விழிஞ்சம் குடவரை – மல்லையுடன் தொடர்பு உண்டா ?

சென்ற மடலை பார்த்தவுடன் நண்பர் சீனு விழிஞ்சம் குடவரை திரிபுரான்தாக வடிவம் அப்படியே மல்லை தவம் ஈசனை போல உள்ளது என்று கூறினார். அபாரமான திறன் அவருக்கு. ஆம், நீங்களே பாருங்கள் – முக அமைப்பு, காதணிகள் – என்ன ஒரு ஒற்றுமை.
2855284928522857
28642862


அது மட்டும் அல்ல, சென்ற மடலில் இணைத்திருந்த தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்தேன். கல்லில் கூரான பொருளை வைத்து கீறியது போல உள்ளது. இதே போல மல்லையில் பார்த்த நினைவு – ஆம்,மல்லை கோவர்தன சிற்பம் – வலது புறம் சற்று மேல் இருக்கும் அமர்திருக்கும் காளையின் பின்னால் – சிற்பி குடவரை சுவரை குடையவும் – சமமாக அமைக்கவும் இவ்வாறு செய்தனர். இரு இடங்களிலும் உள்ள ஒற்றுமை இதோ.
284228462860
இதனால் நமக்கு தெரிவது என்ன ?

விழிஞ்சம் குடவரை கோவில் – ஒரு புதிர்

நண்பர்களுடன் நேற்று முழு தினத்தையும் கழித்தேன். அப்போது கேரளா நண்பர் ஒருவரிடத்தில் இந்த தளத்தை கட்டிக்கொண்டு இருக்கையில், அவர் பல்லவ குடைவரைகள் போலவே திருவனந்தபுரத்திற்கு அருகில் விழிஞ்சம் குடவரை பற்றி ஒரு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சற்று தேடினேன். படங்கள் சிக்கின, எனினும் ஒரு புதிரும் வந்தது.

இந்த குடவரை பற்றி விளக்கும் ஒரு சில இணைய தளங்களும் இது ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு அமைப்பு என்று கூறுகின்றனர். எனினும் சிற்பங்களை பார்த்தல் பல்லவ பாணி மிகுதியாக உள்ளது. எனக்கு தெரிந்த மட்டில் பல்லவ அரசன் ராஜ சிம்மன் கட்டுமானக் கோவில்களை நிறுவ ஆரம்பித்தவுடன் தமிழகத்தில் குடைவரைகள் நின்று விட்டன என்று நினைத்தேன். வாசகர்களுக்கு மேலும் விவரம் தெரிந்தால் பகிருங்கள்.

இப்போதைக்கு படங்களை இணைக்கிறேன். அருமையான பாறை ( மல்லை புலி குகை நினைவுக்கு வருகிறது ) – உள் இருப்பவர் வினதாரி தக்ஷினாமுர்த்தி.


ஆனால் பல்லவ, பாண்டிய குடைவரைகள் போல வெளியே த்வாரபாலகர்கள் இல்லை – ஒரு பக்கம் வில்லுடன் ஈசன் – திரிபுராந்தகன் ? மறு பக்கம் உமையுடன் ஈசன் ( மிகவும் சிதைந்த நிலை )

குகையின் இந்த அருமையான படக்காட்சியையும் பாருங்கள்

குகையின் விளக்க படம்

படங்களுக்கு நன்றி : திரு . ஹரி
http://picasaweb.google.com/vihar7/TemplesOfVizhinjam#5225771479151879650

பிருங்கி முனிவர் வரலாறு

புலி கால் முனிவர் பற்றி கூறும் பொது இந்த மூன்று கால் முனிவரும் நினைவிற்கு வந்தார்.

பிருங்கி முனிவர் – மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். ( அதனால் சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார், சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட)

ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் சென்ற முனிவர், தம்பதி சமேதராய் இருந்த சிவனையும் பார்வதியையும் கண்டு திகைத்தார். சிவனை மட்டுமே அன்றுவரை வணங்கி வந்த முனிவர் ,சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என எண்ணித் தம்மை ஒரு வண்டாக உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் திரும்பும் அவரை கண்டு கடுஞ்சினம் கொண்டாள் சக்தி. தன்னை வணங்காத முனிவருக்கு தன் சக்தி மட்டும் எதற்கு என்று எண்ணி தன் சக்தியை எடுத்துக்கொண்டால்.

தமது சக்தியைத் இழந்த முனிவர், வெறும் எலும்புக் கூடாய் மாறி நிலையாக நிற்க கூட முடியாமல் குடை சாய்ந்தார் – அவ்வாறு கீழே விழப் போன அவரை, சிவன் தனதுகோலைக் கைப்பிடியாய்த் தந்து காப்பாற்றினார்.

( இது மீண்டும் நடை பெறக்கூடாது என்று தானோ என்னமோ அப்பனின் ஒரு பாதியை வாங்கிக்கொண்டாளோ – சிலர் இந்த கதை வேறு விதமாக சொல்வார்கள் – முனிவர் வருவதை கண்டு அவரது நோக்கத்தை அறிந்த சக்தி ஈசனிடம் மிக அருகில் அமர – முனிவர் அப்போதும் அப்பனை மட்டும் சுத்தி வந்தார் – உடனே உமை ஈசனின் ஒரு பாதியை எடுத்து அம்மை அப்பன் என்று அர்த்த நாரியாய் மாற – அவர் வண்டாக மாறி ஈசன் இருக்கும் பக்கம் மட்டும் குடைந்து சுற்றி வந்ததாக கூறுவர் )

அதன் பிறகு ….அது வேறு கதை . இப்போது சிற்பத்தை பார்போம். இவரது சிற்பத்தை எங்கெல்லாமோ தேடினின் – கடைசியில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் வெளி மண்டப தூணில் நமக்காகவே மூன்று கால்களுடன் காட்சி தந்தார் – மிக அரிய சிலை. எலும்பு உருவம் அவ்வளவு சரியாக சித்தரிக்க படவில்லை –



எலும்பு உருவத்தையும் மூன்று கால்களையும் பார்க்க மற்ற இடங்களில் உள்ள படங்களை இணைக்கிறேன்.
2808281028122814
படங்களுக்கு நன்றி – அர்ச்சனா ரகுராம்
Temple Dairies – Part 1
மற்றும்
*http://www.kamat.com/kalranga/mythology/7667.htm*
South Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar

சிவாஜி படத்தின் பாட்டில் பல்லவ சிற்பத்தின் சாயல் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம் வெளி வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்று விட்டது

http://www.youtube.com/watch?v=xjVm1sYuESc

எனினும் அந்த படத்தின் துவக்க பாட்டில் ஒரு விஷயத்தை நான் பார்த்தேன். ( மீண்டும் நான் எங்கும் செல்லவில்லை – இன்னும் சிற்பத்தில் தான் உள்ளேன் ) இதை அப்படியே விட்டு சிற்பத்திற்கு செல்வோம்.

சரி நாம் மல்லை சென்று பல வாரங்கள் ஆகிவிட்டன. இதோ இன்று சென்றுவிடுவோம், ஒரு மிக விநூதமான சிற்பம். அனைவரின் கண் முன்னரே இருந்தும் பலரும் கவனிக்காமல் செல்லும் சிற்பம். ஆம், உலகிலேயே மிக பெரிய மல்லை தவம் சிற்பம். ( சரி, வாடிக்கையாளர்கள் பலரும் நாம் தான் ஏற்கனவே பலமுறை அந்த தவத்தை பார்த்துவிட்டோமே – என்று சொல்வது கேட்கிறது ) எனினும் – இந்த இடுகையை படித்து பார்த்து முடித்த பின் இத்தனை முறை அங்கு சென்றும் இதை நாம் எப்படி விட்டோம் என்று சொல்வீர்கள், பின்னர் முதலில் சிவாஜி படத்தை இதனுள் கொண்டு வந்ததற்கும் விடை கிடைக்கும். .

சரி, படங்களை பாருங்கள் – தொலைவில் இருந்து மெல்ல நகிர்ந்து நாம் அருகே செல்கிறோம். முக்கிய நபர்கள் – இருவர். இல்லை , அவர்களுக்கு நடுவில் இருக்கும் ….யார் அது






குட்டி பூத கணம் – அதன் வயிற்றில் சிங்க முகம். அற்புத வேலை பாடு.இப்போது பாட்டை இங்கே கொண்டு வந்ததன் அர்த்தம் புரிந்ததா.

27942797

இதை சிற்பி என் செதுக்கினான். பல்லவ சிற்பியின் விளையாட்டு தனமா இது ? இல்லை வேறெங்கும் இது போல சிங்க தொப்பை கொண்ட பூத கணம் உண்டா? ஆம் உண்டு, நம் அமெரிக்க தோழி காதி அவர்கள் உதவியால் – ஆனால் அது அடுத்த இடுகையில்.

மீண்டும் ஒரு முறை வினோத தொப்பையை ரசியுங்கள்.
2780278527822788

இத்தனை முறை மல்லை சென்றும் இதை எப்படி பார்க்கவில்லை என்று தினருங்கள், அடுத்த முறை எங்கு சென்றாலும் உர்த்வ முகம் என்று அழைக்கப்படும் இந்த வினோத பூத கனத்தை தேடுங்கள்.

புலிக்காலர், ஒரு அருமையான சிற்பம் – மதவிளாகம்

கடந்த மூன்று ஆண்டுகளாக் நான் பல சிறந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினை இணையம் வழிவகுத்தது . அவர்களுள் அன்பர்கள் பலரும் தந்த ஊக்குவிப்பாலும், உதவிகளாலும் மட்டுமே என்னால் இந்த தளத்தை நிறுவலாம் என்ற எண்ணம் எழுந்தது.

அவர்களுள் நான் சந்தித்த ஆர்வலர் – திரு சந்திரா அவர்கள். எப்போதும் காலில் சக்கரம் இயற்கையாகவே இருப்பது போல சுறுசுறுப்பாகச் சுற்றி தென்னகம் முழுவதும் உள்ள சிதைந்த கோவில்களை பட்டியல் இட்டு அவற்றை எவ்வாறு செவ்வனே சீரமைக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்- அதனுடன் மட்டும் நில்லாமல் – அந்த பணிகளில் தன்னை ஆழ்த்திக்கொண்டிருக்கும் இவர், இன்று நமக்கு ஒரு அற்புத சிற்பத்தைத் தந்துள்ளார்.

முன்பு நாம் தஞ்சை பெரிய கோவில் தூணில் இருக்கும் புலிக்கால் முனிவர் சிற்பம் மற்றும் அவரது கதையை பார்த்தோம். இன்று மீண்டும் அவர் தான் – எனினும் இந்த சிற்பத்தை பாருங்கள் – வயலூரை அடுத்த ஒரு சிறிய ஊரில் உள்ள மதவிளாகம் கோவில் சிற்பம்.

சிற்பியின் அற்புத சிந்தனை வியக்கவைக்கிறது- புலிக்காலை வைத்துக்கொண்டு யோக நித்திரையில் இருக்கும் ஒரு முனிவரை அற்புதமாக சித்தரித்துள்ளான் சிற்பி – முனிவர் என்பதால் ஜடா முடி, கொண்டை, ருத்ராக்ஷம் , கைகளின் யோக முத்திரைகள் – ஆனால், சிற்பத்தின் சிறப்பு – வெறும் புலி காலை மட்டும் காட்டாமல் அமர்ந்திருக்கும் ஒரு புலியின் பாவனையை கல்லில் செதுக்கிஇருக்கும் அவன் திறமை – அருமை.
27502754
மதவிளாகம் கோவில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மேல் சுவர் சரியாக செப்பனிடாததால் மழை நீர் உள்ளே வருகிறது. கொடிமரத்தின் தகடுகள் அனைத்தும் இழந்து மொட்டையாக அதி மரம் மட்டும் தான் உள்ளது.

ஒரு அற்புத சிற்பத்தை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி சந்திரா !!

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் -பேலூர் யானை – திரு பிரசாத் அவர்களது ஓவியம்

இன்று நமது நண்பர் பிரசாத் மீண்டும் ஒரு அற்புத ஓவியத்தை தந்துள்ளார் . பேலூர் யானை , அதன் அருமையான சிற்பத்தை அப்படியே ஒரு புகை படத்தை வைத்துக்க் கொண்டு மட்டும் ஓவியத்தை தீட்டி இருக்கும் திறமை அபாரம் – பிரசாத் ( அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார் ). அவரது மற்ற படைப்புகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பிரசாதின் ஓவியங்கள்

அருமையான ஓவியம் – அவர் பார்த்து வரைந்த புகைப்படத்தையும் பாருங்கள். அருமை
27422745

இன்னொரு புகைப்படம் இந்த இடுகையின் காரணம். எனக்கு பத்திரிகைகளில் சிறு வயதில் பிடித்து ஆறு வித்தியாசங்கள் ( அதை மட்டுமே வாசிக்க தெரியும் அப்போது / இப்போது !!)

இந்த சிற்பத்தை பார்த்தவுடன் பிரசாத் தீட்டி உள்ள ஓவியமும் இதுவும் ஒரே சிற்பங்களா என்ற ஐயம் வந்தது. பிறகு அவர் தனது படத்தை அனுப்பி வைத்தார். ஐயம் தீர்ந்தது.

சரி நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து சொல்லுங்கள் – இரண்டும் ஒரே சிற்பமா ? இல்லையேல் ஆறு வித்யாசங்கள் உள்ளனவா ?

274227452739

அருமையான யானை சிற்பம், சிற்பி உங்கள் படைப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் பிரசாத். தொடருங்கள் உங்கள் அருமையான பணியை.

இன்றைய கதாநாயகன் காட்டும் உடல் கட்டு – பல்லவ கால சிற்பம்

பல காலமாக தமிழ் படங்களில் தொப்பையை இறுக கட்டி, அதன் மேல் சட்டை அதற்க்கு மேல் கோட் அணிந்து , சொட்டை தலையை மறைக்க விக் அணிந்து, முகத்திற்கு வெள்ளை அடித்து …அப்ப்பா, பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வயதில் தனது பெண் வயது நடிகைகளுடன் மரங்களை சுற்றியும் வயிற்றில் பம்பரம் விட்டும் நம்மை அருவருப்பில் ஆழ்த்தி வந்த கோடம்பாக்கம் , மும்பை மற்றும் அமெரிக்க படங்களை பார்த்து கடைசியில் கொஞ்சம் திருந்தி தங்கள் இடையை கட்டுப்பாட்டில் ( சில நடிகைகளும் கூட ) கொண்டு வந்துள்ளனர். மிக நல்ல விஷயம் .

ஆனால் இவர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மல்லை மகிஷா சுரமர்தினி மண்டபத்தில் ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர் வடித்த சிற்பத்தில் வரும் ஒரு வீரப்பெண் காட்டும் உதாரணம் ஏனோ முன்னரே எடுபடவில்லை.

புரியவில்லையா,படங்களை பாருங்கள். பல கோணங்களில் இடுகிறேன். தேவியை பார்காதீர்கள்.
2729270527082714271627312720
சரி சற்று அருகில் செல்வோம். இப்போது தெரிகிறதே. இடுகையின் அர்த்தம் புரிகிறதா ??

அப்பப்பா – என்ன ஒரு கட்டுடல், கையில் பெரிய கத்தி, மகிஷன் காலை வெட்டும் அந்த அற்புத சுந்தரியின் கட்டுடல் கண்ணை பறிக்கிறது. கச்சை கட்டி அவளது முறுக்கேறிய உடலை அழகே வடித்த சிற்பி வாழ்க.

இன்னும் உடற் பயிற்சி செய்யாமல் கணினி முன்னரும் தொலைக்காட்சி பெட்டி முன்னரும் அமைந்திருக்கும் என்னை போல் குண்டர்கள் முதலில் எழுந்து ஓடுங்கள். இடையை குறையுங்கள். சுவரை வைத்து தானே சித்திரம் ( சிற்பம்) எழுத ( செதுக்க ) முடியும்

வாரணம் ஆயிரம் – படமல்ல சிற்பம், ஹலபேடு

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தோம். என்னடா சிற்பத்தை பற்றி பேசும் இவன் திடீரென திரைப்படம் பற்றி பேசுகிறானே என்று அஞ்சாதீர். நான் கட்சி மாறவில்லை.

இயக்குநர் கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” என்று பெயர் வைத்ததுமே பலருக்கு அதன் விளக்கம் தேவை பட்டது. குறிப்பாக,வாரணம் என்றால் என்னவென்று தெரியாமல் பலரும் திகைத்தனர். பிறகு பல இணைய தேடல்களில் , விடைகிடைத்தது– – ‘வாரணம்’ என்றால் யானை. அதுவும் வாரணம் ஆயிரம் என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் வருகிறது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருவதை அறிந்த ஊர் மக்கள் பொற்குடங்களில் நீர் நிரப்பி ஊரெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்பதாக தான் கனவு கண்டதாக தன் தோழியிடத்தே கூறுகிறாள் ஆண்டாள்.

படத்தின் நிறைவில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் கோதையின் வர்ணனைக்கு இணங்க இருப்பான் என்று முடியும்.

ஆனால் எனக்கு ஆயிரம் யானை என்றவுடன் நினைவிற்கு வந்தது பீமனே. ஆயிரம்யானை பலம் கொண்ட பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு, வெல்ல முடியாத பெரும் பல வீரர்களை பாரதத்தில் வென்று குவிப்பான். வாயுபுத்திரன் என்றாலும் அவனுக்கு இந்த பலம் எப்படி வந்தது …அதற்கும் ஒரு கதை உண்டு.

ஒரு நாள் பீமனும் திரெளபதியும் தனிமையில் இருக்கையில், காற்றிலே மிக இனிமையான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரெளபதி அந்த மலரை விரும்பினாள்.அதைத் தேடிப் பீமன் சென்றான் – அடர்ந்த காட்டின் ஆழத்தில் மணம் அவனை எடுத்து சென்றது. அங்கே ஒரு குரங்கு வழியை அடைத்து அலட்சியமாக படுத்திருப்பதை கண்டு அதை விரட்ட குரல் கொடுத்தான் பீமன்

ஆனால் குரங்கோ இன்னும் அலட்சியமாக உன்னால் முடிந்தால் என் வாலை நகற்றி விட்டுச் செல்லேன் என்றது. அதன் அகம்பாவம் கண்டு எரிச்சல் அடைந்த பீமன் கீழே குனிந்து அதன் வாலை பிடித்து சுழற்றி எறிய முயன்றான் . ஆனால் என்ன விந்தை – அவனால் அசைக்கவே முடியவில்லை. பலம் அனைத்தையும் கொண்டு முயன்றும் அந்த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகரவில்லை. அது சாதாரண குரங்கில்லை என்று அறிந்த பீமன் தன் ஆணவத்தை நினைத்து மனம் வருந்தி -அதனிடம் பணிவுடன் தாங்கள் யார் என்று வினவினான். அப்போது அந்த குரங்கு அனுமனாக உரு மாறி, வாயு புத்திரனாக – காட்சி அளித்து அணைத்துக்கொண்டான் பீமனை . அவருடைய தமயனை ( அப்போது பீமனுக்கு தன் உடலில் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்தது ) – எதிரிகளை சிதற அடிக்கும் வலிமையை தந்தது அந்த அணைப்பு, அதை விட பீமனது ஆணவத்தையும் அடக்கி அருள் புரிந்தான் அனுமன்.

சரி இப்போது சிற்பம். ஹலபேடு கோவில் சிற்பம். ( படத்தை நன்றாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள் )

நடுவில் இருப்பது பீமன் – எதிரில் வரும் யானையை எதிர்கொண்டு அதன் துதிக்கையை பிடித்து தன் கதையால் அடிக்கிறான். பின்னால் இரு எதிர் வீரர்கள் – கத்தி கேடயம் வைத்துக்கொண்டு நிற்கின்றனர். யானையையே அடித்து நொறுக்கும் பீமனை கண்டு நிற்கலாமா ஓடிவிடலாமா என்று யோசனை போல ?
26962693
சிற்பத்தின் மிக அருமையான பகுதி – அடுத்து பீமன் கொன்று குவித்தயானை மற்றும் யானை பாகர்களின் சடலங்களை – மலை போல குவிந்ததுஇருப்பதை காட்டி இருக்கும் வண்ணம் அருமை.
26982700

உத்திரமேரூர் சுந்தர வரத கோவில் சிற்பம்

சில மாதங்களாகவே இந்த சிற்பத்தை பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. எனினும் அதன் பின் இருக்கும் கதை விளங்காததால் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கடைசியில் உங்களிடமே அதை விடுகிறேன். முயன்று பாருங்கள் – விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

உத்திரமேரூர் சுந்தர வரத பெருமாள் கோவில்.வெளி ப்ரஹாரம்… மூன்று சிற்பங்கள் ஒவ்வொன்றாக பார்போம்.

முதலில் சற்று தொலைவில் இருந்து சிற்பத்தை பாருங்கள்.

அருமையான பிருகு முனிவர் சிலை . ( நான் முதலில் தவறாக எழுதிவிட்டேன் )


ஆனால் இன்று நாம் பார்க்க வேண்டியது சிலையின் மேல் உள்ள மிகவும் அருமையான சிறு சிற்பம் ( நாம் எப்போதும் முக்கிய சிலைகளை பற்றி பேசுவது இல்லையே !!)

தொலைவில் இருந்து பார்க்கையிலேயே சற்று வினோதமாக இருந்தது, படங்களை
பாருங்கள்.

மூன்று தபசிகள் – ஒவ்வொருவரும் ஒரு கோலத்தில்… வலது புறம் இருப்பவர் – ஒரு சிங்கத்தின் மேலே ( ஆஹா , என்ன ஒரு அருமையான சிங்கம்.)- ஒரு கால் மீது மற்றொரு காலை மடித்து தபஸ் செய்கிறார்
26832685
இடது புறம் இருப்பவர் கால் மாறி மடித்து உள்ளார்.

நடுவில் அமர்ந்து இருக்கும் தபாசியின் தவ கோலம் – மிக அருமை. அரியணையின் மேல் மிக அழகாக ஒரு காலை இன்னொரு காலின் மேல் சப்பலாங்கால் போட்டு அமர்ந்துள்ளார் (அரியணையின் ஒரு கால் சிங்க முக யாளி , மற்ற கால் யானை முகம் கொண்ட யாளி ),மேல குடை, இருபுறமும் வெண் சாமரம்.

மூன்று பாம்புகள் வேறு உள்ளன.

இது என்ன கதை என்று இதுவரை தெரியவில்லை, எனினும் நுண்ணிய வேலைப்பாடு, மிக அழகிய சிற்பங்கள் ….அபாரம்.

காண்டவ ஆரண்ய தகனம் – ஒரு அபூர்வ சிற்பம் ,கம்போடியா

கம்போடியாவின் ‘படேய் ஸ்ரி’ யில் ஒரு அற்புதமான சித்திரம். இந்தக் கலைச் சித்திரத்தின் பின்னணி முதலில் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கலைப் படைப்பின் ஆழம் என்னை மூழ்கடித்துவிட்டதால் எங்கெங்கோ தேடியதில் ‘மகாபாரதத்தில்’ அதன் கதை கிடைத்தது. அற்புதமான கதை.. அதை நம் கண்முன்னே கொண்டுவந்த அற்புத சிற்பிகள்:

காண்டவ ஆரண்ய தகனம்தான் அந்தக்கதை. இன்றைய மத்தியப் பிரதேசத்திலிருந்து டில்லி வரை பரந்த காடுகளைக் கொண்ட பகுதிக்கு காண்டவப்பிரஸ்தம் என்று பெயர் அப்போது நிலவிவந்தது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் தலைநகரகமாக இந்திரப்பி்ரஸ்தத்தை உரு்வாக்கும் முயலும் தருணம். எங்கே உருவாக்குவது என்று கண்ணனை ஆலோசனை கேட்கிறான் அருச்சுனன். அந்தச் சமயத்தில் ஒரு அந்தணன் தானம் கேட்டு அவர்களிடம் வருகிறான். என்ன வேண்டும்.. கேளுங்கள்.. என்று அருச்சுனன் அந்த அந்தணனை வினவும்போது அந்த அந்தணன் கேட்கும் தானம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘இதோ இந்த ஆரண்யத்தையே எரித்து அந்த பெருந்தீயினைத் தானமாக தந்தருள்க’ என்று கேட்கும் அந்தணன் அருச்சுனனுக்கு விசித்திரமாகப் பட்டாலும் காக்கும் தெய்வமாம் கண்ணனுக்கு அந்தணன் வடிவில் வந்தது யார் என்று தெரிந்து விட்டது. ‘சாட்சாத் அக்னி பகவானே’ அந்தணனாக வந்ததும் புரிந்தது.

அக்கினியே வந்து ஆகாரமாக அக்கினியை ஏன் கேட்கவேண்டும் என்று அருச்சுனன் வினவுகிறான். அப்படி நெருப்பு வேண்டுமென்றால் அந்த தேவதையே உருவாக்கிக் கொள்ளலாமே என்றும் கேட்கிறான். அதற்கு அக்கினிதேவன் தன் இயலாமையும் தான் வந்த காரணத்தையும் விளக்குகிறார்.

ஒரு சமயம் சுவேதகி என்னும் பேரரசன் தன் பேராற்றலை நிரூபிக்க தான் நீண்டகாலம் யாகபூசை செய்யவேண்டுமென அந்தணர்களை அழைக்கிறான். யாகம்தானே என்று அங்குள்ள அந்தணர்களும் ஒப்புக்கொண்டாலும் அது நீண்ட நெடிய வருடங்களாய் நீண்டுகொண்டே போவதில் அச்சப்படுகின்றனர். ‘இத்தனை காலம் யாம் இங்கு இந்த யாகத் தீயின் அமர்ந்து யக்ஞம் செய்ததே போதும் – எம்மை ஆளை விடு’ என்று கூறி எழுந்துவிடுகின்றனர். ஆனால் சுவேதகி கோபப்படுகின்றான். எப்படியும் செய்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க, அந்தணர்கள் அவனை சிவனை அழைத்துத் துணை கொள்ளுமாறு உபதேசம் செய்கின்றனர் (அவனால் முடியாதென்று தெரிந்தே). ஆனால் அதை நம்பிய சுவேதகி முதலில் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்கின்றான். சிவனும் அவன் முன் தோன்றுகிறார். அவனை சுயமாகவே முதலில் 12 வருடத்திற்கு நெய்யூற்றி இடைவிடாது யக்ஞம் செய்து வந்த பிறகு தன்னைப் பார்க்க ஆணையிடுகிறார்.

சுவேதகியும் சுயமாகவே 12 ஆண்டுகள் இடைவிடாது நெய்யூற்றி யாகம் செய்து வெற்றிகரமாக முடித்து சிவனிடம் சென்று தன் பழைய யாகத்தையும் முடித்துத் தர வேண்டுகிறான். அவன் விருப்பப்படியே சிவபெருமானும் சிறந்த துர்வாசமுனியையே துணையாக அனுப்பி வைக்க, அவன் தடைப்பட்டுப்போன பழைய யாகம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சரி போகட்டும். ஆனால் இனிமேல்தான் வினையே..

அந்த 12 வருடங்களில் இடைவிடாமல் ஊற்றப்பட்ட நெய்யானது அக்கினிதேவனின் உடலில் ஊதிப் போய் அவனை மிகக் கோரமான நிலையில் வைத்துவிட்டது. உடம்பில் மிக அதிகமான நெய் போகவேண்டுமானால் எங்காவது மிகப்பெரிய இடத்தில் தீயை வரவழைத்து அந்தப் பெருந்தீயில் கூடுதல் நெய் சுட்டெரிக்கப்படவேண்டிய கட்டாயம் அக்கினிதேவனுக்கு உருவாகிவிட்டது. மறுபடியும் சிவன் உதவிக்கு வந்தார். ‘காண்டவ ஆரண்யம் தற்சமயம் கொடுமையான உயிரினங்களின் தொந்தரவில் உள்ளதால் அந்த ஆரண்யத்தை சாம்பலாக்கி உன் துயரைப் போக்கிக் கொள்ளேன்’ என்றார் சாம்பசிவன்.

ஆதிக் கடவுளே சொல்லும்போது இனி என்ன கவலை என்று அந்த காண்டவ ஆரண்யத்தை சாம்பலூட்டும்போதுதான் இன்னொரு பிரச்னை வந்தது. நாகர்களின் தலைவனான தட்சகன் அந்தக் காட்டிலே தனி ராஜ்ஜியம் செய்துவந்தான். தேவேந்திரனுக்கு உற்ற தோழன். ஒவ்வொருமுறை அக்னி காட்டை அழிக்கும்போதெல்லாம் இவன் இந்திரனிடம் முறையிட அவன் அவ்வளவு முறையும் வருணனை வரவழைத்து மாபெரும் மழையினைத் தருவித்து அந்தக் காடுகளை ரட்சித்துவந்தான். அதனால் அக்கினியால் ஓரளவுக்கு மேல் போராடமுடியவில்லை.

அக்கினி நடந்த விஷயங்களைச் சொல்லினான். அதனால்தான் அவன் கண்ணனின் கருணாகடாட்சத்துக்காக ஏங்கி இந்தக் காடுகளை தீமயமாக்கி தனக்கு இரையாக தானம் கேட்டான்.

அருச்சுனனுக்கும் பாண்டவருக்கும் அந்த சமயத்தில் ஒரு நல்ல நாடு தேவைப்பட்டுள்ளதால் கண்ணனும் இசைந்து அருச்சுனனிடம் இந்த காண்டவப்ரஸ்தக் காடுகளை அழைத்து இந்திரப்பிரஸ்தநகரம் உருவாக்குமாறும் ஆணை கொடுத்தான்.

அக்கினியால் முடியாத அந்த அழிவினை அருச்சுனன் செய்ய ஆரம்பித்தான். ஆனால் இந்திரன் அவனை தடுக்க வருணனை ஏவினான். அருச்சுனன் பாணங்கள் வருணனைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தக் காடுகளுக்கே வானத்துக் கூரையாக அம்புகளால் ஆகாயத்தில் காப்பு வைத்து அழித்தான். அப்போது அந்த தட்சகன் காட்டில் இல்லாமல் வெளியே சென்ற சமயம். தட்சகன் மகனான அசுவசேனா மிகப் பலம் கொண்டு போராடி முடியாமல் அந்தக் காட்டிலிருந்து வெளியேறப்பார்த்தான். அந்த மகனுக்கு உதவியாக தட்சகனின் மனைவி அசுவசேனாவை தனக்குள் முழுங்கிக் கொண்டாள். ஆனாலும் அருச்சுனம் விடாமல் அந்த நாகதேவியில் தலையை சீவி அசுவசேனாவை வெளிக் கொணர முயலும்போது மறுபடியும் இந்திரன் தன் நண்பனின் மகனை காப்பாற்ற முன் வந்தான். வாயுபகவானை அனுப்பி ஒரு கணம் மயக்கக் காற்றை வீசி அருச்சுனன் மயங்கும் வேளையில் அசுவசேனா ஓடிவிட உதவிசெய்தான். மறுபடியும் எழுந்த அருச்சுனன் மிகவும் கோபம் கொண்டு மாபெரும் போர் செய்து தன் வில் வித்தையைக் காண்பித்து வாயு தேவனை விரட்டி அடித்தான். கண்ணில் கண்ட துன்பப்படுத்தும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தலைப்பட்டான். கருடன் போன்ற பறவைகள் தவிர்த்து அனைத்து உயிரினங்களும் அழிவைக் காண ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் காட்டில் ஆங்காங்கே இருந்த அசுரர்களும், கந்தர்வர்களும் யட்சர்களும் அருச்சுனனோடு போருக்கு வந்தனர். அருச்சுனன் கண்ணன் உதவியை நாட கண்ணனின் சக்கரம் பல அசுரகணங்களை அழித்தது. முடிவில் மொத்தக் காடும் அக்கினி தேவனுக்கிரையாகி அவன் துன்பத்தைப் போக்கின.

பெரிய கதைதான். ஆனால் இந்தப் பெரிய கதையைப் பற்றிய சிற்பங்கள் இந்தியாவில் இல்லாமல் எங்கோ கம்போடியாவில் மிக அற்புதமான கலைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட விதத்தையும் அந்த சிற்பிகளின் கைவண்ணத்தையும் என்னவென்று சொல்வது? அற்புதம் என்று ஒரே வார்த்தையில் சொல்வது எந்த விதத்தில் பொருந்தும் என்றும் தெரியவில்லை.

இப்போது சிற்பங்களைப் பாருங்கள். ஐராவதத்தில் இந்திரன், இடி மழை பொங்கும் நீருடன் வருணன், (கீழே நீர் பொங்கும் காட்சி), ஒருபக்கம் அசுவசேனா நாகம் தப்பியோடும் சிற்பம், இன்னொரு சிற்பத்தில் சக்கரத்தோடு கண்ணனும் மறுபக்கத்தில் வில்லோடு கூடிய விஜயன், காட்டில் மற்ற விலங்குகள், மற்றும் பறவைகள் தப்பியோடுவது..

அப்பப்பா.. சிற்பிகளா இவர்கள். இல்லை.. கலைப் பிரும்மாக்கள்..