பேரூர் தொடர் – ஒரு தவத்துடன் துவக்கம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் – பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்ற பொது அங்கு இருக்கும் சிற்பங்களை கண்டு நான் அசந்து போனேன்! கண்முன்னே இருப்பது என்ன என்று திணறி நின்றேன். சிற்பக் கலையில் ஆர்வம் பெருக, எனது தேடல் பேரூர் சிற்பங்களின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை படம் பிடிக்க செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவற்றை படம் எடுக்க அனுமதி இல்லை. நாளேட்டில் வந்த சிறு சிறு படங்களையே பதிவு செய்ய முடிந்தது. எனினும், ஒவ்வொரு தோல்வியும், மீண்டும் அடுத்த முறை அங்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும் வேகத்தை கூட்டியது. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

2008 ஆம் ஆண்டு, சிங்கையில் அன்னலக்ஷ்மி நிறுவனம் ஒரு விழா எடுத்தது. வேண்ட வெறுப்பாக மனைவி மகனுடன் ஒரு சனிக்கிழமை அங்கு சென்றேன். எங்கே எப்படி வெளியே நழுவலாம் என்று எத்தனிக்கும் போது, ஒரு கோடியில் – தொலைவில் – மிகவும் அழகான விநாயகர் ஓவியங்கள் தென்பட்டன. இது போல

http://www.hindu.com/mp/2007/06/09/images/2007060951460301.jpg

என்னையும் அறியாமல் அருகே சென்றேன். அருமையான ஓவியங்கள், மிக நுண்ணிய வேலைபாடு, படங்களின் அடியில் ஒரு கையெழுத்து – பத்மவாசன். ஆஹா , என் அதிர்ஷ்டம் என்று நினைக்கையில், அருகில் ஒரு சிறு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதில் ஓவியர் அங்கு இருப்பதாகவும், உடனே நம் முகங்களை வரைந்து தருவார் என்றும் அறிவித்தது. சுற்றி பார்த்தேன், அடுத்த கடையில் ஓவியர் எங்கே என்று கேட்க, அதோ என்று கையை காட்டினார். மிகவும் எளிமையான குர்தா அணிந்து சாந்தமாக சிரித்த முகத்துடன் – திரு. பத்மவாசன் அங்கே நின்று நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று, என்னை நானே அறிமுகம் செய்துக்கொண்டேன். பொன்னியின் செல்வன், கல்கி, ஓவியர் சிகரம் சில்பி என்று நடை களைகட்டியது. சில்பியின் சிஷ்யன் என்ற முறையில் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை கூறினார். நடராஜர் சிலை உருவத்தை வரையும் போது, காகிதம் குறைவாக இருக்க, இன்னொரு காகிதத்தை எடுத்து ஒட்டி தொடர்ந்தார் எனவும். இன்னொரு காகிதத்தில் அதே நடேசனின் பின் வடிவத்தை வரைந்தாராம் சில்பி. இரு காகிதங்களும் இதனால் ஒரே அளவில் இல்லாமல் போயின. பல வருடங்களுக்கு பின், திரு. பத்மவாசன் அவர்கள் ஒரு புத்தகத்திற்காக அவரது கணினியில் ஒரே அளவாக பெரிது படுத்தி, இரு ஓவியங்களையும் ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்து பார்த்தால் கணக்கட்சிதமாக பொருந்தின என்று அவர் அந்த அற்புத ஓவியரின் சிறப்பை விளக்கினார்.

பிரியும் போது தனது முகவரியையும் தொலைப்பேசி என்னையும் ஒரு சிறு காகிதத்தில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார். ( இன்றும் வைத்துள்ளேன் !!)

டிசம்பர் 2009. மீண்டும் பேரூர் நோக்கிப் படை எடுத்தோம். எப்படியாவது படம் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்ற வெறியோடு – தெரிந்த நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டேன். நண்பர்கள் பலர் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் ஆலயத்தின் அறநிலைத்துறை அதிகாரி மனது வைத்தால் தான் ஒரே வழி என்று சொன்னார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும் பண்ணிவிடுவோம் என்று அவரது அலுவலகம் முன் சென்று நின்றோம். ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிறு வயது அதிகாரி, எதிர்பார்த்ததை விட டிப் டாப்பாக உடை அணிந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். சின்ன அலுவலகம், எனினும் நான்கு கணினிகள் சுற்றிலும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. முதலில் மறுத்தார், ஆலய பாம்ப்லெட் கொடுத்தார், அதில் இருக்கும் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனினும் நான் ஏற்கவில்லை, எனது மடிக் கணினியை திறந்து, செய்து வரும் பணிகளையும், பட சேகரங்களையும் விளக்கினேன். ஒரு மணி நேரம் போனது, கல்லும் கரையும், என்பது போல அதிகாரியும் எங்கள் பணியின் பொருளை உணர்ந்து அனுமதி தந்தார். கட கட என்று வேளையில் இறங்கினோம். அப்போது மின்சாரம் போனது…எனினும் அடுத்த நாளும் சென்று படம் எடுத்து முடித்தோம். எல்லாவற்றையும் எடுத்து விட்டோம் என்ற மிதப்போடும் வெகு நாள் இலக்கு நிறைவேறிய மன நிறைவுடன் திரும்பினோம்.

அடுத்த வாரம், சென்னையில், திரு. பத்மவாசன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன். படங்களை எல்லாம் நிதானமாக பார்த்தார். கண்களில் சிறு பிள்ளை கடையில் கமர்கட் பாட்டிலை பார்ப்பது போல, அனைத்தையும் வரைந்து விட வேண்டும் என்று நினைத்தார் போல.பேரூர் படங்களை பார்த்தவுடன் – விடு விடு என எழுந்து உள்ளே சென்றார் – சிறிது நேரத்தில் பல ஓவியங்களை கொண்டு வந்தார். தான் பேரூர் சென்ற போது வரைந்த ஓவியங்கள் என்றும் படம் எடுத்து போடுங்கள் என்றும் சொன்னார். கரும்பு கடிக்க கூலியா. முதலில் கண்ணில் பட்டது மூலவர் – வண்ணம் தீட்டிய ஓவியம்.

அசந்து போனேன். இப்படி அந்த தாமர வண்ணம் அதன் பொலிவு – எப்படித்தான் கொண்டு வந்தாரோ?

அடுத்து சில தூண் சிற்பங்களின் ஓவியங்களை படம் பிடிக்கும் பொது, இது ஒரு சிறப்பான சிற்பம் என்றார். இதை நான் பேரூரில் பார்த்த பொழுது ஒன்னும் பெரிதாக இல்லை என்று படம் கூட எடுக்க வில்லையே என்றவுடன், அதன் சிறப்பை விளக்கினர். தலையில் குட்டிக்கொண்டு திரும்ப படம் எடுக்க வேண்டுமே என்று திண்டாடிய பொழுத, நண்பர் பிரவீன் அவர்கள் உதவினார். நேற்று இதற்காகவே பேரூர் சென்று அதிகாரியை பார்த்து, தொலைபேசியில் அழைத்து சிலை இருக்கும் இடம் கேட்டு, படம் எடுத்து அனுப்பினார்.



அப்படி இந்த தூண் சிற்பத்தில் என்ன விசேஷம். ஏதோ முனிவர் தவம் செய்வது போலத் தானே உள்ளது

தொடரும். ….

சிவானந்த நடனம் – சென்னை அருங்காட்சியகத்தில் திருவாலங்காட்டு நடேச வடிவத்தை கண்ட பிரெஞ்ச் சிற்பி அகுஸ்டே ரோடின் அவர்களது வர்ணனை

ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அந்த அற்புத வடிவத்தை பற்றி பலரும் போற்றி எழுதியுள்ளனர். பொதுவாக அவர்கள் அந்த ஆட்டத்தின் ஆன்மீக கருத்தையும், அந்த ஆட்டம் உணர்த்தும் உட்கருத்துக்கலையை முதன்மை படுத்தி காட்டும் வண்ணமே உள்ளன. எனக்கு மிகுந்த காலமாய் ஒரு ஆசை. இந்த வடிவத்தை ஒரு கலைஞன், ஒரு படைப்பாளி எப்படி வர்ணிப்பான் என்பதை பார்க்கவேண்டும் என்று. தற்செயலாக சென்னை அருங்காட்சியாக நூல் ஒன்றில் ஒரு சிறு குறிப்பு என் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. புகழ் பெற்ற திருவாலங்காட்டு நடராஜர் சிலை அழகை கண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு சிற்பி அகுஸ்டே ரோடின் ஒரு சிறு வர்ணனை வெளியிட்டார் என்றே இருந்தது அந்த குறிப்பு. உடனே பல இடங்களில் தேடி அதை கண்டு பிடித்தேன் – ரசித்தேன்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில், அதுவும் அப்போதுதான் நமது அற்புதக் கலை திறமைகளை பற்றி வெளி உலகம் உணர ஆரம்பித்த வேளையில், ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சு சிற்பி, ஒரு சிலையை பார்த்து லயித்து , புகழாரம் சூட்டுவது மிக அரிது. எங்கோ படித்துள்ளேன் – ஒரு வைரத்தின் பரீட்சை இன்னும் ஒரு வைரத்துடன் தேய்க்கும்போது வைரத்தின் அருமை புலப்படும் என்று – வெறும் கண்ணாடி என்றால் கீறல் விழும், வைரம் என்றால் அப்படியே இருக்கும். இன்றோ இரண்டுமே ஒன்றை ஒன்று மதிப்பை கூட்டி விடுவதை பார்க்கிறேன். ஒரு மகா சிற்பி, அதைவிட அவன் தூய உள்ளம், கலையுடன் தன் வாழ்வையே பிணைத்து சுவாசிக்கும் ஒருவராலேயே – இப்படி ஒரு ரசனையோடு படைக்க முடியும். பொதுவாக கலைஞர்கள் சற்று தலைக்கனம் பிடித்தவர்கள், அவர்களுக்கு தங்கள், தனது சகாக்கள், தனது நாட்டு படைப்பே பெரிது என்ற மனப்பான்மை விமர்சனங்களில் எப்படியாவது வந்து விடும். எனினும் இந்த வர்ணனையின் சிறப்பே அவர் கிரேக்க சிற்பம் வீனஸ் தி மெடிசி யுடன் ஒப்பிடும் நல்ல உள்ளம், மனதை பெருமிதம் கொள்ள செய்கிறது. மேலே படியுங்கள்.

திரு அகுஸ்டே ரோடின் அவர்கள் வர்ணனையில் இரண்டு நடேசர் வடிவங்களை பார்த்ததாக குறிப்பு உள்ளது. அதில் ஒன்று கீழே நீங்கள் பார்க்கும் திருவாலங்காட்டு சிற்பம். மற்றொன்று வேளாங்கண்ணி சிற்பம். அதையும் விரைவில் இங்கு இடுகிறேன். இந்த சிற்பம் சென்னை அருங்காட்சியகத்தில், கண்ணாடி பெட்டியினுள் இருப்பதாலும், அங்கே பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணமே விளக்கு போடப்பட்டிருப்பதாலும், எங்களுக்கு முக்காலி கொண்டு படம் எடுக்க உத்தரவு கிடைக்கவில்லை என்பதாலும் – படங்கள் சற்று தரம் குறைவாகவும், வெவ்வேறு கோணங்கள் – ஒலி கொண்டு எடுக்க முயற்சி செய்துள்ளோம் ( படங்கள் – நான் மற்றும் நண்பர் அர்விந்த். )

இது 1913 எழுதி , முதல் முறை 1921 ஆம் ஆண்டு எழுத்து வடிவில் வெளிவந்தது. சிறு வர்ணனை என்றாலும் ரோடின் அவர்களது அதீத ரசனையையும் ஆழ்மனதில் தோன்றும் உணர்ச்சிகளை எழுத்து வடிவில் நாம் உணரும் வண்ணம் உள்ளது.

சிவனின் தாண்டவம் – அகுஸ்டே ரோடின்

முழு நடேச வடிவத்தை பார்க்கையில்

முழு மலரென மலரும் உயிர், வாழ்வின் நில்லா ஓட்டம் , எங்கும் இருக்கும் காற்று, சூரியன், மலையில் திரண்டு ஓடும் காட்டாற்றின் வெள்ளத்தில் சுழன்று ஓடும் உணர்வு – இப்படி தெரிகிறது நமக்கு கீழை நாடுகளின் கலை!

மனிதன் அந்தக் காலத்தில் இறைமை அடைந்தான் என்றால், அப்போது நாம் படைப்பிற்கு மிகவும் அருகாமையில் இருந்தோம் என்பதல்ல காரணம் – நமது தோற்றங்கள் பொதுவாக மிகவும் மாற்றம் கண்டதில்லை – நம்மால் அப்போது எல்லா பிணைப்புகளையும் வெட்டி எரிய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, அப்படி ஒரு சுதந்திர நிலையில் சுழன்று சொர்க்கத்தை அடைந்தோம். இன்று நாம் இதைத்தான் தொலைத்துவிட்டு தேடுகிறோம்…

ஆனந்த நடனம் புரியும் சிவன் ஒரு கோணத்தில் பார்த்தால் அழகான மூன்றாம் பிறை போன்றவன்.

இன்றோ காலத்தால் வெல்ல முடியாத அழகு இந்த வெங்கலச்சிலை. என்ன ஒரு பெருமிதம் ததும்பும் கோலம். கம்பீரமான உடல் வாகு. உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒளியின் அசைவு. உற்றுப் பார்க்கும் ஒருவரால் உணரமுடியும், ஒளியின் ஓட்டம் மாறினால் நர்த்தனம் புரியும் அந்த அசையாத தசைகளின் இயக்கத்தை!


அசையாத சிலை அதே இடத்தில் நிலையாக இருந்தாலும், நெருங்கும் நிழலால் இருட்டில் மூழ்கடிக்கப் பட்டாலும் அதனுடைய வசீகரம் நிழலால் பெருகத்தான் செய்கிறது! பனிப் படலம் போல் நிழல் படர்ந்த அந்த உருவமும் அதனுடைய துல்லியமான வடிவமைப்பும் இதை ஒரு தெய்வமே வந்து உருவாக்கியதோ என்று வியக்க வைக்கிறது! எந்த ஒரு சிறுகுறையும் இன்றி அனைத்து பாகங்களும் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே கனக் கச்சிதமாய் உள்ளது. நிலையான சிலைதான் இருந்தாலும் கைகள் அசைவது போன்றே தோற்றம் தரும். கூர்ந்து கவனித்தால், அந்த தோள்பட்டையில் உள்ள எடுப்பான எலும்பும், மார்பு எலும்புகளும், மார்பு கூட்டின் இணைப்புகளும், அவை தோள் பட்டையோடு வந்து சேரும் அமைப்பும், கால்கள் நளினமாக எழுந்து ஆடுவது போன்றே காட்சி கொடுக்கின்றன…






நடேசனை ஒரு புறத்திலிருந்து பார்த்தால்

சிவனின் இந்த வடிவம் வியக்க வைக்கும் உருவம், இரண்டு கைகளும் மார்பையும் வயிற்றையும் பிரிப்பது போல் வடிவமைத்த விதம் புகழ் பெற்ற கிரேக்க சிற்பமான வீனஸ் டா மெடிஸி வடிவத்தோடு போட்டியிட்டு மிஞ்சிவிடுவது போல்லலவா இருக்கிறது! அந்தக் காதல் தெய்வம் எப்படி தன் அழகை கைகளால் மறைக்கிறதோ அதோ போலல்லவா இந்த நடராஜரின் உருவமும் தன் கையை இயக்குகிறது!


நடராஜரின் உடலை இரண்டு பாகங்களாக பிரிக்கும் நிழல், அழகிய தொடைகளை இரண்டு பாகங்களாக நீள வாக்கில் பிரிக்கின்றது, அதில் ஒரு பாகம் இருளில் மூழ்கியும், மறுபாகம் கறுப்பு வெள்ளையிலேயே பல விதமான நிழல்படுகைகளைக் காட்டியும் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றது. இருளில் இடுப்பில் உள்ள எலும்புகள் மறைந்திருக்கின்றன. மொத்தத்தில் அதிலுள்ள ஆழம், மெல்லிய தோற்றம் அதே சமயத்தில் தோன்றும் வலிமை, இவைதான் மிகமும் முக்கியம். இவற்றின் அருமை புரியாமல் பார்த்தால் இந்த அற்புத வடிவத்தின் இயக்கமே புரியாமல் போகும் என்றே தெரிகிறது

நீண்ட கால்கள், அழகிய தசைகள் நடனத்தின் வேகத்தைக் காட்டுகிறது. அழகை பொறாமை கொண்டு மறைக்க முயலும் நிழல் அந்த அழகிய தொடைகளை, நடனத்தின் இயக்கத்தைக் காட்டும் அந்த தொடைகளை மறைப்பதிற்கு மாறாக அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. நிழலோடு படர்ந்த மெல்லிய ஒளி நர்த்தனம் புரியும் அந்தக் கால்களை ஜொலிக்க வைக்கிறது.

நிழலோடு பார்த்த சிவனை நேரில் பார்த்தால்!

இந்த வடிவம் கலைஞர்கள் வெகுவாக உபயோகப் படுத்தும் வடிவம் தான், எனினும் இது சாதாரண வடிவம் அல்ல. ஒவ்வொரு வளைவும் இயற்கையை பிரதிபலித்தாலும் அதிலும் ஒரு தொலைவு – ஒரு அமானுஷ்ய தன்மை தெரிகிறது. இந்த வடிவத்தின் உணர முடியாத ஆழம், அதில் மூழ்கியிருக்கும் வாழ்வின் சுயற்சி – பலரால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது. இந்த சிற்பத்தின் நளினத்தில் ஒரு கண்ணியம் தெரிகிறது. நளினத்தையும் தாண்டி ஒரு கச்சிதம் உள்ளது. இன்னும் பார்த்தால் அந்தக் கச்சிதத்தை தாண்டி எங்கோ செல்கிறது.

இந்த வடிவத்தில் ஒரு மேன்மை தெரிகிறது. நளினம் கலந்த மேன்மை. எனினும் நம் உள்ளுணர்வை ஆட்டுவிக்கும் வலிமை பொருந்திய மேன்மை – அதை வர்ணிக்க வார்த்தைகள் அகராதிகளில் இல்லை

தோளில் இருந்து இடுப்பு வரையும், தொடைக்கும் இடைக்கும் நடுவே செங்குத்தாக மாலை போல் தொடரும் நிழல் பார்க்க கண் கொள்ளா காட்சி.

வேறு கோணத்தில் பார்த்தால்

வேறு கோணத்தில் பார்த்தால், ஒளியும் நிழலும் மாறி மாறி இரண்டு கால்களின் மேலும் விழுந்து பிரதிபலிக்கும் வேறுபாடுகளை சிலையினுள், அதை இயக்கம் இயல்பு, – அதனால் அதற்கு வரும் வசீகர தன்மையைக் கூட்டுகிறது ! அப்படி இல்லாமல் வெறுமனே நேர் நேராக ஒளியும் நிழலும் விழுந்திருந்தால் இது ஒரு சாதாரண படைப்பாக இருந்திருக்கும்.

சிவனை உருவங்களை பொதுவாய் கோர ஸ்வரூபமாக பார்ப்போருக்கு

இவற்றை பற்றி தெரியாத பாமரன், எல்லாவற்றையும் எளிது படுத்தி, கொச்சையாக பார்த்து, இப்படி ஒரு மகத்தான கலையை விட்டு ஒதுங்கி இதைவிட மட்டமான பொருள்களில் தனது ரசனையை செலுத்துகிறான். அந்த அழகைப் பருக வேண்டுமானால் அதீத ரசனை வேண்டும், ஆழ்ந்து நுகர்ந்தால் ….

ஆழ்ந்த தியானத்தின் பின சிவனின் அழகிய முகத்தை பார்த்தால்

புடைத்திருக்கும் உதடுகள், அது வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான பொருள், கண்களுக்கும், செவ்வாயிற்கும் உள்ள பொருத்தம், இதழ்களை ஒட்டி வசீகரத்தோடு ஆச்சரியமூட்டும் நாசி – தாமரை பூத்த தடாகத்தின் மீது சாய்ந்து பரவும் மலர்க்கொத்துக்கள் நிறைந்த தாழ்ந்த மரக்கிளை போல இருக்க , கொஞ்சும் ஈர உதடுகள் – பாம்பின் வளைவுகளை போல ஜொலிக்க – புடைத்து பாதி மூடிய இமைகள், இமைகளின் மேல்முடி வரிகளுக்குள் மறைந்திருக்கும் அழகு, மிகவும் நேர்த்தியாக முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்ட மூக்கு, அவ்வளவும் கனக் கச்சிதம். வளைந்து நெளியும் உதடுகள், ஏதோ வார்த்தைகளை உச்சரிப்பது போலவே உள்ளது . ஒரே வரி என்றாலும், வில்லை போல வளைந்த அழகான சாந்தமும் அமைதியும் ததும்பும் கண்கள், அவற்றுள் பார்ப்போரை நெகிழ வைக்கும் இரு நட்சத்திரங்கள். அதிகாலை சூரிய கிரணங்கள் போல மயக்கும் அமைதி வீசும் கண்கள், அவை தரும் சுகமான அமைதிப் பெருக்கெடுப்பு.





தாடையில் குவியும் முகத்தின் வளைவுகள், வளைந்து மேல்நோக்கிய கன்னம் ஒரு பாகத்தில் முடியும் அழகுத் தோற்றம் மற்றொரு பாகத்தில் தொடர்கிறது. இதழ்களின் அசைவு கன்ன கதுப்புகளில் முடிகிறது, காதுகளில் இருந்து கிளம்பும் வளைவுகள் இதழ்களோடும், நாசிகளோடும் முடிவடைகிறது, தாடையிலிருந்தும் மூக்கிற்கு கீழேயும் உள்ள வரிகள் கன்னக்கதுப்பில் மறைகிறது.


இன்னும் அந்த அழகிய தலையை விட்டு விலக மனம் வராமல்

நேர் சீராக தங்கள் மங்கலமான இடங்களில் அமரும் இரு கண்களும், ஒளி வீசும் பராக்கிரமம், வசீகரம்! கால வெள்ளத்தை தங்கள் இன்பத்தில் தேக்கி வைக்கின்றன. ஆஹா , அந்த கண்கள் – ஆபரணமென போற்றக் கூடிய சுத்த பொக்கிஷம். அவற்றை உள்ளடக்கும் பெட்டகம் – கண் இமைகள். வில் போன்று வளைந்த புருவம், அதற்க்கு போட்டியிடும் வளைந்து நெளியும், வசீகர இதழ்கள்.

ஒரே சமயத்தில் தன்னுள் இன்பம் பொங்கும் நினைவுகளையும், எரிமலையின் ஆவேசத்தையும் உணர்த்தும் வாய்.

உடற்கூறுகளை இயக்கத்தோடு இணைத்துக் காட்டும் ஆன்மா அந்த வெங்கலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடைபட்டுள்ளது. சாகா தன்மை அந்த இதழ்களில், எந்த நொடியும் பார்க்கத் துடிக்கும் அந்த கண்கள், எங்கே பேசிவிடுமோ ?

வாழ்வின் நாடி வாய் வழியே வந்து செல்வது போல, கூட்டிலிருந்து வெளிவரும் தேனீக்கள் போல், நாசியிலிருந்து வெளி வருகிறது – நறுமணத்தோடு கூடிய மெல்லிய சுவாசம். ..

இந்த தொலைந்து போன அழகிய வடிவம் தனக்குள்ளேயே ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ஓரிடத்தில் அதனுடைய பொருள் பொதிந்த காட்சி உறைகிறது அது அந்த மிகவும் கவர்ந்திழுக்கும் கன்னக் கதுப்புகள் கழுத்தோடு வளைந்து இணையும் காட்சி!!

மொழிபெயர்ப்பு உதவி : கீதா அம்மா மற்றும் சதீஷ்.
வீனஸ் படம் – இணையத்தில் இருந்து.

காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை – அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) – ஆனால் பாதகர்கள் – எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் – ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை – எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் – அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல – இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் – அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி – சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் – இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் – சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு – ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து – வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு – உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் – நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து – செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் – அபாரம்.

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி – நீங்களே முடிவு செய்யுங்கள்.

குழந்தை குமரன் – தனது கிரீடத்துடன்.

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை – சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா – கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ – அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் – இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

அகத்தியர் குழுவில் திரு ஜெயபாரதி ஐயா அவர்களின் பதிவு ஒன்றே இந்த பதிவின் கரு. அவரது விளக்கத்தை படித்துவிட்டு பலரும் குழம்பும் இந்த சிற்பத்தை பற்றி தெரிந்துக்கொண்டோம். இந்த சிற்பம் திருவிளையாடல் புராணத்தில் வரும் பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம் என்பதை அறிந்தோம். இந்த சிற்பத்தை பல இடங்களில் வராஹி என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். அதனால் மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் செல்லும்போது இந்த சிற்பங்களைத் தேடிச் சென்றோம். எனினும் அங்கு செல்லும் முன்னரே தற்செயலாக தில்லையில் புடைப்புச் சிற்பத்தில் இதைக் கண்டு மகிழ்ந்தோம்.

சிற்பத்தில் இடது புறத்தில் ( பார்க்கும்போது உங்கள் வலது புறம் ) – கை கூப்பி நிற்கும் பன்றி முகம் கொண்டு அடியவர்கள் மனதில் கொள்ளுங்கள். பிறகு ஏன் என்று புரியும்.

சரி, முதலில் கதை

இறைவன் அலகிலா விளையாட்டுடையன் என்று சொல்வர். அவனைப் பொறுத்தமட்டில் உயர்ந்த தேவராயினும், மானிட ஜன்மமும் ஆயினும் சரி, இழிந்த பன்றியாயினும் அனைவரும் சமமே.. அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணங்களில், பசியால் வாடிய பன்றிக்குக் குட்டிகளுக்கு முலை ஈந்து பால் கொடுத்த பேரருளை மாணிக்கவாசகர் முதற்கொண்டு அருளாளர்கள் வியந்து பாடுவர். திருவிளையாடல் புராணப் பாடல்களின் படி இந்தக் கதை எளிதாகச் சொல்லப்படுகிறது. சுகலன் எனும் வேளான் மதுரைக்கு அருகே இருக்கும் ஆதிமணிமாடமூதூர் எனும் ஊரிலே தன் கற்புடை மனைவியுடன் இறையன்போடு வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பிறந்த பன்னிரு புதல்வர்கள் தாய் தந்தையருக்கு நேர்மாறாக இருந்தனர். வேண்டாத செயல்களை பெற்றோர் வெறுக்கும் வண்ணம் செய்துகொண்டும் அவப்பெயர் பெற்றும் வளர்ந்தனர். அடிக்கடி கானகம் செல்வதும் வேடர்களோடு கண்டபடி வேட்டையாடியும் பொழுதைப் போக்கினர். அப்படிப்பட்ட சமயத்தில் காட்டில் ஒரு புதர் அருகே ஒரு முனிவர் தவம் செய்யும்போது, அவரைக் கேலி செய்து, கல்லால் அடித்தும், வேடர்களின் அம்பெய்தியும் துன்புறுத்தியதால், முனிவர் அந்த பன்னிருவரரயும் சபித்தார். நீங்கள் செய்யவேண்டிய உழவுத் தொழிலை விடுத்து வேடர்களின் அடாவடித் தொழிலில் கலந்து எம்மைத் துன்புறுத்தியதால் பன்றிகளாகப் பிறந்து குட்டிகளாய் இருக்கும்போதே தாய் தந்தையரை இழந்து அவதிப்படுவதாக சாபம் இட்டார். பிறகுதான் இவர்களுக்கு தாங்கள் செய்த பாவங்கள் உறைக்க, கண்ணீர் வடிய மன்னிப்பும் சாப விமோசனமும் கேட்க, கருணை வடிவமான அந்த முனிவர், உங்களுக்கு சாபவிமோசனம் ஈசனாலேயே அருளப்படும் என்று அன்போடு சொன்னார். சாபம் பெற்றவர்கள் அனைவரும் பன்றிக்கு மகவாகப் பிறக்கையில் காட்டில் வேட்டையாட வந்த பாண்டிய மன்னனால் பன்றிகள் அழிக்கப்பட, இந்த பன்றிக்குட்டிகள் ஏதும் ஆறியாமல் முலைப்பாலுக்காக ஏங்கித் தவிக்கும்போது, அகில உலகத்தையும் தாய் போல நேசிக்கும் ஈசன், தோன்றி முலைப்பலைக் கொடுத்து, அந்தப் பன்றிக்குட்டிகளுக்கும் முக்தி அருளினார் என்பதுதான் கதையின் சாரமாகும்.

திருவிளையாடல் புராணப்பாடல்

இருளைக் கந்தரத்தில் வைத்தோன் தன் இடத்து என்றும் அன்பின்
தெருளைத்தந்து அவட்கு மாறாத் தெரிவையை இசையால் வெல்ல
அருளைத் தந்து அளித்த வண்ணம் அறைந்தனம் தாயாய்ப் பன்றிக்
குருளைக்கு முலை தந்து ஆவி கொடுத்தவாறு

திருவாசகம் (போற்றித் திருவகவல்):

தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக் கருளினை போற்றி
(ஏனக்குருளை – பன்றிக்குட்டிகள்)

கதை தெரிந்த தைரியத்தில் சிற்பம் உள்ள தூணை தேடி அலைந்தோம். மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் இந்த தூண் உண்டு என்று தெரிந்து தேடினோம். உள்ளே இல்லை. ( சென்ற மடலில் படித்த சம்பவங்களுக்கு பிறகு நடந்தவை இவை ) அப்போது ஒருவர் புது மண்டபத்தில் சென்று பாருங்கள், அங்கே இருந்தால் இருக்கும் என்றார். எனினும் அங்கே இப்போது ( இரவு எட்டு மணி ) கடைகள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும். ஒன்றுமே தெரியாது என்றும் எச்சரித்தார். காலையில் கடைகள் திறப்பதற்கு முன்னால் வந்து விடுங்கள் – அப்போது காவலர் அனுமதித்தால் படம் நன்றாகவே எடுக்கலாம் என்றும் கூறினார். எனினும் ஆர்வம் தாங்காமல் உடனே சென்றோம்.

மிகவும் கடினம்தான். எங்கும் கடைகள் – கதவுகள். ஒன்றுமே தெரியவில்லை. ஒரு ஷாப்பிங் மால் போல இருந்தது சிற்ப வேலைப்பாடு மிக்க அந்த மண்டபம். எனினும் முடிவாக நாங்கள் நுழைந்த பக்கத்திற்கு நேர் எதிரே ஒருவழியாக தூணைக் கண்டுபிடித்து விட்டோம். அருகில் இருந்த கடைக் காரரை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லிவிட்டு படங்களை எடுத்தோம். ( அடுத்த நாளும் விடியற் காலையில் திரும்பி தூணில் அடி பாகத்தில் இருத்த சிற்பங்களையும் படம் எடுத்தோம் )

இது சிவனா வராஹியா

கண்டிப்பாக சிவன் தான். வலது கரத்தில் மழு உள்ளது. இடது கரம் உடைந்துபோய் விட்டது.

தூணின் அடியில் உள்ள சிற்பங்கள் கதையை சொல்கின்றன . தாய் பன்றியை வேட்டை ஆடும் பாண்டிய மன்னன்.

பன்றிக் குட்டிகள் பாலுக்காக ஏங்கி நிற்கும் பாணி அருமை

ஈசனை வணங்கி நிற்கும் சாப விமோசனம் பெரும் முன்னர் பன்றிகள் ( நாற்காலிகள் அடுக்கி இருந்ததால் படம் சரியாக எடுக்க முடியவில்லை )

மதுரையில் கண்டதன் அடிப்படையில் நம்பிக்கையுடன் திருப்பரங்குன்றம் சென்றோம். அங்கே வாயிலிலேயே இருந்தது தூண் சிற்பம். அதே பாணி ( சரி, ஒரு வித்தியாசம் இருக்கும்) ஆனால் அடியில் வராஹி என்று பெயர் இட்டு உடல் முழுவதும் மஞ்சள் பூசி இருந்தது.

இன்னொரு படம், அப்படியே மதுரையில் பார்த்த சிற்பம் போல

இங்கும் பாலுக்கு ஏங்கும் பன்றிக் குட்டிகள்.

சிவன் தானே – ஆயுதங்கள். இங்கே மானும் இருக்கே.

ஒரு வித்தியாசம் என்று சொன்னேன் அல்லவா. இதோ. இங்கே பாண்டிய மன்னன் வேட்டையாடிய தாய் பன்றி இறந்து விழுவது செதுக்கப்ட்டுள்ளது .

அதே படத்தின் அடியில், பார்தீர்களா, அதே அணிவகுப்பு.

அதே படத்தின் அடியில், பாத்தீர்களா, அதே அணிவகுப்பு.

இதே தூண் சிற்பத்தின் துணை சிற்பம் இன்னும் ஒரு அற்புத திருவிளையாடல் புராணத்தை விளக்கியது. அதை அடுத்து பார்ப்போம்.

இதன் ஆதாரம் இப்படி இருக்க, ஈசனின் இந்த திருவிளையாடலை சரியாக பெயர் போடாத அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்..

தோடுடைய செவியன்

சிற்பக்கலையின் அழகு அதன் தோற்றத்திலும் அதனுள் இருக்கும் நுணுக்கங்களினாலுமே மேலும் மெருகு பெரும். திடீரென பார்ப்போருக்கு அதன் தோற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் , எனினும் அது முழுமையான ரசனை அன்று.

மகரிஷி அரவிந்தர் அவர்கள் கலையழகைப் பற்றியும் ரசனையைப் பற்றியும் வெகு அழகாக சொல்லி இருக்கிறார்.

அழகான பண்பாட்டுச் சின்னமாக காணப்படும் கலையழகு என்பது சாதாரணமானதன்று. ஏதோ சுற்றுலா பயணிகள் ஓஹோ என்று போற்றுவதற்காகவோ அல்லது கலையறிவில்லாதோர் தூற்றுவதற்காகவோ படைக்கப்பட்டதன்று. இந்த படைப்பின் கலை ஆழத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும் தனிமையில் அந்தக் கலையழகின் ரகசியத்தை நாம் உணாந்து ரசிக்கவேண்டும். அந்த அழகுடன் நம் மனதை ஒன்றிவிட்டு பார்க்கவேண்டும். மனது ஒன்றிய நிலையில், மனம் தியானத்தின் உச்சத்தில் அந்த அழகின் ரகசியம் புலப்படும்போதுதான் மனிதனின் இயற்கை நிலையும், உலகாயுதமாக மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலும் புரியும்

இதில் பிரச்னை என்னவென்றால் காளிதாசனை போன்று ஒரே நாளில் இந்த திறமை வந்துவிடாது. முறையே பயிலவேண்டும். நல்ல ஆசான் தேவை. இன்றோ அப்படிப்பட்ட ஆசான்கள் மிகவும் குறைவு. அப்படி இருக்கையில் அடுத்த படியாக நல்ல நூல்கள் நமக்கு கை கொடுக்கலாம். எனினும் சிற்ப ஆராய்ச்சி வல்லுனர்கள் நம்மை போன்று முதல் முறை சிற்பம் பற்றி படிப்போரை குறி வைத்து நூல்கள் எழுதுவதில்லை. பல புத்தகங்கள், குறைந்த பட்சம் கொஞ்சம் சிற்பக்கலை தெரிந்தவருக்கே சிறிது கடினமாகத்தான் உள்ளன குறிப்பாக அதில் வரும் சிற்பக்கலையை ஒட்டிய சொற்கள் அத்தனை எளியவை அல்ல. நாம் இருக்கும் சாதாரண நிலையில் இந்த புத்தகங்களை எடுத்து படிக்கும் அளவிற்கு எப்படி செல்வது?

இதற்கு ஒரு சில நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் திரு கோபிநாத் ராவ் எழுதிய எலிமென்ட்ஸ் ஆஃப் ஹிந்து ஐகானோகிராபி, என்ற அருமையான புத்தகம் உதவுகிறது. பலதரப்பட்ட சிற்பங்களை விவரித்து உடன் ( நமக்கு மிகவும் உதவியாக ) கோட்டோவியங்களை கொண்டு விளக்குகிறார். உதாரணத்திற்கு காதணிகளை எடுத்துக்கொள்வோம். ‘மகர’ குண்டலம் ‘பத்ர’ குண்டலம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. எந்த சிற்பக்கலை பற்றிய புத்தகத்தை எடுத்தாலும் முதலில் வருவது இந்த குண்டலங்கள் தான். இவை என்ன?

தில்லி அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத நடராஜர் வடிவத்தை பார்ப்போம்.

கூத்தபிரானின் ஆனந்த தாண்டவம் பற்றி தொடர்ந்து எழுதினால் இந்த இழை முடியாது. அதனால் அவனது தோடுகளை மற்றும் பார்ப்போம். தோடுடைய செவியன் ஆயிற்றே அவன்.

இரு காதுகளிலும் வெவ்வேறு அணிகளின் அணிந்திருப்பதை நீங்கள் இப்போது பார்க்கலாம்.

அவனது இடது காதில் வட்டமாக இருப்பது பத்ர குண்டலம். பனை ஓலை குண்டலம் – அந்த காலத்தில் அவ்வளவு தான் – ஒரு பனை மரத்து ஓலை ( இலை) இருந்தால் போதும் ( தங்கம் விலை என்னவோ ?)

வலது காதில் இருப்பது கொஞ்சம் கடினமான வடிவுடைய குண்டலம். மகர குண்டலம். நாம் முன்னரே இந்த மகரத்தை பார்த்தோம், எனினும் இன்று ஜாவா தீவில் ஒரு அற்புத மகர வடிவம் மீண்டும் பாருங்கள்..


( மகரம் – யானையின் தும்பிக்கை, சிங்கத்தின் கால்கள், மேலும் பன்றி, மீன், குரங்கு என்று பல மிருகங்களை உட்கொண்ட ஒரு புராண மிருகம். அழகிய வேலைப்பாடுடைய வால் இதற்கு)

இதை அவன் ஏன் தனது காதில் அணிந்தான் ( அதை பற்றி மேலும் தேட வேண்டும் – அப்படி பார்த்தல் இன்னும் வினோதமான காதணிகளும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம் ) இப்போது மகர குண்டலம் இதோ .

அப்பாடா – இரு சின்ன காதணிக்கே இப்படிக் கண்ணை கட்டுதே

மல்லை திருமூர்த்தி குடவரை – ஒரு புதிர்

நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி – பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் – சில இடங்களில் சிறிய மாற்றங்கள் – அழகு படுத்த )

N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்

Me: மிக்க மகிழ்ச்சி, இப்போது உங்கள் படங்களை தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி.

N: படங்களுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

me: கண்டிப்பாக. சரி, நீங்கள் திருமூர்த்தி குடவரை படங்களை இட்டதனால் அதை ஒட்டி ஒரு புதிரை போடுகிறேன் . விடை சொல்லுங்கள், அங்கே உள்ள மூன்று மூர்த்திகளை யார் யார் என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

N: பிரம்மா விஷ்ணு சிவன்

me: ஹஹஅஹா , நல்ல பாத்து சொல்லுங்க சார் , அவ்வளவு எளிதாக இருந்தால் புதிர் என்று சொல்லி இருப்பேனா?

N: ஹ்ம்ம்

me: சரி , பல்லவ குடைவரைகளில் உள்ளே இருக்கும் கடவுளை எப்படி அடையாளம் கொள்வீர்கள். இரண்டு முறை உண்டு, பொதுவாக உள்ளே சிலை / சிற்பம் இருந்தால் அதை ஆய்வு செய்து, அதன் அமைப்பு, கைகளில் உள்ள ஆயுதங்கள் என்று பார்ப்போம், உள்ளே சிற்பம் இல்லை என்றால் வெளியில் நிற்கும் வாயிற் காப்போன்களை கொண்டும் ஓரளவிற்கு அடையாளம் கொள்ளலாம். இங்கே உங்களுக்கு எதுவாக இரண்டுமே உள்ளன. நன்றாக பார்த்து சொல்லுங்கள்.

N: போட்டியில் நண்பனை கேட்டு பதில் சொல்வது போல இங்கே உண்டா ? நீங்களே சொல்லுங்கள்

Me: இல்லை, அப்படி எளிதானதல்ல. நீங்கள் சற்று முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் முக்கியம். பின்னாள்களில் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

N: சரி, நடுவில் இருப்பது சிவன். வலது கையில் மழு உள்ளது லிங்கம் வேறு இருக்கே.

me: ஆமாம், இடது கையில் இருப்பது ருத்ராட்ச மாலை மாதிரி உள்ளது – மான் கண்டிப்பாக இல்லை. எனினும் அந்த லிங்கம் பின்னாளில் வைக்கப்பட்டது.

N: வெளியிலிருப்பது மகிஷாசுரமர்த்தினி
i

me: ஆமாம் , துர்க்கை அம்மன். மேலே அருமையான வேலைபாட்டை மறக்காமல் பார்க்க வேண்டும்.

N: வலது புறம் நீண்ட மகுடம் கொண்டது விஷ்ணு . கையில் சங்கு சக்கரம் உள்ளதே. அடுத்து இருப்பது பிரம்மா


me: ஹ்ம்ம் , விஷ்ணு எளிது – சங்கு சக்கரம் உள்ளதே. அது சரி, எப்படி பிரம்மா என்று அடையாளம் கண்டுகொண்டீர்?.


N: மும்மூர்திகள் தானே. பிரம்மா வந்தால் தானே முழுமை பெரும். அது தானே வழக்கம்.

me: ஹஹா , மலை புதிர் இப்போது தான் வருகிறது. பிரம்மனின் சிற்பங்களில் நீங்கள் முதலில் பார்ப்பது என்ன. தனிதன்மையை தெரிவது ஏது?

N: மூன்று தலைகள்

me: நான்முகன் என்றாலும் சிற்பத்தில் மூன்று தலைகள் – இங்கே தெரிகின்றதா ?

N: இல்லை

me: வெளியில் இருக்கும் வலது புற வாயிற் காவலன், தனது கையில் எதை வைத்துள்ளான்.

N: சரியாக தெரியவில்லையே

me: சரி, உள்ளே இருக்கும் சிற்பத்தின் ஆடை அணிகலனில் எதாவது சிறப்பாக தெரிகிறதா. புதுமையாக ?

N: X வடிவத்தில் பட்டை

me: பிரம்மன் சிலையில் இது போன்று வேறெங்கும் நீங்கள் கண்டதுண்டா?

N:இல்லையே

me: மகுடம் எப்படி உள்ளது

N: நீண்டு முக்கோண வடிவில் உள்ளது

me: மகுடத்தின் அடியில் என்ன உள்ளது ? இந்த உரையாடலை அப்படியே பதிவாக போடட்டுமா

N: ஆமாம் அதன் சிறப்பு என்ன, சொல்லுங்க விஜய்

me:இதை பதிவாக போடட்டுமா ?

N: தாரளமாக போடுங்கள், என் பெயரை போடவேண்டாம்.

me: N, என்று போட்டால் பெயர் தெரியாது அல்லவா?

N: அப்படியே, எனக்கு கூடுதல் புகழ் வேண்டாம்.

me: ஹஹா , அப்போது சரி. வலது புறம் ‘இருக்கு ரிஷி’ – ஸ்ருக் என்ற ஒரு வித கரண்டியை பிடித்துள்ளார். வேத அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்ற பயன்படும். இடது புறத்து காவலன் ஒரு மலரை பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிரம்மன் என்ற முதற் கோட்பாடு சரி என்றே தோன்றும். ஆனால் உள்ளே இருக்கும் கடவுளுக்கு தாடியும் இல்லை மீசையும் இல்லை. இளவட்டமாகவே உள்ளார்.

N: ஆமாம், யார் அது , சொல்லுங்கள்

me: அவர் அணிதிருக்கும் மகுடம் , நீங்கள் பார்க்கும் x பட்டை – இவை அனைத்தும் ஒரு போர்வீரனின் சின்னங்கள். பிரம்மனுக்கே வேதத்தை எடுத்துச் சொன்ன போர் வீரன்.

N:முருகன்

me: ஆமாம் முருகன் – பிரம்ம சாஸ்தா என்றழைக்கப்படும் தோற்றம். அது சரி, மேலே பறக்கும் அந்த இரு பூத கணங்களின் கைகளில் என்ன உள்ளது என்று நன்றாக பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்.

N: அப்படி என்றால்?

Me: இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை. இந்த ஆய்வாளர் பதிவை பாருங்கள்

முருகன் ஆராய்ச்சி மடல் – படங்கள் மற்றும் குறிப்பு இந்த தலத்தில் இருந்து

“இந்த சிற்பம் சிறிய முக்கோண வடிவில் கரண்ட மகுடம் அணிந்து, அதன் அடியில் மலர்களாலான ( கன்னி ) அலங்காரம் உள்ளது. தமிழ் வழக்கில் ஒரு வீரனுக்கே உரித்தான அங்கீகாரம் இந்த கன்னி. மேலும் இந்த x வடிவில் ஆன பட்டைக்கு பெயர் சன்னவீரா – இதுவும் வீரனின் அடையாளம். பல்லவர் காலத்து குறிப்புகள் இவை அனைத்தும் முருகன் ஒரு போர்/வெற்றிக் கடவுள் அதாவது தேவ சேனாதிபதி என்பதை நிலை நாட்டுகின்றன. . “

மேலே உள்ள தளம் முருகன் பற்றிya அருமையான பல தகவல்களை konda தளம். கண்டிப்பாக அங்கு சென்று வாசிக்கவும்.

குழப்பும் சிற்பங்கள் – நண்பருடன் ஒரு உரையாடல்

நண்பர்களே, இந்த தளத்தில் சிற்பக்கலை பற்றி சாட் உரையாடல்களை நடை பெற நண்பர் ‘திரு’ அவர்கள் அமைத்துக்கொடுத்தது எதற்காக என்றால், அது பின்னூட்டம் விட தயங்கும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர உதவும் என்பதாலேயே அமைத்தோம். அதன் படி ஒரு உரையாடலை இங்கு உங்கள் பார்வைக்கு ஒரு பதிவாக மாற்றி இடுகிறேன்.

நண்பர் பெயரை வெளியிடவில்லை.

நண்பர்: உங்கள் முந்தைய பதிவின் ஒன்றில் இருந்து சோமநாதபுரம் பற்றி இன்னுமொரு தளத்திற்கு சென்றேன்

http://bp0.blogger.com/_xUJrI6cswLg/SF_jI-vYY3I/AAAAAAAAAQQ/UKpNmgOUwAY/s1600-h/DSC07354.JPG

vj: மன்னிக்கவும் , எந்த பதிவு , மற்றும் நான் யாருடன் உரையாடுகிறேன் என்று முதலில் சொல்லுங்கள்

நண்பர்: நான் @@@@@ , சிற்பக்கலை பற்றி @@@@@@ இல படிக்கிறேன். ஹனுமான் பாண லிங்கம் சிற்பம் , சோமனாத்பூர்

vj: ஓ, அப்படியா. மிக்க மகிழ்ச்சி.அந்த பதிவா ! நண்பர் திரு ஆனந்த் அவர்களது பதிவு.


சிற்பத்தில் ஹனுமான் பாண லிங்கத்தை ஏந்தி நிற்கும் காட்சி. ராமபிரான் ஹனுமனை கைலையில் இருந்து சிவனின் லிங்கத்தை எடுத்து வருமாறு கூறுகிறார்.( ராமேஸ்வரத்தில் இராவணனை கொன்றதனால் பெற்ற ப்ரஹ்ம்மஹத்தி தோஷம் விலக பூஜை செய்ய). ஹனுமான் வர தாமதம் ஆனதால், ராமபிரானும் சீதாபிராட்டியும் மணலில் லிங்கம் பிடித்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இதை கண்டு வருத்தம் அடைந்த ஹனுமனை சமாதானம் செய்ய, அவருக்கு ஒரு வரம் அளித்தார் – ராமர். இனி அங்கு பக்தர்கள் முதலில் ஹனுமனின் பாண லிங்கத்தை வழிபட்ட பின்னரே தனது லிங்கத்தை வழிபடவேண்டும் என – இன்றுவரை அப்படியே ராமேஸ்வரத்தில் இரண்டு லிங்கங்கங்கள் உள்ளன “

நண்பர்: ஆனால் எங்கள் ஆசிரியரின் கூற்றுப் படி, இந்த சிற்பம் இன்றும் ஒரு புதிராகவே உள்ளதாமே?

vj: அப்படியா, இந்த சிற்பம் ஹனுமான் என்பதில் குழுப்பமா அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பாண லிங்கத்தில் சர்ச்சையும் குழப்பமுமா? சிற்பத்தை இன்னும் ஒரு முறை அருகில் சென்று பார்ப்போமே ( நன்றி திரு அர்விந்த் படங்களுக்கு )

நண்பர்: அதுவா, சர்ச்சை அவர் கையில் வைத்திருக்கும் சங்கு மற்றும் சக்கர ஆயுதங்களால் என்று நினைக்கிறேன்.


vj: அப்படியா, இதில் ஒன்றும் வினோதம் தெரியவில்லையே.

நண்பர்: அப்படியா

vj: சரி, ஒரு கேள்வி கேட்கிறேன். சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வெண்கல சிலைகள் அணிவகுப்பு பார்த்ததுண்டா

நண்பர்: இல்லை, அடுத்து நாங்கள் அதை தான் படிக்க போகிறோம்.

vj: சரி, இப்போதைக்கு இந்த படத்தை பாருங்கள்( நன்றி ஃபிலிக்கர் நண்பர் )

http://farm3.static.flickr.com/2063/2410943558_f9be866992.jpg?v=0


நண்பர்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் புரிவது போல் உள்ளது

vj: அப்படியா, இது நந்தி – ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கும் சிலை. சரி, இப்போது உங்களை இன்னும் கொஞ்சம் குழப்புகிறேன். இந்த சிற்பத்தை பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் சிற்பம். ( படங்களுக்கு நன்றி அர்விந்த் )

நண்பர்: அய்யோ , இது இன்னும் குழப்புகிறதே !

vj: இதில் என்ன குழப்பம், ஹனுமான் இங்கே ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கிறார்!!

நண்பர்: ஒரு கேள்வி கேட்டதற்கு இப்படியா ?

vj: அப்படி இல்லை, முதலில் சோமநாதபுரம் சிற்பம் ஹனுமான் தான். பாண லிங்கம் கதை மிகவும் தொன்மை வாய்ந்த கதை. அதனுள் இப்போது செல்லவில்லை. மேலும் சிவ-விஷ்ணு வாகனங்கள் தங்கள் எஜமானர்களின் ஆயுதங்களை தாங்கி நிற்கும் என்பதற்கு அந்த நந்தி ஒரு அத்தாட்சி. ஹனுமான் ஈசனின் அவதாரம் என்று பல இடங்களில் பாடல்கள் உள்ளன. அதனை குறிப்பதே இந்த தஞ்சை சிற்பம்.

நண்பர்: சரி, இதை எங்கள் ஆசிரியரிடம் சொல்லிப்பார்க்கிறேன்.
vj: நன்றி, எனினும் நாங்கள் சாமானியர்கள், முறையாக சிற்பம், கலை பயின்றவர்கள் அல்ல. ஏதோ எங்களுக்கு கிடைத்தவற்றை, படித்த நூல்களை கொண்டு விளக்குகிறோம். இதை வைத்து தங்கள் ஆசிரியருடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர் ??

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி

முந்தைய பதிவில் ஆவுடையார் கோயில் குதிரை வீரனை பற்றி பார்க்கும் பொது, அதனை ஒட்டிய கதையை பிறகு பார்ப்போம் என்று கூறினோம். இன்று திரு அரவிந்த் அவர்கள் உபயம் , கீதா அம்மா அவர்கள் உதவியுடன் பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் உள்ள இந்த அற்புத சிற்பத்தை பார்ப்போம்.


மாணிக்க வாசகர் என்னும் திருவாதவூரார் வரலாறு ( நன்றி விக்கி )

படம் பார்த்தோம். பாடல். வித்தியாசமாக ஒரு திரைப்பட பாடல்.

படம்: மதுரை வீரன்
பாடல் : கண்ணதாசன்
இசை: G.இராமநாதன்

ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!

ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)

ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்

பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே

கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற

திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: “திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப்பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். ( இதை அவர் ஒட்டகத்தின் மீது வைத்து எடுத்து வந்தார் என்று ஒரு குறிப்பு கிடைத்தது. இது ஒட்டகமா ? அப்படி தெரியவில்லை )

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்

‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. ‘இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெய்யிலில் நிறுத்துவேன்’ என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். ( இந்த சிறிய விவரத்தை கூட சிற்பி விடவில்லை )

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.

திருப்பாண்டிப்பதிகம்: பாடல் எண்: 527

சதுரை மறந்தறிமால் கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல் வந்து கூடிடு மேல் குடி கேடு கண்டீர்
மதுரையா மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடுமே.

இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான்.

ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லை, அவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்.

அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். சிற்பத்தை பாருங்கள், வயிறு முட்ட உண்டு தூப்பையை தடவிக்கொண்டு தலைக்கு மன்வாரும் கூடையை வைத்து உறங்கும் பாணி அருமை.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.

கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.

பிட்டுக்கு மண் சுமந்தல்: திருக்கழுக்குன்றப் பதிகத்தில் இருந்து: பாடல் எண் 469


“பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டம் நேர்பட வந்திலாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”

கலை என்றால் என்ன?

இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால் என்ன?

கலைகளில் நாம் இதுவரை சிற்பம், சிலை, ஓவியம், சுதை , கல், உலோகம், கற்கோவில், கட்டுமான கோயில், குடவரைக் கோயில் , புடைப்பு சிற்பம் என்று பலவற்றை பார்த்தோம். அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது என்ன – அதன் தாக்கம். நானூறு, ஐந்நூறு ஏன் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இந்த அற்புத படைப்புகள் காண்போரை மகிழ்விக்கின்றன?. இதன் ரகசியம் என்ன?. ஆண், பெண், பெரியவர், சிறுவர் , உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்று ஆயிரத்தி மூன்னூறு ஆண்டுகள் ஆயினும் இந்த சிற்பங்கள், இன்னமும் நம்மை மயக்குவதன் சூட்சமம் என்ன?, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, நமது பண்பாட்டிற்கு அன்னியமான மண்ணில் இருந்து வரும் நபர், நமது புராணக் கதைகள் அறியாதவர், அன்னியன் என்றாலும் அவனையும் தன பால் வசியம் செய்ய வைக்கும் இந்த கலையின் ஆகர்ஷண அல்லது அமானுஷ்ய சக்தி என்ன?. மனிதன் அவன் மனத்தினுள் எங்கோ தூங்கிக்கிடக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பும் இந்த கலையை என்ன சொல்லி வர்ணிப்பது?
ஒருவேளை இப்படி வர்ணிக்கலாமோ.. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.

கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மற்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகித்து, பூட்டை உடைத்து தங்கள் எண்ணங்களை பறக்க விடுகின்றனர். அப்படிக் கிடைத்த சுதந்திரத்தில் சிறகடித்து பறந்து, தான் இதுவரை கண்ட மனக்காட்சிகள், மற்றும் புறக்காட்சிகள் அதனோடு ஒட்டிய உணர்வுகளை அனைத்தையும் வெளிக்கொணர்வதே கலை.

நமது மனம் ஒரு புதிர், அது நாம் புறக்கண்களால் காணும் அனைத்தையும் படம் பிடித்து தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். பிறகு, அதில் உணர்வுகளோடு பிணையும் காட்சிகளை இன்னும் நன்றாக பதியச் செய்யும். ( சற்று கண்ணை மூடி, ஏதாவது ஒரு காட்சியை நினைவுப் படுத்தி பாருங்கள் – முதலில் நினைவிற்கு வரும் காட்சி அதனுடன் ஒட்டிய மிக அழுத்தமான உணர்வுடன் பிணைந்ததாகவே இருக்கும் ). கலைஞன் இந்த மனக்கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறனே – கலை. இது கலைஞனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று இல்லை, கலைஞனின் படைப்பை பார்க்கும் பொது , அதனுள் ஈர்க்கப்படும் ரசிகனும் கலந்துகொள்கிறான். படைப்பில் இருக்கும் ஏக்கம், இன்பம், துன்பம், சுகம் அனைத்தையும் தாயின் தொப்புள்கொடி ஏற்படுத்துவது போல ஒரு தொடர்பு – வெட்டுப்பட்ட பின்னரும் தொடரும் அந்த உணர்வு, கலைஞனின் உணர்வை நாம் நம் மனதில் உணர வைக்கும் திறனே கலை. இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. கலை என்று இணையத்தில் தேடினால் ஆயிரம் பெயர்கள் வரும். சில அர்த்தங்கள் உங்களை ஈர்க்கலாம். ….

ஆனால் இந்த சுதந்திரமே கலைக்கு மகுடம். ஜாதி, மத, மற்றும் எல்லா பேதங்களையும் தாண்டி கலையை கலையாய் ரசிக்கும் உணர்ச்சி. அதுவே கலை. அதனால் கலை என்பது இது தான் என்று ஒரு வட்டம் போட்டு அதனுள் எல்லா வகைகளையும் அடக்கி விட முடியாது. பரிமாண வளர்ச்சியில் புது புது சிந்தனைகள் வருவது போல கலையும் மாறிக்கொண்டே இருக்கும்.

சரி.. இப்போது நாம் நம் படைப்புக்கு வருவ்வொம். எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் ஒரே அறுசுவை உணவை எத்தனை நாள் தான் உண்ணுவது. இன்று நமக்கு அது போல ஒரு புதுவிதமான கலை விருந்து. திரு ஜீவா அவர்கள் அறிமுகம் , திரு பாலா அவர்களுது அறிமுகம் – ஓவியர் சாளுக்யன் அவர்களுது ஓவியம்.

தஞ்சை பெரிய கோயிலில் மிகவும் சிதைந்த சுதை சிற்பம். வர்ணங்கள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கும் இந்த சிற்பம் அவரது கண்ணை கவர்ந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தி சிலை – ஈசன் தன் பக்தனான மார்கண்டேயனை காக்க எமனை எட்டி உதைக்கும் சிற்பம். இந்த கதை நாம் இதே கோயிலில் வேறு சோழர் கால புடைப்பு சிற்பத்தை பார்த்த போதே பார்த்தோம். எனவே நேராக சிற்பத்திற்கு செல்வோம்.

கலை காலத்தை வென்றது என்பதை குறிக்க, சாளுக்யன் எடுத்துள்ள கரு – ஈசன் தன்னிடம் சரண் அடையும் மார்க்கண்டேயனுக்காக ` நீ என்றும் பதினாறு என்று வரம் அளித்து ( இன்று எத்தனை பேர் இந்த வரம் பெற முயற்சி செய்வரோ ) , இறையிடத்தில் முழுவதுமாக சரணாகதி அடையும் சிற்பத்தை, அவர் எடுத்துக் கொண்ட வெளிப்பாட்டு முறையும் வினோதம் -கரி கொண்டு தீட்டிய ஓவியம். மனிதன் வாழ்கையின் சுழற்சியை கண்டு சிரிக்கும் வண்ணம், நாம் அனைவரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது போலவும் ஒரு தேற்றம்…. அதுவும் ஈசனது தானே என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த ஒப்பற்ற ஓவியம்..

மனித வாழ்கை நிலை அற்றது, ஆனால் அவனால் படைக்கப்பட்ட, அவன் வெளிக் கொணர்ந்த கலை அழிவற்றது.

சாளுக்யன் அவர்களுது மற்ற படைப்புகளை காண.

http://www.chalukyan.com/