திருச்சிராப்பள்ளி – மலைக்கோட்டை குடைவரை – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம்

மலைக்கோட்டை – இரண்டு குடைவரைகளில் முதல் குடைவரை

தொலைவில் இருந்தே பிரமிக்கவைக்கும் மலைக்கோட்டை , திருச்சிராப்பள்ளியின் நடுவில் கம்பீரமாக விஸ்வரூபம் எடுக்கும் மலை – இப்படி மொட்டை பாறைகள் கொண்ட மலைகளில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது. சரி, அன்னபூர்ணா அவர்களின் புண்ணியம், இன்று வெகு நாட்களாய் போட விட்டுப் போன பதிவு , அவர் தூண்டுதலினால் வெளிவருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே பதிவாகி இருக்க வேண்டும், நானும் அரவிந்தும் சென்ற டிசம்பர் மாதத்தில் சென்ற போது கூட முயற்சி செய்தோம், என்னவோ எங்கள் பாக்கியம் – யாராவது ஒருவர் நடுவில் வந்து படம் எடுக்காமல் செய்துவிட்டார்கள் – இந்த படிகளைப் பார்த்தவுடன் மக்களுக்கு ஒரு தொய்வு – உடனே அமர்ந்துவிடுகின்றனர் – நல்ல செங்குத்தான மலையை பாதி வழி ஏறிய களைப்பு. எங்கள் கோபம் அவர்கள் மீது அல்ல, சில ஜோடிகள் – நாங்கள் ரசனையுடன் படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும், இல்லை, அவர்களது மயக்க நிலையில் தன்னிலை மறந்து லயித்து இருந்தனரோ என்னவோ – அடை மழையில் நனையும் எருமைகள் போல நகர மறுத்தனர். எவ்வளவோ முயற்சி செய்து கடைசியில் சில கோணங்களை அரை மனதுடன் விட்டு விட்டு கிளம்பிவிட்டோம். ( காதல் ஜோடிகள் மீது கோபம் இல்லை – எனினும் புராதான சின்னம், ஒரு ஆலயம், சுற்றிலும் இருப்போர் என்று அனைத்தையும் கடந்து அவர்கள் இருந்த சல்லாப கோலம் சற்று நெருடலாக இருந்தது – வேறு இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டுவிடலாம் என்று வாய் வரை வந்துவிட்டது)

பிறகு நண்பர், ஸ்ரீராம் உதவியுடன் ஏனைய படங்களையும் எடுக்க முடிந்தது. என்ன செய்வது, இந்த மேல் குடைவரைக்குக் கீழே இருக்கும் குடைவரை நிலைமை தேவலாம். அங்கே எவரும் செல்வதே இல்லை. இப்படி கண்ணில் பட்டு மரியாதை கெட்டு இருப்பதை விட அப்படி கண்ணிலும் நினைவிலும் இல்லாமல் இருப்பதே நல்லது. ( கீழ் குடைவரையை அடுத்த பதிவில் பார்ப்போம் )

இந்த பல்லவர் கால மல்டிப்ளெக்ஸ் , மகேந்திர பல்லவரின் உன்னத படைப்பு – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம், பல்லவனின் குடைவரைகளில் மிகவும் தென் திசையில் உள்ள குடைவரை – உச்சி பிள்ளையார் கோயில் வளாகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம் இது. பல வகைகளில் உன்னதமான படைப்பு. லலிதாங்குரன் என்பது மகேந்திரரின் ஒரு பெயர் – அழகும் வசீகரமும் சொட்டும் பெயர். இங்கே தான் அவர் தான் வேறு மதத்தை விட்டு சைவ – லிங்க வழிபாட்டு வகைக்கு திரும்பினேன் என்று தானே சொல்லும் கல்வெட்டு உள்ளது. இன்றைய காதல் புறாக்களுக்கு தெரியுமோ இல்லையோ, அவர் வெட்டி உள்ள வரிகளில் உள்ள அர்த்தம் – அதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். குடைவரைக்குள் செல்வோம்.

பல்லவர்கள் நமக்கென விட்டுசென்ற சிற்பங்களில் அவர்கள் அழகு சேர்த்த சோமாஸ்கந்தர் வடிவத்தை நாம் தொடர்ந்து பதிவுகளில் பார்த்து வருகிறோம், இன்னும் ஒன்று சிவ கங்காதர வடிவம். இந்த குடைவரையில் நாம் பார்க்கும் இந்த வடிவம் மிகவும் அழகானது மட்டும் அல்லாமல் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம்.

பல்லவன் இவ்வளவு தூரம் வந்து, அதுவும் சோழர் தேசத்திற்குள் வந்து, இந்த மலையில் தங்கி , குடைந்து (இங்கும் மற்ற மகேந்திரர் குடைவரைகள் போல் அருகில் சமணர் படுக்கை உள்ளது !!) – இந்த பதிவிற்கு திரு நாகசுவாமி அவர்கள் மற்றும் திரு சுவாமிநாதன் அவர்களின் இடுகைகளை கொண்டு விளக்க முயற்சிக்கிறேன். திரு சு்வாமிந்தன் அவர்கள் குடைவரை பற்றி சொல்லும் பொது ” இந்த மலை தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் , மற்ற ஆலயங்கள் , கடைகள் அனைத்தும் இல்லாத பொது எப்படி இருந்திருக்கும், அப்போது மகேந்திரர் இந்த இடத்தை சுமார் இருநூறு அடி உயரத்தில் தேர்ந்தெடுத்து , தனது சிற்பிகளை கொண்டு எப்படி செதுக்கினார் என்று யோசிக்கவேண்டும். இந்த குடைவரையிலும் பல புதிர்கள் உள்ளன “ என்கிறார்.

குடைவரை முகப்பு – நான்கு தூண்கள் மற்றும் இரு பக்கங்களிலும் இரு அரை தூண்கள் உள்ளன. மற்ற்படி பெரிய அலங்காரங்கள் மிகுதியாக முகப்பில் இல்லை. தூண்கள் மகேந்திர காலத்து பாணி என்பதை அவற்றின் தடிமனான தோற்றம், சதுரம் , கட்டு , சதுரம் – சரி, தூண்களை பற்றி இன்னும் விரிவாக படிக்கும் பக்குவம் நமக்கு வந்துவிட்டது – மேலே படியுங்கள்.

1. சதுரம் அல்லது நான்முகத்தூண் அல்லது பிரம்மகாந்தத்தூண்
2. கட்டு அல்லது எண்பட்டைத்தூண் அல்லது விஷ்ணுகாந்தத்தூண்
3. கட்டு அல்லது பதினாறு பட்டைத்தூண் அல்லது இந்திரகாந்தத்தூண்
4. வட்டம் அல்லது ருத்ரகாந்தத்தூண்

ஒரு தூண் மேற்சொன்ன ஏதோ ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே தூணில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் கூட வரலாம். மேலே உள்ள தூண்கள் கீழே சதுரமாகவும், நடுவில் எண்பட்டையாகவும், மேலே மீண்டும் சதுரமாகவும் அமைந்திருப்பதால் அதை, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த முழுத்தூண் என முழுமையாக வரையறுக்கலாம். அப்படியானால் அந்த அரைத்தூண்கள்? அவை நான்முக அரைத்தூண்கள். இந்தத் தூண்களின் நீட்சிதான் பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியில் காணப்படும் பாதங்களாகும்.

தூண்களுக்கு தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன
( நன்றி வரலாறு. காம்)

தூண்களின் நாலு பக்கங்களிலும் தாமரை பதக்கங்கள் உள்ளன.

மகேந்திரர் பட்டப் பெயர்கள் பல்லவ க்ரந்தத்திலும் சில இடங்களில் தமிழிலும் தூண்களில் செதுக்கப்ப்டுள்ளது.

வெளி தூண்களை கடந்து உள்ளே படியேறி மண்டபத்திற்குள் செல்வோம். மண்டபத்தின் பின்னால் முன்னாள் இருப்பது போலவே நான்கு தூண்கள் உள்ளன. இடது புறம் கம்பீர கங்காதர வடிவம், வலது புறம் இருபுறமும் அழகிய வாயிற் காவலர்கள் கொண்ட தற்போது காலியாக உள்ள கருவறை மண்டபம் .

இந்த அற்புத கங்காதர வடிவத்தை அடுத்த பதிவில் மெதுவாக பார்ப்போம். எனக்கு மிகவும் பிடித்தமான சிற்பம், அழகினால் மட்டும் அல்ல – அதை நான் அறிந்த அன்று தான் நான் எனது சரித்திர / சிற்ப பயணத்தில் இரண்டு முக்கிய – அருமையான மனிதர்களை சந்தித்தேன் – திரு சுந்தர் பரத்வாஜ் மற்றும் திரு திவாகர் – திவாகர் அவர்களின் நூல் வெளியீடு – விசித்திர சித்தன் – சரித்திர புதினம் – மகேந்திரரின் ஆரம்ப கால கதை, நூலின் முகப்பில் அதே கங்காதர வடிவம்.

முதில் இரண்டு வாயிற் காவலர்களையும் பார்ப்போம். இருவரும் மிகவும் அழகு.

ஒரு பக்கமாக திரும்பி நிற்கும் பல்லவருக்கு உரித்தான பாணி, இரண்டு கரங்கள், ஒரு கால் சற்றே மடித்து, ஒரு கை ஒய்யாரமாக கதை அல்லது உருள் தடியை அலட்சியாமாக கொண்டு – நாம் முன்னர் மண்டகப்பட்டு குடவரையில் பார்த்ததைவிட சற்று மெலிந்து காட்சி அளிக்கின்றனர். மிகவும் தேய்ந்து போன சிற்பம் என்றாலும் அணி ஆபரணம் என்று – ஒரு தனி அழகுதான்.

கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது சற்று வேடிக்கை தான். இன்றைய நிலை அப்படி. புரியவில்லையா – அது வேறு கருவறை – உள்ளே ஒன்றும் இல்லை , பிற்கால பல்லவர் வேளைகளில் தான் சோமாஸ்கந்தர் வருகிறது, கருவறையில் பாண்டியர் குடைவரைகளில் தான் லிங்கம் ஒரே கல்லில் செதுக்கப் படும் – பல்லவர் காலத்தில் வேறு கல் லிங்கம் தான். அப்படி இருக்க எதற்கு கதவு – பூட்டு – எல்லாம் நமது குடி மகன்களில் தொல்லையை தாங்காமல் தான். என்ன ஒரு வெட்கக் கேடு !!

சரி , குடைவரையில் புதிர் இருக்கிறது என்று சொன்னேனே – புதிர் இல்லை, புதிர்கள் உள்ளன – முதல் புதிர் இதோ. அப்படி லிங்கத்தை கருவறையில் பொருத்த துவாரம் ஒன்று இருக்கும். இங்கே தரையின் நடுவில் அதே போல ஒரு துவாரம் உள்ளது – ஆனால் அதை அடுத்து வலது புறத்தில் இன்னும் ஒரு துவாரம் உள்ளது.

மூடி இருந்தால் நமக்கு உள்ளே என்ன இருக்கும் என்பதை பார்க்காமல் போவோம் – என்று நண்பர்கள் வலைக் கதவை நெம்பி பெயர்த்து எடுத்து உள்ளனர். குடி மகன் ஆயிற்றே – துவாரத்தை பார்த்தவுடம் குப்பை தொட்டி என்றி எண்ணி பாட்டிலை எரிந்து விட்டு சென்றுள்ளனர். இரு துவாரங்கள் படத்தின் கீழ் பாதியில் தெரியும்.

அடுத்த பதிவில் மற்ற அற்புதங்களை பார்ப்போம்.

காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை – அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) – ஆனால் பாதகர்கள் – எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் – ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை – எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் – அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல – இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் – அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி – சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் – இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் – சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு – ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து – வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு – உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் – நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து – செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் – அபாரம்.

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி – நீங்களே முடிவு செய்யுங்கள்.

குழந்தை குமரன் – தனது கிரீடத்துடன்.

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை – சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா – கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ – அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் – இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.

மல்லை திருமூர்த்தி குடவரை – ஒரு புதிர்

நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி – பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் – சில இடங்களில் சிறிய மாற்றங்கள் – அழகு படுத்த )

N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்

Me: மிக்க மகிழ்ச்சி, இப்போது உங்கள் படங்களை தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி.

N: படங்களுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

me: கண்டிப்பாக. சரி, நீங்கள் திருமூர்த்தி குடவரை படங்களை இட்டதனால் அதை ஒட்டி ஒரு புதிரை போடுகிறேன் . விடை சொல்லுங்கள், அங்கே உள்ள மூன்று மூர்த்திகளை யார் யார் என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

N: பிரம்மா விஷ்ணு சிவன்

me: ஹஹஅஹா , நல்ல பாத்து சொல்லுங்க சார் , அவ்வளவு எளிதாக இருந்தால் புதிர் என்று சொல்லி இருப்பேனா?

N: ஹ்ம்ம்

me: சரி , பல்லவ குடைவரைகளில் உள்ளே இருக்கும் கடவுளை எப்படி அடையாளம் கொள்வீர்கள். இரண்டு முறை உண்டு, பொதுவாக உள்ளே சிலை / சிற்பம் இருந்தால் அதை ஆய்வு செய்து, அதன் அமைப்பு, கைகளில் உள்ள ஆயுதங்கள் என்று பார்ப்போம், உள்ளே சிற்பம் இல்லை என்றால் வெளியில் நிற்கும் வாயிற் காப்போன்களை கொண்டும் ஓரளவிற்கு அடையாளம் கொள்ளலாம். இங்கே உங்களுக்கு எதுவாக இரண்டுமே உள்ளன. நன்றாக பார்த்து சொல்லுங்கள்.

N: போட்டியில் நண்பனை கேட்டு பதில் சொல்வது போல இங்கே உண்டா ? நீங்களே சொல்லுங்கள்

Me: இல்லை, அப்படி எளிதானதல்ல. நீங்கள் சற்று முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் முக்கியம். பின்னாள்களில் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

N: சரி, நடுவில் இருப்பது சிவன். வலது கையில் மழு உள்ளது லிங்கம் வேறு இருக்கே.

me: ஆமாம், இடது கையில் இருப்பது ருத்ராட்ச மாலை மாதிரி உள்ளது – மான் கண்டிப்பாக இல்லை. எனினும் அந்த லிங்கம் பின்னாளில் வைக்கப்பட்டது.

N: வெளியிலிருப்பது மகிஷாசுரமர்த்தினி
i

me: ஆமாம் , துர்க்கை அம்மன். மேலே அருமையான வேலைபாட்டை மறக்காமல் பார்க்க வேண்டும்.

N: வலது புறம் நீண்ட மகுடம் கொண்டது விஷ்ணு . கையில் சங்கு சக்கரம் உள்ளதே. அடுத்து இருப்பது பிரம்மா


me: ஹ்ம்ம் , விஷ்ணு எளிது – சங்கு சக்கரம் உள்ளதே. அது சரி, எப்படி பிரம்மா என்று அடையாளம் கண்டுகொண்டீர்?.


N: மும்மூர்திகள் தானே. பிரம்மா வந்தால் தானே முழுமை பெரும். அது தானே வழக்கம்.

me: ஹஹா , மலை புதிர் இப்போது தான் வருகிறது. பிரம்மனின் சிற்பங்களில் நீங்கள் முதலில் பார்ப்பது என்ன. தனிதன்மையை தெரிவது ஏது?

N: மூன்று தலைகள்

me: நான்முகன் என்றாலும் சிற்பத்தில் மூன்று தலைகள் – இங்கே தெரிகின்றதா ?

N: இல்லை

me: வெளியில் இருக்கும் வலது புற வாயிற் காவலன், தனது கையில் எதை வைத்துள்ளான்.

N: சரியாக தெரியவில்லையே

me: சரி, உள்ளே இருக்கும் சிற்பத்தின் ஆடை அணிகலனில் எதாவது சிறப்பாக தெரிகிறதா. புதுமையாக ?

N: X வடிவத்தில் பட்டை

me: பிரம்மன் சிலையில் இது போன்று வேறெங்கும் நீங்கள் கண்டதுண்டா?

N:இல்லையே

me: மகுடம் எப்படி உள்ளது

N: நீண்டு முக்கோண வடிவில் உள்ளது

me: மகுடத்தின் அடியில் என்ன உள்ளது ? இந்த உரையாடலை அப்படியே பதிவாக போடட்டுமா

N: ஆமாம் அதன் சிறப்பு என்ன, சொல்லுங்க விஜய்

me:இதை பதிவாக போடட்டுமா ?

N: தாரளமாக போடுங்கள், என் பெயரை போடவேண்டாம்.

me: N, என்று போட்டால் பெயர் தெரியாது அல்லவா?

N: அப்படியே, எனக்கு கூடுதல் புகழ் வேண்டாம்.

me: ஹஹா , அப்போது சரி. வலது புறம் ‘இருக்கு ரிஷி’ – ஸ்ருக் என்ற ஒரு வித கரண்டியை பிடித்துள்ளார். வேத அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்ற பயன்படும். இடது புறத்து காவலன் ஒரு மலரை பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிரம்மன் என்ற முதற் கோட்பாடு சரி என்றே தோன்றும். ஆனால் உள்ளே இருக்கும் கடவுளுக்கு தாடியும் இல்லை மீசையும் இல்லை. இளவட்டமாகவே உள்ளார்.

N: ஆமாம், யார் அது , சொல்லுங்கள்

me: அவர் அணிதிருக்கும் மகுடம் , நீங்கள் பார்க்கும் x பட்டை – இவை அனைத்தும் ஒரு போர்வீரனின் சின்னங்கள். பிரம்மனுக்கே வேதத்தை எடுத்துச் சொன்ன போர் வீரன்.

N:முருகன்

me: ஆமாம் முருகன் – பிரம்ம சாஸ்தா என்றழைக்கப்படும் தோற்றம். அது சரி, மேலே பறக்கும் அந்த இரு பூத கணங்களின் கைகளில் என்ன உள்ளது என்று நன்றாக பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்.

N: அப்படி என்றால்?

Me: இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை. இந்த ஆய்வாளர் பதிவை பாருங்கள்

முருகன் ஆராய்ச்சி மடல் – படங்கள் மற்றும் குறிப்பு இந்த தலத்தில் இருந்து

“இந்த சிற்பம் சிறிய முக்கோண வடிவில் கரண்ட மகுடம் அணிந்து, அதன் அடியில் மலர்களாலான ( கன்னி ) அலங்காரம் உள்ளது. தமிழ் வழக்கில் ஒரு வீரனுக்கே உரித்தான அங்கீகாரம் இந்த கன்னி. மேலும் இந்த x வடிவில் ஆன பட்டைக்கு பெயர் சன்னவீரா – இதுவும் வீரனின் அடையாளம். பல்லவர் காலத்து குறிப்புகள் இவை அனைத்தும் முருகன் ஒரு போர்/வெற்றிக் கடவுள் அதாவது தேவ சேனாதிபதி என்பதை நிலை நாட்டுகின்றன. . “

மேலே உள்ள தளம் முருகன் பற்றிya அருமையான பல தகவல்களை konda தளம். கண்டிப்பாக அங்கு சென்று வாசிக்கவும்.

பிற்கால பல்லவ வாயிற்காப்போன் -காஞ்சி மாதங்கேசுவரர் ஆலயம்

வாயிற்காப்போன் தொடரில் இன்று மேலும் பயணிக்கிறோம். காஞ்சிபுரத்தில் நவீன கட்டுமானங்களுக்கு நடுவில் மறைந்துக் கிடக்கும் ஒரு பொக்கிஷம். நண்பர் திரு அர்விந்த் மிகவும் தேடி கண்டுபிடித்து நமக்காக படங்களை கொடுத்து உதவுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. மாதங்கேசுவரர் ஆலயம் ( அதன் உடன்பிறப்பு முக்தேஷ்வரா ஆலயத்தையும் விரைவில் காண்போம் )

இந்த ஆலயத்தின் காலம் சரியாக தெரியவில்லை , அதை பற்றி நாம் முக்தேஷ்வரா படங்களையும் பார்த்துவிட்டு அலசுவோம்.
இப்போதைக்கு CE 700 – 800 – இரண்டாம் நந்திவர்மன் காலம் என வைத்துக்கொள்வோம். மிகவும் சுவாரசீயமான காலம் – அரசனின் அரியணை ஏறுவது முதலே பல சம்பவங்கள், நடுவில் சாளுக்கியரிடம் தோற்றல், அக்யாதவாசம், மீண்டும் அரியணை ஏறல் – பின்னர் முடிவில் தனது பேரில் ஒரு கலம்பகம் !!

வேறு எங்கோ போகிறது பதிவு, மீண்டும் சிற்பத்துக்கு வருவோம்.

சிங்க தூண்கள் மறைக்கின்றனவே . சரி இன்னும் அருகில் செல்வோம். .

கொஞ்சம் கொடூரமாக தான் இருக்காங்க. இதுவரைக்கும் ஆஜானபாகுவாக இருந்தாலும் ஒரு நக்கல் பார்வை தான் இருந்தது.நீங்களே பாருங்களேன் – முற்கால பல்லவ வாயிற்காப்போன்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

மண்டகப்பட்டு

சீயமங்கலம்

தளவானூர்

இன்னும் உன்னிப்பாக மாதங்கேசுவரர் ஆலயம் வாயிற்காப்போன்களை பார்ப்போம்.

இடது புறம்

இங்கே கொம்பு போல தான் உள்ளன ( சூல வடிவத்தின் நடு கம்பி கண்ணுக்கு தெரியவில்லை )

வலது புறம்

இங்கே ஒரு மாற்றம் காண்கிறோமா? மழு முன்னர் செங்குத்தாக நெடுக்க இருந்தது – எங்கோ மாறி குறுக்காக உள்ளதே?. இது மழு தானா?

முக்கியமான வேறுபாடு -இருவருக்கும் மேலும் இரண்டு கைகள் -மொத்தம் நான்கு கைகள்.
இப்போது தான் கடினமான புதிர் வருகிறது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை 745 இல் வென்றான், கைலாசநாதர் ஆலயத்தை கண்டு பிரமிப்பு அடைந்து, அதன் சிற்பிகளை கையேடு கூட்டிச்சென்று பட்டடக்கல் ஆலயங்கள் அமைத்தான். சூலம் அல்லது கொம்பு உள்ள வாயிற்காப்போன்கள் பல்லவர் சிற்பங்களில் முன்னவே இருந்தன. ஆனால் இந்த கூடுதல் கைகள் யாரால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு நாம் இதே காலத்தை ஒட்டிய காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயத்தை ஒப்பிட வேண்டும். செய்வோமா?

பட்டடக்கல் – சாளுக்கிய வாயிற்காப்போன்

வாயிற்காப்போன்களை இந்நாளிலேயே எவரும் மதிப்பதில்லை. முடிந்தால் அவர்களை சிலையாக நிற்க வைத்து ஏளனம் செய்கிறார்கள். அப்படி இருக்க, ஆலயங்களில் உள்ள சிற்ப வாயிற்காப்போன்களின் கதி – அதோகதி தான். நானும் நண்பர்கள் சிலர் மட்டுமே இவைகளை பற்றி பேசுவது உண்டு என்று நினைத்தபோது ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இன்னொரு புத்தகத்தின் பெயரை பார்த்தேன் THE CULT OF WEAPONS. THE ICONOGRAPHY OF AYUDHA PURUSHAS, by Sri. V. R Mani.

வாயிற்காப்போன்களை பற்றி நிறைய பதிவுகள் இடவேண்டும் என்று ஆசை வெகுநாட்களாக இருந்தது. அதனால் உடனே வாங்கிவிட்டோம் ( நண்பர் சதீஷ் மற்றும் அர்விந்த்) – இணையத்தில் வாங்கியதால் புத்தகம் பார்த்தவுடன் ஒரு சிறு வருத்தம். மொத்தமே நாற்பத்து ஐந்து பக்கங்கள் தான் இருந்தது – சிறு புத்தகம். எனினும் அளவில் சிறியது என்றாலும் எடுத்தாண்டுள்ள சிற்பங்களும் முறையும் நன்றாக இருந்தது.
படிக்கும் போதே சட்டேன்று கண்ணில் பட்டது ஒரு சிற்பம். பட்டடக்கல் சாளுக்கிய வாயிற்காப்போன். முன்னர் நாம் திரு கிபிட் சிரோமனி அவர்களின் பதிவை ஒட்டிய பல்லவர் கால திரிசூலநாதர் வடிவங்களை பார்த்த போது – அந்த வடிவங்கள் கொம்புடைய வாயிற்காப்போன்களா என்ற வாதம் தொடர்ந்தது. ஆனால் இந்த சிற்பத்தில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ( படத்திற்கு நன்றி தோழி காதி )

மிகவும் அருமையாக ஒரு காலை மடக்கி, தனது (G)கதையின் மேல் பாரத்தை வைத்து ஒய்யாரமாக சாய்ந்து நிற்கும் அழகு, அந்த கதையை சுற்றி இருக்கும் படம் எடுக்கும் பாம்பு – எல்லாம் மிக அருமை.

சற்று அருகில் சென்று தலை அலங்காரத்தை பார்ப்போம்.

நான்கு கைகளை கொண்ட சிற்பம் ( முற்கால பல்லவ வாயிற்காப்போன் சிற்பங்கள் இரு கைகளுடன் மட்டுமே உள்ளன – அதன் பின்னரே மேலும் இரண்டு கைகள் வருகின்றன – இதை ஒட்டி ஒரு பதிவு போட வேண்டும் – திரு அர்விந்த் அவர்களின் காஞ்சி படங்கள் !) – இந்த சிற்பத்தில் மேல் வலது கரத்தில் என்ன உள்ளது என்று சரியாக தெரியவில்லை. இடது மேல் கரத்தில் தன்னையே ( சூலத்தையே ) பிடித்துள்ளார். மற்ற இரண்டு கைகளில் என்ன ஒரு ஸ்டைல் ( கை முத்திரைகள் பற்றியும் விரிவாக ஒரு பதிவு போட வேண்டும் )

சரி, நமக்கு வேண்டியதை பார்ப்போம்.அவரது விசித்திர தலை ஆபரணம் . ஆம் கண்டிப்பாக சூலம் தான்.

ஆனால் இதை பற்றி அந்த புத்தகத்தில் வரும் குறிப்பு சரியா ? நாம் விவாதிக்க வேண்டும்

” இடது மேல்புறக் கையருகே திரிசூலத்தை வைத்துக்கொண்டு, தலையில் சூலத்தை வைத்து இவர் தான் திரிசூலபுருஷன் அல்லது திரிசூலநாதன் என்று நாம் தெளிவாக கூற முடிகிறது. இந்த தனிப்பட்ட பாணி வாயிற்காப்போன் சிலைக்கு சாளுக்கியரின் தனித்தன்மை என்று கூற முடியும்.இதற்கு பின்னரே சலுக்யர் மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு மேலும் மெருகு அடைகிறது “

இது சரியான கருத்தா? இந்த புத்தகத்தில் பொதுவாக முற்கால பல்லவர் சிலைகளை ஆய்வு செய்ய படவில்லை. பட்டடக்கள் இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவர் மீது அடைந்த வெற்றியை கொண்டாடவே கட்டப்பட்டது. அதிலும் அந்த வெற்றியின் பொது ( ( CE 732 – 742 ), அவன் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் கலை திறனை கண்டு மிகவும் கவரப்பட்டு ( அதை ஒன்றும் செய்யாமல் சிதைக்காமல் ) அதை போலவே பட்டடக்கல் ஆலயங்களை அவனும் அவனது ராணிகளும் அமைத்தனர். இதன் அடிப்படையில், நாம் ஏற்கனவே பதித்த முற்கால பல்லவ சிற்பங்கள் ( இரண்டு கைகளுடன் சூலநாதர் ) , வைத்துப் பார்க்கும் பொது ஒரு வேலை இதே சிற்பிகளை தான் சாளுக்கிய மன்னன் எடுத்துச் சென்று அங்கே உபயோகித்தானோ என்ற கேள்வி மிக பலமாக எழுகிறது.

உங்கள் கருத்து என்ன. ?

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – மூன்றாம் பாகம்

சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சியைப் பற்றிய நமது தேடல் இன்றும் தொடர்கிறது. சென்ற இரு பதிவுகளில் நாம், தர்மராஜா ரதம் ( அதனை அதன் சரியான பெயர் சொல்லி அழைக்கவேண்டும் என்றால் ஆத்யந்தகாம பல்லவேஸ்வர க்ருஹம் என்று அழைக்க வேண்டும் ) சோமஸ்கந்தர் வடிவத்தை மல்லை கடற்கரை ராஜசிம்மேஸ்வர சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டோம். ராமானுஜ மண்டபத்தில் உள்ள அழிந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் அமைப்பையும் பார்த்தோம்.

வாசகர்களுக்கு நாம் இட்ட கேள்விகளை இன்னும் ஒருமுறை காண்போம்.

1. இதுவரையிலும் நாம் பார்த்த இரு வடிவங்களில் எதை முதலில் வந்த வடிவம் என்று சொல்லமுடியுமா. அதில் உள்ள வேலைப்பாட்டின் வளர்ச்சியை வைத்து , நாம் அந்த முடிவுக்கு வர முடியுமா?

2. இரு வடிவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்ன.என்று பட்டியல் இட முடியுமா ?

3. மேற்கண்டவற்றை வைத்து ராமானுஜ மண்டபத்தில் அழிந்த சோமஸ்கந்தர் வடிவம் எந்த பாணியில் உள்ளது என்று நாம் உறுதியாக சொல்ல முடியுமா ?

வாசகர்கள் மீண்டும் முதல் இரு பாகங்களை ஒரு முறை வாசித்த பின்னர் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கூற முயலலாம். அதுவரை நாம் அடுத்த இடத்திற்கு செல்வோம். இன்னும் ஒன்றல்ல மூன்று அற்புத சோமஸ்கந்தர் வடிவங்கள், புலிக் குகை என்று இன்று அழைக்கப்படும் சிற்பக் கொத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். முன்னரே காணாமல் போன இரு சிவலிங்கங்கள் பற்றிய பதிவில் நாம் இந்த மண்டபத்தை பார்த்தோம்.

இன்று இன்னும் அருகில் சென்று, முதலில் நடுவில் உள்ள கருவறையைப் பார்ப்போம்.


சோமஸ்கந்தர் சிற்பம் தெரிகிறதா. ரொம்ப முயற்சிக்க வேண்டாம், இன்னும் அருகில் எடுத்து செல்கிறோம்.

சோமஸ்கந்தர் வடிவத்தை ஒற்றி வரைந்த ஓவியம் உங்கள் பணியை சுலபமாக்க .

இப்போது சற்று பின்னல் சென்று, வெளியில் இருக்கும் மற்ற இரு சோமஸ்கந்தர் வடிவங்களையும் பார்ப்போம்.

இரு சோமஸ்கந்தர் சிற்பங்கள்.

அவற்றின் ஒற்றி எடுத்த ஓவியங்கள்.

வாசகர்களுக்கு மீண்டும் ஆனால் சற்றே சுலபமான கேள்விகள்.

1. இந்த சோமஸ்கந்தர் எந்த பாணியில் உள்ளனர் ?

2. மூன்று சோமஸ்கந்தர் வடிவங்களும் ஒரு பாணியா?

நம் தேடல் தொடரும்

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – முதல் பாகம்

நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் – பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்


சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்


முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

உயிர் சிலை என்றால் என்ன ?

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் – இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.


இந்த கோணத்தில் பாருங்கள் – இப்போது புரிகிறதா ?

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா – விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது


அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.


அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” – அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்