வள்ளி திருமணம் – சோழர் சிற்பம்

திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்ற மடலில் மிக அழகான கேள்வியை எழுப்பினார் . திரு சதீஷ் உதவியுடன் அதே தஞ்சை பெரிய கோவில் சோழர் கால வள்ளி திருமணம் சிற்பம் இப்போது பார்போம் .

சிற்பத்தின் அளவை குறிக்க தண்ணீர் குடுவை ( பாட்டில்) ஒன்றை அருகில் வைத்தோம்.

சிற்பம் சற்று சிதைந்து உள்ளது – அதுவும் முழு கதையை விளக்குமாறு இல்லை. சரி, மேல் இருந்து வருவோம். முதலில் பரண் மீது அமர்ந்திருக்கும் வள்ளியை வம்புக்கு இழுக்கும் கிழவனார். ( கையில் குடை ஏந்தி நிற்க்கும் வேஷதாரி முருகன் )

அடுத்து முருகன் தன் சுய உருவில், தமையன் யானையாக ( யானை குட்டி போல உள்ளது சிற்பம் ) வந்து வள்ளியயை பயமுறுத்தும் கணேசன். ( வள்ளி சிரத்தில் கை வைத்து வணக்கம் கூறும் வண்ணம் உள்ளது ??)

முடிவில் – யானையின் ( இப்போது பெரிய யானை ) மேலே திரும்பி செல்லும் முருகன், வள்ளியோ இரு கைதூக்கி வணங்கும் வண்ணம் உள்ளது சிற்பம்.

அடியில் வள்ளியின் வேடர் குலத்தவர் அணிவகுப்பு. .


அடுத்து இருக்கும் சிற்பம் – மேலே ஒரு பக்தன் மரத்தின் அடியில் , அடுத்து முருகன் நிற்கும் கோலம் அருகில் குடையின் அடியில் அமர்ந்திருக்கும் தேவசேனை ? , முடிவில் முருகன் வள்ளி தேவசெனையுடன் – கீழே மயில் வாகனம். மிக அருமையான சிற்பம்.

காதல் வள்ளியும் கள்ளக் கந்தனும்:

இன்று மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம் – நன்றிகள் திரு சதீஷ் ( படங்களுக்கு ), திரு திவாகர் ( அருமையான தமிழில் வள்ளியின் கதையை எழுதி கொடுத்ததற்கு )

முருகன் கோயில் – தஞ்சை பெரிய கோவில் வளாகம் – மயில் மீது முருகன் , அவனை சுற்றி வள்ளி திருமணம் கதை விளக்கும் சிற்பங்கள் .



தொண்டைவள நாட்டிலே உள்ள வள்ளிமலை போலவே அங்கு வாழும் வேடர்களும் அவர்கள் தலைவனுமான நம்பியும் தங்கள் தருமத்திற்கு ஏற்ப சிறந்து விளங்கினர். ஆனாலும் அந்த நம்பிக்கும் ஒரு குறையுண்டு. குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான். அதுவும் பெண் குழந்தை என்றால் நம்பிக்கு மிக மிக விருப்பம்.

சித்தர்கள் வாழும் அந்த அழகான வள்ளிமலையின் ஒரு ஓரத்திலே சிவமுனி எனும் தவயோகி தன் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தவக் கோலத்தில் இருக்கும் சிவமுனிக்கும் ஒரு சோதனை ஒரு அழகிய புள்ளிமான் வடிவில் வந்தது. தன் தவம் முடிந்து குடிலில் இருந்து வெளி வரும் வேளையில் அந்தப் புள்ளி மான் துள்ளலாக அவர் முன் ஓடிவந்தது. புள்ளிமானின் ஒய்யார அழகு ஒருகணம் அந்த தவமுனிவரை மயக்கியதன் காரணம், அவர் தவவலிமையால் புனிதமான பலிதமாகி, அந்தப் பெண்மான் கருவுற்றது.

அந்தப் புள்ளிமான ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அங்கிருக்கும் வேடர்களின் வள்ளிக் கிழங்குக் குழியில் விட்டு விட்டு ஓடிவிட்டது. ஆதரவற்ற அந்த ஒளி வீசும் அழகான பெண் குழந்தையை தெய்வம் தந்த குழந்தையாக வேடர்களின் தலைவன் பாவித்து, வள்ளி என்றே பெயரிட்டு வளர்த்துவந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அந்த அழகு வள்ளி தங்கள் வேட்டுவக் கடவுளான வேலவனையே மனம் முழுவது வரித்து, அந்த ஆறுமுகத்தான் கந்தனுக்காகவே தான் பிறப்பிக்கப்பட்டதாகவே அவனையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

கன்னிப் பருவத்துப் பெண்களை சோளக் கொல்லைக் காவலுக்கு வைப்பது வேடர்களின் வழக்கம். சோளப்பயிர்கள் மேலோட்டமாக வளர்ந்து சோளம் (தினைப் பருப்பு) அதிகம் வளரும் பருவத்தில், அந்தத் தினைப் பயிர்களின் மத்தியில் ஒரு பரண் அமைத்து அந்தப் பரண் மேலிருந்து குருவிகள், கிளிகள் வாராமல் இருக்க பருவப் பெண் வள்ளி காவல் காத்திருக்கும் ஒரு சுப வேளையில் வள்ளியின் மனதில் என்றும் கோயில் கொண்டுள்ள கந்தன் தன் மலைக் கோயிலை விடுத்து அவள் மனக்கோயிலின் நாயகனாய் வர எண்ணம் கொண்டான்.

சிற்பத்தை பாருங்கள் – பரண் மீது வள்ளி , கையில் உண்டிகோல். அருகில் என்ன மரம் ?


அகிலத்தையும் ஆளும் ஆண்டவனான கந்தனுக்கு, ஏனோ தன் காதலியிடம் கூட சற்று விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது போலும். அவள் மனத்துள் உருவான கடவுளாய் உருவம் பெறாமல் சாதாரண வேட்டுவ இளைஞனாய் அவளை சீண்டிப் பார்த்தான். (காதலியை சீண்டாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கு?)

அவள் யாரோ.. என்ன பேராம்.. அவள் தந்தை யாராம்.. கல்யாணத்திற்குப் பெண் கேட்டால் அவளைத் தனக்குத் தர சம்மதிப்பாரோ.. என்றெல்லாம் அந்தச் சின்னப் பெண்னிடம் பெரிய கேள்விகளைக் கேட்டான். அந்த அழகு பதுமை பேசாமல் தலை குனிந்துகொண்டாள். தூரத்தே சத்தம் கேட்க, ‘வீட்டுப் பெரியவர்கள் அதுவும் வேடவர்கள் வந்தால் அவனை கொன்று விடுவார்கள்’ என்று எச்சரித்து துரத்தியும் விட்டாள். துரத்தப்பட்டவன் ஓடி ஒளிந்தவன் போல பாவனை செய்து அங்கேயே வேங்கை மரமாகி மாறி நின்று கொண்டான். சிற்பி செதுக்கிய மரத்தின் அர்த்தம் புரிந்ததா ? வேடவர்கள் கூட்ட்மாக வந்தனர். தேவைப்பட்ட தினைப் பண்டங்களை வள்ளிக்குக் கொடுத்தனர். சென்றுவிட்டனர்.

மறுபடியும் வேடனாய் உருமாறி வள்ளியிடம் காதல் மொழி பேசினான். வள்ளி கோபமாய் பார்த்தாள். ‘இது முறையா’ என்று கேள்வி கேட்டாள். போய்விடு என்று மன்றாடினாள். என் மனதில் இன்னொருவன் வந்து குடி புகுந்து தொல்லை செய்வது போதாது என்று நீயும் ஏன் தொல்லை செய்கிறாய்.. இது நியாயமா.. என்று கெஞ்சினாள். அப்படியானால் உன் மனத்தை வரித்தவன் பெயர் சொல்லு என்று வேடன் கேட்டான். வெட்கப்பட்டாள் அந்தப் பேதை.

மறுபடியும் சப்தம். மறுபடியும் துரத்தினாள் அவனை. இந்தச் சமயத்தில் ஓடி ஒளிந்தவன் மரமாக மாறாமல் வயதான சிவத் தொண்டர் போல உருக் கொண்டவன் தைரி்யமாக இப்போது வள்ளி முன்பும் அவள் கூட்டத்தார் முன்பும் வெளிப்பட்டான். தாத்தா சிற்பத்தில் பார்த்தீரா ? வயதான சிவத்தொண்டரைப் பார்த்ததும் வள்ளியும் அவள் தந்தையும், கிழவருக்கு வேண்டிய தினைப் பண்டங்களைப் படைத்து, அவர் காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கள்ளக் கிழவரும் ஆர அமர உண்டு விட்டு, தாராளமாக ஆசிகளையும் வழங்கினார். சந்தோஷமாக அவள் தந்தையும் மற்றவர்களும் அங்கிருந்து விலக, தனித்துவிடப்பட்ட வள்ளியிடம் வேண்டுமென்றே காதல் வார்த்தைகளை கிழவர் அள்ளிவீச, அந்தச் சின்னப் பெண் ‘சீச்சீ’ என்று விலகினாள். அப்போது ஒரு யானை அந்த சோளக் கொல்லையில் ஒடிவரக்கண்ட வள்ளி பயத்துடன் அந்த சிவனடியாரைக் கட்டிக் கொண்டு அந்த யானையை விரட்டுமாறு வேண்ட, சிற்பத்தை பாருங்கள் – என்ன அருமை – எம் சி ஆர் போல பயந்து நடுங்கும் வள்ளியை அனைத்து பிடித்திருக்கும் கள்ள தாத்தா

அந்த கிழவனாரான கந்தன் தன் அண்ணன் விநாயகனை மனதுள் வேண்ட, அந்த வெற்றி விநாயகனே அந்த யானையாக வந்தவன், சுயரூபம் எடுத்து அண்ணனாக மாறி அவர்களை வாழ்த்தினான். கிழவனாக வந்த கந்தனும் அவள் மனக்கோயில் நாயகனாய் மாறினான்.
சிற்பத்தில் பாருங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா குமாரனாக மாறும் காட்சி

ஆறு முகமும் ஈராறு கைகளும் கொண்டு மயில் மேல் அமர்ந்து குமரனாய் தரிசனம் தந்தான்.

அழகு வள்ளிக் குறத்தி தன் மணாளனே இத்தனை நாடகம் ஆடி கள்ளத்தனம் செய்தவன் என்று அறிந்து உள்ளம் பூரித்தாள். தன் மன நாயகனோடு ஒன்று சேர்ந்தாள்

தந்தையை கண்டு பயப்படும் முருகன் -புள்ளமங்கை

இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது – தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் – அதனைப் பின்னர் பார்ப்போம்). பழைய பதிவை நண்பர் சதீஷ் அவர்களின் படங்களை கொண்டு மீண்டும் இடுகிறேன்.

இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க அதன் அளவை முதலில் பார்க்க வேண்டும் , அது எங்கே உள்ளது என்பதும் மனதில் கொள்ள வேண்டும்.

முதலில் சற்று தொலைவில் இருந்து .


கணினி கொண்டு கொஞ்சம் வெளிச்சம் போடுவோம். இப்போது தெரிகிறாதா?

சரி, இப்போது கதை , நான் சொல்வதை விட அருமையான தேவாரப் பாடல் குறிப்பு தருகிறேன்.

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

கஜமுகாசுரன் – அசுரன். மக்களுக்கு தீங்கு செய்தான். ஈசன் அவனை வைத்தான்.
எவ்வாறு – சிற்பத்தை பாருங்கள்.

சூலம் கொண்டு குத்தி, அவன் தலையை காலின் அடியில் இட்டு , அதன் மேல் ஆடி, அவன் தோலை உரித்து – அப்பப்பா – பயங்கரம். சிற்பி எவ்வாறு இதை செதுக்கி உள்ளான் பாருங்கள் – உடலை வளைத்து ஆடும் ஈசன், யானையின் தலை ( சூலத்தின் அடியில் ), யானையின் தோலை விரித்துப் பிடித்து ,

அப்போது அந்த குள்ள பூதகணம் – ஏளனம் செய்கிறது விழுந்த அசுரனை பார்த்து . மேலே இன்னொரு பூத கணம் இந்தா காட்சியை அப்பப்பா என்கிறது.

இந்த கடும் சண்டையை பார்க்க மனம் இல்லாமல் திரும்பும் உமை – அவள் மடியில் குழந்தை முருகன் – மிரண்டு அடுத்து இருக்கும் தோழியிடம் தாவும் பாவம் – அருமை.


– இது மிகவும் சிறிய சிற்பம் என்றேன்…ஆனால் அது போதுமே எங்கள் சிற்பிக்கு – அதில் ஒரு கதை சொல்லி அதில் அனைத்து முக பாவங்களை கொண்டு வந்துள்ளான். யானை உரி போர்த்திய முர்த்தி. சரி, சிறியது என்றால் எவ்வளவு சிறியது?

இது மானுட வேலைபாடா

கலை அழகு தெய்வீகம். இதை மல்லையில் எங்கும் காணலாம். ஆனால் மிகவும் அருமை பஞ்ச ரத குழுமத்தில் இருக்கும் அர்ஜுன ரதம். இங்கு இருக்கும் இரு வடிவங்கள் மானுட வேலை பாடே அல்ல.
1085
ஒன்று யானை மேல் அமர்ந்து இருக்கும் இந்திரன் அல்லது ஆறுமுகன். யானை முன் வடிவம் மற்றும் அதன் மேல் அமர்ந்து இருக்கும் காட்சி -பக்க வாட்டில் செதுக்குவதே கடினம் – 3D முறையில் செதுக்குவது மிக கடினம்,அமானுஷ உயிரோட்டம்.
10811093
அதை அடுத்து நிற்கும் இரு பெண் உருவங்களோ,ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் காற்று மழை, மண் , கடல், மனிதன் என்று எல்லா சிதைவுகளையும் தாண்டி, இந்த பெண்ணின் நளினம், இடை சற்றே வளைந்து, கால்களை வேறு பக்கம் வளைத்து, ஒருபுறமாக திரும்பி நிற்கும் வடிவம், கரம் வளைந்து தன் கூந்தலை கோதி விடும் கோணம் – சற்றே வேட்கிய தலை – இது எல்லாம் போதாதென்று அந்த மோகனப் புன்னகை. இது பல்லவ சிற்பியின் கற்பனை திரனா அல்லது பல்லவ சபையில் இரம்பையும் மேனகையும் இருந்து உருவங்களுக்கு ஒப்பனை செய்தார்களா.
1090
1087
கடைசி படம் varlaaru.com இருந்து எடுத்து. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக இங்கே சென்று சிற்பகலை பற்றி மேலும் படியுங்கள்.