சோழ மன்னர்களின் வெங்கலச் சிற்பங்கள் – ஆய்வுத் தகவல்களின் தொகுப்பு

கை உடைய மொழி பெயர்த்த சதீஷுக்கு முதல் நன்றி

தஞ்சை பெரிய கோவிலின் 1000-மாவது ஆண்டை முன்னிட்டு அன்றாட செய்திகளில் தஞ்சை சமீபகாலமாக தொடர்ந்து இடம் பெறுவது நாம் யாவரும் அறிந்ததே. அதே நேரத்தில் சரபாய் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வெங்கலச் சிலையையும் தஞ்சைக்கே மீட்டு வரவேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன என்பதையும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே செய்யப் பட்டுள்ள ஆய்வுகளை படிக்க முயல்கையில் பல்வேறு செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டி, வெங்கலச் சிலைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

கிடைத்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன: சற்றே நீளமான பதிவுதான் ஆனால் நிச்சயம் சுவையாக இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

( புகைப்படத்திற்கு நன்றி: திரு. குடவோயில் பாலசுப்ரமணியம் அவர்களின் நூலான இராஜராஜேச்சுவரத்தின் பின் அட்டைப்படம்)
இது ராஜராஜசோழரா என்று அறிந்து கொள்ள வேண்டுமா? 1014-ஆம் ஆண்டு தஞ்சை ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_36_to_40_on_1st_niche_west_enclosure_1st_2nd_inscription.html

எண். 38. மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடத்தின் மூன்றாவது கல்வெட்டு:
ஏழு உருவங்களைப் பற்றி விளக்கும் இந்தக் கல்வெட்டு இராஜராஜத் தேவரின் 29ஆம் ஆண்டுக்கு முன்னர் இராஜராஜேச்சுவர் ஆலயத்தின் நிர்வாகியால் வெட்டப்பட்டது, இவரைப் பற்றிய தகவல்களும், அவரால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை (பத்தி 23 – 50) மற்றும் இரண்டு நகரத்தை சார்ந்த மக்களின் நன்கொடைகளைப் பற்றிய தகவல்களும் (பத்தி 51 & 59) கல்வெட்டு எண் 26-ல் காணக்கிடைக்கின்றன. இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உருவங்கள்: நம்பி ஆரூரனார் (பத்தி 2, 23, 55, 59), நங்கைப் பரவையார் (5, 25, 57, 66), திருநாவுக்கரையர் (8, 29, 53), திருஞானசம்பந்தடிகள் (11, 36, 51), பெரிய பெருமாள்(14, 44), அவரது துணைவியார் ஓலோகமாதேவி (17, 47), சந்திரசேகரர்[7] (20). இதில் பெரிய பெருமாள் மற்றும் அவரது துணைவியார் ஓலோகமாதேவி உருவங்கள் இராஜராஜ சோழ மன்னரும் அவரது துணைவியாரும் ஆலயத்தைக் கட்ட அருள் செய்த சிவபெருமானான சந்திரசேகரரை வணங்குவதைப் போல் இருக்கின்றது என்பது கருத்து.
மொழிபெயர்ப்பு:
1. ஸ்வஸ்திஸ்ரீ! இராஜராஜத்தேவரின் ஆண்டு 29 – ல் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆலய நிர்வாகியுமான ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்தவேளனால் ஸ்ரீஇராஜராஜேச்சுவரர் ஆலயத்தில் பின்வரும் தாமிர சிற்பங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகளின் அளவுகள் ஆலயத்தின் முழத்திலும், ஆபரணங்கள் தக்ஷின மேரு விடங்கன் அளவையிலும், தங்கம் ஆடவல்லான் அளவையிலும் அளந்து ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன என்பது கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது: –
…………………
14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.
15. ஐந்து விரல் இரண்டு தோரை அளவு கொண்ட ஒரு தாமரைப் பீடம்.
16. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
17. இரண்டு திருக்கரங்கள் கொண்ட ஓலோகமாதேவியாரின் செப்புத் திருமேனி ஒன்று, இருபத்திரண்டு விரல் இரண்டு தோரை உயரம் கொண்டது.
18. ஐந்து விரல் உயரம் கொண்ட தாமரைப் பீடம் ஒன்று (மேற்சொன்ன சிற்பத்திற்கு)
19. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
20. நான்கு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் தேவாரத் தேவரான சந்திரசேகரதேவரின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஐந்து விரல் மற்றும் இரண்டு தோரை உயரம் கொண்டது.
21. செப்பு பீடம் ஒன்று இரண்டு விரல் நான்கு தோரை சதுரம் மற்றும் ஒரு விரல் உயரம் கொண்டது. இதோடு இணைந்த தாமரைப் பீடம் ஒன்று ஒன்றரை விரல் உயரம் கொண்டது.
22. இருபத்தியொரு விரல் சுற்றளவு கொண்ட சிலையின் செப்புத் தோரணக்கால் ஒன்று.>>>>>>>>

நம்முடைய கவனம் இப்பொழுது பதிந்திருப்பது மேற்குறிப்பிட்ட அளவுகளில்: அதுவும் ஒரு முழம், நான்கரை விரல் அளவில். ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ. ஆனால், இந்த அளவைகள் இடத்திற்கு இடம், ஆலயத்திற்கு ஆலயம் வேறுபடும், ஒரே அளவு அல்ல! சில காலத்திற்கு முன் ஒரு ஸ்தபதியிடம் இருந்து தெரிந்து கொண்டது: அளவைகள் ஒரு இடத்தில் விளையும் நெல் மணிகளின் அளவை வைத்துக் கூட தேர்வு செய்யப்படுமாம்! அதோடு மட்டுமல்ல ஆட்சியாளர், அவரது பிறப்பு மற்றும் பல காரணிகள் முன்னிட்டும் கூட இந்த அளைவைகள் வேறுபடுமாம். அப்படி தேர்வு செய்யப்பட்ட அளவுகளைக் கொண்டே ஒரு இடத்தின் ஆலயங்கள், ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மற்ற சிற்பங்கள் முடிவுசெய்யப்படும். இது மனிதனின் மரபணுவைப் போன்றது. ஆய்வாளர்கள் நிச்சயம் தஞ்சைப் பெரியக்கோவிலின் மூல அளவையை கண்டுபிடித்தால் இந்த முழச் சிக்கல் சுலபமாக தீர்ந்து விடும்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து ரூ-386 க்கு வாங்கப்பட்ட ,Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலை வைத்துத்தான் நாம் வெங்கலச்சிலைகளைப் பற்றிய தேடலை மேலும் தொடரப்போகிறோம்.

படத்தில் தோன்றுவதை விடப் பெரியது இந்த நூல், கொடுக்கும் பணத்திற்கு மேல் கிடைக்கும் விருந்து.

சற்றே கருமையாகத் தோன்றும் பக்கங்கள் முழுதும் வெங்கலச் சிலைகளின் விளக்கங்கள், வெள்ளை நிறப் பக்கங்கள் முழுவதும் படத்தொகுப்பு. ஒவ்வொரு பக்கமும் சுவாரசியம் நிறைந்தது. சரி சரி நாம் தேடும் திருமேனி இருக்கிறதா இல்லையா என்று கேட்பது புரிகிறது! நாம் தேடும் சிற்பமும் இங்கிருக்கிறது. இதோ…

இந்தச் சிலை பற்றி கூறப்பட்டுள்ள விபரங்கள் (மொழிபெயர்ப்பு):

சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது – மகுடமும், சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சையும் நல்ல வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை மட்டுமின்றி தோளணிகள், கழுத்தணிகள் உட்பட ஏனைய ஆபரணங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. நேர்த்தியாகவும் துல்லியமான வடிவமைப்பையும் உடைய முகம் சதுரமாகத் தெரிகிறது. உருவத்திற்கு பொருத்தமான அடக்கத்தைக் காட்டும் அபிநயம். வழக்கமான வளையம் போன்ற கழுத்தணி காணப்படவில்லை ஆனால் பொருத்தமான இரண்டு கழுத்தணிகள். மென்மையான சன்னவீரம் (வெற்றி மாலை) அந்தக் காலக்கட்ட ஸ்தபதிகளின் பாணியில் உள்ளது.


உடலமைப்பு என்னவோ சற்று பொருத்தமாக இல்லை. மார்பகத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் கைகள் வீரத்தைக் காட்டுவனவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீட்டிக் கொண்டிருக்கும் மார்புக் காம்புகளும், கையணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கையணிகளில் மணிகள் பொருத்தப்பட்டு தனித்துவமாகத் தெரிகின்றன. இது போன்ற வெங்கலச் சிலைகள் இந்தக் காலக்கட்டத்தில் காண்பது அரிது. அதுமட்டுமல்ல இந்த சிலையில் உள்ள வடிவமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகவும் இதற்கு பிற்காலச் சிற்பங்களில் கூட காணக் கிடைக்காததாகவும் தோன்றுகிறது. தோள்பட்டையின் மேல் இருக்கும் அணிகள் பக்கவாட்டில் மட்டும் இருப்பது மிகவும் சுவாரசியம். அதோடு மட்டுமல்லாமல் கைகளுக்கு இடையே மலர் போன்ற ஒன்றை வடிவமைத்திருப்பது மிகுந்த கலைத்திறனைக் காட்டுகிறது.

சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சைகளின் வடிவமைப்பு மிகவும் அபாரம்! அதில் இருந்து தொங்கும் தோரணங்களும், குஞ்சங்களும் கலை நேர்த்தியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கீழாடையின் (கோவணம் போன்ற) (கரை)ஓரங்களின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இடுப்புக் கச்சையின் வடிவமைப்பு மிகவும் நவீனமாகத் தெரிகிறது. கால்களின் வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இல்லை, முட்டிகள் மட்டுமல்ல கால் தசைகளின் வரியமைப்புகளும் இயற்கையாக இல்லை. பாதசாரங்கள் (கொலுசு) இல்லாமல் இடக்காலில் மட்டும் காணப்படும் கழல் (சிலம்பு போன்ற ஒன்று) முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற கழல்கள் கொண்ட சிற்பங்கள் சிதம்பர ஆலயத்தில் மேற்குப்புற மற்றும் கிழக்கு கோபுரத்திலும் காணப்படுகிறது. வேறு வகையான கழல்கள் சுந்தரபெருமாள் கோவில் சிற்பங்களிலும், கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்களிலும் காணப்படுகிறது. ஆனால் பிந்தைய காலச் சிற்பங்களில் இது போன்ற கழல்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி பிற்காலச் சிற்பங்களில் இரண்டு கால்களிலும் கழல்கள் காணப்படுகின்றன, ஒரு காலக் கட்டத்தில் இவையில்லாத சிற்பங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

தாமரைப்பீடம் எளிமையானதாகவும், நுண்ணிய வேலைப்பாடமைந்த தாகவும் இருக்கிறது. இதழ்கள் மிகப் பெரியதாகவும், அதனுடைய வரிகள் மங்கலானதாகவும், இதழ் நுனிகள் தெளிவின்றியும் தெரிகிறது. மொத்தமாகப் பார்த்தால் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்த சிற்பமிது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தச் சிற்பம் பனிரெண்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது, நிச்சயமாக பதிமூன்றாம் நூற்றாண்டும் அல்ல (JISOA Vol VI P22) 12 -13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தும் அல்ல (The Art of India and Pakisthan,p 74).

ஒவ்வொரு ஆய்வாளரும் வடிவமைப்பைக் கொண்டு கணக்கிடும் காலம் வேறு வேறாக இருந்தாலும், சிலை தனியே, பீடம் தனியே, தாமரைப் பீடம் தனியே சொல்லும் அளவுகள் மாறாது. தற்சமயம் கேள்விக்குறியாக இருப்பது கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் முழ, விரல் அளவைகளை எவ்வாறு இன்றைய கால அளவுகளில் மாற்றூவது என்பதுதான்! இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் 74 செ.மீ. அளவு சிலையின் அளவு மட்டுமா அல்லது பீடத்தையும் சேர்த்தா? யாராவது சரபாய் அருங்காட்சியத்திற்கு சென்று அளந்து சொன்னால்தான் உண்டு!.

பார்க்கப் போனால் மேற்சொன்னத் தகவல்களோடு இந்தப் பதிவினை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவன் திருவருள் என்னவோ, திருமதி. லிஸ்பெத் பங்கஜ பென்னிக் அவர்களோடு உரையாடிய போது கிடைத்த திருவிசலூரின் அதி அற்புதமான சிற்பம் மேலும் தொடரவைக்கிறது நம்மை. இவர்தான் காலஞ்சென்ற திரு. இராஜா தீக்ஷிதரின் பதிவுகளை நிர்வகிக்கிறார், அதிலிருந்து கிடைத்த செல்வம் இது.
1930 –ல் திரு. T.G. ஆராவமுதன் எழுதிய தென்னிந்திய சிற்பங்கள்
South Indian Portraits – தென்னிந்திய சிற்பங்கள் ) எனும் கட்டுரையில் இருந்து:

South Indian Portraits

மிகவும் சுவாரசியமான சிற்பம் ஒன்று அந்தக் கட்டுரையில் கிடைத்தது, அதுவும் அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலிலேயே இருந்த ஒன்று. பார்த்தவுடனேயே அறிந்துகொள்வீர்கள் இது முற்றிலும் புதிதான சிற்பம் என்று, அதோடு மட்டுமின்றி இதைப் பற்றி எந்த ஒருக் கட்டுரையிலோ அல்லது எந்த ஒரு அருங்காட்சியகத்திலோ பார்க்காத ஒன்று என்றும் அறிந்து கொள்வீர்கள். காலில் அணிந்திருக்கும் கழல்களை பார்க்கும் அளவுக்கு படம் தெளிவாக இல்லை ஆனால் இரண்டு கால்களிலும் கழல்கள் இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் இரசிகர்கள் யாரேனும் பார்த்திருந்தால் அல்லது பார்த்தால் நமக்கும் தெளிவு படுத்தலாம். (மேலும் ஒரு வெங்கலச் சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது, அதனை இதற்குப் பின் காண்போம்)

(மொழி பெயர்ப்பு)
தஞ்சைப் ப்ரகதீஷ்வரர் ஆலயத்தைக் கட்டிய மாமன்னன் முதலாம் இராஜராஜனின் கடைசிக் காலக் கட்டத்தில் (985-1013 கி.பி.) ஆலயத்தின் 37ஆவது நிர்வாகி இராஜராஜருக்கும் அவரது அரசியார் ஓலோகமாதேவியாருக்கும் பல்வேறு படையெடுப்புகளின் செல்வங்களை நிவந்தனமாக விடப்பட்ட ஆலயத்தினுள் சிலைகள் எடுப்பித்ததாக தெரிகிறது. இதைக் குறிக்கும் கல்வெட்டில் உள்ள செய்தியை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. கல்வெட்டில், இரண்டு திருமேனிகள் அதில் மன்னனின் சிலை ஒரு முழம் நான்கரை விரல்கள் முடி முதல் அடிவரை, அரசியின் சிலை இருபத்திரண்டு விரல்கள் இரண்டு தோரை உயரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையணிகள் மற்றும் காதணிகள் ஆகியவை சிற்பங்களின் ஆபரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி தூங்காவிளக்கு கடவுளைப் போன்றே மன்னனின் சிலைக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆலயத்தில் இருக்கும் எந்த ஒரு சிலையும் அரசியின் சிலை போன்று இல்லை, அந்தச் சிலை எங்கோ மாயமாக மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. . மன்னவனின் சிற்பம் போன்றதொன்று ஆலயத்தில் இருக்கிறது ஆனால் அது கல்வெட்டோடு ஒப்பிடும் பொழுது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சிலையைப் பற்றி அறிந்த தகவல்கள் இதோ. ப்ரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்பத்தில் உள்ள பெயர் “இராஜராஜேந்திர சோழா, பெரிய கோவிலின் ராஜா” என்று பீடத்தில் பிற்கால எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னவன் கூப்பியக் கரங்களுடன் வணங்கும் கோலத்தில் இருக்கிறார். கலை வேலைப்பாடை பார்த்தால் திருமலையில் உள்ள கிருஷ்ண தேவராயரின் சிலையை விட தாழ்ந்ததாகத்தான் தெரிகிறது. உற்சவத்தின் பொழுது சிலைகளை எடுத்துச் செல்லும் பொழுது இந்த சிலைக்கு மரியாதைக் கொடுத்து எடுத்துச் செல்வதாகவும், இந்தச் சிலை உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலம் செல்வதாகவும் தெரிகிறது. சிலையில் உள்ள பெயரைப் பார்த்தால் ஆலயத்தை நிர்மாணித்தவரும் அதன் நலத்தில் அக்கறைக் கொண்டவருமான முதலாம இராஜராஜரைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது. உற்சவத்தின் போது நடைபெறும் முறைகளைப் பார்த்தால் இந்தச் சிலை பிற்காலத்தில் மன்னவனின் நினைவாக உருவாக்கப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். முதல் பார்வையிலேயே தெரிந்து விடும் இந்தச் சிலை இராஜராஜரால் ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட மற்ற சிலைகளைக் காட்டிலும் தரத்தில் குறைவு என்று, அதிலும் இதன் வார்ப்பு முறை தெள்ளத் தெளிவாக இதன் மங்கிய தரத்தைக் காட்டுகிறது. வார்த்தைகளின்றிப் பேசும் மற்ற சிற்பங்களைக் காணும்பொழுது இது ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் தோற்றமளிக்கிறது. மேலும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகள் நிச்சயமாய் இந்த இராஜராஜச் சிற்பத்துடன் பொருந்தவில்லை. பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகத் தெரிகின்றன, எதுவாகினும் இது இராஜராஜன் காலத்தியது அல்ல. எல்லாவற்றிலும் இருந்து, இராஜராஜரின் விருப்பத்திற்கிணங்க ஆலயத்தின் நிர்வாகி இரண்டு சிலைகளை விழாக் காலங்களில் உற்சவ மூர்த்திகளோடு ஊர்வலம் எடுத்துச் செல்ல நிர்மாணித்திருப்பார் என்பது ஊகம். ஒருவேலை, அந்தச் சிலைகள் காணாமல் போய்விட்ட பின் இந்தச் சிலைகளை உருவாக்கியிருக்கலாம், அந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பகுதியினரிடையே இந்தக் கலையின் வளர்ச்சி தேய்ந்திருக்கலாம். ஒருவேளை அந்த உண்மைச் சிற்பங்கள் இருந்திருந்தால் அதனுடைய தனித்தன்மையான கலை நமக்குத் தெரிந்திருக்கக் கூடும், அதன் காலத்தினால் மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த வெங்கலச் சிற்பங்கள் தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த கலை நுட்பத்தில் உருவாக்கப் பட்டன என்பதாலும்!


இந்த வெங்கலச் சிற்பங்கள் இப்பொழுது எங்கே?

இந்தச் சிற்பத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, சதீஷ்-ன் தஞ்சை அருங்காட்சியகத்தின் புகப்படத் தொகுப்பில் கிடைத்த வெங்கலச் சிற்பம் இது!

காலில் அணிந்திருக்கும் வீரக்கழலை வைத்து இது நிச்சயம் ஒரு மன்னராகத்தான் இருக்கக் கூடும் என்று அறிகின்றோம்.

உடலமைப்பில் நேர்த்தி இருந்தாலும் முக வடிவமைப்பு தேர்ச்சி பெறவில்லை. மணிமுடியின் வடிவமைப்பு இதனை பிற்காலச் சிற்பங்களோடு ஒப்பிடுகிறது. இந்தச் சிலைக்கான பெயர் பலகை அப்பொழுது வைக்கப்படவில்லை, இப்பொழுது இருக்கின்றதா என இதைப் படிக்கும் யாரேனும் பார்த்துக் கூறினால் நன்றுசரி, யார் இந்த ராஜரீக உருவம்?

இதுவரை இந்தப் பதிவை ஆழ்ந்து படித்தவரால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் பார்த்தமாத்திரத்தில், இதுவரை பார்த்த சிலைகளின் பொதுவானதொரு அமைப்பு கூப்பிய கைகள் என்று! ஆனால் ஒரு வேறுபாடு, முதல் சிற்பத்தில் இரண்டு கைகளுக்கிடையே ஒரு மலர் இருந்தது. இது எதைக் குறிக்கின்றது? திரு. P.R ஸ்ரீனிவாசன் அவர்கள் நூலிலிருந்து வெங்கலச் சிற்பங்களுக்கான சில விளக்கங்களைப் பார்ப்போம்.

இதே பாணியில் 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த சண்டிகேஸ்வர சிற்பங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஈடன் கல்லூரியில் (புத்தகத்தில் உள்ளது) உள்ள கீழுள்ள சிற்பத்தைப் பார்ப்போம்

மேலும் ஒரு தலைசிறந்த படைப்பான பொல்லுனுவாரா (இலங்கை) சண்டிகேஸ்வர சிற்பமும் இதே 12-ஆம் நூற்றாண்டை சார்ந்ததுதான்.

உருவமைப்பு, கூப்பிய கைகள் மற்றும் அதற்கிடையே மலர்கள் ஆகியவை பொதுவாக இருந்தாலும், காலில் கழல்கள் காணப்படவில்லை.

மேலும் ஒரு சுவாரசியமான சிற்பம், தென் ஆற்காடு மாவட்டம் கடலூர் கந்தரக்கோட்டையைச் சார்ந்த மன்னரின் உருவம், அதே நூலில் இருந்து.

இதன் காலம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. வளர்புரத்தின் ராமரை ஒத்த மணிமகுடம், கழுத்தணிகள் மற்றும் கையணிகள் இந்தக் காலக்கட்ட சிற்பங்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இடுப்புக் கச்சை நெருக்கமான மடிப்புகளுடன், தெளிவான ஓரங்களுடனும் வடிக்கப்பட்டுள்ளன. உத்தரீயம் முன்புறம் அழகான முடிச்சுடனும், தொங்கணிகளுடனும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு முன் பார்த்த சிற்பங்களில் இல்லாதவாறு அஞ்சலி செலுத்தும் கைகளுக்கிடையே உள்ள மணி மாலை மிகவும் கவனிக்கத்தக்கது. முழங்கைக்குப் பின் வளைந்த கைகளும், நல்ல மொத்தமான கழலும் இந்த சிற்பத்தின் பாணி தனித்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. முதலாம் இராஜேந்திரர் காலத்தின் பெரும்பாலான சிற்பங்களில் இந்த கழல் பொதுவான ஒன்றாக இருந்தது. இந்த சிற்பத்தின் உருவமைப்பு, விஷ்ணுவின் உருவத்தை ஒத்ததாக இருக்கின்றது அதோடு அழாகான இயற்கையான கால்கள் போன்ற வடிவமைப்பு கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.

ஏற்கனவே பார்த்தது போல் இந்த பத்மாசனத்திலும் இதழ்கள் தெளிவாகத் தெரிகிறது ஆனால் அதன் நுனிகளில் முக்கியத்துவம் தெரியவில்லை. இரண்டு வளையங்கள் கொண்ட சதுரமான பத்ராசனத்தின் மீது இந்த தாமரைப் பீடம் அமைந்துள்ளது.

மேற்சொன்ன தகவல்களிலிருந்து இது ஒரு சிறந்த வெங்கலச் சிற்பம் என்று அறிந்து கொள்ளலாம். திரு. T.G. ஆராவமுதன் இது ஏதேனும் ஓர் சிற்றரசராக இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஆய்வாளர்கள், இது கண்டெடுக்க்ப்பட்ட இடத்தில் உள்ள ஆலயத்தைக் கட்டிய சோழ மன்னன் மதுராந்தகனின் உருவமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இருந்தாலும் அவர்களால் இது எந்த மன்னனின் உருவம் ஒன்று நிச்சயமாக கூறமுடியவில்லை. மதுராந்தகன் என்ற பெயர் சோழர்களில் முதலாம் பராந்தகர், சுந்தர சோழன், முதலாம் இராஜேந்திரர், வீரராஜேந்திரனின் மகன் மதுராந்தகன் என பலருக்கு இருந்திருக்கிறது. இதன் கலைத்தன்மையை வைத்துப் பார்த்தால், முதல் இரண்டு மன்னர்களுடையதாய் நிச்சயம் இருக்காது. முதலாம் இராஜராஜரைப் போலவே அவரது வழிவந்தோரும் உற்சவ மூர்த்திகளுடன் செல்லவும், ஆலயத்தில் அதைக் கட்டிய மன்னன் உருவம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிலையை நிர்மாணித்திருக்கலாம். அதோடு இராஜராஜர் காலச் சிற்பத்தை விட இதில் கலை நுட்பத்தின் முன்னேற்றம் தெரிகிறது. ஆகவே இது முதலாம் இராஜேந்திரருக்காக அவரது வம்சத்தில் வந்தவர் யாரேனும் இதனை நிர்மாணித்திருக்கலாம். காலக் கணக்கின் படி, முதலாம் இராஜேந்திரரின் பாணியில் கலை வளர்ந்த காலம் 1075 (கி.பி.) வரை, தொண்டைமண்டலத்தை ஆண்டுவந்த வீரராஜேந்திரன் 1065 (கி.பி.) ஆண்டில் இதை ஆலயத்தைக் கட்டிய இராஜேந்திரரின் நினைவாக நிர்மாணித்திருக்கலாம். இதனது முடிவை தெரிந்து கொள்ளவேண்டும் எனில், இந்த சிற்பத்தையும், கிராமங்களிடம் திருப்புக் கொடுக்கப்பட்ட மற்ற சிற்பங்களையும் பற்றிய கள ஆய்வு மேற்கொண்டால்தான் முடியும்.

இந்த வெங்கலச் சிற்பத்தின் இருப்பிடமும் தெரியவில்லை!

நீளமான இந்தப் பதிவை உடைப்பதற்காண குரல் ஓங்கி ஒலிக்கிறது மனதினுள், நிறுத்துவதற்கு முன் மேலும் ஒரு அதிசுவாரசியமான சிற்பத்தை பார்த்துவிடுவோம். மேல் பார்த்த அதே நூலில் இருந்து மேலும் ஒரு சோழ மன்னன், மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம்

ஒரு அடி உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம். முன்னர் இது காளகஸ்தி சிவாலயத்தில் இருந்தது, ஆனால் தற்சமயம் ஏதோ ஒரு தனியார் வசம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை! அதிர்ஷ்டவசமாக இதன் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டாய்வாளர் திரு. G. வெண்கோப ராவ் இது 13ஆம் நூற்றாண்டை சார்ந்த எழுத்துக்கள் என்று கண்டறிந்திருக்கிறார், இதனை திரு. T.G. ஆராவமுதனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டு பாகங்களாக பொறிக்கப்பட்டுள்ள தகவலில், முதல் பாகத்தில் “குலோத்துங்க சோழ தேவர்” எனவும் இரண்டாவது பாகத்தில் “உடைய நம்பி” நிவந்தனமாக கொடுத்ததாகவும் உள்ளது. இதில் உள்ள எழுத்துக்களால் காலத்தைக் கண்டறியும் வேலை சுலபமாகிறது, அதோடு இதன் பாணியும் கலை நுட்பமும் காலத்தை கண்டறிய மிகவும் ஏதுவாக இருக்கும்.
முனைவர். சாஸ்திரி இந்த சிலையப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ” ……இந்த உருவத்தில் பல ஆபரணங்கள் உள்ளன, அதோடு இதன் முகம் இளமையும், உற்சாகமும், புத்துணர்ச்சியையும் காட்டுவதாக உள்ளது. இது மிக முக்கியமானதொரு சிலை, சோழ வம்சத்தின் கலைக்கு ஆதாரமாய் விளங்கும் வெங்கலச் சிற்பம் ஒருவேளை இது மட்டுமாகத்தான் இருக்கும்”

ஆனால் காலத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார் “…..இந்த உருவம் மன்னன் அரியணையில் ஏறும் பொழுது உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.”…..இதன் காலம் அனேகமாக 1180 ஆக இருக்கக் கூடும்,” ஒரு வேளை இது முந்தைய காலத்தைச் சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று எண்ணியவாறு அவர் இதை கூறியிருக்கலாம்!

அழகான இந்தச் சிலையின் அம்சங்கள்: முன்னால் சுருள் சுருளாகக் காணப்படும் முடி, திருஞானசம்பந்தரின் ஒத்த வடிவம், மொத்தமான கழுத்தணிகள், மணிகள் பதித்த தோளணிகள், அழகான ஆனால் அதிக நுண்ணிய வேலைப்பாடில்லாத கையணிகள், அழகான இடுப்புக் கச்சை மற்றும் சிறிய கீழாடை, மூன்று வளையங்களைக் கொண்ட கழல்கள்.

இதனுடைய பீடங்கள் அழகானதாகவும், தாமரைப் பீடம் வழக்கமான பாணியிலும் உள்ளது. மொத்தத்தில் இந்தச் சிலையின் வடிவம் அழகாய் மனதில் வடிக்கப்பட்டு, துல்லியமாய் வார்க்கப்பட்டதாய் உள்ளது. இதன் முகத்தில் உள்ள வசீகரம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், மந்திரப் புன்னகை யாவும் இதன் சிறப்பு. இதன் காலக்கட்டம் 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாக இருக்கக் கூடும்.

ஆய்வாளர்கள் நாம் படித்து தெரிந்து கொள்ள ஏராளமானவற்றை கொடுத்திருக்கின்றனர், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன ஆனால் இவையெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. என்னைப் போலவே, இந்த நீண்ட பதிவு உங்களுக்கும் சுவாரசியமாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது எங்கு உள்ளன என்ற குறிப்புகள் இல்லாத இந்த சிற்பங்களில் சிலவற்றையாவது நம்மால் மீண்டும் என்றாவது காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை தற்காலிகமாக முடித்துக் கொள்வோம்!

ராஜனுக்கு ராஜன் ராஜ ராஜன் தான் – இது அவரா ?

உலகில் பலவற்றை நாம் வென்றாலும் காலத்தை வெல்வதென்பது கடினம். அப்படி காலத்தை வென்று அழியாப் புகழ் பெறுவது என்பது அதனை விட கடினம். அப்படி காலத்தை தனது கை வண்ணத்தாலும் , செயல் வண்ணத்தாலும் , வென்று ஒவ்வொரு தமிழனையும் ஆயிரம் ஆண்டுகள் சென்றும் அவனது பெயரை கேட்டவுடன் ஒரு தனி மதிப்பை தானே பெரும் வல்லமை – நமது் ராஜ ராஜ சோழருக்கு உள்ள தனிச் சிறப்பு. ஒவ்வொரு முறை அவர் எடுப்பித்த பெரிய கற்றளியான தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை பார்க்கும் போதும், அமரர் கல்கியின் அற்புத வர்ணனையுடன் பொன்னியின் செல்வனை ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களுடன் அருண்மொழியை மனக்கண்ணில் சித்தரித்த ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் தணியா தாகம் அவரது நிஜ உருவத்தை காட்டும் ஓவியம் அல்லது சிற்பம் பார்க்கவேண்டும் என்பதே. பல முறை இந்த ஆவலை தணிக்க வந்த விடைகள் – பெரிய கோயில் ஓவியம் , சாராபாய் அருங்காட்சியகத்தில் இப்போதும் உள்ள அழகான செப்புத் திருமேனி, ஆனாலும் என்ன, தெள்ளத் தெளிவாக இதுதான் உடையார் ராஜ ராஜ சோழர் என்று சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்க முடியவில்லையே.. அப்படி இருக்கையில், ஒரு தேடலில் இந்த ஆய்வுக் கட்டுரை என் கண்ணில் பட்டது The Problem of Portraiture in South India, Circa 970-1000 A.D.,Author(s): Padma Kaimal

அதில் ஒரு சிறு குறிப்பு இருந்தது. திருவிசாலூர் ஆலயத்தில் உள்ள சிற்பம் மற்றும் அங்கே உள்ள கல்வெட்டு பற்றி . அதை பார்க்கும் முன்னர் ஒரு முறை ராஜ ராஜரின் மெய் கீர்த்தி தனை மீண்டும் ஒரு முறை கண்ணால் காண்போம்


ராஜ ராஜா சோழர் மற்றும் அவரது பட்ட மகிஷி லோகமாதேவி அவர்களின் சிற்பம் கல்வெட்டு குறிப்புடன் என்று இருந்தது

உடனே ஒருபுறம், அந்த சிற்பபத்தின் நல்ல படத்தை கண்டு பிடிக்க நண்பர்களை நாடினேன், மற்றொரு புறம் அந்த முழு கல்வெட்டின் பிரதியை தேடினேன் .

சிவயோகநாத ஆலயம் திருவிசாலூர் – கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் – உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”

கும்பகோணம் அருகில் இருக்கும் கோயில் இது, நண்பர் திரு லக்ஷ்மி நாராயணன் உடனே சென்று படம் பிடித்து தருகிறேன் என்று ஒரே வாரத்தில் படத்தை எடுத்துத் தந்தார். (நலிந்து கிடக்கும் பல கோயில்களின் படங்கள் அவரது தளத்தில் காணலாம், http://picasaweb.google.com/slnvasu)

படம், பொறுமையாக வருகிறது, அதற்கு முன்னர் சில வரிகள். திருவிசாலூர் ஆலயத்தின் காலம் முதலாம் ஆதித்யர் வரை செல்கிறது. கல்வெட்டில் கண்ட கொடை விஷயம் – ஹிரண்ய கர்ப்பம் ( பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது – இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் – பிறவா வரம் பெற செய்யும் யாகம் ) பற்றிய குறிப்புகள், ராஜ ராஜ சோழர், லோகமாதேவி அனைத்தும் இருந்தாலும் ( இந்த கல்வெட்டின் பிரதி திருவலஞ்சுழி ஆலயத்திலும் இருக்கிறது – குறிப்புக்கு நன்றி நண்பர் அர்விந்த் ). இது உடையாரின் கடைசி ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. அதாவது 29 ஆம் ஆட்சி யாண்டு ( 1014).

முழு விவரம் இங்கே

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_23/aditya_2_karikala.html
No.42 (Page No 20)
(A. R. No. 42 of. 1907)

The inscription registers an agreement given by the mahasabha of vemgarrur alias Solamattanda-chaturvedimangalam a Brahmadeya in Manni-nadu, to the temple of Tiruvisalur-Mahadeva. A sum of 458 kasu was endowment to the temple and deposited with the assembly by queen Dantisaktivitankiyar alias lokamahadeviyar on the occasion of the performance of tulabhara by the king and of hiranyagarbha by herself in the temple. As interest on this amount they undertook to measure out annually 229 kalam of paddy at the rate of 1 tuni and 1 padakku on every kasu per year, and with this paddy the ur-variyam and kudumbu committees of the year were to meet the daily requirements of akkaradalai offering to the god, of which the details are given as follows:

Items required Equivalent in paddy

Rice – 2 nali … … One kurini and 2 nali

Tupparuppu(dol)—1 nali … …. 5 nali

Cow’s milk – 4 nali …. ….. ….. 1 padakku

Ghee –1 ulakku … …. ….. 1 kuruni

Sugar – 12 ½ palam … …. …. 1 kuruni and 2 nali

Plantain fruits –20 (?) …. …. ….. 6 nali

Arecanut … 10}

Betel leaves … 40} …. ….. …. 2 nali and 1 nali

Earthen pot …. …., …. 1 nali, 1 uri and 2 ¾ sevidu

Firewood …. …. ….. 1 nali
Remuneration to person preparing the offering … 1 nali

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த சிற்பம் இதோ.

அருகில் சென்று பார்ப்போம்.

இந்த ஆலயத்தில் நிறைய சிற்பங்கள் இல்லை. இதை தவிர இன்னும் இரண்டு புடைப்புச் சிற்பம் தான். மற்றவை எல்லாம் சிலைகள். அப்படி இருக்க, இவர்கள் சாமானியர் அல்ல, பொதுவாக பெரிய கொடை அளிக்கும் முக்கியமான சிலருக்கே இந்த வகை சிற்பங்கள் நிறுவப்படும்.

நிற்கும் ஆண், வயதில் சற்று முதிர்ந்து காணப்படுகிறார். (பொதுவாக மற்ற சோழ அரச சிற்பங்கள் அரசர்களை அமர்ந்த நிலையில் தான் காட்டுகின்றன ). அருகில் இருக்கும் அம்மையார், சற்று வயதில் சிறி்யவராக இருந்தாலும் யௌவன வயது யுவதி என்று சொல்ல முடியாது. ஆண் எந்த வித ஆபரணம் அணியவில்லை – தலையில் கிரீடம் இல்லை – அணிகலன் இல்லாத வெறும் சடை குடுமி, இரு காதுகள் நீண்டு இருந்தாலும் (முன்னர் கனத்த குண்டலங்கள் அணிந்தமையால் இருக்குமோ?) இப்போது வெறுமனே உள்ளன, இடுப்பில் வெட்டி போல ஒன்று, காலில் வீரக்கழல் இல்லை. அம்மையார் இதற்கு சற்று மாறாக கழுத்தில் ஹாரம், தலையில் சுட்டி என்று சில ஆபரணங்கள் அணிந்து , நல்ல சீலை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே பக்திப் பரவசத்தில் கை கூப்பி நிற்கும் காட்சி அருமை.

இங்கே தான் நாம் சற்று யோசிக்க வேண்டும். அப்படி பெரிய கொடை கொடுக்கும் நபர், ஏன் இப்படி நகை ஒன்றுமே அணியாமல் இருக்க வேண்டும். கல்வெட்டின் படி 29 ஆம் ஆட்சி யாண்டு . உடையார் ராஜ ராஜா சோழர் சிவபாத சேகரன் என்று தன்னை அழைக்க தொடங்கி விட்டார். தீட்சை பெற்று சிவனடியார் ஆகவே மாறிவிட்டார் என்றும் ஒரு வாதம் உண்டு.

அவர்கள் பூஜிக்கும் சிவன்

சிவலிங்கம், அழகே பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. லிங்கத்தின் முன்னர் அபிஷேகம் செய்யும் சங்கு. அப்படி என்றால் இருவரும் தாங்களே அபிஷேகம் செய்து பூ அலங்காரம் செய்து வணங்கி நிற்கின்றனர் என்று கொள்ளலாம்.

இவற்றைக் கொண்டு பார்த்தால் இது மாமன்னர் ராஜ ராஜர் மற்றும் பட்டமகிஷி தந்தி சக்தி விடங்கி லோகமாதேவி என்று கருத முடிகிறது.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. பொன்னியின் செல்வனின் வந்தது போல – ராஜ ராஜரின் மைந்தன் ராஜேந்திரனின் அன்னை வனவன் மாதேவி ( வானதி ) வேறு – இந்த லோகமாதேவி வேறு. இதை கல்வெட்டுகளில் வானவன்மாதேவி திருவயிறு் உதித்த ராஜேந்திரன் என்று வருவதை கொண்டு அறியலாம்.

மேலும் ஆராய இந்த சிற்பத்தினை தீவிர ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

இருநூறாவது பதிவு – பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழியவே – சோழ ஓவியம்

இந்த தளம் எங்களுக்கு வாழ்க்கைப் பாதையில் மிகவும் மனநிறைவைத் தரும் பயணம். திடீரென ஏற்பட்ட ஒரு தாக்கத்தால் பலரும் தங்கள் பயணத்தை துவங்குவது உண்டு , எனினும் முதலில் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்ந்து நினைவில் வைத்து கவனத்தை எங்கும் எதிலும் சிதற விடாமல் செல்வது பெரும் சவால். அந்த விதத்தில் நாங்கள் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களை இந்த பணியில் ஈர்த்த , இன்றும் தூண்டுதலாக இருக்கும் அந்த முதல் தீ பொறி – அதற்கு அப்படி ஒரு பலம். இருநூறாவது பதிவிற்கு அந்த தீப் பொறியை விட வேறு நல்ல கரு உண்டோ ?

ஆம் அவர்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர்.

ஆனால் எங்களை போன்றோருக்கு அவர் என்றும் அருண்மொழி வர்மர் தான் – இன்றும் எங்கள் நினைவில் நீங்காமல், ஒரு வாழும் வரலாறாக , எங்களை வழிநடத்தும் தமிழனின் வாழ்வியலில் பொன்னேட்டில் பொறிக்கப் பெற்ற மாமனிதர். தமிழனும் தமிழ் மண்ணும் தனது பெயரை கேட்டவுடன் தலை தானாக நிமிரும் சாதனைகளை நிகழ்த்திய சகாப்தம். இது வெறும் முகஸ்துதி அன்று – இன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல இடங்களில் இருந்து அவர் எழுப்பிய பெரிய கற்றளியான ராஜராஜேஸ்வரம் தஞ்சை பெரிய கோயில்தனை காண வரும் பலகோடிக்கணக்கான பேர்களில் பலர் அதன் பிரம்மாண்டத்தை ரசிப்பர், சிலர் அதன் அழகை ரசிப்பர், மற்றும் சிலர் அதன் கட்டட அமைப்பு,அறிவியல் , விஞ்ஞானம் என்று வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கும் கூட்டத்தில் இருப்பர். வேறு ஒரு கூட்டமும் உண்டு. எங்களை போல – இது எங்கள் மண் , இவர் எங்கள் அரசன் என்று எங்கோ ஒரு விட்ட குறை தொட்ட குறை – அடி மனதில் ஒரு இனம் புரியா ஆனந்தம், அருகில் அந்த மாமனிதர் இன்னும் எங்களை அன்புடன் பார்த்து மந்தகாச புன்னகை புரியும் ஒரு உணர்வு…

எங்களை வழிகாட்டும் அந்த சுடருக்கு என்றும் எங்கள் உழைப்பு அர்ப்பணம். முடிவு ஆரம்பம் என்று பிரிவு படுத்தி பார்க்காமல், இதுவரை நாங்கள் செய்துள்ள அனைத்தும் தங்களுடையது, இனி நாங்கள் செய்யப்போவதும் தங்களுக்கே அர்ப்பணம். எங்களை இந்த பணியில் ஆழ்த்தியதும் தாங்களே , உங்கள் புகழ் பாரெங்கும் பரவ நாங்கள் எங்களை இன்று மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

காலவெள்ளத்தில் நாம் பரபர வென்று பின்னோக்கி பயணிக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் இரண்டு நொடிகளில் புரட்டிவிட்டோம். கி பி 1010.

(ஆம், தற்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன – பெரியகோயில் எடுப்பித்து – கல்வெட்டுகளில் உள்ள படி உடையார் அவர்கள் தனது ஆடிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டின் இருநூற்றி எழுபத்தி ஐந்தாம் நாள் – விமானத்தின் மேல் உள்ள கலசத்திற்கு தங்கம் கொடுத்த செய்தி உள்ளது. ஆட்சிக்கு வரும் வரிசையில் இல்லாமல், காலத்தின் கோலத்தால் விதியின் ஆட்டத்தினால் தன்கையில் ஆட்சி வந்தாலும் பெருந்தன்மையுடன் அதை விட்டுக்கொடுத்த தியாக சிகரம் – பின்னர் அவர் தமிழுக்கும் தமிழன்னுக்கும் ஆற்ற வேண்டிய அற்புதங்களை எண்ணி மீண்டு்ம் அரியணை தேடி வந்தது கி பி 985 )

ஆலய மணிகள் கிண் கிண் என்று ஒலித்துக்கொண்டிருந்தன – அந்த மணியோசையின் பின்னணியில் பிரம்மாண்டமான வாயிற் காவலர்கள் வழி காட்ட பெருவுடையாரைக் காண உள்ளே வந்தனர் பெருமக்கள். அங்கே ஒருபக்கம் போட்டியாய் தவில், மேளம், பறை, தாரை , தப்பட்டை, நாதஸ்வரம் என்று ஒரு புயலென கிளம்பிய ஓசையில் திக்கு முக்காடி,அவை கருவறையின் கருங்கல் சு்வரில் வெளியே திரும்ப ஓட ஒரு வழியை தேட… ஒரு நிமிடம் அப்படியே அண்ணாந்து காற்றில் கலக்கும் கற்பூர வாசனையையும் பின்னந்தள்ளி வந்த சந்தன வாசனை முகரும்போது , அகில், ஜவ்வாது, சாம்பி்ராணி என்று ஒன்றோடு ஒன்று போட்டியிட….திடீரென இன்னும் ஒரு புது வாடை , மேலிருந்து வருகிறது, முல்லை – ஆமாம் அடர்த்திக்கட்டிய முல்லை மொட்டுகள் மெதுவாக மலரும்போது வெளிவரும் வாசனை. எங்கிருந்து வருகிறது, மேல் தளத்தில் அடுக்கடுக்காக பின்னிய ஜடைகளில் முல்லை மொட்டுக்கள். யார் இந்த யு்வதிகள். புலியின் பார்வையில் உறைந்து நிற்கும் மானைபோன்ற கண்களை கொண்டு தங்கள் பிடித்த ஜதிகளில் அப்படியே உறைந்து எதிரே இருக்கும் தங்கள் குருநாதரின் செய்கைக்காக காத்து நிற்கும் நாட்டிய மாதுகள். குருநாதரும் அங்கு இருக்கும் அனைவரையும் போல, காத்து நிற்கிறார் – யாருக்கு?

அனைவருமே அவரை பலமுறை பார்த்துள்ளனர், ஒளிவீசும் கவசத்தை தனது வெற்றி மார்புகளில் தரித்து, கம்பீரமாக தனது ரதத்தில் ஏறி செல்லும்போது, ராஜ உடையில் பட்டாடை உடுத்தி செங்கோலும் மணிமுடியும் ஜொலிக்க பட்டத்து யானை மீது பவனி வரும் போதும் பார்த்ததுண்டு. எனினும், இன்று அப்படி அல்ல. இன்று சாதனை ஒன்றை நிகழ்த்தி , ஒரு அதிசயத்தை நடத்தி அந்த மாவீரன் தன் கனவை நினைவாக்கும் பொன்னாள்.

ஆம், இன்று தான் பெரிய கோயிலின் குட நீராட்டு் நாள் – இது போல பாரில் எங்கும் இல்லை என்று ,சோழம் சோழம் என்று எட்டு திக்கும் இந்த குலத்தின் பெருமையை பறைசாற்றும் பொன்னாள்.

திடீரென எங்கும் அமைதி, அரசரின் அணிவகுப்பு வாசலை அடைந்து விட்டது. வாயிலின் மூலம் உள்ளே வரும் சூரிய கதிர்கள் ஒரு சில கணங்கள் மறைக்கப்படுகின்றன, பின்னர் சூரியன் உதிக்கும் ஒளி கிரணங்கள் போல அவரது மதிவதனம் , அரச சின்னங்கள் எதையும் அவர் தரிக்க வில்லை, வெள்ளை ஆடை இடுப்பில், ஒரு மேல் துண்டு , அங்கம் எங்கும் வெள்ளை விபூதி கோடுகள் – தங்க கவசத்தை விடவும் இந்த வடிவில் சிவப்பழமென ஜொலித்தார் மாமன்னர் – அப்போது..

சோழம் பூஜிக்கும் மந்திரமென பகைவர் மனதில் காலனின் நாமத்தை நினைவு படுத்தும் ஒலி.. மன்னனின் மெய்கீர்த்தி ஒலிக்க துவங்கியது….


ஸ்வஸ்திஸ்ரீ்
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்

உடனே, மாமன்னன் புருவங்கள் நெரிந்தன, வலது கை மேலே எழும்ப துவங்கியது.. குறிப்பால் அறிந்து புகழ் பாடும் வாய் அப்படியே நின்றது, என்ன வென்று அறியும் முன்னர் மெய்காவல் படை தலைவன் கை இடைவாளுக்கும் சென்றது. எனினும் நெறித்த புருவும் முழுவதுமாக நெறியாமல், முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு குடை பிடித்தது. அந்த ராஜ களை சொட்டும் முகத்தில் இன்னும் ஒரு படி அழகு எப்படியோ ஏறியது.

“அவனுக்கு முன் என் புகழ் எம்மாத்திரம். நான் இப்போது இங்கு ராச ராசன் அல்ல.. அடியேன் சிவ பாத சேகரன் “

மன்னரின் இந்த மொழியை கேட்டதம், மீண்டும் மேள தாளம், மணிகள் கிண்கிணி முழங்க – எங்கும் இசை வெள்ளம். அப்போது, மேலே இருந்து நானூறு சலங்கைகள் ஒரு சேர ஜதி பிடித்தன…குருநாதரின் ‘தா’ என்ற ஓசைக்கேற்ப.

தன் கனவு பலிக்கும் பேரானந்தத்தில் பெருவுடையாரின் அடியில் நின்ற மன்னர், தொலைவில் நின்ற குஞ்சர மல்லனை, தஞ்சைப் பெரும் சிற்பியைத் தேடி அழைத்தார்.

“இன்றுமுதல் உனக்கு ராஜ ராஜ பெருந்தச்சன் என்ற பட்டம் அளிக்கிறோம், பெயரில்லா சிற்பிகளாக நீங்கள் இருப்பது போதும். – யார் அங்கே, இந்த பெயரை எனது பெயருடன் இணைத்து கல்வெட்டில் வெட்டுங்கள். – உனது உன்னத படைப்பின் புகழ் சூரியனும் சந்திரனும் உதிக்கும் வரை நிலைத்து இந்த வையகத்தில் என் பெயரும் உன் படைப்பும் ஒன்றாய் ப் பிணைந்து உன் புகழை உலகிற்கு உணர்த்தட்டும்.

கணங்களில் நீர் பெருக தஞ்சைப் பெரும் சிற்பி கை கூப்பி வணங்கினார்.

“என் கோனே , இந்த குணமல்லோ எங்களை எந்நாளும் உங்கள் அடி பணிய வைக்கிறது. இந்த பெருமிதத்தில் இந்த அற்புத ஆலயத்தில் தங்களுக்கு விசேஷமாக வைத்துள்ள ஒரு அற்புத வெளிப்பாட்டைக் காட்ட மறக்கக்கூடாது. பிரத்தேயகமாக தலை சிறந்த ஓவியர்களை கொண்டு திருச்சுற்றில் உங்களுக்கு பிடித்த ஈசனின் வீரட்டானம் ஒன்றை தீட்டச் செய்துள்ளேன்.”

ஓ , அப்படியா. இதற்காகத்தான் கடந்த சில வாரங்களாக என்னை அந்தப பக்கம் செல்லாமல் தேர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தர அனைவரும் சேர்ந்து சதி செய்தீரோ..

ஐயனே , பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள். முதலில் வேலைபாட்டை கொஞ்சம் பாருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், அங்கே வெளிச்சம் போதவில்லை, யார் அங்கே – பந்தங்களை கொண்டு வாருங்கள். கவனம், சுவரின் அருகில் செல்ல வேண்டாம். எல்லா இடங்களையும் ஓவியங்களால் நிரப்பி உள்ளோம்.

வேந்தே – தாங்கள் விமானத்தின் கோஷ்டத்தில் திருப்புற விஜய சிற்பங்களை நிறுவச்சொன்ன போதே தங்களுக்கு திரிபுராந்தக கதையின் பால் உள்ள ஆவலை புரிந்துக் கொண்டோம். அதனால் அந்த கதையை ஓவியாமாக தீட்ட முடிவெடுத்தோம்.

“அருமை, கலைஞரே.! குறிப்பால் உணரும் உங்கள் திறன் அருமை. உங்களைப் போன்றோர் என்னிடத்தில் இருப்பது நான் செய்த புண்ணியம். ஆமாம், பெரிய அன்னை செம்பியன் மாதேவி பலமுறை சுந்தரர் , சண்டேஸ்வரர் புராணங்களை சொல்லிக்கொடுத்தாலும், என் அக்கன் குந்தவை பிராட்டியார் தினமும் படித்துக்காட்டிய மகேசனின் திரி்புர தகனம் மனதில் ஏனோ நின்றுவிட்டது. கதையை எப்படி தீட்டி உள்ளீர், சிற்பம் போல தொடரும் காட்சிகள் போலவா..

மன்னா, தங்களை போல உயிர சிந்தனையும் நல்ல குணமும் பெற்ற தலைவனின் காலத்தில் பிறந்து பிறவிப் பயனை அடையும் நாங்கள் தான் புண்ணியம் செய்தவர்கள். பெரிய பிராட்டியும் குந்தவை பிராட்டியார் போன்றோர் சிறுவயதில் தங்களுக்கு இது போன்ற நல்ல கதைகளை சொல்லி வளர்த்தது வரும் சந்ததியினர் கற்று தெரிய வேண்டிய பாடம். ஓவியத்தை புது பாணியில் ஒரே காட்சியில் முழு கதையையும் விளக்கும் வண்ணம் காட்டியுள்ளோம் மன்னா.

ஒரே காட்சில் முழு கதையுமா. எப்படி முடிந்தது – குறைந்தது ஆறு முக்கிய காட்சிகள் தேவையாக இருக்குமே ?

கோனே, நாம் செய்த பாக்கியம், இது போன்ற ஓவியர்களும் நம்மிடையே உள்ளனர்.

பொறுங்கள், மதுராந்தகனும் பார்க்கட்டும். ராஜேந்திரா இங்கே வா

மன்னா. இருபது வருடங்களுக்கு முன்னர் தங்களை பார்ப்பது போலவே உள்ளது

ஆமாம், பெருந்தச்சரே. ஆனால் கோபம் மட்டும் என்னை விட இருபது மடங்கு. ராஜேந்திரா , இந்த அற்புத ஓவியத்தை பார். திரிபுராந்தகன் கதை, நினைவில் உள்ளதா உனக்கு. ஈசனின் வீரட்டாணங்களில் ஒன்று. திரிபுர அசுரர்கள் மூவர் தாரகாக்ஷ , கமலாக்ஷ மற்றும் வித்யுன்மாலி – தாரகனின் மகன்கள் , பிரம்மனிடத்தில் பெற்ற வரத்தின் பலத்தால், உலகை ஆட்டிப் படைத்தனர். பறக்கும் நகரங்கள் கொண்டு, மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தினர். எனினும் நல்ல சிவ பக்தர்கள். தன் அடியார்களை வதை செய்ய மனமில்லாமல், அப்பன் பெருமாளை புத்த வடிவத்தில் அனுப்பி வேறு மார்க்கத்தில் எழுத்து செல்ல வைத்தார். அதன் பிறகு, தேவர்கள் அனைவரும் கொண்டு படை திரட்டி, புவியைத் தேராக கொண்டு, சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாக வைத்து, நான்முகன் தேரோட்டியாக நின்று, பெருமாளே நாணாக மாறி , மேரு மலையை வளைத்து வில்லாக போர்க்களம் புகுந்தார். அப்படித்தானே பெருந்தச்சரே ?

ஆமாம் அண்ணலே. அந்த தேர் எங்கள் ஆசான் விஸ்வகர்மனால் செய்யப்பட்டது. அதோ தேரோட்டியாக நான்முகன்.

தந்தையே – தேரோட்டி முன்னால் பார்க்காமல் ஏன் திரும்பி ஈசனை பார்க்கும் வண்ணம் உள்ளது?

மகனே, இது கதை சொல்லும் ஓவியம் – முழு கதையையும் ஒரே ஓவியத்தில் ஓவியன் விளக்க எத்தனிக்கிறான்.

ஐயனே, மேலே பெருமாள் புத்த வடிவில் இருப்பதும் திரிபுர அசுரர்கள் அவனை வாங்கும் வண்ணம் வரைந்துள்ளோம். அங்கே எலியின் மீது யானைமுகனும், மயிலின் மீது முருகனும், சிம்மத்தின் மீது தேவியும், ஈசனுடன் பல பூத கணங்களும் போருக்கு செல்லும் காட்சி இங்கே

ஆமாம். அசுரர் படையும் மிகவும் கோரமாக தெரிகிறது. அந்த பந்தத்தை இன்னும் அருகில் எடுத்து வாருங்கள், ஓவியத்தில் உள்ள தனித்தன்மையை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். ராஜேந்திரா , உன்னால் முடிகிறதா பார்ப்போம்.

தந்தையே , தேவார வரிகளில் இரு விதமாக இந்த காட்சியை பாடும் பாடலை படித்த நினைவு வருகிறது – கறுத்தவன் (சினந்தவனும்) என்று ஒருமுறையும் நகைசெய்த என்றும் வருமே.

முதல் திருமுறை

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

முதல் திருமுறை

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பலே மகனே – அருமை. படிப்பிலும் கவனம் செலுத்தினாய் போல உள்ளதே. ஆச்சாரியர் இதற்கு இரு விளக்கங்கள் தருவார். இவ்வாறு போருக்கு செல்லும் ஈசனை விளக்கும் பாவம் – உடல் சிவக்க, கண்கள் பிதுங்க , புருவங்கள் வில்லாக வளைய – பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் இதை ரௌத்ர திருஷ்டி என்பார்கள். உனது சினேகிதி அந்த நாட்டியக்காரியிடம் கேளேன்.

அப்பா , இங்கே எதற்கு இந்த சம்பாஷனை. தெரிகிறது தெரிகிறது. சிவனின் முழு உடலுமே செவ்வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. நீங்கள் கோபப்படுவது போலவே .

மகனே, நீ கூட இப்போது கொஞ்சம் சிவந்து காணப்படுகிறாயே ? கோபமா ? நாணமா ? சரி, ஈசனின் முகத்தில் ஏதாவது வித்யாசமாக தெரிகிறதா உனக்கு.

தந்தையே – அதற்கு முன்னர் அவர் வில்லை பிடித்திருக்கும் முறையே சற்று வித்யாசமாக உள்ளதே. எதிரி எதிரில் இருக்க, வில்லை ஏன் தன்னை நோக்கி பிடித்து இருப்பது போல உள்ளது காட்சி.

மதுராந்தகா, அது தான் ஓவியனின் திறமை. கதையை பாதியிலேயே விட்டு விட்டோமே – இரு விதாமாக விளக்கம் தருவார் குருநாதர் என்று சொன்னேன் அல்லவா, ஒன்று – இவ்வாறே படை திரட்டி செல்லும் போது கூட சென்ற தேவர்களில் சிலருக்கு சற்றே தலைக் கனம் பிடித்தது. ஈசனுக்கே நம் உதவி தேவை என்று !! இன்னொரு விதமான விளக்கம் பிரம்மன் ஈசனை பார்த்து – எதற்கு இந்த அதீத விளையாட்டு. தங்களுக்கு இந்த படை, ஆயு்தங்கள் எல்லாம் தேவையா என்று கேட்க….மகேசன் அடுத்த கணம், வில்லை தன் பால் திருப்பி, ஒரு சிரிப்பு சிறக்க – எதிரில் இருந்த அசுரர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர்.

இப்போது பார். பித்தனின் முகத்தில் புன்னகையை. ஓவியன் திறமையாக இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வந்துள்ளான்.

அருமை, தங்கள் விளக்கத்துடன் ஓவியத்தை பார்க்கும் பொது மெய் சிலிர்க்கிறது. சீக்கிரம் வாருங்கள்! அடுத்த ஓவியங்களை பார்ப்போம்.

படங்கள்: திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். பெரிய கோயிலை பற்றி மேலும் முழுவதுமாக தெரியவேண்டுமாயின் கண்டிப்பாக அவர்களது நூலை படியுங்கள்.அவர்களது நூலை
நன்றி ரீச் சந்திரா

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே – அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??


அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?

தஞ்சை பெரிய கோயில் அகழி அழகிகள் – கண்டுபிடித்துவிட்டோம்

இது ஒரு மகிழ்ச்சியான பதிவு. தொலைந்து விட்டது என்றும் மீண்டும் கிடைக்கவே வழில்லை என்ற நிலையில் தஞ்சை பெரிய கோயில் அகழியில் இருந்த இரு சிற்பங்களை பற்றிய முந்தைய பதிவை பதிவு செய்தேன்.

ஆனால் நண்பர் திரு செல்வராஜ் அவர்கள், நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அங்கே விளையாடும் பொது பார்த்துள்ளேன், இன்றும் இருக்கும், விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன் என்றதும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனினும் அவை கிடைக்குமோ – எந்த நிலையில் இருக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் இருந்தன. உடனே செல்லமுடியாமல் விடாது மழை வேறு. ஆனால் இன்று இன்ப அதிர்ச்சி – நீங்களே பாருங்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படங்களில் இருந்தபடியே இன்றும் நிற்கின்றன இரு சிற்பங்களும். பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தஞ்சை பெரிய கோயில் அகழி

சமீபத்திய நாளேட்டில் தொல்லியல் துறை ஒரு கோடி ருபாய் செலவில் தஞ்சை பெரிய கோயில் அகழியை செப்பனிடப் போகிறது என்ற செய்தி வாசித்து மகிழ்ந்தேன் செய்தி.உடனே நினைவு சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கருவூலத்தில் உள்ள சில மிக அரிய புகைப்படங்களைப் பார்வையிட்டதும். அதிலும் குறிப்பிடும் படியாக ஒரு படமும்!!!

இந்த படங்கள் ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். இப்போது அகழியை செப்பனிடுவது பற்றி பேச்சு இருப்பதால் அந்த நாளில் அது எப்படி இருந்தது என்ற பாருங்கள். ( அகழியில் நீர் இருந்தாலும் ஆலயத்தின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்!! )

1800 மற்றும் 1900 இல எடுத்த படங்கள் . ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

என்னடா வெறுமனே பழைய புகைபடங்களை கொண்டு ஒரு பதிவை இட்டு ஒப்பேத்துகிறானே என்று எண்ணுகிறீர்களோ?. பொறுமை!. இதோ வருகிறது சுவாரசியமான படம் ஒன்று…

ஆண்டு 1921, சரியாக சொல்ல வேண்டும் என்றால். ஏப்ரல் மாதாம் இரண்டாம் தேதி. திரு எ வில்பூர் சாயர் எடுத்த படம்.

உற்று பாருங்கள். அகழியின் சுவரில் ஒரு சிற்பம் உள்ளதே – தெரிகிறதா ?

இது என்ன சிற்பம்? அது இப்போது எங்கே போனது? யாரிடம் கேட்பது.. யார் பதில் சொல்வார்கள்?

ரோடா மிக திறமையாக இன்னும் ஒரு சிற்பத்தை படத்தில் கண்டுபிடித்துள்ளார்

தஞ்சை இரண்டாம் யாளி வரிசை

முந்தைய பதிவில் தஞ்சை பெரிய கோயில் முதல் யாளி வரிசையை பார்த்தோம். அவை யாளிகளா அல்லது சிம்மங்களா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். அவர்களை விட இன்னும் பன்மடங்கு நண்பர்கள் தஞ்சை கோயிலுக்கு பல முறை சென்றும் இந்த வரிசைகளை பார்க்கவில்லை / பார்கவில்லையே !! என்றும் வருந்தினர். அவர்களுக்காக இன்று இன்னும் ஒரு யாளி வரிசை ( முன்னர் பார்த்து மேல் வரிசை, இப்போது பார்ப்பது கீழ் வரிசை ) -நன்றி சதீஷ் – அருமையான படங்கள், மற்றும் கூர்ந்து கவனித்து படங்களின் அளவை குறிக்க அவர் கையாண்ட முறை மிக அருமை.

முதலில் படங்களை படங்களாகவே இடுகிறேன், வரிசையை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்

சரி, இப்போது தெரிகிறதா பாருங்கள்.

அடுத்தது

அடுத்தது

அடுத்தது

சற்று இன்னும் அருகில் சென்று இந்த அற்புத யாளிகளை தரிசனம் செய்வோம். பலர் இவைகளை சீன டிராகண் போல உள்ளது என்று கூறுவார், எனினும் அவற்றை பார்த்தல் சற்று பயமாக இருக்கும், எனக்கு தஞ்சை யாளிகள் கொடூரமாக காட்சி அளிப்பதை விட சற்று விளையாட்டாய் சிரிப்பது போலவே உள்ளது.

யாளி வரிசையின் கொடிகள் இன்னும் அருமை. இவை ஏற்கனவே மிகவும் அளவில் சிறியவை. அந்த சிறிய அளவிலும் மேல் வரிசையை போல யாளி வாயில் இருந்து வெளி வரும் வீரர்களை போல இங்கும் செதுக்கி உள்ளனர். அதற்க்குமேல் ஒரு பொடியன் வேறு.அப்பப்பா அபாரம் .

பேனா மூடி அளவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

இவை போதாதென்று அதே அளவில் ஒரு அருமையான யானை உரி போர்த்திய மூர்த்தி வேறு

அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் பொது, அதன் பிரம்மாண்டத்தை மட்டும் கண்டு வியக்காமல் இந்த சிறிய சிற்பங்களையும் கண்டு களியுங்கள்.

தஞ்சையின் யாழி வீரர்கள்

கடந்த சில மடல்கள் சற்ற ஆழ்ந்த கருத்துக்களை அலசின. இன்று சற்று ஆற அமர சிற்பங்களை மட்டும் பார்ப்போம். மற்றும் நண்பர்கள் திரு பிரசாத் சென்ற மடலில் மிகவும் குறைந்த அளவே படங்கள் இருந்தன என்றும் திரு சதீஷ் அவர்கள் என்னிடத்தே விட்டு சென்ற படங்கள் பல இருந்தும் இன்னும் வெளி வரவில்லை ( திரு சந்திரா அவர்கள் கூட ) புகார் அளித்தார். அலுவல் சம்பந்தமான பயன்களின் காரணமாக பல இழைகள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் கொண்டு வருகிறேன். இவை அனைத்தையும் மனதில் கொண்டு இந்த இழை –

“தஞ்சை யாழி வீரர்கள். ”

யாழி பலர் கண்களில் படாமலேயே போகும் சிற்பம். பல பிரதான இடங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் யாழிகள் இருந்தும் ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அவற்றை திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. அது போல இன்று தஞ்சை பெரிய கோயில் யாழி, விமானத்தை சுற்றி இரண்டு வரிசைகளாக வரும் இந்த யாழிகளின் அழகிய பவனி.

இன்று மேலே இருக்கும் யாழி வரிசையை பார்ப்போம்

இந்த வரிசைகளின் நடுவில் எனது உளம் கவர்ந்த அருள்மொழிவர்மர் அவர்களது கல்வெட்டுகள். பிரம்மாண்டமான தஞ்சை கோயிலின் முன் நிற்கும் போது பலருக்கு பல உணர்ச்சிகள் தோன்றும். பலரும் அதன் பெரிய அளவை கண்டு பிரமிப்பு , வியப்பு – ஆனால் எனக்கோ சொந்த மண்ணிற்கு திரும்பும் உணர்வே வரும்.

சரி சரி, யாழிக்கு வருவோம். மேலே இருக்கும் வரிசைகளை இன்று பார்ப்போம். ( நன்றி சதீஷ். பொருமையாக அருமையான படங்களை எடுத்து அனுப்பியதற்கு )

முதல் பார்வையில் ஒரே சீராகவும், ஒரே சிற்பம் போலவும் இருக்கும் இவை, மிக அழகு. உற்று பாருங்கள் , யாழிகள் , யாழி மேல் இருக்கும் வீரன், எல்லோருமே ஒரு வித உயிர் ஓவியமாகவே இருக்கின்றனர்.

அனைத்து சிற்பங்களும் ஒரே மாதிரி உள்ளனவா, ஒரே சிற்பத்தை மீண்டும் மீண்டும் செதுக்கி உள்ளனரா? இல்லையே !!


வாசகர்களுக்கு சிற்பங்களின் அளவை உணர்த்த சதீஷ் ஒரு தண்ணீர்க் குடுவை அருகே வைத்து படம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு யாழி வீரனும் வெவ்வேறு தோரணையில் இருப்பதை பாருங்கள்


இந்த யாழி வரிசையில் கோடியில் இருக்கும் சிற்பம் இன்னும் அருமை. ஒரு பெரும் யாழி, அதன் வாயில் இருந்து வெளியே வரும் வீரர்கள் …அப்பா , பிரமாதம். இதே போல சிற்பங்கள் பல ,சோழர் கோயில்களில் உள்ளன ( சதீஷ் மற்றும் சந்திரா – புரிகிறது , உங்கள் படங்கள் இருக்கின்றன , விரைவில் இடுகிறேன்




அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்

தஞ்சை பெரிய கோயில் விமான நந்தி, அதன் அளவு – ஒரு அலசல்

தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல செய்திகள் பின்னர் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெளிவு பெற்று உள்ளன – அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது ( விழுகிறது – தினமும் ), அதன் மேல் இருப்பது XX எடை கொண்ட ஒரே கல் ( அது ஒரே கல் அல்ல ) , ராஜ ராஜனுக்கு வந்த நோய் தீரவே அவன் பெரிய கோயிலை நிறுவினான் – என்று பல தவறான கருத்துகளை அண்மைய ஆய்வுகள் தெளிவு பெற உதவி உள்ளன.

பெரிய கோயிலை பற்றிய முதல் காணல் மடலில் நான் இந்த அருமையான இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தை விவாதம் செய்தேன்

http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/arcpho/arph31.jpg

இதோ அந்த படம் – பெரிய கோயில் விமானத்தின் மேல் உள்ள நந்தியின் அளவை கீழே உள்ள பிரகாரத்தில் உள்ள நந்தியின் அளவை கொண்டு விளக்க ஒரு முயற்சி. இது சரியா ?

இந்த கேள்விக்கு பதில் தேட – திரு குடவாயில் பாலசுப்பிரமணியம ஐயா அவரை அணுகிய பொது – இந்த படங்களை தந்து உதவினார் ( அவரை இதுவரை நேரில் பார்க்காதவர்களுக்கு அவரை படத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு ) . மேலும் பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களும் பல படங்களை தந்து உதவினார்.

முதலில் கீழே இருக்கும் நந்தியை பார்போம். அருகில் நிற்பது திரு பாலு ஐயா. இந்த நந்தி ராஜ ராஜன் முதலில் நிறுவிய சிற்பம். நாயக்கர் காலத்தில் அதனை மாற்றி , இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்போது உள்ள நந்தியும் அவர்கள் நிருவியதே. எதனால் இவ்வாறு செய்தார்கள் ? ஒருவேளை மாலிக் கபூர் சூறையாடல் பொது நேர்ந்த சேதம் காரணமோ ?

இப்போது விமானத்தின் மேல் உள்ள நந்தி வரிசை – அதன் அளவை நாம் எப்படி அளப்பது – அதற்கும் திரு பாலு ஐயாவின் படம் இதோ – பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொது எடுத்த படம்.

சாரத்தில் நமக்கு என்றே மனிதர்கள் – அவர்களை கொண்டு நாம் நந்தியின் அளவை அலசுவோம்.

இதன் படி பார்த்தல் கீழே இருக்கும் நந்தி – மேல் உள்ள நந்தியை விட அளவில் பெரியது – அதன் வடிவமும் வேறு பாணியில் உள்ளது.

எனினும் இதனை கொண்டு பெரிய கோயில் விமானத்தின் பிரம்மாண்டமான அளவை நாம் தெரிந்துக்கொண்டோம் – மீண்டும் ஒரு முறை தொலைவில் இருந்து அருகில் சென்று இந்த அற்புத சோழ படைப்பை கண்டு ரசிப்போம்.
14091332144513461423
143228832868

வள்ளி திருமணம் – சோழர் சிற்பம்

திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்ற மடலில் மிக அழகான கேள்வியை எழுப்பினார் . திரு சதீஷ் உதவியுடன் அதே தஞ்சை பெரிய கோவில் சோழர் கால வள்ளி திருமணம் சிற்பம் இப்போது பார்போம் .

சிற்பத்தின் அளவை குறிக்க தண்ணீர் குடுவை ( பாட்டில்) ஒன்றை அருகில் வைத்தோம்.

சிற்பம் சற்று சிதைந்து உள்ளது – அதுவும் முழு கதையை விளக்குமாறு இல்லை. சரி, மேல் இருந்து வருவோம். முதலில் பரண் மீது அமர்ந்திருக்கும் வள்ளியை வம்புக்கு இழுக்கும் கிழவனார். ( கையில் குடை ஏந்தி நிற்க்கும் வேஷதாரி முருகன் )

அடுத்து முருகன் தன் சுய உருவில், தமையன் யானையாக ( யானை குட்டி போல உள்ளது சிற்பம் ) வந்து வள்ளியயை பயமுறுத்தும் கணேசன். ( வள்ளி சிரத்தில் கை வைத்து வணக்கம் கூறும் வண்ணம் உள்ளது ??)

முடிவில் – யானையின் ( இப்போது பெரிய யானை ) மேலே திரும்பி செல்லும் முருகன், வள்ளியோ இரு கைதூக்கி வணங்கும் வண்ணம் உள்ளது சிற்பம்.

அடியில் வள்ளியின் வேடர் குலத்தவர் அணிவகுப்பு. .


அடுத்து இருக்கும் சிற்பம் – மேலே ஒரு பக்தன் மரத்தின் அடியில் , அடுத்து முருகன் நிற்கும் கோலம் அருகில் குடையின் அடியில் அமர்ந்திருக்கும் தேவசேனை ? , முடிவில் முருகன் வள்ளி தேவசெனையுடன் – கீழே மயில் வாகனம். மிக அருமையான சிற்பம்.