யார் படைப்பாளி , யார் படைப்பு

இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது – யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை – பாடல் எண் – 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது – யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.


அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

அடுத்து, சிவன் பார்வதி – பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது
அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது – அடுத்த பதிவில் பார்ப்போம் ) –

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

அருகில் இன்னொரு சிற்பம் – அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

ராமனுக்கு உதவிய கவந்தனின் கதை – பரம்பணன்

நேற்று தற்செயலாக பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு சக்திஸ் அவர்களை சந்தித்தேன். அவர் அலுவல் பணியில் ஜகார்தா சென்று திரும்பினேன் என்றும் அங்கு நண்பர் ஒருவர் பரம்பணன் ராமாயண சிற்பங்கள் பற்றி கூறியதாகவும் சொன்னார். உடனே வெகு நாட்களாக முடிவு பெறாமல் இருந்த ஒரு பதிவை எப்படியாவது முடித்து உங்களுக்கு தரவேண்டும் என்று முடிவு செய்தேன். பரம்பணன் கோயில், அருமையான சிற்பங்கள் கொண்டது, நில நடுக்கத்தால் சிதைந்த இந்த கோயிலின் மராமத்து வேலைகள் செவ்வனே நடந்து வருகின்றன. இதோ அங்கு இருக்கும் ஒரு அற்புத ராமாயண சிற்பம். மிகவும் சுவாரசியமான கதை, இதை அங்கு எப்படி வடித்தார்கள் என்று நம்மை விந்தையில் ஆற்றும் கதை. ராமனும் லக்ஷ்மணனும் வெட்டியான் வேலை பார்த்த கதை என்று இணையத்தில் படித்தேன். வேடிக்கையாக சொன்னாலும் அது அப்படி இல்லை, ஒரு முக்கியமான தருணத்தில் மிகவும் தெளிவான அறிவுடைய பூதம் செயல்பட்ட கதை . ஆம்! ‘கவந்தனின்’ கதை.

முதலில் கதை – ராமயணத்தின் விறுவிறுப்பான படலம். மாரிச்சனை வதைத்து விட்டு, ராமனும் லக்ஷ்மணனும் திரும்புகின்றனர். சீதையைக் காணவில்லை. எங்கும் தேடி பயன் இல்லை. எவருக்கும் தெரியவில்லை. அப்போது …

ஒரு அடர்ந்த காட்டுக்குள் நுழைகின்றனர். எங்கும் மயான அமைதி. ஒரு உயிர் பிராணி கூட கண்ணில் பட வில்லை.

திடீரேனே எதிரே ஒரு பூதம்.

அதுவும் எப்படி பட்ட பூதம். கம்ப ராமாயணத்தில், லக்ஷ்மணன் ராமனிடம் கேட்கிறான்.

நீர் புகும் நெடுங் கடல் அடங்கும், நேமி சூழ்
பார் புகும், நெடும் பகு வாயைப் பார்த்தனர்;
‘சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது?’ என்று, உன்னினார். 20

அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
‘வௌ;வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:

‘ஊர் புகு வாயிலோ ‘இது – ஆஹா , அரக்கனின் வாய்க்கு என்ன ஒரு உவமையைக் கம்பன் தருகிறார்!

மேலும் கவந்தனின் தோற்றம்

இரு புடையும் வாங்கலின்,
நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான்
எயிற்று இடைக்கு இடை இரு காதம்; ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான்

இப்போது சிற்பத்தை பாருங்கள்

கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல்

‘அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை’ என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப,
‘விழுங்குவேன்’ என வீங்கலும், விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். 36

கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும்,
சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு
ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான்.

உடனே அவர்களை ராம லக்ஷ்மணர் என்று அடையாளம் கண்டு கொண்டது கவந்த பூதம். அவர்களை வணங்குகிறது!

மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41

‘காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42

‘ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
“சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!” என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43

‘எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா! 44

‘மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45

‘நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46

‘நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47

‘மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?’ என்றான். 48

உடனே லக்ஷ்மணன் நீ யார் என்று கேட்கிறான்

என்று, ஆங்கு, இனிது இயம்பி, ‘இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு’ என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49

‘பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
ஆராய்!’ என, அவனும், ‘ஆர்கொலோ நீ?’ என்றான்.

‘சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்;
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்,
எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின்’ என்றான். 51

இப்போது இந்த சாபத்தை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள , நாம் வால்மிகியை நாட வேண்டி உள்ளது. தனு என்னும் கந்தர்வனின் மகன், அவன் பெயரும் தனு. பிரம்மனிடம் பெற்ற சாகா’ வரத்தினால் கர்வம் கொண்டு பூதமென உருக் கொண்டு அனைவரையும் துன்புறுத்தினான். அப்போது அவனை ‘ஸ்தூலசிர’ ( பெரிய தலை ?) என்ற முனிவர் அப்படியே பூத உடலுடன் இருக்கக் கடவது என்று சபிக்க தன் தவறை உணர்த்து சுய சௌந்தர்ய கந்தர்வ உருவம் பெற விமோசனம் என்ன என்று அவன் கேட்கிறான். முனிவர், ராம லக்ஷ்மணர் வந்து அவன் பூத உடலை தீக்கு இறை ஆக்கினால் மட்டுமே விமோசனம் என்று கூறுகிறார். அவ்வாறு பூதமாக அலைந்த அவன், அந்த கொடுமை போதாதென்று தேவேந்திரனிடத்திலும் சண்டை இட்டு, கொடுமையிலும் கொடுமையாக வஜ்ராயுதத்தின் தாக்கத்தில் தலை உடம்பினுள் சென்று, கை கால்கள் வெட்டப்பட்டு முண்டமாக மாறிவிட்டான். இந்திரனிடம் தான் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்க, இந்திரன் அவனின் வயிற்றில் ஒரு பெரிய வாய் ஒன்றை ஒருவாக்கி, யோஜன அளவில் நீண்ட பாம்பை போன்ற கரங்களையும் தருகிறான்.

( இங்கே சிற்பத்தில் சில தவறுகள் – சிற்பத்தில் தலை, கை , கால் உள்ளன. எனினும் வயிற்றில் பெரிய வாய், பாம்பு கரங்கள் – அதிலும் ஒன்று அருகில் இருக்கும் தவளை பார்க்கிறது )

இவ்வாறு, கதை நகர, தன பூத உடலை தீக்கு இரையாக்கும் படி வேண்டுகிறான் தனு, அப்படி செய்தால் சீதை இருக்கும் இடம் மற்றும் எப்படி மீட்பது என்பதற்கும் வழி கூறுவேன் என்கிறான். ராமருக்கு நம்பிக்கை இல்லை. சுய காந்தர்வ உரு பெற்றவுடன் கொடுத்த வாக்கை மறந்து விட்டால், அதனால் முதலில் தகவலை கூறுமாறு கேட்கிறார். சாமானிய பூதம் இல்லை, முதலில் தன் காரியம் ஆகவேண்டும் என்கிறது. ராமனும், லக்ஷ்மணனும் அவ்வாறே சென்று விறகு கொண்டு தீ மூட்டி, பூத உடலை அதில் இடுகிறார்கள்.

சாப விமோசனம் பெரும் தனு, தான் கொடுத்த வாக்குப்படி, சீதையை ராவணன் கொண்டு சென்றதையும், அவனை எதிர்க்க ராமனுக்கு வானர சேனையின் உதவி தேவை என்றும்,. அதற்்கு சரியான யுக்தி , சுக்ரீவனை நண்பனாக்கிக் கொள்வதுதான் என்றும், அவனுக்கு வாலியை அழிக்க உதவி செய்து அவனை தனக்கு கடமை பட்டவனாக ஆக்கி கொள்ள வேண்டும் என்கிறான்.

‘கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். 52

‘பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து
உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே,
ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? 53

‘ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி,
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 54

‘கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். 55

கதைப்படி தனுபூதம் மிகவும் அறிவு கூர்மையான கந்தர்வன், ராமனுடன் தன சுய நிலை பெற பேரம் பேசும்போதும், சுக்ரீவனை தன வசம் இழுக்க சொல்லி ஆலோசனை தந்ததும் அபாரம். வாலி மிகவும் பல சாலி, ( நாம் முன்னரே ராவணனை தன வாலில் கட்டி போட்ட வாலியின் சிற்பத்தை பார்த்தோமே ) ஆனால் இப்போது அவர்கள் இருவரும் நண்பர்கள். என்னதான் ராமனுக்கு உதவி செய்ய வாலிக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்றாலும் வாலியின் நட்பை விட சுக்ரீவன் நட்பே ராமனுக்கு விவேகமானது என்று நினைத்து அவ்வாறே ராமனிடம் கூறியது..

அற்புத கதை, அபாரமான சிற்பம்.

ஓவியம் நன்றி :
http://www.seasite.niu.edu/Indonesian/ramayana/rama23fs.htm

விஜயவாடா மொஹல்ராஜபுரத்து அதிசயங்கள்

திரு திவாகர் அவர்களுக்கு இந்த அற்புத குடவரை பற்றிய பதிவை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த குடவரை பற்றி இன்னும் படிக்க வேண்டும், நல்ல புகைபடங்களும் தேவை. விஜயவாடா வாசகர்கள் இருந்தால் எடுத்து அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது திரு திவாகர்.

விஜயவாடாவையும் கனகதுர்கையயும் யாராலும் பிரித்துப் பார்த்துக் கனவு கூட காணமுடியாது . தற்சமயம் இந்திரகிலாத்திரி மலைக்கோயில் மேலே அழகாக வீற்றிருக்கும் கனகதுர்காவின் திரு உருவச் சிலையைப் பற்றி நாம் இங்குப் பேசப் போவதில்லை. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்பு கல்லினால் செதுக்கப்பட்ட துர்காவின் அழகுச் சிலையைப் பற்றித்தான் இந்தப் பதிவு. வேறு சில சிற்ப ஆராய்ச்சியாளர்கள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்பட்ட சிற்பம் இது.

விஜயவாடாவின் மத்தியப்பகுதியில் மொகல்ராஜபுரத்தில் பத்தடி உயரம் உள்ள இரண்டு குன்றுகள் இப்போதும் அப்படியே விட்டுவைக்கப்பட்டுள்ளன. ( மொத்தம் ஐந்து ) ஆர்க்கியாலஜி சொஸைட்டியின் மேற்பார்வையில் உள்ள இந்த குன்றுகளில்தான் இந்த சிலை ஆச்சரியங்கள் உள்ளன.

ஒரு குன்றின் அடிவாரத்திலேயே பாறையைக் குடைந்து சிறிய அறையை உருவாக்கி (கோயிலாக்கி) உள்ளே உள்ள பாறையில் துர்க்கையின் வடிவத்தை பின்னால் சிம்ம உருவத்தோடு செதுக்கி உள்ளார்கள். அது துர்க்கைதானா என்று பார்க்கும் எல்லோருக்குமே ஒரு திகைப்பு வரும் அளவுக்கு சிதைந்து போன முறையில்தான் இந்த சிற்பம் தற்சமயம் உள்ளது. பின்னால் சிம்மம் இருப்பதால் மட்டுமே துர்க்கை என்று கொள்ளவேண்டும்.

(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)

துர்க்கை காலை சற்று அகல வைத்து அசுரனை அழிக்கும் நிலையில் கற்பனை செய்து படைக்கப்பட்டுள்ள சிற்பம் இது. பக்கத்திலேயே ஒரு கருநீலப் பலகையில் அரசாங்கப் பெயர்ப் பலகை இவள் கனகதுர்காதான் என்றும் 6-7ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிற்பம் என்று அங்கீகாரம் அளித்துள்ளது. துர்க்கை அல்லது கொற்றவை என்றுதான் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கனக எனும் வாசகத்தை முன்னால் வைத்து கனகதுர்கா என்றால் அனைவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்தோர்களோ என்னவோ(பலகைப் படம்)

சிற்பத்தின் மிகவும் சிதைந்த நிலைமையினால் அதன் வரை படம் இதோ

4638

இவள் துர்க்கையின் சிற்பம் என்று அரசாங்கம் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால், தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக பெண் தெய்வ வடிவ சிற்பமாக இந்த சிற்பத்தை ஏற்றுக் கொள்ளலாம். டாக்டர் கலைக்கோவன் தனது ‘மகேந்திரக் குடைவரை நூலில் செங்கல்பட்டு வல்லம் குடைவரையில் உள்ள கொம்மை செதுக்கிய கொற்றவை சிற்பம்தான் தென்னகத்தில் முந்தையதாக இருக்கவேண்டும், என்கிறார். அந்த வரிசையில் விஜயவாடா சிற்பமும் சேர்க்கலாம்.

இவைதவிர, மற்றொரு குடவரையில் முகப்பில் இன்னும் பல அற்புதங்கள். தூண்களின் அமைப்பை சற்று பாருங்கள். அவற்றுக்கு மேலே மொன்று கூடுகள். அவற்றில் இருக்கும் முகங்கள்
மும்மூர்த்தி சிலைகள் என்றும் , அதற்கும் மேலே நடராஜரின் நடனக் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. இது நடராஜர் வடிவமா அல்லது மகிஷாசுரமர்தினி வடிவமா ? . ஐஹோல் பதாமி நடராஜர் வடிவங்களில் முயலகன் ஆடல் ஈசனின் அடியில் இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். விரைவில் இங்கு இடுகிறேன். இதன் காலமும் ஏறத்தாழ அதே 6 அல்லது ஏழாம் நூற்றாண்டு சிற்பம் என்றே சொல்கின்றனர் (படங்கள் பார்க்க)

கூடுகளின் அமைப்பை சற்று மகேந்திர தளவானூர் குடவரையுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

இங்கு சென்னையைப் போல அல்லாமல் சிற்பத்தில் விருப்பம் உள்ளோர் யாருமே வருவதில்லை. இந்த கலை பெட்டகங்கள் சிதைந்து கிடப்பதை பார்க்கும் பொது, பழமையின் செல்வத்தை இவர்கள் எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ என்ற ஆதங்கம் தான் மிஞ்சுகிறது.

தஞ்சை இரண்டாம் யாளி வரிசை

முந்தைய பதிவில் தஞ்சை பெரிய கோயில் முதல் யாளி வரிசையை பார்த்தோம். அவை யாளிகளா அல்லது சிம்மங்களா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். அவர்களை விட இன்னும் பன்மடங்கு நண்பர்கள் தஞ்சை கோயிலுக்கு பல முறை சென்றும் இந்த வரிசைகளை பார்க்கவில்லை / பார்கவில்லையே !! என்றும் வருந்தினர். அவர்களுக்காக இன்று இன்னும் ஒரு யாளி வரிசை ( முன்னர் பார்த்து மேல் வரிசை, இப்போது பார்ப்பது கீழ் வரிசை ) -நன்றி சதீஷ் – அருமையான படங்கள், மற்றும் கூர்ந்து கவனித்து படங்களின் அளவை குறிக்க அவர் கையாண்ட முறை மிக அருமை.

முதலில் படங்களை படங்களாகவே இடுகிறேன், வரிசையை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்

சரி, இப்போது தெரிகிறதா பாருங்கள்.

அடுத்தது

அடுத்தது

அடுத்தது

சற்று இன்னும் அருகில் சென்று இந்த அற்புத யாளிகளை தரிசனம் செய்வோம். பலர் இவைகளை சீன டிராகண் போல உள்ளது என்று கூறுவார், எனினும் அவற்றை பார்த்தல் சற்று பயமாக இருக்கும், எனக்கு தஞ்சை யாளிகள் கொடூரமாக காட்சி அளிப்பதை விட சற்று விளையாட்டாய் சிரிப்பது போலவே உள்ளது.

யாளி வரிசையின் கொடிகள் இன்னும் அருமை. இவை ஏற்கனவே மிகவும் அளவில் சிறியவை. அந்த சிறிய அளவிலும் மேல் வரிசையை போல யாளி வாயில் இருந்து வெளி வரும் வீரர்களை போல இங்கும் செதுக்கி உள்ளனர். அதற்க்குமேல் ஒரு பொடியன் வேறு.அப்பப்பா அபாரம் .

பேனா மூடி அளவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

இவை போதாதென்று அதே அளவில் ஒரு அருமையான யானை உரி போர்த்திய மூர்த்தி வேறு

அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் பொது, அதன் பிரம்மாண்டத்தை மட்டும் கண்டு வியக்காமல் இந்த சிறிய சிற்பங்களையும் கண்டு களியுங்கள்.

தஞ்சையின் யாழி வீரர்கள்

கடந்த சில மடல்கள் சற்ற ஆழ்ந்த கருத்துக்களை அலசின. இன்று சற்று ஆற அமர சிற்பங்களை மட்டும் பார்ப்போம். மற்றும் நண்பர்கள் திரு பிரசாத் சென்ற மடலில் மிகவும் குறைந்த அளவே படங்கள் இருந்தன என்றும் திரு சதீஷ் அவர்கள் என்னிடத்தே விட்டு சென்ற படங்கள் பல இருந்தும் இன்னும் வெளி வரவில்லை ( திரு சந்திரா அவர்கள் கூட ) புகார் அளித்தார். அலுவல் சம்பந்தமான பயன்களின் காரணமாக பல இழைகள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் கொண்டு வருகிறேன். இவை அனைத்தையும் மனதில் கொண்டு இந்த இழை –

“தஞ்சை யாழி வீரர்கள். ”

யாழி பலர் கண்களில் படாமலேயே போகும் சிற்பம். பல பிரதான இடங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் யாழிகள் இருந்தும் ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அவற்றை திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. அது போல இன்று தஞ்சை பெரிய கோயில் யாழி, விமானத்தை சுற்றி இரண்டு வரிசைகளாக வரும் இந்த யாழிகளின் அழகிய பவனி.

இன்று மேலே இருக்கும் யாழி வரிசையை பார்ப்போம்

இந்த வரிசைகளின் நடுவில் எனது உளம் கவர்ந்த அருள்மொழிவர்மர் அவர்களது கல்வெட்டுகள். பிரம்மாண்டமான தஞ்சை கோயிலின் முன் நிற்கும் போது பலருக்கு பல உணர்ச்சிகள் தோன்றும். பலரும் அதன் பெரிய அளவை கண்டு பிரமிப்பு , வியப்பு – ஆனால் எனக்கோ சொந்த மண்ணிற்கு திரும்பும் உணர்வே வரும்.

சரி சரி, யாழிக்கு வருவோம். மேலே இருக்கும் வரிசைகளை இன்று பார்ப்போம். ( நன்றி சதீஷ். பொருமையாக அருமையான படங்களை எடுத்து அனுப்பியதற்கு )

முதல் பார்வையில் ஒரே சீராகவும், ஒரே சிற்பம் போலவும் இருக்கும் இவை, மிக அழகு. உற்று பாருங்கள் , யாழிகள் , யாழி மேல் இருக்கும் வீரன், எல்லோருமே ஒரு வித உயிர் ஓவியமாகவே இருக்கின்றனர்.

அனைத்து சிற்பங்களும் ஒரே மாதிரி உள்ளனவா, ஒரே சிற்பத்தை மீண்டும் மீண்டும் செதுக்கி உள்ளனரா? இல்லையே !!


வாசகர்களுக்கு சிற்பங்களின் அளவை உணர்த்த சதீஷ் ஒரு தண்ணீர்க் குடுவை அருகே வைத்து படம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு யாழி வீரனும் வெவ்வேறு தோரணையில் இருப்பதை பாருங்கள்


இந்த யாழி வரிசையில் கோடியில் இருக்கும் சிற்பம் இன்னும் அருமை. ஒரு பெரும் யாழி, அதன் வாயில் இருந்து வெளியே வரும் வீரர்கள் …அப்பா , பிரமாதம். இதே போல சிற்பங்கள் பல ,சோழர் கோயில்களில் உள்ளன ( சதீஷ் மற்றும் சந்திரா – புரிகிறது , உங்கள் படங்கள் இருக்கின்றன , விரைவில் இடுகிறேன்




அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்

பூவை முகர்ந்ததற்கு கையை வெட்டு

நாயன்மார்களின் சரித்திரத்தைச் சித்தரிக்கும் பல தாராசுர சிற்பங்களை ஏற்கனவே நாம் ரசித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிற்பத்தை மிகவும் விரிவான விவரங்களுடன் இன்று காண்போம். மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கதை ஏதோ குரூர தோற்றமுடையதாகத் தெரியும், ஆனால் சற்றே கவனமாக அதன் பின்னனியைப் படித்தோமானால் தெளிவாகும். இதனை முழுமையாக புரிந்து கொள்ள எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட இரு வேறுபட்ட சம்பவங்களை காண்போம்.

முதல் சம்பவத்துடன் துவங்குவோம். முதலில் சிற்பம்

இதில் ஆடம்பரமான கிரீடம் அணிந்த அரசன் போன்ற ஒருவர், ஒரு பெண்ணின் முழங்கையோடு அவள் கையை வெட்ட முற்படுவதுபோல் கத்தியை உயர்த்தி பிடித்துள்ளார். குரூரமாகத் தோன்றும் இந்தக் காட்சியில், ஆணின் முகத்தில் புன்னகை தெரிகிறது, பெண்ணின் மூக்கோ சிதிலமடைந்துள்ளது. இதற்கு பின்னனி ஏதும் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்.

ஆம், இந்தக் கதை கழற்சிங்க நாயானாருடையதுதான்: பல்லவ வம்சத்தைச் சேர்ந்த இந்த நாயனார் மிகவும் சிவ பக்தியுடையவர். ஒருமுறை இவர் சிவாலயங்களை தரிசிக்க யாத்திரை சென்ற பொழுது திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தார் அவரது மனைவியும் அரசியுமான சங்கா (இவர் ராஷ்டிரகூட மன்னர் அமோக வர்ஷ நிருபதுங்கனின் மகள், சைன மதத்தில் பற்றுடையவர்கள் – ஆதாரம் பல்லவ வரலாறு). அவ்வாறு வலம்வரும் சமயம் பிரகாரத்தின் மூலையில் ஒரு மலர் விழுந்து கிடந்ததைப் பார்த்த இவர், அதனுடைய நறுமணத்தால் ஈர்க்கப் பட்டு அதனை எடுத்து முகர்ந்தார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.

பொழிப்புரை :
சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள வளங்களை எல்லாம் தனித் தனியே பார்த்து மகிழ்ந்தவள், தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் புதிய பூ ஒன்று விழுந்து கிடப் பதைக் கண்டு எடுத்து மோந்தாள்.

இதனைக் கண்ட செருத்துணை என்னும் தீவிர சிவபக்தர், ஆஹா இறைவனுக்காக படைக்கப் படவிருந்த மலரின் புனிதத்தை அதை முகர்ந்து கெடுத்துவிட்டாரே என்று கோபப்பட்டு அரசியின் மூக்கை துண்டித்துவிட்டார். (இந்த சம்பவத்தால் இவரும் நாயன்மார் வரிசையில் சேர்ந்துவிட்டார், இவரது சரித்திரத்தை காட்டும் சிற்பத்தை தனியானதொரு பதிவில் பார்க்கலாம்).

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

பொழிப்புரை :
புதிய மலரை மோந்த போதில், செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இம் மலரை மலர் மண்டபத் திருமுற்றத் தில் எடுத்து மோந்தனள் என்று எண்ணித், துணிந்து, தேன் பொருந் திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அவள் மூக்கைப் பிடித்து அரிந்தார்.

காயப்பட்ட அரசியின் ஓலத்தைக் கேட்ட கழற்சிங்கர் ஓடோடி வந்தார், அரசியின் நிலையைப் பார்த்து “இதனை யார் செய்தது” என்று கர்ஜித்தார். உடனே செருத்துணை முன்வந்து, தானே இந்த பங்கத்தை செய்தவர் எனச் சொல்லி மன்னிப்பு கோரினார். மன்னரோ அவரைத் தண்டிக்காமல் ஒருபடி மேல் சென்று, கை தானே முதலில் மலரை எடுத்தது அதனால் கை தான் முதலில் தவறு செய்தது என்று கூறி தன் வாளை எடுத்து அரசியின் கையை வெட்டி விட்டார்.

அரசி மன்னருக்கு மிகவும் பிடித்தமானவள், மிகவும் அழகானவள், அதிகாரமுடையவள் இருந்தும் மன்னருக்கு இறைவன் மீதான பக்திதான் பெரிதாக இருந்தது.

இந்த சிவலீலையை கண்ணுற்ற வானவர்கள் இவர்களின் பக்தியை மெச்சி மலர்மாரி தூவினர்.

இதோ இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல்;

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.

பொழிப்புரை :
தம் இடையில் கட்டியிருந்த உடைவாளை உருவி, அம் மணம் கமழும் மலரைத் தொட்டு, முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கத் தகுவது என்று கூறி, தம் அரசுரிமைப் பட்டம் பூண்டு, தம் அன்பையும் பூண்டு விளங்கும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப் போதே துண்டித்தார்.

இப்பொழுது மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஆண்டாள் சரித்திரத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

( செட்டிபுணியம் தேவ நாராயண பெருமாள் கோயில் – படம் நன்றி அசோக் )

ஆண்டாள் கண்ணனையே காதலனாக வரித்தாள். அந்தக் கண்ணனே மணாளனாகவும் வேண்டும் என்று விரதமிருந்தவள்.

பாவை விரதம் முதல் மன்மதனுக்கு வேண்டி நோன்பு இருப்பது வரை பல நோன்புகள் நோர்த்தவள். எல்லாமே கண்ணனின் கரம் பற்றவேண்டித்தான். இவள் விரதம் முடிப்பதற்கு எல்லாத் தேவதைகளையும் கூவி அழைத்தவள். (மன்மதனின் தம்பி முதற்கொண்டு வருணதேவன் சுமந்து செல்லும் மழைமேகங்கள் வரை அனைவருமே ஆண்டாளுக்குக் காதல் தூதுதான்.)

கண்ணனே தன் கணவன் என்பதை கனவிலும் நனவிலும் நன்குணர்ந்தவளாகையால், கண்ணனுக்கு செய்யப்படும் கைங்கரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அதில் ஒன்றுதான் கண்ணனுக்கு பூமாலை சரிபார்த்துச் சார்த்துதல்.

தந்தையாரான விஷ்ணுசித்தனார் (பெரியாழ்வார்) நாளும் தோட்டத்தில் தானே கொய்த மலர்களைக் கோர்த்து பரந்தாமனுக்காக சார்த்துவதற்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த மலர் மாலையைக் கூட ஆண்டாள் விடவில்லை. முதலில் தனக்கு சார்த்திக் கொள்வாள். கண்ணாடி பார்ப்பாள். ‘அழகோ அழகு.. கொள்ளை அழகு.. கண்ணனுக்கு சார்த்தவேண்டிய மாலைதான் இது’ என்று ஒப்புதல் (தனக்குத் தானே) கொடுத்துக் கொள்வாள்’. அடுத்தநாள் அதிகாலை அந்த மாலை கண்ணனின் தோள் மீது ஒய்யாரமாக அலங்கரிக்கப்படும்போதெல்லாம் அவள் உள்ளம் மகிழ்ச்சியில் பூரிக்கும்.
ஆனால் ஒருமுறை இந்தச் செயலை பெரியாழ்வார் கண்டுவிட்டார். ‘ஆகா.. மாதவனின் மலர் மாலை மானிடர் கழுத்தில் முதலில் போடப்பட்டு அதன் பின்னரே அவனுக்கு சார்த்தப்படுகிறதா.. இந்தக் குற்றத்தைத் தன் பெண்ணே செய்து விட்டாளே’ என்ற பெருங்குறையில் தவித்துவிடுகிறார்.

இரவில் கண்ணன் அவர் கனவில் வருகிறான் ‘கலங்கவேண்டாம்.. உங்கள் கோதை தான் சூடி எனக்குச் சூடும் மாலைதான் என் விருப்பம்’ என்று சொல்லித் தேற்றுகிறான். பெரியாழ்வாருக்கு ஆண்டாளின் தெய்வீகம் புரிகிறது.

அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

‘சூடிக் கொடுத்த சுடர்கொடியாளே’ என்று தன் மகளை கண்ணில் ஆனந்தநீர் மல்க அணைத்துக் கொள்கிறார்.

இறைவனுக்காண மலரை முகர்ந்த ஒருத்தருக்கு தண்டனையும், இறைவனுக்காண மாலையை தான் சூடிப் பார்த்து தந்த ஆண்டாளை வழிபடுவதற்குமான காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா. அரசி சங்கா மலரை முகர்ந்து பார்த்தது அதனுடய நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு, தன் மகிழ்ச்சிக்காக முகர்ந்தாள், தண்டனையை அனுபவித்தாள். ஆனால் ஆண்டாளோ இறைவனுக்கு மாலை சரியாக இருக்குமோ, அவன் மகிழ்ச்சியடைவானோ என்ற நோக்கில் மாலையை சூடித் தந்தாள், அதனால் வழிபாட்டுக்குரியவளானாள்.

மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?

சிற்பங்களுக்கென உருவாக்கப் பட்ட சிறப்பு வலைத்தளம் இது, மேலும் பல்லவ சிற்பங்களின் வசீகரத்தால் மயங்கிக் கிடக்கும் எனக்கு இந்த பதிவை உருவாக்குவது சற்றே சிரமமெனினும் நல்லதொரு பதிவை உங்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சியில் தொடர்கிறேன்.

ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்கிறது என்றால் நம் மனம் அதிலேயே லயித்து விடும், மீண்டும் மீண்டும் மனம் அதையே நாடிச் செல்லும். அது போல் பல்லவ சிற்பங்களில் மனதை செலுத்தி சிட்டுக் குருவியாய் சிறகடித்துக் கொண்டிருந்த என்னை, பல்லவர்களுக்கு முந்திய சிற்பங்களின் புகைப்படத்தை காட்டியும் தன் கேள்விக் கணைகளாலும் கட்டிப் போட்டுவிட்டார் தோழி கேத்தி. எனினும் நான் எனது மகேந்திர நாமத்தை விடவில்லை. அண்மையில் ஒரு தேடலில் – என்னுடைய மயக்கத்தால் சிற்பக்கலையின் ஈடு இல்லாத நாயகன் மகேந்திரபல்லவன்தான் என்றிருந்த நான் தகர்ந்து போனேன், டாக்டர். முகமது தாஜுதீன் கான் அவர்களின் ஆச்சர்யமூட்டும் உண்டவல்லி குடைவரைகளின் புகைப் படங்களை பார்த்தபொழுது தான் ….

(உண்டவல்லிக் குடைவரைகள் விஜயவாடாவிற்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவிலும், குண்டூரிலிருந்து வடமேற்கே 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரைகள் ஹைதராபாதிலிருந்து 220௦ கி.மீ. தொலைவில் உள்ளது. நன்றி விக்கி)

இந்தப் படங்களை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர் “விசித்திரசித்தன்” நாவலை எழுதிய திரு. திவாகர் அவர்கள்தான், அவரிடம் இதைப்பற்றி உரையாடிய போது இரண்டு ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று இந்த குடைவரைகளின் காலம் 4 முதல் 6 ஆம் நுற்றாண்டு (கி.பி.), இது விஷ்னுகுன்டின மன்னர்கள் காலத்தை சார்ந்தது. நிச்சயமாய் இது மகேந்திரவர்மரின் முதல் குடைவரையான மண்டகப்பட்டிற்கு முந்தியதுதான். இரண்டாவது ஆச்சர்யம், மகேந்திரவர்மர் தன்னுடைய வாழ்நாளின் முற்பகுதியை இங்கே செலவிட்டு இருக்கவேண்டுமென்பது. மேலும் சிம்ம விஷ்ணுவின் மனைவிகளில் ஒருவர் விஷ்னுகுண்டின் வம்சத்தை சார்ந்தவர் என்றும் தெரியவந்தது.

மற்ற விஷயங்களைப பற்றி அலசி ஆராய்வதற்கு முன், இரண்டு சிற்பக் கலைகளையும் சற்று பொருத்திப் பார்த்திடுவோம். உங்களுக்கு அதிக சிரமமில்லாமல் ஒரே ஒரு துவார பாலகரையும் ஒரே ஒரு தூணையும் மட்டும் முதலில் பார்க்கலாம்.


தூணின் வடிவமைப்பு, அதில் உள்ள வரிகள், நேர்த்தி, சிம்மத்தின் வடிவமைப்பு ஆகியவற்றோடு துவார பாலகரின் தோற்றம், நிற்கும் அழகு, கதை ஆயுதம், உடை , அணிகலன் , இடுப்பு வளைவுகள், இடுப்பின் மேல கையை ஊன்றி வைத்திருக்கும் முறை ஆகியவற்றையும் கவனிக்கவும்.

என்ன பார்த்தாயிற்றா, ஒருவேளை மகேந்திரவர்மரால்தான் இவைகள் செதுக்கப்பட்டனவோ என்ற எண்ணம் எழுகிறதல்லவா! ஆனால் என்ன செய்வது இவற்றின் காலம் குறைந்தது ஐம்பது முதல் நூறு ஆண்டுகள் நம் விசித்திரசித்தருக்கு முற்பட்டதாயிற்றே.

இதுவரை மகேந்திரவர்மர்தான் குடைவரை சிற்பங்களின் முன்னோடி என்றல்லவா நினைத்திருந்தோம், இதோ திரு. நாகசாமி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளதையும் பார்த்துவிடுவோம். ( மண்டகப்பட்டு புகழ் பெற்ற மகேந்திர கல்வெட்டு )

http://www.tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

கல்வெட்டினை படித்துப்பார்க்கலாம் ” விசித்திரசித்தனால் நிர்மாணிக்கப் பட்ட இந்த ஆலயம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்க்கு அர்ப்பணிக்கப்பட்டது, இதில் செங்கலோ, கலவையோ, மரமோ, உலோகமோ உபயோகப்படுத்தப்படவில்லை. இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலாக வெட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்படவில்லை, இதற்குப்பின் வந்த கல்வெட்டுகளிலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. பட்டப்பெயர் வைத்துக்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் , அப்படியெனில் அவர் தனக்கு “அத்யகுகயதநகாரி” அதாவது முதல் குடைவரையை வெட்டியவர் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம், ஆனால் இதுவரை அவ்வாறு ஒரு பட்டப் பெயரை நாம் எங்கும் பார்க்கவில்லை.
மகேந்திரரால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு பண்டைய ஆவணங்களிலும், அதாவது கல்வெட்டுகளிலோ அல்லது செப்பு பட்டயங்களிலோ, அவர்தான் முதலில் குடைவரைகளை தோற்றுவித்தார் என்று குறிப்பிடப்படவில்லை.”

எது வேண்டுமானாகிலும் இருந்துவிட்டு போகட்டும், ஒன்று நிச்சயம் இந்த மண்டகப்பட்டு குடவரை தான் பல்லவர்களின் முதல் குடைவரை. ( சிலர் மண்டகப்பட்டு குடவரை மற்றும் தூண்களின் வேலைப்பாட்டையும் அதன் வாயிற் காப்போனின் வேலைபாட்டையும் வைத்து தூண்களை விட அவர்களின் வேலைப்பாடு முதிர்ந்த நிலை என்று சொல்வது உண்டு. ஒரு வேலை அவை பின்னர் வெட்டப் பட்டதாகவும் இருக்கலாம்)

அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பார்த்தால், மண்டகப்பட்டு குடைவரைக்கும் உண்டவல்லிக் குடைவரைக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும். தமிழகத்தில் குடைவரைகளுக்கும், சிற்பக் கலைக்கும், ஆலய கட்டுமானத்திற்குமான பொற்காலத்திற்கு வித்திட்ட மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?

மேலே கண்ட ஒற்றுமைகளை எதைச்சையாக இருக்கவேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால், மேலும் சில உண்டவல்லிக்கும் மகேந்திர குடைவரைகளில் உள்ள சிற்ப ஒற்றுமைகள் இதோ. தூணின் வடிவம், அலங்கார பூ வடிவம், கம்பீர சிங்கம் ….

இப்போது என்ன சொல்கிறீர்கள் ?

இதே போல் மற்றுமொரு மனதை கொள்ளை கொள்ளும் குடைவரை ” பைரவகொண்டா”, இதை விரைவில் மற்றுமொரு பதிவில் காண்போம்.

கம்போடியாவையும் பல்லவர்களையும் இணைக்கும் மகர தோரணம்

ஃபூனன் (கம்போடியா) பற்றிய ஒரு புத்தகத்தில் சுவையான ஒரு படத்தை பார்த்தேன். ஒரு சிற்பக் கரு உருவானது. இந்தச் சிற்பத்தைக் கண்டவுடன் ஏனோ சட்டென தாளவனூர் சிற்பம் நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி! இரண்டும் ஒன்றுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சிற்பங்கள் இதோ:


Mr. Andy Brouwer ( www.andybrouwer.co.uk/blog/) என்ற நண்பர் எடுத்தப் புகைப்படங்கள்,சம்போர் ப்ரெய் குக் – கம்போடியா – அவர் அனுமதி பெற்று அவருக்கு ஒரு சிறப்பு நன்றியுடன் இங்கே படைக்கப்படுகின்றன.மகர தோரணங்கள் என்றழைப்பர். சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ வாயில்தோரணங்களாகவும் அலங்காரத்துக்காகவும் செதுக்கியதாகத்தான் தோன்றும். ஆனால் அதை உற்று நோக்க ஏராளமான வித்தைகள் உள்ளே தெரியும்.

இரண்டு சிற்பங்களும் இருவேறு இடங்கள். ஒன்று நம் பல்லவதேசத்தில் உள்ள தாளவனூர். இன்னொன்று கம்போடியா நாடு.

கடல் கடந்த நீண்ட இடைவெளி உள்ள இந்த இருவேறு சிற்பங்களின் ஒற்றுமை நம்மை வியக்கவைக்கிறது. இது அலங்காரத்துக்காக மட்டுமே செதுக்கப்படவில்லை. தன் சிற்பத் திறமையை முழுதும் கொட்டி இவைகளை அந்தச் சிற்பி வடித்திருக்கிறான் என்ற வகையில் அந்த மகரதோரணத்தில் அப்படி என்ன விசேஷம் என்று ஆராய்ந்தோமானால் நிறைய விஷயங்கள் தெரியவரும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் கதையில் வரும் பாடலில் இந்த மகர தோரண முக்கியத்துவம் குறித்து விவரங்கள் கிடைக்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=1071&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.

(மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.)

குற்றம் இல்லாத தேவலோகத்தில் மகரதோரணம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அந்த சிற்பியின் கைவண்ணத்தைக் காண்கிறோம். ஒரு நகரத்தையோ அல்லது அரண்மனையோ அல்லது தொழப்படுகின்ற கோயில்களோ கல்லில் செதுக்கப்படவேண்டும் என்று வரும் பட்சத்தில் அது சிறப்பான தேவலோகத்துக்கு இணையாக சிற்பி கருதுகிறான். அங்கு மகரதோரண வாயில் என்பது இன்றியமையாத ஒன்று என்று சிற்பிக்குப் புலனாகிறது. மகரதோரணத்தில் இந்தப் புனிதம் கெடாதபடி சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது.

இப்படிப்பட்ட கடின வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் பிற்காலச் சோழர்கள் தங்கள் கோயில்களில் அருமையாய் பிணைத்தனர். தாராசுரம் கோயில் படி சுவரில் உள்ள இந்த மகரத்தை பாருங்கள்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஞான சரஸ்வதி சிற்பத்தில் மிக அருமையான இரு மகரங்களை பார்த்து மகிழுங்கள். நன்றி நண்பர் திரு மோகன்தாஸ் அவர்கள்.


மேலும் மகரங்களை பற்றி திரு உமாபதி ஸ்தபதியார் அவர்கள் இடத்தில கேட்ட பொது – சிலாகித்துப் போய் விளக்குகிறார். “ஆறு வெவ்வேறு விதமான சிற்பங்களை உள்ளடக்கி, அவைகளுக்குச் சுற்றி அலங்காரம் செய்வதைப் போல செடிகொடிகளையும் பக்கவாட்டுகளில்அழகோடு செதுக்கிக் காட்டவேண்டும். மிகக் கஷ்டமான சிற்பவேலை மட்டுமல்லாமல் கூரிய புத்தியோடு செயல்பட்டால் ஒழிய மகரதோரண சிற்பங்களை அவ்வளவு எளிதில் செதுக்கிவிடமுடியாது.!” அவர் மேலும் நமக்கு விளக்க அனுப்பிய படம் இதோ.

வேறெங்கெஙகு இத்தகைய மகரதோரணங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்று மற்ற இடங்களிலும் ஒருமுறை பார்க்கவேண்டும். ஆராயவேண்டும்.

சத்ருமல்லேஷ்வராலயம் – மஹேந்திர பல்லவரின் உன்னத படைப்பு

விழுப்புரம் செஞ்சி சாலை . மதியம் 11.30 இருக்கும்

ரகோத்தமன்: ஆஹா , நல்ல வெய்யில். என்ன சார் முப்பது கிலோமீட்டர் வந்து இருப்போமா?
சந்துரு சார்: இல்லை, அதற்க்கு முன்னரே வலதுபுறம் திரும்ப வேண்டும்.!
நாராயணசுவாமி சார்: அப்படியா, இப்போ எவளோ ஆச்சு?
டிரைவர்: இருபத்தி ஏழு!
சதீஷ்: அதோ ஆசி போர்டு – தளவானூர் பாதை.
விஜய்: அப்பாடி , வந்தாச்சு. அந்த மலையா?
சந்துரு சார்: இல்லை இல்லை, ஆறு கிலோமீட்டர் இன்னும் போகணும்!
வெங்கடேஷ்: ஓ, அப்போ இந்த மலைத் தொடர் இல்லை..
சந்துரு சார்: ரோட்டில் இருந்தே தெரியும், ஆனால் கிட்டே ஓட்டிச்செல்ல வழி இல்லை. ஒரு இருநூறு மீட்டர் நடக்கணும்.

வெங்கடேஷ்: அதோ அதோ, இங்கே இருந்தே தெரியுதே. என்ன அற்புதமான இடம் – மகேந்திரர் சாய்ஸ் சூப்பர்… வயல் வெளி நடுவில் ரம்மியமான சௌந்தர்யம் மிக்க சரௌண்டிங் !!

சந்துரு சார்: வண்டிய இங்கேயே நிறுத்து பா, இனிமே நடந்து தான் போகணும்.

ஊர்க்காரன்: என்னாங்க, ஏங்க -வயல்ல நடக்கறீங்க, வரப்புல நடங்க. வயல்ல வெத வெதச்சு இருக்கோம்!
விஜய்: சரி சரி , ஆஹா பம்ப்பு செட்டு ஓடுது. வெயில்லுகு ஒரு குளியல் போட்ட அற்புதமா இருக்கும் , வரும்போது பார்ப்போம்.

அசோக்: என்ன பெரிய பாறை!!.

வெங்கடேஷ்: சூப்பர் ஸ்பாட்
சந்துரு சார்: ஆமாம், இதுக்கு மேலே தான் சமணர் படுக்கை இருக்கு, அப்புறம் போவோம்.

விஜய் : என்ன சார், கிரில் கேட் எல்லாம் இருக்கே . பூட்டு வேற தொங்குது
சந்துரு சார்: ஆள் பக்கத்துலே தான் எங்கேயாவது இருப்பான்!!

ஊர்க்காரன்: சாமி, சாவி என்கிட்டே தான் இருக்கு. இதோ தொறந்து வுடறேன். இதை நான் தான் பார்த்துக்கொள்கிறேன் .. சம்பளம் ஒண்ணும் கிடையாது. சும்மா தான். பூட்டி வைக்கலைன்னா டவுன் கார பசங்க வந்து ….

விஜய்: புரியுது புரியுது!!

விஜய்: என்ன கொடுமை சார். அழகிய மஹேந்திர தூண்களில் இப்படி கேட் போட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு ப்ளூ பெயிண்ட் வேறு – பெயிண்ட் அடிச்சவன் அவசரத்துல எப்படி பண்ணி இருக்கான் பாருங்க.

அசோக்: விஜய் , மேலே பாருங்க அது என்ன

சதீஷ்: விஜய், அங்கே பாருங்க மகர தோரணம். அதற்கு மேலே ஒரு சிவகணம்.

விஜய்: அசோக், அதுதான் கபோதம் , அதனுள் இருப்பது கூடு , அதற்குள் வெவ்வேறு முகங்கள் – எல்லோரா குடைவரைகளில் இது போல பார்த்த நினைவு. அற்புத மகர தோரணம் சதீஷ். இதே போல கம்போடியாவில் எங்கோ பார்த்த நினைவு. தேடிப் பார்க்கணும்.

அசோக் : குடவரை காவலர்கள் அருமை. என்ன கம்பீரம் அவர்கள் நிற்க்கும் தோரணை சூப்பர்.

விஜய்:அமாம், இடது புறம் உள்ள காவலரை பாருங்கள். கையில் கதை, மண்டகபட்டு போலவே. உடை அலங்காரம் எல்லாம் அற்புதம். உள்ளே இருக்கும் கருவறை காவலர்களை பார்க்க வேண்டும்.

சதீஷ்: உள்ளே பாருங்க விஜய், அமைப்பு புதுசா இருக்கு
வெங்கடேஷ்: அதோ பாருங்க , பெரிய கிராக், விரிசல்..
ரகோத்தமன்: உள்ளே நுழைந்ததும் ஒரு ஹால் மாதிரி வெட்டி இருக்காங்க, உள்ளே சென்று இடது புறம் திரும்பினா தான் சன்னதி

விஜய்: ஆமாம் ரகு, அதோ பாருங்க உள்ளேயே இரு மஹேந்திர தூண்கள். இங்கே உள்ள காவலனை பாருங்கள், சற்றே திரும்பி நிற்பது போல நிற்கின்றான். அவனது உடை ஆபரங்களை பாருங்கள். அற்புதம் அற்புதம்.

ஊர்க்காரன்: சாமி , ஆரத்தி காட்டட்டுமா

எல்லோரும்: இதோ வந்துட்டோம் . அற்புத தரிசனம்.
விஜய்: சதீஷ், இந்த சாமிக்கு பேர் என்ன
சதீஷ்: புக்கில் பார்க்கிறேன். சத்ருமல்லேஷ்வராலயம்

விஜய்:கல்வெட்டு ஏதேனும் இருக்கா?
சந்துரு சார்: இருக்கே, இதோ பல்லவ கி்ரந்தம்

சதீஷ்: இதோ படிக்கிறேன்

குன்றின் மீது உள்ள சத்ருமல்லேஷ்வராலயம் எனும் இக்குடவரைக் கோயிலைத் தம் படைவலியால் அரசுகளை எளியவர்களாக்கிய நரேந்திரனான சத்ருமல்லன் உருவாக்கினான்

விஜய்: சத்ருமல்லன் – அருமையான பெயர் . அசோக் இங்க பாருங்க, இங்கேயும் தூண்ல டிசைன் போட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் தூணின் மேலே வெறுமனே இருக்கு .

வெங்கடேஷ்: வாங்க மேல போய்ப் பார்ப்போம்
நாராயணசுவாமி சார்: ரொம்ப செங்குத்தா இருக்கா?

விஜய்: பரவாயில்ல வாங்க சார், படி வெட்டி இருக்காங்க, அசோக் நீங்களும் வாங்க

வெங்கடேஷ்: ஆஹா, அற்புத லொகேஷன் . என்ன குளு குளுன்னு இருக்கு இந்த வெயில் காலத்திலும்!.இப்ப மத்தியானம்னு தெரியவே இல்லை
அசோக்: கட்டுச் சாத்து கூடை இங்கே கொண்டு வந்துஇருக்கணும்
வெங்கடேஷ்: இப்போ சொல்றீங்களே , ஆனா சம்மையா இருந்துருக்கும்.
விஜய்: இங்கே இருந்து பார்த்தா நம்ப வந்த வழி பூரா தெரியுது.

வெங்கடேஷ்: ஆமாம். வரவங்களுக்கு தெரியாது, இங்க இருக்கறவன் கண்ணுக்குத் தெரியும். மறைந்து வாழ்வதற்கு நல்ல ஃசேப்டி ஏரியா!!

…..அவங்க ஏன் மறைந்து வாழனும் ???

விஜய்: இந்த சமணர் படுக்கை நல்லாதான் இருக்கு. கண்ண அப்படியே இழுக்குது.

சந்துரு சார்: வாங்க வாங்க , கிளம்புவோம் . மெதுவா பாத்து இறங்கி வாங்க

அப்படியே அந்த பம்புசெட்டில் ஒரு குளியல் ……பசிக்குது

அடுத்து இலக்ஷிதாயதனம் – அது தான் மண்டகப்பட்டு

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

இன்று நாம் மூன்று சிற்பங்கள் பார்க்கப் போகிறோம். இரண்டு தாராசுரத்தில் இருந்து நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் அவர்கள் உபயம் ( தேடித்தந்த குவைத் சதீஷுக்கு நன்றி ) , மற்றும் ஒன்று கிருஷ்ணபுரம் நெல்லை – நண்பர் ஓவியர் திரு A. P ஸ்ரீதர் அவர்கள் கொடுத்து உதவிய அமரர் ஓவியர் சிற்பி அவர்களின் படைப்பும் – எல்லாம் ஒரே கதையை ஒட்டி

அப்படி என்ன கதை – மகாபாரத கதை, ஆனால் ஒரு கிளை கதை ( பல பேர் பல மாதிரி இந்த கதையை கூறுகின்றனர் – அதனால் சிற்பத்தை விளக்க எவ்வளவு தேவையோ அதை மட்டும் இங்கே இடுகிறேன் )

ஒரு சமயம் யுதிஷ்டிரருக்குப் புருஷமிருகத்தின் உதவி தேவைப்பட்டது. ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க ( அதனிடத்தில் பால் வேண்டுமாம் – அது எப்படி , சரி அதை விடுங்க)

பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் இவரிடமிருந்து உதவி (பாலைப்) பெற்று வரவேண்டும். சிறந்த சிவபக்தர் இந்த புருஷாமிருகம்.

மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்கிறார்.
பீமனும் செல்கின்றான். கண்ணன் அவனிடத்தில் 12 கற்கள் ( சில குறிப்புகளில் ருத்ராக்ஷம் அல்லது சிவலிங்கங்களைக் )கொடுக்கின்றார். பீமன் திகைக்கின்றான். இவை எதுக்கு எனக் கேட்க, உனக்குக் காட்டில் என்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு நீ உன் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு கல்லை கீழே போடு எனச் சொல்லி அனுப்புகின்றார். பீமனும் காட்டிற்குச் செல்லுகின்றான். காட்டின் உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று விடுகின்றான்.

அங்கே ஒரு வாக்கு வாதம் அல்லது ஒரு போட்டி நடைபெறுகிறது . சரி, தன் எல்லையை விட்டு ( காட்டின் எல்லை ) பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இறை.

பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அவனால் வெகு தூரம் செல்ல முடியவில்லை – அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டது. உடனே கண்ணன் கொடுத்த கல்லை கீழே போடுகிறான். அது ஒரு சிவலிங்கமாக மாறுகிறது ( சிவன் கோயிலாக மாறியது என்று சிலர் )

புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட்டார். பீமன் விடாமல் ஓடுகிறான் – பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகின்றார்.

இதோ சிற்பம் – தாராசுரம் புடைப்பு சிற்பம். பீமனை துரத்தும் புருஷாமிருகம்

சில மைல் தூரம் போனதும் மீண்டும் பீமன் வெகு அருகில் புருஷாமிருகம் வந்துவிட்டது , மீண்டும் இன்னொரு சிவலிங்கம். இப்படியே 12 கற்கள் (சிவலிங்கங்களையும்) பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியேவந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது – புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் வாதாடுகின்றான். தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை என்றும் தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் சொல்லுகின்றான்.

வாக்குவாதம் பலக்க, யுதிஷ்டிரர் வந்துவிடுகின்றார். அவரோட தீர்ப்பு, பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விடுகின்றார்.

இதோ இதுவம் தாராசுரம் சிற்பத்தில் – ஒரு புறம் வாதி ப்ரிதிவாதி இருவரும்,மறுபுறம் வழக்கை கேட்கும் தர்மர் ( அவரை அடுத்து பணிப்பெண் ?)

இந்த கதையை தூண் சிற்பத்தில் க்ரிஷ்ணபுரத்தில் பாருங்கள். இருவரும் சிறு கதை கொண்டு ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள தயார் ஆகும் காட்சி

இதே தூணை வரைந்த அற்புத ஓவியர் அமரர் சிற்பி அவர்களின் ஓவியம் இதோ.

+++++++++++
கண்டிப்பாக திரு ராஜா தீட்சிதர் அவர்களது தளத்தை சென்று பாருங்கள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை நம்பமுடியவில்லை http://www.sphinxofindia.rajadeekshithar.com/