காளிங்க நர்த்தனம்- அற்புத வெண்கலச் சிலை

திரு. பிரசாத் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான். அவரது உயர்ந்த கலைத் திறனை நமது பதிவுகளில் ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் காணப்போவது அவரது மற்றுமொரு புதிய அவதாரம். கண்ணனின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியன்று ஒரு அற்புத வெண்கலச் சிலையின் அருமையான படங்களை நமக்கு அளித்திருக்கும் திரு. அசோக்குடன் இணைந்து, புகழ் பெற்ற ஊத்துக்காடு காளிங்க நர்த்தனம் பற்றி நமக்காக ஒரு பதிவு இடுகிறார்.

சோழக் கைவினைஞரின் உயர்ந்த மேலான திறமைக்கு அறிமுகம் தேவை இல்லை. எனது அனுபவத்தின் சாரத்தை வார்த்தைகளால் வெளியிடுவது இயலாத ஒன்று என்று நன்கு அறிந்திருக்கிறேன். எனவே, அந்த தெய்வீக அனுபவத்தை வாசகர்களே பெறுவதற்கு முயற்சிக்கிறேன். இன்று நான், இந்த உயர்ந்த செல்வதை நீங்கள் அதிக ஆர்வத்துடன் கண்டு களிக்க, எனக்கு தெரிந்த அளவில் அதனை விவரிக்கவும், எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் விழைகிறேன். இதனை துவங்குகையில் எல்லாம் வல்ல இறைவனிடம் இந்த அற்புதத்தை விவரிக்கும் சக்தியை எனக்கு அளிக்க பிரார்த்தனை செய்கிறேன், ஏனெனில் சில அற்புதங்களை விவரிப்பதை விட சுயமாக அனுபவிப்பதே மேலானது என்று கருதுகிறேன்.

இன்று நாம், அகந்தை கொண்ட நாகத்தை அடக்கிய அற்புத நடனத்தை மிக நேர்த்தியாக உலோகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் – காளிங்க மர்தன கிருஷ்ணனின் சிற்பத்தைக் காண்போம்.

முதலில் சிற்பத்தை முழுமையாகக் காண்போம். கொடுமையே உருவாக இருக்கும் நாகமாகிய காளிங்கனுக்கு பாடம் கற்று கொடுக்கவும், அதே நேரத்தில் தான் யார் என்று உலகிற்கே எடுத்துக்காட்டவும், காளிங்கனின் தலை மீது தெய்வீக நடனம் ஆடும் விதமாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. ஒரு செயலின் ஓட்டம், அழகு, அதன் வேகம், மேலும் அச்செயல் சொல்லும் கதை இவற்றை சிற்பத்திலே அற்புதமாய் கொண்டு வருவதில் சோழ சிற்பிகளுக்கு நிகர் அவர்களே! ஒரு முறை சிற்பத்தைக் கண்ட உடனேயே அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் நினைவில் நின்று மனதில் பதியும் வண்ணம் சிற்பத்தை செதுக்கிவிடுகின்றனர்.

கண்ணனின் வலது பாதத்திலிருந்து துவங்கி இடஞ்சுழியாக அவனது அற்புத சிற்பத்தின் தோற்ற அமைப்பை காண்போம். இது ஒரு நிலையான வடிவம் அல்ல என்பதை சிற்பத்தை கண்டதுமே உணருமாறு வடித்த சிற்பியின் கலை நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியாது. இது தொடரும் நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் அந்த நொடியின் வேகம் மிகச் சிறப்பாக காண்பிக்கப்பட்டுள்ளது.

தூக்கிய வலது திருவடியை பாருங்கள். இன்னும் சில வினாடிகளில் இந்த பாதம் எவ்வாறு நாகத்தின் தலையில் இறங்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அந்த பாதத்தின் அழுத்தத்தை உணர முடிகிறதா? அந்த கொடிய நாகத்திற்கு அது மரண அடியாக இருக்காது. இருப்பினும் அதற்கு ஒரு திடமான செய்தி நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


அநேகமாக இப்படி தான் பாம்பின் தலையில் பாதம் இறங்கும்.

இந்த தனித்துவம் வாய்ந்த வெண்கலச் சிலையை கவனித்து பார்த்தோமானால், இடது பாதத்திற்கும் நாகத்தின் தலைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதை காணலாம் – ஆக, கிருஷ்ணரின் எடை முழுவதும் பாம்பின் வாலைப் பற்றி இருக்கும் கரம் தாங்கும் விதமாக உள்ளது – இந்த சிற்பியும் அவனது அற்புத கலைத்திறனும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இப்போது கண்ணனின் இடது கரத்தை பார்ப்போம். மிக நளினமாக பாம்பின் வாலை பற்றியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். உங்கள் கரத்தில், உங்கள் தோள் உயரத்திற்கு உள்ள எடை அதிகமான ஏதேனும் ஒன்றை பற்றியிருந்தால், அதிலும், அது நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருக்கும்போது, உங்கள் கைகள் எத்தனை வலுவாக அதை பற்றியிருக்கும்? மேலும் தசைகள் எத்தனை திடமாக அதை இறுக்கி பிடித்திருக்கும்? எத்தனை அசௌகரியமாக இருந்திருக்கும்? ஆனால், இங்கு நாம் பார்ப்பது என்ன?

வளைந்த கரம், பாம்பின் வாலை ஒரு பட்டுத் துணியை பிடித்திருப்பது போன்று பற்றியிருக்கிறது. இதை பார்க்கும்போதே இது ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு என்று தெரிகிறது. அவனுக்கு இந்த நாகம் ஒரு பெரிய விஷயமே அல்ல. ஒரு பெரும் நாகத்தின் வாலை ஒரு சிறிய துணியை பற்றியிருப்பது போல் பற்றியிருக்கிறான். இருப்பினும், இந்த முழு வடிவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய தோற்றம் அமைப்பதில் உள்ள சிக்கல் விளங்கும்.

அடுத்து நாம் கண்ணனின் முகத்தை காண்போம். அவனது மந்திரப்புன்னகையே அவன் அந்த நாகத்திற்கு ஆபத்து விளைவிக்க விரும்பவில்லை என்று காட்டுகிறது. மேலும் முகத்திலோ ஒரு துளி கோபமோ, செருக்கோ, வலியோ, பெருமையோ ஒன்றும் தெரியவில்லை. அங்கே தெரிவதெல்லாம் ஒரு சிறிய குழந்தையின் அப்பழுக்கில்லாத மகிழ்ச்சி. மேலும் கூர்ந்து கவனியுங்கள். அவன் அந்த நாகத்தை பார்க்கவில்லை, யாரையும் எதனையும் குறிப்பாக பார்க்கவில்லை. அவனது பார்வை, இந்த முழு பிரபஞ்சத்தையே காண்கிறது. அவனது முகம் சற்றே சாய்வாக உள்ளது. இங்கே நாம் மறுபடியும் அவனது நடனத்தின் வேகத்தை நினைத்து பார்க்கவேண்டும். பாம்பின் தலை மீது தனது பாதத்தை வைக்கும் முன்பு அவனது தலை நளினமாக அசைகிறது.

இங்கே நாட்டியமாடுபவரின் தலை, நடனத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு அசைகிறது பாருங்கள்.

இப்போது அவரது அபய ஹஸ்தத்தை காண்போம். காண்பவரின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியே காட்சிகளின் பொருளும் வேறுபடும் என்று சொல்வர். அவனது இடையர்குல நண்பர்களுக்கு, கவலை வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளது. எண்ணிலடங்கா முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், காப்பதற்கு தாம் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இறுமாப்பு கொண்ட நாகதிற்கும், அமைதியை அழிக்க நினைக்கும் மற்றவருக்கும், எச்சரிக்கை செய்வது போல் உள்ளது. நாக குடும்பத்திற்கோ, அவர்களது இறைஞ்சலை தான் செவிமடுத்து அருள் புரிவதாக சொல்வது போல் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை கொண்டதாக அவனது அபய ஹஸ்தம் காட்சி அளிக்கிறது. அவை அனைத்தையும் எடுத்துக்கூறும் திறன் எனக்கு இல்லை.

இந்த சிற்பத்தைக் கண்டதும் நான் அனுபவித்த ஆனந்தத்தை ஓரளவிற்கேனும் உங்களிடையே சேர்க்க முடிந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். நமது பாரம்பரியம் விலை மதிக்க முடியாதது. பற்பல படையெடுப்புகள், மனிதரின் பேராசைகள் மற்றும் இயற்கை சீற்றங்களையும் தாண்டி அவை இன்றும் இருப்பதே மிகப் பெரிய அதிசயம் ஆகும். எனவே, இனி நீங்கள் காணும் சிற்பங்கள் மற்றும் சிலைகளை புதிய கோணத்தில் காணுங்கள் என்று வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு சிற்பமும் தனக்குள் பல விஷயங்களை அடக்கியுள்ளன. ஒவ்வொரு சிற்பம் உருவாவதற்கு பின்பும் நமது பண்டைய சிற்பிகளின் கலை உணர்ச்சி, சக்தி, வலி மற்றும் உழைப்பு அடங்கியுள்ளது. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு மட்டுமல்ல, நமது புனிதமான கடமையும் ஆகும்.
இந்த காலத்தைக் கடந்த கலைச்செல்வங்களை உயர்த்துங்கள். இவை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற பரிசு அல்ல. இவை நம் குழந்தைகள் நமக்கு அளித்துள்ள கடன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றை நாம் திருப்பி அளிக்க வேண்டும், அதுவும் வட்டியுடன். 🙂

படங்களை உபயோகிக்க அனுமதி தந்த திரு. அசோக் அவர்களுக்கும் செல்வி. நீரஜா ஸ்ரீனிவாசன் (நடனமாடுபவர்) அவர்களுக்கும் மிக்க நன்றி.

மேலும் நமக்கு ஒரு விருந்து படைக்கிறார் அசோக்

மேலே உள்ள அனைத்து கருத்துகளும் எழுதியவரின் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். சிற்ப சாஸ்திரத்தின் படியோ அல்லது விஞ்ஞான ரீதியான பொருளின்படியோ பொருந்தியோ பொருந்தாமலோ போகும் வாய்ப்பு உள்ளது. இந்த பதிவில் காணப்படும் தவறுகளுக்கு மன்னிக்கும்படி எழுதியவர் வேண்டுகோள் வைக்கிறார். மேலும், இவை தனது சொந்த கருத்துக்களே என்றும் அறியாமையால் தவறுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெளிவுபடுத்துகிறார். எனது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு வழங்கிய திரு. விஜய் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல. மேலும் நமது அரிய பாரம்பரியத்தை முன்னிறுத்த அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்சி பெரும் புரட்சியாக மாற வாழ்த்துகள்! வணக்கம்.

திருவட்டதுறை – சிற்ப அதிசயம் – சாமரங்களும் மூர்த்திகளும்

வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்திருநாள் வாழ்த்துக்கள்

இன்றைக்கு மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் இன்னும் ஒரு அற்புத பதிவை நம்முடன் பகிர்கிறார்.

திருவட்டதுறையில் உள்ள திரு ஆரட்டதுறைநாதர் திருக்கோவிலை பற்றி முன்பே இரு கதைகளை கூறியுள்ளேன். 19 ஏப்ரல் 2011 அன்று “தெய்வக்குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு” என்ற பதிவில், பாலகனாகிய புலவரும் சிறந்த பக்திமானும் ஆகிய திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகை தந்து பாடல் இயற்றுகையில் சிவபெருமானே அவரை கௌரவிக்கும் வகையில் பல்லக்கும் குடையும் அளித்ததை கண்டோம். 7 ஜூன் 2011 அன்று “திருவட்டதுறை ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்” என்னும் பதிவில் சிற்ப நிரல் பற்றி கண்டோம். பக்தர்கள் கோவில் பிரஹாரத்தை சுற்றி பிரதட்சிணம் செய்யும்போது அவர்கள் கண்டுணர சிவபெருமானின் வெவ்வேறு வடிவங்களை பழங்கால ஸ்தபதிகள் எவ்வாறு அமைத்தனர் என்று கண்டோம்.

இன்றைய பதிவில் சிற்ப நிரலின் விவரங்களை பற்றிய ஒரு கதையை கூறப்போகிறேன். இந்த கோவிலில் சிவனின் வடிவங்கள் மிக அற்புதமான வேலைப்பாடுடயவை. அவற்றின் அழகும் பாவமும் தனித்தன்மை கொண்டவை. இந்த வடிவங்களின் ஒரு சில லக்ஷணங்கள் தனித்துவம் வாய்ந்ததும் ஆர்வத்தை தூண்டுவதும் ஆகும். கோவில் மாடங்களில் உள்ள மூர்த்திகளுடன் கூடிய சாமரங்களே அவை.

நான் இது வரை கண்ட கோவில்கள், தென்னிந்தியாவின் மொத்த கோவில்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காடே என்றாலும், அவற்றிலும் ஒரு சில கோவில்களை காண முடிந்தது எனது அதிர்ஷ்டமே ஆகும். எந்த கோவிலாக இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும்போதும், புதிய விளக்கங்கள், புதிய புரிதல், புதிய அழகு தென்படுகிறது. திருவட்டதுறையில் உள்ள சிவாலயம் ஒரு பொக்கிஷம் மட்டுமல்ல, மறைபொருள் கொண்டதாகவும் விளங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் மிகச் சிறியதும், அதிகம் பேர் அறிந்திராததுமாக விளங்கும் இக்கோவிலின் சிற்பங்களின் அபூர்வமான அழகே இதை ஒரு பொக்கிஷம் என எடுத்துக் காட்டுகிறது. மறைபொருள் கொண்டது என நான் கூறுவதற்கு காரணம் இங்கு சில மூர்த்திகளுடன் காணப்படும் சாமரங்கள் ஆகும்.

சாமரம் என்பது கவரிமானின் வால்முடியால் செய்யப்பட்டு வெள்ளி கைப்பிடி பொருத்திய ஒரு விசிறி ஆகும். தெய்வ வழிப்பாட்டில் அளிக்கப்படும் ஒரு முக்கிய உபசாரமாக இது கருதப்படுகிறது. மேலும் அரசர்களுக்கும் உயர் பதவி வகிப்போருக்கும் அளிக்கப்படும் மரியாதையாகவும் விளங்குகிறது. சரித்திர கதைகள் கொண்ட திரைப்படங்களில் அழகிய பெண்கள் அரசரின் ஆசனத்திற்கு பக்கங்களில் நின்று கொண்டு இத்தகைய சாமரங்களை வீசுவதை கண்டிருக்கிறோம். இன்றும் பல கோவில்களில் வழிபாட்டிலும், திருவிழாக்களின் போதும் சாமரங்கள் வீசப்படுவதை காண்கிறோம். எனவே, ஒரு தெய்வத்தின் சிற்பத்தில் சாமரம் இருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயம் இல்லை. மேலும் அவை கதை சொல்லும் சிற்பங்களில், அதாவது ஒரு கதையையோ அல்லது நிகழ்ச்சியையோ விளக்கும் சிற்பங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் கோவிலின் மாடங்களில் செதுக்கியுள்ள சிற்பங்களில் இத்தகைய சாமரங்களை நான் இதுவரை கண்டதாக என் நினைவில் இல்லை.


இங்கே திருவட்டதுறையில் இரு மூர்த்திகளில் மிகத் தெளிவாக சாமரங்கள் காணப்படுகின்றன. தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள நடராஜரின் சிற்பம் அழகிய இரண்டு சாமரங்களால் கௌரவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் வடக்கு முகமாய் உள்ள மாடத்தில் உள்ள பிரம்மாவிற்கும் அவ்வாறே இரண்டு சாமரங்கள் உள்ளன. வழக்கமாக உபயோகப்படுத்தும் வகையில் இல்லாது, இந்த சாமரங்கள் சிரசின் பக்கங்களில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் கைப்பிடிகள் கவரிமான் இறகுகளின் மீது ஒரு விதமாக மடிக்கப்பட்டுள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளன. நடராஜர் மற்றும் பிரம்மாவின் அருகில் உள்ள சாமரங்களின் கைப்பிடிகள் வேறுபட்டிருக்கின்றன. மேலும் அந்த மூர்த்திகளின் நிலையில் அவற்றின் அமைப்பும் சற்றே மாறுபட்டுள்ளன.

தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள விநாயகர் சிற்பமும் சிற்பிகளால் குடை மற்றும் ஒரு ஜோடி சாமரங்கள் செதுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன. மேலும் பிக்ஷாடனரின் பின்பும் மேலேயும் இரண்டு சாமரங்களின் வடிவம் மங்கிய கோடாக தெரிகின்றது. இந்த சாமரங்களின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இவை முழுமையாக செதுக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்டவை போல் தோன்றுகின்றன. இவற்றின் மீது எண்ணெயும் தடவவில்லை.

மேற்கு சுவற்றில் உள்ள மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மேலேயும் பின்புறமும் ஒரு ஜோடி சாமரங்கள் காணப்படுகின்றன. இதுவும் எண்ணெய் தடவாமல் முழுமை பெறாமல் உள்ளது.

திருக்கோவிலின் மாடங்களில் உள்ள மற்ற மூன்று மூர்த்திகளாகிய தக்ஷிணாமூர்த்தி, கங்காவதாரனார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியவைகளுக்கு சாமரங்கள் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. துர்கையின் பின்புறம் உள்ள இடம் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அங்கே இரு சாமரங்கள் அமைப்பதற்குரிய இடவசதி இல்லை. அவ்வாறே முகமண்டபத்தின் சுவற்றில் உள்ள பைரவருக்கும் சாமரங்கள் அளிக்கப்படவில்லை.


இந்த விவரத்தை பற்றி இவளுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று வாசகர்களுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். சாமரங்கள் அழகானவை. மேலும் இந்தக் கோவிலின் சிற்பங்களை மிக சிறப்பானவையாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இவற்றின் நோக்கம் என்ன? சாமரங்கள் சில சிற்பங்களில் இருப்பதற்கும் சிலவற்றில் இல்லாதிருப்பதற்கும் காரணம் ஒரு வேளை இவை இந்த கோவிலின் கலை சரித்திரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றனவோ என்று எனக்கு தோன்றுகிறது.

முந்தைய பதிவில் நாம் கண்டபடி, அர்த்தமண்டப சுவற்றில் உள்ள ஆறு மாடங்களில் நான்கு வெட்டப்பட்ட மாடங்களாகும், உண்மையான தேவகோஷ்டங்கள் அல்ல. விநாயகரும் துர்கையுமே தேவகோஷ்டங்களில் அமர்ந்துள்ளனர். விநாயகருக்கு ஒரு குடையும் இரு சாமரங்களும் உள்ளன. ஆனால் இவை முற்று பெறாமல் உள்ளன. துர்கைக்கோ சாமரங்கள் அளிக்கப்படவில்லை. மறுபடி விநாயகர் சிற்பத்தை காணுங்கள். விநாயகர் மூர்த்திக்கு சரிவர இடம் தருவதற்காக குடை மற்றும் சாமரங்கள் ஒரு துளி வெட்டப்பட்டு உள்ளன.

தக்ஷிணாமூர்த்தி இருப்பது ஒரு ஆழமில்லாத, வெட்டப்பட்ட மாடத்தில் ஆகும். அதிலும் ஒரு கருங்கல் பலகையில் அமைக்கப்பட்டு ஒரு மாடத்தில் சேர்க்கப்பட்டதாகும். நடராஜரும் அவ்வாறே. ஆனால் இங்கே சாமரங்கள் நடராஜரின் சிற்பத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. லிங்கோத்பவருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை மாடத்தின் பின்புல சுவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. பிரம்மாவின் சாமரங்களும் அந்த சிற்பத்திலேயே உள்ளன, பிறகு அந்த சிற்பத்தை சுவற்றின் மாடத்தில் பொருத்தியுள்ளனர். மற்ற நான்கு சிற்பங்களுக்கும் சாமரங்கள் இல்லை.

மேலும் சிற்பங்களின் தோற்ற வடிவமைப்பை காணும்போது பல வித்தியாசங்களை காண முடிகிறது. பிரம்மாவிற்கு அரைக்கச்சு கொக்கியாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள கீர்த்திமுகம் உள்ளது. லிங்கோத்பவரின் அரைக்கச்சு கொக்கியோ சோழரின் தொன்மை வாய்ந்த சிற்பங்களில் காணப்படும் கீர்த்திமுகம் போன்று இல்லை. கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் அரைக்கச்சு கொக்கிகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும் இந்த மூர்த்திகளின் யக்ஞ்யோபவீதமும் மாறுபட்டுள்ளன. அவற்றில் உள்ள முடிச்சும், அவை உடலின் குறுக்கே தொங்கும் விதமும் வெவ்வேறாக உள்ளன. மேலும் இந்த நான்கு மூர்த்திகளையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால், அவைகளின் இடுப்பில் கட்டப்பட்டுள்ள இடுப்பாடையின் அமைப்பிலும் அவற்றின் ஆழத்திலும் வித்தியாசத்தை காணலாம். லிங்கோத்பவர் மற்றும் கங்காவதாரனாரின் இடுப்பாடைகள் சற்றே ஆழமாக உள்ளன. ஆனால் பிரம்மா மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் இடுப்பாடைகள் ஒரே விதமாக உள்ளன. ஒரு வேளை கலையின் பரிணாம வளர்ச்சியை இங்கே காண்கிறோமா? அல்லது வெவ்வேறு சிற்பிகள் வடித்த சிற்பங்களை காண்கிறோமா? இரண்டு வகை அரைக்கச்சுகள், இரண்டு வகை இடுப்பாடைகள் என வித்தியாசம் ஏன்?




ஆக, இதன் மூலம் நாம் அறியும் விஷயம் என்ன? அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நான்கு மாடங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், மொத்தம் உள்ள ஆறு மாடங்களில் நான்கு இக்கோவிலின் அசல் வடிவமைப்பில் இல்லை. இரண்டு மூர்த்திகளின் சிற்பத்திலேயே இரண்டிரண்டு சாமரங்கள் உள்ளன. மூன்று மூர்த்திகளில், சிற்பத்திற்கு வெளியே, மாடத்தின் சுவற்றில் முடிவுறாத நிலையில் சாமரங்கள் காணப்படுகின்றன.

இந்த மூர்த்திகளின் தோற்ற வடிவமைப்பில் உள்ள வித்தியாசங்கள், மேலும் சிற்பத்தில் காணப்படும் அல்லது காணப்படாதிருக்கும் சாமரங்கள், ஆகியவற்றையும் வைத்து பார்க்கும்போது, இந்த மூர்த்திகள் பிற கோவில்களிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்க கூடியவையாக இருக்கக் கூடும். மேலும் காலத்தின் வெவ்வேறு சமயங்களில் அமைக்கப்பட்டதாகவும், இந்த கோவிலுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் வந்து சேர்ந்திருக்க கூடியதாவும் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு குழுவாக இந்த சிற்பங்கள் தரத்தையும் அழகிய அமைப்பையும் கொண்டுள்ளன.

துர்க்கை மற்றும் விநாயகர் சிற்பங்கள் அர்த்தமண்டப சுவற்றின் நாடு நாயகமாக உள்ள மாடங்களில் உள்ளன. இந்த மாடங்கள் சற்றே குறுகலாகவும், உயரமாகவும் இருக்க, இந்த மூர்த்திகள் அவற்றில் சரியாக பொருந்தி உள்ளன. இருப்பினும் விநாயகர் உள்ள மாடத்தின் சுவர் அந்த சிற்பம் சரியாக பொருந்த சற்றே வெட்டப்பட்டுள்ளது. இதுவே இந்த சிற்பம் இந்த மாடத்திற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதற்கு ஒரு அறிகுறி ஆகும். பிக்ஷாடனர், நடராஜர், கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வெட்டப்பட்டுள்ள மாடங்களில் உள்ளனர். இந்த கோவில் கட்டப்பட்ட பின்பு இந்த மூர்த்திகள் வேறு எங்கிருந்தாவது கொண்டு வரப்பட்டு இங்கே பொருத்தப்பட்டனவா? அல்லது இந்த கோவிலின் தலைமை சிற்பி கட்டுமானம் பாதி நடந்துகொண்டிருந்த வேளையில் தன் மனதை மாற்றி கொண்டு அமைத்ததா? அரசியல் மற்றும் பொருளாதார மாறுபாடுகள், அல்லது, சமய நம்பிக்கைகளில் எழுந்த மாறுபாடுகள் அல்லது ரசிப்புத்தன்மையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் சான்றாக இவை காட்சி அளிக்கின்றனவா?

பிரம்மாவிற்கு அவருடைய சிற்பத்திலேயே சாமரங்கள் உள்ளன. விமானத்தின் சுவற்றில் உள்ள ஒரு மாடத்தில் அவர் அமைக்கப்பட்டுள்ளார். வெட்டப்பட்டுள்ள ஒரு மாடத்தில் அமைந்துள்ள நடராஜருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை இரண்டுமே அமைக்கப்பட்டுள்ள விதத்திலும் நிலையிலும் மாறுபட்டு உள்ளன. வடக்கு மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மாடத்தில் சுவற்றில் சாமரங்கள் உள்ளன. ஆனால் தெற்கு மாடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு அவ்வாறு சாமரங்கள் இல்லை. இந்த மூர்த்தி மாடத்தின் முழு இடத்தையும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், அதிஷ்டானத்தில் இருந்து சிறிது வெளியிலும் முன்புறம் துருத்திக் கொண்டவாறு ஆசனத்தில் அமர்ந்து ஒரு அசுரன் மீது கால் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆக, இங்கே நாம் அறிந்துகொள்ள ஒரு சிறிய மர்மம் அல்லது மாயம் உள்ளது. ஒன்றிரண்டு சிற்பிகள் மூர்த்திகளுடன் கூடவே சாமரங்களையும் சேர்த்து வடித்துள்ளனர். இவ்வாறு செய்யும் எண்ணம் ஏன் எழுந்தது என்று தெரியாத போதிலும், இதை தொடங்கிய விரைவிலேயே இவை கைவிடப்பட்டதும் புலனாகிறது. ஏன் துவங்கினர், எப்போது இவை கைவிடப்பட்டன என்பதற்கு நான் சரியான காரணங்களை தற்சமயம் வழங்க இயலாது. அதன் காரணங்களை அறிய நமக்கு மேலும் தகவல்கள் வேண்டும். கல்வெட்டுகள், நமது தொன்றுதொட்ட பழக்கங்கள், அல்லது புராணங்களில் இருந்து இவற்றுக்கு விடை கிடைக்கக்கூடும். அல்லது மற்ற கோவில்களின் சிற்பங்களுடன் இந்த கோவிலின் சிற்பங்களை ஒப்பீடு செய்வது மூலமும் விடை கிடைக்கலாம். இருப்பினும் மொத்தத்தில், இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற ஆர்வத்தை நம்மிடையே தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

மொழிபெயர்ப்பு : தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன்
படங்கள் : பதிவு ஆசிரியர் மற்றும் நண்பர் திரு சேகர் அவர்கள்

தொன்மையான இரு விஷ்ணு திருமேனிகளின் தற்போதைய நிலை

“கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” , “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” இவை அனைத்தும் பள்ளியில் படித்தவுடனே மறந்துவிடவேண்டும் போல உள்ளது இன்றைய தமிழ் நாட்டில் வழக்கு. இதை முழுவதுமாக சென்ற இரண்டு மாத சம்பவங்கள் உறுதி படுத்தின.

லண்டன் செல்ல தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. உடனே அங்கே உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் உள்ள செப்புத் திருமேனிகளை தரிசிக்க ஆவல் கொண்டு ஒரு தினத்தை ஒதுக்கினேன். இதுவரை அவற்றை பற்றி படித்த கொஞ்ச நஞ்சத்தில் தெரிந்தது – சிறிய அளவாக இருந்தால் அவை காலத்தால் முற்பட்டு இருக்கும் – மதிப்பு டாலரில் மட்டும் அல்ல, அவை அதனுள் அடக்கும் விஷயங்களும் தான்.

சட்டென கண்ணில் பட்டது ஒரு விஷ்ணு சிலை – காலம் 9 C CE. கொள்ளை அழகு, சிலை மட்டும் அல்ல, அதனை அவர்கள் காட்சிக்கு வைத்திருந்த பாணியும் அருமை – ’மதிப்பதற்கு முடியாத’ அளவில் பெருமைமிக்க பொக்கிஷத்தை அதற்கே உரிய மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.

அருமையான சிற்பம், வலது மார்பில் ஸ்ரீவத்சம், யக்நோபவீதம் என்று பல அம்சங்கள் இதன் காலம் கடை பல்லவ அல்லது ஆரம்ப சோழர் காலமாக இருக்கலாம் என்று கருத உதவுகின்றன. ஆரம்ப சோழர் காலம் ஏன், என்ற கேள்விக்கு சுலபமாக பதில் கூறலாம். சிற்பத்தின் சிறிய அளவு, பிரயோக சக்கரம். கடை பல்லவர் காலம் ஏன் என்பதற்கு கொஞ்சம் ஆராய வேண்டும்.

அதை பற்றி மேலும் படிக்க திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் 1963 ஆம் ஆண்டு நூல் Bronzes of South India – P.R. Srinivasan, உதவி செய்தது. தென் இந்திய செப்புத் திருமேனிகளில் மிகவும் தொன்மையானவை பல்லவ விஷ்ணு திருமேனிகளே – மாயவரம் அருகே பெருந்தோட்டம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்.

இதுவே அந்த திருமேனி காலம் – 8th C CE முற்பகுதி

அடுத்து 8th C CE பிற்பகுதி.

இவை இரண்டும் மிகவும் முக்கியமான பொக்கிஷங்கள். இவற்றை விவரிக்க ஐந்து பக்கங்களை திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் எடுத்துகொள்வதை கொண்டே இவற்றின் அருமையை நாம் அறியலாம். தற்போதைய இடம் தஞ்சை கலைக் கூடம் என்ற குறிப்பை கண்டதும் ஒரு சிறு குழப்பம். அங்கே இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கும் குறிப்பே இல்லையே. நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். கணினியில் படங்களை அலசினேன். எங்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் திருமேனிகளை காணவில்லை. நண்பர் சதீஷ் அவர்களது படங்களை பார்க்கும்போது – விடியற்காலை மணி சுமார் நாலு இருக்கும், ஆஹா, அதோ அதோ …

ஆமாம், பெயர் பலகை கூட இல்லாத அலமாரியில், பத்தோடு பதினொன்றாய் ஒரு ஓரத்தில் கிடக்கின்றன இவை.

நிஜமாகவே இவை தான் அந்த விலை மதிக்க முடியாத திருமேனிகள் என்ற ஐயம் எழ மீண்டும் ஒரு முறை நண்பர்களிடம் உதவி நாடினேன். சதீஷ் மீண்டும் ஒரு முறை இதற்காகவே தஞ்சை சென்று படங்களை பிடித்தார். ஆனால் நிலைமை மாறவில்லை – மேலும் மோசமாக – அலமாரியில் உடைந்த பிளாஸ்டிக் பொருள் இறைந்து கிடக்க காண்கிறோம். ஆனால் சந்தேகமே இல்லை – இவை தான் தென்னாட்டில் மிகவும் தொன்மையான செப்புத் திருமேனிகள்.

இவற்றின் மதிப்பு அறிந்துமா இப்படி வைத்துள்ளனர்? திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் விலைக்கு விற்கப்படும் நூல். அந்த நூலின்படி முதல் இந்து சிற்பங்கள் இவை இரண்டும் தான். தஞ்சையில் அதிகாரிகளை தெரிந்த யாராவது இந்த நிலைமையை மாற்றி இவற்றுக்கு உரிய மரியாதை மதிப்புடன் ஒரு தனி காட்சிப் பெட்டி அமைத்துத் தர வேண்டுகிறேன்.

சரி, இந்த சிலைகளை மேலும் நாம் ஆராயும் முன்னர், நமக்கு தெரிந்த பல்லவ கால சிலைகளை உங்களுக்கு முதலில் காட்டுகிறேன். மல்லைத் தவக் காட்சியில் வரும் விஷ்ணு, ஆதி வராஹா மண்டபத்தில் உள்ள விஷ்ணு, தர்மராஜா ரதத்தில் இருக்கும் ஹரிஹர வடிவம் (படங்களுக்கு நன்றி சௌராப்), கில்மாவிலங்கை (நன்றி சாஸ்வத்)


நமக்கும் கடை பெஞ்சுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு…இந்த இரு நண்பர்களையும் அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

தொடரும் ….

திருவட்டது​​றை: ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்

நமக்கு இன்று மீண்டும் ஒரு விருந்து, மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் சென்ற பதிவில் ஞானக் குழந்தைக்கு கிடைத்த குடை மற்றும் பல்லக்கை மிக அழகாக நமக்கு விளக்கினார். இன்று முழு விருந்து. ஒரு ஆலயத்தை எப்படி நாம் இனி பார்க்கவேண்டும் என்று நமக்கு கட்டறுக் கொடுக்கிறார்.

ஒவ்​வொரு ​கோவிலும் ​பல்​வேறு தலவரலாறு ​கொண்டது ​போன்​றே, ஒவ்​வொரு ​தெய்வ வடிவமும், சிற்பமும் பல்​வேறு க​தைக​ளை நமக்கு எடுத்து​ரைக்கின்றன. ஒவ்​வொரு மூர்த்தமும் ஏ​தேனும் ஒரு புராணத்​தை ​மையமாகக் ​கொண்டுள்ளது. ​மேலும் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட காலகட்டத்தின் வரலாற்​றையும் விளக்கக்கூடியது. ஒரு புராணம் அல்லது ​தொன்மத்​தை அந்த சிற்பியின் காலகட்டத்தில் எவ்வாறு ​சொல்லப்பட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. சாஸ்திரத்தில் உள்ள ​கொள்​கையின் அடிப்ப​டையி​லே​யே ​தெய்வீக வடிவங்கள் அ​மைக்கப்படுகின்றன என்ற​போதும், அதற்கு உயிர்​கொடுப்பது சிற்பியின் இயற்​கையான அறிவாற்றலும், கற்ப​னைத் திறம் மற்றும் அவர் கண்ட ​மேற்​கோள்களும் ஆகும். சிற்பியின் திற​மையான ஆற்றலின்றி இத்தகு ​தொன்மங்கள் உயிர் ​பெறுவது கடினம்.

இந்த இடு​கையில் ​கோவிலின் அ​மைப்புடன் இ​​யைந்த மூர்த்திக​ளைப் பற்றி காண்​போம். ஒவ்​வொரு மூர்த்தத்தின் க​தை​யையும் தனித்தனி​யே கூறுவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்​தை அறிய முடியும் என்பதால் அவற்​றை அவ்வா​றே கூற விரும்புகி​றேன்.

முதன்மு​றையாக ஒரு ​கோவிலுக்குள் ​செல்வ​தே ஒரு உன்னதமான அனுபவம். ஒவ்​வொரு ​கோவிலுக்கும் அதற்​கென்று ஒரு அதி​ர்வு உண்டு. அதனுள் பல ​பொக்கிஷங்ளும் உண்டு. பற்பல ​கோவில்கள் பிரபலமான​​வை, என​வே அவற்றின் பு​கைப்படங்களும் பல்​வேறு புத்தகங்களும் எளிதில் கி​டைக்கும். அவ்வாறு பிரபலமான ​கோவில்களில் நாம் நு​ழையும்​போது ஏற்கன​வே நமக்குள் எதிர்பார்ப்புகள் நி​றைந்திருக்கும். இருப்பினும் நமது உண்​மையான அனுபவ​மோ வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவு​மே இருக்கும். ஆனால், நாம் அறியாத ​கோவிலுக்குள் நு​ழைவ​தோ உண்​மையி​லே​யே மிகச் சிறந்த அனுபவமாகும். பல அற்புதங்கள் பு​தைந்துள்ள ஒரு ​பொக்கிஷ நிலவ​றைக்குள் புகும் அனுபவத்​தை ஏற்படுத்தும்.

திருவட்டது​றை சிவன்​ ​கோவிலுக்குள் ​செல்வதும் அத்த​​கைய ஒரு அற்புத அனுபவமாகும். நாங்கள் அக்​கோவிலின் முதன் ​கோபுர வாயிலில் இருந்து ​வெளிப்பிரகாரத்​தை அ​டைந்​தோம். எங்களுக்கு இடதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்குச் ​செல்லும் முற்றத்தின் வாயில் இருந்தது. எங்களுக்கு வலதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. அ​தைத் தாண்டி சிவாலயத்திற்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. மார்கழி மாத ​​வெயிலில் குளுகுளு​வென்றிருந்தது. இரண்டாம் ​கோபுர வாயி​லைத் தாண்டி நாங்கள் ​​சென்​றதும் எங்களுக்கு ​எதிரில் ​தெரிந்தது ஒரு மண்டபத்தின் சுவர்கள் தாம்.

பிரதட்சிணம் ​செய்யும் விதமாக நாங்கள் இடப்புறமாக திரும்பி சுற்றி வரத் துவங்கி​னோம்.

அந்த மண்டபம் மிகவும் அழகாகவும் ​தொன்​மையாகவும் இருந்தது. அதன் தூண்கள் பிற்கால ​சோழர் காலத்தியதாக​வோ அல்லது முற்கால நாயக்கர் காலத்தியதாக​வோ இருக்கக்கூடும், அ​நேகமாக 14ஆம் நூற்றாண்​டைச் ​சேர்ந்தது. அந்த மண்டபத்தின் வாயில் ​தெற்குப்புறமாக இருந்தது. இது ஒரு முகமண்டபத்துடன் இ​ணைந்திருந்தது. அந்த முகமண்டப​மோ இன்னும் ​தொன்​மையானதாக இருக்கக் கூடும். அதன் வாயிலும் ​தெற்குப்புறத்தில் இருந்தது. ஒரு சிறிய வழியும் ​தெரிந்தது. இந்த வழி​யை சுற்றி வந்த பிற​கே விஸ்தாரமான முற்றமும் இ​றைவனின் ஆலயமும் ​தெரிந்தன.

ஆலயத்​தைக் கண்ட உட​னே​யே அது முற்கால ​சோழர் கால ​கோவில் என்று அறிந்து​கொண்​டோம். சுவற்றில் உள்ள மாடங்களில் கல்லினால் ஆன ​தெய்வ மூர்த்தங்கள் காணப்பபட்டன. என்​னை​ ​மே​லே ​செல்ல விடாமல் எதிரில் இருந்த மிக அழகிய பிட்சாடனர் திருஉருவம் ஈர்த்தது. நான் இதுவ​ரை கண்டதி​லே​யே மிக அழகான பிட்சாடனர் சிற்பம்.

ஆளுயர அளவில், பளபளக்கும் கருநிறத்தில், ஒயிலான ந​டையுடனும், இதழ்களில் ஒரு மர்ம புன்ன​கையுடனும் அற்புத ப​டைப்பு. தாருவனத்தில் சிவ​பெருமானின் ஆனந்த நடனத்​தைக் குறிப்பது பிட்சாடனர் திருவுருவம்.

இக்க​தை​யை விளக்கும் மற்று​மொரு அழகிய ஓவியம் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி ஆலயத்தில் உள்ளது.

தனது ​மேல் இடக்கரத்தில் சூலம் ஏந்தி, அத​னை தனது ​தோள்களில் சாய்த்துக் ​கொண்டு நிற்கிறார். சூலத்திலிருந்து ஒரு மயிலிறகு கற்​றை அழகுற ​​தொங்குகிறது. இடதுகரத்தில் ஒரு மண்​டை ஓடு பிட்​சை பாத்திரமாக உள்ளது. கீழ் வலதுகரம் தன்​னை பின்பற்றி வரும் மா​னை ​நோக்கி உள்ளது. இந்த ஓவியத்தில் காணும்​போது, மானுக்கு உணவளிக்க சிறிது புல் ​கையில் ​வைத்திருப்பது​ ​தெரிகிறது. அவருக்கு இடதுபுறத்தில் ஒரு குறுமனிதன் மிகப் ​பெரிய பாத்திரத்​தைத் தூக்கிப் பிடித்துள்ளார். திருவட்டது​றையி​லோ அருகி​லே ஒரு ரிஷி பத்தினி காணப்படுகிறார்.

தாருவனத்தில் ரிஷிக​ளை எதிர்​​கொண்ட பின் சிவ​பெருமான் தனது ஆனந்த நடனத்​தை நிகழ்த்துகிறார். எட்டு தி​சைகளும் அதிர, திருமுடியில் உள்ள கங்​கை பயத்தால் நடுநடுங்க, சிவ​பெருமான் ஆட, உ​​மையம்​மையும் கூட ஆடத்துவங்குகிறார். பிட்சாடனருக்கு அடுத்துள்ள மாடத்தில் சிவகாமசுந்தரியுடன் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த தாண்டவ மூர்த்திக் காணப்படுகிறார். இந்த நடராஜரும் மிக அற்புதமானது.

அற்புத ​வே​​லைப்பாட்டிற்காக மட்டுமன்றி, நடராஜர் சிற்பத்தின் ​வரலாற்றிலும் முக்கிய இடம் வசிப்பதாலும், இ​தேப் ​போன்று ​வே​​றெங்கும் காணப்படாதது மிக ஆச்சரியமான விஷயமாகும்.

நடராஜருக்கும் பிட்சாடனருக்கும் இ​டையி​லே சங்கடங்க​ளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆக, பிட்சாடனர், விநாயகர், நடராஜர் என மூன்று மூர்த்திகள் ​தெற்குமுக அர்த்தமண்டபத்தின் சுவற்றில் காணப்படுகிறார்கள்.

பிரதட்சிணமாக பிரகாரத்​தை வலம் வரும்​போது அடுத்து நாம் காண்பது சிவ​பெருமானின் தட்சிணாமூர்த்தி ​திருவுருவம்.

இந்த சிற்பமும் அற்புத ​​வே​லைப்பாட்டுடனும் அழகுடனும் விளங்குகிறது. நான்கு முனிவர்கள் சுற்றியிருக்க சின்முத்தி​ரையுடன் அருள்புரியும் இவர்தான் பரமகுரு. ​கர்ப்பகிரஹத்தின் தெற்கு சுவற்றிலுள்ள மாட​மே தட்சிணாமூர்த்தியின் இருப்பிடமாகும்.

அடுத்து ​மேற்கு சுவற்றிலுள்ள மாடத்தில் லிங்​கோத்பவ​ரைக் காண்கி​றோம். லிங்​கோத்பவர் பற்றிய க​தை திருவண்ணாம​லையில் நடந்ததாகக் கருதப்படுகிறது. ​மேற்கு மாடத்தில் உள்ள லிங்​கோத்பவ​ரை சிறிய வடிவத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்குகின்றனர்.

லிங்​கோத்பவ வடிவம் எப்​போது​மே ​மேற்கில் உள்ள மாடத்தில் இருப்பதாக ​தொன்று​தொட்டு எண்ணி வருகி​றோம். இருப்பினும் எப்​​போது​மே இது வழக்கில் இருந்திருக்கிறதா? சற்​றே ​மேல்​நோக்கி விமானத்​தைக் காண்​போம். அங்​கே இரண்டாம் தளத்திலும் சிகரத்திலும் விஷ்ணு​வே ​மேற்கு தி​சையில் குடியிருக்கிறார்.

இரண்டாம் தளத்தில் ஆதி​சேஷன் மீது ஸ்ரீ​தேவி பூ​தேவி ச​மேதராக மஹாவிஷ்ணு காட்சியளிக்கிறார். சிகரத்திலும் விஷ்ணு தனது இரு ம​னைவியருடன் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆசனம் காணப்படவில்​லை. இ​தைக் காணும்​போது நமக்குள் ​கேள்வி எழுகிறது. இந்த மாற்றம் ஏன், எப்​போது ஏற்பட்டது? இன்று பல ​கோவில்களில் ​மேற்குமாடத்தில் நாம் விஷ்ணு மூர்த்தி இருப்ப​தைக் காண்கி​றோம். ஆனால் ​கோவில் விமானத்தி​லோ இ​தே இடத்தி​லே​யே விஷ்ணு குடியிருப்பது, ஆதிகாலத்திலிருந்து இது விஷ்ணு மூர்த்தியின் இடமாக இருந்திருக்கும் எனத் ​தெரிகிறது. இதற்கு சான்று கும்ப​கோணத்திலுள்ள நா​​கேஸ்வர ​கோவில். ​மேற்கு சுவற்றின் மாடத்தில் அர்த்தநாரீசுவரர் இருந்தாலும், விமானத்தின் இரண்டாம் தளத்திலும், சிகரத்திலும் விஷ்ணு​வே குடியிருக்கிறார்.

பிரகாரத்​தின் வடக்குப்பகுதியில் வலம்வரவும், அங்​கே வடக்கு மாடத்தில் நான்முகனாகிய பிரம்மா தனது ​தொன்று​தொட்ட இடத்தி​லே காட்சியளிக்கிறார்.

அர்த்தமண்டபத்தின் வடக்குபுற சுவற்றிலும் மூன்று மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிவ​பெருமானின் இரு வடிவங்கள், கங்காதர​ர் மற்றும் அர்த்தநாரீசுவரர் இருவரும் துர்க்​கையின் ​மேற்கு மற்றும் கிழக்கு தி​சையில் உள்ளனர். துர்க்​கை நடுவில் உள்ள மாடத்தில் வீற்றிருக்கிறாள். அ​னைத்து மூர்த்திகளு​மே மிகவும் அழகுற வடிக்கப்பட்டு அவற்றின் க​தை​யை ஆன்மிக ​நோக்குடனும் அழகுடனும் விளக்குகிறது.


ஆதிகால ​சோழர் ​கோவில்களில் அர்த்தமண்டபத்திலும் விமானத்திலும் உள்ள மாடங்கள் 3-1-1-1-3 என்ற விதமான கட்ட​மைப்பு ஒரு ​பொதுவான அம்சம். இருப்பினும் இக்​கோவிலில் ​மேலும் ஒரு கூடுதலான மாடம் முகமண்டத்தின் வடக்கு முக சுவற்றில் இருப்பது மிக அபூர்வமான ஒன்று.

பத்தாவது மாடத்தில் கால​பைரவர் காட்சியளிக்கிறார். இரு பஞ்சரங்களின் இ​டையி​லே ஓர் தனி மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அ​நேகமான ஆதிகால ​சோழர் ​​கோவில்களில் விமானத்தின் சுவர்களில் ஒற்​​றை மாடம் இருப்பது வழக்கம். ​தெற்கு சுவற்றில் தக்ஷிணாமூர்த்தியும், விஷ்ணு (முற்காலம் முத​லே), அர்த்தநாரீசுவரர் (சிறிது காலத்திற்கு பின், ​மேலும் சில கால​மே வழக்கில் இருந்தது) அல்லது லிங்​கோத்பவர் (பிற்காலத்தில் வழக்கில் இருந்து இன்று வ​ரை ​தொடர்கிறது). பிரம்மா எப்​பொழுதும் வடக்கு சுவற்றி​லே​யே காணப்படுகிறார். சில சமயங்களில் பிற மூர்த்திகளும் வடக்கு சுவற்றில் காணப்படுவது உண்டு, உதாரணத்திற்கு காமரசவல்லியிலும், கும்ப​கோணத்திலுள்ள நா​கேஸ்வரர் ​கோவிலிலும் இவ்வாறு உள்ளது.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் மூன்று மாடங்கள் இருப்பது ஒன்றும் புதிதன்று. இருப்பினும் இந்தக் ​கோவிலில் ஆறு மாடங்களில் நான்கு மாடங்கள் மு​றையான மாடங்கள் அன்று. இ​வை ​ஒழுங்கான மாடத்தின் கட்ட​மைப்பாக இன்றி, கோவிலின் சுவற்றில் ​​வெட்டப்பட்டு உள்ளன. மகரத்​தோரணம் ​கொண்ட உத்திரக்கல்லும், ​மேலுள்ள வரிகளின் ​தொடர்பின்​மையும் இ​த​னை ப​றைசாற்றும்.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நடுநாயகமாக விளங்கும் விநாயகரும் துர்க்​கையு​மே உண்​மையான மாடங்களாக விளங்கியிருக்கின்றன என எடுத்துக் காட்டுகிறது. இது கூறும் க​தை​யென்ன? ஒரு​வே​ளை சிற்ப கட்டுமானர், கட்டுமானம் துவங்கியபின் இ​டை​யி​லே பல்​வேறு மூர்த்திக​ளையும் ​சேர்க்க எண்ணியிருப்பா​ரோ? அல்லது ஒரு​வே​ளை கட்டுவித்தவர் விருப்ப​மோ? ஆதிகால ​சோழர் ​கோவில்களில் இது எந்த நி​லைமாறுபடு காலத்​தைக் குறிக்கிறது? மற்ற நான்கு மூர்த்திக​ளை விட விநாயகர் மற்றும் துர்க்​கையின் மூர்த்திகள் ​வேறுவிதமாய் இருப்ப​தை அறியலாம். அதிலும் குறிப்பாக துர்க்​கை அ​நேகமாக உருண்​டையாக வடிவ​மைக்கப்பட்டுள்ளது. மஹிஷாசுரனின் த​லைமீது வீற்றிருக்கும் அன்​னை சற்​றே குறுகிய மற்றும் உயரமான ​வே​லைப்பாட்டுடன், சற்​றே அதிக உயரமாகவும் குறுகலாகவும் உள்ள மாடத்தில் மிக அரு​மையாக ​பொருந்தியுள்ளது.

ஆனால் சுவற்றில் ​வெட்டப்பட்டுள்ள மற்ற மாடங்க​ளோ ஆழமின்றியும், அகலமாகவும், உயரமாகவும் உள்ளன. அ​வை வரிகளின் ​மே​லே​யே உள்ளன. ஆனால் ஒழுங்கான மாடங்க​ளோ ​பொதுவாக ​சோழர் கால ​கோவில்களில் காணப்படுவது ​போன்​றே வரிகளின் ஊ​டே ​செல்கின்றன. ஒரு​வே​ளை இந்த மாடங்கள் பிற்காலத்தில் ​வெட்டப்பட்டனவாக இருக்கக் கூடு​மோ என்ற ஐயம் எழுகிறது. ​​வே​றொரு ​கோவிலில் இருந்த வந்த மூர்த்திகளுக்கு அ​டைக்கலம் வழங்க ​​செய்யப்பட்டதாகவும் இருக்கலா​மோ என்றும் ​தோன்றுகிறது. இ​வைகளின் இ​டை​யே உள்ள ஒற்று​மை ​வேற்று​மைக​ளை அறிந்து ​கொள்வதன் மூலம் நாம் இன்னும் ​தெளிவாக புரிந்து ​கொள்ள இயலும். பின்பு வரும் மற்று​மொரு இடு​கையில் இந்த மூர்த்திக​ளை ​மேலும் ஆராய்ந்து பார்த்து இந்தக் ​கேள்விகளுக்கு வி​டை காண முயற்சிப்​போம்.

(தமிழாக்க உதவி – தோழி திருமதி பர்வதவர்த்தினி முரளிகிருஷ்ணா அவர்கள் )

250 ஆவது பதிவு. விடமுண்ட கண்டரே.. விஷாபஹரணரே! யாருக்காக விஷத்தை உண்டீர்?

கல்லிலே கலைவண்ணத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பான நீண்ட நெடிய உற்சாகக் கலைப் பயணத்தில் இது ஒரு முக்கிய தருணம். இந்த சிறப்பான புனிதப்பணியில் என்னோடு பங்கு கொண்டு பயணித்து வரும் நண்பர்களுக்கும் இது இனிய தருணம். ஆம்! இது 250 ஆவது பதிவு. இந்தப் பதிவின் போது ஒரு முக்கியமான உத்தமரைப் பற்றியும் அவர் எங்கள் பதிவுகளுக்கு எத்தனை அரிய சந்தர்ப்பங்களை தன் தேவாரம் தளம் மூலமாக செய்து கொடுத்திருந்தார் என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவர்தான் தமிழ்ப் பேரறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தமிழின் இனிய தேவகானமான தேவாரத்தையும் திருவாசகத்தையும் பெரிய புராணத்தையும் உலகின் பல பாஷைகளில் எடுத்துச் செல்லும் மகான். அத்தகைய மாமனிதரை இந்த 250 ஆவது சிறப்புப் பதிவான விஷாபஹரணர் (விடமுண்ட கண்டன்) சிற்பத்துக்காக ஒரு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்டபோது அந்த சிவபக்தர் உடனடியாக ஒப்புக் கொண்டு அனுப்பிவைத்தார். இதோ அவர் கையால் ஒரு சிறிய முன்னுரை.

”ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி” என்றார் அபிராமிப் பட்டர் (அபிராமி அந்தாதி பாட்டு 7).

மத்து (சுழலும்போது) இரு பக்கமும் மாறி மாறிச் சுழலும். இந்தப் பக்கம் போகுதே எனக் கருதுமுன்பே மற்றப் பக்கம் திரும்பும்.

உயிர் அத்தகைய சுழற்சிக்கு ஆளானது. திரோதான சக்தி ஒருபுறம் ஈர்க்கும், சிவனின் திருவடிகளை அடைய உதவும்.

அந்தச் சக்தியின் ஈர்ப்பில் ஆட்பட்ட நிலை தொடராது.

மாயை மறுபக்கம் ஈர்க்கும், ஆணவம் சார்ந்த நிலை வரும்.

ஐயையோ தவறினோமே என வருந்தி அந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டுத் திரோதான சக்தியின் ஈர்ப்பில் உயிர் ஈடுபடும்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம். மாறி மாறி வரும் ஈர்ப்புகள், இடையில் தவிக்கும் தத்தளிக்கும் உயிர்.

”அமுதம் தரும் பாற் கடல். மத்தாக மேரு மலை. நாணாக வாசுகி பாம்பு. ஒரு பக்கம் அசுரர். மறுபக்கம் தேவர். பாற்கடலைக் கடைகின்றனர்.

ஆலகால விடம் திரள்கிறது. அமுதம் திரளவேண்டிய இடத்தில் விடம். அந்த விடம் அனைவரையும், அனைத்தையும் அழிக்கும் விடம்.

சிவன் விடத்தை அள்ளுகிறார்.

நீடும் இருவினைகள் நேராக நேராதல் கூடும் இறை சத்தி கொளல் (திருவருட்பயன் 51) என்றார் உமாபதிசிவம்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம்.
அருளின் ஈர்ப்பு ஒருபுறம், ஆணவத்தின் ஈர்ப்பு மறுபுறம்.

”எல்லாப் பிறப்பும் பிறந்தேன், பிறந்து பிறந்து இளைத்தேன், உன் பொன்னடிகள் கண்டேன், வீடுபேறு அடைந்தேன்,(மாணிக்கவாசகர்)

விடமுண்ட கண்டன் திருவடிகளை அடைதல், உயிரின் ஏக்கம். அறுக்க முடியாப் பாசத்தை அறுத்து, வினை நீக்கி விரும்பி வீடருள்வான் சிவன்.

தேவாரத்தில்தால் இறைஞானிகள் எத்தனை இடங்களில் விடமுண்டகண்டனை சிறப்பித்துள்ளார்கள்

ஒளியார் விடமுண் டவொருவன்

கறைக்கண் டத்தாரே

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

இவ்வாறாகப் பன்னிரு திருமுறைகள் முழுவதும் சிவனின் கண்டத்தில் விடமுள்ள பாங்கான உயிரது இருவினை ஈர்ப்பு நிலையைச் சுட்டி நிற்கின்றன.

முழுமையை நோக்கிய உயிரின் நெடும் பயணம். இடைவிடா முயற்சி. உயிரின் தன்மையே அஃதாம். அந்தக் கூர்மை முயற்சி வழுக்கும் கம்பம் போல. சாண் ஏற முழம் சறுக்கும். தீவினைகளைத் தனதாக்குபவன் சிவன், உயிரின் கூர்மை முயற்சிக்குக் கை கொடுப்பவன் சிவன். விடா முயற்சிக்குரிய நம்பிக்கையின் ஊற்றுக்கண், விடமுண்ட கண்டன் அவன்.

இறைவன் இந்த உயிரினம் என்றும் நிலைக்கச் செய்ய தன்னையே கூட தியாகம் செய்ய முன்வந்த அற்புத நிகழ்ச்சிதான் விடமுண்டகண்டன் நிகழ்ச்சி. நினைத்துப்பாருங்கள்.. அன்று சிவன் மட்டும் விடத்தை உண்டிராவிட்டால் ஏது இங்கே உலகம்.. ஏது மக்கள்.. ஏது உயிரினம்.. கிடைத்தற்கரிய அமுதத்துக்காக ஏற்கனவே கிடைத்திருந்த உயிரினங்களை பலி கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் அனைத்தையும் காத்தவன் அன்றோ..

ஆஹா.. அப்படிப்பட்ட விடமுண்டகண்டனின் சிற்பம் ஒன்று இந்த சிறப்புப் பதிவில் பார்ப்போமே. பல்லவர்கள் போய் சோழர்கள் தமிழகத்தை தங்கள் கீழ் கொண்டு வரும் 9ஆம் நூற்றாண்டு சிற்பம். மிகவும் அரிய பொக்கிஷம் இது. பொக்கிஷம் என்று சொல்லிவிட்டதால் அது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று சொல்லவும் வேண்டுமோ.

மீண்டும் ஒரு முறை காட்சியை மனதில் கொண்டு மேலே செல்வோம். சிவன் விடத்தை அள்ளுகிறார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் உதித்திருக்கும் , அவை அவரது திருமுகத்தில் எப்படி பிரதிபலிக்கும்.

நாம் முன்னர் பார்த்த சோமஸ்கந்தர் பல்லவ வடிவம் இந்த சிலையை விட பழமை என்று ஏன் கருதப்படுகிறது என்றும் பார்ப்போம்.

ஈசனின் மனதில் உள்ள ஆழ்ந்த சிந்தனையை எப்படி தான் முகத்தில் கொண்டு வந்தானோ அந்த கலைஞன்.

பொதுவாக ஆனந்தக் கூத்தனின் புன்முறவல் இங்கே இல்லை. அண்டத்தை காக்க தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தை எண்ணி ஒரு நிமிடம் …நெற்றிக் கண்ணோடு அந்த முகத்தில் இருக்கும் பாவம்.

இந்த சிலையில் ஜடாமகுடம் சற்றே உயர்ந்து காணப்படுவது இதன் காலத்துக்கு ஒரு அறிகுறி. அதில் கொன்றைப் பூ மற்றும் பிறைச் சந்திரன் அருமை. இங்கு மகுடத்தில் ஒரு புதிய அணிகலன் காணப்படுகிறது. பல முனைகளை கொண்ட சூலம் போன்ற ஒரு அணிகலன் நாம் முதன் முறையாக இந்த சிலையில் பார்க்கிறோம்.

உடல் அமைப்பு அருமையிலும் அருமை. அந்த இடை கொள்ளை அழகு. மார்பின் மேலே யக்நோபவீதத்தின் (புரிநூல்) முடிச்சு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் மூன்று இழைகளாக பிரிந்து ஒன்று வலது கையின் மேலே செல்கிறது. இந்த பாணி பல்லவர் காலத்து சிலைகளிலும் சிற்பங்களிலும் வெகுவாக நாம் பார்க்கலாம். பட்டையாக வேப்லைபாடுகள் கொண்ட உதரபந்தம் உள்ளது.




இரண்டு கரங்களை ஒரு பக்கத்தில் காட்ட முயற்சிக்கிறான் சிற்பி, அதனால் கைகளின் மேல் பகுதி சற்றே தடிமனாக உள்ளது. இதை கொண்டு இது ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வடிக்கப்பட்டதென்று கருதலாம.

ஆனால் கை முட்டிக்கு கீழே அபாரம். ஆபரணங்கள் மகுடத்தில் உள்ள புதிய வடிவத்தை ஒத்து உள்ளன. இதனை ஒத்து பார்க்கும் பொது நடேசர் சிலையின் மிக குறைவான அணிகலன்களை கொண்டு அதன் காலம் இந்த சிலையை விட முன்னதாக நிர்ணயிக்கப்படுவதை நாம் உணரலாம்.

மேல் கைகள் ஒரு பக்கம் மழு , மறு பக்கம் மான். இங்கே நாம் பார்க்கவேண்டியது மழு எப்படி கையினுள் உள்ளங்கையில் படும்படி இருக்கிறது. நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் இரு விரல்களில் அது இருக்கும்.

மான் குட்டி மிக சுட்டி. ஆஹா என்ன அழகாக தந்து முன்னங்கால்களை மடக்கி – ஒரு வேளை ’வேண்டாம் செய்யாதீர்கள்’ என்றோ அல்லது ’ஆஹா தம்மைப் போன்ற உயிரினங்களையும் வாழவைக்க நீங்கள் செய்யப் போகும் மகத்தான காரியம்’ என்று போற்றி வணங்குகிறதா ?

உடலில் தோலுக்குள் இருக்கும் எலும்பு, அதன் மேலே படியும் சதை, அதை சுற்றி இருக்கும் துணி என்று அனைத்தையும் ஆய்ந்து தன் திறமையை வெளிப்படுத்துகிறான் சிற்பி. அந்த வலது காலை பாருங்கள்.

இடுப்பில் ஆடை உக்ரமுக பதக்கதில் இருந்து வெளி வருவது போல வடிவம் உள்ளது. உத்சவ மூர்த்தி என்பதால் பவனி வருவதற்கு எதுவாக கைப்பிடிகள் , நல்ல தடிமனான பீடம் எல்லாம் உள்ளன.

தோள்களின் மேல் தவழும் அவரது கூந்தலில் ஒரு மலர் – ஆஹா என்ன அழகு.


பின்புறம் சென்று பார்க்கும் பொது தான் அந்த சிகை அலங்காரத்தின் முழு அழகு தெரிகிறது.

மிக அழகான சிரஸ் சக்கரம், முன்னர் பார்த்த வடிவங்களை விட இந்த வடிவம் புதியது என்பதற்கு இன்னும் ஒரு காரணம். சிரஸ் சக்கரத்தில் இருந்து விரியும் கூந்தல், அதில் ஒன்று எப்படி அந்த கழுத்து மாலையின் பின்னல் தொங்கும் பட்டையின் மேலே தவழ்கிறது பாருங்கள்.

அப்படியே வளைந்து தோள்களின் மேல் படரும் கூந்தல் எழில் சொக்க வைக்கிறது.

கீழ் இரண்டு கைகள் தான் நமக்கு மிகவும் முக்கியம்.

இடது கையில் ஒரு பெரிய நாகம், படம் எடுத்து மகேசனை நோக்கும் வண்ணம். ஒரு வேளை வலது கையில் இருக்கும் விடத்தின் தன்மையை விளக்க சேர்க்கப்பட்டதோ.

வலது கையில் ஆலகால விடம்

அனைத்தையும் சேர்ந்து பார்க்கும்போது தான் சிற்பத்தின் உள்ளுணர்வு நமக்கு புரிகிறது.

ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதோ ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

மீண்டும் ஒரு முறை திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி கூறி, அவருக்கும் அவரதுமகத்தான பணியில்துணை நிற்கும் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவியை தவறாமல் செய்யுங்கள் என்று கூறி, 250 பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டம் அளித்து எங்களை வழி நடத்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

ஒக்கூர் ந​டேசன் – முதன் முதலாக ​வெண்கலச் சிற்பத்தில் ஈசனின் ஆனந்த தாண்டவம்

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது – எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் – பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) – மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் – முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் – 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன – நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு – த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் – தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!

தெய்வக் குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை – கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது – துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் – அவரது பிரதான சிஷ்யை – மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் – அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் – திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

பெண்ணடத்திற்கு மிக அருகில் – திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி – அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது – மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…

ஆயிரம் பொன் – ஒரு பொற்கிழி

சரியான பாட்டுக்கு மன்னர் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறார் !

எவ்வளவு பொன் ?

ஆயிரம் பொன் ?

ஒண்ணா ரெண்டா ! ஆயிரம் பொன் ! சொக்கா !!

தமிழர் எவருக்குமே தருமியாக நாகேஷ் அவர்களின் இந்த வசனத்தை மறக்க வாய்ப்பேயில்லை. ஆனால் இன்று நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ? ஒரு மன்னன் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் அளிக்கும் நிகழ்ச்சி மெய்யாக நடந்திருக்குமா. அந்த நாளைய தங்கத்தின் விலையை மனதில் வைத்திருந்தாலும் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் என்பது இந்தக் காலத்து சினிமா ஸ்டார்களுக்கும் கிரிக்கட் வீரர்களுக்கும் கிடைக்கும் சம்பளத்தை காட்டிலும் மிகப் பெரிதாக இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுக்கு முன் நமது நாட்டின் செழுமை , வளங்கள் அனைத்தையும் மனதில் கொண்டாலும் இது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.

தமிழர் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய திரு ராஜ ராஜ சோழர் காலத்தில் தான் முதன் முதலில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டன. அதுவரையிலும் ரோமானிய தங்க காசுகள் தான் புழக்கத்தில் இருந்தன. அப்படி இருக்கையில் அந்த அற்புத ஆட்சியில் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் வழங்கும் செல்வம் இருந்ததா ?

நம்மில் பலருக்கும் இந்த ஐயம் வந்திருக்கும். அதனால் நாணயஇயல் நிபுணர் திரு ராமன் அவர்களை சந்திக்கும் போது அவரிடத்தில் கேட்டு தெளிவு பெற்றேன். ஆனால் முதல் கேள்வி அந்த தங்க காசு பார்க்க கிடைக்குமா ? எந்த காசு ? ராஜ ராஜா சோழர் காலத்து தங்க காசு?

அதை எடுத்து வர சென்ற பொது மேஜையில் சிறு கிழி ஒன்று இருப்பதை பார்த்தேன். சிறிய அளவு என்றாலும் அழகிய வடிவம், கச்சிதமான மூடி என்று மிகவும் அழகாக இருந்தது.

அது தான் பொற்கிழி என்றார் திரு ராமன்.

ஆஹா. அந்நாளில் இதில் தான் காசுகளை போட்டு தருவார்களோ ? மிகவும் சிறியதாக உள்ளதே. இதில் எத்தனை காசுகளை போடமுடியும் என்ற கேள்விகள் எழுந்தன.

காசை எடுத்து கையில் தந்தார்.

தங்கக் காசு, சோழர் கால தங்கக் காசு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அச்சிட்ட காசு. உடலில் மயிர் கூச்சலிட உள்ளங்கையில் பக்தியுடன் வாங்கியது தான் தெரியும் – எவ்வளவு சிறியது , கையில் எடையே தெரியவில்லை – அவ்வளவு மெல்லிய தகடு போல இருந்தது.

கண்ணையும் மனதையும் பிரித்த அந்த பொற்காசு , ஐயத்தையும் தீர்த்தது, இப்படி இருப்பின் ஆயிரம் பொன் என்ன, பத்தாயிரம் பொன் கூட தாராளமாக பரிசளிக்கலாம் !!

தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன?

பெரிய கோயில் போன்று உலகப்புகழ் பெற்று திகழும் ஆலயத்தை ஒட்டி இருக்கும் கதைகளும் பல. நாம் முன்னரே விமானத்தின் நிழல் பற்றி பார்த்தோம். இன்று அதே போன்று இன்னொரு பரவலாக கேட்கப்படும் கேள்வி…தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன? ஆம் வடிவங்கள்தாம் – ஒன்றல்ல – இரு இடங்களில் புடைப்புச் சிற்பம் மற்றும் புகழ் பெற்ற சோழர் கால ஓவியங்களில் புத்தர் வடிவம் உள்ளது.

( படங்களுக்கு நன்றி : திரு சதீஷ் , திரு அரவிந்த் மற்றும் நண்பர் ஓவியர் திரு தியாகராஜன் – பெரிய கோயில் ஓவியங்கள் நூல் )

திரிபுராந்தகர் பற்றிய குறிப்புகளை முதலில் பாருங்கள். ( நன்றி திவர்கர் சார்)

தாராசுரன் எனும் அசுரனின் புதல்வர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் மூவரும் மிகச் சிறந்த சிவபக்தர்களாக இருந்தனர். இவர்களுக்கு இந்த சிவபக்தியால் கிடைத்த தவ வலிமையைக் கொண்டு படைப்புக் கடவுளான பிரும்மனை நோக்கி நெடுங்காலம் கடுந்தவத்தைச் செய்தார்கள். அந்தத் தவத்தின் பலனாக திரிபுரம் எனச் சொல்லப்படும் மூன்று நகரங்களைப் பெற்றனர். மூன்றும் பறக்கும் தன்மை உடையது. அவைகள் கொண்டே பல காலம், இந்த அசுரர்கள் தங்கள் எதிரிகள் அனைவரையும் வென்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தீராத தொல்லையைத் தந்து கடும் இன்னல் விளைவித்தனர்.

அவர்களின் தொல்லை தாங்காது, அனைவரும் சிவனிடம் முறையிட்டார், சிவ பெருமான் தக்க நேரத்தில் அவர் குறை தீர்ப்பதாய் சொல்லி விட்டார். இந்த திரிபுர அசுரர்கள் எப்போதும் சிவபக்தியை தக்க வைத்துக் கொண்டிருந்ததும், அந்த பக்தியினால் ஈசன் அசுரர்களை அழிக்காமல் விடுவதாக ஒரு எண்ணம் தேவர்கள் மத்தியில் எழுந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த அசுரர்களை அழிக்கவேண்டுமென்றால் ஈசன் ஒருவனால்தான் முடியும் என்பதைத் தவிர, இந்த பறக்கும் நகரங்களான முப்புரங்களும் அழிய ஒரு குறிப்பிட்ட நாள் வேண்டும், அதாவது இந்த நகரங்கள் பூசத் திருநாளன்று ஒரு நேர்க்கோட்டில் வான் வழியே கூடும். அந்தத் திருநாள் வரும்போது மட்டுமே அழிபடக்கூடிய ஒரு சிறப்பான வரத்தைப் பெற்றிருந்தனர் இந்த அசுரர்கள். ஆகையினால் இந்த முறை வரும் அந்த பூசத் திருநாளை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு விஷ்ணுவிடம் அவர்கள் வழி கேட்டனர். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு தேவர்களைக் காக்கும் விதமாக முன்வந்தார்.

ஞானகுருவின் வடிவான புத்ததேவன் உருக்கொண்டு அசுரர்களிடம் குருவாக தோன்றினார். சிவபக்தியில் சிறந்த அசுரர்களை தெய்வநோக்கம் என்பது வல்லவர்களுக்குத் தேவையான ஒன்றல்ல என்பதையும் அசுரர்கள் எல்லா வல்லமையும் ஏற்கனவே பெற்ற போது தெய்வத்தின் துணையை அவர்கள் நாடுவது நல்லதல்ல என்பதையும் போதித்தார். புத்த போதனையை திரிபுர அசுரர்கள் மேற்கொண்டனர். சிவசிந்தனையும் அவர்கள் மனதை விட்டு அகன்றது.

இதுதான் சமயம் என தேவர்கள் மறுபடியும் ஈசனின் கருணை வேண்டி சிவனிடம் சென்றபோது, சிவன் சம்மதித்தார். தேவர்கள் அனைவரையும் தனக்குத் துணை வருமாறு அழைத்தார். அசுரர்களின் பறக்கும் நகரங்களை அழித்திட ரதம் ஒன்றை வடிவமைத்தனர். வரம் கொடுத்த பிரும்மன் சாரதியாக, மேருமலையே வில்லாக, மாலவன் அம்பாக, சூரிய சந்திரர்கள் ரதத்தின் இரு சக்கரமாக, ஈசன் அந்தத் தேரில் பறக்கும் நகரங்களை நோக்கி போர் செய்யப் பயணித்தார்.

எதையும் யாவற்றையும் ஆக்கி, காத்து, அழித்து மறுபடியும் உருவாக்குபவர் எனும் பெயர் கொண்ட ஈசனுக்கே இந்த அசுரர்களை அழிக்க இத்தனை உதவிகள் தேவையா எனக் கேள்வி உருவாகக்கூடும். உருவானது கூட தேவர்களின் மத்தியிலே.. அவர்களுக்கு இதனால் ஆணவம் கூட வந்தது. எத்தனைதான் ஈசனே ஆனாலும் தம் உதவியில்லாமல் ஈசனால் கூட சில காரியங்கள் நடக்காது என்பதாக உணரத் தலைப்பட்டனர்.

ஈசன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு என்பதையும் மறந்தனர். எந்தவொரு முக்கிய செயலும் கூடிச் செய்தால்தான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்பதற்காகவே ஈசன் தம்முடன் தேவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார் என்பதையும் மறந்தனர்.

திரிபுரத்தை அழிக்கும் வேளை வந்த அந்தச் சமயத்தில் தேவர்கள் ஆணவத்தை உணர்ந்த ஈசன் இவர்களுக்கும் ஒரு சிறிய பாடம் எடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ.. பூசத் திருநாளன்று முப்புரங்களும் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு சிறு மென்னகை செய்தார், அந்த மென்னகையே அந்த திரிபுரங்களை தீ பற்றி எரிக்கத் தொடங்கியது.

”பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்”

என்பார் சுந்தரர். கண்ணிமை நொடிக்குமளவில் புரம் மூன்றையும் எரித்தவனாகப் பாடுவார்,

ஈசனுக்கு உதவியாக வந்த தேவர்கள் திகைத்தனர். ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த தேவர்கள் தம் தவறுக்கு வருந்தினர். ஈசனின் தாளை நினைந்து பணிந்தனர். அனைவரும் கூடிச் செயல் புரிதலின் அருட்தன்மையும் உணர்ந்தனர். ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தார். அவர்களின் உதவியையும் ஏற்று மாலவனான தன் அம்பை அசுரர்களை நோக்கி ஏவி விட, திரிபுரம் மூன்றும் மொத்தமும் எரிந்து அசுரர்களும் அழிந்தனர். திரிபுர அசுரர்களை அழித்து மூவுலகமும் காத்து அருள்செய்த ஈசனை ‘திரிபுராந்தகர்’ என்று தேவர்களும் முனிவர்களும் வழிபடத் தொடங்கினர்.

சரி, இப்போது சிற்ப்பங்களை பார்ப்போம். முதல் புடைப்புச் சிற்பம்.

இன்னும் அருகில்

மேல் வரிசையில் மூவரை நான்றாக அடையாளம் காண முடிகிறது – மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நடு வரிசையில் திரிபுர சண்டை காட்சி போல தெரிகிறது. கடைசி வரிசை முடிவடையாத நிலையில் உள்ளது

8866
8869

பக்கத்துக்கு வரிசைக்கு வருவோம். மேலே புத்தர் – அருகில் அவர் சொல்வதை பணிவுடன் கேட்டு நிற்கும் திரிபுர அசுரர்கள்

அடுத்த வரிசையில் – சண்டையில் தோற்று விழும் அசுரர்கள் போல உள்ளது. அருகில் நிற்பவர்கள் கை பாவங்களை பார்தால் மகேசனிடம் சரணடைய சொல்வது போல உள்ளது.

அடுத்த வரிசையில் தலை மீது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் காட்சி.

அடுத்த சிற்பத்தில் இதே காட்சி சற்று வேறு விதமாக உள்ளது.

முன்னர் பார்த்தவாறே புத்தர் , அருகில் அசுரர்கள்

இங்கே பாருங்கள் தனது ரதத்தில் கம்பீரமாகும் நிற்கும் மகேசன், பிரம்மன் சாரதியாக…

முடிவாக புகழ் பெற்ற சோழ ஓவியங்கள் – அதில் வரும் திரிபுர தகனம் காட்சி. நாம் முன்னரே பார்த்தது தான்.

இங்கே மேலே புத்தர், தேரின் மீது மகேசன், தேரோட்டியாக நான்முகன், அருகில் மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நாம் கவனிக்க வேண்டியது பல்லவர் காலத்திலேயே புத்தரை பெருமாளின் அவதாரமாக சித்தரிக்கும் முயற்சி எழுந்துள்ளது. ஆனால் அந்த புத்தர் தான் சாக்கியமுனியா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனாலும் இங்கே நாம் பார்த்தமட்டில் புத்த வடிவங்கள் அளவிலும் சரி, அமைப்பிலும் சரி ஒரு மதிப்புக்குரிய பாவத்தில் தான் உள்ளன.

மகேசன் என்றும் பதினாறு என்று அவனை வரமளித்து காத்திட்டார், ஆனால் காமரசவல்லியில் உள்ள இந்த அற்புத கோயில் ?

“ஏதாவது செய்யணும் விஜய் !” நான்கு மாதங்களுக்கு முன்னர் அர்விந்த் மற்றும் சங்கருடன் நடந்த தொலைபேசி உரையாடல் இன்னும் காதில் ஒலிக்கின்றது.

காமரசவல்லி ஆலயத்தின் நிலையை கண்டு மனம் உடைந்த அவரது குரல் தான் அது. நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் சாஸ்வத் காமரசவல்லி செல்கிறோம் என்றதும் உடனே அங்கு இருக்கும் நிலையை விளக்கும் ஒரு பதிவு நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று சொன்னேன். ’என்றும் பதினாறு’ என்று வரம் அளித்து காத்த கதை சொல்லும் சிற்பம் இருக்கும் ஆலயத்தின் அவல நிலையை தரும் இதோ அந்த பதிவு.

நாம் முன்னரே பலமுறை பார்த்த கதை. மரண பயம் அனைவருக்கும் வரும் பயம். அதை வென்று அழியாப் புகழ் பெற்ற பாலகனின் கதை தான் இன்று நாம் பார்ப்பது. மிருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்வதியும் மகப்பேறு ஒன்றும் இல்லாமல் துயரத்தில் இருந்தனர். முடிவில் அவர்கள் வணங்கும் சிவனாரிடமிருந்து துயர் துடைக்கும் வரம் கிடைக்கிறது. ஆனால் அதில் ஒரு முடிச்சு – அனைவரும் புகழும் புத்திக் கூர்மை உடைய ஆனால் சிறு வயதிலேயே அவர்களைப் பிரிந்து மடியும் மகன் வேண்டுமா அல்லது பல வருடங்கள் அவர்களுடனே இருக்கும் முட்டாள் மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த முடிச்சு.

’குறைவாக இருந்தாலும் அறிவும் பக்தியும் நிறைந்துள்ள புத்திசாலி மகனே வேண்டும்’ என்று இருவரும் கேட்க அப்படியே பிறக்கிறான் மார்க்கண்டேயன். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவ பக்தனாக விளங்குகிறான். ஆனால் அந்த பாலகனின் பதினாறு அகவை முடிந்த நிலையில் தவணை முடிந்த வாகனத்தை பறிக்கும் சர்வ வல்லமை படைத்த கடனாளி வங்கி காவலன் போல வருகிறான் காலன். பயம் கொண்டு சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு நிற்கும் சிறுவனைக் கண்டு தனது பாசக் கயிற்றை வீசுகிறான் எமன். அப்போது தன்னிடத்தில் சரணடைந்த பக்தனின் குரல் கேட்டு சீறி எழும் மகேசன் காலனை உதைத்துத் தள்ளிவிட்டு, தன் பக்தனான மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக இருக்க வரம் அளித்து விடுகிறார்.

இந்தக் காட்சியைத்தான் சிற்பி காமரசவல்லி சிற்பத்தில் எடுத்துக்கொள்கிறான். கொள்ளிடத்தின் வடக்கே , நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இந்த ஆலயம். அதன் வடக்கு பக்கம் உள்ள சுவரில் காணும் காட்சி.

பிள்ளையார் சிற்பத்தின் அடியில் காணும் சிறு சிற்பம் தெரிகிறதா. ?

இதோ அந்த காட்சி.

கையளவு கல்லில் கதை சொல்லும் கலை. லிங்கத்தை கட்டி அணைத்து இருக்கும் மார்க்கண்டேயன். பின்னால் திரும்பி தன்னை நெருங்கும் ஆபத்தை கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம்…அவனை அடுத்து எமன். ஐயனின் காலில் புத்தி படும் வண்ணம் இருந்தாலும், எட்டி தன் இரையை பிடிக்க முயலும் எமன். அவன் மீது ஆக்ரோஷமாக ஆடும் மகேசன் – காலசம்ஹார வடிவத்தில் – நான்கு கைகள், ஒரு பக்கம் அனல் பறக்கும் கோபம் அதே உருவத்தில் பக்தனை ஆட்கொள்ளும் கருணை உருவம். அனைத்து காட்சிகளின் உணர்வையும் அப்படியே படம் பிடித்துக் கட்டும் அற்புதச் சிற்பம்.

இதே வடிவம் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு சிறிய சிற்பத்தில் இத்தனை உணர்வுகளை கொண்டு வருவது மிக மிகக் கடினம். உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோயிலில் உள்ளே இதே வடிவத்தை ஒப்பிட்டு பார்ப்போம். என் பார்வையில் பிரம்மாண்ட அளவில் உள்ள இந்த சிற்பத்தை விட காமரசவல்லி சிற்பத்தில் உணர்ச்சிகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதே போல இரு மார்க்கண்டேய வடிவங்கள்.

ஒரு இடத்தில மண்டியிட்டு நிற்கும் வண்ணம் இருந்தாலும், பெரிய கோயில் இந்த கதையில் உள்ள மூன்று பேரையும் பிரித்து தனித் தனியே காட்டுகிறது

மிகச் சிறிய சிற்பம் என்பதால் முகபாவங்களில் காட்ட முடியாத உணர்ச்சிகளை உடல் தோற்றங்களின் சிறு நெளிவுகளில் காட்டி நமது மனதை கொள்ளை கொள்கிறான் காமரசவல்லி சிற்பி.

இப்படி ஆலயத்தில் எங்கும் நுண்ணிய சிற்ப்பங்கள் – குறைந்தது இருபத்து ஐந்து இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். இங்கும் அங்கும் இரைந்து கிடக்கும் உடைந்த தூண்கள் மனதை நெருடுகின்றன. புனரமைப்பு என்னும் பெயரில் விமானத்தில் வேலை துவங்கி நடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை பார்க்கும் முன்னர் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.


ஏதாவது செய்ய வேண்டுமே விஜய் !!!!