முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் – அவனிபாஜன பல்லவேஸ்வரம் – சீயமங்கலம் குடவரை

சீயமங்கலம் நோக்கி. ( வெகுவாக பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் , மற்றும் சில கற்பனைகள் )

திண்டிவனம் வந்தவாசி சாலை ….காலை mani 8.30 இருக்கும்

சந்துரு சார் : இது சரியான வழியா? . சார் சீயமங்கலம் இப்படி போனா வருமா .
ஊர் நபர் : பாலத்துல தப்பா திரும்பிட்டீங்க!
டிரைவர்: ஒ அப்படியா , சரி திரும்பி போகிறோம்.

வெங்கடேஷ்: அதோ பாலம். இப்போது எப்படி – நேர போங்க.
சந்துரு சார்: அதோ ஆசி போர்டு.
####: ஒரு நிமிஷம் ஓரமா நிறுத்துப்பா – முட்டுது !!!

ரகோத்தமன்: எடுங்க எடுங்க சீக்கிரம் போவோம்.
விஜய்: சதீஷ், அந்த முறுக்கு பாக்கெட் எங்கே. கார வேர்கடலை – பரவாயில்லே – அத்தையும் கொடுங்க.

நாராயணசுவாமி சார் : ஏதோ கிராமம் போல இருக்கே. வழி சரியா. கேட்டுக்கோ
சந்துரு சார் : எம்மா – குகை கோவில் வழி எப்படி
ஊர் அம்மா : அதுவா , இப்படீகா போய், அப்படி திரும்பி நேர போங்க. யாரையும் கேக்க வேண்டாம்.!!!!!
சந்துரு சார்: அது சரி, அப்படியே போப்பா .

வெங்கடேஷ்: அதோ அங்கே ஒரு மலை தெரியுது. உடு உடு .
சதீஷ்: என்னப்பா ரோடு வேறு பக்கமா போகுது.
நாராயணசுவாமி சார்: இரு இரு , இன்னொரு வாட்டி வழி கேப்போம்.
சந்துரு சார்: ஏம்பா.. குகை
ஊர் ஆசாமி: அதுவா சார், இப்படிகா போய் ….
டிரைவர்: நாங்க அப்படிக்கா தா வந்தோம்.
ஊர் ஆசாமி: இல்ல பா, இப்படி கா பொய், நடுல ஒரு பக்கம் ஒரு பாத போகும், அப்படி உடுங்க
சந்துரு சார்: ஓ சரி சரி

சந்துரு சார்: அப்பாடி, ஒரு வழியா வந்தாச்சு.
விஜய்: என்ன சார், குடவரை கோயில்னு வந்தா பெரிய கோபுரம் , விமானம், வெளி ப்ராஹாரம் எல்லாம் இருக்கு. நாங்கள் மஹேந்திர சீயமங்கலம் குடவரை கோயில், அதில் இருக்கும் முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் பாக்க தான் வந்தோம்.

சந்துரு சார்: அதுவா, உள்ளுக்குளே இருப்பது மஹேந்திர குடவரை – அவர் வைத்த பெயர் அவனிபாஜன பல்லவேஸ்வரம் . அதை சுத்தி பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து பெரிதாக்கி உள்ளனர்.

விஜய்: ஒ, அப்படியா ? என்ன ஈ காக்கா காணும்.

வெங்கடேஷ்: வாங்க வாங்க.
விஜய்: என்ன வெங்கடேஷ் , தொப்பி எல்லாம் பலமா இருக்கு. எதாவது புதையல் தேட போறீங்களா ?
வெங்கடேஷ்: இல்ல பா, இது எனக்கு மிகவும் ராசியான தொப்பி, இலங்கையில் வாங்கியது. அதோ யாரோ ஒருத்தர் வாரார் !

ஆசி காவலர் : வணக்கம்
சந்துரு சார்: வணக்கம்
விஜய்: சார் நாங்க உள்ளே போகணும். ரொம்ப தொலைவில் இருந்து வந்துருக்கோம்
ஆசி: சார், வெளியிலே பாருங்க. உள்ள போகனும்னா சாமி வரணும். அவர் கிட்டே தான் சாவி இருக்கு.
வேணும் நா இதோ – இந்த ஓட்ட வழியா பாருங்க.
விஜய்:இல்ல சார், உள்ளே போகணும். எங்களுக்கு ########### அவரை தெரியும். ########## தெரியும். வேணும் நா போன் போடட்டுமா ?
ஆசி: சாமி போன் தாரேன் , போட்டு பாருங்க சார். பெரிய பெரிய ஆளுங்க பேரெல்லாம் கரெக்டா சொல்றீங்க!!
விஜய்: கொடுங்க கொடுங்க , ரொம்ப ஆர்வமா வந்துருக்கோம்

ட்ரிங் ட்ரிங் : ஹலோ சாமியா, நாங்க கோயில்ல இருக்கோம். வர முடியுமா

விஜய்: அஞ்சு நிமிஷத்துல வாராராம்.வாங்க அதுக்குள்ளே மத்ததெல்லாம் பாப்போம்

விஜய்: சந்துரு சார், எப்படி மஹேந்திர பல்லவர் இப்படி ஒரு அத்துவான காட்டை செலக்ட் பண்றார்.
சந்துரு சார்: அதுவா, நல்ல கேள்வி. இதுக்கு சரியான பதில் இல்லை. இருந்தாலும், பல குடைவரைகள்
இருக்கும் இடங்களில் சில ஒற்றுமைகள் உண்டு . பெரும்பாலும் சிறு குன்றுகள், அருகில் ஒரு தடாகம் அல்லது அருவி ( நீர் பரப்பு ) இருக்கும் இடங்களையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விஜய்: ஒ, அப்படியா. இங்கே எங்கே சார் நீர் பரப்பு.
சந்துரு சார்: அதோ அங்கே பாருங்க. அந்த பக்கம். இப்போ மழை இல்லை, அதனால் நீர் இல்லை. மேலே ஏறி பாருங்க , நல்லா தெரியும்.

விஜய்: அது என்ன – பாறைக்கு மேலே ஒரு குட்டி கோயில்
சந்துரு சார்: அது ஒரு முருகர் கோயில். பின்னாளில் கட்டப்பட்டது பாத்து ஏறுங்க!!
விஜய்: படி இருக்கே ( பாதி வழி ஏறினப்பறம் தான் வந்தது ஆப்பு – அப்பா என்ன உசரம் )
எல்லோரும் வாங்க – அருமையான வியு




அசோக்: நானும் வாரேன்
சந்துரு சார்: அங்கே மழை காலத்தில் குளம் நிறைஞ்சு இருக்கும் . நடுவில் உள்ள கல் – அப்போ ஜல லிங்கம் போல காட்சி அளிக்கும். இந்த கோயில் இறைவனுக்கு தூணாண்டார் என்ற பெயர் வர அந்த கல்லே காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

விஜய் : வழுக்குது பாத்து பார்த்து இறங்குங்க
காலை நம்ப முடியாது, அப்படியே உக்காந்து ( ஜீன்ஸ் பாண்ட் தானே ) சறுக்கு மரம் மாதிரி வர வேண்டியது தான். என்ன என்னை பாத்து எல்லாரும் சிரிக்கிறிங்களா – இறங்கும் போதுதானே உங்க வீரம் தெரியும்.

குடவரை அமைக்கப்பட்டுள்ள பெரும் பாறையை சுற்றி வந்தோம். அருகில் பல கல்வெட்டுகள், மற்றும் கல் உடைக்க பயன் பட்ட முறைகள் பற்றி பேச நிறைய இருந்தது. நாம் முன்னரே பார்த்த மாதிரி மர ஆப்புகள் அடிக்க துளைகள் பல இடங்களில் பார்த்தோம். அதன் அளவை காட்ட இதோ ஒரு படம். அருகில் இருப்பது இன்ஹேளர் .

சந்துரு சார் : அதோ சாமி டி வி எஸ் 50 வராரு . வாங்க திரும்புவோம் .

ஆடு மேய்ப்பவன்: யார் சார் நீங்க. அதோ பாருங்க – விமானத்துல இடி விழுந்து ஒரு யாழி உடஞ்சு போச்சு. யாரும் சரி செய்ய மாட்டேன்கரங்க. நீங்க எதாவது பண்ணுங்க சார்
அசோக்: அப்படியா , எப்போ இடி விழுந்துச்சு?

சாமி: சார் இதோ திறந்து வுடறேன் வாங்க

சதீஷ் : என்ன ஒரே இருட்டா இருக்கு
சாமி: அதுவா சார், இன்னும் இருட்டா இருக்கும். மூச்சு முட்டும். பாம்பு தொல்லை வேற இருந்துது. ஒரு கீரிப்பிள்ளையை உள்ளே வுட்டுட்டு தான் நான் உள்ளே போவேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வெளி மண்டபத்தை பிரிச்சு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்போ வெளிச்சமும் வருது மழை தண்ணியும் வருது. !!

விஜய்: என்ன சந்துரு சார் – இந்த மண்டபம் தூணும் மஹேந்திர தூண் மாதிரி இல்லையே ( அது என்ன மஹேந்திர தூண் – விரைவில் பார்ப்போம் )
சந்துரு சார்: இன்னும் உள்ளே போங்க
விஜய்: ஆஹா , அதோ மஹேந்திர தூண்

ஆசி: சார், போட்டோ எடுக்கக் கூடாது
விஜய்: மெயின் சாமி போட்டோ எடுக்க மாட்டோம்.தூண், வாயிற் கார்ப்பொன் அப்படி தான் எடுப்போம். ப்ளீஸ் , எங்களுக்கு @@@@@@@@@ தெரியும் !!!
ஆசி: ம்ம்ம்ம்ம்ம்

சதீஷ்: விஜய், இங்கே இன்னும் பல சிற்பங்கள். இடுக்கில் ஒரு மகர தோரணம் , அதில் ஒரு கணம்

விஜய்: ஒரு நிமிஷம் , இந்த வலது புறத்து வாயிற்காப்போனின் தலை பாருங்கள் – கொம்பு போல உள்ளது. ( என்ன அது – விரைவில் பார்ப்போம் )

சந்துரு சார்: தூணில் உள்ள வேலைப்பாட்டை பாருங்கள்.
விஜய்: அருமை – இரண்டு கம்பீர சிங்கங்கள். இங்கே தூணின் பொதிகையில் டிசைன் போட ஆரம்பித்துள்ளனர் ( அப்போ டிசைன் இல்லாத தூண் – உண்டு உண்டு – இங்கே இல்லை, வேறு இடத்தில )

நாராயணசுவாமி சார்: இங்கே இரு பக்கமும் பாருங்க.

விஜய்: சதீஷ், நீங்க சுந்தர் சார் கிட்டே கடன் வாங்கின மஹேந்திர குடைவரைகள் புக்கில் பாருங்க . யார் இது.

சதீஷ் : அவங்க அமலையர் சிற்ப்பங்கள்.

விஜய் ; ஒ அப்படி என்றால் என்ன, பார்க்கணும். இதோ பாருங்க பூ கூடையுடன் ஒரு தோழி ….

ரகோத்தமன்: சந்துரு சார், இதோ தூணில் ஒரு கல்வெட்டு இருக்கே. தமிழ் மாதிரி இல்லையே.
சந்துரு சார்: அது க்ரந்தம் . மஹேந்திர பல்லவர் கல்வெட்டு

விஜய்: ஒ , அப்படியா, சதீஷ் பூகில் குறிப்பு இருக்குமே பாருங்க
சதீஷ்: இருக்கு – இதோ படிக்கிறேன்.

அவனி பாஜன பல்லவேஷ்வரம் எனும் இக்கோயில் இலலிதாங்குரனால்
நற்செயல்கள் எனும் நகைகளை உள்ளடக்கிய நகைபெட்டியென எடுக்கப்பட்டது

விஜய்: அற்புதம், ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் ஆகியும் தன் புகழ் மட்டது இருக்கும் பல்லவர் …..வாழ்க

ரகோத்தமன்: தூணுக்கு இந்த பக்கம் வேறு கல்வெட்டு இருக்கு. ஆனால் வேறு எழுத்து.
சதீஷ்: அது பின்னாளைய தந்தி வர்மர் மற்றும் நந்தி வர்மர் – தமிழ் கல்வெட்டு.

சந்துரு சார் : இதோ நடராஜர் சிற்பம். தென்னகத்தில் கல்லில் வடிக்கப்பட்ட முதல் முதல் நடராஜர் வடிவம் இதுவே – இதோ இந்த தூணில் உள்ளது. சாமி கொஞ்சம் ஆர்த்தி காட்டுங்க. அந்த பக்கம் ரிஷப வாகனத்துடன் சிவன் பார்வதி .

அசோக்: ஒரு நிமிஷம் பொறுங்க, இதோ நான் வாறன் கேமரா வுடன்

ஆஹா… இருளை போக்கி ஆடல் வல்லான் ஆடிய ஆட்டத்தை மீண்டும் பார்க்கும் பாக்கியம். …

என்ன அற்புத புடைப்பு சிற்பம். சிற்பம் மற்றும் தூண்கள், மகர தோரணம் – அனைத்தும் அடுத்த பதிவில் அலசுவோம்.

படங்கள் : குழு நண்பர்கள், மற்றும் திரு சுவாமிநாதன் மற்றும் திரு சந்துரு அவர்களது முதல் பயணம் . நன்றி திரு சுந்தர் சார்.

ரகோத்தமன் , சதீஷ் ,வெங்கடேஷ் , சந்துரு சார் , அசோக் மற்றும் உங்கள் விஜய்

Ref: Sri K.R. Srinivasan – Cave temples of the Pallavas, Dr KKN’s மஹேந்திர குடைவரைகள்

ஸ்ரீ வைகுந்தத்தின் எல்லையை எட்டிவிடும் …

இன்றைக்கு நாம் மீண்டும் மல்லை பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத வடிவம் – திருவிக்ரம அவதாரம். மல்லையின் பெயரோடு கலந்த மாவலி – மஹாபலி சக்கரவர்த்தியையும் பார்க்க போகிறோம்.

மல்லை சிற்பியின் ஆய்ந்த சிந்தனை , அறிவு , பக்தி , கலை திறன் அனைத்தையும் கலந்து செய்த சிற்பம் இது. இதன் அழகை பல கோணங்களில் பார்க்க நண்பர் பலரின் உதவியோடு முயற்சிக்கிறேன். குறிப்பாக பாசுர வரிகளை வாரி தந்த நண்பர் வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.

படங்கள் : பொன்னியின் செல்வன் குழுமத்தின் மல்லை பயணத்தின் பொது திரு வெங்கடேஷ் அவர்கள் எடுத்த படங்கள், மற்றும் எனது சமீபத்திய படங்கள்.

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம்.


சிறிது, வாமன அவதாரக் கதையைப் பார்ப்போம் (நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது…….???????)

மாவலி, இந்திரப் பதவியை அடைய யாகம் ஒன்று செய்கிறான். அந்த யாகம் முடிவடைந்தால், அவனுக்கு இந்திரப் பதவி கிடைப்பது நிச்சயம். முடியும் தருவாயும் வந்துவிட்டது. பதற்றமும் வந்து விட்டது, இந்திரனுக்கு. ஓடுகிறான் நாராயணனிடம். “நாராயணா! நீ தானே சொன்னாய், இந்த மன்வந்தரம் முடியும் வரையில் நான் தான் இந்திரப் பதவியை அடைவேன் என்று. இப்பொழுது பார், மாவலி அதை அபகரிக்க நினைத்து யாகம் செய்கிறான். வெற்றியும் பெற்றுவிடுவான் போலிருக்கிறது. அவனை உடனே கொன்று என் பதவியைக் காத்தருளவேண்டும்” என்று வேண்டுகிறான். அவன் கள்வன் அல்லவா, ஒரு கள்ள்ச் சிரிப்புடன் (இச்சிரிப்பிற்கு அர்த்தம் வேறு) இந்திரனைப் பார்த்து ” இந்திரா! மாவலி என்னுடைய தீவர பக்தன். அவன் நீதி நெறி வழுவாது ஆண்டுவருகிறான். தர்மம் மேலோங்கி நிற்கிறது. பிறகு எக்காரணம் கொண்டு நான் அவனைக் கொல்வது?” என்று வினவ, இந்திரனும் “நாராயணா! அவனைக் கொல்வதும் கொல்லாததும் உன் விருப்பம். ஆனால் என் பதவியைக் காத்தருள்வதாக நீதான் முன்னர் வாக்குக் கொடுத்திருக்கிறாய். ஆக என் பதவியைக் காத்தருளவேண்டியது உன் கடமை” என்கிறான். இதற்கும் ஒரு சிரிப்பு அவன் திருப்பவளச்செவ்வாயில். அவனுடைய நினைப்பு, அதனால் உண்டான சிரிப்பு இவ்வற்றிற்கான காரணம் தான் அவனுக்குக் “கள்வன்” என்ற பெயர் வரக்காரணமாயிற்று.

இந்த கள்ளத்தனத்தை எவ்வளவு அழகாக பல்லவச் சிற்பி வடித்திருக்கிறான் என்று பாருங்கள்………..

முதலில் அந்த “கள்வம்” தான் என்ன? கதையை மேலே தொடர்வோம். நாரணனும், குறளுருவாய், மாவலியின் வேள்விக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் வேண்டும் என்று யாசிக்க, மாவலியும் அதை தாரைவார்த்துக் கொடுக்கிறான். அப்பொழுது அங்கிருக்கும் அசுர குருவான சுக்கிராச்சார்யர், “மால்”-ஆகிய நாரணன் “குறள்”-ஆகி வந்திருப்பதை அறிந்துகொண்டு, மாவலி தானம் செய்வதை தடுக்க முயலுகிறார். மாவலியோ, வந்திருப்பது திருமாலாகவே இருந்தாலும், என்னிடம் யாசித்துவிட்டான், இல்லை என்று சொல்வதற்கில்லை என்று தன் குருவின் வார்த்தைகளை மறுத்து தானம் செய்யப் புகும் பொழுது, சுக்கிராச்சார்யாரும், ஒரு வண்டு உருவெடுத்து, தண்ணீர் வரும் கமண்டலத்தின் துளையில் அடைத்துக்கொள்ள, வாமனனும் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அத்துளையில் உள்ள அடைப்பை நீக்கத் துழாவுகிறார். அது சுக்கிராச்சார்யாரின் ஒரு கண்ணை அழித்துவிட, அவரும் வலி தாளாமல், வெளியே வந்து விடுகிறார். இதைப் பெரியாழ்வாரும்……

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்க திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக் கையனே!அச்சோவச்சோ சங்க மிடத்தானே! அச்சோவச்சோ.
என்று பாடுகிறார்.

உடன் மாவலி தானத்தை செய்து முடிக்க, குறளனும், நெடு நெடுவென்று மாலாகி வளர்ந்து, ஒரு பாதத்தால் இப்பூவலகம் முழுவதையும் அளந்துவிடுகிறார். மற்றொரு பாதத்தால், விண்ணுலகம் முழுவதையும் (எல்லையான தன் இருப்பிடமான வைகுந்தத்தளவும்) அளந்துவிட்டு, மூன்றாம் அடி எங்கே என்றுகேட்கிறார். பிறகு மூன்றாவது அடியாக மாவலியின் தலையில் திருவடிகளை வைத்து அவனை பாதாள உலகிற்கு அனுப்பி, அவன் மாளிகையைக் காவல் காக்கிறான் மால் என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர். இதைக் காட்டும் பெரியாழ்வார் பாசுரம் இதோ

“குறட் பிரமசாரியாய், மாவலியை குறும்பதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை, கொடுத்துகந்த எம்மான்”

மேலே கலவிருக்கை என்றதில், தன்னுடன் கலந்து இருக்கை என்று பொருள்.

இங்குதான் அவன் கள்வம் வெளிப்படுகிறது. “அனைத்துலகும் அவனுக்குச் சொந்தமாய் இருக்க, அவன் மாவலியிடம் மூவடி மண் கேட்டு யாசிக்க, மாவலியோ, அவனுடைய (நாராயணனின்) சொத்திலிருந்து மூன்றடியை ஏதோ தன் சொத்து என்ற நினைப்பில், அவனுக்கு அளிக்க முன் வர, அதையும் தன் பரத்வ ஸ்வரூபத்தைத் தாழ்த்திக்கொண்டு யாசகமாய் பெறுகிறான் “உலகளந்த மால்”. இந்த ஒளித்துக் கொண்டதையே “கள்வம்” என்கின்றனர். அதனால் அவன் கள்வனாகிறான்.

இவ்வாறு குறளுருவாய் (குறள் – சின்ன, குறுகிய) வந்து, மாலுருவாய் வளர்ந்து (மால் – பெரியது) மாவலியிடம் யாசகம் பெற்றதைப் பார்த்த மாவலியின் மகனான நமுசி, திரிவிக்ரமனின் திருவடிகளை, மேலும் அளக்க முடியாதவாறு பிடித்துக் கொள்ள, அவனை தன் திருவடிகளால், வானில் சுழற்றி அடிக்கிறார். இதைப் பெரியாழ்வாரும்……

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவா யென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோவச்சோ வேங்கட வாணனே! அச்சோவச்சோ…
…… என்று பாடுகிறார்.

பல்லவ சிற்பி இக்கருத்தையே இந்த சிற்பத்தில் காட்டுகிறான். கதையில் மல்லை சிற்பி எடுத்த காட்சி – இரண்டாம் அடி எடுத்து வைக்கும் பொது நடந்து நிகழ்வுகள். கீழ் இருந்து மேலே செல்வோம்.

முதலில் காலடியில் இருக்கம் நால்வர்.

அவனுடைய வலது திருவடியில் மாவலியும், திரிவிக்ரமனின் இடது கோடியில், சுக்கிராச்சார்யரும் உள்ளனர். சுக்கிராச்சார்யர் துணியால் செய்யப்பட்ட பூணுலை அணிந்திருக்கிறார். பழங்காலத்தில், துணியாலேயே பூணுல் அணிந்திருந்தனர். ஒன்று, பல்லவர் காலத்திலும் இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது பல்லவ சிற்பி, அவனுக்கும் முந்தைய காலத்தில் இருந்த வழக்கத்தை அதன் பழமையை விளக்க அவ்வாறு சித்தரித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், அவன் கைத்திறனும் அறிவும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

மீதமுள்ள இருவர், மாவலியின் கூட்டாளிகள் போலும். சிற்பியன் கற்பனை பாருங்கள்.அருகில் உள்ள இருவரின் பார்வையும் மாலின் கால் முட்டிக்கு அடியில் தான் உள்ளது. வெளிப்புறம் இருக்கும் இருவரும் சற்று மேலே பார்ப்பதற்கு தலையை தூக்குவது போல உள்ளது. திடீரன எவெரும் எதிர்பாரா வண்ணம் வாமன உருவில் இருந்து பிரபஞ்ச விஸ்வரூப அளவிற்கு அவர் மாறுவதை எவ்வளவு அழகாக காட்டி உள்ளான் சிற்பி. அதிலும் ஒரு படி தாண்டி, வெளியில் இருக்கும் அவர்கள், திடுக்கிட்டு பயந்து ஓட விழைகுமாரு செதுக்கிய வண்ணம் அபாரம்.

சற்றே மேலே பார்கையில், இடது புற இடுப்பிற்கு அருகில் ஒரு உருவம், வலது புறம் இன்னும் கொஞ்சம் மேலே இன்னொரு உருவம் – இருவரும் பறப்பது போல உள்ளது. . யார் இவர்கள். இருவரையும் சுற்றி ஒரு வட்டம் உள்ளது பார்த்தீர்களா ?


வளரும் பெருமாள் சந்திர சூரியரையும் தாண்டி செல்லும் காட்சி இது – இடது புறம் இருப்பது சந்திரன்.வலது புறத்தில் அவரை விட சற்று உயரத்தில் சூரியன் ( ஆஹா, இதில் எந்த பக்கத்தில் சூரியன், எந்தப் பக்கத்தில் சந்திரன் என்ற குழப்பம் வராமல் இருக்க, வலது புறத்தில் சூரியனைச் சற்று மேலேயும், இடது புறத்தில் சந்திரனை, சற்றுத் தாழ்த்தியும் – நிலவை சற்று சிரியாதாகவும் சித்தரித்துள்ளான்.). அதாவது அவ்விரு மண்டலங்களையும் தாண்டி அளந்தான் என்று குறிக்க இந்த உக்தியை கையாண்டுள்ளான் இந்த அற்புதச் சிற்பி.

இடது புறம் ஒரு மனிதர் வினோதமான முறையில் சித்தரிக்க பட்டுள்ளார். யார் இவர்.

சிலர் இவரை திரிசங்கு ( வானுக்கும் மண்ணுக்கும் நடுவில் விஸ்வாமித்ரரால் சொர்க்கம் அமைக்கப்பட்டு இருப்பவர் – ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை ) யாரோ எட்டி உதைத்தால் எப்படி விழுவாரோ – அதுபோல உள்ளார். ஆஹா இவன் தான் மாவலியின் மைந்தனான நமுசி. இவனைப்பற்றிய ஆழ்வாரின் குறிப்பை மேலே பார்த்தோம். மன்னு நமுசியை வானில் சுழற்றிய தனது தந்தைக்காக இடையே வந்த அவனை இவ்வாறு உதைத்ததாகவும் அதனால் அவன் விண்வெளியில் ஏவப்பட்டதாகவும் இன்றும் அவன் ஒரு கொளாக ( செயற்கைகொள் ?) சுற்றுகிறான் !

சரி இன்னும் மேலே போவோம்……..

இதோ விண்ணளந்த அவன் இடது திருவடியைப் ப்ரம்மா பாதபூஜை செய்கிறார் பாருங்கள். ப்ரம்மனின் மற்றொரு கை பரமனின் விண்ணைச் சுட்டும் விரலைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். என்ன ஒரு நேர்த்தி அச்சிற்பியின் கைவண்ணத்தில்.

ப்ரம்மாவுக்கும் நாரணனுக்கும் நடுவில் மிருதங்கத்தோடு இருப்பவர் தும்புரு. இது ஒரு அழகான குறிப்பு. தும்புரு என்பவர், வைகுந்த்தில் நாரணனின் பக்கத்திலேயே இருக்கும் நித்யசூரிகளில் ஒருத்தர். அவரை இங்குக் காட்டியதால், அவன் (எல்லையான) தன்னுலகையும் அளந்துவிட்டான் என்பதைக் குறிக்கிறான் சிற்பி.

திருமங்கை ஆழ்வாரின் அற்புத வரிகள் இதை எப்படி வர்ணிக்கின்றன

ஒண்மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து அண்ட மீது போகி
இருவிசும்பின் ஊடு போய் எழுந்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித
தாரகையின் பறம் தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

ப்ரம்மனுக்கு நேரே திரிவிக்ரமனின் வலது புறத்தில் பரமசிவனாரையும் வடித்து, அண்டம் முழுதும் அளந்த அவனுடைய பரிமாணத்தைக் விளக்கியிருக்கிறான் சிற்பி.

சரி, இப்பொழுது, இக்குடவரையின் நாயகனான திரிவிக்ரமனை கவனிப்போம். சிற்பியின் கைவண்ணத்தை என்னென்பது?

ஒருகாலில் அவன் நிற்கும் வடிவின் அழகை செதுக்கிய அழகுதான் என்னே! ஒரு நேர் கோட்டில் திருமுகத்துடன் திருவடியை செதுக்கிய அற்புதம்தான் என்னே.

வலது கரத்தில் ப்ரயோகச் சக்கரமும்,

அதன் கீழ்க் கரத்தில் குறுவாளும்,

அதற்கும் கீழ்க்கரத்தில் பெருவாளும்,

இடது கரத்தில் சங்கும்,

அதன் கீழ்க்கரத்தில் கேடயமும்,

மற்றொரு கரத்தால், சார்ங்கம் என்ற வில்லையும்

பிடித்துக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். மேலும்…. பல்லவ சிற்பியின் கை மற்றும் கலைத்திறனுக்கு முத்தாய்ப்பாக, அவன் திரிவிக்ரமனின் விண்ணளக்கும் திருவடியை, அதை சுட்டும் கரத்தின் பின் மூன்றாம் பரிமாணத்தில் காட்டியிருக்கும் அழகைப்பாருங்கள்.

பல்லவ சிற்பிகளின் தனித்தன்மைகளில் ஒன்று இந்த மூன்றாவது பரிமாணத்தின் நேர்த்தி. ஒரு சிறிய படத்தின் மூலம் அதனை காண்கிறோம் .

மாலின் நாபி- அற்புதம். ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறு உளியின் தாக்கம் நம்மை மயக்கும் பாவம்.

சரி இதற்கு மேல் அளக்க ஏதுமில்லை ஆதலால் மூன்றாவது அடி எங்கே என்று கேட்க்கும் வகையில் திரிவிக்ரமனின் வலது கையை அமைத்துள்ளான். ஸ்ரீ வைகுந்தத்தின் எல்லையைக் குறிக்கும் விதமாக, குடவ்ரையின் மேல் சுவரை குறிக்கிறான் அச்சிற்பி ( ஒரு காலை மேலே வீசி நிற்கும் அவர் மிக எதார்த்தமாக மேல் சுவரை பிடிப்பது போலும் ) ஆஹா….. அவன் கைவண்ணம்தான் அழகோ அழகு.

புதிருக்கு விடை – குதுப் மினாரை சுற்றி உள்ள சிதைவுகளே இவை

ஆர்வத்துடன் புதிரை உடைக்க பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி. ஆம் இவை டெல்லி குதுப் மினாரை ஒட்டி உள்ள சிதைவுகள்.

இவற்றை பற்றி பல விதமான கருத்துக்கள் உள்ளன.நண்பர் ரகு குறிப்பிட்டதை போல – இந்து கோயில், சமணர் கோயில், தோமர் கோட்டை, ராஜபுத்திர கோட்டை,ஏன் அங்கே இருக்கும் தொல்லியல் துறை அறிவுப்பு பலகை படி பிரிதிவ் ராஜ் சோஹான் அவரது கோட்டை என்று பலவும் உள்ளன. இணையத்தில் தேடினால், ஏன் அமர் சித்ரா கதா புத்தகம் கூட உண்டு. சிதைந்த சிற்பங்களை காட்டி இனவாதம் / மத வாதம் பற்றி எழுதுவது இந்த தொடரின் நோக்கம் அல்ல. போர் என்று வந்தால் எல்லாம் சரிதான். இதற்க்கு நம்மவர்களும் சலித்தவர்கள் அல்ல. கலை சிற்பம் பல இன்றும் நம் கோயில்களில் கண்ணெதிரில் சிதைந்து இருப்பதை யாரும் பார்ப்பது கூட இல்லையே. மாற்றான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிதைத்தான் என்றால் கொதித்து எழும் நம்மவர்கள் அன்றாடம் சிதையும் நம் கோயில்களின் பால் ஏன் திரும்புவது கூட இல்லை?

இந்த மடலின் நோக்கம் வேறு – இந்த தூண்கள் மிகவும் கனமான வை – அதனால் அருகில் இருந்த தான் எடுத்து வந்திருக்க வேண்டும். தூண்களும் ஒன்றுக்கொன்று வித்யாசமாக இருப்பதால் இவை பல இடங்களில் இருந்து வந்தவை என்று நாம் உணரலாம்.


இந்த தூண்களின் வேலைப் பாடை வேறு எங்காவது நாம் பார்த்து உண்டா? இவை எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினோராம் நுற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தை சார்ந்தவை. வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம்.

அழகிய தூண்கள் – ஒரு சிற்ப புதிர் – பாகம் 2

சென்ற மடலின் புதிரை உடைக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி ( விடையை முதலில் அளித்த திருவுக்கு ஒரு சபாஷ் ) . கொஞ்சம் கடினமான புதிர் தான். சரி உங்கள் உதவிக்கு இன்னும் சில படங்களை தருகிறேன்.

தூண்களின் படங்கள் – முதலில் தொலைவில் இருந்து , பின்னர் அருகில் சென்று.

தொலைவுப் பார்வை

அருகில் சென்று

சில தருணங்களில் நம் கண்களே நம்மை எப்படி மறைகின்றன பார்த்தீர்கள. இது போலவே இங்கு தினமும் கூடும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்த்தும் பார்க்காமலும் செல்லும் தூண்கள் இவை.

இன்னும் பல சிற்பங்கள்

சரி, விடையை நெருங்கிவிட்டோம். அழகிய சிற்ப வேலைப் பாடு மிகுந்த தூண்களை யாரோ வேண்டும் என்றே சிதைத்து உள்ளனர். யாராக இருக்கும் ?

சென்ற மடலில் ஒரு படத்தில் விடையை ஒலித்து வைத்தேன்.

கண்டுபிடிக்க முடிந்ததா ? சற்று அல்லாந்து பாருங்கள்

இரண்டு சிந்தனைகள் மோதிய தருணம் …

ஆம், இந்த தூண்கள் பிறந்து சிதைந்த வேலை நம் நாட்டின் தலை எழுத்தே மாறிய தருணம். இன்னுமா விடை தெரியவில்லை, முந்தைய வாக்கியத்தை இன்னொரு முறை படியுங்கள்.

அழகிய தூண்கள் – ஒரு சிற்ப புதிர்

இன்றைய தினம் நாம் நம் வழக்கமான தளங்களை விட்டு விட்டு ########## பயணம் செய்கிறோம். பல சுற்றுலா பயணிகள் செல்லும் இடம், எனினும் நாம் பார்கவிருக்கும் காட்சிகள் புதியவை – ஒரு புதிய பார்வை.

படங்கள் மூலம் ஒரு புதிராக உங்களுக்கு படைக்கிறேன் – தழை செய்து மெதுவாக ஒவ்வொரு படமாக பார்த்து புதிரை உடைக்க முயற்சி செய்யுங்கள்

அருமையாக பவனி வரும் தூண்களை பாருங்கள். என்ன அற்புத வேலைப்பாடு. எங்கே உள்ள தூண்கள் இவை?

புதிருக்கு விடை கிடைத்ததா ?

ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை

திரு K P. உமாபதி ஸ்தபதியுடன் நம் நண்பர் திரு சதீஷ் உரையாடியதன் விளைவுதான் இந்தப் பதிவு.. உரையாடலின் போது அவர் நம்முடன் பகிர்ந்ததை வைத்து ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை ,அதில் அவர் எதை , எவற்றை எப்படி எல்லாம் ரசிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் முயற்சி.

மல்லை படங்கள் திரு ஸ்ரீராம், அசோக் , மற்றும் எனது சமீபத்திய பயணத்தில் எடுத்தவை – கம்போடிய சிற்பங்கள் திரு கோகுல் ( சிங்கப்பூர் நண்பர் – கிரிக்கெட் ரசிகர் ).


பல முறை நாம் பார்த்த வடிவம்தான் இந்த வராஹ சிற்பம், நாம் முன்னரே பாசுரங்களையும் வைத்து அலசியது என்றாலும் (( பாசுரங்களையும் வைத்து அலசியது))இப்போது ஒரு புதிய பார்வையில் பார்க்கிறோம், இல்லை படிக்கிறோம்

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம். அதுவும் அசோக் உதவியுடன் சிற்ப நுணுக்கங்களை விளக்கு போட்டு பார்ப்போம்.


புரிகிறதா ? மல்லை சிற்பி ஒரே சிற்பத்தில் எத்தனை எத்தனை விதமான கை வடிவங்களை உயிரோட்டத்துடன் கருங்கல் குகையில் செதுக்கி நமக்கு அவனது ஆற்றலை காட்டுகிறான் பாருங்கள்.

பட்டியலிட்டு ஒன்றொன்றாய் பார்ப்போம். பொறுமையாகப் பாருங்கள். செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருவமும் ஒரே அளவில் இல்லை, எனினும் ஒரு குறிப்பிட்ட உருவத்தின் அளவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையானவை.

3884388838913903390639103908391239153918392039223924392739293932
இன்னும் முடியவில்லை. என்னடா கைகளை கட்டி விட்டு கடைசியில் இரண்டு கால்களா என்று பார்க்கிறீர்களா? . முக்கியமான படங்கள் – முடிவில் வந்த இரண்டு படங்கள்.


பல்லவ சிற்பிகளின் அற்புத திறனை அங்கோர்வாட் சிறப்புடன் ஒப்பு நோக்கும் ஒரு முயற்சி.

நண்பர் கோகுல் அவர்களுக்கு நன்றி – அங்கோர்வாட் அழகிகளுக்கும். பல்லவ சிற்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் – சம்பந்தம் இல்லை, வேற்றுமை. கண்டு பிடியுங்கள் பார்ப்போம். குனிந்து பாருங்கள்.

சரி படத்தை பாருங்கள். கால்களை பாருங்கள்.

ஒரு ஓவியத்தை தீட்டும் போது நாம் ஒரே பரிமாணத்தில் கொண்டு வருவது போல அவர்கள் சிற்பத்தையும் செதுக்கி உள்ளனர். ஆனால் பல்லவ மகா கலைஞனோ நேரில் நிற்கும் பாணி என்ன ஒருவர் திரும்பி சுவரை பார்க்கும் பாணியை கூட கால்களில் கொண்டு வந்து விட்டான்.

மேலும் சில படங்கள் – உங்கள் ரசனைக்கு

சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன்

என்னடா இது ? தலைப்பே ஒரு தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? இது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி போன்று, இன்று நாம் பார்க்கும் சிற்பம் ஒரு நையாண்டி அல்ல.

முதலில் இந்த வரிகள் எங்கே வருகின்றன என்பதை பார்ப்போம். சினிமா படம் போல அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு ஒரு பிளாஷ் பாக் …

புது வெள்ளம் – அத்தியாயம் 30
சித்திர மண்டபம்

கண்டராதித்த தேவர் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். ‘திருவிசைப்பா’ என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

“சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”

விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் “கோழி வேந்தர்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இப்போது புரிந்ததா தலைப்பு – சரி அது என்ன கோழி கதை. அதை விளக்க திரு N.S. நாராயணசாமி (www.shivatemples.com) அவர்களின் படங்கள் – பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)

அதை பார்க்கும் முன் கதை :

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. ஒரு தெரு கோழியின் வீரத்தையும் அந்த தளத்தின் அற்புத ஆண்மீக சக்தியையும் கண்டு சோழ அரசன் அந்த ஊரையே தன் தலைநகராக நிறுவினான்.

இப்போது சிற்பம்

அருமையான சிற்பம் – யானையை வீரத்துடன் தாக்கும் கோழி ( யானை மதம் பிடித்து என்று உணர்த்த அதன் வால் சற்றே முறுக்கி இருப்பதை பாருங்கள். பட்டத்து யானை – அதன் மேல் இருக்கும் அலங்காரம் மற்றும் மணி – யானை கோழியின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவதை தத்ரூபமாய் காட்டும் சிற்பம்.

சரி, இந்த கதையின் தொன்மையை பற்றி தெரிய – கொஞ்சம் படியுங்கள்

தவச் செல்வியாகிய கவுந்திய்டடிகளும் கோவலனும் கண்ணகியும் ‘முறம் போன்ற செவியினையுடைய யானையுடன் அஞ்சாது போரிட்ட கோழி என்னும் பெயருடைய ‘உறையூர்’ நகரின் கண்ணே சென்று தங்கினார்கள்.

சிலப்பதிகாரம் வரிகள் – கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் கவுந்தியுடன் உறையூரில் தங்கிய செய்தி. அப்போதே ( சுமார் இரண்டாம் நூற்றாண்டு ) இந்த கோழியின் வீரக் கதை பெருமை பெற்றுள்ளது என்றால் ….

இராவணனை வென்ற ஜடாயு

என்னடா? தப்பு தப்பா தலைப்பு போட்டுள்ளேன் என்று பலர் கூறுவது கேட்கிறது. முழுவதையும் படியுங்கள் அப்போது தான் புரியும். அதுவும் இதை நான் சொல்ல வில்லை – தேவாரப் பாடல் துணை உண்டு.
www.shaivam.org

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொருளுரை:
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட

சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.

ஜடாயு இராவணனுடன் போரிட்டு மடிந்தான் என்று தானே படித்தோம். இது என்ன புதுக் கதை ? சரி சிற்பத்தை பார்ப்போம். ஜடாயு இராவணனு்டன் போரிடும் சிற்பம் மிகவும் சிலவே உள்ளன. பெரும்பாலும் ரவி வர்மா ஓவியமே கிடைக்கும்

எனினும் தேடி பிடித்தோம். ஒன்று நண்பர் முரளி அவர்கள் உபயம் – எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பம். மற்றொன்று இந்தோனேசியா பரம்பணன் ( அதை பின்னர் பார்ப்போம்) – இராவணன் வெறி கொண்டு ஜடாயுவை ஒரு பெரிய வாளால் தாக்கும் சிற்பம்.

அந்த வாள் தான் மிகவும் முக்கியம்.

சரி , யார் இந்த ஜடாயு?. முன்னர் கருடனின் கதையில் பார்த்தோமே – கருடனின் அண்ணன் அருணன் – சூரியனின் தேரோட்டி, அவனுடைய மைந்தன். அருணனுக்கு இரண்டு மகன்கள் – முதல் மகன் சம்பாதி , அடுத்து ஜடாயு. இருவரும் பறவைகள்.

கருடனின் அண்ணன்

ஒருமுறை இருவருக்கும் போட்டி – யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான். அப்போது அவனது சிறகுகள் கருகின . கிரேக்க ஐகாருஸ் கதை போல உள்ளதா? இது நான் கூறுவது அல்ல – கம்பன் கூறுவது ( முடிவில் ராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன )

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

‘தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

‘”ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்” என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

‘முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
“எந்தை! நீ காத்தி” என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

‘மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், “சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி”‘ என்றான்.

சரி சரி, மீண்டும் சிற்பத்தின் கதைக்கு வருவோம்.

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=631

124. மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்றான்.

பெரிய மீன் கொத்திப் பறவை குறி தப்பாமல் மீனைப் பற்ற பாய்ந்தாற் போலச் சடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும் தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். அதைக் கண்ட சடாயு, ” உனது வலிமை, போய் விட்டது! உனது வலிமை இவ்வளவு தானா?” என்று இழிவாக கூறினான்.

125. அவ் வேலையினை முனிந்தான் முனிந்து ஆற்றலன் அவ்
வெல் வேல் அரக்கன் விடல் ஆம் படைவேறு காணான்
இவ் வேலையினை இவன் இன் உயில் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்.

வல்லவனான இராவணன் அப்போது மிகுந்த கோபம் கொண்டான். அவ்வாறு கோபித்த – கொடிய வேலை இயல்பாக ஏந்தி இருக்கும் அந்த இராவணன், அந்த நேரத்தில் சடாயுவின் மேல் செலுத்தத்தக்க ஆயுதம் வேறு இல்லாததைக் கண்டான். அதனால் ” இப்பொழுதே இவனது இனிய உயிரை அழிப்பேன் ” என்று முடிவு செய்து குறி தவறாமல் தாக்கும் ‘சந்திரகாசம்’ என்னும் பெயருடைய தனது நீண்ட வாளை, உறையில் இருந்து எடுத்து, சடாயுவின் மீது மிகச் சரியாக எறிந்தான்.

அது என்ன சந்திரகாசம். இராவணன் பலமுறை பலரிடம் தோற்று பொன்னன். நாம் வாலியிடம் அவன் தோற்றதைக் கூட முன்னர் பார்த்தோம்.

வாலியிடம் இராவணன் தோற்றான்

அதே போல அவன் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்றான் ( சிற்பம் இன்னும் எதுவும் கிடைக்க வில்லை ). மேலும் ஈசனிடம் அவன் தோற்ற காட்சியை நாம் பல இடங்களில் பார்த்தோம். அவ்வாறு அவன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது ,பிறகு தனது கை நரம்புகள் மற்றும் தலை கொண்டு செய்த வீணையை மீட்டி சிவபெருமானின் ஆசி பெற்ற பின்னர் அவர் அளித்த பரிசே இந்த வாள். மேலும் படியுங்கள்
இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 2

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 3

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 4

126. இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

வலியின் தலை தோற்றிலன் மாற்ற அருந்தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்னின் வேந்தன்
குலிசம் எரியச் சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்.

இராவணனது வலிமைக்கு முன்னே அதுவர சடாயு தோற்றான் அல்லன். ஆனாலும் எவறாலும் தடுக்க முடியாத சிவபெருமான் அளித்த- தெய்வத்தன்மை பொருந்திய அந்த வாளால் சடாயு வீழ்த்தப்படும் நேரம் வந்து விட்டது என்று ஆகிவிட்டது. அதுவன்றியும் அவனுடைய வாழ்நாளும் குறைவு பட்டு முடியும் கட்டத்தை அடைந்துவிட்டது. ( இந்திரனின் வஜ்ராயுதம் போல் பலம் பொருந்திய, அதை விடவும் பலம் பொருந்திய வாளால் ஜடாயுவின் சிறகுகள் வெட்டி வீழ்த்தப் பட்டன, ராவணனால். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாய் மலை விழுந்ததைப் போல எனச் சொல்லி இருக்கின்றது. சந்திரஹாசம் என்னும் இந்த வாள் அத்தகையதொரு வலிமையுடனேயே ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியது.)

இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா – இராவணனை வென்றவன் ஜடாயு என்பதை..

படம் – திரு முரளி , குறிப்புகள் / விளக்கங்கள் உதவி திரு சுப்ரமணியம் அவர்கள், திரு திவாகர் அவர்கள் மற்றும் கீதா அம்மா

மானை மயக்கிய மோகினிகள்

இன்றைக்கு மீண்டும் ஹம்பி – ஹஸார ராம கோயில் சிற்பம். மிகவும் சுவாரசியமான சிற்பம் – படம் உபயம் கேத்தி , கதை – கீதா அம்மா. முதன்முதலில் இன்றைய இடுகையின் நாயகனை பற்றி நான் கேள்வி பட்டது நண்பர் தலத்தில் – அழகர் கோயில் ஓவியங்களில், தசரதன் தனது பிள்ளை பெரும் யாகத்திற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டவர்.
திரு பாஸ்கர் அவர்களது தளம்

மான் தலை கொண்ட முனிவர் – உடனே என் ஆர்வத்தை தூண்டினார். தேடி பார்த்தேன் – அவர் ரிஷ்யசிருங்கர் ( வால்மிகி படி ) அல்லது கலைக்கோட்டு முனிவர் ( கம்பர் ). அவரைப் பற்றித் தேடும்போது ‘தி ஹிந்து’ நாளேட்டில் ஒரு படம் கிடைத்தது.
தி ஹிந்து

ஒரு பாதிதான் படம் இருந்தது, சமீபத்தில் ஹம்பி சென்ற கேத்தியிடம் கேட்டு பார்த்தேன். அவர் முழு சிற்பத்தை படம் எடுத்து உள்ளேன் என்று உடனே அனுப்பி வைத்தார். முழு படத்தை பார்த்தும் ‘தி ஹிந்து’வில் வந்தது போல இந்த காட்சி தசரதனின் மூன்று மனைவியருக்கு பாயசம் கொடுக்கும் காட்சியா இது என்ற ஐயம் வந்தது. அப்போது கீதா அம்மா அவர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்கள் முழுக் கதையையும் எழுதினார்கள். அப்போது தான் விளங்கியது – இந்த சிற்பம் தசரத யாகத்திற்கு முன்னர் நடைபெற்ற கதை என்று. அதுவும் மிகவும் சுவாரசியமான கதை. கேட்கிறீர்களா ?

காசியபரின் மகன் ஆன விபாண்டகரின் மகன் தான் ரிஷ்யசிருங்கர். விபாண்டகருக்கு ஒரு பெண்மானின் வயிற்றில் பிறந்தார் எனச் சொல்லுவதுண்டு. இவருக்கும் மானைப் போன்ற கொம்புகள் உண்டு. இவர் பிறந்ததில் இருந்து பெண்வாடையே படாமல் வளர்ந்தவர். பெண்களையே கண்களால் கண்டிராத அவர் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும் என்பதை அறிந்த அங்க தேச மன்னன் “ரோமபாதன்” தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரைப் பெண்களைக் காட்டி, அப்பெண்களை அவருக்குப் பணிவிடை செய்ய வைத்துத் தன் நாட்டிற்கு வரவழைக்கிறான். பெண்களின் பணிவிடைகளையும், அவர்களின் தோற்றம், ஆடல், பாடல் ஆகியவற்றில் தன்னிலை இழந்து மயங்கிய ரிஷ்ய சிருங்கரை அந்தப் பெண்கள் அங்க நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். ரிஷ்ய சிருங்கர் வந்ததும் நல்ல மழை பெய்கிறது. பின் தன் மகளான “சாந்தை”யை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். சாந்தையுடன் காட்டுக்கு மீண்டும் வரும் முனிவர் பின் தசரதனுக்காக “புத்திர காமேஷ்டி யாகம்” செய்ய அயோத்தி செல்கிறார்.

இப்போது மீண்டும் சிற்பத்தை பாருங்கள். விளங்குகிறதா ?

அருமையான சிற்பம். கதையைப் படித்த பிறகு – நாட்டியத்தை அவர் ரசிக்கும் பாவமும், நாற்காலியில் கால் மீது கால் இட்டு தன்னை உபசரிக்கும் பெண்களைப் பார்க்கும் முறையும் அருமை.

புத்திர சோகம் – ஒரு சாபம்

இன்று நாம் ஹம்பி ஹசரா ராமர் கோயில் சிற்பம் ஒன்றை பார்க்க போகிறோம். ராமாயணத்தின் தொடக்கம் – தசரதனின் இளமை பருவம் . அப்போது ஒரு விபத்து, ஒரு இழப்பு ஒரு சாபம்.

சரி – கதையை பார்ப்போம் . ( நன்றி கீதா அம்மா ) மன்னனும் பெரும் வீரனும் ஆன தசரதன் பல நற்குணங்கள் பெற்றிருந்தும் அவன் ஆசை, பாசம், காதல், கோபம், காமம், அதனால் விளையும் துக்கம் போன்றவை நிரம்பியவனாகவே காணப்படுகின்றான். தன் மூத்த மகனை அவன் பிரிய மறுத்ததுக்கும், விசுவாமித்திரருடன் அனுப்ப மறுத்ததுக்கும் காரணம் உண்டு. தசரதன் இளைஞனாய் இருந்த காலத்தில் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த சமயம் மாலை நேரமாகி இருட்டியும் விடுகின்றது. அப்போது இருட்டில் ஒரு நீர்த்துறைக்கு அருகே யானையோ அல்லது ஏதோ காட்டு மிருகமோ நீர் குடிக்கின்றது என நினைத்துக் குறி தவறாமல் அம்பெய்யும் தன் திறமையால் அம்பெய்ய, அம்பு பட்டதோ ஒரு மனிதன் மீது.

இதோ சிற்பம்

நண்பர் மஞ்சு அவர்களது படம்

பதறிப்போன தசரதன் அங்கே போய்ப் பார்க்க அம்பினால் வீழ்ந்து கிடப்பதோ ஒரு முனிகுமாரன். “ஸ்ரவணகுமாரன்” என்னும் பெயர் உள்ள அந்தப் பையன், கண் தெரியாத, வயதான தன் பெற்றோர்களைக் காப்பாற்றி வந்தான். தனது முதுகில் சுமந்தவாறு அவர்களை எடுத்து வரும் காட்சி நெஞ்சை நெகிழவைக்கிறது.

அவர்களின் தாகம் தீர்க்கவே தண்ணீர்த் துறைக்கு அவ்வேளையில் நீர் எடுக்க வந்ததாயும், தசரதனின் அம்பால் வீழ்ந்து விட்டதையும் தெரிவித்துத் தன் பெற்றோர் தாகத்துடன் இருப்பார்கள் எனவும் போய் அவர்களின் தாகத்தைத் தீர்த்து விடு எனவும் சொல்லிவிட்டு இறக்கின்றான்.

அவன் பெற்றோர்களை மிகுந்த தயக்கத்துடனும், பயத்துடனும் சென்று சந்திக்கும் தசரதனைத் தன் மகன் இல்லை எனவும், தன் மகனைக் கொன்றவன் அவனே எனவும் அறிந்து கொள்ளும் அந்தத் தம்பதிகள் புத்திர சோகம் தாளாமல் தசரதனும் அவ்வாறே புத்ர சோகத்தால் இறக்கவேண்டும் எனச் சாபம் கொடுத்துவிட்டு இறந்து விடுகின்றனர்.

இது தான் விதி, என்றும் காரண காரியம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும் புரிய வைக்கின்றது. ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்று, அதனதன் காலத்தில் சற்றும் வழுவாமல் அப்படியே நடக்கின்றது. அதற்குச் சாட்சி …

சரி , கம்பன் இதை எப்படி வர்ணிக்கிறான்

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/ayodhya_kandam/04.htm

தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்

‘பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 72

‘வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73

‘ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியொன்று இலவாய் நயனம்
திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,
அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள. 74

‘புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே அன்று ஈது’ என்ன வெருவா,
‘மக்கள்-குரல்’ என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால். 75

கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,
“ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க” என்று அயரப்
பொய்யொன்று அறியா மைந்தன், “கேள் நீ” என்னப் புகல்வான். 76

‘”இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-
இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!” என்றே. 77

‘”உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,
தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்
விண்மீது அடைவான் தொழுதான்’ எனவும், அவர்பால் விளம்பு” என்று,
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். 78

‘மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவு ஆய்
வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா” எனவே. 79

‘”ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,
கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன். 80

‘”வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. 81

‘”அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!” என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். 82

‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்று” என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!” என்றார்;
“போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.” 83

‘என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, “யானே
இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்” என்று இடலும்,
“வண் திண் சீலையாய்! கேண்மோ” எனவே, ஒரு சொல் வகுத்தான். 84

‘”கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?
விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரியப்
பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள்” என்னா. 85

‘”தாவாது ஒளிரும் குடையாய்! ‘தவறு இங்கு இது, நின் சரணம்,
காவாய்’ என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ
போவாய், அகல்வான்” என்னா, பொன் நாட்டிடைப் போயினரால்
. 86