ராமனை மயக்கிய மாய மான் – வைரம்

எனது நண்பர் திரு பழனியப்பன் வைரம் அவர்கள், அவர் பெயர் போலவே ஒரு நிஜ வைரம். அவர் எடுத்திருக்கும் துறை மிகவும் அரியது. பலரும் அதன் ஆழ்ந்த கருத்துகள் மற்றும் மொழியின் நுணுக்கத்தால் படிக்க மறுக்கும் துறை. சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியங்கள்.

வைரம் கற்க….. நிற்க …..

அவர் இந்த பணியை துவக்கும் தருவாயில் இணையத்தில் ஒரு தேடலில் தற்செயலாக நான் அவருடைய தளத்திற்கு சென்றேன். அதில் இருந்த ஆழ்ந்த கருத்து, சீரிய சிந்தனை என்னை மிகவும் ஈர்த்தது. தினமும் தொடர்பு கொண்டு எங்கள் நட்பு வளர்ந்தது. சமீபத்தில் அவரது இந்த இடுகை என்னை மிகவும் ஈர்த்தது. கம்பன் மிக அழகாக இட்ட வரிகளுக்கு இந்தோனேசியா பரம்பணன் கோயில் சிற்பத்தில் வடிவம் அதையே இங்கு இடலாம் என்று அவரை அழைக்கிறேன். இதோ வைரம்.

இன்று கம்பனது ராமாவதாரத்தில் ஒரு நிகழ்வு .

கலைமான் முதல் ஆயின கண்ட எலாம்,
அலை மானுறும் ஆசையின், வந்தனவால்
– நிலையா மன, வஞ்சனை, நேயம் இலா
விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே.

கதை : மாரிசன், ராவணனின் மாமன், தங்க மானாக மாறி ,ராமனையும் லக்குவனையும் சீதையை விட்டு பிரித்து, ராவணன் சீதையை அபகரிக்க வழி வகுத்த கதை.

கம்பனின் அழகிய உவமை : ஒரு தங்க மான் தோன்றிய உடன் அந்த காட்டில் உள்ள அனைத்து மான்களும் , அந்த அழகினை கண்டு கடல் போல் பெரிய ஆசை கொண்டு அதன் அருகே சென்று நிற்கின்றன. இங்கே கம்பன் தன் கவி திறனை ஒரு உவமையின் மூலம் நமக்குக் காட்டுகிறார், அக்காலத்தில் ஆண்கள் மணமான பின்னும் விலை மாந்தர் உடன் உறவு கொள்வது உண்டு , இந்த மாந்தர் ஒரு ஆணை சுகப்படுத்தும் அனைத்துக் கலையும் அறிந்தவர்கள் . இவர்கள் தொழிலோ தங்கள் கற்ற கலையை பயன்படுத்தி ஆண்களை வசியப்படுத்தி , நல்ல சுகமான வாழ்க்கையை தாம் பெறுவதற்குதான். இவர்களை நம்பி அனைத்து சொத்தையும் இழக்கும் ஆண்களுக்கோ அவர்கள் தங்களை காதலிக்க வில்லை, தங்கள் மாய அழகை கொண்டு வெறும் வசியம் மட்டுமே செய்கிறாகள் என்பது புரிவதில்லை . இதை போல் மனிதன் பல நேரம் வசியம் செய்யும் மாய அழகிற்கு அடிமையாகிறான் . ராமாயணத்தில் தோன்றும் அந்த தங்க மானுக்கு வசியம் செய்யும் மாய அழகு இருந்ததாம் , இந்த வசியம் செய்யும் அழகிற்கு எல்லாம் அறிந்த ராமனே அடிமை ஆனான் என்பதை கம்பன் அழகாக நமக்கு காட்டுகிறார் . சுட்டெரிக்கும் விளக்கின் ஒலி சுண்டி இழுக்கும் விட்டில் பூச்சிகளுக்கு எப்படியோ அப்படி.

இதோ இந்தோனேசியா பரம்பணன் கோயில் சிற்பம். மாய மான், ராமன், அவன் விடுத்த அம்பு – சாகும் தருவாயில் தன் சுயரூபம் பெற்ற மாரீசன்.

வைரம்
(source:http://www.mountainelm.com/in-rama1.JPG)

கம்போடியாவில் காரைக்கால் அம்மை

கம்போடியா ( Khao Preah Vihear) கோவில் சிற்பம் சிலவற்றை நாம் முன்பு பார்த்தோம். அவ்வாறே இன்றும் ஒரு அறிய சிற்பம்.

தொலைவில் இருந்து பார்க்கும் போது நடராஜர் மட்டுமே தெரிந்தார். அழகிய ஆடும் கோலம் – பத்து கைகளும் ஒரே கை வேகமாய் ஆடுவது போல அழகே உள்ளது.


கொஞ்சம் கீழே பார்த்தால் அனந்தசயனன், காலை அன்பாய் பிடித்து விடும் லக்ஷ்மி ( சிற்பம் சிதைந்து விட்டது ) நாபிக்கமலத்தின் மேல் பிரம்மன். அவர்களை அடுத்து இரு கிளிகள் – அதற்கு மேல் ஒரு யாழி – யாழியின் மேல் இருப்பவர் யார் என்று தெரியவில்லை – அதை அடுத்து இரு குரங்குகள் !!

சரி அத்துடன் விட்டு விடலாம் என்று பார்த்தால் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தை ரசிக்கும் இருவர் ( தலைகள் சிதைந்து விட்டன ) – ஆனால் வலது புறம் இருப்பது ஒரு பெண்மணி – அவர்களின் அங்க குறிப்புகளை சோழர் கால காரைக்கால் அமையின் சிலையுடன் ஒப்பிடும் போது அப்படியே ஒத்து உள்ளது. (சுருங்கிய மார்பகம்) ஒருவேளை தன்னை பேய் போல ஆக்குக என அம்மை இறைவனை வேண்டிக்கொண்டதால் இளமை மாறியதோ. அம்மையின் முழு கதையை வரும் மடல்களில் பார்ப்போம்

(அம்மை தாம் அருளிய அந்தாதியில்)

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.




காரைக்கால் அம்மை பெரும் பாலும் தென் இந்திய இலக்கியங்களிலேயே வருபவர், பல தமிழருக்கே தெரியாத ஒருவர். அவர் எங்கே அங்கே சென்றார் ? தமிழக சிற்பிகள் அல்லது அவர்களது வழி தோன்றல்கள் இல்லை அவர்களிடம் கலை பயின்றவர்கள் இதை வடித்து இருக்கலாம். ஏனெனில் சிலையில் தமிழ் / சோழ கலை தெரிய வில்லை , பெரும்பாலும் தென் கிழக்கு ஆசிய சாயலே தெரிகிறது.

images courtesy
http://www.sundial.thai-isan-lao.com/phanom_rung.html

ஈசனுக்கு உடும்பு கறி படைத்த பக்தன்

கண்ணப்பர் செருப்பு அணிந்ததை சென்ற மடல்களில் பார்த்தோம். இப்போது அவர் ஈசனுக்கு உடும்பு கறி படைத்ததை பார்ப்போம். மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம், ராஜ ராஜ சோழ தேவருக்கு மிகவும் பிடித்த கதைகள் – ஈசனிடம் அளவில்லாத பற்று கொண்டு அவனிடம் சரண் புகுந்த நாயன்மார் கதைகள். அதில் அவர் மிகவும் ரசித்த ஒன்று , கண்ணப்பர் கதை. இதோ கருங்கல்லில் .
1880188718901884
சிறு சிற்பம் என்றாலும் அந்த சிற்பத்தில் கண்ணப்பரின் முகத்தில் தெரியும் பணிவு, பக்தி – அதிலும் அவர் ஆசையுடன் உடும்பை படைக்கும் காட்சி ( வேடுவன் அல்லவா, அப்போதும் தனது வில் அம்பை விடவில்லை, அருகில் அவரது வேட்டை நாய் )- எதிரில் மரத்தடியில் சிவ லிங்கம்.

தேவார குறிப்பு, இதற்கும் உண்டு.
பதினொன்றாம் திருமுறை

சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

தடிந்த உடும்பு – கொல்லப்பட்ட உடும்பு, அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.

இங்கே மேலும் கதையை உணர்த்தும் சிற்பங்கள் உண்டு. அவற்றை பற்றி வரலாறு.காம் நண்பர் கோகுல் அவர்களின் அருமையான இடுகை (கடை காட்சியில் சிவ கோச்சாரியார் மரத்தின் பின் ஒளிந்துக்கொண்டு பார்ப்பதை சித்தரித்த வண்ணம் அருமை )
கோகுல் அவர்களின் அருமையான இடுகை

படங்களுக்கு நன்றி www.varalaaru.com

பெண்களை மயக்கும் திகம்பரர் , ஆண்களை மயக்கும் மோகினி

நண்பர் ஒருவர் பல சிவ பிட்சாண்டவன் சிற்பங்கள் இருக்க, ஒரு சில சிற்பங்களையே ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டார் . மிகவும் நல்ல கேள்வி. திரு திவாகர் அவர்களின் தமிழும் அதனுள் இருந்த பல கருத்துகளும் சரி வர சென்றடையவே – அவர்களது மடலில் இட்ட சிற்பங்களை பற்றி மேலும் எழுதவில்லை.

இதோ அதன் தொடர்ச்சி. கதையை கேட்டீர்கள் அல்லவா, இப்போது அந்த மகா சிற்பி சிவனை மட்டும் செதுக்கவில்லை, அந்த கதையையே செதுக்கி உள்ள அருமையை பாருங்கள்.

காஞ்சி கைலாசநாத கோவில். ராஜ சிம்ஹன் நிறுவிய அற்புத கோயில், தஞ்சை பெரியகோவிலை நிறுவிய ராஜ ராஜனே பெரிய கற்றளி என்று வியந்த கோயில். அங்கே இந்த அற்புத சிவ பிட்சாண்டவனின் வடிவம் – ராஜ சிம்ஹனின் பாயும் சிங்கங்களின் நடுவில் கம்பீரமாக நிற்கும் காட்சி. சிற்பத்தில் ஈசன் தன் இடது கை விரலை நீட்டி நம்மை மேல பார்க்க சொல்வது போல உள்ளது. மேலே என்ன இருக்கிறது. ஆஹா, ஆடல் வல்லானின் அற்புத ஆட்டம். ( இதே வடிவம் நாம் மல்லை ஓலக்கநெஸ்வர கோயிலிலும் பார்த்தோம் !!)

சரி சிற்பத்திற்கு மீண்டும் வருவோம். கட்டழகு வாலிபன் அல்லவா – உணர்த்த என்ன ஒரு கட்டுடல், முகத்தில் விஷம சிரிப்பு , ஒரு காலை அழகாய் மடித்து, கால்களில் இருக்கும் பாத ரக்‌ஷைகள் – அதிலும் ஒரு பாதம் சற்றே தூக்கியவாறு, பரந்த விரிந்த தோள்கள் , வலது கையை என்ன ஒரு யதார்த்தமாக தண்டத்தின் மீது இட்டிருக்கும் பாங்கு , அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் திரு ஓடு.. அருமையான சித்தரிப்பு. அதனுடன் நிறுத்தவில்லை நம் சிற்பி.


அழகு வாலிபனை கண்டு சொக்கி அவன் காலில் விழும் இரு ரிஷி பத்தினிமார்கள், அவர்களுக்கு மேலே இதை கண்டு சினம் கொண்டு ஈசனை தாக்க கை தூக்கும் ரிஷி. ஒரு கதா பத்திரத்தை மட்டும் சித்தரிக்க வில்லை இந்த சிற்பம், , ஒரு கதையையே சித்தரிக்கிறது.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ? நான்காம் திருமுறை

நான்காம் திருமுறை

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

186518721868
சரி, இப்போது மோகினி வடிவம் – காஞ்சி தேவராஜசுவாமி கோவில் தூண் சிற்பம். அங்கும் சிற்பி தன் கலை நுணுக்கத்தை காட்டி உள்ளான்.உற்றுப் பாருங்கள் – மோகினியின் மோகனப் புன்னகையில் மயங்கி ,அவள் ஊற்றிக் கொடுக்கும் பானத்தை இரு கரம் கூப்பி அருந்தும் ரிஷிகளின் வேடிக்கையான காட்சியையும் காட்டிய சிற்பியின் கற்பனை , கலைத் திறன் அபாரம்.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ?இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவ ரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடு காட்டை விரும்பிமகிழ்ந்தாய்.