சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-இரண்டாம் பாகம்

பல நேரங்களில் நம் கண் முன்னே, நாம் பலமுறை பார்த்த, பொருள்களில் உள்ள நுணுக்கங்களை ஏனோ கேள்வில்களை எழுப்புவதில்லை. ஆனால் அதை யாரவது கை காட்டியதும் ” அடடே – ஆமாம் இதுவா ” என்று நம்மை சிந்திக்க வைக்கும். அது போலவே இன்று நண்பர் சாஸ்வத் வீணையின் நுனியில் இருக்கும் யாளியை நமக்கு காட்டுகிறார்.

இந்து நாளிதழில் இவ்வாறு சிங்க தலை என்று உள்ளது ! இது சிங்க தலையா ??

கண்டிப்பாக இல்லை. யாளி தான். …மேலும் விவரிக்கிறார் சாஸ்வத் – எசாலம், இரண்டாம் பாகம்

முதல் பகுதியில் இந்த அற்புத டக்ஷினமுர்த்தி வடிவம் என்ற குறிப்பை மட்டுமே சொல்லி அது இருக்கும் இடத்தை மட்டும் சொலிவிட்டு அடுத்த சிற்பங்களுக்கு சென்றுவிட்டேன் . இன்று இந்த அற்புத வீணாதார வடிவத்தை அருகில் சென்று காண்போம்.

தக்ஷினமுர்த்தி வடிவம் எனபது சிவன் குருவாக இருப்பது. சாதாரண குரு அல்ல குருவுக்கு எல்லன் குரு. திரு கோபிநாத் ராவ் ( பல சிற்பக்கலை மாணவர்களுக்கு முதல் குரு இவர்) இவ்வாறு தனது நூலில் இந்த வடிவத்தை பற்றி சொல்கிறார்.

“சிவன் – யோக கலை, சங்கீதம், நாட்டியம் என்று பலவற்றில் வல்லுநர். இவ்வாறு அவற்றை நமக்கு கற்றுக்கொடுக்கும் வடிவமே தக்ஷினமுர்த்தி வடிவம் . இந்த வடிவத்தையே இக்கலைகளை பயில துவங்கும் மாணவர்கள் முதலில் வழிபட வேண்டும்.”

மேலும் – இந்த வடிவம் நான்கு அம்சங்களை கொண்டது – யோக குரு, வினை மீட்டும் கலை, ஞானத்தை – சாஸ்திரங்களை விளக்கும் – வியாக்யானமூர்த்தி. இந்த வடிவத்தை தான் பெரும்பாலும் ஆலயங்களில் தெற்கு திசையில் காண முடியும்.”

இங்கேயும் அதே திசையில் தான் அவர் இருக்கிறார்.

துரதிருஷ்ட வசமாக சிலை சேதம் அடைந்துவிட்டதால் யாரோ அதற்கு முன்னர் புதிதாக ஒரு சிலையை நிறுவி உள்ளனர். நமது பார்வைக்கு சோழர் கால சிலையை அது மறைத்து விடுகிறது.

வீணாதார தக்ஷிணாமூர்த்தி – சங்கீத குரு – இது இன்னும் சற்று அரிய வடிவம். எனினும் பல ஆலயங்களில் இவரையும் நாம் காணலாம். கங்கைகொண்ட​சோழபுரத்தில் இதோ ..

இன்னும் சற்று பழமையான சிலை – கீழையூர்

நிற்கும் பாணியில் உள்ள வடிவங்கள் – கொடும்பாளூர் மற்றும் லால்குடி

இதோ எசாலத்தில்

சிற்ப ஆகமங்களின்படி பார்த்தால் வியாக்யான வடிவத்திற்கும் வீணாதார வடிவத்திற்கும் வீணை தான் வித்தியாசம்! அதுவும் அந்த குடம் வலது ​தொடைமேலே இருப்பது. ஜடா முடி, தலையில் ஊமத்தம்பூ, கபாலம், பிறை, கையில் அக்ஷரமாலை, பாம்பு, தீ, மான் என்று எல்லாம் இருக்கும் – ஆனால் குரு என்பதால் ஆயுதம் தரிப்பது இல்லை போல!

முதல் பாகத்தில் பார்த்த மாதிரி – வியாக்யான வடிவத்திற்கு மேலே விமானத்தில் வீணாதார வடிவம் உள்ளது. அந்த உயரத்தில் பலவற்றை காண முடியவில்லை. இருந்தாலும் அந்த முகமும் வீணையும் என்னை ஈர்த்தது.

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அதன் அழகை பற்றி என்ன எழுதுவது !!

தலைப்பட்டி அழகாக சிரத்தில் – காற்றில் சடா முடி பறந்து முகத்தில் விழாமல் இருக்கவோ ? காதில் அணிகலன், தலையில் வலது புறம் பிறை சூடி …

கழுத்தில் பல்வேறு அணிகலன்கள் – யக்​​ஞோபவீதம் என்று அந்த உயரத்திலும் சிற்பி ஒன்றை கூட விடாமல் செதுக்கிய அழகு அபாரம். ஒருநாள் சாரம் கட்டி மேலே ஏறி இடுப்பில் சிங்கமுகப் பட்டி இருக்கிறதா என்று பார்த்துவிட வேண்டும். அவ்வளவு உயரத்தில் சென்று யாரடா பார்க்கப் போகிறார்கள் என்று விட்டு விடாமல் ​செதுக்கிய அந்தக் காலத்து கலைஞனின் கடமை உணர்ச்சியை எப்படி பாராட்டுவது ?

சரி, வீணைக்கு வருவோம். வலது புறம் குடம் ​தொ​டையில் நிற்கிறது. சற்றே வெளியில் வந்த வண்ணம் – ஆகமங்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றன – வலது கரம் மீட்டும் வண்ணம் அருமை.

இடது புறம் வீணையின் முகத்தில் – இன்று உள்ள வடிவம் போல வளைத்து இல்லாவிட்டாலும் – அங்கே யாளி முகம் தெளிவாக தெரிகிறது.

இந்த வடிவத்தின் காலம் – ராஜேந்திர சோழர் காலம் – அதற்கு அவர் பல சான்றுகளை விட்டுச்சென்றுள்ளார். இதுவும் கங்கைகொண்ட சோழபுரமும் சம காலமாக இருக்க வேண்டும்.

இரண்டையும் சிற்ப வடிவங்களை கொண்டு தெளிவாக குறிக்க இயலும்.

ஒரே போல இருக்கின்றன அல்லவா? இப்போது முதலில் பார்த்த வடிவங்களை கொண்டு ஒப்பிடுங்கள்.

இவை காலத்தால் சற்றே முந்தைய வடிவங்கள் – ஆதித்ய சோழர் காலம் – சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வடித்த வடிவங்கள். இன்னும் காலத்தில் பின்னால் சென்றாலும் இந்த வடிவத்தை நாம் காணாலாம் – ராஜசிம்ஹா பல்லவர் காலம் – காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து வடிவம் இதோ.

கர்நாடகத்தில் உள்ள நரசமன்கலம் சிற்பம்.

இந்த வடிவங்களில் குடம் இடம் மாறி உள்ளது – நாம் முன்னர் கண்ட பதிவில் இது போன்ற பல வடிவங்களில் குடம் மேல் பக்கம் இருக்கும் வண்ணம் உள்ளன.
அப்படியானால் வீணைகள் முதலில் குடம் மேலே இருக்கும் படி வடிக்கப்பட்டு – பின்னர் அந்த பழக்கம் மாறியதா? இல்லை இரண்டு வடிவங்களுமே அந்நாளில் இருந்தனவா? அப்படி என்றால் எதற்காக ராஜேந்திர சோழர் காலத்தில் எல்லா சிற்பங்களிலும் ஒரு சேர குடத்தை கீழ்ப்பக்கம் வைக்கத் துவங்கினார்?

இப்படி ஒரு ஆராய்ச்சி செய்தால் இசையும் சிற்பமும் மேலும் சங்கமிக்கும் என்பது உறுதி ! குரு இன்னும் நமக்கு ஏதோ சொல்லித்தருகிறார் போல!

இன்னும் இருக்கிறது. முன்னர் இந்த வடிவத்தை கீழிருந்து காண்பது கடினம் என்று சொன்னேன் அல்லவா – பின்னர் எப்படி படம் எடுத்தேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆலயம் மணற்மேட்டில் புதையுண்டு இருந்தது. அதாவது காலப்போக்கில் அருகில் உள்ள கிராமம் வளர வளர தரையின் சமன் மேலே ஏறி விட்டது. அதனால் அருகில் உள்ள மேட்டில் ஏறி இந்த சிற்பத்தைப் பார்த்து விடலாம்.

அப்படி நாங்கள் சென்ற ​போது இன்னும் ஓரிரண்டு ஆச்சரியங்கள் எங்களுக்கு தென்பட்டன. மிகவும் பழமை வாய்ந்த கிராம தெய்வ வடிவங்கள் அவை. அவற்றைப் பற்றி ……தொடரும்

சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-முதல் பாகம்

நண்பர் சாஸ்வத் போன்ற கட்டிளம் கா​ளைகள் நமது வரலாற்றுசின்னங்களின் மேல் காட்டும் அக்கறை மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நம்மை அவர் தன்னுடன் எசாலம் கூட்டிச் செல்கிறார் – அப்படி அங்கே என்ன ஸ்பெஷல் ? மேலே படியுங்கள்

மார்கழி மாதத்தின் ஒரு காலைப்பொழுதில் சோழர் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தைக் காண ஒரு சிறிய குழுவாக பல சரித்திரங்களைக் கண்ட முக்கிய சாலை வழியே நாங்கள் சென்றோம்.

அன்று காலை நாங்கள் சந்திக்கும்போது திரு. அரவிந்த் அவர்கள் நாங்கள் காணவிருந்த நான்கு கோவில்களைப் பற்றி விவரித்தார். சென்னையிலிருந்து ஒரே நாள் பயணத்தில், ஒன்றுக்கொன்று வெறும் 5 கி.மீ. தொலைவிற்குள் அந்த நான்கு கோவில்களும் அமைந்திருக்கின்றன. நாங்கள் செல்லவிருந்த இடங்களின் பட்டியலில் “எசாலம்” என்கிற பெயரைக் கண்டதும் எனக்குள் பெரும் பரபரப்பு. அது ஒரு முழுமையான கற்றளி (விமானத்தையும் சேர்த்து – இது சற்று அரிதாகும்), மேலும் மிகுந்த அழகுடைய வீணாதார தக்ஷிணாமூர்த்தியும் அங்குள்ளது என்பதைத் தவிர வேறென்ன எதிர்நோக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. கோவிலைப் பற்றி சொல்வதற்கு முன்பு எசாலத்தைக் காண நான் ஏன் இத்தனை பரபரப்புடன் இருந்தேன் என்று சொல்லிவிடுகிறேன்.

ஒருஆட்சியாளர் நிறுவிய கோவிலைப் பற்றி அக்கோவில் கூறும் விவரங்கள் மிகவும் குறைவேயெனக் கூறலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அதனை கட்டிய முதலாம் ராஜேந்திரசோழரைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. தன் தந்தையைப் போல் அல்லாது “கங்கை வரை கைப்பற்றிய சோழன்” என்பதே ஒரு புதிராக உள்ளது. ஏனெனில், இக்கோவிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் முதலாவதே அவரது இரண்டாவது மகன் வீரராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தியதுதான். அவர் யார்? அவரது குறிக்கோள் என்ன? அவரது தூண்டுதல் யார்? – இவையனைத்தும் மிகவும் கடினமான கேள்விகளே!

இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய உதவும் இடங்களில் ஒன்று தான் ஈசாலம். பலஅற்புதமான அழகிய வெண்கலச் சிலைகளுடன் ஒரு தானசாஸனச்செப்பேடு கண்டெடுக்கப்பட்டது இங்குதான்.


இந்தச் செப்பேட்டினை மொழிபெயர்த்த டாக்டர். நாகசுவாமி அவர்கள், “ஆகஸ்டு 11, 1987ல் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தின் அருகே உள்ள ஈசாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள ராமநாதேஸ்வர திருக்கோவிலின் புனரமைப்புப் பணிகளை நடத்தும்போது, அக்கோவிலின் உள்ளே பல வெண்கலச் சிலைகள், கோவில் பாத்திரங்கள் மற்றும் செப்பேடு ஒன்றையும் கண்டெடுத்தனர்” என்று கூறுகிறார். இந்தச் செப்பேட்டில் உள்ள விவரங்கள் முக்கியமானவை, சுவாரசியமானவை. அதன் முழுமையான விவரங்களை மேலேயுள்ள சுட்டியில் காண்க. மேலே செல்வதற்கு முன் சில முக்கிய செய்திகளை இங்கேஅறிந்து கொள்வோம். இந்த சாஸனம் ராமநாதேஸ்வரர் எனும் பெயர் கொண்ட சிவபெருமானுக்கு காணிக்கையாக புதிய தேவதானம் உருவாக்கப்பட்டதின் விவரங்களைக் கூறுகிறது. இந்தக் குறிப்பின் மூலம் நாம் இவ்விடத்தைப்பற்றி அறியும் முக்கியத் தகவல் என்னவென்றால் இது ஒரு சாதாரண கோவில் அன்று. இக்கோவில் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டு அவரது குருவும், தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் முதன்மை குருக்களும் (இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் முதன்மை குருக்களாகவும் இருந்திருக்கக்கூடும்) ஆகிய சர்வசிவ பண்டிதருக்கு அளிக்கப்பட்டது. சோழர்களில் மிகுந்த பலம் பொருந்திய மன்னனால் கட்டப்பட்டு தனது ஆசானுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இக்கோயில் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக நாட்டிலுள்ள சிறந்த கைவினைஞர்கள் இங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது இக்கோவிலைக் கண்டால் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

கோவிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது நமக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சிறிய கோபுரம், இக்கால வடிவமைப்பில் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் நம்மை வரவேற்கிறது.

உள்ளே சென்றபின் தான் அழகிய சோழர் கோவிலைக் காண்கிறோம்.

நம் கண்களில் முதலில் தென்படுவது பெரிய உருண்டையான விமானமும் ( அபுதாபிக்கு வந்துவிட்டோமோ ?), அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வேலைப்பாடமைந்த பலிபீடமும்தான்.


சட்டங்களில்அழகிய வேலைப்பாடுகளும், ஆடும் மங்கையரும் கொண்ட கருங்கல் ஜாலி கோவிலின் முகப்பில் அமைந்துள்ளது.


மேலும் உள்ளே செல்லும் வழி இடதுபுறத்திலுள்ளது.

கோவிலின் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கோவிலைச் சுற்றி கோஷ்ட தேவதைகள் அமைந்துள்ளனர் – முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை




அடுத்த பகுதியில் தொடரும் …

எசாலம் செப்பேடு படங்களுக்கு நன்றி – திரு ராமன் அவர்கள்.
தமிழாக்க உதவி – திருமதி பர்வதவர்தினி

கையளவு கல்லில் சோழ சிற்பியின் காவியம் – புஞ்சை

புரனமைப்பு என்ற பெயரில் பல அருமையான சோழர் கோயில்களை சிதைந்த நிலையில் பார்த்த எங்களுக்கு – புதிதாக எந்த கோயிலுக்கு சென்றாலும் முதல் வேலை கோபுர வாயிலை தாண்டியதும் வெளியில் சென்று பழைய வேலைபாடு ஏதாவது மிஞ்சி இருக்கிறாதா என்று பார்ப்பதே ! அப்படி ஏதாவது தென்பட்டால் குச்சி ஐஸ் கிடைத்த மாணவனைப்போல ஒரு ஆனந்தம் ! அதுவும் அங்கே சோழர் கால சிறு / நுண்ணிய சிற்பம் இருந்துவிட்டால் தேன்மிட்டாய் கிடைத்த மாதிரி தான். அப்படி ஒரு அனுபவம் புஞ்சை நல்துணை ஈஸ்வரம் சென்ற பொது கிடைத்தது.

பொதுவாக அடியில் இருக்கும் சிறு சிற்ப்பங்களை கண்டு கொள்வது எளிது – அவை புராண கதைகளை சொல்லும். இருந்தும் ஒரு சில இடங்களில் மேலே இருக்கும் சிறு தூண்களிலும் நுனின்ய சிற்ப்பங்கள் இருக்கும். கண்ணில் விளக்கெண்ணை விட்டு அவற்றை தேட வேண்டும்.

ஓவியம் தீட்டும் கலைஞர்களிடம் இருப்பதிலேயே எது மிகவும் கடினமான பனி என்று கேட்டால் – மனித உணர்சிகளின் பாவனை – அவற்றை வெளிகொனர்வதே மிகவும் மிகவும் கடினமான காரியம் என்பார்கள்.

நாட்டியம், இசை இவற்றை கல்லில் வடிப்பது ?

இந்த தூணின் ஒவ்வொரு அங்குலமும் அழகு பட செதுக்கிஉலான் அந்த சிற்பி. அந்த சிறு சிறு நகம் அளவு பூத கணங்களின் அசைவுகளில் கூட பாவனை தெரிகிறது.

இந்த வடிவங்களின் அழகு இந்த அளவில், இத்துணை கடினமான ஒரு பாவனையை இவ்வளவு லயத்துடன்
வெளிக்கொணர்ந்ததுதான்.

நண்பர் ஓவியர் முரளிதரன் அழகர் அருமையாக இந்த சிற்ப்பத்தை நமக்கு ஓவியம் மூலம் மேலும் ரசிக்க உதவுகிறார்.

மேளம் வசிக்கும் பெண், அந்த மேளத்தின் கனத்தால் கழ்துப் பட்டை தலையை சற்றே கீழே இழுக்க அதனை ஈடு கொடுக்க தந்து துடையில் அவள் வாத்தியத்தை முட்டு கொடுக்கும் இயல்பான சித்தரிப்பு மிகவும் அருமை.

ஆடல் மங்கை – புடைப்புச் சிற்பம் , அதுவும் அரை அங்குலம் தான் அளவு – அதிலும் டிரும்ப்ஹி பின்புறம் ஆடும் கோலம் ! அந்த அளவிலும் கனக்கச்சிதமான வடிவம், இடுப்பு துணியின் மடிப்பு என்று கலக்குகிறான் கலைஞன்.

பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வைத்த சிலை இன்றும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம்மை நெகிழ்விக்கிறது. இதை பார்த்தாவது இதனை போன்ற மற்ற இடங்களிலும் இருக்கும் சிற்ப அதிசயங்களை நாம் ரசித்து போற்றி பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும்.

லிங்கோத்பவர் தோற்றமும், அதன் வடிவமைப்பின் வளர்ச்சியும்…

எந்த ஒரு சிற்பத்தைப் பார்க்கும் பொழுதும் நமக்கு மனதில் எழும் முதல் வினா, ’இது எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும்?’. அது கற்சிலைகளாக இருந்தால் நன்று, ஏனெனில் பெரும்பான்மையான் சிற்பங்கள் அது ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே அதே இடத்திலேயே இருப்பதால் கல்வெட்டுக்களை வைத்தோ அல்லது வரலாற்றைத் தேடியோ நம்மால் அதன் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது உலோகச் சிற்பங்களுக்கு சாத்தியமில்லை. காரணாம் ஏனைய உலோகச் சிற்பங்கள் அதன் இடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு உலகின் வெவ்வேறு மூலைகளில், காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதே இடத்தில் இருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிய நம் வழிபாட்டு முறை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஆகவே, நாம் இங்கு கல்லில் வடிக்கப்பட்ட லிங்கோத்பவரின் கலைப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கியச் சிற்பம் லிங்கோத்பவராகத்தான் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்குப் பார்த்த நிலையில், கருவறையின் மேற்குப் பகுதியில் வீற்றிருப்பார் நம் கட்டுரையின் நாயகர். பல்லவர் காலம் தொட்டு, முற்கால மற்றும் பிற்காலச் சோழர்களின் கலையையும் எடுத்துக் காட்டும் விதமாக ஆறு சிற்பங்களை எடுத்துக் கொள்வோம்.

இது காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலிருந்து – ராஜசிம்ம பல்லவன் (700-728CE)

இந்தச் சிற்பம் பிற்காலப் பல்லவர் கலையைச் சார்ந்தது, அதாவது குடைவரைகளிலிருந்து மாறுபட்டு தனிக்கோயில்களாக கட்டத் தொடங்கிய பின்பு உருவானது. உற்று நோக்கினால், பல்லவர்களுக்கே உரித்தான மிகவும் கனமான யக்னோபவிதம் மற்றும் ஆபரண அலங்காரங்கள் தெரியும். கட்டு மஸ்தான உருவமாக அல்லாமல சிவன் ஒரு சாதாரண இளைஞன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அக்னி லிங்கத்தைப் பிளந்து காட்சியளிப்பது போல் அல்லாமல், தனியாக ஒரு சாய்ந்த சதுரவடிவத்திற்குள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிசூலம், பிறைச் சந்திரன், பக்கவாட்டில் உள்ள பிரம்மாவையும், விஷ்ணுவையும் போல் நீண்ட மேல் பாகத்து உடல், வட்ட வடிவ முகம், தடித்த மூக்கு, அலங்காரத் தோரணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

என்ன அழகு! அது சரி இந்தச் சிற்பம் அந்த ஆலயத்தில் எங்குள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

திருமயம் சத்யகிரி சிவ குகையிலிருந்து…

ஏறக்குறைய முன் கண்ட சிற்பத்தின் காலக்கட்டமே இதுவும், ஆனால் இதனை வடிவமைத்தவர் பல்லவர்கள் என்றும், பாண்டியர்கள் என்றும், முத்தரையர்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அற்புதமான சிற்பம். அக்னி பிழம்புகள் தூணின் பக்கவாட்டில் இருந்து கிளம்பி, இயற்கையாய் மேல் நோக்கி வளர்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள் மட்டும் கொண்டு சாம பங்கத்தில் நிற்கும் சிவன், இடக்கையை இடுப்பின் மீது வைத்து கதி ஹஸ்த முத்திரையையும், வலது கையில் வரத ஹஸ்த முத்திரையையும் காட்டி வரமளிக்கும் தோற்றத்தில் உள்ளார். நீள்வட்டத்தில் சிவபெருமானை அழாய் வெளிப்படுத்துகிறது அந்தத் தூண்.

தூணின் தடிமனை பயன்படுத்தி, வலது கையை மடித்து வைத்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறான் சிற்பி. தடித்த நாசிகளும், உதடுகளும், அழகிய வதனமும் அமைதியைக் காட்டுகிறது. சில்பசாஸ்திரங்கள் சொல்வதைப் போல், முகத்தின் உயரத்திற்கும் மேல் வளர்ந்த சடாமுடியின் கட்டமைப்பு சிறப்பு. ஆபரண அணிகலன்கள் குறைவு, அதே சமயம் தொப்புளுக்கு மேலே உள்ள் மிகவும் தடித்த உதர பந்தனம் குறிப்பிடத்தக்கது. அழகாய் வடிக்கப்பட்ட கீழாடையிலும் கற்கள் பதிக்கப்பட்ட அல்லது சிங்க முத்திரை இடுப்புக் கச்சையும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

வலது கையின் மேல் ஒற்றை நூலாலான மிகவும் தடித்த யக்னோபவிதம், சுவாரசியம் கூட்டுகிறது. பல்லவருக்கு உரித்தான வடிவமைப்பு அல்லவா! இயற்கையான ஒரு சாதுவைப் போன்றதொரு உருவமைப்பு, கட்டுமஸ்தாக இல்லைதான் ஆனாலும் வலிமையான் தோள்கள். குறைந்த ஆபரணங்களும், இந்த வடிவமைப்பும் சிற்ப சாஸ்திர நூல்களின் குறிப்புகள் படி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக காட்டுகிறது. அங்கே கிடைக்கும் சிதைந்த கிரந்த கல்வெட்டுகளும் உறுதிப் படுத்தும் ஆனாலும் ப்ரம்மனையும், விஷ்ணுவையும் ஏன் அன்னமாகவும், பன்றியாகவும் கூட அந்த சிற்பி இங்கு காட்டவில்லை?!

சோழம் மீண்டும் துளிர்த்ததும், ஆலயங்கள் கட்டுவது மிகுந்தது. அதனால் சிற்பிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தக் கலையை வளர்த்தனர். ஆகவே, இனிவரும் உருவங்களைப் படித்தல் சற்று கடினமான வேலைதான். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த புஞ்சை நல்துணை ஈஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் சிற்பங்களைக் காண்போம்.

புள்ளமங்கை – முதலாம் பராந்தகச் சோழன் ( 907 – 955 CE)

சிவனின் முகம் சிதைந்துள்ளது. மாபெரும் லிங்கோத்பவர், விஸ்ணுவும், ப்ரம்மாவும் இரண்டு பக்கமும். இதைத் தவிர வேறு சிற்பங்கள் இங்கு தனித்துவம் பெறவில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் வளர்ச்சி, தேவைக்கு அதிமானவை நீக்கப்பட்டு லிங்கோத்பவர் மட்டும் தனித்துவம் பெறுகிறார். அதோடு ப்ரம்மா மேலே பறந்து செல்வது போலும், விஸ்ணு பூமியை வராகமாகி துளைத்துச் செல்வது போன்ற காட்சி தத்ரூபம். இந்தத் தூண் மொத்தமும் இன்னும் சிற்பத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை, தூணில் இருந்து அக்னி வெளிப்படுவது போன்ற காட்சிதான் இன்னமும் தெரிகிறது.


சிவனைத் தவிர மற்ற இரு உருவங்களிம் அளவில் சிறியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆனால் தெளிவான முத்திரைகளாக மானும், மழுவும் கொண்ட கைகள் தூணிற்குள்ளே மற்றும் இடையளவு யக்னோபவிதம் கொண்ட மெலிதான ஒல்லி உருவம், அழகிய நீள்வட்ட முகம். பல்லவர் கால நேர்கோட்டிலிருந்து சற்றே வளைந்த வடிவத்திற்குள் இருந்து கால்கள் தெரியும் அளவிற்கு வடிக்கப் பட்ட உருவம். என்ன கலையின் வளர்ச்சி தெரிகிறதா?

புஞ்சை – 955 CE

கல்வெட்டுகளில் புஞ்சைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தர் காலத்தைக் ( 965-969 CE) குறித்தாலும் சிற்பங்களின் வடிவமைப்பு முதலாம் பராந்தகர் காலத்தையே காட்டுகிறது.

ஆஹா! லிங்கோத்பவருக்கென்றே சிறந்த தோரணம், லிங்கத்திற்கு தொப்பி போன்ற உருவமைப்பு மலர் வளையத்துடன், அன்னமாக ப்ரம்மனும், வராகமாக விஸ்ணுவும் கொள்ளையழகு. இங்கு தனியாக சிற்பங்கள் ப்ரம்மனுக்கும், விஸ்ணுவுக்கும் இங்கு இல்லை. மற்றும், அக்னி சுவாலைகள் தூணின் பக்கவாட்டிலிருந்தே இன்னமும் கிளம்புகின்றன.

பல்லவர் காலம், பல்லவர் காலத்திற்கும் சோழர்களுக்கும் இடைப்பட்ட மற்றும் முந்திய சோழர் காலம், இந்த காலகட்டத்தில் லிங்கோத்பவரின் கலை வளர்ச்சி இரண்டு நூற்றாண்டுகளில் அபரிமிதம்! நன்கு தெளிவான, வலிமையான மார்பு, வட்ட வடிவ முகம், சிம்ம முகம் பதாகை, லிங்கத்தின் திறப்பு குறிப்பிடத்தக்கவை.

தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் – ஸ்ரீ ராஜ ராஜ சோழர் ( 985 -1014 CE)

மற்றுமொரு நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள், முழுமையான லிங்கம், அளவில் மிகவும் குறைந்த ப்ரம்மாவும், விஸ்ணுவும், துல்லியமான முக வடிவமைப்பு, நன்கு விரிந்த மார்புகள், மெலிந்த இடை, அக்னி தூண் முதலியன குறிப்பிடத்தக்கவை.

திருபுவனம் – மூன்றாம் குலோத்துங்க சோழன்( 1178 -1218CE)

மேலும் ஒரு நூற்றாண்டு, சிற்பக்கலை அதன் சிகரத்தில்! விதிகள் வளர்ந்து, தன்னிஷ்டம் போல் வடிக்கும் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, முழு லிங்கமும் சிவ பெருமானால் ஆக்கிரமிக்கப் பட்டு, அளவில் குறைந்த, மேலே பார்த்ததை விட சற்று பெரியதான ப்ரம்மாவும், விஸ்ணுவும் கொண்டு, சிவனைச் சுற்றிய நீள்வட்ட வெளிப்பாடு துல்லியமாக விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடைசி சோழ மன்னன் குலோத்துங்கன் காலச் சிற்பம்.

படங்கள்: நண்பர்கள் அசோக், சௌரப், அர்விந்த், சதீஷ் , சாஸ்வத் மற்றும் ஸ்ரீராம்

யானை பிரசவம் – சிற்பத்தில்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டை ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள ஒரு அற்புத வடிவத்துடன் துவங்குவோம்.

நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி புண்ணியத்தில் இந்த வருடப்பிறப்புக்கு ஸ்ரீமுஷ்ணம் சென்றோம் – அதுவும் கல்வெட்டு கலைஞர் முனைவர் திருமதி மார்க்ஸ்யா காந்தி அவர்களுடன் செல்லும் பாக்கியம் கிடைத்தது. பல அற்புத சிலைகள் பார்த்தோம் – அதில் எனக்கு மிகவும் பிடித்ததை இன்று பார்ப்போம்.

பூவராஹா சுவாமி ஆலயத்தை பார்த்துவிட்டு அதை ஒட்டி இருக்கும் சிவன் கோயிலுக்கு நடக்கும் போதே பெரிய செங்கல் மதில் சுவர் தென்பட்டது. நான் இவ்வளவு பெரிய ப்ரஹாரட்தை எதிர்பார்க்கவில்லை.

( இரண்டாவது படம் திரு ராஜேந்திரன் அவர்களது – Raju’s temple visits)

உள்ளே செல்லும் வரை சற்று அசதியாகவே இருந்தது. ஆனால் எதிரில் கண்ட சோழர் கலை உடனே உற்சாகம் ஊட்டி துள்ள வைத்தது.

நிறைய சொல்லவேண்டும், காட்டவேண்டும் – எனினும் இன்று நாம் பார்க்க இருப்பது…அதற்கு முன்னர் இந்த வடிவம் – நான் வரலாறு டாட் கம வலைத்தளத்தில் இந்த பதிவை பார்க்கும் போதே ஆவலை தூஒண்டி மனதில் பதிந்துவிட்டது

மூன்று யானைகள் சேர்ந்து யானைக்கு பிரசவம் பார்க்கும் காட்சி. இதே போல எங்காவது நம் கண்ணிலும் படுமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். இந்த கோயிலில் அந்த தேடலுக்கு விடை கிடைத்தது. தேவ கொஷ்டங்களின் நடுவில் ஒரு அலங்கார தூண். அதில்…


நடுவில் உள்ள சிறு சிற்பம் கண்ணில் பட்டது.

என்னடா – ஏதாவது யானைகள் ஏடாகூடமாக இருக்கும் சிற்பமோ என்ற பயம் ஒரு புறம் இருக்க – ஒரு முறைக்கு இருமுறை அருகில் சென்று உறுதி செய்து கொண்டேன்.



நண்பர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் கேட்டவுடன் உடனே படமாக வரைந்துக் கொடுத்தார். என்ன அழகாக தாய் யானை அலங்கார வளைவை தனது தும்பிக்கையால்
சுற்றி பிடித்து முயற்சி செய்கிறது…

இரு வடிவங்களை பார்த்த பின்னர் – அவற்றில் உள்ள ஒற்றுமைகளை காணமுடிகிறது. முன் பக்கம் இருக்கும் யானை பிரசவிக்கும் யானையின் கழுத்தையும், நடுவில் இருக்கும் யானை இடுப்பை இறுக்கி பிடித்தும், பின்பக்கம் இருக்கும் யானை வாலைத் தூக்கி பிடித்தும் இருக்கின்றன. இயற்கையிலும் இது போல தான் யானைகள் பிரசவம் பார்க்குமோ ??

சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயில் .. ஒரு கம்பத்தில் உயிர்பிழைத்து நிற்கும் அவலம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெடுதிதான்…ஒருவேளை நமது நாட்டின் கலை பொக்கிஷங்களின் அவல நிலைக்கும் இது தான் காரணமோ? வேறெப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்றும் இன்றோ நாளையோ என்று தத்தளிக்கும் சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயிலின் நிலையை சொல்வது? நிகரிலி சோழ விண்ணகர் – இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். இழப்பு யாருக்கு ? வரும் சந்ததியினரின் சொத்து இது, சிதைய விட யார் நமக்கு உரிமையை கொடுத்தது ?

வெளியில் அனுமனின் சிலை, வாய்பொத்தி அண்ணலின் அணைப்பின் பூரிப்பில் நின்றது. எனினும் உள்ளே போனபோது வெறும் சிலை வடிவமாக பார்த்த எங்களுக்கு வெளியில் வரும்போது சிலை வேறு விதமாக பேசியது.

உள்ளே நுழைந்தவுடன் வெளி பிரஹாரம் ஒன்றும் விசேஷமாக இல்லை, பல ஆலயங்களில் பார்த்த காட்சி போல தான் இருந்தது.

உள்ளே செல்லச் செல்ல, கண் முன்னே தோன்றிய காட்சிகள் பிரமிக்க வைத்தன.


தினம் தினம் காணும் காட்சி அல்லவே – பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பாண்டிய விமானம் எந்த வித பின்னாளைய ” புதிப்பிப்பும் ” அல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.

நண்பர் பிரதீப் முன்னரே உதவியதால் எவைகளைப் பார்க்கவேண்டும் என்பதும், மற்றும் அங்கே ஊர் நபர்களின் உதவியும் எளிதில் கிடைத்தது.

அஷ்டாங்க விமானம் – ஒரு சிலவே தமிழ் நாட்டில் உள்ளன. பெருமாள் நின்ற கோலம், அமர்த்த கோலம், கிடந்த கோலம் என்று காட்சி அளிக்கும் மூன்று தள விமானம்.

நின்ற கோலம் மட்டுமே இன்று வழிபாட்டில் உள்ளது. அங்கே அற்புத செப்புத்திருமேனிகளை தரிசித்தோம்.

மேலே செல்கிறீர்களா என்று சற்று தயக்கத்தோடு கேள்வி வந்ததன் அர்த்தம், குறுகிய படி , மற்றும் சட சட வென படையெடுத்த வவ்வால்களின் கூட்டம் புரிய வைத்தது.

வீட்டு மாடியிலும் நவீன உணவகங்களிலும் உயரத்தே பார்த்த தோட்டம் நமக்கு இங்கே விமானத்தில் உள்ள தோட்டத்தை பார்த்து பகீர் என்றது

உள்ளே இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

மேலே உள்ள முக்கிய தூண் உடைந்து அதன் பாரத்தை ஒரு மரத் தூண் தாங்கி நின்றது. அது உடைந்தால் என்ன நடக்குமோ ?

ஆனால் இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே அமைதியாக தம்பதிகள் சமேத அமர்ந்திருந்த சுதையாலான சுவாமி- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகளை கண்டு மிரண்டு தான் போனோம். ( சுதை – எளிதாக சரி செய்து விடலாம் – யாராவது உதவ முன்வர வேண்டுமே )

என்ன அருமையான வேலைப்பாடு, வண்ணம் மிக்க சுதை வடிவங்கள்.

இன்னும் ஒரு தளம் மேலே ஏறினோம். ஆஹா, இங்கு ஆனந்தமாக பள்ளிகொண்ட பெருமாள். தேவிகள் இருவர் முகத்தில் மட்டும் எதோ ஒரு கவலை தெரிந்தது ?

திரும்ப வெளியில் வரும்போது மறுபடியும் ஹனுமனை பார்க்கும்போது – ஏதாவது செய்யுங்கள் என்று தன அண்ணலுக்கு தெரியாமல் சொல்வது போல ஒரு எண்ணம். எதற்காக அப்படி …அவர் காதில் விழுந்தால் பதில் …” எனக்கு உலகமடா !!” என்றல்லவோ இருக்கும்.

ஒரு குடைவரை – அதில் சிதைந்த ஓவியமும் உடையார் ராஜ ராஜ சோழர் பிறந்த நட்சத்திரமும் – திரு நந்திக்கரை

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை – கன்னியாக்குமரி மாவட்டம் – திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு – நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

இப்பொழுது படங்களை பாருங்கள்..

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

10034
10031

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.

சேரன்மாதேவியில் உள்ள சோழ பாண்டிய ஆலயமும் அதன் ரகசியமும் – பாகம் 1

சேரன்மாதேவி – நண்பர் பிரதீப் சக்ரவர்த்தி கண்டிப்பாக நீங்கள் அங்கே போக வேண்டும் என்று சொல்லும்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாயின. திருநெல்வேலி என்றதுமே வறண்ட பிரதேசம் என்ற நினைப்பு பொய்யாகும் அளவிற்கு டிசம்பர் மாதத்தில் சாலையின் இரு புறங்களிலும் பச்சைக் கம்பளம் அதில் வளைந்து வளைந்து சாலையுடன் போட்டியிட்டது தாமிரபரணி. சிறிய சிறிய கிராமங்கள் – மனிதனின் ஓட்டத்தையும் மீறி அப்படியே ஸ்தம்பித்த நிலையில் (நல்லதா கெட்டதா?) வெள்ளந்தி மனிதர்கள் , முதியோர் சிறார் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் முகத்தில் கள்ளங் கபடமற்ற அந்த சிரிப்பு – கால வெள்ளத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற உணர்வு.

ஊரை நெருங்கியதும் ஒரு புதிய பாலம் வந்தது . அண்மையில் அமைக்கப்பட்டதால் ஆற்றங்கரை கோயிலுக்கு அதன் மேலே சென்று ஊருக்குள் புகுந்து தான் வழி பிரிய வேண்டும் என்றனர். சிறிய கிராமம், நடுவில் பெரிய கோவில் ஒன்று இருந்தும் முதலில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பக்தவத்சல பெருமாள் கோயிலை பார்த்துவிட்டு வருவோம் என்று நண்பர் அரவிந்த் கூறினார். வழி கேட்டுக்கொண்டே சென்றோம் – ஒன்று இரண்டு இடங்களில் வழிப் பலகைகள் வைத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும், பாதை குறுகியது, இருபக்கமும் கருவேல முட்செடிகள், நமது கிராமங்களில் சுகாதார முறைகள் பற்றி படமும் கூடவே காற்றில் வந்தது. முடிவில் ஆற்றங்கரை ஓரத்தில் பெரிய மதில் சுவர் தெரிந்தது. நமக்கு மிகவும் பரிச்சயமான தொல்லியல் துறையின் நீல அறிவிப்புப் பலகையை காணவில்லை. அதன் இடத்தில அழகிய அறிவிப்புப் பலகை இருந்தது.

வெளிக் கோபுரம் மொட்டை கோபுரம் தான், எனினும் அழகாக இருந்தது.

பல கல்வெட்டுகள் இருந்தும் அறிவிப்புப் பலகை கூறிய படி ராஜேந்திர சோழரின் கல்வெட்டு முக்கியமானது. சோழர் ஆதிக்கம் இது வரையிலும் இருந்ததற்கு சான்று. சற்றே அதிகமாக இருந்தாலும் அழகாகவே இருந்தன வெளி மண்டபத்து சிற்ப வேலைப்பாடுகள்.




அதிலும் இந்த சிம்மத் தூண் மிக அருமை.

இன்னொரு சிறப்பான சிற்பம் இந்த நரசிம்ம வடிவம் – அமர்ந்த கோலத்தில் தலையில் ஆதிசேஷன் அழகாக குடை பிடிப்பது அருமை.

உள்ளே சென்றோம். ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் நின்ற கோலத்தில் …


பாண்டிய நாட்டு கோயில்களை பற்றி மேலும் பார்த்து தெரிந்துக்கொள்ள அர்த்த மண்டபத்தின் மேலே ஏறி விமானத்தை பார்க்க வேண்டும் என்றோம். வெளியே அழைத்துச் சென்று அங்கேயா என்றார்கள். குறைவாக எடை போட்டு விட்டோம் , மண்டபத்தின் உயரம் மிக அதிகம், அவர்களிடம் இருந்த இரும்பு ஏணி செங்குத்தாக நின்றால் தான் மேல் தளத்தை தொட்டது. என்ன செய்வது என்று சுற்றி முற்றி பார்த்தால் கூட வந்த அரவிந்தை காணவில்லை, தொல்லியல் துறை நண்பரையும் காணவில்லை. கருங்கல் மண்டபத்தில் எப்படி மாயமாக மறைந்தார்கள் என்று வியந்து நின்றபோது மேலும் ஒரு அதிர்ச்சி. தரையின் அடியில் இருந்து குரல்கள் – சுற்றி பார்த்தால் ரகசியம் தெரிந்தது..

தொடரும் …

பதவியில் இருப்பவர் பழைய ஆட்சியின் ஆணையை ஆளும் விதம்

தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாறியதுமே முந்தைய ஆட்சியின் பொது அமலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தடு ( தடம்) மாறும் ஏளனத்தை தினம் தினம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தக் காலத்து மன்னர் ஆட்சியில் இது எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது ..இன்றோ மக்கள் ஆட்சி. மக்கள் பிரதி நிதி நடைமுறை பற்றிய திட்டங்களே இவை என்ற கருதும் பொது அன்றைய மன்னர் ஆட்சியில் மன்னன் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இருந்திருக்க வேண்டும். அவர் கூறினால் எதிர் மறை விவாதம் கிடையாது. எனினும் அவர்கள் எப்படி நடந்துக்கொண்டனர் என்பதை தெரிந்துக்கொள்ள மீண்டும் திருகழுகுன்றம் செல்ல வேண்டும். பலரும் சென்ற இடம் என்றாலும் அங்கு பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இருக்கிறது. நாம் முன்னரே பார்த்த மலை மேல் உள்ள ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள பல்லவர் காலத்து குடவரைக் கோயில்.

பாதி வழி ஏறியபின் மூச்சிரைக்க மேலே போகலாமா வேண்டாமா என்று சற்று நம்மை ஆசுவாசப் படுத்த நிற்கும் இடம் – மேலே செங்குத்தான அடுத்த வரிசை புதிய வழியில் படிக்கட்டு கண்ணை கட்ட, மலையை சுற்றி பழைய பாதை ஒன்றும் இருக்கிறது. அதில் சென்று திரும்பியதும் இடது புறம் மலையில் குடையப்பட்ட அற்புத ஒரு கல் மண்டபம் தெரிகிறது.

தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கிறது என்றாலும் எப்போதுமே பூட்டப்பட்டே இருக்கிறது – இது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியவில்லை.

குடைவரை தூண்கள் மற்றும் சில அம்சங்களை வைத்து இது மகேந்திர பல்லவரின் காலத்திற்கு அடுத்து என்று கருதப்படுகிறது. ( 630 CE பின்னர் ) . குடைவரை அமைப்பு இதோ.


உள்ளே கருவறையில் அருமையான லிங்கம் உள்ளது. ( பின் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இல்லை )

அடுத்து இருபுறமும் கருவறை காவலர்கள் ( புடைப்புச் சிற்பம் )
.

தூண்கள் நாம் இதுவரை கண்ட மகேந்திர குடைவரைகளை விட சற்றே மெலிந்து காட்சி அளிக்கின்றன. மேலும் கருவறைக்கு இருபுறமும் நான்முகன் மற்றும் பெருமாளின் சிற்ப்பங்கள் வருகின்றன.


முக மண்டபத்தில் இரு பக்கமும் தேவர்கள் இருவர் உள்ளனர். இவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

சரி இப்போது கல்வெட்டுக்கு வருவோம் ( Epigraphica Indica Vol 3 )
363 பக்கம்

ஸ்வஸ்திஸ்ரீ கோவி ராஜகேஸரிபரம்மர்க்கு யாண்டு இருபத்தி ஏழாவது
களத்தூர் கோட்டத்துட்டன் கூற்று திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப்பொட்டரையரும் அப்பரிசே ரக்‌ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புட்டன் (புத்தன்) விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்‌ஷித்தான் அடி என் முடி மேலினே

அதாவது ” போற்றி! வளம் பெருகட்டும்!! அரசர் ராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆண்டுக் காலம், ஸ்கந்தசிஷ்யன் இந்த நிலங்களை கொடையாகவும், களத்தூர் கோட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள மூலத்தானவருக்கு பாத காணிக்கையாக அளிக்கப்பட்டதால் புனிதமான இந்த நிலத்துக்கு வரிப்பணம் செலுத்த தேவையின்றியும் ஏற்கனவே பூர்வ ராஜாக்களாலும், வாதாபியை வென்ற நரசிங்க பொட்டரையர் உறுதி செய்ததாலும், ராஜகேசரி வர்மனாகிய நானும் ஆந்துரையைச் சேர்ந்த குணவான் மகனாகிய புத்தன் வேண்டுகோளுக்கிணங்க உறுதி செய்கிறேன்.இந்தக் கொடையை பாதுகாக்கும் ஒவ்வொருவர் பாதமும் என் சிரத்திலும் பதியட்டும்.

ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை , நரசிம்ம பல்லவர் உறுதி செய்ய ( 630 CE) , இருநூற்றி அறுபத்தி எழு ஆண்டுகள் பின்னர் வந்த சோழ அரசன் 897 CE யில் என்ன ஒரு பெருந்தன்மையுடன் முன்னர்வர்களை மதிப்புடன் வாதாபி கொண்டான் என்ற அடைமொழியை கூட விடாமல் கல்வெட்டாக செதுக்கி உறுதி செய்கிறான் !!! அதுவும் இத்தர்மத்தை பாதுகாப்போர் கால் பாதங்களை தன் தலையினில் பதித்துக் கொள்வதாக கல்வெட்டில் எழுதியுள்ள பணிவும்.. ஆகா.. ! அரசர் போற்றி! ஆண்டான் போற்றி!!

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

ஆம், நமது கேமராவின் மூடி…

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்


லட்சுமி நிற்கும் பாணி.

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்


இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.