விருதாச்சலம் அர்தனாரி ஆஸ்திரேலியா சென்ற திருட்டு பாதை

ஒரு சில சிற்பங்கள் மற்றும் பார்த்தவுடனே நம்மை கவரும் – அது போன்ற ஒன்று தான் இந்த அர்த்தநாரி வடிவம். பார்த்த மட்டத்தில் மனதை பறிகொடுத்தேன்.

சிற்பிக்கு “விடை”யே விடை என்ற பதிவில் அதனை உபயோகம் செய்த பொது எனக்கு இந்த அதிர்ச்சியான தகவல் தெரிய வில்லை. இந்த சிலை களவு பொய் விட்டதென்று….

சிலை திருட்டு பற்றிய பதிவுகள் குறிப்பாக இந்த பதிவை பார்த்த நண்பர்கள் செப்புத் திருமேனிகள் மட்டும் தான் களவு போகின்றன என்று நினைப்பார்கள். இதை ஒட்டி இன்று ஹிந்து பேப்பரில் வந்த செய்து என்னை மிகவும் கவர்ந்தது ஆஸ்திரேலியா நடராஜர் பற்றி . அந்த பதிவில் இன்னும் ஒரு இணைய தளம் பற்றி குறிப்பு இருந்தது. Chasing Aphrodite சென்று பார்த்த பொது அந்த பதிவில் இருந்த ஒரு கோஷ்ட சிற்ப்பத்தை பார்த்தவுடனேயே மனதில் சுருக் என்று பட்டது !!

மேலும் இந்த சிற்பம் வாங்கிய விதம் பற்றி கிடைத்த தகலவல் இதோ….

Quote: Ardhanarishvara

In 2004, the Gallery purchased this Chola-period sculpture from Kapoor for more than $300,000. The 44-inch stone figure represents Ardhanarishvara, the androgynous form of Shiva and Parvati. It comes from Tamil Nadu, home to some 2500 important temples to Shiva. The image of Ardhanarishvara was likely in a niche on an external wall.

Kapoor provided two documents with the sculpture.

One is a receipt dated 1970, purportedly from Uttam Singh and Sons, the Delhi “copper and brass palace” that sold the sculpture to a private collector.

The second document purports to be a 2003 “Letter of Provenance” on letterhead from Art of the Past, Kapoor’s Madison Ave. gallery. It is signed by “Raj Mehgoub,” who claims to be the wife of a diplomat who lived in Delhi from 1968 to 1971.”

உடனே எனது புத்தகங்களை தேடி அலசினேன். குறிப்பு கிடைத்தது..


Early Cola Architecture and Sculpture
; 866-1014 A.D.
Douglas E. Barrett – புத்தகம் வெளி வந்த ஆண்டு 1974 . !! அப்போதும் இந்த சிலை கோயில் கோஷ்டத்தில் இருந்ததற்கான ஆதாரம் இதோ…

சாமானிய கண்ணுக்கே இரு படங்களும் ஒரே சிலை தான் என்றும் ஆதாரமாக காட்டப்படும் ரசீதுகள் கண்துடைப்பே என்றும் தெள்ளத் தெளிவாக உள்ளது. இவற்றறை கொண்டு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்த இந்த அற்புத சிலையை மீட்டு கொடுக்க வேண்டுகோள்.

பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை – பல கேள்விகள் – ஒரு ஆய்வு – பாகம் 1

நமது பண்டைய கலைச்செல்வங்களை புரிந்துக்கொள்ள அறிதலும் புரிதலும் பகிர்தலும் மிகவும் முக்கியம். பல விஷயங்கள் நமக்கு முதல் கண்ணோட்டத்தில் பல கேள்விகளை எழுப்பி குழப்பினாலோ – அவை அனைத்தும் நமது அறிவுப் பயணத்தில் படிகள் என்றே உணர்ந்து மேலும் நம்மை நம் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அப்போது முடிச்சுகள் தானே அவிழும் ! அப்படி ஒரு முடிச்சு பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை. முருகனை மட்டுமே தரிசித்து திரும்பும் பக்தர்கள் மலைக்கு பின்புறம் ஒரு குடைவரை இருப்பதையே மறந்துவிடுகின்றனர்.

குடைவரையின் முகப்பை பார்க்கும் போதே – அந்தத் தூண்களில் உள்ள வேலைப்பாடு அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை என்பதை உணரலாம். இந்த கலை வேலைப்பாடு அதிகம் இல்லாத தடியான தூண்களை கொண்டு இந்த குடைவரையின் காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் என்று நாம் சொல்லமுடியும். இந்த குடைவரையின் வெளியிலேயே பல புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் காண்போம். உள்ளேயும் பல சிற்பங்கள் இருக்க நேரே உள்ளே கருவறைக்கு செல்வோம். இங்கே தான் முதல் முடிச்சு. புடைப்புச் சிற்பங்களில் உள்ள கலைத் திறன் வடிவம் ( ஒரு அழகிய நடராஜ வடிவமும் உள்ளது இதைக் கொண்டு இவை கண்டிப்பாக பன்னிரெண்டாம் / பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருக்க முடியாது என்று சொல்லிவிடலாம்.

இவற்றைக் கொண்டு பரவலாக இந்த குடைவரை சமணர் குடைவரையாக இருந்து சைவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்க – கருவறையில் உள்ள சிற்பத்தை ஆராய்ந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

உள்ளே சிவனுடைய அர்த்தநாரி வடிவம் உள்ளது.

நான்கு கரங்கள் கொண்ட அர்த்தநாரிவடிவம் – உமை , மகேசன் இருவரின் பாகங்களும் சிறப்பாக வேற்றுமை காட்டப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் குழப்பம் ஆரம்பிக்கிறது. பொதுவாக கருவறையில் நாம் அர்த்தனாரி வடிவத்தை பார்ப்பதில்லை – சோமாஸ்கந்தர் வடிவம் நிறைய இடங்களில் வரும். அடுத்து இந்த புடைப்புச் சிற்ப்பத்தின் அளவு கருவற்றின் அளவை வைத்துப் பார்க்கும் பொது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் பீடத்தின் அமைப்பு – அகலமான அளவு மற்றும் தரையில் இருந்து உயரம் – இவற்றை வைத்து பார்த்தல் அது அமர்ந்திருக்கும் வடிவம் ஒன்றுக்காக வடித்து போலவே உள்ளது. ரிஷப வாஹனம் இருக்கும் பக்கமும் விநோதமாக உள்ளது. நாம் முன்னரே அர்தனாரி வடிவத்தின் தோற்ற வளர்ச்சியை ” சிற்பிக்கு “விடை”யே விடை” என்ற பதிவில் பார்த்தோம்.

மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

தர்மராஜா ரதம்.

அகஸ்தீஸ்வர

திரிபங்க வளைவை ஈடு கொடுக்க ரிஷபம் வருவதை பாருங்கள்.

விருத்தாசலம்.

எலிபண்டா


இப்போது பரங்குன்றம் வடிவத்தில் உள்ள ரிஷபம் இடம் மாறி இருப்பது தெரிகிறதா. இப்படி ஒரு தவறை இவ்வளவு பெரிய குடைவரையை வடித்த சிற்பி செய்ய வாய்ப்பில்லை.

மேலும் அர்தனாரி வடிவத்தின் மேல் புறம் சற்று பார்க்கும் போது இன்னும் ஒரு துப்பு கிடைக்கிறது. எதோ சுருள் சுருளாக மற கிளை போலவும் இல்லாமால் கொடி போன்ற வடிவங்கள் உள்ளன.


பொதுவாக குரு வடிவத்தின் மேலே மட்டுமே மரம் வரும். இந்த சுருள் வடிவம் நமக்கு ஒரு முக்கிய ஆதாரம். கீழ் வரும் சமணர் வடிவங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

தேடல் தொடரும்.

படங்கள் நன்றி : உதயன், அரவிந்த், மற்றும் ஹிந்து பேப்பர்

http://www.hindu.com/2003/05/22/stories/2003052203230500.htm
http://www.hindu.com/2006/02/06/stories/2006020602410200.htm
http://www.herenow4u.net/index.php?id=76895

செப்புத்திருமேனியின் ஆபரணங்கள்

தங்கத்தின் விலை மளமளவென்று ஏறுவதை கண்டு பதட்டப்படாமல் எப்படி இருக்க முடியும். அப்படி என்னதான் இந்த மஞ்சள் உலோகத்தின் மீது நம்மவர்களுக்கு ஒரு பித்தோ ! போதா குறைக்கு பெண்களுக்கு போட்டி இட்டு இன்று ஆண்களும் கழுத்திலும் கையிலும் – குறிப்பாக நமது சினிமாவில் வரும் வில்லன்கள் — அப்பப்பா அவற்றை கொண்டு கணத்தில் தண்ணீர் இறைக்கலாம் – அப்படி தாம்பு கயிறு போல தடி தடி செயின்கள் – அது என்ன செயின்? அந்நாள்களில் இவற்றின் பெயர்கள் என்ன ?

கண்டிகை , சாரப்பள்ளி , சாவடி , புலிப்பல் தாலி , தோள்மாலை , வாகு மாலை , தோள்வளை , கடக வளை இப்படி அடிக்கிக் கொண்டே போகிறது திரு கணபதி ஸ்தபதி அவர்களின் நூல் குறிப்பு. இவை பார்பதற்கு எப்படி இருக்கும் என்று ஆசையாக உள்ளதா? இதோ நண்பர் ஷாஸ்வத் உதவியுடன் இந்த அற்புத அர்தாரி வடிவத்தின் அணிகலன்களின் பவனியை ரசிப்போம்.

முதலில் என்ன என்ன இருக்கிறது என்று பார்ப்போம். .

இவ்வளவும் இந்த செப்புச் சிலையிலா இருக்கிறது என்று மலைக்க வேண்டாம். இதோ பாருங்கள்.

கண்டிகை – சிறிய மாலை போல கழுத்துக்கு மிக அருகில் உள்ளது. பெரிய பென்டன்ட் எல்லாம் கிடையாது – நடுவில் ஒரு பெரிய மணி , அதனை ஒட்டி சிறு மணிகள்.

அடுத்து சாரப்பள்ளி, பெரிதாக மேல் பக்கம் முத்துக்களை கொண்டும், அடியில் இலை வடிவ அலங்காரம் கொண்டது.

புலிப்பல் தாலி – புலியின் பல்லை ஒரு சிறு கோடியில் கட்டி இருப்பது தெரிகிறதா? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த அணிகலனை ஆண் பெண் இருவருமே அணியலாம் என்று இருந்தாலும், இந்த அர்த்தநாரி வடிவத்தில் பாதி புலிப்பல் தாலியும் – சிவன் பாகத்தில் , அம்மையின் பாகத்தில் சாவடி போலும் காட்டி உள்ளனர். சாவடி என்னும் அணிகலன் கண்டிகையை விட சற்று பெரிதாகவும் நாடு நடுவில் பூவைத்தது போன்ற வேலைப்பாடும் கொண்டது.

இவற்றை தவிர தோள்மீது முன்பக்கம் தொங்கும் விதம் ஒரு அணிகலன் உள்ளது. இது தான் வாகுமாலை. அதை ஒட்டி தோள்பட்டைகளின் மீது படரும் வண்ணம் இருக்கும் அணிகலன் தோள்மாலை.

அழகிய பூணுல், அதன் நடுவில் பிரம்மமுடிச்சும் உள்ளது.

இன்னும் கையிலும் இடுப்பிலும் உள்ள அணிகலன்களையும் பாருங்கள்.

மேல் கைகளில் தோள்வளை ( கேய்யுரம் !) அதன் அடியில் கடக வளை உள்ளது.

இடுப்பின் அழகிய வளைவுகளை எடுத்துக்கட்டும் வண்ணம் உதர பந்தம் உள்ளது.

பல்லவர் காலத்தில் புரிநூல் மூன்றாக பிரியும். சிறிய உர்ஸ் சூத்ரம், நடுவில் யக்நோபவீதம் ( இரண்டுமே இந்த சோழர் திருமேனியில் உள்ளன ) மற்றும் ஸ்தான சூத்ரம் – இங்கே காணப் படவில்லை.

இன்னும் எளிதாக புரிய இந்த அறிய கொங்கு பெருமாள் திருமேனியை பாருங்கள்.,

என்ன சொல்றீங்க…இந்த டிசைன்ல அம்மணிக்கு ரெண்டு செஞ்சி போடலாமா?

உயிர் சிலை என்றால் என்ன ?

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் – இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.


இந்த கோணத்தில் பாருங்கள் – இப்போது புரிகிறதா ?

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா – விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது


அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.


அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” – அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

சிற்பிக்கு “விடை”யே விடை

நண்பர் திரு தேவ் அவர்களுடன் சென்ற மடலைப் பற்றி தற்செயலாக நடந்த உரையாடலில் வந்த கேள்விகளை ஆராயும்போது கிடைத்த விடைகளை விரிவுபடுத்தி ஒரு பதிவாக இங்கு இடுகிறேன். சிற்பங்கள் வெகுவாக சிதைந்து இருப்பதால் அவற்றை கொட்டோவியங்களாகவும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன். ( வரைந்தவை அல்ல – ஒற்றி எடுத்தவை – திரேசிங்)

முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் குறிக்கோள் அர்த்தனாரி வடிவத்தின் இரு பாகங்களின் வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவதல்ல, அந்த வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதை விளக்க ஒரு முயற்சி. அதுவும் ஒரு சிற்பி இந்த வடிவத்தை செதுக்கும் போது எதிர்க்கொண்ட சவால்கள் என்னவாக இருந்திருக்கும், அதனை அவன் எப்படி சமாளித்தான் என்பதை காட்டவே இந்த பதிவு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அங்க அமைப்புகளின் வித்தியாசங்கள் பல. அவற்றை இங்கு பட்டியலிடாமல், சிற்பி எவ்வாறு இவற்றை ஒரு உருவத்துள் கொண்டு வர முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும், ஒரே உருவமாகத் தெரிய வேண்டும், எனினும் இரு பாகங்களும் ஆண் எது பெண் எது என்றும் தெளிவாகத் தெரிய வேண்டும். அழகாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையும் அவன் கண்டுபிடித்த விடையையும் நான்கு சிற்பங்களின் மூலம் பார்ப்போம். ( சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை – அவற்றிற்கென தனி இடுகை வேண்டும், எனினும் தலைப்புக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று பார்ப்போம்)

முதல் சிற்பத்தை பார்ப்போம் – முற்கால பல்லவர் வடிவம் ( முதல் வடிவம் அல்ல, எனினும் நமது பதிவின் கால அட்டவணையில் மூத்தது). மல்லை தர்மராஜ ரதம் அர்த்தனாரி சிற்பம்.

எளிதில் சிற்பத்தை ரசிக்க ஒற்றி எடுத்த கோட்டோவியம்.

முற்கால பல்லவர் சிற்பம் என்பதற்கு சான்றுகள், மிகவும் குறைந்த அளவு ஆபரணங்கள் மற்றும் எளிமையான வடிவம். எனினும் பல்லவ சிற்பத்திற்கே உடைய உயிரோட்டம் இதில் இல்லை, அதே மல்லையில் உள்ள மற்ற சிற்பங்களில் உள்ள தன்மை இதில் ஏன் இல்லை. ஒருவேளை இந்த வடிவத்தை முதல் முதலில் சிற்பி வடித்ததால் இப்படியோ என்று தோன்றுகிறது. பல முறை சோதனை செய்து பார்த்து வடிக்க இது களிமண் பொம்மை இல்லையே. கருங்கல் அதுவும் நிலத்தில் இருந்த சிறு குன்றை குடைந்து வடித்த வடிவத்தின் வெளிச் சுவரில் வரும் புடைப்புச் சிற்பம். எனினும் பல்லவர் சிற்பம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், பலரிடத்தில் அவர்கள் சிற்பக்கலை சோழர்களின் கலையை விட மேலானது என்று நான் வாதாடியதும் உண்டு. எனினும் இந்த சிற்பம் என்னை கவரவில்லை – ரோட்டில் லாரி ஏறி கிடக்கும் தேரை போல ஒரு வெறுமை – கண்டிப்பாக இது அவனது முதல் முயற்சி என்றுதான் தோன்றுகிறது. இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது – மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.
சரி, சிற்பி இதற்கு என்ன செய்தான். அதே சிற்பி என்று சொல்லவில்லை, சிற்பக் கலை பயில்வோர் இந்தச் சிலைவடிவதை எவ்வாறு அழகூட்டுவது என்று ரூம் போட்டு யோசித்தால் ….என்ன நடந்திருக்கும்.

அடுத்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வாசகர் கவனிக்க. சிற்பங்களை அட்டவணை போட்டு காலம் என்னவென்று நாங்கள் ஆராயவில்லை. பொதுவாக எப்படி இந்த உருவம் காலப்போக்கில் வளர்ச்சி பெறுகிறது என்று பார்ப்பதற்கே இந்த உதாரணங்கள்

மீண்டும் ஒற்றி எடுத்த ஓவியம்.

இங்கே சிற்பி, ஆண் பெண் வேற்றுமையை இன்னும் பிரதானமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளான். பெண்ணின் இடுப்பை அழகாக வளைத்து திருபங்கத்திற்கு எடுத்துச்செல்ல எத்தனித்துள்ளான். ஆனால் ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விளைவு – அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து – சவாலே சமாளி !! கைகளில் சிறு வேற்றுமைகளை காணலாம். பெண்ணின் கையை நளினமாகவும், ஆணின் கையை கம்பீரமாகவும் ( இடுப்பில் வைத்து ), ஆடைகளிலும் சற்று வேறுபாட்டை காட்டுகிறான் – அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!

இன்னும் வளர்ச்சி – பிற்கால சோழர் சிற்பம் சென்று, பூர்த்தி பெற்ற அம்மை அப்பன் – உமை ஒரு பாகன் சிற்பத்தை பார்ப்போம். .

மீண்டும் ஓவியம்.


பெண் பாகம் முழுமையாக திருபங்கத்தில் வந்துவிட்டது, அதனை சரிகட்ட ஆணின் கால் முழுமையாக மடித்து விட்டான் சிற்பி. எனினும் ஆணின் மேல் பாகம், வெகுவாக ஒரு பக்கம் சாய்ந்துள்ளது – பார்ப்பதற்கு சிற்பம் அழகாக இருந்தாலும், ஒருபக்கம் இழுத்துக்கொண்டு இருப்பது போல இருக்குமே. என்ன செய்வது என்று யோசிக்கிறான் சிற்பி. எதன் மேலாவது சாய்வது போல காட்டினால் என்ன? கடினமான வினா! விடை என்ன ?? ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். அழகிய ஆபரணங்கள் மற்றும் அணிகளை வடித்தான். அற்புத அர்த்தனாரி வடிவம், விடை வாகன் வந்துவிட்டான். அர்த்தனாரி என்றால் இனி இந்த வடிவமே என்று எங்கும் திகழும் வண்ணம் பரவியது அவன் திறன்.

அப்படியா. இந்த விடை அங்கு வருவதற்கு இது ஒரு காரணமோ. சரி இதை சோதிக்க எளிபண்டா குடவரை செல்வோம்.

அற்புத அர்த்தனாரி வடிவம், கொள்ளை அழகு, ஆண் பெண் இருவரும் பிணைந்து நிற்கும் வடிவம். ஆஹா, அதோ இங்கேயும் நமது விடை தன் தலையை ஐயனுக்கு தந்துள்ளதே

அணிகலன், ஆபரணம் வேறுபட்டாலும் வடிவம் ஒன்றே!!

சரி, இதற்க்கு வேறு சான்று உண்டா. எப்படி சோதிப்பது. பொதுவாக அர்த்தனாரி உருவங்கள் சிவன் வலது புறம், உமை இடது புறம் என இருப்பது வழக்கம். எனினும் இதற்கும் ஒரு சிற்பம் விதி விலக்கு ( ஏன் – ஆராய வேண்டும்) – இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.

சரி, இடம் மாறி உள்ளார்கள், அதற்கும் நமது இடுகைக்கும் உள்ள தொடர்பு என்ன ? பின்னால் இருக்கும் உருவத்தை பாருங்கள் …

விடையும் இடம் மாறி, இடது புறம் நோக்கி இருப்பது – ஆண் பாதிக்கு முட்டுக்கொடுக்கவே என்பதை ஊர்ஜிதை செய்கிறது.

இது ஒரு கருத்தே. இதை இன்னும் ஆராய வேண்டும். இந்த வடிவம் கல்லில் செய்தது, பின்னர் உலோகத்திலும் வடித்தனர். கல்லில் வடித்த போது வளைத்து செதுக்கும் போது கல்லின் எடை போன்றவையை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் உலோகத்தில் வார்க்கும் போது என்ன ஆகும். அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி : அமெரிக்கன் இன்ஸ்டிடுட் ஒப் ஆசியான் ஸ்டடீஸ்.

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை – மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

அர்தனாரி – உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் – அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் – திரு சதிஷ் அருண்

இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்

இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.

புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.

தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –

“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”

திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,

“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)

(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)

என்றும்,

அப்பர், திருகோடிகாவில் ஈசனை,

“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)

(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )

என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.

என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.

ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்

இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.


இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.

வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?

டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.

அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.