்து கிடப் பதைக் கண்டு எடுத்து மோந்தாள்.

இதனைக் கண்ட செருத்துணை என்னும் தீவிர சிவபக்தர், ஆஹா இறைவனுக்காக படைக்கப் படவிருந்த மலரின் புனிதத்தை அதை முகர்ந்து கெடுத்துவிட்டாரே என்று கோபப்பட்டு அரசியின் மூக்கை துண்டித்துவிட்டார். (இந்த சம்பவத்தால் இவரும் நாயன்மார் வரிசையில் சேர்ந்துவிட்டார், இவரது சரித்திரத்தை காட்டும் சிற்பத்தை தனியானதொரு பதிவில் பார்க்கலாம்).

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

பொழிப்புரை :
புதிய மலரை மோந்த போதில், செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இம் மலரை மலர் மண்டபத் திருமுற்றத் தில் எடுத்து மோந்தனள் என்று எண்ணித், துணிந்து, தேன் பொருந் திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அவள் மூக்கைப் பிடித்து அரிந்தார்.

காயப்பட்ட அரசியின் ஓலத்தைக் கேட்ட கழற்சிங்கர் ஓடோடி வந்தார், அரசியின் நிலையைப் பார்த்து “இதனை யார் செய்தது” என்று கர்ஜித்தார். உடனே செருத்துணை முன்வந்து, தானே இந்த பங்கத்தை செய்தவர் எனச் சொல்லி மன்னிப்பு கோரினார். மன்னரோ அவரைத் தண்டிக்காமல் ஒருபடி மேல் சென்று, கை தானே முதலில் மலரை எடுத்தது அதனால் கை தான் முதலில் தவறு செய்தது என்று கூறி தன் வாளை எடுத்து அரசியின் கையை வெட்டி விட்டார்.

அரசி மன்னருக்கு மிகவும் பிடித்தமானவள், மிகவும் அழகானவள், அதிகாரமுடையவள் இருந்தும் மன்னருக்கு இறைவன் மீதான பக்திதான் பெரிதாக இருந்தது.

இந்த சிவலீலையை கண்ணுற்ற வானவர்கள் இவர்களின் பக்தியை மெச்சி மலர்மாரி தூவினர்.

இதோ இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல்;

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.

பொழிப்புரை :
தம் இடையில் கட்டியிருந்த உடைவாளை உருவி, அம் மணம் கமழும் மலரைத் தொட்டு, முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கத் தகுவது என்று கூறி, தம் அரசுரிமைப் பட்டம் பூண்டு, தம் அன்பையும் பூண்டு விளங்கும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப் போதே துண்டித்தார்.

இப்பொழுது மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஆண்டாள் சரித்திரத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

( செட்டிபுணியம் தேவ நாராயண பெருமாள் கோயில் – படம் நன்றி அசோக் )

ஆண்டாள் கண்ணனையே காதலனாக வரித்தாள். அந்தக் கண்ணனே மணாளனாகவும் வேண்டும் என்று விரதமிருந்தவள்.

பாவை விரதம் முதல் மன்மதனுக்கு வேண்டி நோன்பு இருப்பது வரை பல நோன்புகள் நோர்த்தவள். எல்லாமே கண்ணனின் கரம் பற்றவேண்டித்தான். இவள் விரதம் முடிப்பதற்கு எல்லாத் தேவதைகளையும் கூவி அழைத்தவள். (மன்மதனின் தம்பி முதற்கொண்டு வருணதேவன் சுமந்து செல்லும் மழைமேகங்கள் வரை அனைவருமே ஆண்டாளுக்குக் காதல் தூதுதான்.)

கண்ணனே தன் கணவன் என்பதை கனவிலும் நனவிலும் நன்குணர்ந்தவளாகையால், கண்ணனுக்கு செய்யப்படும் கைங்கரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அதில் ஒன்றுதான் கண்ணனுக்கு பூமாலை சரிபார்த்துச் சார்த்துதல்.

தந்தையாரான விஷ்ணுசித்தனார் (பெரியாழ்வார்) நாளும் தோட்டத்தில் தானே கொய்த மலர்களைக் கோர்த்து பரந்தாமனுக்காக சார்த்துவதற்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த மலர் மாலையைக் கூட ஆண்டாள் விடவில்லை. முதலில் தனக்கு சார்த்திக் கொள்வாள். கண்ணாடி பார்ப்பாள். ‘அழகோ அழகு.. கொள்ளை அழகு.. கண்ணனுக்கு சார்த்தவேண்டிய மாலைதான் இது’ என்று ஒப்புதல் (தனக்குத் தானே) கொடுத்துக் கொள்வாள்’. அடுத்தநாள் அதிகாலை அந்த மாலை கண்ணனின் தோள் மீது ஒய்யாரமாக அலங்கரிக்கப்படும்போதெல்லாம் அவள் உள்ளம் மகிழ்ச்சியில் பூரிக்கும்.
ஆனால் ஒருமுறை இந்தச் செயலை பெரியாழ்வார் கண்டுவிட்டார். ‘ஆகா.. மாதவனின் மலர் மாலை மானிடர் கழுத்தில் முதலில் போடப்பட்டு அதன் பின்னரே அவனுக்கு சார்த்தப்படுகிறதா.. இந்தக் குற்றத்தைத் தன் பெண்ணே செய்து விட்டாளே’ என்ற பெருங்குறையில் தவித்துவிடுகிறார்.

இரவில் கண்ணன் அவர் கனவில் வருகிறான் ‘கலங்கவேண்டாம்.. உங்கள் கோதை தான் சூடி எனக்குச் சூடும் மாலைதான் என் விருப்பம்’ என்று சொல்லித் தேற்றுகிறான். பெரியாழ்வாருக்கு ஆண்டாளின் தெய்வீகம் புரிகிறது.

அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

‘சூடிக் கொடுத்த சுடர்கொடியாளே’ என்று தன் மகளை கண்ணில் ஆனந்தநீர் மல்க அணைத்துக் கொள்கிறார்.

இறைவனுக்காண மலரை முகர்ந்த ஒருத்தருக்கு தண்டனையும், இறைவனுக்காண மாலையை தான் சூடிப் பார்த்து தந்த ஆண்டாளை வழிபடுவதற்குமான காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா. அரசி சங்கா மலரை முகர்ந்து பார்த்தது அதனுடய நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு, தன் மகிழ்ச்சிக்காக முகர்ந்தாள், தண்டனையை அனுபவித்தாள். ஆனால் ஆண்டாளோ இறைவனுக்கு மாலை சரியாக இருக்குமோ, அவன் மகிழ்ச்சியடைவானோ என்ற நோக்கில் மாலையை சூடித் தந்தாள், அதனால் வழிபாட்டுக்குரியவளானாள்.

வாரணம் ஆயிரம் – படமல்ல சிற்பம், ஹலபேடு

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தோம். என்னடா சிற்பத்தை பற்றி பேசும் இவன் திடீரென திரைப்படம் பற்றி பேசுகிறானே என்று அஞ்சாதீர். நான் கட்சி மாறவில்லை.

இயக்குநர் கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” என்று பெயர் வைத்ததுமே பலருக்கு அதன் விளக்கம் தேவை பட்டது. குறிப்பாக,வாரணம் என்றால் என்னவென்று தெரியாமல் பலரும் திகைத்தனர். பிறகு பல இணைய தேடல்களில் , விடைகிடைத்தது– – ‘வாரணம்’ என்றால் யானை. அதுவும் வாரணம் ஆயிரம் என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் வருகிறது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருவதை அறிந்த ஊர் மக்கள் பொற்குடங்களில் நீர் நிரப்பி ஊரெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்பதாக தான் கனவு கண்டதாக தன் தோழியிடத்தே கூறுகிறாள் ஆண்டாள்.

படத்தின் நிறைவில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் கோதையின் வர்ணனைக்கு இணங்க இருப்பான் என்று முடியும்.

ஆனால் எனக்கு ஆயிரம் யானை என்றவுடன் நினைவிற்கு வந்தது பீமனே. ஆயிரம்யானை பலம் கொண்ட பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு, வெல்ல முடியாத பெரும் பல வீரர்களை பாரதத்தில் வென்று குவிப்பான். வாயுபுத்திரன் என்றாலும் அவனுக்கு இந்த பலம் எப்படி வந்தது …அதற்கும் ஒரு கதை உண்டு.

ஒரு நாள் பீமனும் திரெளபதியும் தனிமையில் இருக்கையில், காற்றிலே மிக இனிமையான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரெளபதி அந்த மலரை விரும்பினாள்.அதைத் தேடிப் பீமன் சென்றான் – அடர்ந்த காட்டின் ஆழத்தில் மணம் அவனை எடுத்து சென்றது. அங்கே ஒரு குரங்கு வழியை அடைத்து அலட்சியமாக படுத்திருப்பதை கண்டு அதை விரட்ட குரல் கொடுத்தான் பீமன்

ஆனால் குரங்கோ இன்னும் அலட்சியமாக உன்னால் முடிந்தால் என் வாலை நகற்றி விட்டுச் செல்லேன் என்றது. அதன் அகம்பாவம் கண்டு எரிச்சல் அடைந்த பீமன் கீழே குனிந்து அதன் வாலை பிடித்து சுழற்றி எறிய முயன்றான் . ஆனால் என்ன விந்தை – அவனால் அசைக்கவே முடியவில்லை. பலம் அனைத்தையும் கொண்டு முயன்றும் அந்த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகரவில்லை. அது சாதாரண குரங்கில்லை என்று அறிந்த பீமன் தன் ஆணவத்தை நினைத்து மனம் வருந்தி -அதனிடம் பணிவுடன் தாங்கள் யார் என்று வினவினான். அப்போது அந்த குரங்கு அனுமனாக உரு மாறி, வாயு புத்திரனாக – காட்சி அளித்து அணைத்துக்கொண்டான் பீமனை . அவருடைய தமயனை ( அப்போது பீமனுக்கு தன் உடலில் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்தது ) – எதிரிகளை சிதற அடிக்கும் வலிமையை தந்தது அந்த அணைப்பு, அதை விட பீமனது ஆணவத்தையும் அடக்கி அருள் புரிந்தான் அனுமன்.

சரி இப்போது சிற்பம். ஹலபேடு கோவில் சிற்பம். ( படத்தை நன்றாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள் )

நடுவில் இருப்பது பீமன் – எதிரில் வரும் யானையை எதிர்கொண்டு அதன் துதிக்கையை பிடித்து தன் கதையால் அடிக்கிறான். பின்னால் இரு எதிர் வீரர்கள் – கத்தி கேடயம் வைத்துக்கொண்டு நிற்கின்றனர். யானையையே அடித்து நொறுக்கும் பீமனை கண்டு நிற்கலாமா ஓடிவிடலாமா என்று யோசனை போல ?
26962693
சிற்பத்தின் மிக அருமையான பகுதி – அடுத்து பீமன் கொன்று குவித்தயானை மற்றும் யானை பாகர்களின் சடலங்களை – மலை போல குவிந்ததுஇருப்பதை காட்டி இருக்கும் வண்ணம் அருமை.
26982700

வராஹ அவதாரம், மல்லை மற்றும் உதயகிரி, மால் செய்யும் மாள்

மல்லை வராக அவதாரம் சிற்பம் பலரும் பார்த்த ஒன்று. ஆனால் அதிலும் ஒரு பல்லவ டச் உண்டு.. படங்களை உற்று பாருங்கள்…
 

 

பூமா தேவியின் மேலாடை சண்டை நடந்த அமளியில் சற்றே நழுவி அவளது மடியில் விழுகிறது…தேவி வெட்கத்தில் தலை சற்றே குனிந்து ( இதற்கு நீங்கள் இரண்டாம் படத்தை பார்க்கவேண்டும் – ஒரு பக்கமாக இருந்து எடுத்த படம் …நேர் பார்வையில் தெரியாது )மாலும் அன்புடன் தேவியை அணைக்கும் வண்ணம் சிற்பி செதுக்கி உள்ளான். 

 

இதே வடிவத்தின் இன்னொரு கோலம் உதயகிரி குடவரையில் கண்டேன். அங்கோ வராகம் மிக பெரிதாக, ஆக்ரோஷமாக உள்ளார்,தேவி அவரது கோரை பற்களில் இருந்து தொங்குவது போல உள்ளதே… இது அந்த சிற்பியின் பார்வை என்று நினைத்தேன்… அனால் திருவாய்மொழி பாடலை படித்த பின் தான் இருவருமே சரியான வடிவத்தை தான் சித்தரித்து உள்ளனர் என்று புரிந்தது…

 

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்கிழ்புக்கு
இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் பாரேன்னும்
மடந்தையை. மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே.

 உதயகிரி சிற்பி எடுத்த வரி இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும் மல்லை சிற்பி எடுத்த வரி இது தடம் பெருந்தோள் ஆரத்தழுவும், ஒரே கதையின் இரு அங்கங்கள் இவை… முதல் பாகம் உதயகிரி இரண்டாம் பாகம் மல்லை..