தந்தையை கண்டு பயப்படும் முருகன் -புள்ளமங்கை

இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது – தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் – அதனைப் பின்னர் பார்ப்போம்). பழைய பதிவை நண்பர் சதீஷ் அவர்களின் படங்களை கொண்டு மீண்டும் இடுகிறேன்.

இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க அதன் அளவை முதலில் பார்க்க வேண்டும் , அது எங்கே உள்ளது என்பதும் மனதில் கொள்ள வேண்டும்.

முதலில் சற்று தொலைவில் இருந்து .


கணினி கொண்டு கொஞ்சம் வெளிச்சம் போடுவோம். இப்போது தெரிகிறாதா?

சரி, இப்போது கதை , நான் சொல்வதை விட அருமையான தேவாரப் பாடல் குறிப்பு தருகிறேன்.

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

கஜமுகாசுரன் – அசுரன். மக்களுக்கு தீங்கு செய்தான். ஈசன் அவனை வைத்தான்.
எவ்வாறு – சிற்பத்தை பாருங்கள்.

சூலம் கொண்டு குத்தி, அவன் தலையை காலின் அடியில் இட்டு , அதன் மேல் ஆடி, அவன் தோலை உரித்து – அப்பப்பா – பயங்கரம். சிற்பி எவ்வாறு இதை செதுக்கி உள்ளான் பாருங்கள் – உடலை வளைத்து ஆடும் ஈசன், யானையின் தலை ( சூலத்தின் அடியில் ), யானையின் தோலை விரித்துப் பிடித்து ,

அப்போது அந்த குள்ள பூதகணம் – ஏளனம் செய்கிறது விழுந்த அசுரனை பார்த்து . மேலே இன்னொரு பூத கணம் இந்தா காட்சியை அப்பப்பா என்கிறது.

இந்த கடும் சண்டையை பார்க்க மனம் இல்லாமல் திரும்பும் உமை – அவள் மடியில் குழந்தை முருகன் – மிரண்டு அடுத்து இருக்கும் தோழியிடம் தாவும் பாவம் – அருமை.


– இது மிகவும் சிறிய சிற்பம் என்றேன்…ஆனால் அது போதுமே எங்கள் சிற்பிக்கு – அதில் ஒரு கதை சொல்லி அதில் அனைத்து முக பாவங்களை கொண்டு வந்துள்ளான். யானை உரி போர்த்திய முர்த்தி. சரி, சிறியது என்றால் எவ்வளவு சிறியது?

சிற்பக்கலை சிகரம் – கங்கை கொண்ட சோழபுரம்

பெரிய கோவில் சண்டேசர் சிற்பம் பார்த்தோம், அப்போது கங்கை கொண்ட சோழபுரம் சண்டேசர் சிற்பம் ஒன்றும் பார்த்தோம். ஆனால் அந்த அற்புத சிற்பத்தை முழுவதும் காண இந்த இடுகையில். ( சிற்பத்தை சார்ந்து இருக்கும் )சண்டேசர் கதையை விளக்கும் சிறு சிற்பங்களை பார்க்க மறவாதீர்கள்)

பல நண்பர்களுடன் நான் சிற்ப கலை பற்றி விவாதிக்கும் பொது, கல்லைப் பொறுத்த வரையிலும் பல்லவ சிற்பமும்/ சிற்பியும் முதன்மை பெற்றவர்கள் என்று வாதாடுவேன். ஏனெனில் ,பிற்கால சிற்பங்களை போல அல்லாமல், பல்லவ சிற்பி எந்த வித சட்ட திட்டங்களினுள்ளும் இல்லாமல், தனது சிற்பங்களை தனது கற்பனை திறனைக் கொண்டே செதுக்குவான். அதனால் அவனது கலையில் ஒரு உயிரோட்டம் இருக்கும், இந்த சிற்பத்தை பார்க்கும் பொது ,அப்படி பட்ட ஒரு திறமை உள்ள பல்லவ சிற்பி ,தப்பித்து கங்கை கொண்ட சோழ புறத்தில் வேலை செய்தான் போல உள்ளது. சிற்பக் கலையில் இதை போல வேறு சிலை இல்லை .. கல்லில் கவிதை இதுவே

21052107211721192130

திரு நாகசுவாமி ஐயா அவர்களின் வர்ணனை இதோ ( ஆங்கிலம் அதை நான் மொழி பெயர்கிறேன் )

நான்கு கைகளுடன் அரியணையில் அமர்ந்து இருக்கும் ஈசன், மேல் இரண்டு கரங்களில் மழு, மான், மற்ற இரண்டு கரங்களை கொண்டு அன்புடன் சண்டேசருக்கு மாலை அணிவிக்கும் காட்சி, என்ன ஒரு அரவணைப்பு, என்ன ஒரு அன்பு – அதை பிரதிபலிக்கும் சிலை, கரம் கூப்பி சிரம் தாழ்த்தி அதை பணிவுடன் பெரும் சண்டேசர்,உமையுடன் சண்டேசரை ஈசன் ஆட்கொள்ளும் அரிய காட்சி. அவர்களின் உருவங்கள், கால், கை, அணிகலன்கள், அனைத்தும் நம்மை பரவசபடுதுகின்றன . திரு சிவராமமுர்த்தி அவர்கள் – இந்த அற்புத சிலை, ராஜேந்திர சோழன் பெற்ற வெற்றிகளை அவன் ஆடியில் இட்டு அவனே தனக்கு கொடுத்த பரிசுகளாக கொள்ளாலாம்’ என்கிறார். இந்த சிற்பத்தை ஒட்டி உள்ள சிறு சிற்பங்களில் சண்டேசரின் கதையைக் காணலாம்.

லிங்கத்தை வழிபடும் சண்டேசர், பசுக்கள், அதை ஒட்டி சண்டேசரின் தந்தை மரத்தின் மறைவில் நின்று ஒளிந்து பார்ப்பது , பூசையை தடுப்பது, கோபத்தில் சண்டேசர் மழுவை தனது தந்தை மீது எறிவது. கடைசியில் இருவருக்குமே ஈசன் தனது ஆசியை வழங்குவது.
2101210721102113211521222124212621282132

http://www.tamilartsacademy.com/books/gcpuram/chapter06.html

படங்கள் – ரவாஜெஸ், மோகன்தொஸ் ( பிலிக்கர் நண்பர்கள் ), சாத்மீகா ( பொன்னியின் செல்வன் குழுமம் )

முதல் வரிசையில் இருந்து ஈசனின் ஆடல் அழகு பார்க்கும் எலும்பு அம்மை

சென்ற மடல்களில் காரைக்கால் பேய் அம்மையின் கதை படித்தோம். அங்கே நிறைய சிற்பங்களை இடவில்லை, ஏனெனில் அவர்களின் கதையின் உன்னதம் சரிவர நாம் உணர வேண்டும் என்பதற்க்காக. இப்போது அதற்கு ஈடு செய்ய, ஆலங்காட்டில் ஆடும் அழகன் ஆடல்வல்லானின் அற்புத ஆட்டத்தை முதல் வரிசையில் அமர்ந்து காணும் அம்மை – கங்கை கொண்ட சோழபுறத்து அற்புத சிற்பி வடித்த சிலை.

( Sfiy’ இல் வந்த இந்த அருமையான இடுகை )

http://sify.com/news_info/tamil/rasanai/aug05/fullstory.php?id=13909600

தூக்கிய திருவடியொடு ஆடும் அழகனின் திருவடிவினைச் உலோக சிலையாய் வடிப்பது ஒரு அறிய கலை, ஆனால் அதை கல்லில் வடிப்பது – ஒரு உன்னத கலை. சோழநாட்டுச் சிற்பிகளோ கல்லைப் பிளந்து எழிலுரு ஆடவல்லான் திருமேனிகளைப் பல திருக்கோயில்களில் வடித்துச் சென்றுள்ளனர். அத்தகு சிற்பப் படைப்புக்கள் வரிசையில் தலையாயதாக விளங்குவது கங்கை கொண்ட சோழீச்சரம் திருக்கோயிலின் தேவகோட்டமொன்றில் இடம் பெற்றுள்ள ஆடும் அழகனின் திருவடிவாகும்.

பொதுவாகத் திருக்கோயிற் சிற்பப் படைப்புக்களைக் கண்டு அதன் பேரழகை நுகரப் புகுமுன், அங்குக் காணப்பெறும் சிற்பத்தின் வரலாறு, புராணப் பின்புலம், செய்நேர்த்தி, உணர்வுகளைக் காட்டிடும் முகபாவம் ஆகியவற்றை அறிந்து, பின்பே அவற்றைக் கூர்ந்து காண முற்படுவோமாயின் அச்சிற்பம் நம்மோடும் பேசும் சுகானுபவத்தைப் பெறலாம்.

காளியோடாடிய கயிலைநாதன்தாருகன் எனும் அசுரன் பிரமனைக் குறித்துக் கடுமையாகத் தவம் இயற்றி தனக்குப் பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தையும், பேராற்றல்களையும் பெற்றான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி கண்டான். ஆணவமலம் மிக்குற்று தேவர்களையும், தெய்வங்களையும் தாக்க எத்தனித்தான் . எத்துணை உபாயங்கள் செய்தும் அவனிடமிருந்து தப்பியலாத தேவர்கள் பரமேஸ்வரனைப் பிரார்த்தித்து வேண்டினர். பரமனோ தன் கழுத்திலிருந்த ஆலகால விஷத்திலிருந்து தேவியின் அம்சத்தை கரியதும் உக்கிரம் நிறைந்ததுமான உருவமாக, காலகண்டியாகப் படைத்துத் தாருகனை வதம் செய்ய ஆணையிட்டார்.

காலகண்டியாகிய காளிதேவி தாருகனுடன் உக்கிரமாகப் போரிட்டு அவனை அழித்தாள். காளியின் கோபம் தணியாததால் அவளைச் சாந்தப்படுத்த விழைந்த பரமன் அவள் உக்கிரத்தை எட்டு சேத்திர பாலகர்களாக (அட்ட பைரவர்) மாற்றியருளியதோடு, அவள் முன்பு நடன மாடத் தொடங்கினார். ஈசன் ஆட அவர் முன்பு வெங்கோபமுற்ற காளிதேவியும் ஆவேசமாக ஆடத் தொடங்கினாள். அண்ணலின் ஊர்த்துவ மாதாண்டவம் கண்டு ஆட இயலாதவளாய் அமைதியுற்றாள். இச்சிவதாண்டவ வரலாற்றை சிவமகாபுராணம் இனிதே உரைக்கின்றது. திருவாலங்காட்டில் (திருவள்ளூர் மாவட்டம்) இத்திருநடனம் நடைபெற்றதாக ஆலங்காட்டுத் தலபுராணம் விவரிக்கின்றது.
193719391942194519471950

மூவர் தமிழில்…

ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே எனத் திருவாலங்காட்டில் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,

ஆடினார் பெருங்கூத்து காளிகாண, என்று திருப்பாசூர் பதிகத்திலும்,

கத்து காளி கதம் தணிவித்தவர், என்ற திருக்கடவூர் மயானத்துப் பதிகத்திலும் குறிப்பிட்டு காளியோடாடிய கருணாமூர்த்தியின் பெருமை பேசுகின்றார்.

மாத்தன் தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன் தான் அவள் பொங்கு சினம் தனி
கூத்தன்தான்-குரங்காடு துறையானே
பைதல் பிணக் குழைக் காளி வெங்கோபம்
பங்கப் படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தனசீர்
மறையோன் உய்தல் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன:
உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு
அரியன-இன்னம்பரான்தன் இணை
அடியே பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க்க-
என்று கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே

இவ்வாறு அப்பரடிகள் குரங்காடுதுறை, இன்னம்பர், திருகுடமூக்கு ஆகிய திருக்கோயில்களில் காளி தன் வெங்கோபத்தினைப் பங்கப்படுத்திய கூத்தனின் புகழைத் தேவாரத் தமிழால் புகழ்கின்றார்.

திருஞானசம்பந்தப் பெருமானாரோ

ஐயாறுடைய அடிகளைப் பாடிப் பரவுங்கால்,
வென்றிமிகு தாருகனது ஆர் உயிர் மடங்க கன்றி
வரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம்-நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திருஐயாரே

என்றும், தன் பிறந்த பதியான சீகாழி ஈசனைப் போற்றுங்கால்,

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே மாலோகத் துயர்
களைபவனது இடம்கைக்கப் போய் ஊக்கத்தே
கனன்றுமிண்டு தண்டலைக்காடே ஓடா ஊரே சேர் கழுமல வளநகரே

என்றும் காளியோடாடிய திறம் பேசுகின்றார். திருநாவலூரரான சுந்தரரோ,

கொதியினால் வரு காளிதன் கோபம்
குறைய ஆடிய கூத்துடையானே

என்று ஆவடுதுறையில் இன்றமிழ்ப் பதிகம் பாடி திருவாலங்காட்டுத் திருநடனத்தின் சிறப்பு பேசுகின்றார்.

திருஆலங்காட்டுத் திருநடனம்

தாருகன் உயிர் போக்கிய காளிதேவியின் கோபத்தைப் போக்க ஆலமரங்கள் அடர்ந்த திருவாலங்காட்டில் அண்ணல் மீண்டும் ஓர் ஆனந்த நடம் புரிந்தார். வாணன் குட முழவிசைக்க, காரைக்கால் பேயார் கைத்தாளம் இசைக்க, பூசகணங்கள் மத்தளம் முழங்க அண்ணலின் ஆடல் தொடங்கிற்று. ஆடல் காண கணபதிப் பிள்ளை எலிமீதமர்ந்து ஊர்ந்துவர, கந்தனோ மயில்மீது அமர்ந்து பறந்து வந்தான். சூரிய சந்திரர் காண காளிதேவியும் எண்கரம் நீட்டி கோபமொடு ஆடத் தொடங்கினாள். மூன்று கால் பிருங்கியும் ஓர்புறம் ஆட, சடையமர்ந்த கங்காதேவியும் சுழன்று ஆட, இடபத்தோடு நின்ற சிவகாமியோ, எழிலுறு இக்காட்சி கண்டு மெய்மறந்தாள்.

ஆலங்காட்டில் உமையம்மையும், காரைக்காலம்மையும் கண்டு களித்த அந்த ஆனந்தத் தாண்டவக் காட்சியை உலகம் உள்ளளவும் மனித குலம் கண்டு இன்புற வேண்டும் என்று நினைத்தான் கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் (கி.பி. 1012-1044). தான் எடுத்த கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் சிவாலயத்தின் கருவறையின் தென்மேற்குப் பகுதியில் ஆலங்காட்டு ஆடற்காட்சியை நிரந்தரமாகப் பதித்தான். கல்லிலே இங்கு அக்காட்சி உயிர்ப் பொலிவோடு திகழ்கின்றது.

தேவகோஷ்டமொன்றின் மேற்பகுதியில் திருவாலங்காட்டு ஆலமரமொன்றில் இலைகளோடு கூடிய கிளைகள் தெரிகின்றன. ஆடல்வல்லான் சூடும் அக்ஷமாலையொன்றும், அவன் பூசும் வெண்பொடி சுமந்த பொக்கணமும் (விபூதிப்பை) ஆலமரத்துக் கிளையில் தொங்குகின்றன. தலையில் கொக்கிறகு, கபாலம், உன்மத்தம் ஆகியவற்றையும், விரிசடையில் நீரலையாய் சுழன்று ஆடும் கங்கையையும் சூடியவராய், ஒரு காதில் மகரகுண்டலமும், மறுகாதில் பத்ரகுண்டலமும் தரித்தவராய் வலதுகாலை முயலகன் மீது இறுத்தி இடது காலை இடுப்பளவு உயர்த்தி, மேலிருகரங்களில் டமருகமும், எரியகலும் ஏந்தி, வலது முன் கரத்தால் அபயம் காட்டி இடது முன்கரத்தை உயர்த்திய காலுக்கு இணையாக நீட்டி ஆனந்தத் தாண்டவம் ஆடுபவராய் அண்ணல் காட்சி தருகின்றார். தெய்வீகப் பொலிவும், கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் காணப்பெறும் இச்சிற்பத்தின் முக அழகுக்கு ஈடாக வேறு ஒரு படைப்பினைக் காட்டுதல் கடினமே.ஈசனுக்கு வலதுபுறம் பிருங்கிமுனிவர் ஆட, இடப்புறம் எட்டுகரங்களோடு கதம் கொண்ட காளிதேவி ஆடுகின்றாள். தூக்கிய திருக்கரங்களும், கால்களின் அசைவும் அவள் ஆடுகின்ற ஆடலின் வேகத்தைக் காட்டுகின்றன. கோபக்கனலை அவளது பிதுங்கிய விழிகளும் ஆவேசம் காட்டும் முகமும் வெளிப்படுத்துகின்றன. வேர்த்து ஆடும் காளியிவள் என்பது நன்கு விளங்கும்.
19321921
இந்த தேவகோஷ்டத்தின் இருமருங்கும் எழிலார்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மலரேந்திய சூரியனும் சந்திரனும் ஒரு கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி ஈசனைப் போற்றுகின்ற நிலையில் விண்ணில் பவனி வருகின்றனர். சூரியனுக்குச் சற்று கீழாக எலிமீதமர்ந்த கணபதியாரும், மயில்மீதமர்ந்த கந்தனும் ஆலங்காடு நோக்கி விரைந்து செல்கின்றனர். இக்காட்சிக்குக் கீழாக நந்தியெம்பெருமான் குடமுழவினை இசைத்தவாறு அமர்ந்துள்ளார்.

கோஷ்டத்தின் கீழ்புறம் பூதகணங்கள் மத்தளங்களையும் இன்னபிற இசைக்கருவிகளையும் இசைத்தவாறு ஆடி மகிழ்கின்றன. அப்பூதகணங்களோடு விரிந்த சடை, வற்றிய கொங்கைகள், எலும்பு உரு ஆகியவற்றோடு இலைத்தாளம் இரண்டினை கையிலேந்தி இசைத்தவாறு காரைக் காலம்மையார் அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்தவாறு ஆடல் காண்கின்றார்.ஆடும் அழகனுக்கு இடதுபுறம் விண்ணகத்தில் சந்திரன் உலவ, கீழே அண்ணல் உலாப்போகும் எருது நிற்கின்றது. அதன் முதுகில் இடக்கரத்தை ஊன்றியவாறு வலக்கரத்தில் மலரொன்றை ஏந்திய நிலையில் உமாதேவி நிற்கிறார். தேவியின் திருமுகமோ அழகனின் ஆடலில் ஒன்றி மெய்மறந்த நிலையைக் காட்டுகின்றது. ஆனால் இடபமோ வாய்பிளந்த நிலையில் ஆடலின் வேகங்கண்டு மிரண்டு காணப்பெறுகின்றது.

சிற்பங்களை இன்னும் தெளிவாக பார்க்க

19921994199619982000200220042006

இக்காட்சியைக் காணும் போது,

சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன் காளிதன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன்-இராமனதீச்சரமே

என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலுக்கென வடிக்கப்பெற்ற சிற்பக் காட்சியே இதுவென்பது நன்கு விளங்கும். ஈசனார் முகத்திலோ ஆனந்தப் புன்னகை. காளியின் முகத்திலோ கடும் சினம். காளையில் முகத்திலோ மிரட்சி. அன்னையின் முகத்திலோ அமைதி. இத்தனை உணர்வுகளையும் ஒருங்கே இக்காட்சியில் படைத்துக் காட்டிய சோழனின் சிற்பி நம் அனைவரையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்தவாறே திருவாலங்காட்டிற்கு அழைத்துச் சென்று அற்புதத் திருக்கூத்தைக் காட்டுகின்றான். காண்போம் வாரீர்.

(பி.கு.) கலைநயமும், வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கே பெற்ற இந்த ஆடவல்லான் திருமேனியின் தூக்கிய இடது காலினைக் கலையறிவற்றோர் பின்னாளில் சிதைத்து அழித்துவிட்டனர். இருப்பினும் உடையார்பாளையம் ஜமீன்தார் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் போது உடைந்த காலுக்கு முட்டுக்கொடுத்து ஓரளவு சீர் செய்துள்ளனர்.

காரைக்கால் அம்மையின் அருமையான பாடல்கள் இதோ :

பதினொன்றாம் திருமுறை : பாடல் எண் : 1

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பாடல் எண் : 22

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பாடல் எண் : 19

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பொது கண்டிப்பாக இந்த அருமையான சிற்பத்தை கண்டு ரசியுங்கள்.

209320902096

அதே மாங்கனி வேறு குழப்பம் – காரைக்கால் அம்மை சரித்திரம்

கம்போடியாவில் காரைக்கால் அம்மையாருக்கு சிற்பம் என்றவுடன் பலருக்கு அவர் யார் என்றும், அவர்களது கதையை பற்றி படிக்கவும் ஆவல்.

அந்த ஆவலை தூண்டவே அந்த மடலில் அவர்களுடைய அற்புத கதையை பற்றி எழுதவில்லை. எனினும் அவர்களது வினோத உடல் அமைப்பு பலரையும் கேள்வி எழுப்ப செய்தது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, அவருடைய அற்புத பாடல்களை இங்கே இடாமல், அவர் சரித்திரத்தை விளக்கும் முறையில் நண்பர் திரு. வி. சுப்பிரமணியன் ஐயா ( எனக்கு பல முறை பக்தி இலக்கியங்களில் இருந்து சிறந்த குறிப்புகளையும் பாடல்களையும் தேடி தந்த வழி காட்டி ) அவர்கள் இயற்றி இருக்கும் அற்புத பாடலையும், அம்மையார் புகழ் விளக்கும் திருவாலங்காடு கோயில் கோபுர சிற்பம் ஒன்றையும் இணைக்கிறேன்.

கோபுர சிற்பம் – அம்மையின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்வுகள். இடம் இருந்து வலம் – திருமணம், மாங்கனி, கைலாய பிரவேசம்

பசித்து வந்தவ ரிலைதனி லொருகனி
.. படைத்து வந்தவர் பிறகடி தொழவொரு
.. பழுத்த இன்கனி அவர்பெற அருளிடு .. முமைகோனே
புசித்த பின்கண வனும்வின விடஅவர்
.. பொருட்ட ருங்கனி தரஉட னுறைவது
.. பொருத்த மன்றென அவனவர் தமைவில .. கிடுவானே
நசிக்க ஒன்பது துளையுட லழகென
.. நவிற்றி என்புரு வினைஅரு ளெனமிக
.. நயக்கு மன்பர துளமகி ழுருஅளி .. சடையோனே
வசிட்ட ரும்பல முனிவர்க டொழஉறை
.. மலைத்த டந்தனி லடியிட வெருவிய
.. மனத்தர் மன்புக ழனைதொழு முனதடி .. மறவேனே.

உரை:
(தனது இல்லத்திற்குப்) பசியோடு வந்த அடியாருக்கு இலையில் (கறி இன்னும் சமைத்து
இராததால், கணவன் கொடுத்தனுப்பியிருந்த) ஒரு மாம்பழத்தை இட்டு மகிழ்ந்து, பிறகு
(கணவன் உண்ணும்போது இன்னொரு கனியையும் கேட்கத்) திருவடியைத் தொழுதபொழுது, அவருக்கு
(புனிதவதி என்ற காரைக்கால் அம்மையாருக்கு) ஒரு பழுத்த இனிய கனியை அளித்த
பார்வதி நாதனே! (அதை) உண்ட பின் (அதைப் பற்றிக்) கணவன் கேட்டபொழுது, அவன்
நம்புவதற்காக அவர் வேண்டியபொழுது இன்னொரு அரிய கனியைத் தர, அதைக் கண்டு (அவர்
தெய்வம் என எண்ணி) அவரோடு இல்லறம் நடத்துவது தகாது என்று அவரி விட்டு நீங்கிச்
சென்றான். (அதன் பிறகு) “இந்த ஒன்பது ஓட்டைகளுடைய உடலின் அழகு அழிவதாக!” என்று
சொல்லிப், “பேய் உருவத்தைத் தாராய்” என்று மிக விரும்பிக் கேட்ட பக்தருடைய
உள்ளம் மகிழ அவ்வுருவத்தை அளித்த, சடை உடையவனே! வசிஷ்டரும், பல முனிவர்களும்
தொழ (நீ) உறைகிற கயிலைமலைப் பாதையில் காலை வைத்து நடக்க அஞ்சிய மனத்தை உடையவர்,
(அதனால் தலையால் நடந்தவர்), நிலைத்த புகழ் உடைய அம்மையார் தொழுகிற உனது
திருவடியை நான் மறக்கமாட்டேன்!

காரைக்கால் அம்மையார் வரலாற்றைப் பெரிய புராணத்தில் விரிவாகக் காண்க

படைத்தல் –
உவத்தல் – மகிழ்தல்;
இன் கனி – இனிய கனி;
அரும் கனி – அரிய கனி;
உடன் உறைவது – கூடி வாழ்வது;
நசிக்க – அழிக!
நவிற்றி – சொல்லி;
என்பு – எலும்பு;
உரு – உருவம்;
நயத்தல் – விரும்புதல்;
மகிழ்தல் – விரும்புதல்; களித்தல்;
உள மகிழ் உரு அளி – உள்ளம் மகிழும் வடிவை அளிக்கிற;
மலை – இங்கே, கயிலை மலை;
தடம் – வழி; பாதை; மலை;
அடியிடுதல் – அடிவைத்து நடத்தல்;
வெருவுதல் – அஞ்சுதல்;
மன் – நிலைத்த; மிகுந்த;
அனை – அன்னை;

பதம் பிரித்து:
பசித்து வந்தவர் இலைதனில் ஒரு கனி
.. படைத்(து) உவந்தவர், பிற(கு) அடி தொழ, ஒரு
.. பழுத்த இன் கனி அவர் பெற அருளிடும் .. உமைகோனே!
புசித்த பின் கணவனும் வினவிட, அவர்
.. பொருட்(டு) அரும் கனி தர, உடன் உறைவது
.. பொருத்தம் அன்(று) என அவன் அவர்தமை விலகிடுவானே!
“நசிக்க ஒன்பது துளை உடல் அழ(கு)” என
.. நவிற்றி, “என்(பு) உருவினை அருள்” என மிக
.. நயக்கும் அன்பர(து) உள[ம்] மகிழ் உரு அளி .. சடையோனே!
வசிட்டரும் பல முனிவர்கள் தொழ உறை
.. மலைத்தடம்தனில் அடியிட வெருவிய
.. மனத்தர், மன் புகழ் அனை தொழும் உன(து) அடி .. மறவேனே!

காரைக்கால் அம்மை தொழும் உன்னை மறவேன்
——————————————————
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன .. தனதான

(விரித்த பைங்குழல் – திருப்புகழ் – சுவாமிமலை)

நல்லதோர் வீணை செய்து

சிங்கை அருங்காட்சியகத்தில் இருந்த சோழ வெண்கல சிலையை பற்றிய மடலுக்கு பலரும் மறுமொழி கூறுகையில், இந்த சிலை அங்கே எப்படி வந்தது என்ற கேட்டார்கள். பல அமெரிக்க, ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் சோழர் கால வெண்கல சிலைகள் உள்ளன.

திரு நாகசுவாமி ஐயா அவர்கள், அருமையாக வாதிட்டு சோழர் கால நடராஜர் சிலையை இங்கிலாந்திலிருந்து மீட்டு வந்தார்.

Bio Data of Dr. Nagaswamy with the London Nataraja case:

அதெல்லாம் இருக்கட்டும், நம் ஊரில் இருக்கும் சிலைகளின் நிலைமை என்ன? இதோ XXXXXXXX கோயில் , சோழர் கால வெண்கல சிலைகள். திரு சந்திரா அவர்களின் படங்கள்.

நல்லதோர் வீணை செய்து – அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பாரதியின் புகழ் பெற்ற இந்தப் பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது.

அந்த சிவனே இப்படி புழுதியில் இருக்கும் பொது ? 13th C சோழர் கால பொக்கிஷங்கள் , புழுதி மட்டும் அல்ல, ஒரு சிறு அறையில் ,கூத்தபிரான் – அவன் இடு காட்டில் ஆடினான் என்பதற்காக இப்படியா? அடுத்து அமைதியே உருவான சிவன் .. கரையான்கள் துணைக்கு தரையில் கேட்பார் அற்று கிடக்கும் இந்தக்கலைச் செல்வங்களை பார்க்கும் பொது நெஞ்சு வெடிக்கிறது.

(கோவிலின் பெயர் பாதுகாப்பு கருதி இங்கே xxxxxxxxxxஇடவில்லை )

கம்போடியாவில் காரைக்கால் அம்மை

கம்போடியா ( Khao Preah Vihear) கோவில் சிற்பம் சிலவற்றை நாம் முன்பு பார்த்தோம். அவ்வாறே இன்றும் ஒரு அறிய சிற்பம்.

தொலைவில் இருந்து பார்க்கும் போது நடராஜர் மட்டுமே தெரிந்தார். அழகிய ஆடும் கோலம் – பத்து கைகளும் ஒரே கை வேகமாய் ஆடுவது போல அழகே உள்ளது.


கொஞ்சம் கீழே பார்த்தால் அனந்தசயனன், காலை அன்பாய் பிடித்து விடும் லக்ஷ்மி ( சிற்பம் சிதைந்து விட்டது ) நாபிக்கமலத்தின் மேல் பிரம்மன். அவர்களை அடுத்து இரு கிளிகள் – அதற்கு மேல் ஒரு யாழி – யாழியின் மேல் இருப்பவர் யார் என்று தெரியவில்லை – அதை அடுத்து இரு குரங்குகள் !!

சரி அத்துடன் விட்டு விடலாம் என்று பார்த்தால் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தை ரசிக்கும் இருவர் ( தலைகள் சிதைந்து விட்டன ) – ஆனால் வலது புறம் இருப்பது ஒரு பெண்மணி – அவர்களின் அங்க குறிப்புகளை சோழர் கால காரைக்கால் அமையின் சிலையுடன் ஒப்பிடும் போது அப்படியே ஒத்து உள்ளது. (சுருங்கிய மார்பகம்) ஒருவேளை தன்னை பேய் போல ஆக்குக என அம்மை இறைவனை வேண்டிக்கொண்டதால் இளமை மாறியதோ. அம்மையின் முழு கதையை வரும் மடல்களில் பார்ப்போம்

(அம்மை தாம் அருளிய அந்தாதியில்)

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.




காரைக்கால் அம்மை பெரும் பாலும் தென் இந்திய இலக்கியங்களிலேயே வருபவர், பல தமிழருக்கே தெரியாத ஒருவர். அவர் எங்கே அங்கே சென்றார் ? தமிழக சிற்பிகள் அல்லது அவர்களது வழி தோன்றல்கள் இல்லை அவர்களிடம் கலை பயின்றவர்கள் இதை வடித்து இருக்கலாம். ஏனெனில் சிலையில் தமிழ் / சோழ கலை தெரிய வில்லை , பெரும்பாலும் தென் கிழக்கு ஆசிய சாயலே தெரிகிறது.

images courtesy
http://www.sundial.thai-isan-lao.com/phanom_rung.html

பெண்களை மயக்கும் திகம்பரர் , ஆண்களை மயக்கும் மோகினி

நண்பர் ஒருவர் பல சிவ பிட்சாண்டவன் சிற்பங்கள் இருக்க, ஒரு சில சிற்பங்களையே ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டார் . மிகவும் நல்ல கேள்வி. திரு திவாகர் அவர்களின் தமிழும் அதனுள் இருந்த பல கருத்துகளும் சரி வர சென்றடையவே – அவர்களது மடலில் இட்ட சிற்பங்களை பற்றி மேலும் எழுதவில்லை.

இதோ அதன் தொடர்ச்சி. கதையை கேட்டீர்கள் அல்லவா, இப்போது அந்த மகா சிற்பி சிவனை மட்டும் செதுக்கவில்லை, அந்த கதையையே செதுக்கி உள்ள அருமையை பாருங்கள்.

காஞ்சி கைலாசநாத கோவில். ராஜ சிம்ஹன் நிறுவிய அற்புத கோயில், தஞ்சை பெரியகோவிலை நிறுவிய ராஜ ராஜனே பெரிய கற்றளி என்று வியந்த கோயில். அங்கே இந்த அற்புத சிவ பிட்சாண்டவனின் வடிவம் – ராஜ சிம்ஹனின் பாயும் சிங்கங்களின் நடுவில் கம்பீரமாக நிற்கும் காட்சி. சிற்பத்தில் ஈசன் தன் இடது கை விரலை நீட்டி நம்மை மேல பார்க்க சொல்வது போல உள்ளது. மேலே என்ன இருக்கிறது. ஆஹா, ஆடல் வல்லானின் அற்புத ஆட்டம். ( இதே வடிவம் நாம் மல்லை ஓலக்கநெஸ்வர கோயிலிலும் பார்த்தோம் !!)

சரி சிற்பத்திற்கு மீண்டும் வருவோம். கட்டழகு வாலிபன் அல்லவா – உணர்த்த என்ன ஒரு கட்டுடல், முகத்தில் விஷம சிரிப்பு , ஒரு காலை அழகாய் மடித்து, கால்களில் இருக்கும் பாத ரக்‌ஷைகள் – அதிலும் ஒரு பாதம் சற்றே தூக்கியவாறு, பரந்த விரிந்த தோள்கள் , வலது கையை என்ன ஒரு யதார்த்தமாக தண்டத்தின் மீது இட்டிருக்கும் பாங்கு , அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் திரு ஓடு.. அருமையான சித்தரிப்பு. அதனுடன் நிறுத்தவில்லை நம் சிற்பி.


அழகு வாலிபனை கண்டு சொக்கி அவன் காலில் விழும் இரு ரிஷி பத்தினிமார்கள், அவர்களுக்கு மேலே இதை கண்டு சினம் கொண்டு ஈசனை தாக்க கை தூக்கும் ரிஷி. ஒரு கதா பத்திரத்தை மட்டும் சித்தரிக்க வில்லை இந்த சிற்பம், , ஒரு கதையையே சித்தரிக்கிறது.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ? நான்காம் திருமுறை

நான்காம் திருமுறை

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

186518721868
சரி, இப்போது மோகினி வடிவம் – காஞ்சி தேவராஜசுவாமி கோவில் தூண் சிற்பம். அங்கும் சிற்பி தன் கலை நுணுக்கத்தை காட்டி உள்ளான்.உற்றுப் பாருங்கள் – மோகினியின் மோகனப் புன்னகையில் மயங்கி ,அவள் ஊற்றிக் கொடுக்கும் பானத்தை இரு கரம் கூப்பி அருந்தும் ரிஷிகளின் வேடிக்கையான காட்சியையும் காட்டிய சிற்பியின் கற்பனை , கலைத் திறன் அபாரம்.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ?இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவ ரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடு காட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

சிற்பக்கலை – ஒரு சிறந்த சரித்திர புதின ஆசிரியரின் பார்வையில்

எனது வழிகாட்டியாக விளங்கியவர்கள் பலர் – அவர்களுள் மிகவும் முக்கியமானவர் திரு திவாகர் – அவர் வம்சதாரா, திருமலை திருடன் , விசித்ர சித்தன் என்று மூன்று அழகிய சரித்திர புதினங்களின் வெற்றி ஆசிரியர்.Vamsadhara.blogspot.com
183818361840
என்னை தினம்தோறும் ஊக்குவிக்கும் ஒரு நல்ல மனிதர். அவருடைய பார்வையில் சிற்பம் …..

விஜய் அவர்களின் இந்த வலைப் பகுதி சிற்ப வரலாற்றின் அழிந்து போன அந்த காலகட்டத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு கல்லையும் சிற்றுளியையும் மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை வகை சிற்பங்கள் வடித்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அந்தக் கலைஞர்கள் மீதும், அவர்கள் கொண்ட அந்தக் கலைக்காதல் மீதும் ஆச்சரியம் நமக்கு உண்டாவது இயற்கைதான்.

தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கற்சிலைக் கலை 15 ஆம் நூற்றாண்டு வரை செழித்து எத்தனையோ ஆயிரக்கணக்கான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. ‘உளியின் இனிய ஓசை’ ஊரெங்கும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கவேண்டும். இப்போதும் இந்தக் கலை நசியவில்லை என்பது ஆங்காங்கே கட்டப்பட்டுவரும் புதிய கோயில்கோபுரங்களில் தெரிகின்றது என்றாலும் தற்சமயத்து சிலைகளுக்கும் ஐந்நூறு வருடங்களுக்கு முன்வரை செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கும் ஒரு முக்கிய வேற்றுமை உண்டு. புராணக் கதைகளில் வரும் நீதிக்கதைகளை முன்வைத்து அந்தக் கதைக்கேற்றவாறு சிற்பங்கள் வடிப்பார்கள். ஒரு நல்ல கதையை வைத்து தற்காலங்களில் எடுக்கப்படும் திரைப்படம் போல அந்தச் சிற்பங்கள் உடனடியாக நம் மனதில் பதிந்துவிடும். இந்த சிற்பங்கள் நல்ல வகைக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செதுக்கப்படுவதால் காலாகாலத்திற்கும் நிலைத்து நின்றது.. நிற்கிறது.. இன்னமும் கூட (மனிதன் தலையிட்டு பாழ்படுத்தாமல் இருந்தால்) நிற்கும். ஆனால் தற்போது செதுக்கப்பட்டு வரும் சிற்பங்கள் ஒரு தனிப்பட்ட வகையிலேயே செதுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க நாட்டு அட்லாண்டா வில் புதிதாகக் கட்டப்பட்ட சுவாமிநாராயண் கோயில் தூண் ஒன்றின் சிற்பம் பார்வைக்கு வந்தது. மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் உயிரோட்டம்?… இந்த உயிரோட்டம் அந்தக் காலத்துச் சிற்பங்களில், அந்தச் சிற்பம் சொன்ன கதைகளில் இருந்ததே..
1842
அந்தக் காலத்து சிற்பிகள் ஒரு கைவேலைக்காரர் மட்டும் அல்ல. நம் பழைமையான கலாசாரத்தையும், பண்பாட்டையும் நன்கு புரிந்துகொண்ட சான்றோர்கள் என்றே சொல்லவேண்டும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள். புராணங்கள், பாகவதம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் நூல்களில் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது. இந்த நூல்களின் மீது மிக நுண்ணியமான தெளிவு பெற்றிருந்தார்கள் இந்தச் சிற்பிகள். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்ற சொல்லுக்கேற்ப இந்த சிற்ப சாத்திரத்தை அறிஞர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கற்றார்களோ என்ற அளவில் ஏராளமான சிற்பச் செல்வங்களை எதிர்காலத் தலைமுறையினர்க்காக அள்ளித் தந்தனர்.

இப்படிப்பட்ட அருமையான சிற்பச் செல்வங்களை தன் வசம் கொண்ட இந்த அழகான வலைப் பூவில் விஜய் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ஒரு புராணக் கதையை நான் எழுத விஜய் சேகரித்த சிற்பங்களோடு… .

பிட்சாண்டவன்.
18311823
சிவம் என்றால் அன்பு, சிவம் என்றால் பழைமை, செம்பொருள் என்று எத்தனையோ பொருள்களை அகராதியில் காணலாம். சிவம் என்றால் இயற்கை கூட.. பூவுலகையே வெள்ளக்காடாக்கி அழிப்பது போல சீறிப் பாய்ந்த கங்கையை தன் விரிசடையில் தாங்கி அவளை மெல்லிய நீரோடையாக தவழவிட்டு இந்த உலகைக் காத்தவன் ஆயிற்றே.. இந்தப் பூமியை விட சற்றே சிறிய கிரகமான சந்திரனுக்கும் தன் தலையில் இடம் அளித்தவனுக்கு இந்த மான், மழு, பாம்பு, கையில் நெருப்பு, புலித்தோல் என்று எல்லாமே இயற்கை சம்பந்தப்பட்டவைகளை அணிகலன்களாகக் கொண்டவன், ஏன் அரக்கனான முயலகனையும் பாதத்துக்கடியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்?.. ஒருவேளை அரக்ககுணம் கூட இயற்கையோ என்று எண்ணவும் தோன்றுகிறதல்லவா.. கங்கையும் நிலவும் அவன் செஞ்சடையில் குடிகொண்ட கதை அறிவோம்.. ஏனைய இயற்கை அணிகலன்கள் எப்படி அவனிடத்தே சேர்ந்தன?..

பொதுவாக புராணக்கதைகள் என்றாலே சற்று பயம்தான்.. பயத்துக்குக் காரணம் ஏராளமான கற்பனைக் கதைகள் கண்டபடி மலிந்திருக்கும். பல கதைகள் இப்படித்தான் என்றாலும் சில கதைகள் நம்முடைய சிந்தனைக்கு மருந்தாகவும் விருந்தாகவும் அதே சமயம் நம் முன்னோர்கள் காலம் எப்படிபட்டதாக இருந்தது என்பதையும் நமக்கு விளங்கவைக்கும். அதுவும் இக் கதைகளைப் பற்றி சமயக் குரவர் நால்வர் தம் தேவாரம் – திருவாசகம் மூலம் பாடி இருந்தால் கேட்கவே வேண்டாம். அந்தப் புனிதமான தெய்வப் பெரியவர்கள் வாக்கு சத்திய வாக்காயிற்றே. இப்படித்தான் தாருகாவன முனிவர்களின் கர்வ பங்க கதையும். இவர்களால்தானே சிவனுக்கு இத்தனை இயற்கை அணிகலன்கள் கிடைத்தன!..
181618201833
நம் பாரதம் புராதனச் செல்வத்தில் சிறப்பு வாய்ந்தது. சனாதன தர்மம் என்ற பொதுப்பெயர் கொண்டு ஆதிகாலம் தொட்டு சமய வேற்றுமையில்லாமல் தர்மம் என்ற பொது விதியின் கீழ் நம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள் முனிவர் பெருமக்கள். கானகங்களில் வாழ்ந்து தங்கள் வாழ்க்கை முறையை மிக எளிமையாக்கிக் கொண்டு அதே சமயம் கானகத்துக்கு வெளியே நாகரீகமாகவும், தர்மமுறை சிதறாமலும் உலகம் உய்ய பெரு வழிவகைகளை மனித குலத்துக்கு அள்ளித் தந்தவர்கள் அந்த முனிவர்கள். நம் முன்னோர்கள் என்றால் இவர்கள்தான். வேத நெறி வாழ்க்கையும் ஆண்டவன் மீது பக்தியும் இவர்கள் மூலம்தான் நாம் கற்றுக் கொண்டோம். சுயநலமற்ற அவர்கள் எளிமையும் ஆண்டவன் மீது கொண்ட தூய பக்தியும் ஆண்டவனையே எப்போதும் அவர்கள் அருகிலேயே இருக்கவைத்தது.

பொதுவாகவே முனிவர்களைப் பற்றி நாம் பெருமையாக சொல்லிக்கொண்டே போகலாம்தான். ஆனால் எங்கும் எதிலும் சில நெருடல்கள் உண்டுதானே.. தாருகாவனத்து முனிவர்களின் நெருடல் கூட இந்த வகைதான்.

தாருகாவனத்து முனிவர்கள் ஏனைய முனிவர்களை விட சற்று வேறுவிதமாக சிந்தித்தார்களோ என்னவோ.. எதையும் எப்போதும் அள்ளிக் கொடுக்க வேதமும் ஆகம முறைகளும் ஏராளமாக இருக்க, அதற்குத் தகுந்தாற்போல கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர தேவர்களும் காத்திருந்து இவர்கள் வேண்டியதை யாக குண்டத்திலிருந்தே வரவழைத்துத் தர, இனிமேல் அங்கு ஆண்டவனுக்கு என்ன வேலை என நினைத்தார்களோ என்னவோ.. சிவனும் கேசவனும் தெய்வ ஆராதனைக்கு உரியவர்களா.. அவர்களால் தமக்கு உதவாத பட்சத்தில் அவர்கள் கூட மனித ஆன்மாக்களில் ஒன்றுதான்.. இவர்களை நாளும் நினைப்பதால் அப்படி என்ன பெரிய பலன் கிடைக்கப் போகிறது.. என்ன பெரிய பக்தி வேண்டிக்கிடக்கிறது இவர்களிடத்தில்..

(இப்படிப்பட்ட ஒரு கருத்தினை மீமாம்சை என்று சொல்வார்கள். வேதம் போதித்த மந்திரங்களும், அதற்கான பலன்களும் இருக்கையில் கடவுள் என்று ஒருவன் தேவை இல்லை என்று சொல்கிறது மீமாம்சை நூல். மீமாம்சை என்பது வேதத்தின் கர்ம காண்டத்தை ஆய்வு செய்து சைமினி எனும் முனிவர் முதன் முதலில் நூலாக எழுதினார். இந்தக் கருத்தின்படி செல்லுமாறு தன் சீடர்களைப் பழக்கினார். சரபமுனிவர் இந்த மீமாம்சை நூலுக்கு உரை விளக்கம் செய்தார். பின்னர் மேலும் அதில் சிற்சில மாறுதல்கள் பாட்டாச்சாரியர் மற்றும் பிராபகர முனிவர்களால் அந்த மீமாம்சையில் செய்யப்பட்டது. எது எப்படியிருந்தாலும் கடவுள் என்ற ஒருவனின் தேவை கிடையாது என்பதில் மட்டும் முடிவாக இருந்தனர்.)

ஆண்கள் தவறு செய்தால் பெண் அதைத் தடுத்து அந்தத் தவறில் இருந்து திருத்த வேண்டும் என்பது கூட தர்மத்தின் வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் தாருகாவனத்து முனிபத்தினிகள் தங்கள் கணவன்மார் கருத்தை ஆதரித்தார்கள்., அவர்களுக்கு தங்கள் முனிவர்களின் ஆற்றல், அந்த ஆற்றல் மூலம் கிடைத்த பலன்கள் அதுவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சுகம் கிடைக்கும் வழிவகைகள் அனைத்தும் பிடித்துப் போய்விட்டன.

கற்பில் சிறந்தவர்கள் தாங்கள்தான்.. அந்தக் கற்பின் பலனாகவே தங்கள் கணவர்களுக்கு அத்தனை ஞானங்களும் கிடைக்கின்றன என்ற சிந்தனை அவர்கள் மனதில் வேகமாகப் பதிந்தது. அந்த கற்புக்கு கணவர்களான முனிவர்களே பயப்படும்போது, அந்த சிவனும் கேசவனும், அப்படி என யாராவது இருந்தால் கூட, பயப்படத்தான் வேண்டும்.. இந்த ஒரு நினைப்பு அவர்கள் கர்வத்தை மேலும் அதிகம் ஆக்கியது.

இறைவன் இந்தத் தாருகாவனத்து முனிவர்களுக்கும் முனி பத்தினிகளுக்கும் பாடம் புகட்ட முடிவு செய்தான். சிவன் அழகான ஆண் உருவெடுத்து, உடையில்லாமல், கையில் ஓடேந்தி ‘பிச்சை போடு பெண்ணே’ என்று அந்த முனிபத்தினிகளிடம் கேட்டுக் கொண்டே ‘பிட்சாண்டவனாய்’ அந்த வனத்தே நடை போட்டுச் செல்ல, சொக்கத் தங்கமாக மின்னிய அவன் உடல் வனப்பிலும், இளமையின் அழகிலும் மயங்கிய அந்த பத்தினிப்பெண்கள், தாங்கள் கற்புடைய பெண்டிர் என்ற நினைப்பையே இழந்து அவன் பின்னேயே சென்றார்கள்.
18281825
அதே போல மயக்கும் மோகினி உருவம் கொண்ட விஷ்ணு ஒய்யாரமாக முனிவர்கள் முன்னே வந்து அன்ன நடை போட்டு அசைந்தாடி செல்ல, அந்த அழகு மோகினியின் பின்னேயே முனிவர் கூட்டமும் தங்கள் மனங்களை சிதறவிட்டுக் கொண்டே சென்றது.. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தபோது உண்மை வெட்டவெளிச்சமாகியது. முனிபத்தினிகள் உண்மை நிலையறிந்து வெட்கத்தால் தலை குனிய ஆண்மக்களான முனிவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தில் ஆத்திரம்தான் வந்தது. உடனே ஒரு யக்ஞம் ஆரம்பித்து எரியும் தீயிலிருந்து கொடும் புலியை வரவழைத்து சிவன் மீது ஏவினர் (இந்த வேள்விக்குப் பெயர் அவிசார வேள்வி என்று சொல்வார்கள் – இது மிக மிகக் கொடிய முறையான வேள்வி, இதையே ராமாயண போரின்போது தன் கடைசிப் பிரயத்தனமாக இந்திரசித்து செய்யமுயன்ற போது, இந்த யாகத்தை எப்படியும் அழித்தே தீரவேண்டுமென்றும் இல்லையேல் அகில உலகத்துக்கும் ஆபத்து என்று எல்லாம் அறிந்த வீடணன் வேண்ட, அந்த யாகத்தையே அம்பு கொண்டு இராமன் அழித்தான் – யுத்தகாண்டம்)

இப்படிப்பட்ட கொடிய அவிசார யாகத்தீயிலிருந்து வெளிப்பட்டு முதலில் வந்த புலியைக் கொன்று அதன் தோலை இறைவன் தன் பொன்னார் மேனிக்கு ஆடையாகப் போட்டுக் கொண்டான். முனிவர்கள் விஷக்கொம்பு கொண்ட மானையும் கூரான மழுவையும் வேள்வித்தீயிலிருந்து அனுப்பினார்கள். அவைகளை அவன் அநாயாசமாகப் பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டான். விஷப்பாம்புகளை ஏவினர்.. உடல் முழுதும் சுற்றிக் கொண்டு நாகாபரணன் ஆனான். எதையும் செய்யத் தயங்காத முனிவர்கள், ஆத்திரத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத முனிவர்கள், தாங்கள் செய்த வேள்வித்தீயையே அவன் மீது ஏவினர். அதையும் அவன் திருவோட்டில் பிடித்துக் கொண்டான். முனிவர்கள் கதறினர். காலில் விழுந்தனர்.

இந்த மான், மழு, தீயேந்தியதைப் பற்றி தேவாரத்திலும் சரி, திருவாசகத்திலும் சரி, நிறைய இடங்களில் சின்னச் சின்ன வரிகளாக வரும். ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் காட்டுகளாக:

‘மானை இடத்ததோர் கையன்’ (அப்பர் தேவாரம்); ‘பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கசைத்து’ (சுந்தரர் தேவாரம்) தம்பிரான் ஆவானும் தழல் ஏந்தும் கையானும்’,; மழுவாள்வலனொன்றேந்தி (திருஞானசம்பந்தர்) முன்னோன் காண்க, முழுதோன் காண்க, கானப்புலியுரி அரையோன் காண்க (மாணிக்கவாசகர்).

முனிவர்கள் இந்த மானிடம் தழைக்க வந்த மகாத்மாக்கள் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட முனிவர்களே தவறு செய்கிறபோது இறைவன் அவர்களைத் தண்டிக்காமல் பாடம் மட்டுமே புகட்டுகிறான். இந்தக் கருணை முனிவர்களுக்காகவோ அவர்களின் ஆற்றலுக்காகவோ அல்ல. மனிதர்களுக்காகவே, அவர்களின் முன்னோர்களான முனிவர்களின் மீது அவன் கருணை கொண்டு திருத்துகிறான் என்று கொள்ளவேண்டும். பக்தி அதுவும் இறைவன் மீது உள்ள பக்திதான் ஆதாரமானது. கதிரவனின் ஒளி போல, தீயின் சுடர் போல, மலரின் மணம் போல. பக்தியைப் பற்றி சொல்வார்கள். ஒளியில்லாமல் கதிரவன் தேவைப்படமாட்டான். சுடரும் சூடும் இல்லாவிட்டால் தீயேது? மணமில்லாத மலர் யாருக்கும் பயன் தராது. பக்திதான் அனைத்துக்கும் ஆதாரம். அந்த பக்தி கொண்டு பிட்சாண்டவரைப் பாருங்கள்.. அவன் மகத்துவம் தெரியும்.

திவாகர்
Vamsadhara.blogspot.com!

காலணி அணிந்த பக்தன்

1793
தாராசுரம் ஐராவதேசுவர கோவிலில் மிக அழகிய கண்ணப்பநாயனார் சிலை இருக்கிறது. தோள்களில் வில்லுடன்,இரு கைகளையும் கூப்பி முகத்தில் பக்தி பரவசத்துடன் இருக்கும் மிக அழகிய சிலை – ஆனால் சற்று அவர் காலில் பாருங்கள் – அழகிய காலணிகள்.

பொதுவாக கோவில்களில் நாம் காலணி அணிந்து செல்வதில்லை – அதே போல உள்ளே இருக்கும் சிற்பங்களும் பெரும்பாலும் காலணிகளுடன் இருப்பதில்லை – -இதற்கு இரு சிற்பங்கள் விதி விலக்கு – ஒன்று சிவ பிட்சாடண உருவம். மற்றொன்று கண்ணப்ப நாயனார்.
1796
காலணிகளுடன் கண்ணப்பநாயனார் சிலையை சிற்பி ஏன் செதுக்கினான் ? மீண்டும் திருமுறையில் விடை காண்போம் ( நன்றி திரு V. சுப்பிரமணியன் )

நான்காம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40490&padhi=049&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே
1789
காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும், நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த, காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து, தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து, அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார்.

சிற்பி தான் செதுக்கும் சிற்பத்தை பற்றி எந்த அளவிற்கு ஆராய்கிறான் பாருங்கள்

படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/

இராவணனை சீண்டும் குட்டி பூதகணம், யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா

இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி – முதலில் நாம் கம்போடியா சிற்பம் பார்த்தோம் …இப்போது எல்லோரா .
888891897
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் – தனது ஆணவத்தாலும் தலைகனத்தாலும் அரக்கன் அவன் செய்த காரியத்தை தண்டிக்கும் சிவன் – ( சிதைந்தாலும் … அம்மை அப்பன் முகத்தில் என்ன ஒரு கலை) அவ்வாறு கைலாயத்தின் அடியில் சிக்கி இருக்கும் அவனை கண்டு சிவ கணங்கள் அனைத்தும் பரிகாசம் செய்கின்றன. யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா… வலிமை மிக்க ஒருவன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவனை கண்டு சிறுவரும் நகைபதுண்டு. அதனை எல்லோரா சிற்பி கல்லில் வடித்திருபதை பாருங்கள்.
895903899901906
ஒரு பக்கம் ஒரு குள்ள கணம் கை நீட்டி ஏளனமாக சிரிக்கிறது – மற்றொரு
பக்கம் ஒரு கணம் பின்னால் திரும்பி குனிந்து சொல்லமுடியாத இடத்தை
காட்டி… அதை அடுத்து ஒரு கணம் சிக்கி இருக்கும் அவன் விரல்களை
கணக்கு வாத்தியார் போல் தடி கொண்டு அடிக்கிறது
893901

இந்த சிலை மிக பெரியது என்று சொல்லி விடலாம்…எப்படி உணர்த்த முடியும்..சரி, இதோ படம்.
910

quoting appar’s verses as below:

அப்பர் பாடியது 3-11.

கடுகிய தெர்செலாது கயிலாயமீது
கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம்மென நின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்று சென்று விரைவுற்று அரக்கன்
வரையுற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு வீற்றுவிழ விரலுற்ற பாத (ம் )
நினைவுற்றது என் தன் மனனே

உரை :

தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளே யாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன். அப்போது அந்த தேர்பாகன் அத்தை கண்டு போருக்காதும் இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசிபுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து மகிழ்ந்து என் மனனே

முதலில் பூத கணங்களின் வேடிக்கை விளையாட்டு சிற்பியின் சிந்தனை என்று நினைத்தேன்… அதையும் அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார் (நன்றி திரு திவாகர் மற்றும் திரு சுப்ரமணியம் )…ஆஹா …இதோ வரிகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4034&padhi=&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் – திருமுறை 4.34.8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியன் ஆகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா(று) அறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூதம் எல்லா[ம்] நான்மறைக் காட னாரே.

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.