அதே மாங்கனி வேறு குழப்பம் – காரைக்கால் அம்மை சரித்திரம்

கம்போடியாவில் காரைக்கால் அம்மையாருக்கு சிற்பம் என்றவுடன் பலருக்கு அவர் யார் என்றும், அவர்களது கதையை பற்றி படிக்கவும் ஆவல்.

அந்த ஆவலை தூண்டவே அந்த மடலில் அவர்களுடைய அற்புத கதையை பற்றி எழுதவில்லை. எனினும் அவர்களது வினோத உடல் அமைப்பு பலரையும் கேள்வி எழுப்ப செய்தது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, அவருடைய அற்புத பாடல்களை இங்கே இடாமல், அவர் சரித்திரத்தை விளக்கும் முறையில் நண்பர் திரு. வி. சுப்பிரமணியன் ஐயா ( எனக்கு பல முறை பக்தி இலக்கியங்களில் இருந்து சிறந்த குறிப்புகளையும் பாடல்களையும் தேடி தந்த வழி காட்டி ) அவர்கள் இயற்றி இருக்கும் அற்புத பாடலையும், அம்மையார் புகழ் விளக்கும் திருவாலங்காடு கோயில் கோபுர சிற்பம் ஒன்றையும் இணைக்கிறேன்.

கோபுர சிற்பம் – அம்மையின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்வுகள். இடம் இருந்து வலம் – திருமணம், மாங்கனி, கைலாய பிரவேசம்

பசித்து வந்தவ ரிலைதனி லொருகனி
.. படைத்து வந்தவர் பிறகடி தொழவொரு
.. பழுத்த இன்கனி அவர்பெற அருளிடு .. முமைகோனே
புசித்த பின்கண வனும்வின விடஅவர்
.. பொருட்ட ருங்கனி தரஉட னுறைவது
.. பொருத்த மன்றென அவனவர் தமைவில .. கிடுவானே
நசிக்க ஒன்பது துளையுட லழகென
.. நவிற்றி என்புரு வினைஅரு ளெனமிக
.. நயக்கு மன்பர துளமகி ழுருஅளி .. சடையோனே
வசிட்ட ரும்பல முனிவர்க டொழஉறை
.. மலைத்த டந்தனி லடியிட வெருவிய
.. மனத்தர் மன்புக ழனைதொழு முனதடி .. மறவேனே.

உரை:
(தனது இல்லத்திற்குப்) பசியோடு வந்த அடியாருக்கு இலையில் (கறி இன்னும் சமைத்து
இராததால், கணவன் கொடுத்தனுப்பியிருந்த) ஒரு மாம்பழத்தை இட்டு மகிழ்ந்து, பிறகு
(கணவன் உண்ணும்போது இன்னொரு கனியையும் கேட்கத்) திருவடியைத் தொழுதபொழுது, அவருக்கு
(புனிதவதி என்ற காரைக்கால் அம்மையாருக்கு) ஒரு பழுத்த இனிய கனியை அளித்த
பார்வதி நாதனே! (அதை) உண்ட பின் (அதைப் பற்றிக்) கணவன் கேட்டபொழுது, அவன்
நம்புவதற்காக அவர் வேண்டியபொழுது இன்னொரு அரிய கனியைத் தர, அதைக் கண்டு (அவர்
தெய்வம் என எண்ணி) அவரோடு இல்லறம் நடத்துவது தகாது என்று அவரி விட்டு நீங்கிச்
சென்றான். (அதன் பிறகு) “இந்த ஒன்பது ஓட்டைகளுடைய உடலின் அழகு அழிவதாக!” என்று
சொல்லிப், “பேய் உருவத்தைத் தாராய்” என்று மிக விரும்பிக் கேட்ட பக்தருடைய
உள்ளம் மகிழ அவ்வுருவத்தை அளித்த, சடை உடையவனே! வசிஷ்டரும், பல முனிவர்களும்
தொழ (நீ) உறைகிற கயிலைமலைப் பாதையில் காலை வைத்து நடக்க அஞ்சிய மனத்தை உடையவர்,
(அதனால் தலையால் நடந்தவர்), நிலைத்த புகழ் உடைய அம்மையார் தொழுகிற உனது
திருவடியை நான் மறக்கமாட்டேன்!

காரைக்கால் அம்மையார் வரலாற்றைப் பெரிய புராணத்தில் விரிவாகக் காண்க

படைத்தல் –
உவத்தல் – மகிழ்தல்;
இன் கனி – இனிய கனி;
அரும் கனி – அரிய கனி;
உடன் உறைவது – கூடி வாழ்வது;
நசிக்க – அழிக!
நவிற்றி – சொல்லி;
என்பு – எலும்பு;
உரு – உருவம்;
நயத்தல் – விரும்புதல்;
மகிழ்தல் – விரும்புதல்; களித்தல்;
உள மகிழ் உரு அளி – உள்ளம் மகிழும் வடிவை அளிக்கிற;
மலை – இங்கே, கயிலை மலை;
தடம் – வழி; பாதை; மலை;
அடியிடுதல் – அடிவைத்து நடத்தல்;
வெருவுதல் – அஞ்சுதல்;
மன் – நிலைத்த; மிகுந்த;
அனை – அன்னை;

பதம் பிரித்து:
பசித்து வந்தவர் இலைதனில் ஒரு கனி
.. படைத்(து) உவந்தவர், பிற(கு) அடி தொழ, ஒரு
.. பழுத்த இன் கனி அவர் பெற அருளிடும் .. உமைகோனே!
புசித்த பின் கணவனும் வினவிட, அவர்
.. பொருட்(டு) அரும் கனி தர, உடன் உறைவது
.. பொருத்தம் அன்(று) என அவன் அவர்தமை விலகிடுவானே!
“நசிக்க ஒன்பது துளை உடல் அழ(கு)” என
.. நவிற்றி, “என்(பு) உருவினை அருள்” என மிக
.. நயக்கும் அன்பர(து) உள[ம்] மகிழ் உரு அளி .. சடையோனே!
வசிட்டரும் பல முனிவர்கள் தொழ உறை
.. மலைத்தடம்தனில் அடியிட வெருவிய
.. மனத்தர், மன் புகழ் அனை தொழும் உன(து) அடி .. மறவேனே!

காரைக்கால் அம்மை தொழும் உன்னை மறவேன்
——————————————————
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன .. தனதான

(விரித்த பைங்குழல் – திருப்புகழ் – சுவாமிமலை)

ஈசனுக்கு உடும்பு கறி படைத்த பக்தன்

கண்ணப்பர் செருப்பு அணிந்ததை சென்ற மடல்களில் பார்த்தோம். இப்போது அவர் ஈசனுக்கு உடும்பு கறி படைத்ததை பார்ப்போம். மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம், ராஜ ராஜ சோழ தேவருக்கு மிகவும் பிடித்த கதைகள் – ஈசனிடம் அளவில்லாத பற்று கொண்டு அவனிடம் சரண் புகுந்த நாயன்மார் கதைகள். அதில் அவர் மிகவும் ரசித்த ஒன்று , கண்ணப்பர் கதை. இதோ கருங்கல்லில் .
1880188718901884
சிறு சிற்பம் என்றாலும் அந்த சிற்பத்தில் கண்ணப்பரின் முகத்தில் தெரியும் பணிவு, பக்தி – அதிலும் அவர் ஆசையுடன் உடும்பை படைக்கும் காட்சி ( வேடுவன் அல்லவா, அப்போதும் தனது வில் அம்பை விடவில்லை, அருகில் அவரது வேட்டை நாய் )- எதிரில் மரத்தடியில் சிவ லிங்கம்.

தேவார குறிப்பு, இதற்கும் உண்டு.
பதினொன்றாம் திருமுறை

சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

தடிந்த உடும்பு – கொல்லப்பட்ட உடும்பு, அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.

இங்கே மேலும் கதையை உணர்த்தும் சிற்பங்கள் உண்டு. அவற்றை பற்றி வரலாறு.காம் நண்பர் கோகுல் அவர்களின் அருமையான இடுகை (கடை காட்சியில் சிவ கோச்சாரியார் மரத்தின் பின் ஒளிந்துக்கொண்டு பார்ப்பதை சித்தரித்த வண்ணம் அருமை )
கோகுல் அவர்களின் அருமையான இடுகை

படங்களுக்கு நன்றி www.varalaaru.com

பெண்களை மயக்கும் திகம்பரர் , ஆண்களை மயக்கும் மோகினி

நண்பர் ஒருவர் பல சிவ பிட்சாண்டவன் சிற்பங்கள் இருக்க, ஒரு சில சிற்பங்களையே ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டார் . மிகவும் நல்ல கேள்வி. திரு திவாகர் அவர்களின் தமிழும் அதனுள் இருந்த பல கருத்துகளும் சரி வர சென்றடையவே – அவர்களது மடலில் இட்ட சிற்பங்களை பற்றி மேலும் எழுதவில்லை.

இதோ அதன் தொடர்ச்சி. கதையை கேட்டீர்கள் அல்லவா, இப்போது அந்த மகா சிற்பி சிவனை மட்டும் செதுக்கவில்லை, அந்த கதையையே செதுக்கி உள்ள அருமையை பாருங்கள்.

காஞ்சி கைலாசநாத கோவில். ராஜ சிம்ஹன் நிறுவிய அற்புத கோயில், தஞ்சை பெரியகோவிலை நிறுவிய ராஜ ராஜனே பெரிய கற்றளி என்று வியந்த கோயில். அங்கே இந்த அற்புத சிவ பிட்சாண்டவனின் வடிவம் – ராஜ சிம்ஹனின் பாயும் சிங்கங்களின் நடுவில் கம்பீரமாக நிற்கும் காட்சி. சிற்பத்தில் ஈசன் தன் இடது கை விரலை நீட்டி நம்மை மேல பார்க்க சொல்வது போல உள்ளது. மேலே என்ன இருக்கிறது. ஆஹா, ஆடல் வல்லானின் அற்புத ஆட்டம். ( இதே வடிவம் நாம் மல்லை ஓலக்கநெஸ்வர கோயிலிலும் பார்த்தோம் !!)

சரி சிற்பத்திற்கு மீண்டும் வருவோம். கட்டழகு வாலிபன் அல்லவா – உணர்த்த என்ன ஒரு கட்டுடல், முகத்தில் விஷம சிரிப்பு , ஒரு காலை அழகாய் மடித்து, கால்களில் இருக்கும் பாத ரக்‌ஷைகள் – அதிலும் ஒரு பாதம் சற்றே தூக்கியவாறு, பரந்த விரிந்த தோள்கள் , வலது கையை என்ன ஒரு யதார்த்தமாக தண்டத்தின் மீது இட்டிருக்கும் பாங்கு , அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் திரு ஓடு.. அருமையான சித்தரிப்பு. அதனுடன் நிறுத்தவில்லை நம் சிற்பி.


அழகு வாலிபனை கண்டு சொக்கி அவன் காலில் விழும் இரு ரிஷி பத்தினிமார்கள், அவர்களுக்கு மேலே இதை கண்டு சினம் கொண்டு ஈசனை தாக்க கை தூக்கும் ரிஷி. ஒரு கதா பத்திரத்தை மட்டும் சித்தரிக்க வில்லை இந்த சிற்பம், , ஒரு கதையையே சித்தரிக்கிறது.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ? நான்காம் திருமுறை

நான்காம் திருமுறை

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

186518721868
சரி, இப்போது மோகினி வடிவம் – காஞ்சி தேவராஜசுவாமி கோவில் தூண் சிற்பம். அங்கும் சிற்பி தன் கலை நுணுக்கத்தை காட்டி உள்ளான்.உற்றுப் பாருங்கள் – மோகினியின் மோகனப் புன்னகையில் மயங்கி ,அவள் ஊற்றிக் கொடுக்கும் பானத்தை இரு கரம் கூப்பி அருந்தும் ரிஷிகளின் வேடிக்கையான காட்சியையும் காட்டிய சிற்பியின் கற்பனை , கலைத் திறன் அபாரம்.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ?இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவ ரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடு காட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

முதலையின் வாயினுள் சென்றது மீளுமா?

ஹனுமான் முதலையின் வயிற்றில் இருந்து வெளி வந்ததை முன்னர் பார்த்தோம். இப்பொது அதேபோல இன்னொன்று.

தாராசுரம் கோவில் சிற்பம் – பெரியபுராண கதைகளில் ஒன்று – அவினாஷியில் சுந்தரர் முதலையால் விழுங்க பட்ட சிறுவனை உயிர் பித்த கதை,
1640
சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை அவினாசி சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் – சிற்பத்தில்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70920&padhi=092&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

7.92.4

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.

முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.

நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர். அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.

அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
16371642

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=213

Thanks to Mr. V. Subramanian, for his valuable guidance with regard to the verse references.
http://www.geocities.com/nayanmars