பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – முதல் பாகம்

நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் – பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்


சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்


முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

உயிர் சிலை என்றால் என்ன ?

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் – இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.


இந்த கோணத்தில் பாருங்கள் – இப்போது புரிகிறதா ?

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா – விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது


அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.


அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” – அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்

எனது முதல் கண்டுபிடிப்பு ! மூன்று ஸோமாஸ்கந்தர் வடிவங்கள் ஏன் உள்ளன

நண்பர்களே!

இன்று மிகவும் சந்தோஷமான நாள். எனது முதல் கண்டுபிடிப்பு இன்று வெளி வருகிறது. இது தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புகைப்படத்தில் இருந்த வந்ததே என்றாலும், இரண்டு வருடங்களாக இதனை நான் எப்படி வெளியிடுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஏதாவது கருத்தரங்கில் பெரிய பெரிய ஆய்வாளர்களுக்கு முன் இதனை வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. பிறகு தான் புரிந்தது, இவை எல்லாம் எவ்வளவு கடினம் என்று, அது மட்டும் இல்லாமல் அவ்வாறு சமர்ப்பித்த ஆவணங்கள் எத்தனை சான்றோர்களையும், சாமானியர்களையும் ஆன்றோர்களையும் சென்று அடைகின்றன! அதனால், இன்று நண்பர்கள் துணையுடன், இணையத்தில் எங்கள் தளம் தரும் தைரியத்தில், முதல் முதலில் எனது கண்டுபிடிப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பல்லவர்கள் கலை உலகுக்கு செய்த சேவை மிக அரியது. அதனை பற்றி எழுத வேண்டும் என்பதால் மகேந்திர குடைவரைகள் பற்றிய தொடரை துவங்கினேன். அவற்றில் நாம் பல அரியதகவல்களை தெரிந்து கொண்டோம் . இந்தத் தொடரில் மேலும் பல விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பல்லவர்கள் சிற்பக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டில் மிகவும் போற்றப்பட வேண்டியவை அவர்கள் தந்த சோமாஸ்கந்த வடிவம், சிவ கங்காதர வடிவம் மற்றும் மகிஷாசுரமர்தினி வடிவங்கள். அவற்றில் பல்லவ சோமாஸ்கந்த வடிவம் மிகவும் அற்புதமான வடிவம், பிற்கால பல்லவர் ஆலயங்களில் கருவறையில் பின் சுவரில் இந்த அற்புத வடிவத்தை நாம் பார்க்கலாம்.

இந்தப் பதிவு அப்படிப்பட்ட மூன்று சோமாஸ்கந்த வடிவங்களை பற்றியும் அவற்றால் எழும் புதிருக்கு விடையும் பற்றியது. பொதுவாக கருவறை பின்சுவரில் மட்டுமே இருக்கும் இந்த வடிவம் சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தில் வெளியிலும் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தக் குடைவ்ரையே புதிர்கள் நிறைந்த ஒன்று.

பல அறிஞர்கள் வெகுவாக விவாதித்த விஷயம். பார்ப்பதற்கு குடைவரையின் பாணி முற்கால பல்லவர் குடைவரை போல ( தூண்களின் அமைப்பு ) இருந்தாலும் , அங்குள்ள கல்வெட்டில் (அற்புதாமான கல்வெட்டு) ராஜஸிம்ஹ பல்லவன் தான் எடுப்பித்த அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்று தனது பட்டப்பெயர் அதிரணசண்ட (அதி – மிகை , ரண – போர்களம், சண்ட – வல்லவன் ) என்று கூறுகிறது.

மல்லை பற்றி திரு நாகசுவாமி அவர்களின் அற்புதமான பதிவைப் படியுங்கள். ஒரு தவம் போல அவர்கள் பணிகள் நம்மை நெகிழவைக்கும்.

http://tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

வாசகர்கள் இந்த அதிரணசண்ட மண்டபத்தின் அமைப்பையும் மகேந்திரர் கால குடவரைகளின் அமைப்பையும் ஒப்பு நோக்கினால் இன்னும் பல கேள்விகள் வெளி வரும்.

அதற்கு முன்னர், இந்த சோமஸ்கந்தர் என்றால் என்ன? உமையுடனும் கந்தனுடனும் இருக்கும் ஈசன் என்றே பொருள்சரி! முருகன் மட்டும் ஏன், விநாயகர் எங்கே? அதற்கு முந்தைய பதிவான மல்லையில் எங்கும் விநாயகர் இல்லை வாசியுங்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரன் தான் முதல் முதலில் உலோகம், சுதை, செங்கல், மரம் போன்றவற்றை உபயோகிக்காமல் கல்லில் கட்டிய ஆலயம் என்று கூறியதை மண்டகப்பட்டு கல்வெட்டில் பார்த்தோம். அப்போது அவர்கள் இறைவனின் வடிவத்தை சுதை மற்றும் மரத்தில் செய்து வழிபட்டார்கள். இன்றும் பல்லவ கால உத்திரமேரூர் வரதர் ஆலயத்தில் சுதை வடிவங்களை பார்க்கலாம். ஆலயத்தை கல்லில் கட்டிய அவர்கள், மரத்தாலும் சுதையாலும் ஆன விக்கிரகங்கள் மிக விரைவில் அழிந்து விடுவதை கண்டோ, அல்லது அங்குள்ள சிற்பியின் கைவண்ணம் காலத்தால் வளர்ந்ததாலோ, அவற்றையும் கல்லிலே செதுக்க ஆரம்பித்தனர் எனவே பிற்கால பல்லவர் கருவறை சுவரின் பின்பக்கம் சுவரிலேயே சோமாஸ்கந்த வடிவம் செதுக்கப்பட்டது. இவ்வாறு வந்ததே சோமாஸ்கந்த வடிவம். வலது புறத்தில் ஈசன், இடது புறத்தில் உமை, உமையின் மடியில் அல்லது நடுவில் குழந்தை முருகன். இந்த வடிவமும் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பற்றி படிக்க திரு கிபிட் சிரோமொனே அவர்களின் பதிவு

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோழர்கள் இந்த வடிவத்தை வெண்கல சிலைகளாக வடித்து, இந்த வடிவத்தின் பெருமையை இன்னும் பெரிதாக்கினார்.


சரி, மீண்டும் அதிரணசண்ட பல்லவேஸ்வரக்ருஹம் வருவோம், பலருக்கு இன்று நாம் பார்க்கும் மல்லை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணுள் புதைந்து இருந்தது என்பது தெரியாது. (ஆம், புகழ் பெற்ற பஞ்ச பாண்டவ ரதம் கூடத்தான்!) அந்தக் காலத்தில் ( 18 C) இருந்த நிலையை அரிய இந்த புகைப் படத்தை பாருங்கள் ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

இன்று இப்படி காட்சி அளிக்கும் மண்டபமே அது.


சரி, சற்று அருகில் சென்று பார்ப்போம்.

கருவறைக்கு இருபுறமும் இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்கள் உள்ளதை பாருங்கள். பொதுவாக கருவறையில் உள்ளே மட்டுமே இருக்கும் இவை ஏன் இங்கு வெளியில் வந்துள்ளன.

கருவறையினுள் சற்று சென்று பார்ப்போம். சிவ லிங்கத்தின் பின்புறம் அழகிய சோமஸ்கந்தர் வடிவம் உள்ளது.

பின்னர் எதற்காக சிற்பி வெளியிலும் இரண்டு சோமாஸ்கந்த வடிவங்களை செதுக்கினான்

இங்கே தான் எனது கண்டுபிடிப்பு வருகிறது. மண்ணில் புதைந்த மண்டபத்தை வெளிக் கொணர்ந்தவுடன் எடுத்த புகைப் படம் ( மீண்டும் நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி ) என் கண்ணில் பட்டது.

சற்று உன்னிப்பாக கவனியுங்கள். வெளியிலும் இரண்டு சிவ லிங்கங்கள் இருப்பதை பார்க்கிறோம்.

அதனால் தான் சிற்பி அவற்றுக்கு பின்னர் சோமஸ்கந்தர் வடிவங்கள் செதுக்கி உள்ளான். இதுவே எனது கண்டுபிடிப்பு

இந்த லிங்கங்கள் இப்போது எங்கே போயின ? இவை மற்றும் இன்றி இன்னும் இரண்டு சிற்பங்கள் புகை படத்தில் உள்ளன. தலையில்லாத அமர்ந்த கோலத்தில் ஒரு வடிவமும், நிற்கும் கோலத்தில் அழகிய இன்னொரு வடிவமும் காணலாம். சென்ற முறை அங்கு சென்ற பொது இந்த சிதைவுகள் ஒரு ஓரத்தில் இருப்பதை படம் எடுத்தேன்!!

கால ஓட்டம் ஒரு கலைஞனையும் அவன் திறமையயும் அழிக்க நினைத்தாலும், அந்தக் கலைஞனின் சிற்பக் கலையை மட்டும் காலத்தால் அழிக்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். அது பதினெட்டாம் நூற்றாண்டின் நிலை. பின்னர் விளைந்த சிதைவுக்கு யார் பொறுப்பு?

தேவிக்கு யமனின் பரிசு

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது – தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.


கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.

ஸ்ரீ வைகுந்தத்தின் எல்லையை எட்டிவிடும் …

இன்றைக்கு நாம் மீண்டும் மல்லை பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத வடிவம் – திருவிக்ரம அவதாரம். மல்லையின் பெயரோடு கலந்த மாவலி – மஹாபலி சக்கரவர்த்தியையும் பார்க்க போகிறோம்.

மல்லை சிற்பியின் ஆய்ந்த சிந்தனை , அறிவு , பக்தி , கலை திறன் அனைத்தையும் கலந்து செய்த சிற்பம் இது. இதன் அழகை பல கோணங்களில் பார்க்க நண்பர் பலரின் உதவியோடு முயற்சிக்கிறேன். குறிப்பாக பாசுர வரிகளை வாரி தந்த நண்பர் வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.

படங்கள் : பொன்னியின் செல்வன் குழுமத்தின் மல்லை பயணத்தின் பொது திரு வெங்கடேஷ் அவர்கள் எடுத்த படங்கள், மற்றும் எனது சமீபத்திய படங்கள்.

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம்.


சிறிது, வாமன அவதாரக் கதையைப் பார்ப்போம் (நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது…….???????)

மாவலி, இந்திரப் பதவியை அடைய யாகம் ஒன்று செய்கிறான். அந்த யாகம் முடிவடைந்தால், அவனுக்கு இந்திரப் பதவி கிடைப்பது நிச்சயம். முடியும் தருவாயும் வந்துவிட்டது. பதற்றமும் வந்து விட்டது, இந்திரனுக்கு. ஓடுகிறான் நாராயணனிடம். “நாராயணா! நீ தானே சொன்னாய், இந்த மன்வந்தரம் முடியும் வரையில் நான் தான் இந்திரப் பதவியை அடைவேன் என்று. இப்பொழுது பார், மாவலி அதை அபகரிக்க நினைத்து யாகம் செய்கிறான். வெற்றியும் பெற்றுவிடுவான் போலிருக்கிறது. அவனை உடனே கொன்று என் பதவியைக் காத்தருளவேண்டும்” என்று வேண்டுகிறான். அவன் கள்வன் அல்லவா, ஒரு கள்ள்ச் சிரிப்புடன் (இச்சிரிப்பிற்கு அர்த்தம் வேறு) இந்திரனைப் பார்த்து ” இந்திரா! மாவலி என்னுடைய தீவர பக்தன். அவன் நீதி நெறி வழுவாது ஆண்டுவருகிறான். தர்மம் மேலோங்கி நிற்கிறது. பிறகு எக்காரணம் கொண்டு நான் அவனைக் கொல்வது?” என்று வினவ, இந்திரனும் “நாராயணா! அவனைக் கொல்வதும் கொல்லாததும் உன் விருப்பம். ஆனால் என் பதவியைக் காத்தருள்வதாக நீதான் முன்னர் வாக்குக் கொடுத்திருக்கிறாய். ஆக என் பதவியைக் காத்தருளவேண்டியது உன் கடமை” என்கிறான். இதற்கும் ஒரு சிரிப்பு அவன் திருப்பவளச்செவ்வாயில். அவனுடைய நினைப்பு, அதனால் உண்டான சிரிப்பு இவ்வற்றிற்கான காரணம் தான் அவனுக்குக் “கள்வன்” என்ற பெயர் வரக்காரணமாயிற்று.

இந்த கள்ளத்தனத்தை எவ்வளவு அழகாக பல்லவச் சிற்பி வடித்திருக்கிறான் என்று பாருங்கள்………..

முதலில் அந்த “கள்வம்” தான் என்ன? கதையை மேலே தொடர்வோம். நாரணனும், குறளுருவாய், மாவலியின் வேள்விக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் வேண்டும் என்று யாசிக்க, மாவலியும் அதை தாரைவார்த்துக் கொடுக்கிறான். அப்பொழுது அங்கிருக்கும் அசுர குருவான சுக்கிராச்சார்யர், “மால்”-ஆகிய நாரணன் “குறள்”-ஆகி வந்திருப்பதை அறிந்துகொண்டு, மாவலி தானம் செய்வதை தடுக்க முயலுகிறார். மாவலியோ, வந்திருப்பது திருமாலாகவே இருந்தாலும், என்னிடம் யாசித்துவிட்டான், இல்லை என்று சொல்வதற்கில்லை என்று தன் குருவின் வார்த்தைகளை மறுத்து தானம் செய்யப் புகும் பொழுது, சுக்கிராச்சார்யாரும், ஒரு வண்டு உருவெடுத்து, தண்ணீர் வரும் கமண்டலத்தின் துளையில் அடைத்துக்கொள்ள, வாமனனும் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அத்துளையில் உள்ள அடைப்பை நீக்கத் துழாவுகிறார். அது சுக்கிராச்சார்யாரின் ஒரு கண்ணை அழித்துவிட, அவரும் வலி தாளாமல், வெளியே வந்து விடுகிறார். இதைப் பெரியாழ்வாரும்……

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்க திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக் கையனே!அச்சோவச்சோ சங்க மிடத்தானே! அச்சோவச்சோ.
என்று பாடுகிறார்.

உடன் மாவலி தானத்தை செய்து முடிக்க, குறளனும், நெடு நெடுவென்று மாலாகி வளர்ந்து, ஒரு பாதத்தால் இப்பூவலகம் முழுவதையும் அளந்துவிடுகிறார். மற்றொரு பாதத்தால், விண்ணுலகம் முழுவதையும் (எல்லையான தன் இருப்பிடமான வைகுந்தத்தளவும்) அளந்துவிட்டு, மூன்றாம் அடி எங்கே என்றுகேட்கிறார். பிறகு மூன்றாவது அடியாக மாவலியின் தலையில் திருவடிகளை வைத்து அவனை பாதாள உலகிற்கு அனுப்பி, அவன் மாளிகையைக் காவல் காக்கிறான் மால் என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர். இதைக் காட்டும் பெரியாழ்வார் பாசுரம் இதோ

“குறட் பிரமசாரியாய், மாவலியை குறும்பதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை, கொடுத்துகந்த எம்மான்”

மேலே கலவிருக்கை என்றதில், தன்னுடன் கலந்து இருக்கை என்று பொருள்.

இங்குதான் அவன் கள்வம் வெளிப்படுகிறது. “அனைத்துலகும் அவனுக்குச் சொந்தமாய் இருக்க, அவன் மாவலியிடம் மூவடி மண் கேட்டு யாசிக்க, மாவலியோ, அவனுடைய (நாராயணனின்) சொத்திலிருந்து மூன்றடியை ஏதோ தன் சொத்து என்ற நினைப்பில், அவனுக்கு அளிக்க முன் வர, அதையும் தன் பரத்வ ஸ்வரூபத்தைத் தாழ்த்திக்கொண்டு யாசகமாய் பெறுகிறான் “உலகளந்த மால்”. இந்த ஒளித்துக் கொண்டதையே “கள்வம்” என்கின்றனர். அதனால் அவன் கள்வனாகிறான்.

இவ்வாறு குறளுருவாய் (குறள் – சின்ன, குறுகிய) வந்து, மாலுருவாய் வளர்ந்து (மால் – பெரியது) மாவலியிடம் யாசகம் பெற்றதைப் பார்த்த மாவலியின் மகனான நமுசி, திரிவிக்ரமனின் திருவடிகளை, மேலும் அளக்க முடியாதவாறு பிடித்துக் கொள்ள, அவனை தன் திருவடிகளால், வானில் சுழற்றி அடிக்கிறார். இதைப் பெரியாழ்வாரும்……

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவா யென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோவச்சோ வேங்கட வாணனே! அச்சோவச்சோ…
…… என்று பாடுகிறார்.

பல்லவ சிற்பி இக்கருத்தையே இந்த சிற்பத்தில் காட்டுகிறான். கதையில் மல்லை சிற்பி எடுத்த காட்சி – இரண்டாம் அடி எடுத்து வைக்கும் பொது நடந்து நிகழ்வுகள். கீழ் இருந்து மேலே செல்வோம்.

முதலில் காலடியில் இருக்கம் நால்வர்.

அவனுடைய வலது திருவடியில் மாவலியும், திரிவிக்ரமனின் இடது கோடியில், சுக்கிராச்சார்யரும் உள்ளனர். சுக்கிராச்சார்யர் துணியால் செய்யப்பட்ட பூணுலை அணிந்திருக்கிறார். பழங்காலத்தில், துணியாலேயே பூணுல் அணிந்திருந்தனர். ஒன்று, பல்லவர் காலத்திலும் இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது பல்லவ சிற்பி, அவனுக்கும் முந்தைய காலத்தில் இருந்த வழக்கத்தை அதன் பழமையை விளக்க அவ்வாறு சித்தரித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், அவன் கைத்திறனும் அறிவும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

மீதமுள்ள இருவர், மாவலியின் கூட்டாளிகள் போலும். சிற்பியன் கற்பனை பாருங்கள்.அருகில் உள்ள இருவரின் பார்வையும் மாலின் கால் முட்டிக்கு அடியில் தான் உள்ளது. வெளிப்புறம் இருக்கும் இருவரும் சற்று மேலே பார்ப்பதற்கு தலையை தூக்குவது போல உள்ளது. திடீரன எவெரும் எதிர்பாரா வண்ணம் வாமன உருவில் இருந்து பிரபஞ்ச விஸ்வரூப அளவிற்கு அவர் மாறுவதை எவ்வளவு அழகாக காட்டி உள்ளான் சிற்பி. அதிலும் ஒரு படி தாண்டி, வெளியில் இருக்கும் அவர்கள், திடுக்கிட்டு பயந்து ஓட விழைகுமாரு செதுக்கிய வண்ணம் அபாரம்.

சற்றே மேலே பார்கையில், இடது புற இடுப்பிற்கு அருகில் ஒரு உருவம், வலது புறம் இன்னும் கொஞ்சம் மேலே இன்னொரு உருவம் – இருவரும் பறப்பது போல உள்ளது. . யார் இவர்கள். இருவரையும் சுற்றி ஒரு வட்டம் உள்ளது பார்த்தீர்களா ?


வளரும் பெருமாள் சந்திர சூரியரையும் தாண்டி செல்லும் காட்சி இது – இடது புறம் இருப்பது சந்திரன்.வலது புறத்தில் அவரை விட சற்று உயரத்தில் சூரியன் ( ஆஹா, இதில் எந்த பக்கத்தில் சூரியன், எந்தப் பக்கத்தில் சந்திரன் என்ற குழப்பம் வராமல் இருக்க, வலது புறத்தில் சூரியனைச் சற்று மேலேயும், இடது புறத்தில் சந்திரனை, சற்றுத் தாழ்த்தியும் – நிலவை சற்று சிரியாதாகவும் சித்தரித்துள்ளான்.). அதாவது அவ்விரு மண்டலங்களையும் தாண்டி அளந்தான் என்று குறிக்க இந்த உக்தியை கையாண்டுள்ளான் இந்த அற்புதச் சிற்பி.

இடது புறம் ஒரு மனிதர் வினோதமான முறையில் சித்தரிக்க பட்டுள்ளார். யார் இவர்.

சிலர் இவரை திரிசங்கு ( வானுக்கும் மண்ணுக்கும் நடுவில் விஸ்வாமித்ரரால் சொர்க்கம் அமைக்கப்பட்டு இருப்பவர் – ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை ) யாரோ எட்டி உதைத்தால் எப்படி விழுவாரோ – அதுபோல உள்ளார். ஆஹா இவன் தான் மாவலியின் மைந்தனான நமுசி. இவனைப்பற்றிய ஆழ்வாரின் குறிப்பை மேலே பார்த்தோம். மன்னு நமுசியை வானில் சுழற்றிய தனது தந்தைக்காக இடையே வந்த அவனை இவ்வாறு உதைத்ததாகவும் அதனால் அவன் விண்வெளியில் ஏவப்பட்டதாகவும் இன்றும் அவன் ஒரு கொளாக ( செயற்கைகொள் ?) சுற்றுகிறான் !

சரி இன்னும் மேலே போவோம்……..

இதோ விண்ணளந்த அவன் இடது திருவடியைப் ப்ரம்மா பாதபூஜை செய்கிறார் பாருங்கள். ப்ரம்மனின் மற்றொரு கை பரமனின் விண்ணைச் சுட்டும் விரலைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். என்ன ஒரு நேர்த்தி அச்சிற்பியின் கைவண்ணத்தில்.

ப்ரம்மாவுக்கும் நாரணனுக்கும் நடுவில் மிருதங்கத்தோடு இருப்பவர் தும்புரு. இது ஒரு அழகான குறிப்பு. தும்புரு என்பவர், வைகுந்த்தில் நாரணனின் பக்கத்திலேயே இருக்கும் நித்யசூரிகளில் ஒருத்தர். அவரை இங்குக் காட்டியதால், அவன் (எல்லையான) தன்னுலகையும் அளந்துவிட்டான் என்பதைக் குறிக்கிறான் சிற்பி.

திருமங்கை ஆழ்வாரின் அற்புத வரிகள் இதை எப்படி வர்ணிக்கின்றன

ஒண்மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து அண்ட மீது போகி
இருவிசும்பின் ஊடு போய் எழுந்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித
தாரகையின் பறம் தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

ப்ரம்மனுக்கு நேரே திரிவிக்ரமனின் வலது புறத்தில் பரமசிவனாரையும் வடித்து, அண்டம் முழுதும் அளந்த அவனுடைய பரிமாணத்தைக் விளக்கியிருக்கிறான் சிற்பி.

சரி, இப்பொழுது, இக்குடவரையின் நாயகனான திரிவிக்ரமனை கவனிப்போம். சிற்பியின் கைவண்ணத்தை என்னென்பது?

ஒருகாலில் அவன் நிற்கும் வடிவின் அழகை செதுக்கிய அழகுதான் என்னே! ஒரு நேர் கோட்டில் திருமுகத்துடன் திருவடியை செதுக்கிய அற்புதம்தான் என்னே.

வலது கரத்தில் ப்ரயோகச் சக்கரமும்,

அதன் கீழ்க் கரத்தில் குறுவாளும்,

அதற்கும் கீழ்க்கரத்தில் பெருவாளும்,

இடது கரத்தில் சங்கும்,

அதன் கீழ்க்கரத்தில் கேடயமும்,

மற்றொரு கரத்தால், சார்ங்கம் என்ற வில்லையும்

பிடித்துக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். மேலும்…. பல்லவ சிற்பியின் கை மற்றும் கலைத்திறனுக்கு முத்தாய்ப்பாக, அவன் திரிவிக்ரமனின் விண்ணளக்கும் திருவடியை, அதை சுட்டும் கரத்தின் பின் மூன்றாம் பரிமாணத்தில் காட்டியிருக்கும் அழகைப்பாருங்கள்.

பல்லவ சிற்பிகளின் தனித்தன்மைகளில் ஒன்று இந்த மூன்றாவது பரிமாணத்தின் நேர்த்தி. ஒரு சிறிய படத்தின் மூலம் அதனை காண்கிறோம் .

மாலின் நாபி- அற்புதம். ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறு உளியின் தாக்கம் நம்மை மயக்கும் பாவம்.

சரி இதற்கு மேல் அளக்க ஏதுமில்லை ஆதலால் மூன்றாவது அடி எங்கே என்று கேட்க்கும் வகையில் திரிவிக்ரமனின் வலது கையை அமைத்துள்ளான். ஸ்ரீ வைகுந்தத்தின் எல்லையைக் குறிக்கும் விதமாக, குடவ்ரையின் மேல் சுவரை குறிக்கிறான் அச்சிற்பி ( ஒரு காலை மேலே வீசி நிற்கும் அவர் மிக எதார்த்தமாக மேல் சுவரை பிடிப்பது போலும் ) ஆஹா….. அவன் கைவண்ணம்தான் அழகோ அழகு.

ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை

திரு K P. உமாபதி ஸ்தபதியுடன் நம் நண்பர் திரு சதீஷ் உரையாடியதன் விளைவுதான் இந்தப் பதிவு.. உரையாடலின் போது அவர் நம்முடன் பகிர்ந்ததை வைத்து ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை ,அதில் அவர் எதை , எவற்றை எப்படி எல்லாம் ரசிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் முயற்சி.

மல்லை படங்கள் திரு ஸ்ரீராம், அசோக் , மற்றும் எனது சமீபத்திய பயணத்தில் எடுத்தவை – கம்போடிய சிற்பங்கள் திரு கோகுல் ( சிங்கப்பூர் நண்பர் – கிரிக்கெட் ரசிகர் ).


பல முறை நாம் பார்த்த வடிவம்தான் இந்த வராஹ சிற்பம், நாம் முன்னரே பாசுரங்களையும் வைத்து அலசியது என்றாலும் (( பாசுரங்களையும் வைத்து அலசியது))இப்போது ஒரு புதிய பார்வையில் பார்க்கிறோம், இல்லை படிக்கிறோம்

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம். அதுவும் அசோக் உதவியுடன் சிற்ப நுணுக்கங்களை விளக்கு போட்டு பார்ப்போம்.


புரிகிறதா ? மல்லை சிற்பி ஒரே சிற்பத்தில் எத்தனை எத்தனை விதமான கை வடிவங்களை உயிரோட்டத்துடன் கருங்கல் குகையில் செதுக்கி நமக்கு அவனது ஆற்றலை காட்டுகிறான் பாருங்கள்.

பட்டியலிட்டு ஒன்றொன்றாய் பார்ப்போம். பொறுமையாகப் பாருங்கள். செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருவமும் ஒரே அளவில் இல்லை, எனினும் ஒரு குறிப்பிட்ட உருவத்தின் அளவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையானவை.

3884388838913903390639103908391239153918392039223924392739293932
இன்னும் முடியவில்லை. என்னடா கைகளை கட்டி விட்டு கடைசியில் இரண்டு கால்களா என்று பார்க்கிறீர்களா? . முக்கியமான படங்கள் – முடிவில் வந்த இரண்டு படங்கள்.


பல்லவ சிற்பிகளின் அற்புத திறனை அங்கோர்வாட் சிறப்புடன் ஒப்பு நோக்கும் ஒரு முயற்சி.

நண்பர் கோகுல் அவர்களுக்கு நன்றி – அங்கோர்வாட் அழகிகளுக்கும். பல்லவ சிற்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் – சம்பந்தம் இல்லை, வேற்றுமை. கண்டு பிடியுங்கள் பார்ப்போம். குனிந்து பாருங்கள்.

சரி படத்தை பாருங்கள். கால்களை பாருங்கள்.

ஒரு ஓவியத்தை தீட்டும் போது நாம் ஒரே பரிமாணத்தில் கொண்டு வருவது போல அவர்கள் சிற்பத்தையும் செதுக்கி உள்ளனர். ஆனால் பல்லவ மகா கலைஞனோ நேரில் நிற்கும் பாணி என்ன ஒருவர் திரும்பி சுவரை பார்க்கும் பாணியை கூட கால்களில் கொண்டு வந்து விட்டான்.

மேலும் சில படங்கள் – உங்கள் ரசனைக்கு

கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – திரு குடவாயில் பாலசுப்ரமணியம்

திரு பாலசுப்ரமணியம் அவர்களின் – கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – என்ற அற்புதமான பதிவை கண்ட நாள் முதல் அதனை இணையத்தில் அனைவரும் ரசிக்க இடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் மூலம் இது இன்று வெளிவருகிறது. திரு சதீஷ் பொறுமையாக முழு பதிவையும் தமிழில் மீண்டும் இந்த தளத்தில் அடித்து தந்ததற்கு நன்றி.

பல்லவப் பேரரசர்கள் தமிழகத்திற்கு விட்டுச் சென்ற கலைக் கருவூலங்கள் மிகுதியாகவுள்ள இடங்கள் வரிசையில் தலையாய இடம் பெற்று விளங்கும் ஊர் கடல் மல்லை எனப்பெறும் மகாபலிபுரமாகும். சிறுசிறு குன்றுகளைக் குடைந்து உருவாக்கிய ஐந்து இரதங்கள்,

தரையில் கிடந்த பறையை கிடந்தகோல திருமாலாகச் செதுக்கி அவருக்கென அங்கு கோயில் எடுத்து அக்கோயிலின் இருமருங்கும் இரண்டு சிவாலயங்களை இணைத்து எழுப்பிய கடற்கரைக் கோயில்,

ஊருக்கு நடுவே கம்பீரமாகத் திகழும் குன்றமொன்றில் குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் என எவ்வாறெல்லாம் கோயில்களைத் தோற்றுவிக்க முடியுமோ அவ்வண்ணம் கடல் மல்லையைக் கலைப் பெட்டகமாக மாற்றிய பெருமை அத்யந்தகாமன் என்ற பட்டம் சூடிய இராஜசிம்ம பல்லவனுக்கே உரியதாகும்.

உலக கலை வல்லோரை தன்பால் ஈர்த்து நாளும் மயங்க வைக்கும் தனிச்சிறப்பு மல்லைக்கு உண்டு. தூங்கானை மாடம் என்றும் கஜப்பிரிஷ்டம் என்றும் கோயிற் கட்டடக் கலை வல்லோர் குறிப்பிடும் யானை உடல் வடிவில் திகழும் கோயிலொன்றை பாறையிலிருந்து செதுக்கி எடுத்து அருகிலே அதனை ஒத்த யானை உருவத்தையும் அமைத்து அதன் சிறப்பைக் காட்டும் நுட்பத்தை இங்குமட்டுமே காணலாம்.

புலிவாயில் அரங்க மேடையி அமைத்துக் காட்டி அங்கு அரம்பையர்களை ஆடச்செய்து அழகு கண்ட புலிக்குகையும் மல்லையின் தனி முத்திரையாகும்.

மாமல்லையின் குன்றத்தை (சிறுமலையை) குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் மட்டும் அணி செய்யவில்லை. அங்கு பாறைகளின் பக்கவாட்டில் சிற்பங்கள் அணி அணியாகச் செதுக்கி ஊரையே கலைக்கூடமாக மாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம் விண்ணக கங்கை அக்குன்றத்தின்மேல் இறங்கி ஆறாக ஓடி பாதாள உலகம் சென்றடையும் காட்சி செதுக்கப்பெற்று காணப் பெறுகின்றது. இங்குள்ள காட்சியை பகீரத தவக்காட்சி எனக் குறிப்பர். அக்குன்றத்தின் மேல் பொழியும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கால்வாயாக ஓடி வந்து பிதுக்கம் பெற்ற இரு பாறைகளுக்கு இடையே கீழே இறங்கும். அந்த இடத்தை தேர்வு செய்து பகீரதனின் தவ ஆற்றலுக்காக வானத்து கங்கை மண்ணகத்துக்கு இறங்கும் காட்சியை செதுக்கியுள்ள அந்த மகாசிற்பியின் கற்பனை ஆற்றலுக்கு ஈடாக எதையும் கூற முடியாது.

இச்சிற்பக் காட்சிப் பகுதியை பாதுகாக்க முனைந்தவர்களுக்கு அங்கு சித்தரிக்கப்பெற்ற புராணக் காட்சியின் பின்புலம் தெரியாத்தாலும், அந்த மகா சிற்பியின் மகோன்னதம் புரியாத்தாலும் மழைநீர் வந்து இறங்கும் இட்த்தில் செங்கற்களால் தடுப்பினை ஏற்படுத்தி பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள். தடுப்பு இல்லாமல் மழைநீர் இறங்கும்போது அங்கிருந்தவாறு அக்காட்சியைக் காண்போமானால் கங்கைப் பேராறு ஆர்ப்பரித்து விண்ணகத்திருந்து இறங்குவதையும், அதன் கரையில் கானகங்கள் உள்ளமையையும், வேட்டுவர்களோடு விலங்குகளையும், பறவைகளையும், வானவர்களையும், கந்தர்வர்களையும், மனிதர்களையும், கோயில்களையும் காண்பதோடு பாதாளலோகத்திருந்து நாகர்கள் நீரில் மேல் நோக்கி வருவதையும் உயிர்ப்போடு காணலாம். கலாரசிகர்களுக்கு அக்காட்சி பேரின்பம் பயப்பதாகும்.

கங்கை பேராற்றுக்கு குறுக்காக கல்தடுப்ப் செய்தது போன்று அங்கு நிகழும் மற்றொரு மகோன்னத சிற்பக் காட்சியை மண்டபம் எடுத்து மறைத்து விட்டார்கள். விஜய நகரப் பேரரசு காலத்தில் இது நிகழ்ந்தது. பக்திப் பெருக்கும்பார்வையை மறைத்ததால் இக்காட்சியின் சிறப்புக்கு ஊறு விளைந்தது. இருப்பினும் மண்டபத்துள் சிக்கியுள்ள மாண்புறு இக்காட்சியின் நுட்பச் சிறப்பை நுகர வேண்டுமாயின் கண்ணனின் வரலாற்றையும், ஆழ்வார்களின் பாசுரக் கூற்றையும் அறிந்து திளைத்து பின்பு சிற்பங்களை காண வேண்டும்.


கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியின் மக்கள் இந்திரவிழா கொண்டாடியபோது மந்திர விதிப்படி பூசனைகள் செய்யாததால் வெகுண்ட வானவர் தலைவனான இந்திரன் கோபமுற்று ஆயர்பாடி அழியுமாறு கல் மழையினைப் பெய்யச் செய்தான். ஆநிரைகளும், ஆயர்களும், ஆய்ச்சியரும் செய்வதறியாது அலறி ஓடிய போது, கண்ணபிரான் அங்கு வந்து அங்கிருந்த கோவர்த்தனம் என்னும் மலையைக் கையால் எடுத்து தலைக்குமேல் உயர்த்தி குடையாகப் பிடித்தான். அம்மலையோ கல்மாரியைத் தாங்கிக் கொண்டு ஆயர்பாடியை காத்து நின்றது. கண்ணன் வந்து கொற்றக் குடையாக கோவர்த்தன மலையை பிடித்தவுடன் அஞ்சி ஓடிய ஆயர் பாடி மக்கள் அமைதியுற்றனர். கல்மாரி கடுமையாகப் பொழிந்தாலும் கண்ணனுடைய கருணையினால் பசுக்கள் மகிழ்ச்சியுற்று பால்பொழிந்தன. கன்றினை நக்கி கனிவைக் காட்டின. ஆயர் மகளிரோ குழந்தைக்கு அமைதியாக பால்கொடுக்கத் தொடங்கினர். ஆய்ச்சியர் வெண்ணை கடந்து மோர் தூக்கிச் செல்லலாயினர். ஆயர்களோ பால் கறக்கத் தொடங்கினர். அவரவர் பணி அமைதியாக நடைபெறலாயிற்று. அன்று கண்ணன் குடை பிடிக்கவில்லை என்றால் கல்மாரியால் ஆயர்பாடியே அழிந்திருக்கும்.

பாகவதம் புகழும் இவ்வரலாற்றை திருமங்கையாழ்வார்,

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தம் ஓடின ஆநிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே

என்ற அழகு தமிழ் பாசுரமாகப் பாடியுள்ளார். இதே செய்தியினை பெரியாழ்வார், ” ஆயனார் கூடி அமைந்த விழாவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை” என்று குறிப்பிட்டுள்ளார். திருமங்கை மன்ன்னோ மீண்டும்,

கடுங்கால் மாரி கல்லே பொழிய, அல்ல
எமக்கு அன்று
கடுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச
அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாம்ம் நமோ
நாராயணமே

என்ற பாடல் வழி கல்மாரிப் பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கியுள்ளார்.

ஊரின் நடுவண் திகழும் மாமல்லை குன்றத்தின் கீழ்த்திசையில் பக்கவாட்டு பாறையில் ஒரு நீண்ட சிறபத்தொகுதி காணப்பெறுகின்றது. எழிலுறு அக்காட்சிக்கு முன்பாக கற்தூண்களை நட்டு மண்டபமொன்றினை பிற்காலத்தில் எடுத்துள்ளனர். இம்மண்டபம் அச்சிற்பங்களை காப்பதற்கென எடுக்கப் பெற்றிருந்தாலும், அச்சிற்பங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை மறைப்பதாகவே உள்ளது. விஜய நகர அரசு காலத்தில் எடுக்கப்பெற்ற இம்மண்டபத்திற்குச் சற்று தள்ளி எதிர்திசையில் நின்றவாறு நம் மனக் கண்களால் அம்மண்டபத்துத் தூண்களையும், கூரையையும் அகற்றிவிட்டு உள்ளே தெரியும் காட்சியை உற்று நோக்குவோமாயின் நெடிதுயர்ந்த கண்ணபிரான் தன் இடக்கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி மாமல்லை குன்றத்தை தாங்கி நிற்பது தெரியும்.




அருகே பலராமன் கைகட்டி நிற்கும் முதியவரான ஆயர் ஒருவரின் தோளில் கைவைத்து பரிவோடு அணைத்து நிற்பார். குன்றத்தை தூக்கி நிற்கும் கண்ணபிரானைச் சுற்றி ஆயர்பாடியே அங்கு காட்சியளிக்கும். பின்புலம் முழுவதும் பசுக் கூட்டங்கள், கம்பீரமான காளை ஒன்று அங்கு நிற்க கன்றுகளும், காளைகளும் சுற்றி நிற்கின்றன.

அழகிய கொம்புகளுடன் திகழும் பசு ஒன்று தன் கன்றின் முதுகில் நாக்கினால் நக்கி தாய்மை உணர்வை வெளிப்படுத்த ஆயன் ஒருவன் அதன் மடி சொறியும் பாலை பாத்திரமொன்றில் கறக்கும் காட்சி ஒருபுறம். ஆய்ச்சியர் மகள் ஒருத்தி தன் குழந்தைக்கு பாலூட்டுகின்றாள். அங்கு நிற்கும் ஆயனொருவன் குழலொன்றினைக் கையில் ஏந்தி அமுத கீதம் இசைக்கின்றான்.


ஆயர் குலப் பெண் ஒருத்தி தலையில் ஓலைப் பாயை சுருட்டி சுமந்தவாறு, தன் வலக்கரத்தில் தயிரும், வெண்ணையும் உள்ள பானைகள் கொண்ட உரியைப் பிடித்தவாறு செல்கின்றான்.

ஆயனொருவன் கைக் குழந்தையை முதுகில் சுமந்த வண்ணம் நீண்ட கோலுடன் செல்ல அவன் மனைவியோ சிறுபிள்ளை ஒருவன் கரம் பற்றியவாறு மோர்க்குடங்களை தலையில் சுமந்து செல்கிறாள்.

கோவர்த்தனகிரியை குடையாகத் தூக்கிப் பிடிக்கும் கண்ணனைச் சுற்றி ஆயர்குலப் பெண்கள் நின்றவாறு வியந்து அவனை நோக்குகின்றனர். கடுமையான கல்மாரி பெய்து கொண்டிருக்க கடுகளவும் கவலையில்லாமல் ஆயர்பாடி மக்கள் மகிழ்வோடு அவரவர் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

பசுக்களும் காளைகளும் மகிழ்வோடு திரிகின்றன. கல்மாரியை நோக்கி மலை குடையிலிருந்து வெளியே செல்ல முற்படும் ஆயன் ஒருவன் கரத்தை அவன் மனைவி பற்றி உள்ளே இழுக்கும் காட்சியும் அங்கு ஒருபுறம் இருப்பதைக் காணலாம்.

மாமல்லை குன்றத்தையே கோவர்த்தன மலையாக மாற்றிக் காட்டி இருக்கிறான் பல்லவனின் சிற்பி. இக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கியவாறு ஆழ்வார்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். தன் ஐந்து விரல்களை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் இக்காட்சியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும், அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும் விளங்க அதன் மேல் மலை கவிழ்ந்து குடையாக இருப்பதிஅக் காண்கிறார். இதனை,

செப்பாருடைய திருமாலவன் தன்
செந்தாமரைக்கை விரல் ஐந்தினையும்
கம்பாக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பாகக் கொடுத்து கவித்த மலை

என்று பாடுகின்றார். இப்படி கண்ட பெரியாழ்வார்க்கு மேலும் ஒரு காட்சி புலப்படுகின்றது. கண்ணபிரான் விரல்களை விரித்து அம்மலையைத் தாங்கும் காட்சி ஆதிசேடன் தன் ஐந்து தலைகளை படமாக விரித்து அதன் மேல் பூமியை தாங்குவதுபோல் தோன்றிற்று. அதனை,

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்

என்று “கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே” என்ற ஈற்றடி வருமாறு பாடிய பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லை சிற்பக் காட்சியில் ஆநிரைகளோடு குழந்தையைத் தோளில் சுமந்த ஆயன் ஒருவன் செல்ல அவன் பின்னே சிறுவன் ஒருவனுடன் மோர்ப் பானையை தலையில் சுமந்து தாய் ஒருத்தி செல்லுதலும், அருகே ஆயர்பாடி பெண்கள் கண்ணனைச் சூழ்ந்து நிற்பதையும் காணும் போது,

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார்
காற்றானிரப் பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி யிளங் கன்னி மார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க் கென்றும் உகப் பனவே செய்து
கண்டார் கழறித் திரியும்
ஆயா உன்னை யறிந்து கொண்டேன் உனக்
கஞ்சுவன் அம்மம் தரவே

என்ற பெரியாழ்வாரின் பாடல் பல்லவ சிற்பியின் உள்ளத்தை உருகச் செய்திருக்க வேண்டும் என்பது அறியலாம்.

ஆயர்பாடியின் அழகையும், குன்றமெடுத்து கல்மாரி தடுத்த கோபாலனின் தோற்றத்தையும் கண்முன் நிறுத்திய பல்லவ சிற்பி இக்காட்சி மூலம் தொண்டை மண்டலத்து மரபுவழி வந்த அம்மண்ணுக்குரிய கால்நடைகளின் உருவ அமைப்பை உலகம் உள்ளளவும் நிலையாகப் பதிவு செய்துவிட்டான். தமிழகத்தின் மண்ணுக்குரிய கால்நடை இனங்கள் மறைந்து வரும் இந்நாளில் இத்தகைய சிற்ப்ப் பதிவுகள் எதிர்கால சந்ததிகளுக்கு மரபுப் பெருமையை நிச்சயம் உணர்த்தும்.

( ஒரு பக்கம் மனித முகத்துடன் சிங்கம், கழுகு முகத்துடனும் ஒன்று )


படங்கள் – நன்றி – பிலிக்கர் நண்பர்கள், குறிப்பாக லக்ஷ்ணி பிரபால, மற்றும் பிரிட்டிஷ் நூலகம்

இந்த சிற்பத்தை செதுக்க உத்வேகம் என்ன – பல்லவ மல்லை – எனது விளக்கம்

இந்த சிற்பத்தை நாம் முன்னர் பார்த்த போது ஒரு கேள்வி கேட்டேன். இந்த சிற்பத்தை செதுக்க சிற்பிக்கு என்ன உத்வேகம்? இது ஒரு தனித்தன்மை வாய்ந்த சிற்பம். ஏனெனில் மல்லையில் பல இடங்களில் மிருகங்கள் மற்றும் பறவைகள் மிக அருமையாக செதுக்கிய சிற்பி – தவம் சிற்பத்தில் ஒரு முழு காட்டையே செதுக்கிய சிற்பி, கோவர்தன சிற்பத்தில் மாடுகள் – என்று பலவை இருந்தும் அவை அனைத்தும் புராண கதைகள் மற்றும் தெய்வங்களை ஒட்டியே வந்தன. இந்த சிற்பத்தில் உள்ள விசேஷம் – இது ஒரு சாதரண காட்சி.

இதை வடிக்க எந்த மன்னனும் ஊதியம் அளித்திருக்க மாட்டான். அதே போல இது ஒன்றும் ஒரு இரவில் கிறுக்கிய சித்திரம் அல்ல. பல மாதங்கள் கை வலிக்க , நெற்றி வியர்வை சிந்த, கருங்கல்லை செதுக்கும் வேலை. அப்படியானால் , இதில் அவன் வேறு எதாவது நமக்கு சொல்ல வருகிறானோ ?

சரி மீண்டும் சிற்பத்தை பார்ப்போம்

ஒரு மகிழ்ச்சி ததும்பும் யானைகளின் குடும்பம் – அதிலும் சின்ன யானையின் கவலை இல்லா வேடிக்கை விளையாட்டு
297729862979
ஒரு அழகு மயில்

ஒரு குரங்கு – குரங்கின் பார்வையில் எதோ ஒரு தேடல் ,ஒரு ஏக்கம். மற்ற மிருகங்களை போல அல்லாமல் அது வெளி பக்கமாக திரும்பி வருபவரை நோக்கி உள்ளது.
297029772989
சரி, இதற்கு ஒரு விளக்கம் தந்து பார்ப்போம்

சிற்ப கலை ஒரு அற்புத கலை – அதை எளிதில் கற்க முடியாது. சிறு வயதில் இருந்தே மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டு படித்தாலும், ரத்தத்தில் கலை உணர்வு, நினைவில் இறை உணர்வு என்று பல சரியாக அமைய வேண்டும். அப்படி இருக்கையில் சிறு வயதிலேயே சிற்பி தனது அனைத்து ஆசைகளையும் கட்டுப்படுத்தி தன் சிந்தனை முழுவதையும் ஒருமுக படுத்தி கலையில் ஈடு பட வேண்டும். அவனுக்கென்று ஒரு குடும்பம் , தாய் , தந்தை, தமையன், தாரம் இருந்தாரோ , இல்லையோ – அவன் பணி – கலை பணி

அப்படி இருந்த அவன் ஒருநாள் சற்று தன் நிலைமையை நினைத்து பார்க்கிறான். இப்போது சிற்பத்தில் உள்ள குரங்கு தான் அவன். யானை குடும்பம் – அவன் அனுபவிக்காத சுகம். மயில் அவனது காதலி / துணைவி – அனைத்தையும் துறந்து கலைக்கு தன்னை அர்ப்பணித்தான் சிற்பி. எனினும் அடி மனதில் ஒரு நெருடல் – என்ன அது ?

இப்போது மீண்டும் குரங்கை பாருங்கள் ! அது உங்களை பார்த்து சிற்பி கேட்கும் கேள்வியின் பிரதிபலிப்பு என் தியாகத்தின் விளைவு இந்த சிற்பம்! இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன – அவன் துறந்த மகிழ்ச்சிக்கு அவன் உருவாக்கிய அழியா சிற்பங்கள் ஈடா ?
29722989

இந்த சிற்பத்தை செதுக்க உத்வேகம் என்ன – பல்லவ மல்லை

மல்லையில் சிற்பங்களை செதுக்கி நம்மை மனம் கிறங்க வைத்த அந்த சிற்பிகளின் கூரிய ஞானம் இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை இன்னமும் ஆச்சரியமான ஒன்றுதான். ஒவ்வொரு சிற்பியும் ஒருவகையில் தன் கூரிய ஞானத்தை அற்புதமான வகையில் எங்காவது ஒரு சிற்பத்திலாவது காண்பித்துவிடுவான். ஒவ்வொரு சமயம் அந்தக் கூரிய ஞானமானது வழக்கமான இறை உருவத்தினின்றும் திசை மாற்றி அவனையே இழுத்துச் சென்று வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் போலும். ஆனால் அங்கும் அவன் ஒரு அற்புதத்தை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.

அப்படிப்பட்ட ஒரு அருமையான பரிசுதான் – மல்லையில் திருமூர்த்தி குகைக்கு பின்னால் இந்த அதிசய சிற்பத்தை வடித்துள்ளான்.





ஆண் யானையின் பிரம்மாண்ட வடிவம், அதன் பின்னே எட்டிப் பார்ப்பது போல பெண் யானையின் தலை, அந்த ஆண் யானையின் கீழே தன் தும்பிக்கையால் மண்ணைக் கிளறிக் கொண்ட்இருக்கும் ஒரு மகவு யானைக்குட்டி, இன்னொரு பக்கத்தில் (தலைஇழந்த நிலையில்) இன்னொரு குட்டி யானை. சரி.. அந்த பெரிய ஆண் யானையை சற்று உற்றுக் கவனியுங்களேன். எங்கள் குடும்பத்துக்கு நான் தான் தலைவனாக்கும் என்பது போல ஒரு பெருமையில் நிற்பதும். ‘நானும் இங்கேதான்.. தாய்தான் தலைவியாக்கும்’ என்பது போல அந்த பெண் யானை எட்டிப் பார்ப்பதும்.. எத்தனை பெரியவர்களாய் இருந்தால் என்ன, எங்களைப் போல விளையாடத் தெரியுமா’ எனக் குறும்பாகக்கேட்பது போல குட்டிகள்.

ஆனால் அந்த யானைக் குடும்பத்திற்கு மேலே – ஒரு அழகு மயிலையும் அருகேயே ஒரு குரங்கையும் செதுக்கி இருக்கும் அந்தக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே உயிர் குரங்கு சிலையாய் மாறியது போல உள்ளது. பல்லவ சிற்பி ரசவாதம் தெரிந்தவனோ? அல்லது மந்திரவாதியோ ? உயிருடன் இருப்பவரை கல்லுக்குள் சிக்க வைத்து விடுவானோ ?

சரி.. யானைக் குடும்பத்திற்கும் மயிலுக்கும் குரங்குக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அங்கே குரங்கை செதுக்கினான்.. அழகு மயில் மூலம் அவன் என்ன சொல்ல வந்தான்..

அதெல்லாம் சரி!. இப்படியும் ஒரு சிலை செதுக்கவேண்டும் என ஏன் அந்த சிற்பி சிந்திக்கவேண்டும்..ஒரு ஓவியன் உதிக்கும் சூரியனை பாத்தவுடன் சித்திரம் தீட்டுகிறான், புலவன் காதலியின் கயல் விழியை கண்டதும் கவிதை இயற்றுகிறான்….ஆனால் இந்த கலைஞனோ சிந்தனையுள் உதித்த இந்த சிற்பங்களுக்காக எத்தனை இரவு பகல் செலவழித்தானோ..ஏன் பலநாள் இந்த சிற்பத்துக்காக முனைய வேண்டும்.. புதிர்தான்.. புதிரை நம்மிடமே நிரந்தரமாக விட்டுவிட்டான் போலும்

படங்கள் : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் – திரு ஸ்ரீராம் மற்றும் வெங்கடேஷ்

மீண்டும் நமது நண்பர் – புலி தொப்பை, ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில்

நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்

அங்கே பல அற்புத சிற்பங்கள் இருந்தும் இன்று சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு மகர தோரணம், அதில் நம் நண்பர் புலி தொப்பையை மீண்டும் சந்திப்போம்.

அருமையான இரு கன்னியர் சிற்பம் – ( அவர்களை அடுத்து வரும் மடல்களில் பார்ப்போம் ) – நடுவில் சற்று மேலே மகர தோரணம். படத்தை பாருங்கள்.

எங்கெங்கும் சிற்பங்கள் – அப்பப்பா, இந்த சிறிய இடத்தில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடு! மகர யாளிகள் – அவற்றின் வாயில் இருந்து வெளி வரும் சிங்க யாளிகள், அவற்றின் மேல் வாளேந்திய போர் வீரர்கள் , ஒருவருடன் ஒருவர் போர் புரிந்து கொண்டு உள்ளவாறு செதுக்கப்பட்ட விதம் அருமை .

சிற்பத்தின் நடுவில் பூமாதேவியை காப்பாற்றிய வெற்றி பரவசத்தில் வராஹ மூர்த்தி, நான்கு கரங்கள் – மேல் இரண்டில் சங்கு , சக்கரம் , பூமாதேவியின் பக்தி நிலை – இரு கரம் கூப்பி , அவர்களை ஆசை அன்புடன் மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி, அத்துடன் நிறுத்தவில்லை சிற்பி ( மல்லை மற்றும் உதயகிரி வடிவங்கள் பார்த்தோம் அல்லவா ) – அவற்றை போலே இந்த சிறு சிற்பத்திலும் அவன் வராஹ மூர்த்தியின் கீழே நாகராஜன் மற்றும் நாகராணியை செதுக்கி உள்ளான்.

அவரைச் சுற்றி பூத கணங்கள் – எருமைத்தலையுடன் ஒரு பூதம் – அடுத்து நம் நண்பர் புலி தொப்பை – ஆள்காட்டி விரலால் வாயை இழுத்து முகம் காட்டும் வண்ணம் மிக அருமை. இங்கு புலி தொப்பை கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. இவர் புள்ளமங்கை கோயிலிலும் வருவார். இது போல வேறு இடங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் இவர், யார் அந்த எருமை தலை – இவர்களுக்கு பெயர் உண்டா?

ஒரு அற்புத சிற்பத்தை நமக்கு தந்த காத்தி மற்றும் படங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் – இருவருக்கும் நன்றி