பாத்தாம்’மின் வினோத இந்து நாகா கோயில்

பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘நமது ‘ ஆர்வத்தை தூண்டும் இடங்கள் கிடைப்பது கடினம். அப்படி இருக்க ‘பாத்தாம்’ சென்ற போது இங்கே ஒரு இந்துக் கோவில் இருக்கிறது என்றவுடனே பட்டியலில் அடுத்து இருந்த ஷாப்பிங் ஒரு படி இறங்கி இதற்கு இடம் விட்டது. நாகா கோயில் என்று அங்கு இருப்பவர்கள் அழைக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு இடையே ஒரு கோபுரம் – இல்லை இரு கோபுரம் ! இல்லை ஒரே கோபுரம் இரண்டாய் பிளந்து ! இல்லை, பின்னர் தான் திருக் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ” கோபுர கலை மரபு ” நூலில் படித்தது நினைவுக்கு வந்ததது. பொதுவாக நமது ஆலயங்களின் வெளியில் இருக்கும் கோபுரம் என்பது ஒரு வகை நம் எண்ணங்களை சுத்தப்படுத்தும் – தேயினுள் நுழைவதை குறிக்கும். இந்த காட்சியை கீழே இருக்கும் படத்தை பார்த்தால் புரியும்.

இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது நாம் பார்க்கும் கோபுர வாயில்களாக மாறிஉள்ளது. இங்கே ஜாவா தீவுகளிலும் இந்தோனேசியா பாலி போன்ற இடங்களில் இன்றும் அப்படியே உள்ளன.

உள்ளே சென்றோம். அங்கே இடது புறத்தில் ஒரு சிறு ஆலயம். திரிபுரசுந்தரி சுந்தரி ஆலயம். பூஜைக்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும் மேலே சென்று அங்கே இருப்பதை பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் பூசாரி.

சிறிது தொலைவு நடந்ததும் அழகான படிக்கட்டுகளின் மேலே ஒரு கோபுரம் தென்பட்டது.

இந்த ஆலயத்தை பற்றி இன்னும் படித்து தெரிந்துக்கொள்ள வில்லை. எனினும் எதிரே அழகிய வாயிற் காப்போன், மேலே தோரணத்தில் கருடன் என்று எடுத்தவுடனேயே அழகிய சிற்பங்கள்.

உள்ளே சென்றவுடன் ‘நமது ‘ தென்னாட்டு பாணியில் பிள்ளையார். அது என்ன தென்னாட்டு பாணி ? மேலே படியுங்கள்.

அடுத்து எதிரில் தோன்றிய காட்சி மலைக்க வைத்தது. ஏற்கனவே ஒரு சிறு மலை மீது ஏறி இருந்த நாங்கள் எதிரே ஒரு பெரிய மலை போல உயர்ந்த கோயிலை பார்த்து அதிர்ந்து போனோம். வெளியில் இருந்து ஒன்றுமே தெரியவில்லை !

உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்ட விமானம் இருக்கும் என்று நினைக்க வாய்ப்பே இல்லை. இரு புறத்திலும் இரு இந்தோனேசியா பிள்ளையார் சிலைகள். கைகளில் முறையே மழு, பூ மொட்டு, சுவடி மற்றும் மோதகம்

நடுவில் நாகங்கள். இது என்னவாக இருக்கும் என்று யோசித்தோம்.

சுற்றி ஏதாவது தென்படுகிறதா என்று சென்று பார்த்தோம்.

ராட்சச பாம்பின் சுருள்கள் – அடடே , பாற்கடல் கடையும் காட்சி போல உள்ளதே ! நாலு பக்கமும் பெரிய நகங்களை கொண்ட கால்கள் பாம்பின் உடலின் கீழே தெரிந்தன. பின்னால் இரண்டு வால்கள் தென்பட்டன.

ஆமாம். அதே தான். மீண்டும் முன் பக்கம் வந்து பார்த்தோம்.

கீழே இருக்கும் முகம் குர்ம வடிவம். அதற்க்கு மேலே வாசுகி.

பொதுவாக இருபக்கமும் தேவர்களும் அசுரர்களும் நின்று கடையும் விதமே பார்த்த நமக்கு – இது ஒரு புதுமை. மேலும் பின்புறம் சற்று உயரத்தில் கருடனும் அவருக்கு மேலே ஒரு பறவையும் உள்ளன.

மேலே – உச்சியில் தங்க முலாம் பூசிய வடிவம் ஒன்று நடனம் ஆடும் வண்ணம் உள்ளது. கம்போடிய வடிவங்களில் விஷ்ணு இப்படி இருப்பார்.


அங்கோர் வாட் சிற்பக் காட்சி

எனினும் கைகளில் ஒன்றும் இல்லாததால் முடிவாக சொல்ல சற்று கடினமாக உள்ளது . மேலும் இதனை சிவன் கோயில் என்றும் சொல்கிறார்கள். .

இப்படி பிரமித்து நின்று விட்டு அருகில் ஆதி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி ஆலயம் சென்று அருமையான பூஜையை தரிசித்து விடை பெற்றோம்.

சிங்கை வந்தால் பாத்தாம் கண்டிப்பாக சென்று வாருங்கள். அங்கே நண்பர் திரு Dhani Hariadi
சேவை அற்ப்புதம்

PT. TITA PANORAMA INDAH TOURS & TRAVEL

Komplek TanjungPantun Blok P No. 4 Batam Island 29453, Indonesia.
Phone:+62 (778) 3306999
Fax: +62 (778) 456 797
Mobile Number: (+62) 81372788887

சூபர் பில்லர் காண்டேஸ்ட் என்று ஒன்று இருந்தால் …

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ரியாலிட்டி ஷோ, டாலேண்ட் ஷோ என்று களை கட்டுகிறது. பலர் தங்கள் திறமைகளை வெளிக் காட்டி பலருடன் போட்டியிட்டு வெற்றி பரிசைத் தட்டி செல்வதென்பது கலைக்கும் வெற்றியே. அப்படி தூண்களை வடிப்பதில் ஒரு போட்டி வைத்தால் ? அப்படி ஒரு அணிவகுப்பை நாம் இன்று பார்க்கப் போகிறோம். நண்பர் அரவிந்துடன் நெல்லை சென்ற பொது நெல்லையப்பர் ஆலயத்தில் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் தான் சென்றோம். ( இருட்டுக்கடை மூடி இருந்தது !)

வெளித்தோற்றத்தில் வாயிற் காவலர்கள் ( ஆலயம் ஏழாம் நூற்றாண்டாக இருந்தாலும் நாம் பார்க்கும் தூண்களின் காலம் சுமார் பதினைந்தாம் நூற்றாண்டு / அதற்கு மேல் -) சுமார் தான் என்று சொல்ல வாய் எடுத்த பொது …

முழு வடிவம் கண்டு வாய் அடைத்துப் போனோம்.


ஒரே கால்லால் ஆன தூண் – இல்லை இல்லை தூண்கள் கொண்ட சிற்பம். ஒவ்வொரு தூண் வடிவமும் ஒரு விதம் – ஒரு தூண் அல்ல. வினோத தூண்களின் அணிவகுப்பு என்றே சொல்ல வேண்டும்.

அதிலும் இவை தான் புகழ் பெற்ற நாத தூண்கள் ! இத்தனை காலம் பக்தர்கள் பலரின் பலப்பரிட்சையை வென்று சங்கீதம் எழுப்பும் தூண்கள்.

ராட்சஸ தூண்கள் என்றால் இவை தானோ !

அளவால் மட்டும் சொல்ல வில்லை, வேலைப்பாட்டைப் பாருங்கள்.மயக்குகிறது.

இவை ஒரே கல் என்றால் நம்ப முடியவில்லையா ? நன்றாகப் பாருங்கள் – கல்லில் ஓடும் நரம்புகள் தெளிவாக தெரிகின்றன.


பார்த்துக் களைத்து இருந்த பொது இன்னும் சில கண்ணில் பட்டன. ஆஹா, இவை அந்த ராட்சஸ தூண்களுக்கு சளைத்தவையல்ல என்று நகர எத்தனிக்கும்போது

.

நல்ல கச்சேரியில் வித்வான் கடைசியில் தன்னுடைய சிக்நேசர் தில்லானா பாடி கைதட்டுதல் பெறுவது போல ஒன்றிரண்டு இங்கும்..

தூணின் அடியில் பாருங்கள்.

கல்லை ஒவ்வொரு சிறு தூண் வடிவமாகக் குடையும் போதே, நடுவில் கொஞ்சம் விட்டு அதனை ஒரு பந்து போல செதுக்கி உள்ளான் ( உருளி !!) – இதனை வெளியில் எடுக்க முடியாது ( உள்ளேயும் போட முடியாது !!)

இரண்டு என்று சொன்னேனே ! இதோ

கண்டுபிடித்தீர்களா ?


பெரிய கல்லில் எண்ணில் அடங்கா சிறு தூண்களை , அதுவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் , அதுவும் வெவ்வேறு சங்கீத ஒலிகளை எழுப்பும் வண்ணம் செதுக்குவது போதாது என்று அந்த மகாகலைஞன் உள் தூண் ஒன்றில் ஒரு சிறு அணிலை செதுக்கி நம்மை ஆச்சரியத்தில் ஸ்தம்பிக்க வைத்தான். தூண் போல நாமும் பல மணிநேரம் கழிந்தது தெரியாமல் நின்றோம்.

விரல் வித்தை

கை நீட்டுவது, விரல் நீட்டுவது என்பதே சற்று சர்ச்சைக்குரிய விஷயம், அதுவும் கற்சிற்பம் கை நீட்டி எதை உணர்த்துவது என்பதை புரிந்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதை இன்று பார்க்கப் போகிறோம். ஆமாம், தோழி காத்தி அவர்களுடன் விளையாட்டாக நடந்த விவாதத்தில் தக்கோலம் வாயிற்காப்போன் விரல் வித்தை பற்றிய கேள்வி எழுந்தது ( படங்களுக்கு நன்றி நண்பர் அரவிந்த் and மற்றும் வரலாறு.காம் மற்றும் திருமதி சுபாஷினி அவர்கள் சட்டென வரைந்து கொடுத்த ஓவியங்கள்).

முதலில் படங்களை பாருங்கள்


பல கை முத்திரைகள் இருந்தும் இன்று நாம் பார்க்க இருப்பவை ஒரே போல இருக்கும் இரு முத்திரைகள். ஒன்று ஸூசி ஹஸ்தம், இன்னொன்று தர்ஜனி ஹஸ்தம்.

விடை தேடி திரு கோபிநாத் ராவ் அவர்களது ” Elements of Hindu Iconography ‘ நூலை நாடினேன்.

“Suchi-hasta has been misunderstood by some Sanskrit scholars to mean the hand that carries a suchl or needle. ……………………….. But, like the Tarjani hasta, the Suchl-hasta, also denotes a hand-pose, in which the projected forefinger points to an object below, whereas in the tarjani-hasta the forefinger has to point upwards, as if the owner of the hand is warning or scolding another”

அதாவது ” ஸூசி ஹஸ்தம் என்பது சில வடமொழி ஆய்வாளர்களால் தவறுதலாக கையில் ஊசி பிடித்து இருப்பது என்று பொருள்கொள்ளப்படுகிறது ……………………. ஆனால் தர்ஜனி ஹஸ்தம் போல ஸூசி ஹஸ்தமும் ஒரு கை முத்திரை. அதில் ஆள்காட்டி விரல் கீழே இருக்கும் பொருளை சுட்டிக்காட்டுகிறது, தர்ஜனி முத்திரை ஆள் காட்டி விரல் மேல்நோக்கி, எதிரில் இருப்பவரை எச்சரிக்கும் வண்ணமோ, கண்டிக்கும் வண்ணமோ இருக்கும்”

மீண்டும் ஒருமுறை தக்கோலம் வாயிற்காப்போன்களின் கை முத்திரையை அருகில் சென்று பாருங்கள்.

இந்த அற்புத சிற்பங்களை நன்றாகத் துடைத்துப் பாதுகாக்க நம்மால் முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. ஒருவர் நமக்கு தன் அவல நிலையை காட்டுவது போலவும், இன்னொருவரோ என் நிலைமையை பார்க்காதீர்கள் என்று வேறு பக்கம் கை காட்டுவது போலவும் உள்ளது.

கண்டிப்பாக இரண்டுமே தர்ஜனி ஹஸ்தம் தான்

அடுத்து தஞ்சை பெரிய கோயில் செல்வோம். அங்கே என்ன முத்திரை?

இங்கே சற்று சிக்கலாக தான் உள்ளது.

இவர்கள் எச்சரிக்கை செய்கிறார்களா இல்லை அவர் மிக பெரியவர் என்பதை காட்டுகிறார்களா?

மீண்டும் ஒருமுறை திரு கோபிநாத் ராவ் அவர்கள் சொன்னதை கேட்போம். ஸூசி ஹஸ்தம் கீழே உள்ள பொருளை நோக்கி கை கட்டுவது என்றாரே.

இது போன்ற சிலைகளை பார்ப்போமா?

கொடும்பாளூர் மூவர் கோயில் காலசம்ஹார மூர்த்தி

கண்டிப்பாக ஸூசி ஹஸ்தம் தான்.

அடுத்து தாராசுரம் யானை உரி போர்த்திய முர்த்தி

இங்கேயும் ஸூசி தான்!

அடுத்து இரண்டு என்ன வகை?

இருவருமே கண்டிப்பாக கண்டிக்கும் பாவத்தில் இல்லை. திரும்ப ஒரு முறை திரு கோபிநாத் ராவ் வேறொரு இடத்தில என்ன சொல்கிறார் என்று பாருங்கள். எல்லோரா உமாசஹிதர் பற்றி அவர் கூறும் பொது


“Siva is herein holding in one of his left hands the upper part of the garment of his consort and keeps one of his right hands in the suchi pose and the other appears to be carrying a book. He is evidently giving out to Uma one of the puranas…….”

அதாவது ” சிவன் தனது இடது கையில் உமையின் மேலாடையை பிடித்துக் கொண்டு, மேல் வலக் கையை ஸூசி முத்திரையிலும் கீழ் வலக்கையில் ஒரு நூலை பிடிப்பது போல உள்ளது. உமையம்மைக்கு ஏதோ புராணத்தை பற்றிய விளக்கத்தை …..”
இங்கே விரல் மேல் நோக்கி தான் உள்ளது. அப்போது மகேசன் உமையை கண்டிக்கிறாரா? கவனி என்று அதட்டுகிறாரா? இங்கும் அங்கும் பார்த்தால் மேலாடையை பிடித்து கவனம் இங்கே இருக்கட்டும் என்று …..

விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அதிகாரிக்கு நன்றி

வலைப்பூக்களில் பதிவுகளை எழுதும் பலரும் ( சினிமா , அரசியல் உட்பட ) பல மணிநேரம் செலவிட்டு தங்கள் கருத்துகளை தங்கள் வாசகர்கள் விரும்பும் ( விரும்புவார்கள் என்ற நம்பிக்கை !!!) வண்ணம் படைத்து விட்டு பின்னூட்டத்திற்கு காத்துக் கிடக்கும் காலம் இது.. வலைப்பூ எழுதுவதே நீ இந்திரன் சந்திரன் , ஆஹா ஓஹோ என்று வரும் ( வெறும் ) பின்னூட்டங்களை எதிர்பார்த்து மட்டுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக இன்னும் பல நல்ல படைப்புகளை ஆர்வத்துடன் அவர்கள் எழுத அவை தூண்டும். ஆனால் நம்மை போல சிற்பம், கலை, அழிந்த ஓவியம் என்று எழுதும் நமக்கு பெரும்பாலும் தீவிர ரசிகர்கள் சிலரும் நாமே முதுகில் தட்டிக்கொண்டு ஓடுவது தான் கதி. ஆனால் ஒரு பதிவுக்கு நல்ல விளைவு நேர்கையில் வரும் மன நிறைவு ஒரு நெகிழ்வு தான். அப்படி ஒரு காரியம் நடைபெற்றுள்ளது. அதுவும் நமது அழியக்கூடாத குலதனங்கள் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்று மனம் சோர்வு அடையும் பொது , அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் நம் குரலுக்கு செவி சாய்த்து நடத்திய காரியம் தான் அது.

முதல் நன்றி இந்த பதிவை படித்து விட்டு வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்., அங்கே சென்றபோது அங்கு நடந்த தப்பை உடனே படம் பிடித்து அனுப்பி வைத்த நண்பருக்கு . என்ன கொடுமை இது ?, அடுத்த நன்றி பதிவை படித்துவிட்டு அதை தனக்குத் தெரிந்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு அனுப்பிய நண்பருக்கு. நமது முக்கியமான நன்றி – ஒரு வலைபூ குறிப்பை அலட்சியாமாக கருதாமல் விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அந்த அதிகாரிக்கு நன்றி! நன்றி!

இதோ புத்துயிர் பெற்று நிற்கும் வாயிற் காப்போன், மற்றும் கீழே உள்ள கல்வெட்டு.

முடிவாக நன்றி – செயல் வீரர் பணி செவ்வனே முடிந்துள்ளது என்று படம் பிடித்து அனுப்பி உதவிய நண்பருக்கு.

என்ன கொடுமை இது ?

தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழா சிறப்பாக நடை பெற்றது. அதை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தை பலரும் கண்டு ரசித்தனர். இந்த வாயிற் காவலனை நினைவிருக்கிறதா ?

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அந்த பதிவில் நாம் பார்த்த பொது இப்படி இருந்த சிலை ..

அதுவும் அதன் சிறப்பு – அதன் அடியில் உள்ள கல்வெட்டு வரிகள்

“உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

இந்த சிலையை மக்கள் பார்வைக்கு வைக்கும் பொது நீல நிற கம்பளி இட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட சிலை, அதன் பின் என்ன நடந்தது ?

விழா முடிந்தவுடன், அதன் இருப்பிடமான தஞ்சை கலைவளாகம் சென்றது இந்த சிலை. ஆனால் அங்கே அதை அதன் இடத்தில் திரும்ப வைக்கும் பொது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளனர் . அந்த அவல நிலையை நீங்களே பாருங்கள்.

சிலையை தரையில் புதைத்து சிமெண்ட் பூசிய கொத்தனாருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. எனினும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரியே மறையும் அளவிற்கு சிதைக்க அருகில் இருந்தவர்கள் விட்டு விட்டார்களே என்பது தான் மிகவும் கவலையாக உள்ளது.

ஆவணப் படுத்தும் கூடங்களே இப்படி இருந்தால் !!!

திருச்சிராப்பள்ளி – மலைக்கோட்டை குடைவரை – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம்

மலைக்கோட்டை – இரண்டு குடைவரைகளில் முதல் குடைவரை

தொலைவில் இருந்தே பிரமிக்கவைக்கும் மலைக்கோட்டை , திருச்சிராப்பள்ளியின் நடுவில் கம்பீரமாக விஸ்வரூபம் எடுக்கும் மலை – இப்படி மொட்டை பாறைகள் கொண்ட மலைகளில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது. சரி, அன்னபூர்ணா அவர்களின் புண்ணியம், இன்று வெகு நாட்களாய் போட விட்டுப் போன பதிவு , அவர் தூண்டுதலினால் வெளிவருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே பதிவாகி இருக்க வேண்டும், நானும் அரவிந்தும் சென்ற டிசம்பர் மாதத்தில் சென்ற போது கூட முயற்சி செய்தோம், என்னவோ எங்கள் பாக்கியம் – யாராவது ஒருவர் நடுவில் வந்து படம் எடுக்காமல் செய்துவிட்டார்கள் – இந்த படிகளைப் பார்த்தவுடன் மக்களுக்கு ஒரு தொய்வு – உடனே அமர்ந்துவிடுகின்றனர் – நல்ல செங்குத்தான மலையை பாதி வழி ஏறிய களைப்பு. எங்கள் கோபம் அவர்கள் மீது அல்ல, சில ஜோடிகள் – நாங்கள் ரசனையுடன் படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும், இல்லை, அவர்களது மயக்க நிலையில் தன்னிலை மறந்து லயித்து இருந்தனரோ என்னவோ – அடை மழையில் நனையும் எருமைகள் போல நகர மறுத்தனர். எவ்வளவோ முயற்சி செய்து கடைசியில் சில கோணங்களை அரை மனதுடன் விட்டு விட்டு கிளம்பிவிட்டோம். ( காதல் ஜோடிகள் மீது கோபம் இல்லை – எனினும் புராதான சின்னம், ஒரு ஆலயம், சுற்றிலும் இருப்போர் என்று அனைத்தையும் கடந்து அவர்கள் இருந்த சல்லாப கோலம் சற்று நெருடலாக இருந்தது – வேறு இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டுவிடலாம் என்று வாய் வரை வந்துவிட்டது)

பிறகு நண்பர், ஸ்ரீராம் உதவியுடன் ஏனைய படங்களையும் எடுக்க முடிந்தது. என்ன செய்வது, இந்த மேல் குடைவரைக்குக் கீழே இருக்கும் குடைவரை நிலைமை தேவலாம். அங்கே எவரும் செல்வதே இல்லை. இப்படி கண்ணில் பட்டு மரியாதை கெட்டு இருப்பதை விட அப்படி கண்ணிலும் நினைவிலும் இல்லாமல் இருப்பதே நல்லது. ( கீழ் குடைவரையை அடுத்த பதிவில் பார்ப்போம் )

இந்த பல்லவர் கால மல்டிப்ளெக்ஸ் , மகேந்திர பல்லவரின் உன்னத படைப்பு – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம், பல்லவனின் குடைவரைகளில் மிகவும் தென் திசையில் உள்ள குடைவரை – உச்சி பிள்ளையார் கோயில் வளாகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம் இது. பல வகைகளில் உன்னதமான படைப்பு. லலிதாங்குரன் என்பது மகேந்திரரின் ஒரு பெயர் – அழகும் வசீகரமும் சொட்டும் பெயர். இங்கே தான் அவர் தான் வேறு மதத்தை விட்டு சைவ – லிங்க வழிபாட்டு வகைக்கு திரும்பினேன் என்று தானே சொல்லும் கல்வெட்டு உள்ளது. இன்றைய காதல் புறாக்களுக்கு தெரியுமோ இல்லையோ, அவர் வெட்டி உள்ள வரிகளில் உள்ள அர்த்தம் – அதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். குடைவரைக்குள் செல்வோம்.

பல்லவர்கள் நமக்கென விட்டுசென்ற சிற்பங்களில் அவர்கள் அழகு சேர்த்த சோமாஸ்கந்தர் வடிவத்தை நாம் தொடர்ந்து பதிவுகளில் பார்த்து வருகிறோம், இன்னும் ஒன்று சிவ கங்காதர வடிவம். இந்த குடைவரையில் நாம் பார்க்கும் இந்த வடிவம் மிகவும் அழகானது மட்டும் அல்லாமல் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம்.

பல்லவன் இவ்வளவு தூரம் வந்து, அதுவும் சோழர் தேசத்திற்குள் வந்து, இந்த மலையில் தங்கி , குடைந்து (இங்கும் மற்ற மகேந்திரர் குடைவரைகள் போல் அருகில் சமணர் படுக்கை உள்ளது !!) – இந்த பதிவிற்கு திரு நாகசுவாமி அவர்கள் மற்றும் திரு சுவாமிநாதன் அவர்களின் இடுகைகளை கொண்டு விளக்க முயற்சிக்கிறேன். திரு சு்வாமிந்தன் அவர்கள் குடைவரை பற்றி சொல்லும் பொது ” இந்த மலை தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் , மற்ற ஆலயங்கள் , கடைகள் அனைத்தும் இல்லாத பொது எப்படி இருந்திருக்கும், அப்போது மகேந்திரர் இந்த இடத்தை சுமார் இருநூறு அடி உயரத்தில் தேர்ந்தெடுத்து , தனது சிற்பிகளை கொண்டு எப்படி செதுக்கினார் என்று யோசிக்கவேண்டும். இந்த குடைவரையிலும் பல புதிர்கள் உள்ளன “ என்கிறார்.

குடைவரை முகப்பு – நான்கு தூண்கள் மற்றும் இரு பக்கங்களிலும் இரு அரை தூண்கள் உள்ளன. மற்ற்படி பெரிய அலங்காரங்கள் மிகுதியாக முகப்பில் இல்லை. தூண்கள் மகேந்திர காலத்து பாணி என்பதை அவற்றின் தடிமனான தோற்றம், சதுரம் , கட்டு , சதுரம் – சரி, தூண்களை பற்றி இன்னும் விரிவாக படிக்கும் பக்குவம் நமக்கு வந்துவிட்டது – மேலே படியுங்கள்.

1. சதுரம் அல்லது நான்முகத்தூண் அல்லது பிரம்மகாந்தத்தூண்
2. கட்டு அல்லது எண்பட்டைத்தூண் அல்லது விஷ்ணுகாந்தத்தூண்
3. கட்டு அல்லது பதினாறு பட்டைத்தூண் அல்லது இந்திரகாந்தத்தூண்
4. வட்டம் அல்லது ருத்ரகாந்தத்தூண்

ஒரு தூண் மேற்சொன்ன ஏதோ ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே தூணில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் கூட வரலாம். மேலே உள்ள தூண்கள் கீழே சதுரமாகவும், நடுவில் எண்பட்டையாகவும், மேலே மீண்டும் சதுரமாகவும் அமைந்திருப்பதால் அதை, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த முழுத்தூண் என முழுமையாக வரையறுக்கலாம். அப்படியானால் அந்த அரைத்தூண்கள்? அவை நான்முக அரைத்தூண்கள். இந்தத் தூண்களின் நீட்சிதான் பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியில் காணப்படும் பாதங்களாகும்.

தூண்களுக்கு தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன
( நன்றி வரலாறு. காம்)

தூண்களின் நாலு பக்கங்களிலும் தாமரை பதக்கங்கள் உள்ளன.

மகேந்திரர் பட்டப் பெயர்கள் பல்லவ க்ரந்தத்திலும் சில இடங்களில் தமிழிலும் தூண்களில் செதுக்கப்ப்டுள்ளது.

வெளி தூண்களை கடந்து உள்ளே படியேறி மண்டபத்திற்குள் செல்வோம். மண்டபத்தின் பின்னால் முன்னாள் இருப்பது போலவே நான்கு தூண்கள் உள்ளன. இடது புறம் கம்பீர கங்காதர வடிவம், வலது புறம் இருபுறமும் அழகிய வாயிற் காவலர்கள் கொண்ட தற்போது காலியாக உள்ள கருவறை மண்டபம் .

இந்த அற்புத கங்காதர வடிவத்தை அடுத்த பதிவில் மெதுவாக பார்ப்போம். எனக்கு மிகவும் பிடித்தமான சிற்பம், அழகினால் மட்டும் அல்ல – அதை நான் அறிந்த அன்று தான் நான் எனது சரித்திர / சிற்ப பயணத்தில் இரண்டு முக்கிய – அருமையான மனிதர்களை சந்தித்தேன் – திரு சுந்தர் பரத்வாஜ் மற்றும் திரு திவாகர் – திவாகர் அவர்களின் நூல் வெளியீடு – விசித்திர சித்தன் – சரித்திர புதினம் – மகேந்திரரின் ஆரம்ப கால கதை, நூலின் முகப்பில் அதே கங்காதர வடிவம்.

முதில் இரண்டு வாயிற் காவலர்களையும் பார்ப்போம். இருவரும் மிகவும் அழகு.

ஒரு பக்கமாக திரும்பி நிற்கும் பல்லவருக்கு உரித்தான பாணி, இரண்டு கரங்கள், ஒரு கால் சற்றே மடித்து, ஒரு கை ஒய்யாரமாக கதை அல்லது உருள் தடியை அலட்சியாமாக கொண்டு – நாம் முன்னர் மண்டகப்பட்டு குடவரையில் பார்த்ததைவிட சற்று மெலிந்து காட்சி அளிக்கின்றனர். மிகவும் தேய்ந்து போன சிற்பம் என்றாலும் அணி ஆபரணம் என்று – ஒரு தனி அழகுதான்.

கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது சற்று வேடிக்கை தான். இன்றைய நிலை அப்படி. புரியவில்லையா – அது வேறு கருவறை – உள்ளே ஒன்றும் இல்லை , பிற்கால பல்லவர் வேளைகளில் தான் சோமாஸ்கந்தர் வருகிறது, கருவறையில் பாண்டியர் குடைவரைகளில் தான் லிங்கம் ஒரே கல்லில் செதுக்கப் படும் – பல்லவர் காலத்தில் வேறு கல் லிங்கம் தான். அப்படி இருக்க எதற்கு கதவு – பூட்டு – எல்லாம் நமது குடி மகன்களில் தொல்லையை தாங்காமல் தான். என்ன ஒரு வெட்கக் கேடு !!

சரி , குடைவரையில் புதிர் இருக்கிறது என்று சொன்னேனே – புதிர் இல்லை, புதிர்கள் உள்ளன – முதல் புதிர் இதோ. அப்படி லிங்கத்தை கருவறையில் பொருத்த துவாரம் ஒன்று இருக்கும். இங்கே தரையின் நடுவில் அதே போல ஒரு துவாரம் உள்ளது – ஆனால் அதை அடுத்து வலது புறத்தில் இன்னும் ஒரு துவாரம் உள்ளது.

மூடி இருந்தால் நமக்கு உள்ளே என்ன இருக்கும் என்பதை பார்க்காமல் போவோம் – என்று நண்பர்கள் வலைக் கதவை நெம்பி பெயர்த்து எடுத்து உள்ளனர். குடி மகன் ஆயிற்றே – துவாரத்தை பார்த்தவுடம் குப்பை தொட்டி என்றி எண்ணி பாட்டிலை எரிந்து விட்டு சென்றுள்ளனர். இரு துவாரங்கள் படத்தின் கீழ் பாதியில் தெரியும்.

அடுத்த பதிவில் மற்ற அற்புதங்களை பார்ப்போம்.

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே – அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??


அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?

பிற்கால பல்லவ வாயிற்காப்போன் -காஞ்சி மாதங்கேசுவரர் ஆலயம்

வாயிற்காப்போன் தொடரில் இன்று மேலும் பயணிக்கிறோம். காஞ்சிபுரத்தில் நவீன கட்டுமானங்களுக்கு நடுவில் மறைந்துக் கிடக்கும் ஒரு பொக்கிஷம். நண்பர் திரு அர்விந்த் மிகவும் தேடி கண்டுபிடித்து நமக்காக படங்களை கொடுத்து உதவுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. மாதங்கேசுவரர் ஆலயம் ( அதன் உடன்பிறப்பு முக்தேஷ்வரா ஆலயத்தையும் விரைவில் காண்போம் )

இந்த ஆலயத்தின் காலம் சரியாக தெரியவில்லை , அதை பற்றி நாம் முக்தேஷ்வரா படங்களையும் பார்த்துவிட்டு அலசுவோம்.
இப்போதைக்கு CE 700 – 800 – இரண்டாம் நந்திவர்மன் காலம் என வைத்துக்கொள்வோம். மிகவும் சுவாரசீயமான காலம் – அரசனின் அரியணை ஏறுவது முதலே பல சம்பவங்கள், நடுவில் சாளுக்கியரிடம் தோற்றல், அக்யாதவாசம், மீண்டும் அரியணை ஏறல் – பின்னர் முடிவில் தனது பேரில் ஒரு கலம்பகம் !!

வேறு எங்கோ போகிறது பதிவு, மீண்டும் சிற்பத்துக்கு வருவோம்.

சிங்க தூண்கள் மறைக்கின்றனவே . சரி இன்னும் அருகில் செல்வோம். .

கொஞ்சம் கொடூரமாக தான் இருக்காங்க. இதுவரைக்கும் ஆஜானபாகுவாக இருந்தாலும் ஒரு நக்கல் பார்வை தான் இருந்தது.நீங்களே பாருங்களேன் – முற்கால பல்லவ வாயிற்காப்போன்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

மண்டகப்பட்டு

சீயமங்கலம்

தளவானூர்

இன்னும் உன்னிப்பாக மாதங்கேசுவரர் ஆலயம் வாயிற்காப்போன்களை பார்ப்போம்.

இடது புறம்

இங்கே கொம்பு போல தான் உள்ளன ( சூல வடிவத்தின் நடு கம்பி கண்ணுக்கு தெரியவில்லை )

வலது புறம்

இங்கே ஒரு மாற்றம் காண்கிறோமா? மழு முன்னர் செங்குத்தாக நெடுக்க இருந்தது – எங்கோ மாறி குறுக்காக உள்ளதே?. இது மழு தானா?

முக்கியமான வேறுபாடு -இருவருக்கும் மேலும் இரண்டு கைகள் -மொத்தம் நான்கு கைகள்.
இப்போது தான் கடினமான புதிர் வருகிறது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை 745 இல் வென்றான், கைலாசநாதர் ஆலயத்தை கண்டு பிரமிப்பு அடைந்து, அதன் சிற்பிகளை கையேடு கூட்டிச்சென்று பட்டடக்கல் ஆலயங்கள் அமைத்தான். சூலம் அல்லது கொம்பு உள்ள வாயிற்காப்போன்கள் பல்லவர் சிற்பங்களில் முன்னவே இருந்தன. ஆனால் இந்த கூடுதல் கைகள் யாரால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு நாம் இதே காலத்தை ஒட்டிய காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயத்தை ஒப்பிட வேண்டும். செய்வோமா?

பட்டடக்கல் – சாளுக்கிய வாயிற்காப்போன்

வாயிற்காப்போன்களை இந்நாளிலேயே எவரும் மதிப்பதில்லை. முடிந்தால் அவர்களை சிலையாக நிற்க வைத்து ஏளனம் செய்கிறார்கள். அப்படி இருக்க, ஆலயங்களில் உள்ள சிற்ப வாயிற்காப்போன்களின் கதி – அதோகதி தான். நானும் நண்பர்கள் சிலர் மட்டுமே இவைகளை பற்றி பேசுவது உண்டு என்று நினைத்தபோது ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இன்னொரு புத்தகத்தின் பெயரை பார்த்தேன் THE CULT OF WEAPONS. THE ICONOGRAPHY OF AYUDHA PURUSHAS, by Sri. V. R Mani.

வாயிற்காப்போன்களை பற்றி நிறைய பதிவுகள் இடவேண்டும் என்று ஆசை வெகுநாட்களாக இருந்தது. அதனால் உடனே வாங்கிவிட்டோம் ( நண்பர் சதீஷ் மற்றும் அர்விந்த்) – இணையத்தில் வாங்கியதால் புத்தகம் பார்த்தவுடன் ஒரு சிறு வருத்தம். மொத்தமே நாற்பத்து ஐந்து பக்கங்கள் தான் இருந்தது – சிறு புத்தகம். எனினும் அளவில் சிறியது என்றாலும் எடுத்தாண்டுள்ள சிற்பங்களும் முறையும் நன்றாக இருந்தது.
படிக்கும் போதே சட்டேன்று கண்ணில் பட்டது ஒரு சிற்பம். பட்டடக்கல் சாளுக்கிய வாயிற்காப்போன். முன்னர் நாம் திரு கிபிட் சிரோமனி அவர்களின் பதிவை ஒட்டிய பல்லவர் கால திரிசூலநாதர் வடிவங்களை பார்த்த போது – அந்த வடிவங்கள் கொம்புடைய வாயிற்காப்போன்களா என்ற வாதம் தொடர்ந்தது. ஆனால் இந்த சிற்பத்தில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ( படத்திற்கு நன்றி தோழி காதி )

மிகவும் அருமையாக ஒரு காலை மடக்கி, தனது (G)கதையின் மேல் பாரத்தை வைத்து ஒய்யாரமாக சாய்ந்து நிற்கும் அழகு, அந்த கதையை சுற்றி இருக்கும் படம் எடுக்கும் பாம்பு – எல்லாம் மிக அருமை.

சற்று அருகில் சென்று தலை அலங்காரத்தை பார்ப்போம்.

நான்கு கைகளை கொண்ட சிற்பம் ( முற்கால பல்லவ வாயிற்காப்போன் சிற்பங்கள் இரு கைகளுடன் மட்டுமே உள்ளன – அதன் பின்னரே மேலும் இரண்டு கைகள் வருகின்றன – இதை ஒட்டி ஒரு பதிவு போட வேண்டும் – திரு அர்விந்த் அவர்களின் காஞ்சி படங்கள் !) – இந்த சிற்பத்தில் மேல் வலது கரத்தில் என்ன உள்ளது என்று சரியாக தெரியவில்லை. இடது மேல் கரத்தில் தன்னையே ( சூலத்தையே ) பிடித்துள்ளார். மற்ற இரண்டு கைகளில் என்ன ஒரு ஸ்டைல் ( கை முத்திரைகள் பற்றியும் விரிவாக ஒரு பதிவு போட வேண்டும் )

சரி, நமக்கு வேண்டியதை பார்ப்போம்.அவரது விசித்திர தலை ஆபரணம் . ஆம் கண்டிப்பாக சூலம் தான்.

ஆனால் இதை பற்றி அந்த புத்தகத்தில் வரும் குறிப்பு சரியா ? நாம் விவாதிக்க வேண்டும்

” இடது மேல்புறக் கையருகே திரிசூலத்தை வைத்துக்கொண்டு, தலையில் சூலத்தை வைத்து இவர் தான் திரிசூலபுருஷன் அல்லது திரிசூலநாதன் என்று நாம் தெளிவாக கூற முடிகிறது. இந்த தனிப்பட்ட பாணி வாயிற்காப்போன் சிலைக்கு சாளுக்கியரின் தனித்தன்மை என்று கூற முடியும்.இதற்கு பின்னரே சலுக்யர் மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு மேலும் மெருகு அடைகிறது “

இது சரியான கருத்தா? இந்த புத்தகத்தில் பொதுவாக முற்கால பல்லவர் சிலைகளை ஆய்வு செய்ய படவில்லை. பட்டடக்கள் இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவர் மீது அடைந்த வெற்றியை கொண்டாடவே கட்டப்பட்டது. அதிலும் அந்த வெற்றியின் பொது ( ( CE 732 – 742 ), அவன் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் கலை திறனை கண்டு மிகவும் கவரப்பட்டு ( அதை ஒன்றும் செய்யாமல் சிதைக்காமல் ) அதை போலவே பட்டடக்கல் ஆலயங்களை அவனும் அவனது ராணிகளும் அமைத்தனர். இதன் அடிப்படையில், நாம் ஏற்கனவே பதித்த முற்கால பல்லவ சிற்பங்கள் ( இரண்டு கைகளுடன் சூலநாதர் ) , வைத்துப் பார்க்கும் பொது ஒரு வேலை இதே சிற்பிகளை தான் சாளுக்கிய மன்னன் எடுத்துச் சென்று அங்கே உபயோகித்தானோ என்ற கேள்வி மிக பலமாக எழுகிறது.

உங்கள் கருத்து என்ன. ?

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

சிற்பக்கலை பற்றி எனக்கு ஆர்வம் வந்தவுடன், மல்லை கலைச்செல்வங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஒரு தேடலாக பார்த்தேன் . அவற்றை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள பல ஊடகங்களை அலசினேன். சிங்கையில் இருந்தபடியால் நேரில் பார்க்க வாய்ப்புகள் குறைவு, எனவே புத்தங்களை படித்து பசியாறினேன். எனினும் சிற்பக்கலை பற்றி ஒரு சில புத்தகங்களே கிடைத்தன. அவற்றில் பலவும் என் அறிவுக்கு ( இன்றும் ) எட்டாத நிலையில் இருந்தன. அவற்றில் சில விலை அதிகமாக என்கைக்கு எட்டாதவகையில் என்னை வாட்டின. ஆர்வம் என்னை இணையத்திற்கு எடுத்து சென்றது. அல்லும் பகலும் தேடினேன் . இரண்டு தளங்கள் கிடைத்தன. திரு நாகசுவாமி அவர்களின் தளம் மற்றும் திரு

கிஃப்ட் சிரோமோனி அவர்களின் தளம் Dr.Gift Siromoney (30.7.1932 – 21.3.1988), M.A., M.Sc., Ph.D., F.S.S.

http://www.cmi.ac.in/gift/Archaeology.htm

திரு கிஃப்ட் அவர்களின் இடுகைகள் எனது பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடை தந்தன. மேலும் அருமையான வர்ணனை , இலவசமாக, புகைப்படங்கள், விளக்கும் சித்திரங்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கையாண்ட முறை, என்னை மிகவும் கவர்ந்தன. இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சாமானியர்கள் கூட ஒருமுறை படித்தால், நமது குல பொக்கிஷங்களான கலைப்பெட்டகங்ளை போற்றி அவற்றை ரசிக்க வைக்கும் வண்ணம் இருந்தன அவரின் இடுகைகள். வரும் சந்ததியினர் இவற்றை போற்றி பேணி காக்க அவர் செய்துள்ள பனி அபாரம். அவரது இந்த செய்கை, அவர் இந்த உலகை விட்டு சென்றபின்னரும் என்னை போல சிலரை ஊக்குவிப்பதை கண்டு பெருமை படுகிறேன். ஏகலைவன் போல அவரை மானசீக குருவாக கொண்டு, நானும் இணையத்தில் இவ்வாறு ஒரு சிற்பக்கிடங்கியை உருவாக்க வேண்டும், அவரை போல என் தளமும் எனக்குப் பின்னரும் பலருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் அவர் வழி பின்தொடர்கிறேன்.

அவர் இவ்வாறு விட்டுச்சென்ற ஒரு இழையை இன்று விரிவு செய்து இங்கு படைக்கிறேன். இதுவும் ஒரு பல்லவ புதிர். திரு கிஃப்ட் அவர்களது இடுகையை சற்று நேரம் எடுத்து படியுங்கள்.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_dvarapalaka.htm

நண்பர்களின் உதவி கொண்டு அவரது இந்த பதிவை படங்கள் கொண்டு நான் விளக்குகிறேன்.


மிகவும் எளிய கருத்து இது. பல்லவ வாயிற் காப்போன் வடிவங்கள் உள்ளே இருக்கும் தெய்வங்களின் ஆயுதங்களே! என்பதே ஆகும்

இதை விளக்க, பல்லவ கால குடவரைகளின் வாயிற் காப்போன்களை பார்ப்போம். பொதுவாக பல்லவ கால சிவன் ஆலய வாயிற் காப்போங்களின் தலை அலங்காரங்கள் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இவர்களுக்கு கொம்பு உண்டு ! பழங்கால பழகுடியின மக்களின் பழக்கமோ , அல்லது சமண வடிவங்களில் வரும் நாக சித்தரிப்பின் விளைவோ, இல்லை நந்தி வடிவமோ ..என்று பல விதமான கருத்துக்கள் உண்டு.

வல்லம் குடைவரையை ஆய்வு செய்து தனது விளக்கங்களை தந்துள்ளார் திரு கிஃப்ட் அவர்கள், ஆனால் இன்று வல்லம் குடவரை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நல்ல படம் எடுக்க முடியாத படி ” பாதுகாத்து வருகின்றனர். ” ( படங்களுக்கு நன்றி திரு சுவாமிநாதன் ஐயா மற்றும் திரு சந்துரு). ஆனால் நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் குடைவரை சிற்பங்கள் மற்றும் மண்டகப்பட்டு , சீயமங்கலம் குடைவ்ரைகளின் சிற்பங்கள் கொண்டு நாம் இன்று விரிவாக பார்க்கப்போகிறோம்.

சரி, முதலில் வல்லத்திலேயே ஆரம்பிப்போம். அற்புத சிற்பங்களை பாதுகாக்க அசிங்கமான இரும்புத்திரை .

அற்புத துவாரபாலகர்கள். பிற்கால கோயில்களில் தனித்தன்மையை இழந்து நிற்கும் சிற்பங்களை போல அல்லாமல், ஒவ்வொருவரும் தனக்கே உள்ள தனித்தன்மையுடன் உயிரோட்டத்துடன் இருக்கும் பல்லவ சிற்பங்கள். இரு பல்லவ சிற்பங்கள் ஒன்று போல இருக்காது, அதுவும் அவர்கள் சற்றே திரும்பி நிற்கும் பாணி அருமை.

வலது புறத்து சிலைக்கு இருக்கும் கொம்பை பார்த்தீர்கள ? இவை கொம்புகளா. கொம்பென்றால் தலையின் மேலே அல்லது சற்று நெற்றிப்பொட்டின் அருகில் அல்லவா இருக்க வேண்டும். இவை எங்கோ கழுத்தின் நடுவில் இருக்கும் படி உள்ளனவே, அதிலும் “கொம்பு” ஆரம்பிக்கும் பகுதியில் ஒரு தேவையற்ற வளைவு உள்ளதே.

சரி, இடதுபுறத்து சிற்பத்தை பார்ப்போம். இவருக்கு கொம்பில்லை, எனினும் கூர்ந்து பாருங்கள், நாடு நெற்றியில் ஒரு புடைப்பு தெரிகிறது . இது அவரது கிரீடத்தின் அலங்காரமா ? இல்லை இதற்க்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா ?

சரி, அடுத்து மண்டகப்பட்டு மகேந்திர குடைவரை செல்ல்வோம் .

வலது புறத்து துவாரபாலகன் அழகாக இருந்தாலும் கொம்பில்லை. வருத்தப்பட வேண்டும், இடது புறத்து ஆள் நமக்கு உதவுகிறார். நெற்றி புடைப்பு தான் இங்கேயும் .

அது என்ன இது, புது அலங்காரம். இன்னும் சிலவற்றை பாற்றுவிட்டு இந்த கேள்விக்கு விடை தேடுவோம்.

அடுத்து சீயமங்கலம் செல்வோம்.


வலது புறத்து சிற்பம் கொம்புடன் காட்சி அளிக்கிறது. இடது புறத்து வாயிற் காப்போன் கிரீடத்தில் தான் புடைப்பை காணவில்லை.


சரி, மீண்டும் கொம்பை சற்று அருகில் சென்று பார்ப்போம். இங்கேயும் கொம்பின் அடியில் உள்ள அரை வட்டம் குழப்பத்தை தருகிறது.

இப்போது புதிருக்கு விளக்கம் பெற, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் சிற்பங்களை பார்ப்போம். அற்புத வடிவங்கள், அதுவும் அந்த வலது புறத்து சிற்பத்தின் நிற்கும் பாணி, ஆஹா என்ன ஒரு கம்பீரம், அப்படியே உயிர் சிற்பம்.


இடது புறத்து சிற்பம் சற்று அடங்கி இருந்தாலும் அருமை.


அருகில் சென்று ஆராய்வோம் . அவர்களின் தலை அலங்காரம் மிக அருமை.

வலது புறத்து வாயிற் காப்போனின் தலை கொம்பு – இப்போது இந்த சிற்பத்தில் இன்னும் அலங்காரமாக இருக்கும் கொம்பு நமக்கு பல உண்மைகளை வெளி கொணர உதவுகிறது. உங்கள் மனக்கண்களில் வாயிற் காப்போனின் முகத்தை எடுத்துவிட்டு வெறும் கொம்புகளை மட்டும் பாருங்கள்

கிரீடத்தின் மேலே ஒரு வேல் போன்ற அமைப்பு தெரிகிறதா. இதையும் இரண்டு கொம்புகள் ( அவற்றின் அடியில் இருக்கும் அரை வட்டம் ) ஆனதையும் சேர்த்து பாருங்கள். ஒரு திருசூல வடிவம் தெரிகிறதா. .

ஆம் இவரே திரிசூலநாதர்

இதே வாதத்தின் படி, இடது புறம் இருப்பது வெறும் புடைப்பு இல்லை. அது மழு . கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சண்டேசர் வடிவத்தில் அவன் கரத்தில் உள்ள மழுவை பாருங்கள்.

இவரே மழுவுடையார்.

ஈசனின் மழுவும் சூலமும் மனித உரு கொண்டு அவன் சன்னதியை காக்கும் கோலங்களே இவை.

சகோதரி காதி அவர்கள் அனுப்பிய காவேரிபாக்கம் சிற்பம். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிற்பம். இவரும் திரிசூலநாதர் !!